ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் சந்திப்பு

இன்றைய தினம் 25/6/2025 புதன்கிழமை மாலை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிறிலங்கா விமானப்படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருக்கின்றார். கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் சந்திபொன்று நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தில் செல்வம் அடைக்கலநாதன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இன அடக்கு முறைக்கு எதிரான போராட்ட வரலாற்றில் தமிழரசு சின்னத்துரை அவர்களின் வகிபாகம் காத்திரமானது – நினைவுரையில் வலி கிழக்கு தவிசாளர் நிரோஸ்

கட்சி அரசியல் மக்களை முன்னேற்றுவதற்கானது என்ற உயரிய சித்தாந்தத்துடனும் செயற்பாட்டுடனும் வாழ்ந்துகாட்டியவர் முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவர் அமரர் ஆவரங்கால் சின்னத்துரை அவர்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

தமிழரசு சின்னத்துரை அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) தமிழரசி இல்லத்தில் இடம்பெற்றது. அக் கூட்டத்தில் அஞ்சலி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், எமது அரசியல் பயணம் என்பது எமது மக்களுக்கானதாக விட்டுக்கொடுப்பின்றியதாக அமையவேண்டும் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவர் சின்னத்துரை அவர்கள். அடக்கு முறைக்கு எதிரான தமிழ்த் தேசிய பயணப் பாதை என்பது போராட்டங்களும் சவால்களும் மிக்கது என்பதை அனுபவ ரீதியில் உணர்ந்து அதனைத் தேர்ந்தெடுத்து தலைவராக எம் மண்ணில் அவர் செயற்பட்டுள்ளார்.

எமது பிரதேசங்களில் மக்களை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவராக தனது குடும்ப வாழ்க்கை முறையைக் கூட அவர் வாழ்ந்தார். இதனை எம் மூத்தோர் வாயிலாக எம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. 1953 ஆம் அண்டு தமிழரசு வாலிபர் முன்னணி ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்குழு உறுப்பினராக அவர் செயற்பட்டுள்ளார். பின் அவ் வாலிபர் முன்னணியின் பொதுச் செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இளைஞர் முன்னணி ஊடாக அவர் பெரிதும் சேவையாற்றியுள்ளார். இம் முன்னணி 1953 காலப்பகுதியில் இன்றைய பிரதமர் ஜோன் கொத்தலாவலவுக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டமை என பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளது. அதுபோன்று இவரின் காலத்திலேயே வாலிபர் முன்னணி தாயகத்தில் பல மாநாடுகளை கூட வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. இதனால் எமது மக்கள் தமிழ்த் தேசிய அரசியல் மயப்பட்டனர்.

தனிச் சிங்களச் சட்டத்திற்கு எதிரான போராட்டம், தமிழர் உரிமையை வலியுறுத்திய திருமலை பாதயாத்திரை(1957), கச்சேரி நிர்வாக முடக்கல் போராட்டம் (1961) என்று பல போராட்டங்களில் இளைஞனாக முழுமூச்சுடன் தமிழரசு சின்னத்துரை அவர்கள் போராடியுள்ளார். சிறி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் வேறு இனத்தின் உரிமை நோக்கிய போராட்டங்களிலும் அவர் சிறை சென்ற போதும் அவர் தனது இலட்சியத்தை விட்டுக்கொடுக்கவில்லை.

உள்ள10ராட்சி அரசியலில் அவரிடம் ஏனைய தலைவர்களிடத்தில் காணப்படாத நாகரீகம் காணப்பட்டுள்ளது. இது சகலரையும் பாரபட்சம் இன்றி அணைத்துச் செல்லும் பண்பாகும். இப் பண்பு எமக்கு இன்றும் முன்னோடியானது. அடிப்படையில் எமது வலிகிழக்கில் இருந்து மாநகரசபை மற்றும் மாவட்ட அபிவிருத்தி சபை என பல கௌரவ அவைகளில் அவர் மக்கள் பிரதிநிதியாக வாழ்ந்து காட்டியுள்ளார். இந்நிலையில் அவரின் வாழ்வியல் முறைமை ஏனையோருக்க வழிகாட்டலாக அமைய வேண்டும் என வலிகாமம் கிழக்க பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு அநுர அரசிலும் நீதி கிடைக்க வாய்ப்பில்லை:ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

வடக்கில் பெரும்பாலும் பேசப்படும் மனிதப் புதைகுழி விவகாரம் வதந்தி என நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்தமை மூலம் அநுர அரசிலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வாய்ப்பில்லை என்பதை தெளிவாக கூறுகின்றது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழர் தாயகத்தில் இதுவரை 17 மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன அவற்றுக்கான உறுதியான நீதி இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் தான் பாதிக்கப்பட்ட உறவுகள் சர்வதேச தலையீட்டுடன் விசாரணை நடத்தப்பட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

ஆரம்பத்தில் உள்ளகப் பொறிமுறை மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவோம் என கூறிய அநுர அரசாங்கம் கனடா இனப்படுகொலை தூபி திறப்பிற்கு பின்னர் போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகள் என்பது எல்லாம் கட்டுக்கதைகள் என கதை அளந்தனர்.

தற்போது மனிதப் புதைகுழி விவகாரத்தை வதந்தி என முடித்துள்ளனர்.

உள் நாட்டில் நீதி இல்லை

ஆகவே அரசாங்கத்தின் தற்போதைய நிலைப்பாட்டில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உள் நாட்டில் நீதி இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேச நாடுகளிடமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடமும் தொடர்ச்சியான கோரிக்கைகளை வைத்து அகிம்சைப் போராட்டங்களை நடத்த வேண்டும்.

அத்துடன் உள் நாட்டில் நீதிக்கான கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன என்ற செய்தியை வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு கூற வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவம், கடற்படை மற்றும் பொலிசாரினால் கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவியுங்கள் ரெலோ தலைவர் செல்வம்

மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் கடற்கரையோடு காணப்படும் மக்களின் காணிகளை அரசாங்கம் சுவீகரிப்பு செய்யவுள்ளமை குறித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் 19-06-2025 தினம் விசேட உரை நிகழ்த்தியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,,,,

வன்னி மாவட்டத்தில் உள்ள 3 மாவட்டங்களில் ஒன்றான மன்னார் மாவட்டத்தின் கீழ் பள்ளிமுனை என்னும் கிராமம் உள்ளது.
இங்கு வாழ்கின்ற மக்கள் கடல் தொழிலையே தமது வாழ்வாதாரமாக கொண்டு கடலினை அண்டி வாழ்ந்து வருபவர்கள்.
இது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்ற கிராமம். இந்த கடலினை அண்டியதாக 24 குடும்பங்கள் 10 பேர்ச் காணி தூண்டில் அரசாங்கத்தினால் வீடு கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில் 1984ம் ஆண்டு தொடக்கம் 1990ம் வரை வாழ்ந்து வருகிறார்கள்.

இது தனி நபருக்கு சொந்தமான காணி .ஆனால் 1984 ம் ஆண்டு இக்காணி துண்டுகளை வீடமைப்பு திணைக்களம் வேண்டி வீடுகளை அமைத்து குடியேற்ற திட்டம் ஒன்றை நிறுவி மீளவும் அங்கு குடியேறியவர்களுக்கு விற்று அதற்குரிய பணத்தையும் பெற்றுக் கொண்டது இங்கு குறிப்பிடப்பட வேண்டியதொன்றாகும்.

இது தனி நபருக்கு சொந்தமான காணிகள் மொத்தம் (2 acers and 02 perch ) இதற்குரிய உறுதிப்பத் உறுதிப் பத்திரங்களும் இவர்களுடைய கைகளில் இருக்கின்றன.

அண்மைக்கால யுத்தம் காரணமாக இந்த மக்கள் தாங்கள் வாழ்வாங்கு வாழ்ந்து வந்த பூர்வீக காணிகளையும், வீடுகளையும் கைவிட்டு இடப்பெயர்வை மேற்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது தவிர்க்க முடியாத தோன்றாகி விட்டது.
மக்கள் 1990ல் இடம்பெயர்ந்த பின்பு இது இராணுவம்,பொலிஸ், தற்பொழுது கடற்படையினரின் முகாமாக இருப்பிடமாக மாறியிருக்கிறது.

அவர்கள் இந்த பொதுமக்களுக்கு சொந்தமான குடியிருப்புக்களை ஆக்கிரமித்து தொடர்ந்து அரசாங்கத்துடன் இணைந்து தங்களது சொத்தாக மாற்றிக்கொள்ள முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காணியுடைய உரிமையாளர்கள் இவற்றை மீட்டெடுப்பதற்காக நீதிமன்றில் வழக்கு கொடுத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கம் காணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் இந்த காணிகளை அரச சொத்தாக மாற்றியமைக்க முயற்சிக்கின்றது.என மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

அடுத்து வரும் மாகாணசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலை உருவாக்காத பட்சத்தில் மக்கள் தமிழ் கட்சிகள் மீது வெறுப்படைந்து தேசிய மக்கள் சக்திக்கு மீண்டும் ஆதரவளிக்கும் நிலை ஏற்பட்டு விடும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தேர்தல் கூட்டுக்காக உருவாக்கப்படவில்லை. பல இழப்புக்கள், பல தியாகங்கள் ஊடாக உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதனை சிதைக்க முடியாது.

எனவே மக்களுக்காக ஒன்றிணைந்து பயணிப்பதை தமிழ் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

எந்தவொரு அபிலாசைகளும் இல்லாத தேசியத்தை நேசிக்கின்ற பெரியவர்களை மத்தியஸ்தமாக கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மீளுருவாக்கம் செய்யப்பட வேண்டும்.

மாகாண சபை தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்குமாயின் தமிழ் கட்சிகள் தேசியம் தொடர்பில் கதைப்பதில் பிரயோசனமில்லை” என தெரிவித்தார்.
.

Posted in Uncategorized

சர்வதேச நீதி கேட்டு சகலரும் வீதிக்கு இறங்குவோம் – வலிகாமம் கிழக்கு தவிசாளர் நிரோஸ்

ஐ.நா. மனித உரிமைச் செயலாளர் நாட்டிற்கு வரும் நிலையில் எமது இனத்திற்கு எதிராக இலங்கை அரசு மேற்கொண்ட இனப்படுகொலைக்கு எதிராக சர்வதேச நீதி ஒன்றே ஏற்றுக்கொள்ளக்கூடியது என்ற உண்மையினை வெளிப்படுத்தி நாம் வீதிக்கு இறங்கவேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

அணையா விளக்கு மற்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ஏனைய போராட்டங்களை மையப்படுத்தி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் மீது அவர்களின் பூர்வீகத் தாயகத்தில் அரச பயங்கரவாதத்திற்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை உள்ளிட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் போரின் பின்பாக 15 ஆண்டுகள் நிறைவடைந்த போதும் எமக்கான நீதி உள்நாட்டில் வழங்கப்படவில்லை. உரிய விசாரணைகளுக்கான நீதிப் பொறிமுறை ஏனும் ஏற்படுத்தப்படவில்லை. அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய போதும் தமிழ் மக்களின் பிரச்சினையினை திட்டமிட்டு காலம் தாழ்த்தி நீ;ர்த்துப் போகச் செய்யும் உத்தியே கடைப்பிடிக்கப்படுகின்றன. இந் நிலையில் அணையா விளக்கு உள்ளிட்ட பல போராட்டங்கள் தாயகத்தில் ஏற்பாடாகி நடைபெற்று வருகின்றன.

ஆட்சியில் உள்ள அரசாங்கம் கூட தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளின் கடந்தகால பங்காளிகளாகள் தான். அவ் அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு இடமில்லை என்ற நிலைப்பாட்டினை வெளிப்படையாவே சொல்லியுள்ளது. இவ்வாறான அபாயமிக்க நிலையில் ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமை ஆணையாளர் இலங்கை வரவுள்ளார். அவருக்கு உண்மை நிலவரங்கள் சென்றடையக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் சிரத்தையாகவுள்ளனர். அரசின் தகவல்களை மாத்திரம் பகிர்வதற்கான உத்திகளை அரசு மேற்கொள்கின்றது.

ஏற்கனவே எமது மண்ணில் பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. அவை உள்ளிட்ட படுகொலைகள், அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்கடத்தல்கள், என சகல அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகளையும் வெளிப்படுத்தி அதற்கு நீதிகேட்டு தமிழ்த் தேசமாக நாம் ஒன்றுதிரள்வோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும் -ரெலோ

ஆணவத்தை விடுத்து அரவணைப்பே தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை நெறிப்படுத்தும்

தமிழ்த் தேசியப் பரப்பின் ஒற்றுமைக்கான இறுதிச் சந்தர்பத்தையும் கோட்டை விடுகிறது தமிழரசுக் கட்சி.

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியத் தரப்பாக ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பதற்கு பல தடவைகள் தமிழரசு கட்சியுடன் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எடுத்துக்கொண்ட முயற்சிகள் உதாசீனப் படுத்தப்பட்டன. இதன்பின் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணிக்கும் தமிழ் தேசிய பேரவைக்கும் இடையிலான கொள்கை ரீதியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. இது சாதாரணமாக ஏற்படுத்தப் படவில்லை. பல விட்டுக்கொடுப்புகள் அரவணைப்புகளின் அடிப்படையில் தான் சாத்தியமானது.

இதன் பின் தோன்றிய அரசியல் சூழ்நிலை மாற்றங்களில் வன்னி நிலப்பரப்பில் தமிழ் தேசிய கட்சிகளின் கைகளில் சபைகளை வலுப்படுத்துகின்ற நிலைப்பாடு பற்றி பேசவே நாங்கள் அழைக்கப் பட்டோம்.

அதன் பிரகாரம் திங்கள் மதியம் தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி வி கே சிவஞானம் ஐயா அவர்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அவர்களுடன் சந்திப்பு நடைபெற்றது.

அதன்போது வன்னியின் அரசியல் சூழ்நிலை பற்றி கலந்துரையாட முற்பட்ட வேளையில் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கிறதோ அதற்கான பதில் நடவடிக்கை வன்னியில் அமையுமென தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்கள் பயனற்றவை. வன்னியில் அதிக சபைகளை ஆளும் தரப்பு கைப்பற்றும் நிலை காணப்படுகிறது. பல சபைகளில் தனி ஒரு கட்சியாக அவர்கள் ஆசனங்களை பெற்றுள்ளார்கள். தமிழ் தேசியப் பரப்பினர் இணைந்து செயலாற்றாது விட்டால் இந்த சபைகளை ஆளும் தரப்பிடம் இழக்க வேண்டிய சூழ்நிலை வரும்க். மேலும், கிழக்கு மாகாணத்தில் மாறுபட்ட அரசியல் சூழ்நிலைகளை தோற்றுவிக்கும் எனவும் தெரிவித்தோம்.

இன்னும் காலம் பிந்தவில்லை. தமிழ் தேசிய பரப்பினர் ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வடக்கு கிழக்கில் அனைத்து சபைகளையும் அமைப்பதற்கான முயற்சியை செய்ய முடியும். அதை நாங்கள் முன்னெடுக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்தோம்.
ஆனாலும் இணக்கமான சூழ்நிலைக்கு பதிலாக வறட்டு சவடால்களே பதிலாகின.

தனிமனித வீர வசனங்களால் எமது இனத்தினை நேர்த்தியான பாதையில் வழி நடத்த முடியாது. மக்கள் வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசியப் பரப்பினர் ஒன்று கூடி ஆட்சியை கைப்பற்றுவதே மக்கள் எதிர்பார்ப்பு. அதை செய்வதற்கு விட்டுக்கொடுப்பு, அரவணைப்பு என்பன மிக அவசியம். தலைமைகளை வறட்டு கௌரவம் இதற்கு தடையாக இருக்கக் கூடாது.

எப்பொழுதும் ஒற்றுமைக்காகவே ரெலோ பாடுபட்டு வந்துள்ளது. அதில் மிகுந்த நம்பிக்கையும் கொண்டவர்கள் நாங்கள். அதை தவறாக புரிந்து கொண்டு வீர வசனங்கள் பேசுவதில் அர்த்தம் இல்லை. வெட்டிச் சவடால்களுக்கு நாங்கள் ஒருபொழுதும் இடமளியோம்.

Posted in Uncategorized

இராணுவம் மீட்ட நகைகளை பொதுவுடைமையாக்க வேண்டாம் – ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நகைகளை அரச பொதுவுடமையாக்கும் நிலையை உருவாக்கி விடக்கூடாது என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்வதாக தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ராஜபக்‌ஷ காலத்தில் நடந்த போரின் போது விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து மீட்கப்பட்ட நகைகள் காணாமல் போய்விட்டன. பணம் மற்றும் உடமைகள் காணாமல் போயுள்ளன என்று பேசப்படும் நிலையில், இந்த அரசாங்கம் இராணுவத்தினர் வசமிருந்த நகைகளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நல்லவொரு விடயத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதை நாங்கள் பாராட்ட வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த விடயத்தில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். அதாவது இந்த நகைகள் சாதாரண மக்களுடையவையே. அவர்கள் அந்த வைப்பகத்தில் நகைகளை வைத்தமைக்கான அத்தாட்சிகளை பலரும் வைத்திருக்கின்றனர். என்னிடமும் அவர்கள் வழங்கியுள்ளனர். அதனை சபையில் சமர்ப்பிக்வும் முடியும். ஆதாரத்துடன் இருக்கும் மக்களிடம் அவை செல்ல வேண்டும். அவற்றை பொதுவுடமையாக்கும் வாய்ப்பை ஏற்படுத்திவிடக் கூடாது.

இந்த நகைகளை கொடுப்பதில் சட்ட வரையறைகள் உள்ளன. கூடுதலாக ஆதரங்களை காட்டும் மக்கள் இருப்பதை போன்று அந்த ஆதாரங்களை காணாமலாக்கியவர்களும் இருக்கின்றனர். ஆனால் அவற்றை காணாமலாக்கியவர்கள் தமது நகைகளின் அடையாளங்களை கூறும் போது அதனையும் பரிசீலிக்க வேண்டும் என்று கோருகின்றேன்.இதேவேளை கொடுக்கப்படாத மிகுதி நகைகளை எமது பிரதேசத்தின் அபிவிருத்திக்காக பயன்படுத்துவதாக கூறுகின்றீர்கள். இது நல்ல விடயம் தான் ஆனால் கூடுதலாக அந்த நகைகள் மக்களை சென்றடையும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது என்றார்.

எமது விடுதலை கொள்கைவழியிலானது என உணர்த்தியவர் பொன் சிவகுமாரன் ரெலோ நிரோஸ்

தமிழ் மக்களின் விடுதலை இலட்சியபூர்வமானது. அவ் விடுதலை என்பது கொள்கை வழியில் அடையப்படவேண்டியது என்பதை தமிழ்த் தேசிய மாணவர் சக்தியாக உணர்த்தியவர் தியாகி பொன் சிவகுமாரன் அவர்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பொன் சிவகுமாரனின் 51 வது ஆண்டு நினைவு தினத்தில் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமாரனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்பு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், தமிழ் மக்களின் இலட்சியபூர்வ விடுதலைப் பயணத்தின் வழி உறுதியுடன் நின்று மாணவ தலைவனாக பெரும் அரசியல் தலைவர்களுக்கு உணர்த்தியவர் சிவகுமாரன் அவர்கள். அடக்கு முறைகளுக்கு எதிராக தமிழ் இனம் இலட்சியபூர்வமாக எவ்வாறாக உச்சபட்ச தியாகத்தினை எமது இனத்திற்காக மேற்கொள்ள முடியும் என்பதை கற்பித்து முதல் வித்தாகிய மாவீரனே பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மக்களின் விடுதலைப் பயணத்தில் இளைஞர்களின் தியாகம் என்பது அளவிடப்பட முடியாதது. எதிரியிடம் உயிருடன் பிடிபட்டு விடக்கூடாது என்பதற்காக சயனட்டினை உட்கொண்டே சிவகுமாரன் அவர்கள் தன்னுயினை ஆகுதியாக்கினார். மாணவர் சக்தி மாபெரும் சக்தி என்பதை பேரினவாதத்திற்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய இனத்தின் வழிகாட்டி பொன் சிவகுமாரன் அவர்கள்.

தமிழ் மாணவர் மீது பௌத்த சிங்கள பேரினவாதச் சிந்தனையுடன் அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் முறைமைக்கு எதிராக போராடியவர் சிவகுமாரன் அவர்கள். தரப்படுத்தலை எதிர்த்து போராடிய மாணவர் பேரவையில் தன்னை முழுமையாக இணைத்துச் செயற்பட்டார். இக் காலத்தில் சிறிமா அரசாங்கத்தில் அங்கம் வகித்த சோமவீர அமைச்சரின் வாகனத்திற்குக் குண்டு வைத்தார் எனக் கைதுசெய்யப்பட்டார்.

அதுபோன்று அரசாங்கத்தில் சலுகைகளுக்காக சேர்ந்திருந்த அல்பிரட் துரையப்பா உள்ளிட்டவர்கள் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டார். துரையப்பாவின் வாகனம் வெடித்துச் சிதறிய நிலையில் துரையப்பா மயிரிழையில் உயிர் தப்பினார். உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலைகளை மேற்கொண்டவார்களை தண்டிப்பதற்காக திடனாக உழைத்தார். அரச பேரினவாதம் எம்மீது ஆயுத வன்முறையைத் திணித்த போது அதற்கு எதிராக மீண்டும் ஆயுதவழியில் பதிலளித்த தியாகி சிவகுமாரன் அவர்களின் இலட்சியத்தினை நினைவுகூர்ந்து இன்றும் அனுஸ்டிக்கின்றோம் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

பிரித்தானியாவில் எழுச்சி தலைவர் சிறீசபாரத்தினத்தின் 39 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

எழுச்சித்தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் முன்னூறுக்கும் அதிகமான போராளிகள் ஆதரவாளர்களது நினைவஞ்சலி நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று ஞாயிறு 25.05.2025 ரெலோ பிரித்தானியாகிளை உறுப்பினர்களால் உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்யப்பட்டது.

முதல் ஈகை சுடரை ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஏற்றிவைத்தார்,சகோதர படுகொலையில் கொல்லபட்ட போராளிகள் பொதுமக்களிற்காக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்புரைகள் பிரித்தானியாவிற்கு வருகை தந்த தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் பறுவா மோகன் ஆகியோாரால் நிகழ்த்தப்பட்டது.

நன்றி உரை பிரித்தானிய கிளையின் தலைவர் சாம் சம்பந்தன் வழங்கினார்.

இதனை தொடர்ந்து சமகால அரசியல் நிகழ்வுகள், வரும் மாகாண சபை தேர்தலை எப்படி எதிர் கொள்வது , உள்ளூராட்சி சபைகளை வினைத்திறனுடன் கையாள எப்படியான கூட்டுக் களை உருவாக்க வேண்டும் யாருக்கு ஆதரவுகளை வழங்குவது,ரெலோ வின் சர்வதேச கட்டமைப்பும் நாட்டில் உள்ள மாவட்ட கிளைகளும் இணைந்து எப்படியாக இயங்குவது போன்று பல விடயங்கள் ஆராயப்பட்டது.

Posted in Uncategorized