பயங்கரவாதத் தடைச் சட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் – ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள்

சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டுமென ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது குறித்தும் விசேட அறிக்கையாளர் மேரி லாலர் உட்பட ஏழு ஐ.நா. அறிக்கையாளர்கள் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைது இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டமையானது விசாரணை இன்றி நீண்ட நாள் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விசேட அறிக்கையாளர்கள் மேலும் கவலை தெரிவித்துள்ளனர்.

நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர் உட்பட ஏழு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கையில் சித்திரவதைகள் தொடர்கின்றன – சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு

தமிழ் இளைஞரர் யுவதிகளை இலங்கை பொலிஸாரும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்திற்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் குறித்தது சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

2019 நவம்பரில் கோட்டாபாய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அவர்கள் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக தடுத்துவைத்து சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் அதிகமானோர் இந்த ஆண்டு நடைபெற்ற பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் சிலர் இறந்தவர்களுக்கான நினைவேநந்தல்கள் மற்றும் காணாமல் போனோருக்கான போராட்டங்களில் பங்கேற்றவர்கள் என்றும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும் என அந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா முழுமையான ஒத்துழைப்பு – அலைனா டெப்லிட்ஸ்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்கும் என பதவியில் இருந்து விலகவுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் கூறியுள்ளார்.

மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது என குறிப்பிட்ட அவர், அனைவரும் மனித உரிமைகளை மதித்து செயற்பட வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

ஜனநாயக அரசாங்கமொன்று அந்நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொறுப்பு கூற வேண்டும் என்பதே அமெரிக்காவின் நிலைப்பாடு என்பதனால் கடந்த கால மற்றும் நிகழ்காலத்தில் உள்ள மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டு அதற்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நல்லிணக்க முயற்சிகள், நிலைபேறுகால நீதிப் பொறிமுறையையும் சமாதானத்தையும் நிலைநாட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்தும் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அலைனா டெப்லிட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு பொருளாதார ரீதியில் வெற்றியளிக்கக்கூடிய கொள்கைகளை வகுப்பது குறித்து இலங்கை அரசாங்கம் முனைப்பு காட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

இந்தியா குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்

இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ​நேற்று (08) நிறைவேற்றப்பட்டது.

நேற்றைய தமிழ்நாடு சட்டமன்ற விவாதத்தின் போது உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

இது இலங்கைத் தமிழர்களை காயப்படுத்துகிறது. இந்த சட்டம் அகதிகளை தழுவுவதற்குப் பதிலாக மதம் மற்றும் பிறப்பிட அடிப்படையில் பிரிப்பதாக உள்ளது. இது நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது.

“குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை. இந்த தீர்மானத்தை ஆதரிக்க.. எதிர்க்கட்சிகளுக்கு தைரியம் இல்லை.

அதனால் வெளிநடப்பு செய்துள்ளார்கள். எங்கள் வாக்குறுதியில் நாங்கள் கூறியது போலவே தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறோம். குடியுரிமை பெற மதம் அடிப்படை கிடையாது” என்றார்.

இதன்போது, அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினர் (அ.தி.மு.க)சபையில் இருந்து வெளி நடப்பு செய்திருந்தனர். “ஆதரிக்க மனமில்லாமல் அ.தி.மு.க.வினர் வெளியேறினர் என்பதே உண்மை என்று முதல்வர் மு. க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முன்னதாக எழுந்த கே.பி.முனுசாமி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை தமிழக அரசு முடக்குகிறது என்று சில கருத்துகளை கூறினார். (கே.பி.முனுசாமி பேச்சு அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்கினார்) பூஜ்ய நேரத்தில் கேள்வி தான் கேட்க முடியும். விவாதம் பண்ண முடியாது. அரசியல் மேடை போன்று பேச முடியாது. பூஜ்ய நேரத்தில் பேசவேண்டும் என்றால் சபாநாயகரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்றார் சபாநாயகர்.

இதன்போது எழுந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கே.பி.முனுசாமி பேச அனுமதிக்க வேண்டும் என கோரிநின்றார். என்னிடம் முன் அனுமதி பெறாமல் எப்படி பேச முடியும் என வினவிய சபாநாயகர் அப்படி பேசினால் அமைச்சரிடம் எப்படி பதில் கிடைக்கும். முடிந்த ஒரு பிரச்சனை பற்றி ஏன் பேச முயற்சிக்கிறீர்கள். இந்த பிரச்சனை குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெளிவாக பதில்கூறியுள்ளார். அதனால் பேச அனுமதிக்க முடியாது.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி இதை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக கூறி அவர் தலைமையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் வெளியில் சென்றனர்.

 

நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் – பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளநிலையில், 13ஆம் திகதி நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே அதற்குத் தயாரானால் திறக்கலாம் என பிரதி சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (8) இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா பரவலைக் கட்டப்படுத்துவதற்காக ஓகஸ்ட் மாதம் 20ஆம் திகதி தொடக்கம் நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது இந் நிலையில், ஊரடங்கை நீக்கி நாட்டை இந்த மாதம் 13ஆம் திகதி தொடக்கம் திறப்பதாயின் அன்றைய தினம் சமூக, பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய முறை குறித்து, அந்தந்த பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் திட்டமிட்டு அதனை பகிரங்கப்படுத்த வேண்டும்.

அவ்வாறு பகிரங்கப்படுத்தினால் நாட்டைத் திறப்பதற்கு தகுந்த சூழ்நிலை உள்ளதாக திருப்தியடையலாம். நாடு திறக்கப்பட்டதும் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள், அதனை எவ்வாறு சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களுக்கு அமைய, முன்னெடுப்பதென திட்டமிட்டு, அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருந்தார்கள் என்றால், நாட்டை திறப்பதில் பிரச்சினை இல்லை என்றார்.

அவ்வாறில்லை என்றால் நாட்டை திறப்பதால் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய ஏற்படும். நாட்டை திறப்பதனுடாக முன்னெடுக்கப்படும் சமூகப் பொருளாதார செயற்பாடுகளால் கொரோனா வைரஸ் நாட்டில் மீண்டும் பரவாதிருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

Posted in Uncategorized

கிருசாந்தி படுகொலை 25ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 25ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.

வல்வெட்டித்துறையில் உள்ள தமிழ்த் தேசிய கட்சியின் அலுவலகத்தில் அதன் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கத்தினால் நேற்று பிற்பகல் 3 மணியளவில் நினைவேந்தல் இடம்பெற்றது.

1996ஆம் செப்ரெம்பர் மாதம் 7ஆம் திகதி யாழ். சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தி வீதியால் சென்று கொண்டிருந்தபோது செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் அவரை சித்திரவதையின் பின் படுகொலை செய்ததாக நீதி விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

Posted in Uncategorized

என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டதே சீ.விக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானக் கடிதம்- சி.வி.கே.சிவஞானம்

வடக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான கடிதம் சதித்திட்டம் ஊடாக என்னிடம் வலிந்து திணிக்கப்பட்டது என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, கடிதம் எழுதியதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 05.09.2021ஆம் திகதி யாழில் இருந்து இயங்கும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வடக்கு மாகாண சபையை குழப்புவதில் நிறைய அனுபவம் வாய்ந்த வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வீ. கே. சிவஞானமும் பாரிய கவனம் செலுத்தினார் என குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக உண்மை நிலையைத் தெளிவுபடுத்தும் நோக்குடன் இன்றைய தினம் (புதன்கிழமை) ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் செய்த தவறாக அவர் குறிப்பிட்டது 17 சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து மாகாண சபையை கலையுங்கள் என்ற கடிதத்தை ஆளுநரிடம் நான் கையளித்தமை பற்றியது. இந்த விடயம் தொடர்பாக பல தெளிவுபடுத்தல்களை நான் கடந்த 5 வருடங்களாக வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

ஆளுநருக்குக் கொடுத்த கடிதம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லை என்பது மட்டுமே தவிர. சபையைக் கலையுங்கோ என்றல்ல என்பதை முதலில் குறிப்பிட விரும்புகின்றேன்.

முதலமைச்சர், அமைச்சர்களுக்கு எதிராக விசாரணைக் குழு ஒன்றை சபை நியமிக்க வேண்டும் என்ற முன்மொழிவைச் சமர்பித்தபோது, இதன் பொருட்டு சபை உறுப்பினர்களைக் கொண்ட தெரிவுக் குழுவை நியமிக்க முடியுமே தவிர, முதலமைச்சர் கோரியபடி வெளியாட்கள் கொண்ட குழுவை நியமிப்பதை நிராகரித்ததே நான்தான்.

முதலமைச்சர் தமக்குரிய சிறப்புரிமைக்கமைய அமைச்சர்களை நீக்கும்படி ஆளுநருக்கு சிபாரிசு செய்யலாம் என்பதால் விசாரணைக்குழு தேவையற்றது என்பதே எனது நிலைப்பாடாக இருந்தது.

அதனால் சுமார் ஒன்றரை நாள் விவாதத்தின் பின்பு முதலமைச்சர் தாமே ஒரு குழுவை நியமிக்கலாம் என்று நாம் கூறியதற்கு அமையவே விசாரணைக்குழு அவரால் நியமிக்கப்பபட்டது.

அந்த அறிக்கையை சபையில் சமர்ப்பித்த பின் நடைபெற்ற விவாதத்தின் முடிவில் திரு பொ.ஐங்கரநேசன் தன்னிலை விளக்கம் அளித்த நிலையில், முதலமைச்சர் அதனையும் பரிசீலித்து அவரது முடிவை இரண்டு நாட்களின் பின்பு தெரிவிக்கலாம் என்ற எனது கோரிக்கையை நிராகரித்து, தமது தீர்மானத்தை வாசிக்கத் தொடங்கியதும் அநேகமான மாகாண சபை உறுப்பினர்கள் சபையைவிட்டு வெளியேறினர்.

இவ்வாறான நடவடிக்கை பற்றி எனக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால் பிற்பகல் 3 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் ஒரு கூட்டம் இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறு எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதற்கமைய நான் சபை அமர்வு முடிந்த பின்பு கட்சித் தலைமையத்துக்கு இரண்டு மணித்தியாலயங்களுக்கு பின்பு சென்றபொழுது அநேகமான உறுப்பினர்களும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஆளுநருக்குச் சமர்ப்பிதற்கான கடிதம் கணினியில் தட்டச்சிடப்பட்டுக்கொண்டிருந்தது.

அது கட்சி உறுப்பினர்களின் முடிவு என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. அதில் எனது பெயர் முதலில் இருந்தபோது அப்படிப் போட வேண்டாம். அது தவறு என பலமுறை வற்புறுத்தியும் அதனை நிராகரித்து எனது பெயரை முதலில் தட்டச்சாக்கிவிட்டார்கள். வேறு வழியின்றி கையொப்பமிட நான் நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

இந்தக் கடிதத்தை ஆளுநரிடம் வழங்குவதற்கு என்னையும் அழைத்தார்கள். அப்படி நானும் மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனும் எனது வாகனத்தில் புறப்படும்போது திரு.கமலேஸ்வவரன் அந்தக் கடிதக் கோவையை கொண்டு வந்து என்னிடம் தந்தார். அதை நான் ஏற்காமல் இந்த நடவடிக்கையை முன்னெடுத்தவர்களே கொடுக்க வேண்டும் எனக் கூறியதும் அவர் அதை எடுத்துச் சென்றார்.

பின்பு ஆளுநரைச் சந்திக்க மேல்மாடியில் உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களும் உட்சென்றபோது ஏற்பட்ட நெருக்கடிக்குள் அந்தக் கோவை எனது கையில் திணிக்கப்பட்டது. இதனால் நான் அதிர்ச்சியடைந்த போதும் அந்த இடத்தில் நின்று பிரச்சினைப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு கடிதம் என்னால் ஆளுநரிடம் சகல உறுப்பினர்கள் முன்னிலையில் கையளிக்க வேண்டியதாயிற்று.

எனவே, இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையின் முன்னெடுப்பிலோ வேறு விதத்திலோ எனக்கு எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை காணலாம்.

சகல உறுப்பினர்களும் சேர்ந்து கட்சி சார்ந்து கட்சித் தலைமையகத்தில் எடுத்த முடிவுக்கு எப்படி என்னைப் பொறுப்பாளி ஆக்கலாம்” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆப்கான் இடைக்கால அரசுடன் சீனா தொடர்பைப் பேறணும் – சீன வெளியுறவு அமைச்சு

ஆப்கானிஸ்தானில் புதிதாக உருவாக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்துடன் தொடர்புகளைப் பேண பீஜிங் தயாராகவுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7 அன்று பெயரிடப்பட்ட புதிய ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சீனா அங்கீகரிக்குமா என அலுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.

ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீனா மதிக்கிறது என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிய பின்னர் ஒரு பொறுப்பான அரசாங்கத்தின் முக்கிய அமைச்சரவை உறுப்பினர்களை செவ்வாய்க்கிழமை பெயரிட்டனர்.

இதினில் 2001 இல் வீழ்ச்சியடைந்த முந்தைய தலிபான் அரசாங்கத்தில் துணைப் பிரதமராகப் பணியாற்றிய முல்லா ஹசன் அகுந்த் இடைக்காலப் பிரதமராகப் பெயரிடப்பட்டார்.

அமெரிக்காவுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைக் கையாண்ட குழுவின் இணை நிறுவனர் முல்லா அப்துல் கனி பரதர் துணைப் பிரதமராகப் நியமிக்கப்பட்டார்.

தலிபானின் முதல் தலைவர் முல்லா உமரின் மகன் முல்லா மொஹமட் யாகூப் பாதுகாப்பு அமைச்சராகவும், ஹக்கானி நெட்வொர்க்கின் நிறுவனர் மகன் சிராஜுதீன் ஹக்கானி உள்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹெதாயத்துல்லா பத்ரி நிதி அமைச்சராக செயல்படுவார், அதே நேரத்தில் தோஹாவில் தலிபான் பேச்சுவார்த்தை நடத்திய அமீர்கான் முத்தாகி வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

ஆப்கானிஸ்தானின் “புதிய இஸ்லாமிய அரசாங்கத்தின்” 33 உறுப்பினர்களைக் குறிப்பிட்டு, மீதமுள்ள பதவிகள் கவனமாக விவாதிக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என்று தலிபான்கள் கூறியுள்ளனர்.

எனினும் இந்த அரசாங்கத்தில் பெண்கள் யாரும் இடம்பெறவில்லை. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பெயரிடப்பட்ட தலிபான் அரசாங்கத்தின் உறுப்பினர்கள் குறித்து கவலையடைவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

தலிபான் பயங்கரவாத அமைப்பாக ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளினால் தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2வது கடிதம் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்படவில்லை- சிறிதரன்

இலங்கை தழிரசுக் கட்சியில் இருந்து இரண்டாவது கடிதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என சிவஞானம் சிறிதரன் உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சிக்குள்ளிருந்து இரண்டாவது கடிதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மேலும் குறித்த கடிதத்தில் தமிழரசு கட்சியின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 9 பிரமுகர்களின் கையொப்பத்துடன் அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதிருந்தது.

இவ்விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கொவிட் தொற்று நிலைமை விசேட காரணல்ல – மேன்முறையீட்டு நீதிமன்றம்

சந்தேகநபர்களுக்காக பிணை கோரிக்கையை சமர்ப்பிக்கும் போது கொவிட் தொற்று நிலைமையை விசேட காரணமாக ஏற்றுக் கொள்ள முடியாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போதைப்பொருள் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவருக்காக சமர்ப்பிக்கப்பட்ட சீராக்கல் மனு ஒன்றை நிராகரித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அததெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த வருடம் சிலாபம் பிரதேசத்தில் 67 கிலோகிராம் ஹேரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு கோரி குறித்த சீராக்கல் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த சீராக்கல் மனுவின் ஊடாக நாட்டில் தற்போது பரவி வரும் கொவிட் 19 தொற்றை விசேட காரணமாக கருத்திற் கொண்டு இந்த சந்தேகநபரை பிணையில் விடுவிக்குமாறு கோரப்பட்டிருந்தது.

கொரோனா தொற்று நிலைமை அனைத்து கைதிகளுக்கும் பொதுவானது என சுட்டிக்காட்டிய நீதிபதிகள் குழாம் அதனை விசேட காரணமாக கருத முடியாது என தீர்ப்பளித்துள்ளனர்.