‘ஒரேநாடு ஒரேசட்டம்’ செயலணிக்கு எதிராக வலி.தென்மேற்கு பிரதேச சபையில் கண்டன தீர்மானம்!

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி தொடர்பிலும் அதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரின் நியமனம் குறித்தும் வலி.தென்மேற்கு மானிப்பாய் பிரதேச சபையின் 44ஆவது சபை அமர்வின்போது கண்டன தீர்மானமொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதேசசபை உறுப்பினர் கந்தையா ஜெசிதனால் கொண்டுவரப்பட்ட இக்கண்டன பிரேரணையானது ஏகமனதான பிரதேசசபை உறுப்பினர்களின் வழிமொழிதலுடன் கண்டன தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது .

மேலும் சிங்கள மக்களின் தனிபெரும்பான்மையோடு ஆட்சி பீடமேறியதோ அந்த சிங்கள மக்களிடமும் வீழ்ந்து வரும் தனது செல்வாக்கை தூக்கி நிமிர்த்தவே, இனவாத பிக்குவின் தலைமையில் மக்களின் கவனங்களை வாழ்வியல் சமூக பொருளாதார பிரச்சினைகளிலிருந்து திசைதிருப்பிடவே இந்த செயலணியை அரசாங்கமும் ஜனாதிபதியும் பயன்படுத்துகின்றனர் என தமது காரசாரமான கருத்துக்களை சபையின் உறுப்பினர்களான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ, லோ.ரமணன், சி.அனுசன் ஆகியோர் முன்வைத்தனர்.

இதேவேளை இந்த அரசினது இவ்வாறான ஜனநாயக விரோத போக்குகளை சுட்டிக்காட்டிட முனையாத அரசிலுள்ள தமிழ் பங்காளி கட்சிகளின் தலைவர்களிற்கு கண்டனமும் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பண்டையகாலம் முதல் கண்டியசட்டம், கரையோரச்சட்டம், தேசவழமைசட்டம் என இந்நாட்டில் நிலவிவந்த சட்டங்களை ஒழித்து, குழப்பநிலையை உருவாக்க நினைப்பது ஏற்கமுடியாதது என பிரேரணையை முன்மொழிந்த உறுப்பினர் ஜெசிதன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த கண்டன பிரேரணை நிறைவேற்றப்பட்டபோது ஈ.பி.டி.பியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியே சென்று தீர்மானம் நிறைவேறிய பின்னரே மீண்டும் சபைக்குள் பிரசன்னமானர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடம் பாரிய தொகை கடனை பெறும் இலங்கை!

எரிபொருள் கொள்வனவுக்காக இலங்கை அரசாங்கம் எதிர்வரும் வாரத்தில் இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் திட்டத்தின் கீழ் பெறுகிறது.

இந்தநிலையில் பெற்றோலியம் தொடர்பான கடன்களுக்காக மேற்கு ஆசியா மற்றும் பிராந்திய பொருளாதார அமைப்புக்களுடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக மத்திய வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின்படி இலங்கைக்கு மாதம் ஒன்றுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய 350 மில்லியன் டொலர்கள் தேவைப்படுகின்றன.

இந்தநிலையில் 120,000 மெற்றிக்தொன் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்வதற்காக கேள்விப்பத்திரம் கோரப்பட்டபோது சிங்கப்பூரின் ஏலத்தாரா் ஒருவர் மாத்திரமே முன்வந்துள்ளார்

இறக்குமதிக்கான கடன் கடிதங்களை தற்போது சர்வதேச வங்கி ஒன்றிடம் இருந்தே பெறவேண்டியுள்ளமையே இதற்கான காரணமாகும்.

அத்துடன் சர்வதேச வங்கியிடம் கடன் கடிதத்தை பெற்றுக்கொள்வதற்காக 3 வீத வட்டியை செலுத்தவேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எனினும் அண்டை நாடுகளில் இந்த வட்டிவீதம் 0.5 ஆக இருக்கிறது. இதற்கிடையில் இந்த 3வீத வட்டியை செலுத்தமுடியாது போனமைக் காரணமாக அண்மையில் நிலக்கரிக்கான இரண்டு முக்கிய ஏலங்கள் ரத்துச்செய்யப்பட்டன.

Posted in Uncategorized

நாட்டில் நடப்பது இராணுவ ஆட்சி : சஜித் அணி கடும் கண்டனம்

மாவீரர் நாளான நேற்று வடக்கு, கிழக்கில் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் மேற்கொண்ட அராஜகங்களைப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வன்மையாகக் கண்டித்துள்ளது.

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கில் ஆயுதப் படைகள் நடந்துகொண்ட விதம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

”நாட்டின் இராணுவ ஆட்சிக்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டு” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

“வடக்கில் மக்களை மட்டுமல்ல ஊடகவியலாளரையும் படையினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர் என்று ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம். அதேவேளை, சிலர் கைதுசெய்யப்படும் உள்ளனர். இந்த அராஜக நடவடிக்கைகளைக் கண்டிக்கின்றோம். இறந்தவர்களை நினைவேந்த அனைவருக்கும் உரிமை உண்டு. இதில் இன, மத, மொழி வேறுபாடு காட்டக்கூடாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார  ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் “நாட்டில் தற்போது நடப்பது காட்டாட்சி என்பதை வடக்கு, கிழக்கில் நேற்று அரச படைகள் நடந்துகொண்ட விதம் எடுத்துக்காட்டுகின்றது. போரில் இறந்தவர்களை அமைதியாக நினைவேந்த பல இடங்களில் நீதிமன்றமே அனுமதி வழங்கிய நிலையில் அதையும் மீறி இராணுவத்தினருடன் சேர்ந்து பொலிஸார் நடந்த கொண்ட விதத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். நாட்டில் இன ரீதியில் – மத ரீதியில் – மொழி ரீதியில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமெனில் தமிழர்களுக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்களை உள ரீதியில் மேலும் காயப்படுத்தக்கூடாது” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க  இதன்போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தாய்வானுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு – மறைமுக சர்வதேச அங்கீகாரம் ; சீனா

புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்புப்பட்ட சமீபத்திய ஆண்டுகளில் பதிவான மிக மோசமான விபத்து இதுவாகும். நேற்று (புதன்கிழமை) குளிரான நீரில் மூழ்கிய புலம்பெயர்ந்தவர்களின் சடலங்கள், பிரான்ஸின் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டன.
உயிரிழந்தவர்களில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பிரான்ஸின் உட்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் அறிக்கை தெரிவிக்கின்றது. இரண்டு பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர். புலம்பெயர்ந்தவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என ஜெரால்ட் டார்மான் மேலும் தெரிவித்தார். முன்னதாக, பிரான்ஸ் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை 31ஆக கணக்கிட்டனர்.
ஆனால் பின்னர் அந்த எண்ணிக்கையை மறுபரிசீலனை செய்யப்பட்டது. ‘இந்த மரணத்தால் அதிர்ச்சியும் திகைப்பும் அடைந்துள்ளதாக’ பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்ஸன் கூறியுள்ளார். மேலும், கடக்க முயற்சிப்பதில் இருந்து மக்களைத் தடுக்க பிரான்ஸுக்கு மேலும் அழைப்பு விடுத்தார். கடத்தல் கும்பல்கள் ‘கொலையிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கின்றன’ என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், பிரித்தானியா உள்நாட்டு ஆதாயத்திற்காக இந்த பிரச்சினையை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் என்று கூறினார். ஆங்கில கால்வாய், உலகின் பரபரப்பான கப்பல் பாதைகளில் ஒன்றாகும் மற்றும் நீரோட்டங்கள் வலுவாக உள்ளன. மனித கடத்தல்காரர்கள், மிகவும் உடையக்கூடிய, ஊதப்பட்ட படகுகள் மூலம் புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் செல்கின்றனர். இந்த படகுகள், அலைகளின் தயவில் பிரித்தானிய கரையை அடைய முயற்சிக்கின்றன. இது மிகவும் ஆபத்தான கடற்பயணமாகும்.

ஊடகவியலாளர் மீது தாக்குதல்- விசாரணையை ஆரம்பித்துள்ள மனிதவுரிமை ஆணைக்குழு

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு தலைமை பொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின் வட.பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இணைப்பாளர் த.கனகராஜ் மேலும் கூறியுள்ளதாவது,

“முள்ளிவாய்க்கால் பகுதியில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலில் சுயாதீன ஊடகவியலாளரான விஸ்வச்சந்திரன் என்ற ஊடகவியலாளர் தாக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரிவு 14 கீழ் சொந்த பிரேரணையாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் முல்லைத்தீவு தலைமைபொலிஸ் பரிசோதகரிடமும் 59ஆவது படைப்பிரிவின் கட்டளை தளபதியிடமும் சம்பவம் தொடர்பான அறிக்கை கோரப்பட்டன. மேலும் காயமடைந்த ஊடகவியலாளரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை பகுதியில் இராணுவத்தினராலும் குண்டர்களினாலும் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையினை கண்டித்து மட்டக்களப்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மேலும், ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை கைது செய்யுமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தது.

வடக்கு- கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும் நீதிகோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் என்னும் தொனிப்பொருளில்  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகிலுள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபி அருகே நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், பல்சமய ஒன்றியங்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

முல்லைத்தீவில் ஊடகவியலாளர், இராணுவத்தினரால் தாக்கப்பட்டமைக்கு கடுமையான எதிர்ப்புகள் இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன், ஊடகவியலாளரை தாக்கிய இராணுவத்தினரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேபோன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் படகு விபத்து தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள், குண்டர்களினால் தாக்கப்பட்டு, அவர்களது புகைப்படக்கருவிகளும் பறிக்கப்பட்டு, சேதமாக்கப்பட்டதற்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் குறித்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும்,  கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் கோகிலனை விடுதலைசெய்ய வலியுறுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் அச்சமின்றி ஊடக கடமையினை மேற்கொள்வதற்கான சூழ்நிலையினை ஏற்படுத்துமாறும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிறைப்படுத்தப்பட்ட ஊடகவியலாளர்களை விடுதலைசெய், இராணுவமே ஊடகவியலளார்கள் மீது தாக்குதல் நடத்தாதே, கிண்ணியாவில் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடு, ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடாத்திய இராணுவத்தினரை கைதுசெய், அரசே ஊடக அடக்குமுறையினை உடன் நிறுத்து, அரசே ஊடக சுதந்திரத்தினை உறுதிப்படுத்து போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்ற ஊடகவியலாளர்கள்,  காந்திபூங்காவில் காந்தி திருவுருவச்சிலைக்கு அருகிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted in Uncategorized

புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது!

விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இவ்வாறு கூறுகிறது.

ஐரோப்பிய ஒன்றியச் சட்டத்தின் படி, 2001/931 பொதுநிலையின் முதலாவது சரத்தின் படி “பயங்கரவாதச் செயல்” என்பது தேசிய சட்டங்களிற்கமைய நாட்டையோ அல்லது சர்வதேச நிறுவனத்தையோ பாதிக்கும் குற்றமாக வரையறுக்கப்பட்ட கீழ்வருவனவற்றைக் குறிக்கின்றது.

(i) மக்களை கடுமையாக அச்சுறுத்துவது, அல்லது
(ii) எந்தவொரு செயலையும் செய்யுமாறோ அல்லது செய்யாமல் இருக்குமாறோ அரசாங்கம் அல்லது சர்வதேச நிறுவனத்தை முறையற்ற முறையில் கட்டாயப்படுத்துதல், அல்லது
(iii) ஒரு நாட்டின் அல்லது ஒரு சர்வதேச அமைப்பின் அடிப்படை அரசியல், அரசியலமைப்பு, பொருளாதார அல்லது சமூக கட்டமைப்புகளை மோசமாக சீர்குலைத்தல் அல்லது அழித்தல்:
(a) மரணம் சம்பவிக்கக்கூடிய வகையிலான தாக்குதல்கள்;
(b) உடலியல் ரீதியிலான தாக்குதல்கள்;

(c) கடத்துதல் அல்லது பணயக்கைதியாக வைத்துக்கொள்ளல்;

(ஈ) ஒரு அரசு அல்லது பொது வசதி, போக்குவரத்து அமைப்பு, தகவல் கட்டமைப்பு அடங்கலான உட்கட்டமைப்பு வசதி, ஒரு தகவல் அமைப்பு, நிலையான தளம், பொது இடம் அல்லது தனியார் சொத்து, மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அல்லது விளைவிக்கக்கூடிய அல்லது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தக் கூடியவை

(e) விமானம், கப்பல்கள் அல்லது பொது அல்லது சரக்கு போக்குவரத்துக்கான பிற வழிகளை பறிமுதல் செய்தல்;

(f) ஆயுதங்கள், வெடிமருந்துகள் அல்லது அணு, உயிரியல் அல்லது இரசாயன ஆயுதங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், வைத்திருத்தல், கொள்வனவு செய்தல், விநியோகித்தல், அவை குறித்து ஆய்வுசெய்தல் அல்லது அவற்றை மேம்படுத்தல்
(g) மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பொருட்களை வெளியிடுதல் அல்லது தீ, வெடிப்புகள் அல்லது வெள்ளங்களை ஏற்படுத்துதல்;

(h) நீர், மின்சாரம் அல்லது பிற அடிப்படை இயற்கை வளங்களின் விநியோகத்தில் குறுக்கிடுதல் அல்லது சீர்குலைத்து மனித உயிருக்கு ஆபத்தை விளைவித்தல்;

(i) (a) முதல் (h) வரை பட்டியலிடப்பட்டுள்ள செயல்களில் ஏதேனும் ஒன்றைச் செய்யப்போவதாக அச்சுறுத்தல்;

(j) ஒரு பயங்கரவாதக் குழுவை வழிநடத்துதல்;

(k) ஒரு பயங்கரவாதக் குழுவின் நடவடிக்கைகளில் பங்கேற்பது, குழுவின் குற்றச் செயல்களுக்கு பங்களிக்கும் என்ற உண்மையை அறிந்தும் தகவல் அல்லது பொருள் வளங்களை வழங்குதல் அல்லது அதன் நடவடிக்கைகளுக்கு நிதியளித்தல்
பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவால் அடையாளம் காணப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் பயங்கரவாதப் பட்டியலில் சேர்க்கப்படலாம். பயங்கரவாதப் பட்டியலில் உள்ள நபர்கள் மற்றும் அமைப்புகள் குறித்து தொடர்ச்சியான கால இடைவெளியில், அதாவது குறைந்தது 6 மாதங்களிற்கு ஒரு தடவை, மதிப்பாய்வு செய்யப்பட்டு அவர்கள் அந்தப் பட்டியலில் தொடர்ந்து வைக்கப்படுவது தொடர்பில் உறுதிசெய்யப்படும்.
இதில், விண்ணப்பதாரர்கள் ஐரோப்பிய அரசியல் உட்பிரிவு என்று கூறிக்கொள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

2019.01.08 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைப் பயங்கரவாதப் பட்டியலில் தொடரும் முடிவை கவுன்சில் எடுத்ததுடன் அதற்கான காரணங்களையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகருக்கு அனுப்பியது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளவையாவன,
– விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழர்களுக்குத் தனிநாடு கோரிப் போராடிய ஒரு குழுவாகும்.

– பிரித்தானியாவின் பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளை விடுதலைப் புலிகள் இயக்கம் மேற்கொள்வதாகக் கூறி அதனைப் பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியாவின் உள்துறைத் திணைக்களம் 2001 இல் முடிவுசெய்தது.

– பிரான்ஸ் பாரிசிலுள்ள பிராந்திய நீதிமன்றமானது பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் அதிலுள்ள உறுப்பினர்கள் சிலர் அச்சுறுத்தி, மிரட்டி, வன்முறையைப் பயன்படுத்தி கையெழுத்து, வாக்குறுதி, பணம் மற்றும் சொத்துகளை பெற்றுக்கொள்வதன் மூலம் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியளிக்கும் குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என 2009- 11- 23 அன்று தீர்ப்பளித்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்டாலும் அதனது சர்வதேச நிதிசேகரிக்கும் செயற்பாடுகளும் மீளக்கட்டமைக்கும் அதனது ஆற்றல்களும் அப்படியே இருக்கின்றது எனக் கூறி விடுதலைப் புலிகள் அமைப்பை நிதிமுடக்கப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு ஏதுக்கள் இல்லை என முடிவுசெய்தது.

– விடுதலைப் புலிகள் அமைப்பானது அதனது இராணுவ வல்லமையையும் வலையமைப்பையும் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களை மேற்கொள்ளத்தக்க விதத்தில் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டு உள்துறைச் செயலகமானது விடுதலைப் புலிகளைத் தடைப்பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பதென 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முடிவுசெய்தது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிதிமுடக்கல் பட்டியலில் தொடரப்போவதாக 2019-06- 27 அன்று கவுன்சிலானது கடிதம் மூலம் தெரிவித்தது. 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெடிபொருட்கள் மற்றும் விடுதலைப் புலிகளின் கொடிகள் என்பவற்றை எடுத்துச் சென்ற நபர்களை சிறிலங்கா பொலீசார் கைதுசெய்ததைத் தொடர்ந்து தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேன்முறையீட்டுக் கமிசனில் முறையிடப்பட்டது. இதை அடிப்படையாகக்கொண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீட்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்த செல்வரட்ணம் தவராஜ் என்பவர் விடுதலைப் புலிகள் சார்பாக ஆஜராகுவதற்கு அந்த அமைப்பால் அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் விடுதலைப் புலிகளின் ஐரோப்பிய அரசியல் உபபிரிவினால் அந்த அமைப்பு சார்பாக ஆஜராக அதிகாரமளிக்கப்பட்டவர் என்பதற்கும் எந்தவொரு சான்றுமில்லை எனவும் எதிர்த்தரப்பு வாதம் முன்வைக்கப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடைசெய்து நிதிமுடக்கப் பட்டியலில் சேர்த்தமைக்கான அடிப்படைகள் காலாவதியாகிவிட்டன என்று தொடர்ந்த வாதத்தை நிராகரித்த நீதிமன்றமானது தவராஜ் வழக்குத் தொடுத்த அடிப்படை விவாதங்கள் அனைத்தையும் நிராகரித்ததோடு, வழக்கிற்கான அனைத்துச் செலவுகளையும் அவரே பொறுப்பேற்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

https://curia.europa.eu/juris/document/document_print.jsf?docid=250005&text&dir&doclang=EN&part=1&occ=first&mode=lst&pageIndex=0&cid=1340620&fbclid=IwAR0khH1_suUzyzG6p5hQ5Vf_6GS0zgP86EEz30QrbGFH7k_2nQflqKvaA84

காந்திஜியின் வாசகங்களை வீரத்தமிழனின் பிறந்தநாளில் அவருக்கு சமர்ப்பிக்கிறேன்; பாராளுமன்றில் விக்னேஸ்வரன்

“நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார் என்று காந்தியவர்கள் கூறினார்கள். மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய பிறந்தநாளன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்று பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க. வி. விக்னேஸ்வரன் நேற்று பாராளுமன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவரின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு,

போர் முடிந்த பின்னரும் வருடாவருடம் படையினருக்கு கூடிய நிதிகளை பாதீட்டில் ஒதுக்கிவருவது எதற்காக? மாலைதீவோ இந்தியாவோ எமக்கு எதிராகத் தாக்குதல்களை மேற்கொள்ளமாட்டா. நீங்கள் இந்த நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற்றும் ஏனைய இனமக்களுக்கு எதிராகத்தான் படையினரைப் பாவிக்கப் போகின்றீர்கள். மக்கள் உங்களை வெறுக்கத் தொடங்க மேலும் மேலும் இராணுவ பலத்தைப் பாவிப்பதற்காகவா இத்தனை பெரும் தொகையை படையினர் சார்பில் செலவிடுகின்றீர்கள் என்றும் கேட்டார்.

இந்தத் தொகைகளில் ஒரு பகுதியையாவது எங்கள் பிறநாட்டுக் கடன்களை அடைக்கப் பாவிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?, ரூபாய் 30 ஆயிரத்து 800 கோடி ரூபாயை ஒரு சிறிய நாடான இலங்கை பாதுகாப்புக்கு பாவிக்க முனைவது வியப்பை அளிக்கின்றது. அண்மையில் அரசாங்க ஊழியர்கள் எமது நிதியில் பெரும் பங்கை எடுத்துவிடுகின்றார்கள் என்று நிதி அமைச்சர் கூறியிருந்தார். இது தவறு. படையினர்தான் எமது வருமானத்தில் கூடிய பங்கை விழுங்கி வருகின்றார்கள்.

பாதீட்டால் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. போரால் பாதிக்கப்பட்ட மக்களின் குறை தீர்க்க எந்த ஒரு திட்டமும் வகுக்கப்படவில்லை. நாட்டில் சமாதானமும் சுபீட்சமும் ஏற்பட வேண்டுமானால் ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று கூறித் திரிந்தால் அது ஏற்படாது. சுய நிர்ணய உரிமைக்கு உரியவர்களுக்கு சமஷ்டி முறையிலான ஓர் அரசியல் யாப்பை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களையும் சமமான முறையில் வரவேற்றால்தான் சமாதானமும் சுபீட்சமும் உதயமாகும் என்பதை மறக்காதீர்கள்.

என் பேச்சை முடிக்க முன் உறுப்பினர்களுக்கு ஒரு விடயத்தை நான் நினைவுபடுத்த வேண்டும். இந்த வாரம் வட, கிழக்கு தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய வாரம். வீரமரணம் அடைந்த மாவீரரை நினைவுறுத்தும் வாரம். அதுவும் இன்றைய தினம் இவ்வாரத்தினுள் அதிவிசேட தினம்.

இந்தத் தருணத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராக ஆயதம் தாங்கிய சுபாஷ் சந்திரபோஸ் பற்றி அஹிம்சாவாதியான மகாத்ம காந்தி அவர்கள் கூறிய வாசகங்கள் சிலவற்றை உங்களுக்கு நினைவுறுத்த விரும்புகின்றேன்.

‘நேதாஜியின் தேசப்பற்று எவர்க்கும் குறைந்ததல்ல. அவரின் வீரம் அவரின் சகல காரியங்களிலும் பளிச்செனப் பிரதிபலிக்கின்றன. அவர் உன்னத குறிக்கோள்களை முன்வைத்தார். ஆனால், தோல்வியுற்றார். ஆனால், யார் தான் தோல்வியைத் தழுவாதவர்கள்?’

இன்னொரு சந்தர்ப்பத்தில் காந்தியவர்கள் பின்வருமாறு கூறினார்கள். “இந்தியாவிற்கு ஆற்றிய அவரின் சேவையின் நிமித்தம் நேதாஜி என்றென்றும் சிரஞ்சீவியாக மக்கள் மனதில் வாழ்வார்!” அகிம்சையின் பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் மேற்கண்ட காந்திஜியின் வாசகங்களை இலங்கையில் வடக்கு – கிழக்கை மையமாக வைத்து அங்கு உதித்த வீரத் தமிழனின் இன்றைய (நேற்றைய) பிறந்தநாள் அன்று அவர் ஞாபகார்த்தமாக சமர்ப்பிக்கின்றேன்” என்றார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்:

முள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

முல்லைத்தீவுப் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் என்பவரையே நான்கு இராணுவத்தினர் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுத்த சமயம், ஏன் எடுக்கின்றாய் என கேட்டே ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமானசம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிசன்னமாகியிருக்கின்றார்.