உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது குறித்து உரிய தரப்பினருக்கு அழுத்தம் பிரயோகிக்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 3 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் , அது தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படாமை, தாக்குதல்களுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமை மற்றும் நியாயத்தைப் பெற்றுக் கொள்ள இலங்கை கத்தோலிக்கர்கள் முன்னெடுத்த நீதிக்கான போராட்டங்கள் உள்ளிட்ட முக்கிய காரணிகள் குறித்து பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டிடம் தெளிவுபடுத்தியுள்ளார்.
இலங்கை நேரப்படி நேற்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு பேராயர் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கிடையிலான சந்திப்பு ஆரம்பமாகி, 45 நிமிடங்கள் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போதே பேராயர் கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தமன்று நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்தி , பாதிக்கப்பட்டவர்களுக்காக நீதியை நிலைநாட்டுவது தொடர்பாக ஐ.நா. உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை கடந்த ஆண்டு சமர்ப்பித்திருந்தது.
குறித்த அறிக்கையில் தாக்குதகல்கள் தொடர்பில் முன்னரே தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்த போதிலும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை மற்றும் தனது கடமையை நிறைவேற்றத் தவறியமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
எவ்வாறிருப்பினும் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அந்த பரிந்துரைகள் எவையும் இதுவரையிலும் நடைமுறைப்படுத்தப்படாமலுள்ளதோடு, இவ்விடயத்தில் அரசாங்கமும் அசமந்த போக்குடன் செயற்படுவதாக பேராயர் உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவை தொடர்ந்தும் பகிரங்க விமர்சனங்களை முன்வைத்து வந்தது.
அத்தோடு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல முக்கிய பகுதிகள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் , அதனையும் பகிரங்கப்படுத்துமாறும் தொடர்ந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில் பேராயர் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டிருந்த போது சுமார் 70,000 பக்கங்களைக் கொண்ட 80 பகுதிகளடங்கிய முழுமையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
எனினும் இதுவும் முழுமையான அறிக்கையாக இருக்காது என்று தாம் சந்தேகிப்பதாக பேராயர் இல்லம் தெரிவித்துள்ளது. காரணம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் காணப்படுவதாகவும், அவை ஜனாதிபதி வசமுள்ளதாகவும் அண்மையில் அமைச்சரவை இணை பேச்சாளர் ரமேஷ் பத்திரண தெரிவித்திருந்தமையாகும்.
இவ்வாறான நிலையில் வத்திக்கான் விஜயத்தினை மேற்கொண்டுள்ள பேராயர் பரிசுத்த பாப்பரசரிடமும் இது குறித்து தெளிவுபடுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து ஜெனீவா சென்று நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கும் இவ்விடயத்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பில் துணை ஆயர் கலாநிதி ஜே.டீ.அன்தனி ஜயக்கொடி கேசரிக்கு தெரிவிக்கையில் ,
அண்மைக்காலமாக நாம் அனைவரிடமும் தெரிவித்தமைக்கமைய , அனைத்து மாற்று வழிகள் தொடர்பிலும் ஆராய்ந்து வேறு மாற்று வழிகள் எவையும் இன்மையினால் சர்வதேசத்தை நாடுவதற்கு நாம் தீர்மானித்தோம்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் தெளிவுபடுத்தியிருந்தார்.
அதன் இரண்டாம் கட்டமாகவே நேற்று பிற்பகல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகரை சந்தித்து கலந்துரையாடினார். இதன் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்துவதற்கும் , பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தை நிலைநாட்டுவதற்குமான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சந்திப்பு குறித்த மேலதிக தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும் என்றார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பொறுப்பு கூறல் , நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை மீது தொடர் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்த விவகாரம் இணைந்துள்ளது. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்விடயங்கள் அதற்கு மேலும் வலு சேர்ப்பதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.