அமெரிக்க தூதுவரை சந்தித்தார் பசில் ராஜபக்ஸ

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் Julie J. Chung-ஐ சந்தித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை, நெருக்கடியை தீர்ப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக சந்திப்பின் பின்னர் அமெரிக்க தூதுவர் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் திடீர் மாற்றம் விமல், கம்மன்பில, வாசுதேவ மூவரும் நீக்கம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பல அமைச்சரவை மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

விமல் வீரவன்ச வகித்து வந்த கைத்தொழில் அமைச்சர் பதவி, கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உதய கம்மன்பில வகித்து வந்த மின்சக்தி அமைச்சர் பதவி, எரிசக்தி அமைச்சராக பதவி வகித்த காமினி லொக்குகேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோரின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகள் இழக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு கல்வி அமைச்சர் பதவியும், திலும் அமுனுகமவுக்கு போக்குவரத்து அமைச்சர் பதவியும், பவித்ரா வன்னியாராச்சிக்கு எரிசக்தி அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்கள் அவசியம்: மிச்செல் பெச்சலட் வலியுறுத்தல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் (Michelle Bachelet) முன்வைத்துள்ள இலங்கை தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணம் தொடர்பில் நாளைய (04) அமர்வில் கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால், இலங்கையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ், நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன ஆகியோர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்சலட்டை நேற்று பிற்பகல் சந்தித்துள்ளனர்.

இதன்போது, யுத்த குற்றங்கள் இலங்கையில் இடம்பெறவில்லை என்பதனை மனித உரிமை ஆணையாளருக்கு தெளிவுபடுத்தியதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்கினால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தூதுக்குழுவிடம் கூறியதாக நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை எடுத்துள்ள முயற்சி சிறந்தது என்ற போதிலும் மேலும் பல மாற்றங்கள் அவசியம் என மிச்செல் பெச்சலட் கூறியதாக அவர் கூறினார்.

இந்த நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பில் தாம் மனித உரிமை ஆணையாளரை தௌிவுபடுத்தியதாகவும் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி கூறினார்.

இதனிடையே, இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடி தடை விதிக்க வேண்டும் எனவும், சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திற்கு இணங்க அதனை மீள் பரிசீலனை செய்து திருத்தம் மேற்கொள்ளுமாறும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த சட்டம் மக்களின் உரிமைகள் , சுதந்திரத்திற்கு பாரிய ஆபத்தை விளைவித்துள்ளதாகவும் விசேடமாக சிறுபான்மை மக்களுக்கு இதன் ஆபத்து அதிகமாக இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் வரை, பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு உடனடித் தடை விதிக்க வேண்டும் எனவும் ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தகம் தொடர்பான உதவிக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக பயங்கரவாத சட்டத்தை மறுசீரமைப்பிற்கு இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலம் கடந்த மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம், பிற பொறிமுறைகளால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் உரிய வகையில் அதில் பின்பற்றப்படவில்லை எனவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிறுபான்மை சமூகங்கள், அரசியல் அதிருப்தியாளர்களை இலக்கு வைப்பதற்கும், சித்திரவதைகள் மூலம் பொய்யான வாக்குமூலங்களை பெறுவதற்கும், நீண்டகால தன்னிச்சையான தடுப்பு காவலில் வைப்பதற்கும், 40 ஆண்டுகளுக்கு மேலாக பயங்கரவாத சட்டம் இலங்கையில் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமை நிபுணர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் நியமனம்

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம் பிரதமரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் செயற்பட்டு வரும் நிலையில், அவருக்கு எதிராகப் பல முறைப்பாடுகள் பிரதமர் அலுவலகத்திற்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதமரின் பிரதிநிதியாக கீதநாத் காசிலிங்கம், பிரதமர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் செயற்பாடுகள் அனைத்தும் பிரதமரின் கட்டுப்பாட்டில் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மைகளை வெளிப்படுத்த உரிய தரப்பிற்கு அழுத்தம் பிரயோகியுங்கள் – பேராயர் கோரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது குறித்து உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , அது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள இலங்கை கத்தோலிக்கர்கள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.

இலங்கை நேரப்படி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேராயர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு ஆரம்பமாகி, 45 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போதே பேராயர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தமன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி , பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பித்திருந்தது.

குறித்த அறிக்கையில் தாக்குதகல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை மற்றும் தனது கடமையை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அந்த பரிந்துரைகள் எவையும் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதோடு, இவ்விடயத்தில் அரசாங்கமும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை தொடர்ந்தும் பகிரங்க விமர்சனங்களை முன்வைத்து வந்தது.

அத்தோடு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல முக்கிய பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனையும் பகிரங்கப்படுத்துமாறும் தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் பேராயர் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது சுமார் 70,000 பக்கங்களைக் கொண்ட 80 பகுதிகளடங்கிய முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

எனினும் இதுவும் முழுமையான அறிக்கையாக இருக்காது என்று தாம் சந்தேகிப்பதாக பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. காரணம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் காணப்படுவதாகவும், அவை ஜனாதிபதி வசமுள்ளதாகவும் அண்மையில் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருந்தமையாகும்.

இவ்வாறான நிலையில் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பேராயர் பரிசுத்த பாப்பரசரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெனீவா சென்று நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கும் இவ்விடயத்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் துணை ஆயர் கலாநிதி ஜே.டீ.அன்தனி ஜயக்கொடி கேசரிக்கு தெரிவிக்கையில் ,

அண்மைக்காலமாக நாம் அனைவரிடமும் தெரிவித்தமைக்கமைய , அனைத்து மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ந்து வேறு மாற்று வழிகள் எவையும் இன்மையினால் சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் தீர்மானித்தோம்.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.

அதன் இரண்டாம் கட்டமாகவே நேற்று பிற்பகல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பொறுப்பு கூறல் , நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் இணைந்துள்ளது. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

முழு நாடும்- சரியான பாதைக்கு. சிறிய கட்சி கூட்டணிகளின் வெற்று வேட்டு

அரசாங்கத்தை பிரதிநிதுத்துவம் செய்யும் சிறிய கட்சிகள் கூட்டமைப்பானது இன்று தங்களுடைய முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்மொழிந்துள்ளது. முழு நாடும் சரியான பாதைக்கு என்றுதான் அந்த முன்மொழிவுக்கு பெயர் வைத்திருக்கிறார்கள். முழு நாடும் சரியான பாதைக்கு எடுப்பதற்கு அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய கைவிடப்பட்ட செட் ஒன்று தான் தயாராகியுள்ளது. வழிதவறிய கூட்டமொன்று. தங்களுடைய பாதை மாத்திரம் வழி தவறியதன்றி நாட்டின் பாதையை தவறச்செய்து ராஜபக்சக்களில் இவ்வளவு காலம் சாய்ந்து கொண்டு வயிற்றுப்பசியை பாதுகாத்த கூட்டணி. 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு கை உயர்த்தி மக்களுடைய ஜனநாயக உரிமைகளை ராஜபக்சக்களுக்கு முன் தாரை வார்த்தவர்கள். பெசில் ராஜபக்ஷ என்ற ஏழு மூளையுடைய அறிஞரை பாராளுமன்றம் வரை கொண்டுவந்து நிதியமைச்சர் பதவியை வழங்கி மக்களது இறைமையை கொள்ளை கொள்ளையடிப்பதற்கு வழி சமைத்த குழுவினர்.

அவ்வாறு சொல்லி அவர்கள் அரசாங்கத்திற்கு முன்மொழிவை முன்வைப்பதற்கு உரிமை இல்லை என்று ரட்டே ரால குறிப்பிடுவதில்லை. ரட்டே ரால கேட்பது இவ்வளவுதான். 20ஆவது திருத்தத்தை கொண்டு சந்தர்ப்பத்தில் நாட்டுக்கு சரியான பாதையை சொல்ல முடியாதவர்கள், நாட்டு வளங்களை விற்றபோது நாட்டுக்கு சரியான பாதையை சொல்ல முடியாதவர்கள், பாரியளவிலான ஊழல் மோசடிகள் நடைபெறுகின்ற பொழுது அதனை நிறுத்துங்கள் என்று சொல்ல முதுகெழும்பற்றவர்கள், அந்தக் கள்வர்களோடு இணைந்து ஒன்று சேர்ந்து நாட்டினுடைய பொது சொத்துக்களை சூறையாடியவர்கள் அதேபோன்று கொமிஸ் எடுத்த குழுவினர் தற்போது நாட்டுக்கு சரியான பாதையை சொல்வதற்கு வந்திருக்கின்றார்கள். ராஜபக்சக்கள் வேலையை எடுத்து விட்டு தூக்கி எறிந்தவர்கள் நாடு தொடர்பில் சிந்திக்கும் அபூர்வ தேசப்பற்றுடையவர்கள் என சொல்வதற்கு மீதமாகவுள்ள பாதை என்ன? அதனால் முழு நாடும் சரியான பாதைக்கு கொண்டு செல்ல இந்த குழுவினரது அரசியல் தேவைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும். ரட்டே ரால குறிப்பிடுவது இந்த முன்மொழிவை அரசாங்கம் 5 சதத்துக்கேனும் கணக்கெடுக்க போவதில்லை. அது முன்மொழிவை முன்வைத்தவர்களுக்கும் தெரிந்திருக்கும்.

முன்மொழிவில் 10 காரணங்கள் இருக்கிறதாம். அது என்னவென்று ரட்டே ராலவுக்கு தெரியாது. அதனை பார்ப்பதற்கு இன்று மாலை வரை இருக்க வேண்டும். நல்ல முன்மொழிவு இருந்தால் அது தொடர்பில் நாங்கள் கதைப்போம். அதற்கு எந்தத் தடையும் கிடையாது. இருப்பினும் ரட்டே ரால இன்று கதைப்பது அந்த முன்மொழிவு சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. இந்த முன்மொழிவை அரசாங்கத்திற்கு முன்வைப்பதன் மூலம் இவர்களது அரசியல் நோக்கம் என்ன என்பதே ஆகும். அதனை தெரிந்து கொள்வதற்கு தற்போது அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய அரசியல் நிலவரத்தை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் உங்களுக்கு தெரிந்திருக்கும் கடந்த காலத்தில் அரசாங்கத்தின் உள்ளே இருந்த அரசியல் முரண்பாடு. அது தொடர்பில் ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார்.

அரசாங்கத்தின் உள்ளே உள்ளக முரண்பாட்டை ஏற்படுத்திய குழுக்கள் பல இருக்கின்றன. அதில் ஒன்றுதான் இந்த சிறு கட்சி கூட்டணி, அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அடுத்ததாக மொட்டுவின் சிரேஸ்ட்ட உறுப்பினர்கள், அதற்கடுத்து ராஜபக்ச குடும்பத்தினுள்ளே அதிகார போட்டி ஒன்றும் காணப்படுகின்றது. அதாவது நாமல்- பெசில் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி போராட்டம். முன்மொழிவை முன்வைக்கும் சிறு கட்சி கூட்டணி குறிப்பிடுவது அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய நேரடியான பெசில் விரோதிகள். அதாவது நாமலின் எதிரிகளின் எதிரி அல்லாவிடினும் நாமலின் நண்பர். அவ்வாறு நினைத்தாலும் நினைக்காவிடினும் அவர்கள் அனைவரும் மஹிந்த தரப்பினர், இல்லையென்றால் தெரிந்தோ தெரியாமலோ இவர்கள் மறைமுகமாக நாமல் தரப்பினர், தற்போது கோட்டா தரப்பினர் என்ற குழுவினர் மொட்டுவினுள் கிடையாது.

போகவுள்ள உள்ள ஜனாதிபதிக்கு கூட்டணி அமைப்பது கிடையாது. அந்த கூட்டணி ஏற்படுத்தப்படுவது உருவாக உள்ள ஜனாதிபதிக்காக. இந்த இடத்தில் கடந்த காலம் முழுவதும் சிறு கட்சி கூட்டணி சேர்ந்தவர்கள் தனிப்பட்ட ரீதியாகவும் கூட்டணி அடிப்படையிலும் அவர்கள் பெசிலோடு மோதினர். இல்லை எனின் பெசிலின் சகாக்களோடு அவர்கள் முரண்பட்டணர். இருப்பினும் அந்த போராட்டத்தில் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. உண்மையில் நடைபெற்றது அவர்கள் அரசாங்கத்தின் உள்ளே கொச்சைப்படுத்தப்பட்டது மாத்திரம்தான்.பெசில் அரசாங்கத்தின் உள்ளே அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்கள் மீண்டும் மீண்டும் கொச்சை படுத்தப்பட்டே இருப்பார்கள்.

இதனால் கடந்த காலத்தில் அவர்கள் பெசிலுடன் முரண்பாட்டை முற்று முழுதாக நிறத்தி ஒருபக்க ஓய்வில் இருந்தனர். அந்த ஓய்வு விடுகை என்பது அடுத்த போராட்டத்திற்கு தயாராக மேற்கொள்கின்ற ஒரு சிறிய ஓய்வாகும். இந்த முன்மொழிவு போராட்டத்திற்கு மீண்டும் ஒரு போராட்டமாக ஆரம்பிக்க முடியுமாக இருப்பது இந்நிலையை ஏற்படுத்தியதன் பின்னரே. ஒரு பக்கத்தில் அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு அடி முன் நோக்கி செல்வதற்கு இயலாதவாறு நாடு இறுகியுள்ளது. அடுத்த பக்கத்தில் அரசாங்கத்தின் உள்ளே நாமல் -பெசில் முரண்பாட்டை இவர்கள் தேவையான அளவுக்கு உசுப்பேற்றுவது. நாமலிற்காக எஞ்சியுள்ள காலத்தை போராட அவருடைய தந்தை முன் வந்திருக்கின்றார். அதனால் இந்த முன்மொழிவுகளுள் மஹிந்தவும் பின்னால் இருக்கின்றார். இம்முறை அவர்கள் வந்திருப்பது அரசாங்கத்தை மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் சரியான வழியை காட்டுவதற்கு. அவ்வாறு சொன்னால் யாருக்கும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது. இந்த இடத்தில் இருப்பது உண்மையான அரசியல் அல்ல.

இவ்வேலைத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக ஒரு கல்லில் இரண்டு குருவிகளை கொல்லுவதாகும். ஒன்று அரசாங்கத்தின் உள்ளே இருக்கக்கூடிய பெசில் பறவை. அடுத்ததாக வெளியிலே ஏற்படுத்தப்பட்டுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பறவைகள். உள்ளே இருக்கக்கூடிய அந்தக் குருவியை என்ன செய்தாலும் ரட்டே ராலவுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. இருப்பினும் வெளியே உள்ள அரசாங்க எதிர்ப்பு நிலையை இந்த சந்தர்ப்பவாதிகள் கொள்ளையடிப்பதற்கு விட முடியாது. அது அவர்களுக்கு சார்பான வகையில் முகாமைத்துவம் செய்ய முடியாது. அது இந்த நாட்டினுடைய சமூக செயற்பாட்டாளர்கள் ஏற்படுத்திய அபிப்பிராயமாகும். அதனை ஏற்படுத்தியவர்கள் நடுவீதியில் இன்னல் படுகின்ற சந்தர்ப்பத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கொண்டு சிரித்தவர்கள் தற்போது மனித பற்றுள்ளவர்களாக வருவதற்கு முயற்சி செய்கின்றார்கள். உண்மையில் இந்த முன்மொழிவு ஊடாக இவர்கள் அரசாங்கத்தின் உள்ளே மேற்கொள்ளவுள்ள வழிநடாத்தல் பிரிவுகள் பல காணப்படுகின்றன. ஒன்றுதான் அரசாங்கத்துக்குள் இருக்கக்கூடிய பெசில் எதர்ப்புவாதிகளை ஒரு குவியலாக ஒன்று சேர்ப்பது. பெசிலிற்கு தனிமையாக முகம் கொடுக்க முடியாமல் உள்ளமையால் ஒன்று சேர்ந்து முகங்கொடுப்பதற்கான உபாய ரீதியான நுட்பங்களுக்கு மாறுவதற்கான பயணத்தை செய்வதாகும்.

இந்த இடத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் மிக முக்கியமான சாதகத் தன்மை உள்ளது. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளே இருக்கக்கூடிய எதிர்ப்பு இருப்பது பெசில் எதிர்ப்பு தன்மை அல்ல. எதிர்ப்பு இருப்பது ராஜபக்ச விரோதமே. பெசில் எதிர்ப்பு மற்றும் ராஜபக்ச எதிர்ப்பை எடுக்க விமலிற்கு தெரியும். இந்த இடத்தில் சிறு கட்சிகள் கூட்டணியை போன்றே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அரசாங்கத்தின் உள்ளே முகம் கொடுக்கின்ற பிரச்சினைகள் சம தன்மை உடையதாக காணப்படுகின்றது. அதுதான் ஏன் இன்னமும் இந்த அரசாங்கத்தின் உள்ளே இருப்பது என தற்போது அவர்களது கட்சியினுடைய அங்கத்தவர்கள் கேட்கின்றார்கள். இன்னும் அவர்களிடம் பேச்சு வாங்கி ஏன் அவர்களோடு இணைந்து இருப்பது என்ற கேள்விக்கு அவர்களுடைய அங்கத்தவர்களுக்கு நியாயமான ஒரு பதிலை வழங்க வேண்டும். அதற்காக இவர்கள் முன்வைக்கின்ற வேலை திட்டம் தான் இது. சுருக்கமாக தங்களுக்கு வெளியே வருவதற்கு முடியாத தன்மையின் காரணமாக தாங்கள் வெளியேறி செல்ல சரியான இடம் இல்லாததால் அவர்களது அங்கத்தவர்களுக்கு தேசப்பற்று தன்மையை காட்டுவதற்கு இதனை செய்கின்றார்கள்.

உண்மையில் தற்போது அவர்கள் சொல்லக்கூடியதாக இருப்பது நாடு சரியான பாதைக்கு கொண்டு செல்ல நாங்கள் அரசாங்கத்திற்கு உள்ளே இருந்து பைட் பண்ணுகிறோம் என்று. அதற்காக முன்வைத்துள்ள 10 முன்மொழிவுக்கு ராஜபக்சக்கள் தற்போது பயந்து உள்ளார்கள் என. மடத்தனம். ராஜபக்ச குடும்ப ஆட்சியை சரியான பாதைக்கு கொண்டு செல்வதனைவிட பைத்தியமான விடயம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இவர்களது மூன்றாவது நோக்கமானது சிறிதளவு விஞ்ஞான ரீதியான ஒன்றாகும். அதுதான் பெசில் மற்றும் நாமலிடையே இருக்கக்கூடிய அதிகார முரண்பாட்டை முகாமை செய்வதற்கு முயற்சிப்பதாகும். அது அவர்களுடைய நலவிற்கு செய்கின்ற ஒரு விடயம்.
அதனால் இந்த முன்மொழிவுக்கு மஹிந்த -நாமல் அணி சாதகமான பிரதிபலிப்பை ஏற்படுத்துவார்கள் என்று இவர்கள் நினைக்கிறார்கள். ரட்டே ரால குறிப்பிடுவது இம் முன்மொழிவின் உண்மை நோக்கமாக மஹிந்த அணியினரின் கதவைத் திறப்பதாகும். குறைந்தபட்சம் கதவை திறக்க முடியாது விட்டாலும் முடியுமான சிறிய ஜன்னல் ஒன்றையாவது திறப்பது. அடுத்ததாக வரக்கூடிய பிரச்சினை இவர்கள் வெளியில் ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு குருவிகளை கொல்வதற்குறிய முயற்சியாகும். தற்போது அரசாங்கத்தை சுற்றி இருந்த அணிகள் அரசாங்கத்தை விட்டு செல்வதற்கு ஆரம்பித்துள்ளனர்.

அனைவரும் எதிர்க்கட்சிக்கு சாய்கின்ற தன்மை காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசாங்கம் மேற்கொண்ட பரிசீலனையில் அது உறுதிப்படுத்தப்பட்டது. நகர பிரதேசங்களில் தேசிய மக்கள் கட்சி அதேபோன்று 43 ஆவது படையணி ஆகியன ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது. அதேபோன்று கிராமிய அணிகளை ஐக்கிய மக்கள் சக்தி ஆக்கிரமித்துக் கொண்டு செல்கின்றது. அதற்குப் புறம்பாக கருவின் சமூகநீதிக்கான தேசிய இயக்கம் புதிய ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டு செல்கின்றது. தேசிய மக்கள் எழுச்சி, 43 ஆவது படையணி, சமூக நீதிக்கான தேசிய முன்னணி முன்வைத்துள்ள வேலைத்திட்டங்களில் ஏதோ ஒரு சமூக கருத்தாடல் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதனோடு இணைபவர்களை ஆராய்த்து பார்த்தால் அவர்கள் மொட்டுவிலிருந்தே வருகின்றார்கள் என்பது காணக்கூடிய வெளிப்படையாகும். இல்லையென்றால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து. அதனால் அரசாங்கத்தை கைவிட்டு வருகின்ற இந்த கூட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி ,ஜேவிபி, 43 ஆவது படையணி இல்லை என்றால் அவர்கள் வேறு ஒரு இடத்தை தெரிவு செய்வதனை நிறுத்த வேண்டும்.ரட்டே ராலவின் கட்சி சார்பற்ற தன்மைக்கு அதிகமானோர் ஒட்றிணைகின்றனர்.இவர்கள் செய்வது அவ்வாறான, அவ்வாறு செல்லுமிடமற்றவர்களுக்கு செல்வதற்கான சரியான நிறுத்துமிடத்தை கட்டியெழுப்பவே. இவர்கள் நினைக்கின்றார்கள் அரசாங்கத்திலிருந்து வேண்டாம் என்று வருகின்ற அங்கத்தவர்களை ஐக்கிய மக்கள் சக்தி, ஜேவிபி, நாற்பத்தி மூன்று அல்லது வேறு இடத்திற்கு அவர்கள் செல்வதற்கு முன்னர் அந்த தங்குமிடத்திற்கு அவர்கள் வருவார்கள் என்று .இருப்பினும் இவர்கள் மேற்கொள்வது அவ்விடத்தில் இணைபவர்களை மீள திருப்பி ராஜபக்ச பக்கம் ஈர்க்க வேறு பாதையால் கொண்டு செல்வதாகும்.

இதன்படி இதனை இவர்கள் செய்வது ராஜபக்சகளுக்காக தங்களுடைய இறுதி பொறுப்பைய நிறைவேற்றுவதாகும். அதனைவிட இதனுள்ளே பிற அரசியல் அர்த்தம் ஒன்றும் கிடையாது. உண்மையான அரசியல் தலையீட்டை செய்ய அவர்கள் விரும்பினால் முதலில் அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிரல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் செய்கின்ற எந்த ஒரு செயற்பாட்டிலும் விசுவாசம் கொள்ள முடியாது. ஏனென்றால் 2013-ம் ஆண்டும் விமல் இவ்வாறான ஒரு முன்மொழிவை தாரைவார்த்தார். இன்றும் நடைபெறுவது அதுதான். அதனை உணர முடியாதவர்கள் நாளை அதனை விளங்கிக் கொள்ள முடியும். அதுவரை ரட்டே ராலவுக்கு பேச்சுக்களை கேட்க வேண்டி வரும்.

அப்படியாயின் போய் வருகின்றேன் கடவுள் துணை ,வெற்றி கிட்டட்டும்,

இப்படிக்கு
ரட்டே ரால

Posted in Uncategorized

அரசாங்கத்தின் 11 பங்காளிக் கட்சிகள் சந்திப்பு

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் உள்ள 11 பங்காளி கட்சி தலைவர்கள் ஒன்றினைந்து நேற்றைய தினம் ‘முழு நாடும் சரியான பாதையில் ‘ என்ற தொனிப்பொருளின் கீழ் தேசிய கொள்கை திட்டத்தை வெளியிட்டனர்.

பங்காளி கட்சிகளின் தேசிய மாநாடு நேற்று கொழும்பில் சர்வமத வழிபாடுகளுடன் ஆரம்பமானது.

இம்மாநாட்டில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, லங்காசமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச,பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, தேசிய காங்கிரஸின் தலைவர் அதாவுலா,ஸ்ரீ லங்கா மஹாஜன கட்சிpயின் தலைவர் காமினி வீரசிங்க,யுதுகம தேசிய அமைப்பின் தலைவர் கெவிந்து குமாரதுங்க,விஜயதரனி தேசிய சபையின் தலைவர் அதுரலியே ரத்ன தேரர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர,லசந்த அழகியவன்ன ,நிமல் சிறிபாலடி சில்வா,துமிந்த திஸாநாயக்க ,பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாஸ,ரஞ்சித் சியம்பலாபிடிய ஆகியோரும், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க,ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு சில பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களும், சிவில் அமைப்பினர்,இடதுசாரிகட்சியினர்,தொழிற்சங்கத்தின் தலைவர்கள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நிகழ்வில் வரவேற்புரையாற்றி மாநாட்டின் நோக்கத்தை தெளிவுப்படுத்தினார்.அதனை தொடர்ந்து பங்காளி கட்சி தலைவர்கள் ‘முழு நாடும் சரியான பாதையில்’ தேசிய கொள்கை திட்ட கையேட்டை மத தலைவர்களுக்கும்,சிவில் அமைப்பினருக்கு வழங்கிவைத்தார்கள்.

நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பங்காள கட்சிகள் ஒன்றினைந்து 10 குறுகிய மற்றும் நீண்டகால கொள்கை திட்டங்களை ‘முழு நாடும் சரியான பாதையில்’என்ற தொனிப்பொருளின் கீழ் வெளியிட்டனர்.

வெளிநாட்டு கையிருப்பினை மேம்படுத்திக் கொள்வதற்காக ஏற்றுமதி சேவை துறையினை துரிதப்படுத்துவதுடன்,அந்நிய செலாவணியை அதிகளவில் ஈட்டிக் கொள்வதும் அவசியமாகும் அத்துடன் சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை மேம்படுத்த சுற்றுலாத்துறை கொள்கை திருத்தியமைக்கப்பட வேண்டும்.

மின்சாரத்துறை எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு குறுகிய மற்றும் நீண்டகால கொள்கை திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்திட்டங்கள் வகுத்தல் அவசியமாகும்.புதுப்பிக்கத்தக்க சக்த வள கொள்கையை அடைய சிறந்த பொறிமுறை அனைத்து அமைச்சுகள் ஊடாகவும் செயற்படுத்தப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கவும்,தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தவும் மத அடிப்படைவாதத்தை முழுமையாக இல்லாதொழிப்பது அவசியமாகும்.

நாட்டின் உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. விவசாயத்துறையை மீள்கட்டியெழுப்ப வேண்டுமாயின் நிவாரண அடிப்படையில் விவசாயிகளுக்கு உரம் வழங்குவது குறுகிய கால முக்கிய யோசனையாகும்.வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்காக காத்திருப்பதை காட்டிலும் தெரிவு செய்யப்பட்ட தேசிய முதலீட்டாளர்களுக்கு முன்னுரிமை வழங்க சிறந்த திட்டத்தை வகுப்பது அவசியமாகும்.

அத்துடன் தேசிய உற்பத்திகளுக்கும்,இளைஞர்களுக்கும் முன்னுரிமை வழங்குவது அவசியமாகும். உள்ளிட்ட பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு 10 யோசனைகளை பங்காளி கட்சியினர முன்வைத்துள்ளனர்.முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை அரசாங்கம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறோம் என பங்காளி கட்சியினர் நம்பிக்கை வெளியிட்டனர்.

Posted in Uncategorized

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆலோசனை

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.

இலங்கையுடனான கருத்துப் பரிமாற்றத்தைத் தொடர்ந்து அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

அதேபோல் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையும் “Artical IV” இன் கீழ் இலங்கையுடனான தமது கலந்துரையாடல்களை நிறுத்தியுள்ளதாக அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோரின் குடும்பங்கள் தொடர்பில் பச்செலட் விசேட அவதானம் – உயர்ஸ்தானிகரின் பேச்சாளர் கருத்து

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனி வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் ஊடகப்பேச்சாளர் ரவினா ஷம்டசனியினால் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான அறிக்கை குறித்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மைய வருடங்களில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு வரவேற்பு தெரிவித்திருக்கும் அதேவேளை, நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மிகுந்த கரிசனையும் வெளியிடப்பட்டிருக்கின்றது.

அறிக்கையைத் தயாரித்தல் உள்ளடங்களாக பல்வேறு விடயங்களிலும் எமது அலுவலகத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் வெளிப்படுத்தியுள்ள உடன்பாட்டை அங்கீகரிக்கும் அதேவேளை, மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேசக் கடப்பாடுகளைப் பூர்த்திசெய்யக்கூடியவகையில் மிகவும் ஆழமானமுறையில் சட்ட மற்றும் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகின்றோம்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரித்தல் ஆகிய விடயங்களைப் பொறுத்தமட்டில் பின்னடைவு ஏற்பட்டிருந்தமையினைக் கடந்தகாலத்தில் எம்மால் அவதானிக்கமுடிந்தது.

குறிப்பாக பெரும்பாலும் பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தும் காணாமல்போனோரின் குடும்பங்கள் முகங்கொடுத்திருக்கும் பாதுகாப்பற்றநிலை தொடர்பிலும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அவரது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களின் துன்பத்தைப் புரிந்துகொள்ளுமாறும் காணாமல்போனோர் எங்கிருக்கின்றார்கள் அல்லது அவர்களின் நிலை என்ன? என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இழப்பீட்டை வழங்குமாறும் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் இராணுவமயமாக்கல், ஜனநாயகக்கட்டமைப்புக்களின் செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையிலான இன-மதரீதியான தேசியவாதம், சிறுபான்மையினர் மத்தியில் அதிகரித்துள்ள பதற்றம் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதில் ஏற்படுத்தப்படும் தாமதம் ஆகிய விடயங்கள் குறித்தும் உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட தரப்பினர் மீதான பாதுகாப்புத்தரப்பினரின் தொடர்கண்காணிப்பு மற்றும் மீறல்கள் தொடர்பில் இம்முறை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன் இத்தகைய நடவடிக்கைகள் குறிப்பாக நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேலோங்கியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி பயங்கரவாத்தடைச்சட்டத்திருத்தங்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை முக்கியமானதொரு நகர்வாகும். சந்தேகநபர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு விஜயம் செய்வதற்கான நீதிவானின் அதிகாரங்களை உயர்த்துதல், வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்தல், 14 ஆவது சரத்தை நீக்குதல் ஆகிய திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வரவேற்பை வெளியிட்டிருக்கின்றார்.

இருப்பினும் ஏனைய திருத்தங்கள், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை கொண்டிருக்கும் சர்வதேச கடப்பாடுகளை முழுமையாகப் பூர்த்திசெய்யும்வகையில் அமையவில்லை என்பதுடன் அச்சட்டத்திலுள்ள சில மிகமோசமான சரத்துக்கள் திருத்தியமைக்கப்படாமலிருப்பது தன்னிச்சையாகத் தடுத்துவைக்கப்படல், சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படல் உள்ளடங்கலாக பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதற்கு வழிவகுக்கும்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களில் 80 பேருக்கும் மேற்பட்டோர் கடந்த வருடம் ஜுன் மாதத்திலிருந்து விடுவிக்கப்பட்டமையை வரவேற்கும் அதேவேளை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்துகின்றோம்.

சிவில் சமூக இடைவெளியையும் சுயாதீனமானதும் அனைவரையும் உள்ளடக்கிய கட்டமைப்புக்களையும் உறுதிசெய்வதுடன் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவிற்குக்கொண்டுவருவதன் ஊடாக மாத்திரமே இலங்கையினால் நிலைபேறான அபிவிருத்தியையும் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் அடைந்துகொள்ளமுடியும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

இலங்கையில் கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கல்முனை மாநாகர சபையின் 47 ஆவது பொதுச் சபை அமர்வு மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் சபை சபா மண்டபத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தை முற்றாக நீக்குமாறு அரசைக் கோருவதற்கான பிரேரணையை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) பிரதி தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான ஹென்ரி மகேந்திரன் சபையில் முன்மொழிந்தார்.

இந்தப் பிரேரணையை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்திரணி ஆரிகா காரியப்பர் வழிமொழிந்தார்.

பிரேரணைக்கு ஆதரவாக சபை அமர்வில் கலந்து கொண்ட பல உறுப்பினர்கள் உரையாற்றியதுடன் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

ஒரு உறுப்பினர் மட்டும் இதற்கான மாற்றுக்கருத்தை சபையில் தெரிவித்தார்.
கூட்டமைப்பு உறுப்பினர் ஹென்ரி மகேந்திரன் சபையில் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.

“நாட்டில் நான்கு தசாப்தங்களுக்க மேலாக அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மனித உரிமைகளுக்கு சவாலாக மக்களை குறிப்பாக சிறுபான்மை மக்களைக் பெரிதும் பாதித்து வருகின்றது.

இந்த படுபாதக சட்டத்தினால் முதன் முதலில் எமது தமிழீழ விடுதலை இயக்கத்தின் முக்கியஸ்த்தர்களான தங்கத்துரை, குட்டிமணி போன்றோரே தண்டிக்கப்பட்ட துயரத்தையும் நினைவு கூர வேண்டும்.

அன்று தமிழ் மக்கள் மீதும், நேற்று முஸ்லிம் மக்கள் மீதும், இன்று சிங்களவர்களையும் சேர்த்து முழு மக்கள் மீதும் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் மிக மோசமாகப் பாய்ந்து கொண்டிருக்கின்றது.

இக் கொடூர சட்டத்தை முற்றாக இரத்துச் செய்வதற்கு நாம் உரத்துக் குரல் கொடுப்பதுடன் இதற்கென சர்வதேச அழுத்தங்கள் வலுப்பெறவும் நாம் கோர வேண்டும்.

குறிப்பாக தேர்தல் ஒன்றுக்காகவும், சிறுபான்மை மக்களைப் பழிதீர்ப்பதற்காகவும் அரசு கையிலெடுத்துள்ள இக்கொடூர சட்டத்தை நீக்குமாறு கோரும் தீர்மானங்களை சகல உள்ளுராட்சி சபைகளும் நிறைவேற்றி அழுத்தம் கொடுக்க முன்வர வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் அறை கூவல்விடுக்கின்றேன்” என்றார்.

Posted in Uncategorized