மஹிந்த, பசிலுக்கு எதிரான பயணத்தடை நீக்கப்பட்டது

மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத்தடை இனிமேல் தொடராது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவே காரணம் என தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 7ஆம் திகதிக்கு பின்னர் உயர் நீதிமன்றம் பயணத்தடை உத்தரவை நீடிக்கவில்லை என சுட்டிக்காட்டிய சட்டத்தரணிகள் இதனை குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க கோரினர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இரண்டு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட பயணத்தடை இனிமேல் நடைமுறையில் இருக்காது என அறிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம்

சர்வதேச நாணய நிதியத்துடனான 10 நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த 10 நிபந்தனைகள் பின்வருமாறு.

1. ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை வழங்குதல்.
2. ஊழல் தடுப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும்.
3. அரசின் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிவிதிப்பு.
5. 2025 இல் செல்வ வரி மற்றும் சொத்து பரிமாற்ற வரி அறிமுகம்.
6. 2023 இறுதிக்குள் பணவீக்கத்தை 12% – 18% ஆகக் குறைத்தல்.
7. 2023 ஜூன் இல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை நீக்குதல்.
8. அதிக மாற்று விகித நெகிழ்வுத்தன்மை பராமரிக்கப்பட வேண்டும்.
9. மத்திய வங்கி மேலும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
10. வலுவான சமூக பாதுகாப்பு வலை அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் விசேட நிதியுதவி!

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் 100 பேருக்கு, இந்திய அரசாங்கத்தினால் வாழ்வாதாரச் செயற்பாடுகளுக்காக ஒவ்வொருவருக்கும் தலா ஐயாயிரம் ரூபா விசேட நிதியுதவி வழங்கப்படவுள்ளது. இம்மாத இறுதியில் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே இந்தத் திட்டத்தை ஆரம்பித்து வைப்பார் என்று தெரியவருகிறது.

இந்திய அரசாங்கத்தின் இந்தத் தீர்மானம் குறித்து இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் ” கடந்த மாதம் 11 ஆம் திகதி, யாழ்ப்பாணம் மத்திய கலாசார மத்திய நிலையத்தை யாழ்ப்பாண மக்களுக்கு உவந்தளிக்கும் நிகழ்வுக்கு இந்தியப் பிரதமரின் விசேட பிரதிநிதியாக வந்திருந்த இராஜாங்க கலாநிதி எல். முருகன் அறிவித்த படி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 100 பேருக்கு விசேட நிதியுதவியை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால் தெரிவு செய்யப்பட்டு முன்மொழியப்படும் ஒவ்வொரு மாணவனுக்கும் நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து, அடுத்து வரும் ஒரு வருட காலத்துக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களில் இருந்தும் இளநிலைப் பட்டதாரி மற்றும் பட்ட பின் மாணவர்கள் இத் திட்டத்தின் கீழ் பயனாளிகளாகத் தெரிவு செய்யப்படலாம். நான்கு இளநிலை மாணவர்களுக்கு ஒரு பட்டப்பின் படிப்பு மாணவர் என்ற அடிப்படையில் தெரிவு இடம்பெறும். இதற்கென இந்தியத் தூதரகத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கமைய பொருளாதார நிலையில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் திட்டம் பற்றிய இந்தியத் தூதுவரின் கடிதம் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு மாணவர் நலச்சேவைகள் பணிப்பாளர் பேராசிரியர் கே. சசிகேஷ் இணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன.

நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது – ரணில்

நாட்டைக் கட்டியெழுப்பும் பயணத்திற்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு ஒருபோதும் கிடைக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“கடினமான பயணத்தை விரைவுபடுத்துவோம். நாட்டைக் கட்டியெழுப்புவதுதான் நமது முதன்மையான குறிக்கோள்.அப்படி நினைத்தால் வேகமாகவும் வெற்றிகரமாகவும் செல்லலாம்.

அடுத்த 10 ஆண்டுகளில் இதுவரை வாங்கிய அனைத்து கடன்களையும் அடைக்க வேண்டும். இந்த பாதையில் நாம் தொடர்ந்து சென்றால் அந்த நிலையை அடைய முடியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.இந்த பாதையை பின்பற்றினால் 2048 இல் இலங்கையை உலகில் வளர்ந்த நாடாக மாற்ற முடியும்.

நான் பிரதமரானதும் எதிர்க்கட்சிகளின் ஆதரவைக் கேட்டேன், ஆனால் கிடைக்கவில்லை. பட்ஜெட் விவாதத்தின் போது அவர்கள் ஆதரிக்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியபோது ஆதரிக்கவில்லை.அந்த சமயங்களில் பல்வேறு காரணங்களை கூறி ஆதரிக்க மறுத்தனர்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டைக் கட்டியெழுப்புவது அல்ல, ராஜபக்சவை மீட்பதே எனது நோக்கம் என எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர். ஆனால் கடினமான காலத்தில் இருந்து இலங்கை அன்னை மீட்கப்பட்டதை சர்வதேச சமூகம் கூட தற்போது ஏற்றுக்கொண்டுள்ளது.

கடந்த கால தவறுகள் மீண்டும் நடக்காத வகையில் விதிகளை வகுத்து எதிர்காலத்தை கட்டியெழுப்ப பாடுபடுகிறோம்.

இப்போதும் கூட இந்த நாட்டை கட்டியெழுப்ப ஒன்று சேருங்கள். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடன் வாங்குவது அவமானம் ; தம்பட்டம் அடிக்க வேண்டாம் – தேசிய மக்கள் சக்தி

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணைக்கு அங்கீகாரம் வழங்குவதாக அரசாங்கத்தில் உள்ள சிலர் தம்பட்டம் அடிப்பதை இன்று செவ்வாக்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியே விஜித ஹேரத் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை நம்பி நாட்டை திவாலாக்கியதன் பின்னர் வரம்பற்ற கடன்களை பெற்றுக் கொள்வதற்கு வெட்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வரிச்சுமையை அதிகரித்து, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதன் மூலம் இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் கடனாளியாக மாறியுள்ளதாகவும், இது மற்றுமொரு கடன் பொறி எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூச்சியமாக்கி விட்டு கடன் பெற்றதாக தம்பட்டம் அடிப்பதில் அர்த்தமில்லை – கிரியெல்ல

நாட்டை வங்குரோத்து நிலைக்கு கொண்டு சென்றுவிட்டு இப்போது கடன் வாங்கிவிட்டதாக தற்பெருமை பேசி பயனில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் கையிருப்பை பூஜ்ஜியமாக குறைத்த இந்த அரசாங்கம் அந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்காகவே கடனைப் பெற்றதாகவும், குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பணத்தை வழங்குவதற்கான நிபந்தனைகள் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது என்றும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இதேநேரம் நாட்டின் நீதித்துறை, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊடகவியலாளர்களை நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி நசுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

21 திருத்தத்தின் மூலம் நீதித்துறை மற்றும் உயர் அதிகாரிகளின் சுதந்திரம் தற்போது நாடாளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தி அழிக்க முயல்வதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இலங்கை இனி திவாலான நாடு இல்லை – ஜனாதிபதி

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கடனை மறுசீரமைத்து வழமையான கொடுக்கல் வாங்கல்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சர்வதேச சமூகத்தின் அங்கீகாரமாக இது அமையும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு, நாட்டின் வேலைத்திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதால், இலங்கைக்கு ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள், மருந்துகள் மற்றும் சுற்றுலாத் துறை மீதான முதல் சுற்று கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடங்கி, இறக்குமதி கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்படும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

சட்டக் கல்லூரி பரீட்சையை ஆங்கிலத்தில் நடாத்தும் யோசனை தோற்கடிப்பு

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று (செவ்வாக்கிழமை) நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டபோது, அதற்கு பெரும்பான்மையான உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இந்த நிலையில், இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரினார். அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது.

அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தன. நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மாட்டும் ஆதரவாக வாக்களித்தார்.

இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்; அமெரிக்கா குற்றச்சாட்டு

இலங்கையில் கடந்த ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.

மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழலில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு விசாரணை செய்து அவர்களை தண்டிக்க அரசாங்கம் குறைந்தபட்ச நடவடிக்கைகளையே எடுத்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடந்த மே 9 அன்று கொழும்பில் அமைதியான போராட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்முறை சம்பவத்தின் பின்னர் 3,300 இற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் 2,000 ற்கும் அதிகமானோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவித்தது.

எவ்வாறாயினும் கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என அன்டனி பிளிங்கன் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் – சர்வதேச நாணய நிதியம்

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான செயற்பாடுகளில் தலையிட மாட்டோம் என சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மேலும் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் ஒருபோதும் பரிந்துரை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாகி இதனை தெரிவித்துள்ளார்.