மைனாகோகமவில் பொலிஸாரின் பஸ்கள் அகற்றப்பட்டன; இளைஞர்களும் கூடாரங்களை அப்புறப்படுத்தினர்

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பிலும் உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று பிற்பகல் பொலிஸார் நீதிமன்ற உத்தரவொன்றை அறிவித்தனர்.

அலரி மாளிகைக்கு முன்பாக கூடியுள்ள அனைவரும் அங்கிருந்து வௌியேற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்தாலும், அது தொடர்பில் மக்கள் விளக்கம் கோரினர்.

இதேவேளை, அலரி மாளிகைக்கு முன்பாக நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்களை பொலிஸார் இன்று பிற்பகல் அகற்றினர்.

அலரி மாளிகைக்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 26 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இன்றும் பல்வேறு தரப்பினர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்கினர்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, கிராம உத்தியோகத்தர் தொழிற்சங்க உறுப்பினர்கள் அங்கிருந்து பேரணியாக கோட்டாகோகமவிற்கு சென்றனர்.

நெருக்கடிகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு கோரி, மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் வழங்குவதற்கும் அவர்கள் முயற்சித்ததனர்.

பின்னர் அவ்விடத்திற்கு சென்ற சிரேஷ்ட உதவி செயலாளர் ஒருவர் மகஜரை பெற்றுக்கொண்டார்.

உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தியுள்ள அமெரிக்கா

அமைதியான முறையில் உரிமைகளுக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கான ஆதரவை அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இன்றைய தினம் பாராளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர் , யுவதிகள் கைது செய்யப்பட்டதையடுத்து தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் இதனைத் தெரிவித்துள்ளார்.

‘கைதுக்கு அஞ்சாமல் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபடும் சுதந்திரம் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். அமெரிக்கா அனைத்து தரப்பிலும் கட்டுப்பாட்டை வலியுறுத்துகிறது மற்றும் அமைதியான எதிர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது.’ என்று அவது தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அண்ணாமலை

இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர், தமிழ் தேசிய கூட்டமைப்பினரை சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது. எரிபொருள் மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இந்த அரசாங்கத்திற்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.

அதேபோலத்தான் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரால் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியம் உள்ளது.

அதே போல இலங்கையில் தற்போதுள்ள பொருளாதார நிலையானது விரைவில் சுமுகமான நிலையை எட்ட இறைவன் அருள் புரிய வேண்டும். அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.

இலங்கை மக்களை தமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.

தென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது உண்மைதான். அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான். ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள். அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பா.ஜ.க.வின் தமிழ்நாடு மாநில தலைவருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்திப்பு

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை இன்றைய தினம் சந்தித்தார்.

இன்று காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இரண்டு மணி நேரம் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன், சீ.வீ.கே.சிவஞானம், த.சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, இது சம்பிரதாயபூர்வமான சந்திப்பு என தெரிவித்தார்.

இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள்- ஸ்டாலினுக்கு ஜெய்சங்கர் கடிதம்

இலங்கைத் தமிழர்களுக்குத் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து உணவு தானியங்கள், காய்கறிகள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்புவதற்கு உரிய வசதியை செய்து தருமாறும், யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்குத் தேவையான சட்டப்பூர்வ உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.

இலங்கையில் தற்போது நிலவும் மோசமான பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு விரைவில் பொருட்களை அனுப்புவதற்கான வசதியை செய்து தருமாறு முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.​

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொருட்களை மத்திய அரசு மூலம் அனுப்பலாம் என்றும் கூறி உள்ளார்.

தமிழக அரசு விரும்பினால் இலங்கையில் பொருட்களை விநியோகம் செய்யும் பணிகளை ஒருங்கிணைக்க தலைமைச் செயலாளரை அனுப்பி வைக்கலாம் என்றும் ஜெய்சங்கர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

(மாலைமலர்)

Posted in Uncategorized

யாழ் வந்துள்ள தமிழக பாஜக தலைவர் நல்லூரில் வழிபாடு!! நல்லை ஆதீனத்தையும் சந்தித்தார்

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இன்றையதினம் வழிபாட்டை மேற்கொண்டார்.

இன்று காலை 9 மணிக்கு வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவருடன் யாழிற்கான இந்தியத் துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் வருகை தந்தனர்.

ஆலய வழிபாட்டிற்கு பின்னர் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர ஞான சம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் தமிழக பாஜக கட்சி தலைவர்

யாழில் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார் பாஜக அண்ணாமலை

யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் கு. அண்ணாமலை இன்று காலை 10 30 மணியளவில் இந்திய அரசின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட யாழ்ப்பாணம் கலாச்சார மத்திய நிலையத்தை பார்வையிட்டார்.

இதன்போது கலாச்சார மத்திய நிலையத்தின் அமைக்கப்பட்டிருக்கின்றன விசேட வசதிகள் தொடர்பாகவும் அதன் திறன்கள் தொடர்பாகவும் யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜ் விளக்கம் அளித்தார்.

இதன்போது தமிழக பாஜக மாநில தலைவர் கு.அண்ணாமலை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான், யாழ் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தேர்தல் வெற்றிக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான தகவல்கள் மறைக்கப்பட்டன – கொழும்பு பேராயர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான தகவல்களை அறிந்திருந்தும் தேர்தல் வெற்றிக்காக அவை மறைக்கப்பட்டதாக கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் நேற்று(01) இடம்பெற்ற விசேட ஆராதனையொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிபோதே கர்தினால் ஆண்டகை இதனைக் கூறினார்.

இந்த விசேட ஆராதனையில் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் ஆயர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

ஐக்கிய மக்கள் சக்தியின் பாரிய மே தினக் கூட்டம் – மக்கள் அலையால் நிரம்பியது சுதந்திர சதுக்கம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பு – கெம்பல் பார்க் பகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி ஆரம்பமானது.

பின்னர் அங்கிரருந்து பொரளை சென்று , பொரளையிலிருந்து கொழும்பு – தேசிய வைத்தியசாலை சந்தியூடாக தாமரை தடாக பிரதேசத்தைக் கடந்து சுதந்திர சதுக்கம் வரை பேரணி சென்றது. ‘சுதந்திரத்திற்கான போராட்டம்’ என்ற தொனிப்பொருளில் ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளி கட்சிகளான மனோ கணேஷன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவுப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ், ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்ரஸ் என்பனவும் , அதனுடன் இணைந்த தொழிற்சங்கங்களும் இதில் கலந்து கொண்டன.

ஆயிரக்கணக்கான மக்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டமையால் சுதந்திர சதுக்கத்திற்குச் செல்லும் வீதிகள் மக்கள் கூட்டத்தால் நிரம்பின.

இதனால் இன்று மாலை 4 மணியின் பின்னர் அவ்வழியூடான சகல போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்தது. பாரிய மக்கள் கூட்டம் காணப்பட்டமையால் அப்பகுதியில் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ – 3 மாவட்டங்களில் ஜே.வி.பி.யின் மே தினக் கூட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ’74 வருட சாபக் கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்’ என்ற தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஞாயிற்றுக்கிழமை நாட்டின் 3 பிரதான மாவட்டங்களில் மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

அதற்கமைய முதலாவது கூட்டம் மாத்தறை மாவட்டத்தில் இடம்பெற்றது. ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது. இதே வேளை அநுராதபுரம் மாவட்டத்தில் ஜே.வி.பி. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையில் இடம்பெற்றது.

ஜே.வி.பி.யின் பிரதான கூட்டம் கொழும்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கொழும்பு – மாளிகாவத்தை பகுதியிலிருந்து பேரணியாக புறக்கோட்டை புகையிரத நிலையம் வரை சென்று அங்கு கூட்டம் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.