வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் : ஆளுங்கட்சியினரை சாடும் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் ஆளுங்கட்சியினரை சாடும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை கவலைக்குரிய விடயம் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆளுங்கட்சியை சேர்ந்த பிரதி அமைச்சர் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவர் வன்னி பிரதேசத்தில் இருந்த போதிலும் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் குறித்து இன்றைய தினம் 18/4/2025 வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா வைத்தியசாலை

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிரூட்டி பல மாதங்களாக செயற்படாமல் காணப்படுகின்றது.

இதன் காரணமாக மரணமடைந்தவர்களின் உறவினர்கள் தமது சொந்த செலவில் சடலத்தை செட்டிகுளம் வைத்தியசாலையின் குளிரூட்டியில் வைத்து மீண்டும் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வர வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல ஆயிரக்கணக்கான பணத்தை செலவழித்து சடலத்தை செட்டிகுளத்துக்கும் வவுனியாவுக்கும் கொண்டு செல்ல வேண்டிய நிலைமை உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஏற்படுகின்றது. இது இந்த பிரதேசத்து மக்களிற்கு பாரிய சுமையை ஏற்படுத்துகின்ற ஒரு செயற்பாடாகும்.

தமது ஆட்சியில் பாலும் தேனும் ஓடும் என்று அறிக்கை விட்டு மக்களை பொய்யாக திசை திருப்பி பிரதி அமைச்சுக்களையும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தியினர் (NPP) வெறும் வாய்ச் சவால் விடுவதற்கு மாத்திரமே சிறப்பானவர்களாக காணப்படுகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தமது பிரதேசத்தில் இவ்வாறான ஒரு நிலைமை காணப்படுவது தொடர்பில் அறிந்து கொள்ளவோ அதற்கான நடவடிக்கையை தமது ஆட்சியில் உள்ள சுகாதார அமைச்சருடன் உடன் கதைத்து செயற்படுத்தவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள் தான் மீண்டும் மக்களிடம் பொய்களை கூறி திசை திருப்ப முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் எதிர்க்கட்சிகளின் கருத்துக்களை மாத்திரமல்ல தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கூட கேட்பதற்கு தயாரில்லை என்பதற்கு தேசிய மக்கள் சக்தியின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களே சாட்சியாகவுள்ளனர்.
மக்கள் மத்தியில் சென்று அவர்களின் தேவைகளை அறிந்துகொள்ள முடியாத பிரதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தாம் பாரிய சாதனைகளை செய்து விட்டதாக தம்பட்டம் அடிப்பதிலேயே காலத்தை கடத்தி வருகின்றனர்.

இருதய சிகிச்சை பிரிவு

இது தவிர ஒரு அத்தியாவசிய தேவையாக காணப்படுகின்ற வடக்கில் முக்கியமான தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சை பெறும் வைத்திய சாலையின் தேவைகளை கூட நிறைவேற்ற முடியாதவர்களாக தான் இவர்கள் உள்ளார்கள் என்பதே உண்மை.
இது மாத்திரமன்றி வவுனியா வைத்தியசாலையில் கோலாகலமாக திறக்கப்பட்ட இருதய சிகிச்சை பிரிவு இதுவரை செயற்படுத்தப்பட முடியாமல் வைத்திய நிபுணர்கள் இன்றி மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

இது தொடர்பிலும் அவர்கள் அக்கறை எடுத்ததாகத் தெரியவில்லை. எமது கருத்துக்களை கேட்க கூட தயாராக இல்லாத இந்த அரசாங்கம் தாமாவது தங்களது பிரதேசத்தில் தேவைகளை அறிந்து செயற்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மத்தியிடம் இருந்தாலே உள்ளூராட்சிக்கு நிதி என ஐனாதிபதி பொய்யுரைப்பதால் அதிகாரப் பகிர்வு, உள்ளூராட்சி தத்துவதுவம் கேலிக்குள்ளாக்கப்படுகின்றது – ரெலோ நிரோஷ்

உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆளுகைக்குள் உள்ளூராட்சி மன்றங்கள் இருந்தால் மட்டுமே மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க முடியும் எனவும் தாம் நிதி ஒதுக்க முடியும் எனவும் தேர்தல் மேடைகளில் ஜனாதிபதி பேசுவதனால் அவர் அதிகாரப் பகிர்வையும் ஜனநாயக ரீதியில் உள்ளுராட்சி தத்துவத்தையும் மீறுகின்றார் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றங்களின் நிதி விடயத்தில் அந்தந்த சபைகளின் தலைவர்களுக்கே அதிகாரம் காணப்படுகின்றது. உள்ளூராட்சி மன்றங்கள் மத்தியில் தங்கி வாழும் நிறுவனங்கள் அல்ல. உள்ளூராட்சி என்பது ஆட்சி முறைமை. அது வரிகளையும் வருமானங்களையும் திரட்டுவதற்கும் தீர்மானிப்பதற்கும் செலவிடுவதற்கும் அதிகாரம் பொருந்திய சட்ட ரீதியான ஆட்சி அலகாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள் உலகளவில் வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சி முறை என்ற அடிப்படையில் மத்திய அரசாங்கத்திடம் இருந்து அதிகாரப்பகிர்வைப் பெற்றுள்ளன. ஐனநாயக மற்றும் சட்ட ரீதியிலான அந்தஸ்தாக உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரங்களைப் பெற்றுள்ளன. இலங்கையிலும் அரசியலமைப்புச் சட்ட சரத்துக்களின் ரீதியில் உருவாக்கப்பட்ட சட்டங்களினால் அதிகாரத்தினைப் பெற்றுள்ளன. சட்டரீதியில் உள்ளராட்சி மன்றங்கள் சோலைவரி, மாற்றம் ஆதனப் பெயர்மாற்றங்களின் போதான முத்திரைத் தீர்வை, நீதிமன்ற குற்றப்பணம், சேவைகளுக்கான அறவீடுகள், தண்டப்பணங்கள் என பல மில்லியன்களுக்கு உரித்தாளர்களாகவுள்ளன. வசதிக்குறைவான உள்ளூராட்சி மன்றங்களும் காணப்படுகின்றபோதும் அவ்வாறாக வசதிக்குறைவுக்கு மத்திய அரசின் எடுபிடியாக அல்லது ஆதிக்கத்தினுள் உள்ளூராட்சி மன்றங்கள் இருப்பது தீர்வல்ல.

மத்திய அரசாங்கம் சர்வதேசத்திடம் பெறும் அதிக உதிவிகள் மக்களின் நலன்புரி விடயங்களை மையமாகக் கொண்டுள்ளன. அந் நிதி உதவிக்கான முன்மொழிவுகள் உள்ளூராட்சி மன்றங்களுக்கு குறித்தொதுக்கப்பட்ட சேவைப்பரப்புக்களாகக் காணப்படுகின்றன. மத்திய அரசாங்கம் உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட பல்வேறுபட்ட சர்வதேச தாபனங்களிலும,; நாடுகளிலும் இருந்து மானியங்களைப் பெறுகின்றது. அவ் உதவிக் கோரிக்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய சேவைப்பரப்புக்களை காரணங்காட்டியே உதவிகள் பெறுகின்றன. அவ்வாறு அரசாங்கம் பெறும் உதவிகளை ஜனாதிபதி தனது கட்சிக்காரரின் சபைக்கு மட்டும் தான் கொடுப்பேன் எனக் கூற முடியாது. அவ்வாறு ஜனாதிபதி செய்தால் உதவிகளை சர்வதேசம் வழங்காது. அப்படி அரசாங்கம் செயற்பட்டால் இலங்கைக்கு உதவி வழங்கும் சர்வதேச கொடையாளர்களின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல முடியும். அதனால் நாட்டிற்கான சர்வதேச உதவிகளே தடைப்பட்டுவிடும்;. சர்வதேச உதவி தடைப்பட்டால் அது மத்திய அரசாங்கத்தின் இருப்புக்கே ஆபத்தாக மாறிவிடும். வெளிநாட்டு உதவிகளை ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சபைகளுக்கு தேவை முன்னுரிமை அடிப்படையில் அரசாங்கம் பகிர்ந்தே ஆகவேண்டும்.

உள்ளுராட்சி மன்றங்களின் ஆளணியினருக்கான சம்பள விடயங்கள் மத்திய அரசு சார்ந்திருந்த போதும் அவற்றிற்கான மானிய உதவியை இன்றைய ஜனாதிபதி நினைத்தால் மாத்திரம் நிறுத்திவிட முடியாது. உத்தியோகத்தர்களின் நியமனம் மற்றும் சேவை அடிப்படையில் நியமனம் பெற்ற உத்தியோகத்தர்களுக்கு சட்டப் பாதுகாப்பும் தொழில் உரிமையும் உள்ளது. ஆகவே அரசாங்கம் போதையில் பேசுகின்ற தெருச் சண்டியர்கள் போல விலாசம் எழுப்பக்கூடாது என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அரசாங்கம் மன்னார் உள்ளுராட்சி மன்றங்கள் கைப்பற்றுமாக இருந்தால் ,மன்னாரை காப்பாற்ற முடியாது.

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதி யை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் அவர்களின் மன்னார் விஜயம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளது என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

-மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (16) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டு இருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுகின்றது.சில சபைகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் நீதிமன்றத்தை நாடி தற்போது வெற்றி பெற்றுள்ளோம்.

இந்த நிலையில் ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டமைப்பு பல சபைகளை கைப்பற்றும் நிலை ஏற்படும்.எனினும் நாங்கள் நிர்ணயம் செய்யும் சக்தியாக இத்தேர்தலில் காணப்படுவோம்.யாருடன் இணைந்து செயலாற்ற வேண்டும் என்ற நிலை உள்ளது.குறிப்பாக தேசியத்தை நேசிக்கும் தமிழ் கட்சிகளுடன் நாங்கள் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைக்கும் சூழலை உருவாக்குவோம்.

இனி வருகின்ற காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லாது விட்டால் எமது பிரதேசங்களில் பிளவுகளையும் அழிவுகளையும் ஏற்படுத்தும்.தேசியத்தை இல்லாது செய்யும் நடவடிக்கையையும் ஏற்படுத்தும்.எனவே உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போது நாங்கள் நிர்ணயம் செய்கின்ற சக்தியாக தேசியத்தை நேசிக்கின்ற கட்சிகளுடன் இணைந்து ஆட்சி இமைக்கின்ற வாய்ப்புகளை உருவாக்குவோம்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,,

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்கின்றனர்.ஆனால் பாதிக்கப்பட்ட வன்னி பிரதேசங்களுக்கும் உங்களின் விஜயம் இடம் பெற வேண்டும் என அண்மையில் பாராளுமன்றத்தில் கோரிக்கையை முன் வைத்து உரை நிகழ்த்தினேன்.

ஆனால் ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் அமைச்சர்கள் தேர்தல் காலங்களில் மாத்திரமே வன்னி பிரதேசங்களுக்கு வருகின்றனர்.குறிப்பாக மன்னார் மாவட்டத்திற்கு வருகின்றனர்.தேர்தலில் தமது கட்சி வெற்றி யை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அர்த்தத்துடன் வருகிறார்கள்.

குறிப்பாக மன்னாரில் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி பிரதான விடையமாக பார்க்கப்படுகின்றது.மன்னார் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளது.கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குறித்த செயல்பாடுகளை நிறுத்த கோரிக்கை விடப்பட்டது.ஆனால் தற்போது மன்னாரிற்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் வருகை என்பது இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம் படுத்துவதற்கும்,குறித்த இரு திட்டங்களையும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சந்தர்ப்பமாக அமையும்.

உள்ளூராட்சி மன்றங்கள் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கணிய மணல் அகழ்வுக்கான அனுமதியை வழங்கக் கூடிய அதிகாரம் கொண்டவை.எனவே உள்ளூராட்சி மன்றங்களை ஜே.வி.பி.அரசு முழுமையாக கைப்பற்றுமாக இருந்தால் மன்னார் மாவட்டத்தை காப்பாற்ற முடியாத ஒரு சூழலை ஏற்படுத்தும்.மன்னாரில் நகர சபை மற்றும் பிரதேச சபைகளை அவர்கள் கைப்பற்றுவதன் ஊடாக தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்ற நோக்கத்துடன் அவர்களின் மன்னார் விஜயம் மற்றும் தேர்தல் பிரச்சாரங்கள் அமைந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்குள் மன்னாரிற்கு ஜனாதிபதியின் வருகை இடம் பெறவில்லை.எனினும் ஒரு சிறிய தேர்தலுக்காக அவர் மன்னாருக்கு வருகிறார்.மீன்பிடி மற்றும் சுகாதார அமைச்சர்கள் மன்னாருக்கு வருவதாக கூறினார்கள்.இது வரை அவர்களின் வருகை இடம் பெறவில்லை.

ஆனால் தற்போது அவர்கள் எல்லோரும் மன்னாரிற்கு வருகை தருவது எமது மண்ணையும்,காற்றையும் வருமானமாக்குவதாகவே நோக்கமாக உள்ளது.எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.என தெரிவித்தார்.

எமது ஆட்சியில் ஊழலிருந்தால் வெளிக்காட்டுங்கள் அரசாங்கத்திற்கு ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ் சவால்

தங்கள் கட்சி அரசியல்வாதிகளைத் தவிர ஏனைய அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று குற்றஞ்சாட்டும் அரசாங்கம் முடிந்தால் நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையை ஆட்சி செய்துள்ள நிலையில் அங்கு ஊழல்கள் இடம்பெற்றிருந்தால் அதனை பிடியுங்கள் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

தமது கட்சி ஆட்சி அமைத்தால் மாத்திரமே ஊழலுக்கு எதிராக செயற்பட முடியும் என்று அரசாங்கம் பொய் பேசி வருகின்றது. ஏனைய சகல அரசியல் தரப்பினரையும் ஊழல்வாதிகள் போல் கூறுகின்றது.

நாம் கடந்த ஐந்து ஆண்டுகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினை ஆட்சிசெய்திருக்கின்றோம். அதற்கு முன்னரும் மக்கள் பிரதிநிதிகளாக இருந்திருக்கின்றோம். இந் நிலையில், பதவியில் உள்ள அரசாங்கம் என்ற வகையில் நீங்கள் எம்மால் ஊழல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் அல்லது துஸ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பின் தாராளமாக கணக்காய்வு செய்து வெளிக்கொண்டு வருங்கள்.

கிராமங்கள் தோறும் மேடைகளை அமைத்து ஜனாதிபதி மற்றும் பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என சகலரும் தம்மைத் தவிர ஏனையவர்கள் சகலரும் ஊழல்வாதிகள் என்கின்றனர். தாம் சபைகளை கைப்பற்றினால் மாத்திரமே கிராமங்களை கட்டியெழுப்ப முடியும் என்கின்றனர்.

நான் ஐந்து ஆண்டுகள் உள்ளுராட்சி மன்றத்தின் தவிசாளர் பதவியில் நிறைவேற்று அதிகாரியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டு தொங்கு நிலைச் சபை ஒன்றினை நடத்தியுள்ளேன். பல தமிழ்க் கட்சிகளும் ஆதரவையும் ஒத்துழைப்பினையும் நல்கியுள்ளனர். ஆட்சிக்கு ஆதரவளித்தோர் தமது நலனுக்காக ஆதரவளிக்கவில்லை. சலுகைகளுக்காக ஆதரவளிக்கவில்லை. இந் நிலையில் எம்மை பிரதேச சபைக்கு அனுப்பிய மக்கள் மற்றும் தவிசாளராகத் தெரிவு செய்த ஏனைய கட்சிகளினது கௌரவ உறுப்பினர்கள், தவிசாளராக தெரிவு செய்த கட்சி என சகலரதும் கௌரவமும் நீங்கள் எழுங்தமானமாக முன்வைக்கும் விமர்சனங்களால் பாதிக்கப்படக்கூடாது. என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

வடக்கு, கிழக்கில் சீனாவுக்கு எந்த நடவடிக்கைளையும் மேற்கொள்ள அனுமதிக்க முடியாது -ரெலோ தலைவர் செல்வம்

சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தங்களை குழப்ப நினைத்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதையும் கூறிக்கொள்கின்றேன் என ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற சேர் பெறுமதி (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாரதப் பிரதமர் கடந்த வாரம் இலங்கைக்கு வருகைத் தந்திருந்தார். இதன்போது பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. இந்த விடயம் சீனாவுக்கு வலிக்கும் என்றும்,அமெரிக்காவுக்கு வலிக்கும் என்றும் இங்கே பலர் கதைக்கின்றனர். ஆனால், எங்களைப் பொறுத்தவரையில் இலங்கையை மேலே கொண்டு வருவதற்கான முயற்சியை முதலில் செய்தது இந்தியாவே. இதுவே பக்கத்து நாடு. இந்த ஒப்பந்தங்கள் சரியானவை என்றே கூற வேண்டும்.

இந்நிலையில் சீனாவின் அனுசரணையில், சீனாவின் அடிவருடிகள் இந்த விடயத்தில் குழப்ப நினைத்தால் நாங்கள் நிச்சயமாக அதனை எதிர்த்து நிற்போம். அதேபோன்று வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் எந்த நடவடிக்கையும் மேற்கொள்வதற்கு அனுமதிக்க முடியாது என்பதனையும் கூறிக்கொள்கின்றேன்

பட்டலந்த வதைமுகாம் விடயத்துடன் தொடர்புடையவர்கள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே கொண்டுள்ளோம். இவ்வாறான விடயங்கள் சிங்கள தேசத்தில் நடக்கும்போது ஏதோவொரு வகையில் அது தொடர்பில் விசாரணை நடத்தவோ,அது தொடர்பில் ஆராய்வதற்கான குழுவை அமைக்கவோ மற்றும் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கோ ஏதோவொரு நடவடிக்கை முன்னெடுக்கப்படும். இதன்படியே பட்டலந்த அறிக்கை வந்துள்ளது.

ஆனால் வடக்கில் கிழக்கில் தமிழ் பிரதேசங்களில் பல விடயங்கள் நடந்துள்ளன. 1983இல் தமிழ் மக்கள் கொழும்பில் இருந்து விரட்டப்பட்டனர். சிறைகளில் தங்கதுரை, குட்டிமணி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். 83 கலவரம் வெலிக்கடை சிறைச்சலையிலேயே உருவாக்கப்பட்டது. இந்த கலவரம் தமிழருக்கு எதிரானது என்பதனால் அது தொடர்பான விசாரணைகள் கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதிய அரசாங்கம் 1983 கலவரத்தில் படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யப்பட்டவர்கள், அதற்கு உடந்தையாக இருந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக அறிக்கையை சமர்ப்பிக்க குழுவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம். தமிழர் பிரச்சினையென இதனை தட்டிக்கழிக்கக் கூடாது என்றார்.

Posted in Uncategorized

சலுகைகள் மூலம் வடக்கில் தேர்தலை வெற்றி கொள்ள முயற்சிக்கிறது அரசு! ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் குற்றம்சாட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

கடந்த கால ஆட்சியாளர்களை விமர்சித்து ஊழல் அற்ற ஆட்சியை வழங்குவோம் என கூறிய அநுரகுமார அரசாங்கம் பாராளுமன்ற தேர்தலின் பின்னர் அவர்களது செயல்திறன்கள் பேச்சளவில் நின்றதுடன் மாறாக அரிசி, தேங்காய் , உப்பு ,போன்ற மிக அத்தியாவசிய பொருட்கள் பல மடங்கு விலை அதிகரித்ததுடன் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தலைகீழாக மாறியது.

எதிர்பாராத வெற்றி சரிவை சந்திக்கிறது என்ற அளவீட்டை உணர்ந்த அநுர அரசாங்கம் வடக்கில் பல சலுகை உத்தரவாதங்களை அள்ளி வீசுவது மாத்திரமல்ல அதற்காக தெற்கில் இருந்து பல முக்கியஸ்தர்கள் குழுக்களையும் அனுப்பி வருகின்றனர்.

கடந்த ஆட்சியாளர்கள் சலுகைகளை தேர்தல் காலங்களில் வழங்கினார்கள் உத்தரவாதங்களை கொடுத்தார்கள் என எதிர் அணியில் இருந்து விமர்சித்த அநுர இன்று அப்போதைய ஆட்சியாரின் செயற்பாட்டை கையில் எடுத்து வடக்கு மக்களை ஏமாற்றி வாக்குகளை கபளீகரம் செய்ய முயற்சிக்கின்றது.

தேர்தல் விதி முறைக்கு மாறாக ஆலயங்களில் தேர்தல் பிரசார கூட்டங்களையும் அதனை நடாத்த இராணுவ இயந்திரத்தையும் பயன்படுத்துகின்றனர்.

கடற்றொழில் அமைச்சு என தலைப்பிட்ட கடிதம் மூலம் சகல வட்டாரங்களிலும் எண்ணற்ற வீதிகள் புனரமைப்பதற்கு சிபார்சு செய்யப்பட்டதாக வீதீயில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கடிதங்களின் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன.

சர்வதேச விளையாட்டு மைதானம் அமைப்பதாகவும் ஏலவே இருக்கின்ற மைதானங்களை நவீன முறையில் மாற்றுவதாகவும் கூறி தெற்கில் இருந்து அமைச்சர் தலைமையில் ஒரு குழு பார்வையிட்டு ஊடகங்களில் அதனை பரப்புரையாக மாற்றியுள்ளனர்.

இவ்வாறு ஏகப்பட்ட உத்தவாதங்களையும் சலுகைகளையும் வழங்குவதாக கூறி உள்ளூராட்சி தேர்தலில் வென்றுவிட வேண்டும் என்ற நிலையில் அநுர அரசு வடக்கில் முகாமிட்டுள்ளது.

Posted in Uncategorized

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீள ஏற்றுக்கொள்ள உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட 31 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(10) உத்தரவிட்டுள்ளது.

வேட்மனுக்கள் நிராகரிக்கப்பட்டதை ஆட்சேபித்து ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன் பிரகாரம் பிறப்புச் சான்றிதழ், சமாதான நீதவான் உறுதிப்படுத்தல் மற்றும் அரசியலமைப்பின் 07ஆவது உபசரத்தின் பிரகாரம் சத்தியப்பிரமாணத்தில் ஏற்பட்டுள்ள தவறுகள் என்பன காரணமாக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று குறித்த தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

Posted in Uncategorized

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம் : தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் இந்திய பிரதமர் மோடி வலியுறுத்தல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று மாலை சந்திப்பில் ஈடுபட்டனர்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் சி.வீ.கே.சிவஞானம், சி.சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் குறித்த சந்திப்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இருக்கும் என தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் வலியுறுத்தப்பட்டதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

சந்திப்பு தொடர்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளத்தில் இட்ட பதிவில் “இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான இரா. சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள். அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது. எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்” – என்றுள்ளது.

அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படு கொ லையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.!

அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் பட்டலந்த போன்று வெலிக்கடை படுகொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பட்டலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அது இவ்வளவு காலமும் தூசு தட்டாமல் இருந்து ஜே.வி.பி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. உண்மையில் அதனை நாம் வரவேற்கின்றோம். அதேநேரம் 1983 ஆம் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. வெலிக்கடை சிறைச்சாலையில், அங்கு படு கொலை செய்யப்பட்டதன் பின்னனியில் கலவரம் ஏற்பட்டு இயக்கங்களுக்கு தமிழ் இளைஞர்கள் சாரை சாரையாக சென்றனர்.

ஆகவே, ஒரு கேள்வியை இந்த அரசாங்கத்திடம் கேட்ட விரும்புகின்றேன். இதை நாடாளுன்றத்தில் கொண்டு வந்ததைப் போன்று ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக் காலத்தில் வெலிக்கடை சிறையில் காடையர்கள் வெளியில் இருந்து உள்ளே அழைக்கப்பட்டு படு கொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய உடல்கள் எங்கே புதைக்கப்பட்டது என்பது கூட தெரியாமல் இருக்கிறது. ஆகவே இந்த அரசு நியாயமாக செயற்படுமாக இருந்தால் வெலிக்கடை படு கொலையையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

பட்டலந்த பிரச்சனை எல்லாவற்றையும் விட 1983 கலவரம் கூடுதலான இழப்புக்களை சந்தித்தது. இது வரலாற்றில் முதன்மையான இடத்தில் உள்ள படு கொலை. இதை அரசாங்கம் விசாரணைக்கு கொண்டு வந்து, அதற்கான நீதி நியாயத்தை வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் சார்பாகவும், வெலிக்கடையில் படு கொலை செய்யப்பட்ட போராளிகள் சார்பாகவும் கோரிக்கையை முன் வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளுராட்சி விடயங்களை இராணுவமயப்படுத்துகின்றது ரெலோ முன்னாள் தவிசாளர் நிரோஷ்

அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய நிர்வாக ஒழுங்குகளுக்குள்ளாக கடமைகளை திணைக்களங்களுக்கு அறிவுறுத்தி அவற்றின் வாயிலாக மக்களுக்கான சேவையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமே தவிர இராணுவத்தினை பயன்படுத்தி சாதாரண சிவில் நிர்வாகத்தினை செயல்திறன் குன்றியதாக மாற்றக்கூடாது. இராணுவமயமாக்கத்தினை ஊக்குவிக்க கூடாது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தினை பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தலைமையில், இராணுவ குழுக்கள் இணைந்து துய்மிப்புப் பணியில் ஈடுபட்டமை குறித்து தனது அதிருப்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மக்களையோ அல்லது கட்சித் தொண்டர்களையோ ஈடுபடுத்தி யாழ் மத்திய பேருந்து நிலையம் தூய்மிக்கப்பட்டிருக்குமாயின் நாம் அதனை வரவேற்றிருப்போம். மாறாக அரச அதிகாரத்தின் வாயிலாக, இராணுவத்தினை பெருமளவில் அழைத்து வந்து யாழ் மாநகர சபை ஆற்ற வேண்டிய தூய்மிப்புப் பணியை அரச எம்.பி இளங்குமரன் மேற்கொண்டுள்ளார்.

தங்களிடத்தில் யாழ். மத்திய பேருந்து நிலையத்தினை துப்புரவு செய்ய வேண்டிய நன்நோக்குக் காணப்படுமாயின் தங்கள் கட்சி ஆட்சியில் உள்ள அரசாங்கம் என்பதன் அடிப்படையில் சாதாரணமாக அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருந்தால் அவர்கள் சிவில் நிர்வாக ஒழுங்கு முறைகளுக்கு அமைவாக பொறுப்பு வாய்ந்த திணைக்களங்களின் ஒத்துழைப்புடன் மேற்படி நடவடிக்கையினை மேற்கொண்டிருக்க முடியும். யாழ் மாநகர சபையில் ஆளணி வளம் உள்ளது. யாழ் மாநகர சபை பாராளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லையானால் ஆளுநர் மாகாண உள்ளுராட்சி திணைக்கள விடயங்களுக்கு அதிகாரம் பொருந்தியவராகவுள்ளார்.

அவர் ஊடாக ஏனும் நடவடிக்கை எடுத்திருக்கலாம். இவற்றுக்கு மேலதிகமாக பொதுமக்களைத் திரட்டி அல்லது கட்சித் தொண்டர்கள் ஊடாக சிரமதானத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாது பெருமளவான இராணுவத்தினரைப் பயன்படுத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள். இராணுவத்தினரை சிவில் நிர்வாகம் ஊடக மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தவிருங்கள். கடந்த கேட்டபய காலத்திலும் இராணுவத்தினை உள்ளுராட்சி விடயப்பரப்புகளுக்குள் நுழைப்பதற்கு பெரும் பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் நான் உள்ளுராட்சி மன்றம் ஒன்றின் தலைவர் என்ற வகையில் அவற்றினை முற்றாக நிராகரித்திருந்தேன்.

நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களே இராணுத்தின் தயவில் இயங்கினால் தங்கள் கட்சி சார்ந்த எதிர்காலத்தில் தெரிவாகக் கூடிய உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் சபைகளில் சிறிய வேலைகளைச் செய்வதற்கும் இராணுத்தினையே அழைக்க எத்தனிப்பர். எனவே இராணுவ ஒடுக்குமுறைகளுக்கு இனமாக ஆட்பட்டிருக்கும் எமது இனத்திற்கு இன்றுவரையில் தங்கள் கட்சி ஆரோக்கியமான பொறுப்புக்கூறலையோ தீர்வை முன்வைப்பதற்கோ முன்வரவில்லை. இவ்வாறிருக்க சாதாரண விடயங்களிலும் இராணுவ பிரசன்னத்தினையும் இராணுவமயமாக்கத்தினையும் மேற்கொள்வது எமது மக்களை மேலும் ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் செயற்பாடாகும் என வலி கிழக்கின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized