பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் அரசாங்கத்தின் திருத்த முன்மொழிவுகளை ஏற்கமுடியாது – இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு

அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்திருத்தங்களைத் தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு ‘பயங்கரவாதம்’ என்ற குற்றம் அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையில் உள்ளடக்கப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழு, பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இவ்வாண்டுக்கான செயற்திட்டம் தொடர்பில் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கும் நோக்கிலான சந்திப்புக்கள் கடந்த 8, 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது.

அச்சந்திப்பின்போது இராஜதந்திரிகளிடம் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரான ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ரோஹினி மாரசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

சித்திரவதைகள் மற்றும் மிகமோசமானதும் மனிதாபிமானமற்ற வகையிலும் நடாத்தப்படுதல் ஆகியவற்றுக்கு எதிரான பிரகடனத்தின்படி இலங்கை அரசாங்கம் ஒரு ‘தேசிய தடுப்புப்பொறிமுறையாக’ மனித உரிமைகள் ஆணைக்குழுவை ஸ்தாபித்தது.

இருப்பினும் தேசிய தடுப்புப்பொறிமுறையானது தற்போதுள்ள வளங்களைப் பயன்படுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்குள் தனியொரு பிரிவாக நிறுவப்படவுள்ளது. தடுப்புக்காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் உள்ளடங்கலாகப் பல்வேறு கட்டமைப்புக்களிலும் சித்திரவதைகளையும் மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தப்படுவதையும் தடுக்கும் வகையிலான பொறிமுறையொன்றை உருவாக்குவதே இதன் அடிப்படை நோக்கமாகும்.

அடுத்ததாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பொறுத்தமட்டில், அரசாங்கத்தினால் ஏற்கனவே முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை நாம் ஆதரிக்கவில்லை. மாறாக அச்சட்டத்தை முழுமையாக இல்லாதொழிக்கவேண்டும் என்பதே மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிலைப்பாடாகும்.

‘பயங்கரவாதம்’ என்ற குற்றமானது அதற்கான புதிய வரைவிலக்கணத்துடன் தண்டனைச்சட்டக்கோவையின்கீழ் உள்ளடக்கப்படவேண்டும். பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகள் அவசியமான திருத்தங்களுடன் நாட்டின் பொதுச்சட்டத்தின் கீழேயே முன்னெடுக்கப்படவேண்டும் என்றும் பயங்கரவாதக்குற்றம் தொடர்பில் சாட்சிகள் கட்டளைச்சட்டத்தைப் பயன்படுத்துவதிலிருந்து விலகியிருக்கத் தேவையில்லை என்றும் ஆணைக்குழு கருதுகின்றது.

உரியவாறு வரையறுக்கப்படாத தடுப்புக்காவல் காலம் அரசியலமைப்பிற்கு முரணானதாகும். ஆகவே இதனைச் சீர்செய்வதற்கு தண்டனைச்சட்டக்கோவை, குற்றவியல் நடைமுறைச்சட்டக்கோவை ஆகியவற்றில் திருத்தங்களும் நீதிமன்றக்கட்டமைப்புச்சட்டம், பிணைச்சட்டம் ஆகியவற்றில் ஏற்புடைய மாற்றங்களும் அவசியமாகின்றன.

அதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் 10(டி) சரத்தின்கீழ் மேற்கொள்ளப்படவேண்டிய திருத்தங்கள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் பரிந்துரைகளை முன்வைத்தது.

மேலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கான ஆணையாளர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றப்பேரவையின் மேற்பார்வையுடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டாலும், பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெறப்பட்டதன் பின்னர் மாத்திரமே அவர்களை நீக்கமுடியும் என்பது குறித்தும் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

மனித உரிமைகள் ஆணைக்குழுச்சட்டத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமானது, அரச நிர்வாகக்கட்டமைப்புடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்காது என்பது பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்யவிருப்பதுடன் அங்கு சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

அத்தோடு காணாமல்போனோரின் குடும்பத்தினரை அடையாளங்கண்டு, அதுகுறித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமைக்காரியாலயத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அதிகாரிகளை உள்வாங்குவது மிகவும் அவசியம் என்று பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவ்விரு மாகாணங்களிலும் தமிழ் அதிகாரிகளை இணைத்துக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் உறுதியளித்துள்ளார். அத்தோடு இவ்விடயத்தில் இடம்பெறும் முன்னேற்றகரமான நகர்வுகள் குறித்த அறிக்கையும் பொலிஸ்மா அதிபரிடம் கோரப்பட்டுள்ளது.

சமூக வலைத்தள செயற்பாடுகள் மற்றும் கருத்துச்சுதந்திரம் குறித்து பொலிஸ் ஊடகப்பேச்சாளருக்கு விளக்கமளிக்கப்பட்டிருப்பதுடன் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனும் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நிகழ்நிலையில் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அத்தோடு பெருந்தோட்டத்தொழிலாளர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கான செயற்திட்டமொன்று ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில், அதுகுறித்தும் இராஜதந்திரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து மாணவர்களின் போராட்டம் இடைநிறுத்தம்!

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான நேரத்திற்குள் மாணவர் ஒன்றியம் அமைப்பதாக உறுதிமொழியை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, பல்கலைக்கழகத்தின் நுழைவாயில்களை திறந்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

அந்தவகையில் நாளையதினம் பிரதான மாணவர் ஒன்றியமும், கலைப்பீட மாணவர் ஒன்றியமும் அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் செல்கிறார் மைத்திரிபால சிறிசேன

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளருமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளும் ​நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாடு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

நாடுகளுக்கிடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு இன்று (17) பிற்பகல் தாமரை தடாக அரங்கில் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு, நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது.

பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.

சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.

சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

அதன் பின்னர் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.

இரப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் திரு.பண்டாரநாயக்க அவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார். சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார்.

இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.

சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க விசேட பங்கு வகித்தார்.

1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும்.

இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

2012 ஆம் ஆண்டு முதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஆன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

தேசிய தேர்தல்கள் குறித்து கட்சி பிரதிநிதிகளுடன் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு

தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவு குழுவிடம் சமர்ப்பித்துள்ள யோசனை தொடர்பில் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் நோக்கில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும்,தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட பேச்சுவார்த்தை எதிர்வரும் 23ஆம் திகதி தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமையகத்தில் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் காலங்களில் இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் குறித்து இச்சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் ,மாகாண சபை தேர்தல் ஆகிய இரு பிரதான தேர்தல்களை நடத்தவதற்கான தேவை அத்தியாவசியமானதாக காணப்படும் பட்சத்தில் அது குறித்து அதிக கவனம் செலுத்தப்படவுள்ளது.

சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு முன்வைத்துள் யோசனைகளை செயற்படுத்த அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்படவுள்ளது.

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் மாகாண சபை தேர்தல் அல்லது உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடத்துவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக ஆளும் தரப்பின் முக்கிய தரப்பினர்கள் குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது.

60 சதவீத பிரதிநிதிகளை விகிதாசார தேர்தல் முறைமையின் அடிப்படையிலும் 40 சதவீத பிரதிநிதிகளை தொகுதிவாரி தேர்தல் முறைமையின் கீழ் தெரிவு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேர்தல் முறைமை மற்றும் தேர்தல் சட்டம் மறுசீரமைப்பு தொடர்பில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற தெரிவு குழு கடந்தவாரம் கூடியபோது இவ்விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் சகல அரசியல் கட்சிகளின் வேட்பு மனுக்களிலும் பெண்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உள்ளுராட்சிமன்றங்களின் தற்போதைய பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பாராளுமன்ற தேர்தலுக்கும் மாகாண சபைத் தேர்தலுக்கும் தற்போது அமுலிலுள்ள விகிதாசார பிரதிநிதித்துவ முறைஇவிருப்பு வாக்கு முறை ஆகியன பற்றிய பொதுமக்களின் நம்பகத்தன்மை வெகுவாக குறைவடைந்துள்ளன.

விகிதாசார பிரதிநிதித்தவ முறைமை மற்றும் விருப்பு வாக்கு முறைமை ஆகியவற்றில் காணப்படும் குறைப்பாடுகளை கருத்திற் கொண்டு கலப்பு விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை மிகச்சிறந்த தேர்தல் முறையாக அடையாளம் காணப்பட்டுள்ளது என தேர்தல் முறைமை தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவிடம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் சமர்ப்பித்துள்ள இலங்கை குறித்த அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவும் – எதிர்க்கட்சி வலியுறுத்தல்

இலங்கையின் மனித உரிமைகள் குறித்து ஐக்கிய நாடுகளில் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையின் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளமை அவதானத்திற்குரியது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பொருளாதார ரீதியில் பொது மக்கள் எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தாமல் தேர்தலை இலக்காகக் கொண்டு செயற்படுவது முற்றிலும் வெறுக்கத்தக்கது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அண்மையில் அநுராதபுரத்தில் ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துக்கொண்டவர்களுக்கு 2500 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டதாக சமூக மட்டத்தில் பேசப்படுகிறது.

அக்கூட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்தரப்பினர் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என குறிப்பிட்டார், பிரதமரின் சவாலை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்.

எத்தேர்தலில் போட்டியிடவும் ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது.தேர்தலை நடத்த அரசாங்கம் தான் தயாராகவில்லை.

எரிபொருள் விலையேற்றம் பிரதான பிரச்சினையாக காணப்படுகிறது.

டொலர் நெருக்கடி,உலக சந்தையில் எரிபொருள் விலையேற்றம் என்ற இரு காரணிகளை குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் கண்மூடித்தனமான வகையில் எரிபொருள் விலையை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்லெட் சமர்ப்பித்துள்ள அறிக்கையை அரசாங்கம் பாராளுமன்றிற்கு பகிரங்கப்படுத்த வேண்டும்.அறிக்கையின் உள்ளடக்கம் பாராளுமன்றில் இரு நாட்களாவது விவாதிக்கப்பட வேண்டும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் இலங்கையில் ஊடகச்சுதந்திரத்தின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை குறித்த கருத்து: மன்னிப்புக் கோரினார் கஜேந்திரன்!

தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும். புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரனின் கருத்துத் தெரிவித்தார்.

தற்போது அக்கருத்து தொடர்பில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

டன் தொலைக்காட்சி நடத்திய எது சரி எது பிழை என்ற விவாத நிகழ்ச்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிறேமச்சந்திரனும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனும் கலந்துகொண்டுனர். இதில் பேசுபொருளாக 13வது திருத்தச்சட்டம் இருந்தது. இதில் புலிகள் தொடர்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன் தனது கருத்தை முன்வைக்கும் போது குறுக்கீடு செய்து தமிழீழத் தனிநாட்டுக்காகப் புலிகள் போராடவில்லை. தமிழ்த் தேசம் அங்கீகரிக்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் போராடியதாகவும், புலிகள் எந்தவொரு பேச்சுவார்த்தையிலும் அதை வலியுறுத்தவில்லை என்று கருத்தைப் பதிவிட்டார்.

இக்கருத்து தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் மத்தியில் மனவுளைச்சாலையும் கவலையையும் ஏற்படுத்தியிருந்த நிலையில் ஊடகங்களும் இதை வெளிக்கொண்டுவந்த நிலையில் அவர் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரியதுடன் விளக்கத்தையும் அளித்து வருகிறார்.

Posted in Uncategorized

பலாலியில் இறங்கவுள்ள மோடி!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கையில் இடம்பெறும் ‘பீம்ஸ்ரெக்’ BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க இலங்கைக்கு பயணம் செய்யக்கூடும் என்ற ஊகங்கள் பரவி வருகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் இருந்து நேரடியாகவே விமானம் மூலம் பலாலிக்கு அவர் செல்ல திட்டமிடுவதான செய்திகளும் வெளிவந்துள்ளன.

முதலில் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கலாசார நிலையத்தை திறந்து வைத்த பின்னர் அங்கிருந்து கொழும்புக்கு செல்வதற்கு இந்திய அதிகாரிகள் திட்டமிடுவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

பீம்ஸ்ரெக் BIMSTEC உச்சி மாநாட்டில் பங்கேற்க வருமாறு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தாலும் பிரதமர் மோடியின் இந்தப்பயணம் குறித்த இந்தியத் தரப்பு இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் எதனையும் வெளியிடவில்லை.

இரு கடிதங்களை இறுதி செய்வதற்கு புதனன்று கூடவுள்ள தமிழ்த் தலைமைகள்

தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் புதன்கிழமையன்று யாழ்ப்பாணத்தில் இருவேறு கடிதங்களை இறுதி செய்வதற்காக கூடிக்கலந்துரையாடவுள்ளனர்.

தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனதிராஜா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப்.தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா ஆகியோரே இவ்வாறு கூடிவுள்ளவர்கள் ஆவர்.

இவர்களின் கூட்டத்தின் போது, முதலாவதாக, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் தொடர்ச்சியான கடிதமொன்று இம்முறையும் அனுப்புவது பற்றி இறுதி செய்யப்படவுள்ளது.

இதற்கான ஆரம்பவரைவுகள் உள்ளநிலையில் அதனை மேலும் செம்மைப்படுத்தி இறுதி செய்வதற்கு முனைப்புச் செய்யப்படவுள்ளது.

இரண்டாவதாக, இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தினை முழுமையாக நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கடிதம் இறுதி செய்யப்படவுள்ளது. இந்த கடிதத்தின் வரைவினை சி.வி.விக்னேஸ்வரன் தயாரித்துள்ள நிலையில் அதன் உள்ளடக்கப்பற்றி ஏனைய தலைவர்களின் கருத்துக்களும் பெறப்பட்டு இறுதி செய்யப்படவுள்ளது.

இவ்வாறு இறுதி செய்யப்படும் கடிதமானது,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இதனிடையே இந்த கடிதங்களை இறுதி செய்யும் விவகாரத்தில் மாவை.சோ.சேனாதிராஜா பங்கெடுக்க மாட்டார் என்று நம்பிக்கையான தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக்குறைபாடு காரணமாக அவர் தனது பிரதிநிதியாக சீ.வீ.கே.சிவஞானத்தினை அனுப்புவதற்கு இணக்கம் கண்டுள்ளதாக குறித்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கலந்துரையாடல் நடைபெறும் இடம் குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படாதுள்ளபோதும் பொதுவானதொரு இடத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கலந்துரையாடல் நடைபெறும் இத்தினத்திலேயே தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் ‘ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய பிராந்திய சர்வதேச நிலவரங்களும்’ எனும் தலைப்பிலான கருத்தரங்கு இளங்கலைஞர் மண்டபத்தில் காலை 9.30இற்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய தமிழ் அரசியற் சூழலில் அரசியற் தலைவர்களினதும் ஊடகவியலாளர்களினதும் பொறுப்புணர்வும், வரலாற்றுக் கடமையும்

தமிழர் தாயகத்தில் புதிய அரசியற் சூழல் ஒன்று தற்போது உருவாகி வருகிறது. தமிழர் நலனில் அக்கறை கொண்டு 6 தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய மத்திய அரசை நோக்கி அரசியல் காய்களை நகர்த்துகின்றன. எல்லா நம்பிக்கைகளையும் இழந்து கையறு நிலையில் இருந்த தமிழ் மக்களுக்கு இந்தப் புதிய நகர்வு எச்சரிக்கையுடனான நம்பிக்கையைக் கொடுத்துள்ளது. இந்த அரசியற் சூழலை தமிழ் அரசியலாளர்களும், ஊடகவியலாளர்களும் பொறுப்புணர்வுடன் கையாள வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

“அரசியலில் நண்பர்களும் நிரந்தரமில்லை – எதிரிகளும் நிரந்தரமில்லை – நலன்களே நிரந்தரமானவை“ என்ற அரசியல் பொன்மொழியை நினைவிற் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது.
இந்திய அரசை பகைமை உணர்வுடன் அணுகும் முறைமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய வரலாற்றுச் சூழலில் ஈழத்தமிழர்கள் இன்று உள்ளனர்.

இந்தியாவின் தேசிய நலனும் – ஈழத்தமிழர்களின் அரசியல் அபிலாசைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் பிராந்திய அரசியற் சூழல் மீண்டும் எழுந்துள்ளது

இதை சரியாகவே கணித்து, தமிழ் அரசியற் தலைமைகள் ஒன்றுகூடி இந்திய அரசை நோக்கி தமது இராஜதந்திர வியூகங்களை வகுக்க முற்படுவது வரவேற்கத்தக்கது.

எதிரிகளாக இருந்து போர்கள் புரிந்த பல நாடுகள் பின் நண்பர்களாக இணைந்து தத்தமது தேசிய நலன்களை அடைந்த வரலாற்றை நாம் பார்த்திருக்கிறோம்.

அணுகுண்டு வீசி அழித்த அமெரிக்காவுடன், ஜப்பான் ஏற்படுத்திய உறவும் – நன்மைகளும்…
இரு பெரும் உலகப் போர்களில் எதிரும் புதிருமாக போரிட்ட ஜேர்மன் – பிரான்ஸ் இன்று நண்பர்களாக இருந்து பரஸ்பர நன்மைகள் பெறுவதும் இதற்கு சிறு உதாரணங்கள்.
எமது சொந்தப் பலத்தை மட்டும் வைத்துக் கொண்டு (இராணுவ – அரசியல்) எமது மக்களின் அரசியல் உரிமைகளை வென்றுவிட சிங்கள அரசு அனுமதிக்காது என்பதை வரலாறு எமக்கு நிரூபித்துள்ளது.

எனவே எமக்கு ஒரு வெளிநாட்டின் உதவியும் தேவை. அது இந்திய அரசுதான். மாறிவரும் இன்றைய உலக ஒழுங்குகளில் அமெரிக்கா தலைமை தாங்கும் மேற்குலகமும் இந்தியாவின் பூகோளப் பங்காளியாகவே உள்ளது.

எனவே இந்திய உதவியை நாடல் என்பது சர்வதேசத்தின் உதவியையும் இணைத்துக் கொண்டு வரும் என்பதே உண்மை.

இந்திய – ஈழத்தமிழர்களுக்கு இடையே கடந்த காலத்தில் இருந்த பகைமை உணர்வால் ஏற்பட்ட காயங்கள் ஆறிவரும் சூழலில், ஆறிய புண்களை நோண்டிப் பார்ப்பது போல பழைய சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, புதிய அரசியல் சூழலை கெடுக்க முனைவது விவேகமல்ல.

இதை தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகவியலாளர்களும் நினைவிற் கொண்டு வரலாற்றுப் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஊடகம் என்ற தளமும் –ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளும் இன்றைய சமூகவலையத் தளங்களால் விரிவாக்கம் பெற்றுள்ளன. இதால் அரசியல் கருத்துக்கள் அதிகளவிலும் தான்தோன்றித் தனமாகவும் வெளிப்பட்டுக் குட்டையைக் குழப்பும் சூழலும் உள்ளதை மறுக்க முடியாது.
இந்த நிலையில் ஆய்வுக் கட்டுரைகள் வரையும் போதும், அரசியலாளர்களை செவ்வி காணும் போதும் ஊடகவியலாளர்கள், நெறியாளர்கள் பொறுப்புணர்வுடன் செயற்படுவது இன்றியமையாதது.

கடந்த கால தவறுகளை – முரண்பாடுகளை எதிர்மறை எண்ணங்களுடன் குத்திக் காட்டி ஆய்வு செய்வதோ! கேள்விகள் தொடுப்பதோ! சாதகமான பலன்களை தராது. புதிதாக ஏற்பட்ட அரசியல் சூழலை – இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில் கேள்விகளைத் தொடுப்பதிலும் கருத்துக்களை வெளிப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Zoom meeting – Whats App கலந்துரையாடல்களுக்கு ஆட்களை அழைத்து மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்கும் நடைமுறை இப்போது அதிகரித்துள்ளது.

இங்கே கூட்ட நெறியாளர்களின் கடமை முக்கியமானது. விதண்டாவாதமான வினாக்களை இனங்கண்டு அவற்றை புறந்தள்ளும் எச்சரிக்கை உணர்வுடன் நெறியாளர்கள் செயற்படுவது அவசியம். விவாதங்களைத் திசை திருப்பி குப்பையைக் கிளறும் கேள்விகளைத் தவிர்க்க வேண்டும். இந்தப் புதிய அரசியல் சூழலை எதிர்ப்பாவர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்காமல் இருந்து, அவர்களின் நச்சுக் கருத்துக்கள் அப்பாவி மக்களின் மனங்களைக் குழப்பாமல் தடுக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் மற்றும் இனத்தின் நலன் என்ற போர்வையில் தமது சுயநலன்களை பழிதீர்க்கும் படலங்களை அடைந்துவிட முயலும் அரசியல்வாதிகளை அம்பலப்படுத்த வேண்டும். அரைகுறை அரசியல் அறிவுடனும், பிழையான தரவுகளுடனும் பொதுமகன் என்ற போர்வையில் வந்து கேள்விகள் தொடுக்கும் புல்லுருவிகளை புறம் தள்ள வேண்டும்.

ஊடகவியலாளர்கள் என்றால் நடுநிலைமையுடன் இருக்க வேண்டும் என்றொரு பலமான கருத்து உண்டு. மேம்போக்கான பார்வைக்கு இது சரியாகவே தோன்றும். ஆனால் இது பகுப்பாய்வுக்குரியது.
ஊழல் செயற்பாடுகள் – அதிகார துஸ்பிரயோகங்கள் – பெண் உரிமை – சிறுவர் மற்றும் முதியோர் நலன்கள் என்று சமூகப் பிரச்சினைகளைக் கையாளும் போது, நடுநிலைமை என்பது தார்மீக நிலைப்பாடாகும்.

ஆனால் தேசிய நலன் சார்ந்த அரசியலுக்கு நடுநிலைமை இல்லை. இங்கே நடுநிலைமை என்பது ஆபத்தானது. இந்த நலன் சார் அரசியலில் பக்கம் சார்ந்திருப்பதே தர்மம்.

ஈழத் தமிழர்களின் இன அழிப்புப் பற்றி நடுநிலையாக சிங்கள ஊடகங்கள் பேசியதுண்டா?
இரு நாட்டின் நலன் சார்ந்த அரசியலில் தேசிய ஊடகங்கள் உலகளாவிய ரீதியில் நடுநிலையுடன் கருத்துக்களை வெளிப்படுத்தியதுண்டா?
சிங்களத்தின் அரசியல் சாசனம் நடுநிலையுடன் இல்லை. நீதித்துறை நடுநிலையுடன் இல்லை. எல்லாம் பக்கம் சார்ந்துள்ளன.

புகழ்பெற்ற உலக ஊடகங்களான BBC, CNN நிறுவனங்கள் அரசியலை நடுநிலையுடன் அணுகுகின்றன என ஒருவர் நம்பினால் அவர் அரசியற் குருடராகவே உள்ளார் என்பதே உண்மை.

எல்லாமே தத்தமது அரசுகளுக்கு – இனங்களுக்கு – நலன்களுக்கு ஆதரவாக பக்கம் சார்ந்தும் முன்உரிமை கொடுத்தும் இயங்குகின்றன.

எனவே நலன் சார்ந்த அரசியலில் நடுநிலை என்பது நடைமுறையில் இல்லை என்பதே யதார்த்தம்.

ஆகவே இலங்கையின் அரசியற் சூழலில் தமிழர் நலன் சார்ந்து தமிழ் ஊடகவியலாளர்கள் கருத்துக்களை வெளிப்படுத்துவது கடமையாகும்.

இன்றைய உலகில் ஊடகம் என்பது பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. பரபரப்பான செய்தி என்பது போட்டியில் முந்துவதற்காக ஊடகங்கள் பயன்படுத்தும் ஒரு தந்திரம். இந்தியப் பத்திரிகைகள் பெரும்பாலும் இதைச் செய்கின்றன. அதனால் தான் அவற்றிற்கு சமூகப் பொறுப்புணர்வு இல்லை என்ற பரவலான குற்றச்சாட்டுகளும் உள்ளன.
பொருளாதாரம் முக்கியமானது. ஆனால் இன நலனைவிட அதை முக்கியமாகப் பார்ப்பது துரோகத்தனமானது. பொருளாதார நலன் சார்ந்து தமிழ் அரசியல்வாதிகள் பலர் கொழும்பைச் சார்ந்துள்ளனர். முக்கிய தருணங்களில் இத்தகைய அரசியல்வாதிகள் இன நலனை விடுத்து தமது சொந்தப் பொருண்மிய நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிங்கள அரசின் தமிழர் விரோத நிலைப்பாடுகளுக்கு ஆதரவு கொடுப்பதை எவரும் மறுக்க முடியாது. இந்த இழி நிலை பலமுறை நடந்துள்ளது.
தமிழ் அரசியல்வாதிகளின் – குறிப்பாகத் தலைமைகளின் அரசியல் நலன்கள் மட்டுமல்ல, அவர்களின் பொருளாதார நலன்களும் தமிழர் நிலத்திலேயே மையம் கொண்டிருப்பதே தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பானதாகும்.

ஒரு இனம் அது அந்தஸ்துடன் இருந்தால் ஊடகங்களை தமது இனம் – நாடு சார்ந்து அரசாங்கம் நெறிப்படுத்தும்.

ஒரு இனம் பலமான அரசியல் இயக்கத்தை பெற்றிருந்தால், அந்த இயக்கம் ஊடகங்களை இன நலன் சார்ந்து நெறிப்படுத்தும்.

இப்படித்தான் புலிகள் இயக்கம் தமிழ் ஊடகங்களை தமிழர் இனநலன் சார்ந்து நெறிப்படுத்தியிருந்தது. அதனால் கருத்தியல் ரீதியாக தமிழர்கள் ஒரு குடையின் கீழ் ஒன்று திரண்டு இரந்தார்கள். அதன் பலன்களையும் அடைந்தனர்.

இப்போது ஈழத்தமிழர்களுக்கு பலம் வாய்ந்த ஒரு தலைமை இல்லை. இன்று 6 தமிழ்க் கட்சிகள் ஒரு அணியில் திரண்டு நின்று இன நலன் சார்ந்து இராஜதந்திர முயற்சி எடுத்தாலும் அது இன்னும் பலமான கூட்டுத்தலைமையாக உருவாகவில்லை.

இந்த இக்கட்டான சூழலில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் தான் தமிழ் இனத்தின் அரசியல் நலன் சார்ந்த கருத்து மண்டலத்தின் தலைமைப் பாத்திரத்தை வகிக்கின்றார்கள் என்ற வரலாற்றுப் பொறுப்பை ஊடகவியலாளர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

தனித்தொரு தலைமையின் கீழ் இவ்வாறான அரசியல் நகர்வு நடந்திருந்தால் அது ஒரு கட்டுக் கோப்புக்குள் இருக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் 6 தலைமைகள் இதில் பங்கெடுப்பதால், அனைத்துத் தலைவர்களும் நாவடக்கத்துடன் நடந்து கொள்வது அவசியம்.

இத் தலைவர்கள் கூட்டுப் பொறுப்பை மறந்து தனிப்பட்ட கருத்துக்கள் கூறுவதோ, நட்பு வட்டாரத்தில் உளறிக் கொட்டுவதோ தவிர்க்கப்பட வேண்டும். இது எதிரிகளுக்கு அவல் கிடைத்தது போலாகி விடும். கூட்டுத் தலைமை என்ற ஒற்றுமையும் தொலைந்து விடும்.

வரலாறு, மீண்டும் ஒருமுறை தமிழினத்திற்கு வழங்க முன்வந்துள்ள பொன்னான வாய்ப்பைப் பற்றிப் பிடிக்கப் போகின்றதா, அல்லது கை நழுவி விடப் போகின்றதா. காலம் பதில் சொல்லும்.

இலக்கு மின்னிதழ் 169 பிப்ரவரி 12, 2022 | Weekly Epaper 169

தமிழ் மகன்