பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதி கைவிடமாட்டார்!சிறீகாந்தா தெரிவிப்பு

பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும் பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்றுஎங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது என தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

அவர் இன்றைய தினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில்,கூட்டமைப்புடன் நேற்று நிகழ்ந்த உயர்மட்ட பேச்சு வார்த்தைகளில், அரசாங்கத் தரப்பினால் மேலோட்டமான முறையில் வாக்குறுதிகள் தாராளமாகவழங்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்குமாகாணங்களில் அரசாங்கத்தின் சார்பில் நிகழ்த்தப்பட்டு வந்திருக்கும் சகல அத்துமீறல்களும் அடாவடி நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படாத வரையில், இந்த வாக்குறுதிகள் எல்லாம் விரைவில் அர்த்தம் அற்றுப் போய்விடும்.

அத்துடன், அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப் படுத்துவதற்கான செயற்பாடுகளை உடனடியாக முன்னெடுப்பதிலும், நீண்ட பல வருடங்களாக சிறைக்குள் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை, காலதாமதம் செய்யாமல் விரைவாக விடுவிப்பதிலும் அரசாங்கத்திற்குஎந்த தடையும் இருக்க முடியாது.இந்த விவகாரங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளே அரசாங்கத்திடம் எதிர்பார்க்கப்படுகின்றன.அடுத்து வரும் ஒரு சில வாரங்களில் தனது வாக்குறுதிகளின் விடயத்தில்அரசாங்கம் தன்னைத் தானே நிரூபித்தாக வேண்டும்.காலத்திற்கு காலம் சிங்கள ஆட்சியாளர்கள் தமது உடனடிஅரசியல்.தேவைகளுக்காக வழங்கிச் சென்ற வாக்குறுதிகள் எல்லாம் தமிழர் மனங்களில் இப்பொழுதும் பசுமையாகவே உள்ளன.

1977ல், அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் காலத்தில் இருந்து 40 வருடங்கள் கழித்து சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலம் வரையில்,தேர்தலில் தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல் தலைமைகளுக்கு சிங்கள ஆட்சித் தலைவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வழங்கிய வாக்குறுதிகள்காற்றில் பறக்கவிடப்பட்டதை கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன் உட்பட உரிமை கோரும் தமிழர்கள் எவரும் மறந்துவிட முடியாது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கள் சிக்கி திணறிக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவின் உதவியும், அமெரிக்கா, பிரிட்டன்உட்பட மேற்குலக நாடுகளின் ஆதரவும் அவசரமாக தேவைப்படும் இக்கட்டானஇந்த நேரத்தில், தமிழர்களை தான் அனுசரித்துப் போவதானஓர் தோற்றப்பாட்டினை காட்டுவதற்கு அது முயற்சிக்கின்றது என்பது தெட்டத்தெளிவானது.

தமது பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலை ஜனாதிபதியும் மற்றும்பிரதமர் உட்பட ஏனைய பிரதான அமைச்சர்களும் கைவிடுவார்கள் என்றுஎங்களில் யாராவது நம்பினால், அதைவிட அரசியல் அறியாமை வேறு இருக்கவே முடியாது.காணமலாக்கப்பட்ட தமிழர்களின் விவகாரத்தில், இந்த அரசாங்கம் எதுவும்செய்யமாட்டாது. அப்படிச் செய்வதாக, இருந்தால் தமக்குத் தாமே படுகுழிதோண்டுவதாகவே அது இருக்கும் என்பதும் அரசாங்கத் தலைவர்களுக்கு நன்கு தெரியும். அதனாலத் தான் காசைத் தந்து, கண்ணீர் விடும் உறவுகளின் வாய்களைமூட வைக்கலாம் என்ற முட்டாள்த்தனமான சிந்தனை மேலோங்கி நிற்கின்றது.

இந்த நிலைமையில், தமக்குள் பரஸ்பர விமர்சனங்களையும்,குற்றச்சாட்டுக்களையும் தமிழர் தரப்பு தவிர்த்துக் கொண்டு, இன்றையசூழ்நிலையை இனி எப்படி பயன்படுத்துவது என்று சிந்திக்க வேண்டும். விசுவாசத்துடன் சொல்வதானால், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை என்பதுநடக்குமாக இருந்தால், எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போதுஉத்தியோகபூர்வமாக தனக்கு வழங்கப்பட்டு, இப்பொழுதும் அரசாங்கத்தின்தயவில் தான் தொடர்ந்து வசித்து வரும் ஆடம்பர அரச மாளிகையை மீண்டும்அரசாங்கத்திடம் கையளித்து விட்டு, ஓர் பாராளுமன்ற உறுப்பினர் என்றமுறையில் தனக்கு தரப்பட வேண்டிய அரசாங்க குடியிருப்பு தொகுதி வீடுஒன்றிலிருந்து, அந்தப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சம்பந்தன் வரமுடியுமாக இருந்தால், பேச்சுவாரர்த்தை மேசையில் அவரின் ஆக்ரோச குரலுக்குபலமடங்கு பலம் சேரும்.

ஏற்கனவே, பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள நிபந்தனை விதிக்கப்படவேண்டும் என்ற ரெலோவின் நிலைப்பாடு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனாலும் அதன் ஏனைய இரண்டு கட்சிகளாலும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்துரெலோ ஒதுங்கி நின்றதன் மூலம், பேச்சுவார்த்தை மேசையில் சம்பந்தனின் குரலுக்கு எதிர்மறையான முறையில் வலு சேர்க்கப்பட்டிருக்கின்றது என்பதைகுறிப்பிட்டாக வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசின் ‘113’ படைபலத்தை தகர்க்க – ’11’ அணியினர் பலமுனை தாக்குதல்!

‘இலக்கை விரைவில் அடைவோம்’ – என கண்டி மண்ணில் விமல் சபதம்!

” ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான ‘மொட்டு’ அரசின் சாதாரண பெரும்பான்மையும் (113 ஆசனங்கள்) விரைவில் இல்லாது செய்யப்பட்டு – இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டவருமான விமல் வீரவன்ச நேற்று (24.03.2022) சூளுரைத்துள்ளார்.

அத்துடன், பஸில் ராஜபக்சவின் அரசியல் வாழ்வுக்கு முடிவுகட்டிவிட்டு, நாமல் ராஜபக்சவை முன்னிலைப்படுத்துவதற்கான ‘அரசியல் நாடகத்தையே’ 11 கட்சிகள் அரங்கேற்றிவருகின்றன என எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளையும் அவர் அடியோடு நிராகரித்தார்.

” எந்தவொரு ராஜபக்சக்களுக்காகவும் சோரம் போக தயாரில்லை.” – எனவும் விமல் பகிரங்கமாக அறிவிப்பு விடுத்தார். ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில உட்பட ’11 கட்சிகள் அணி’ யின் பிரதிநிதிகள் இன்று கண்டிக்கு பயணம் மேற்கொண்டிருந்தனர்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து, ஆசி பெற்றதுடன், சமகால நிலைவரம் பற்றியும் உரையாடினர். இதன்போது ‘முழு நாடும் சரியான பாதைக்கு’ எனும் தமது அணியின் வேலைத்திட்டத்தின் உள்ளடக்கங்கள் பற்றி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே, ” ஆணவ போக்கில் செயற்படும் – அசிங்கமான அமெரிக்கரான பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக செயற்படும் இந்த ஆட்சிக்கு முடிவு கட்டப்படும்.” – என்ற அறிவிப்பை விமல் விடுத்தார்.

2020 ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவானது, கூட்டணி அமைத்து மொட்டு சின்னத்திலேயே எதிர்கொண்டது. தேசிய ரீதியில் 59.09 சதவீத வாக்குகளைப்பெற்ற அக்கட்சிக்கு 17 போனஸ் ஆசனங்கள் உட்பட 145 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.

பங்காளிக்கட்சிகளின் ஆதரவு கிட்டியது. அதன்பின்னர் முஸ்லிம் கட்சிகளின் உறுப்பினர்கள், அரவிந்தகுமார், டயானா போன்றவர்களும் அரசுக்கு ஆதரவை வெளிப்படுத்தினர். இதனால் நாடாளுமன்றத்தில் 160 ஆசனங்கள் அரச வகம் இருந்தன.

அதாவது மூன்றிலிரண்டு பெரும்பான்மையை (150) விஞ்சிய ஆதரவு. எனினும், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்பு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலையால் அரசு விசேட பெரும்பான்மையை இழந்துவிட்டது. சுதந்திரக்கட்சியும் காலைவாரும் நிலையிலேயே உள்ளது.

சுசில் பிரேமஜயந்த, விஜயதாச ராஜபக்ச ,சந்திம வீரக்கொடி, விதுர விக்ரமநாயக்க, பிரேமநாத் தொலவத்த ஆகியோருக்கும் அரசுடன் நல்லுறவு இல்லை. சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்து இ.தொ.காவும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. எனவே, மொட்டு கட்சிக்கு ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான சாதாரண பெரும்பான்மை ( 113 ஆசனங்கள்) ஆதரவு கூட ஊசலாடுகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே விமல் தரப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் சாதாரணப் பெரும்பான்மைகூட நிலையாக இல்லாவிட்டால் ஆட்சியை முறையாக முன்னெடுக்க முடியாது. அரசியல் ஸ்தீரமற்ற தன்மை உருவாகும். அது வெளிநாட்டு முதலீடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போதைய பொருளாதார நெருக்கடி மேலும் உக்கிரமடையலாம்.

எனவே, அரசியல் நெருக்கடியை தவிர்க்க தேசிய மட்டத்திலான தேர்தலொன்றுக்கு அரச தலைமை செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘விமல்’ தரப்பினரால் தனித்து ‘அரசியல் போர்’ தொடுத்து இந்த அரசை ஆட்டம் காண வைப்பது கடினம். அதற்காக கடுமையாக போராடவேண்டிவரும். எனவே, பிரதான எதிரணிகளுடன் சங்கமித்து போரை முன்னெடுத்தால் இலகுவில் இலக்கை அடையலாம்.

ஆனால், எதிரணிகள் மற்றும் விமல் தரப்புகளின் இணைவு என்பது இழுபறியில் இருக்கும் ஒன்று. அது சாத்தியப்படுமா என்பதும் சந்தேகமே. ஆனால் அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதுபோல – பிரதான எதிரியை வீழ்த்த ‘தற்காலிக’ சங்கமத்துக்கு சாத்தியம் இல்லாமலும் இல்லை.

11 அணியின் மூலம் அரசின் சிங்கள பௌத்த வாக்கு வங்கியை இலகுவில் இலக்கு வைக்கலாம் என்பதால் மேற்படி தரப்பை எடுத்த எடுப்பிலேயே நிராகரிப்பதும் அரசியல் இராஜதந்திரம் அல்லவென சுட்டிக்காட்டப்படுகின்றது .

ஆர்.சனத்

தமிழரையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே பேச்சு நாடகம் என ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

தமிழரையும் சர்வதேசத்தையும் சமாளிப்பதற்கே பேச்சு சிங்கள மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுவரும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, தமிழ் மக்களின் மனதை வெல்லவும் சர்வதேச சமூகத்தைச் சமாளிக்கவுமே பேச்சு நாடகத்தை அரங்கேற்றுகின்றார் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. இதனைக் கூறினார்.

கோட்டாபயவின் இந்த நாடகத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் துணைபோகக்கூடாது. அவர்கள் கடந்தகாலச் சம்பவங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிதானமாகச் செயற்படவேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சுட்டிக்காட்டினார்.

பேச்சை மேசையைக் கூட்டமைப்பினர் சரிவரப் பயன்படுத்த வேண்டும். அதைவிடுத்துக் கோட்டாபய அரசைக் காப்பாற்றும் வகையில் அவர்கள் செயற்படக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார். .

தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு வழங்கவேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாகவுள்ளது. ஆனால், தமிழர்களுக்குத் தீர்வை வழங்க இந்தக் கோட்டாபய அரசு ஒருபோதும் முன்வரமாட்டாது எனவும்அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்படவர்களின் உறவினர்கள்ஸதாக்கப்பட்டதற்கு நீதி கோரி யாழில் போராட்டத்திற்கு அழைப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்த வலிந்து

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பான ஒரு கலந்துரையாடல் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அமைப்புக்களின் தலைமையில் இன்றையதினம் காலை 10 மணியளவில் நல்லூர்
இளங்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கண்டனப் பேரணி தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் செயலாளர் அ.லீலாவதி கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 3ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் கண்டனப் பேரணி முற்றவெளியில் நிறைவடையும்.

இந்த பேரணியில் கட்சி மற்றும் அரசியல் ரீதியான வேறுபாடுகளை கடந்து இந்த போராட்டத்தை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளோம் என்றார்.

சீனாவினால் இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க சீன அரசாங்கம் 2,000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் அறிவிப்பு விடுத்துள்ளது.

சீனா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 70 ஆண்டு வருட நிறைவு இவ்வருடம் அனுஷ்டிக்கப்படுவதை நினைவுகூரும் வகையில், இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக சீன தூதரகம் குறிப்பிட்டது.

போக்குவரத்து செலவு உள்ளிட்ட இதன் மொத்த பெறுமதி 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் ஆகும்.

COVID-19 தொற்று பரவல் மற்றும் சர்வதேச அளவிலான மாற்றங்கள் காரணமாக, உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து நிலைமைகள் என்பன பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக சீன தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமைகளின் கீழ் இரண்டு நாடுகளின் தொழில்நுட்ப குழுக்கள் ஒன்றிணைந்து கலந்துரையாடி, உற்பத்தி மற்றும் போக்குவரத்து ஒழுங்குகளை மிக விரைவில் மேற்கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமென தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், சீனா தொடர்ந்தும் இலங்கையின் சமூக பொருளாதார ரீதியிலான அபிவிருத்திக்கு தம்மால் இயன்றளவு உதவிகளை மேற்கொள்ளும் என சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியைத் தடுக்க பணச்சபை முறைமையே தீர்வு – பிரபல அமெரிக்க பொருளியலாளர் ஆலோசனை

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 203 இலிருந்து 290 வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு இலங்கை ‘பணச்சபை முறைமையை’ ஸ்தாபிப்பது அவசியம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பொருளியலாளர் ஸ்டீவ் ஹன்க் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹன்க், மிகமோசமடைந்துவரும் இலங்கையின் பொருளாதார நிலைவரம் தொடர்பில் கடந்த சில வாரங்களாக அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவுகளைச் செய்துவருகின்றார். அவ்வாறு செய்திருக்கும் பதிவொன்றிலேயே அவர் மேற்கண்ட விடயம் குறித்து வலியுறுத்தியுள்ளார்.

‘இவ்வாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி 26 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை முகங்கொடுத்திருக்கக்கூடிய டொலர் பற்றாக்குறையும் எரிபொருள் விலையேற்றமும் அந்நாட்டிற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன’ என்று ஸ்டீவ் ஹன்க் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த நெருக்கடியின் தீவிரத்தன்மையைக் குறைப்பதற்கு இலங்கையில் கடந்த 1884 தொடக்கம் 1950 ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்த ‘பணச்சபை முறைமை’ மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுத்தியுள்ளார்.

இலங்கை சிலோன் என்று அறியப்பட்ட காலப்பகுதியில் பணச்சபை முறைமை நடைமுறையில் இருந்ததுடன் 1950 ஆம் ஆண்டில் அம்முறைமை நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக மத்திய வங்கி ஸ்தாபிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Posted in Uncategorized

அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்

அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்று சென்றுவிடும்.

நாட்டிலே தற்போது பஞ்சம் ஏற்பட்டுள்ளது சமயல் எரிவாயு இல்லை, எரிபொருட்கள் இல்லை, உணவுத்தட்டுப்பாடு, உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து மக்கள் சொல்லெணாத் துயரங்ககளை எதிர்கொண்டு வருகின்றார்கள். நான் எனது இன்றய கன்னி அமர்வுக்குக்கு வருதற்குக்கூட பெற்றோல் இல்லாமல் நான் துவிச்சக்கர வண்டியில்தான் வந்தேன்.
என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு புதிதாகப் பதவியேற்ற இ.வேணுராஜ் வியாழக்கிழமை(24) தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குருமண்வெளி வட்டாரத்தில் உறுப்பினராக இருந்த இளங்கோ மரணமடைந்ததையடுத்து அவரது வெற்றிடத்திற்கு ரெலோ கட்சியைச் சேர்ந்த இ.வேணுராஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்றயதினம் தனது கன்னி அமர்வுக்காக பிரதேச சபைக்கு வருவதற்கு துசிச்சக்கர வண்டியிலேயே வருகை தந்திருந்தார். இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவாறு குறிப்பிட்டார் இதன்போது அவர் மேலும் தெரிவிக்கiயில்…

பிரதேச சபை உறுப்பினர்களாகிய எமக்கே இந்த நிலமை என்றால் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைத்துவரும் மக்களின் நிலமை என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க முடியவில்லை. விவசாயிகள், மீனவர்கள், உள்ளிட்ட பலரும் எரிபொருட்கள் இல்லாமல் மிகவும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். தற்போது எரிபொருட்கள் பெறுவதற்கு காத்திருந்த மக்கள் மரணித்துள்ளார்கள், பஞ்சத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியாவிற்குக்கூட எமது மக்கள் தப்பிச் செல்கின்றார்கள்.

இலங்கையில் அரசு இவ்வாறு செயற்பட்டால் எமது நாடு சோமாலியா, எதியோப்பியா போன்ற நாடுகளைப் போன்றுதான் நாட்டின் நிமையும் சென்றுவிடும். எனவே அரசாங்கம் மக்களுக்கு நிவாரணங்களை வழங்க வேண்டும். நிவாரணங்களை வழங்க முடியாத அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும். அரச கட்சியிலிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட அக்கட்சியிலிருந்து விலகிச் செல்லும் நிலமையும் ஏற்பட்டுள்ளது என அவர் இதன்போது தெரிவித்தார்.

“யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம்” 28ஆம் திகதி திறப்பு விழா!

இந்திய அரச நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள “யாழ்ப்பாணப் பண்பாட்டு மையம்” எதிர்வரும் 28ஆம் திகதி திறக்கப்படும் என்று யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் இன்றைய சபை அமர்வில் அறிவித்தார்.

திறப்பு நிகழ்வு ஆடம்பரமில்லாது நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய நாள் யாழ்.மாநகர முதல்வர் மற்றும் ஆணையாளர் ஆகியோருடன் இந்தியத் துணைத் தூதுவரும் பண்பாட்டு மைய வளாகத்தில் திறப்பு நிகழ்வு தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

இதனிடையே,

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பண்பாட்டு மையத் திறப்பு நிகழ்வில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் அவர் தொலை தூர தொழில்நுட்பம் ஊடாக திரை நீக்கம் செய்து வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோட்டாவின் செயற்பாடுகளினால் இ.தொ.கா கடும் அதிருப்தி – ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட முக்கிய அமைச்சர்?

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவரினை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று இதுகுறித்த செய்தியினை வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம் இரசாயன உர இறக்குமதியை தடைசெய்வதற்கு கட்சியினால் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும், ஜனாதிபதியின் தீர்மானம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் நடைபெற்ற அனைத்துக் கட்சி மாநாட்டை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் புறக்கணித்தமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்று உரத்தடையானது தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கமே எனவும் குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரசும் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் குறித்து அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

குறிப்பாக “ஜனாதிபதி எங்கள் பேச்சைக் கேட்பதில்லை. நாங்கள் எங்கள் கவலைகளை பிரதமரிடம் தெரிவித்துள்ளோம்,” என கட்சியின் முக்கிஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்தமை தொடர்பாக அரசாங்கத்தின் இரண்டு முக்கியஸ்தர்கள், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற உணவகத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும், அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்து கொண்டு, சர்வக் கட்சி மாநாட்டை புறக்கணித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அப்படி செய்ய வேண்டுமாயின் அமைச்சர் பதவியில் இருந்து விலகி விட்டுஅதனை செய்ய வேண்டும் என குறித்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமானிடம் கூறியுள்ளார்.

இதன் போது பதிலளித்துள்ள ஜீவன் தொண்டமான், அமைச்சராக பதவி வகித்து கொண்டு அரசாங்கத்தை விமர்சிப்பதா இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை எடுப்பது தான் எனவும், அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும் எனவும் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Posted in Uncategorized

இலங்கையின் இன்றைய பொருளாதார நிலையில் தமிழ் கட்சிகளின் நிலைப்பாடு

தற்போதைய மலினமான பொருளாதார நிலைக்கு என்ன காரணம் என்று கேட்டால் கொரோனாவையும் உக்ரைன் போரையும் காரணம் காட்டுவார்கள். உலகம் எங்கும் கொரோனா தாக்கம் ஏற்பட்டிருக்கும் போது ஏனைய நாடுகளில் ஏற்படாத பொருளாதார வீழ்ச்சி இலங்கையில் எவ்வாறு ஏற்பட்டது? கேட்கிறவன் கேனையன் என்றால் எலி ஏரோபிளேன் ஓட்டுமாம்.

வீடாக இருந்தால் என்ன நாடாக இருந்தால் என்ன கடனில் மூழ்கிருப்போர் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டுமானால் திறமையான இல்லத்தரசிகள் பயன்படுத்தும் அடிப்படை பொருளாதார உபாயத்தை பயன்படுத்த வேண்டும். அதாவது வருமானத்தை மேலும் மேலும் அதிகரிக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் செலவுகளை கட்டுப்படுத்துவதே வீட்டையும் நாட்டையும் கட்டியெழுப்புவதற்குரிய ஒரே உபாயம் ஆகும்.

Janes இணையத்தள அறிக்கையின்படி இலங்கையின் பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடுகள் 2022 இல் 2021 இல் இருந்ததைவிட 14% இனால் 373 பில்லியன் ரூபாய்களாக அதிகரித்துள்ளது. நாட்டை பாதுகாப்பதே ஆயுதப்படையினரின் ஒரே கடமையாக இருக்க வேண்டும்.

ஆனால் இதை விடுத்து போர் நடக்காத சூழ்நிலையில் சந்திக்கு சந்தி ஆயுதப்படையினரின் சோதனைச்சாவடிகள் போதாதென்று இப்போது பெற்றோல் நிலையங்களில் ஆயுதப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு ஆயுதப்படையினர் பாடசாலை மாணவர்களுக்கு அரசாங்க செலவில் சதுரங்கம் உட்பட விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கிறார்கள்.

இதுவா நாட்டில் செலவீனங்களை குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்தும் உபாயம் ? பொருளாதார பிரச்சினைகளில் நாடு மூழ்கி இருக்கும் போது தென் பகுதி தலைவர்கள் வடக்குக்கு வந்து எதாவது நிவாரணம் வழங்குகிறார்களா? வழமை போல தமது பேரினவாத வாக்கு வங்கியை தக்க வைப்பதற்கு வடக்கிலும் கிழக்கிலும் பல இடங்களிலும் பௌத்த விகாரைகளை நிறுவுகிறார்கள். தமிழர் அல்லாத குடியேற்றப்பட்டவர்களுக்கு காணி உறுதி வழங்குகிறார்கள்.

வட்டிக்கு வெளிநாட்டுக் கடன் எடுத்து ரோலிங் மூலமாக நாட்டை நிமிர்த்தலாமா ? முதலில் சீனாவிடம் கடன், பிறகு வங்காள தேசத்திடம் கடன் இப்போது இந்தியாவிடம் கடன். சீனாவும் இந்தியாவும் கடன் கொடுக்கும் போர்வையில் சத்தம் இல்லாமல் இரத்தம் சிந்தாமல் நாட்டின் பல இடங்களையும் வளங்களையும் சூறையாடிக் கொண்டு போகிறார்கள். இதை தட்டிக் கேட்கமுடியாத ஒரு கையாலாகாத எதிர்க்கட்சி தலைவர்.

நாள்தோறும் பணவீக்கம் அதிகரித்து வருகிறது . இந்த மாதம் 18ம் திகதியில் மாத்திரம் 55.95 பில்லியன் ரூபாய்கள் அச்சடிக்கப்பட்டதாகவும் இந்த மாதத்தில் மாத்திரம் 18ம் திகதி வரையில் 172.34 பில்லியன்கள் அச்சடிப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன (2).

இந்த சூழ்நிலையில் பல இடங்களில் மக்கள் பட்டினியால் வாடிக் கொண்டு வரிசைகளில் நின்று கொண்டிருக்கும் நிலையில் சிலர் வீழ்ந்து இறப்பதனால் மக்களின் வெறுப்பை மிகவும் கடுமையாக சந்தித்துள்ள நிலையில் கூட்டப்பட்ட சர்வகட்சி கூட்டத்துக்கு தமிழ் தலைவர்களும் அழைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

தமிழ் கட்சிகளின் நிலையோ அந்தோ பரிதாபம்! அரசுத் தலைவரை சந்திக்க தனியான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என்று அழுது கொண்டு இந்தக் கூட்டத்துக்கு செல்லுகிறார்கள்.

இதன்மூலம் இவர்கள் சாதிக்கப் போவது என்ன ? இவர்கள் சொல்லி பணம் அடிப்பதை நிறுத்தப் போகிறார்களா? அல்லது கடன் ரோலிங் ஐ விட்டுவிட்டு சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து பாதுகாப்பு உட்பட அனைத்து துறைகளிலும் வீண் செலவீனங்களை குறைக்கப் போகிறார்களா? குறைந்த பட்சம் இத்தகைய கூட்டங்களுக்கு முன்நிபந்தனைகள் எதுவுமின்றி செல்வதை தவிர்ப்பதன் மூலம் தமிழர்களின் தன்மானத்தையாவது காப்பாற்றுவார்களா ?

Dr முரளி வல்லிபுரநாதன்