பொருளாதார வீழ்ச்சியை நோக்கி ஐரோப்பிய ஒன்றியம் – அனைத்துலக நாணய நிதியம்

எரிபொருள் நெருக்கடி ஐரோப்பிய ஒன்றியத்தை மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை நோக்கி தள்ளிவருவதாக அனைத்துலக நாணய நிதியத்தின் தலைவர் Kristalina Georgieva தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போர் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து வருகின்றது. இது 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளின் பொருளாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும்.

பணவீக்கத்தை குறைப்பதற்கு நாடுகள் பல வழிமுறைகளை நாடுகின்றன. பணவீக்கம் பொருளாதார மீட்சியை பாதிப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் பாதிக்கும். எரிபொருள் மற்றும் உணவுப் பற்றக்குறையே பிரதான கராணமாக உள்ளது.

இதனை தடுக்கவேண்டுமெனில் நாடுகள் பொருளாதார மற்றும் ஏற்றுமதித் தடைகளை நீக்க வேண்டும் என்பதுடன் ஏனைய நாடுகளுக்கு உதவிகளையும் வழங்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபயவை கைது செய்யுமாறு பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சி கோரிக்கை

கோட்டாபயவை கைது செய்ய வேண்டுமென பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவர் இட் டேவி  (Sir Ed Davey) வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச இலங்கையை விட்டு தப்பிச் சென்றமை குறித்து பிரித்தானியாவின் லிபரல் ஜனநாயகக் கட்சியினால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, கோட்டாபயவை கைது செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு கன்சர்வேட்டிவ் மற்றும் தொழிற் கட்சிகளும் ஆதரவு வெளியிட்டுள்ளன.

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு – சி.வி.விக்னேஸ்வரன்

தமிழ் சமூகத்தின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கும் தலைவருக்கே ஆதரவு என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

30 வருடங்களுக்கு மேலாக நிலவும் இந்த பிரச்சினைகளுக்கு மக்கள் போராட்டத்தின் பின்னராவது தீர்வு காணப்பட வேண்டும் எனவும் ஆகவே தாம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் பக்கச்சார்பற்ற முறையில் செயற்படவுள்ளதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தமிழ் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வுகாண பாடுபடும் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிப்பேன் என்றும் எதிர்வரும் ஜூலை மாதம் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Posted in Uncategorized

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இணையவழிக் கலந்துரையாடல்  இன்றைய தினம் நடைபெற்றதாக தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைப்பாளரும் ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான  சுரேந்திரன் தெரிவித்தார்.

இதில் கட்சித் தலைவர்கள் நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.  பயணம் காரணமாக சித்தார்த்தன் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை. எனினும் ஆதரவு தெரிவிக்கப்பட்டது

ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் 17 ஞாயிறு காலை 11 மணிக்கு தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றிய இறுதி நிலைப்பாடு சம்பந்தமாக இணைய வழியில் சந்தித்து உரையாடினர். கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் நிலைப்பாடு , இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணைய வழியினூடாக பல சந்திப்புகள் நடைபெற்றன.

இறுதியாக 17 ஞாயிறுக் கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர்கள், வரப்போகும் அரச தரப்பு, போராட்ட அமைப்புகள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக தீர்மானிக்கப் பட்டது. அக்கோரிக்கைள் சம்பந்தமான தயாரிக்கப்பட்ட வரைபும் பரிசீலிக்கப்பட்டது.

நாளை 18, திங்கள் காலை 11 மணிக்கு மீண்டும் கூடி இக் கோரிக்கையை இறுதி செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான சர்வதேச ஆதரவை ஒருங்கமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்க மீண்டும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கையாள்வதானது எமது மக்களுக்கான உறுதியான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வழி அமைக்கும்  என நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எமது மக்கள் நலன் கருதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இம்முயற்சியில் இணைந்து கொள்வதற்கான  கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப் பட்டது.

தமிழ் தேசிய பரப்பிலே பயணித்துக் கொண்டிருக்கும் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டில் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் கலந்துரையாடல்கள் மற்றும் செயல்பாடுகள் வெற்றிகரமாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

Posted in Uncategorized

சகல சலுகைகளுடன் மீண்டும் இலங்கை வருகிறார் கோட்டா!

பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்த மாதம் மீண்டும் இலங்கை வரவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ ஓய்வு பெற்ற ஜனாதிபதியின் சிறப்புரிமைகளைப் பெற உள்ளார். அதன்படி, கொழும்பில் உத்தியோகபூர்வ இல்லம், பாதுகாப்புப் படை, வாகனங்கள் உள்ளிட்ட பல சலுகைகள் அவர் மற்றும் அவரது மனைவிக்கு கிடைக்கும்.

தற்போது வெளிநாட்டில் உள்ள கோட்டாபாய ராஜபக்ஷவின் கோரிக்கையின் பேரில் இந்த வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு விடுத்த உத்தரவு!

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த அறிவித்தலை கருத்திற்கொண்டு பதில் ஜனாதிபதி பாதுகாப்பு தரப்பினருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, பாராளுமன்ற அதிகாரங்கள் மற்றும் சிறப்புரிமைகள் சட்டம் மற்றும் அது தொடர்பான குற்றவியல் சட்டங்களின் கீழ் இது தொடர்பான சம்பவங்களை விசாரிக்குமாறு அவர் அறிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானம் – டலஸ் அழகப்பெரும

அனைத்துக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுனவின் தலைமை டலஸ் அழகப்பெருமவை கொண்டு வருவதில் முனைப்பு காட்டினாலும் கட்சியின் பொதுச்செயலாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.இந்நிலையில் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவிலேயே டலஸ் அழகப்பெரும இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வரலாறாக மாறியுள்ள மோசடி அரசியல் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே தனது பிரதான இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் தானும் களமிறங்கவுள்ளதாக டலஸ் அழகப்பெரும அறிவித்திருந்தார்.

Posted in Uncategorized

ரணிலுக்கு எதிராக திரும்பிய காலிமுகத்திடல் போராட்டம்

இலங்கையில் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பின் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதிவியேற்றிருக்கும் நிலையில், தற்பொது அவருக்கு எதிராக போராட்டம் தீவரமடைந்துள்ளது.

“ரணில் கோ ஹோம்’ என்ற ஆங்கில வாசகம் கொண்ட பட்டைகளை தலையில் கட்டிக்கொண்டு பலர் போராட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதியாக போட்டியில் இருப்பதால், ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதியாவற்கான வாய்ப்பு இல்லாமல் உள்ளது. அவர் ஜனாதிபதியாக வேண்டுமானால் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாக வேண்டும்.

கோட்டாபயவின் கட்சி ரணிலுக்கு ஆதரவளிப்பதால் அவருக்கு வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், காலிமுகத்திடலில் ரணிலுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்து வருகின்றது.

ரஞ்சன் ராமநாயக்கவை பொது மன்னிப்பில் விடுதலை செய்ய முடிவு!

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலையை துரிதப்படுத்துமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவிடம் அறிவித்துள்ளார்.

நேற்று  இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கோரிக்கைகளுக்கு அமைய பதில் ஜனாதிபதி இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த செயன்முறை அவசரமாக எடுக்கப்படவுள்ளதால், ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் இரு வாரங்களுக்குள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக சிங்கப்பூரிலும் மக்கள் போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கும் பிறகு சிங்கப்பூருக்கும் சென்றுள்ள நிலையில் அந்நாட்டு மக்கள் அவருக்கு எதிராக போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கையை விட்டு மாலத்தீவுக்கு சென்றிருந்த போதும் அவருக்கு எதிராக அங்குள்ள மக்களும் புலம்பெயர் இலங்கை மக்களும் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

அதே போல் சிங்கப்பூருக்கு சென்றுள்ள கோட்டாபயவுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மற்றும் புலம்பெயர் இலங்கை மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.