‘சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் விழிப்போடு செயல்பட வேண்டிய காலம்’- அருட்தந்தை மா.சத்திவேல்

தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“அண்மையில் ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றிருந்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச புலம்பெயர் (டயஸ்போரா )சமூகத்தை தமிழர் பிரச்சினை தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அழைத்து இருக்கிறார். இது குறுகிய அரசியல் நோக்கம் கொண்டதும், பிரச்சினைக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கும் மற்றும் சர்வதேச அழுத்த சக்திகளை அமைதி கொள்ளச் செய்வதுமான நரி செயலுமாகும்.

சிங்கள பேரினவாத தலைவர்கள் தமிழ் தலைவர்களோடு கடந்த காலத்தில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் அனைத்தையும் கிழித்ததோடு, விடுதலை இயக்கங்களோடு நடாத்தப்பட்ட திம்பு பேச்சுவார்த்தையும் தோல்வி கண்டு, யுத்தம் திணிக்கப்பட்டு சர்வதேச மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தமிழர்கள் ஏமாற்றப்பட்டது மட்டுமல்ல தமிழ் ஈழ விடுதலை புலிகளோடு செய்துகொண்ட இடைக்கால உடன்படிக்கை ஏற்பாடுகளும் நிறைவேறாததன் காரணமாகவே அவலங்களை சந்தித்தவர்கள், உயிர் பாதுகாப்பு தேடியவர்கள் நாட்டை விட்டு புலம்பெயரும் நிலை ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்னர் சர்வதேச சமூகத்தை கொடுத்த 13 பிளஸ் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை அதுமட்டுமல்ல தற்போதைய ஜனாதிபதி நாட்டில் அரசியல் பிரச்சினை இல்லை, இருப்பது அபிவிருத்தி பிரச்சினை என தேர்தல் மேடைகளில் கூறி தானே உண்மையான தேசப்பற்றாளனும் பௌத்தனுமாவேன் என அடையாளப்படுத்திய பின்னர் எந்த நம்பிக்கையில் புலம்பெயர் சமூகம் பேச்சு வார்த்தைக்கு வரும்.

தற்போதைய ஜனாதிபதியையும், ஆட்சியாளர்களையும் பதவிக்கு அமர்த்திய மக்களே வெறுப்படைந்து இருக்கின்ற நிலையிலும் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் நான் போட்டியிடுவேன். அடுத்த ஜனாதிபதி பதவிக் காலமும் எனக்கும் வேண்டும் என்றவர் அந்தத் தேர்தலை சந்திப்பதற்கான வியூகமாகவே பேச்சுவார்த்தை என காலத்தை இழுத்தடிக்கவும், புலம்பெயர் சமூகத்துக்கு ஊடாக தாயக தமிழர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் அவர்களுடைய வாக்குகளை தமதாக்கவும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்க்கு மரண சான்றிதழ் என சர்வதேசத்தின் முன்னாள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தவர் யுத்த குற்றங்கள் மனிதகுலம் அங்கீகரிக்காத குற்றங்களையும் ஏற்று பகிரங்க மன்னிப்பு கேட்காத யுத்த குற்றவாளிகளின் அழைப்புக்களை ஏற்பது என்பது தற்கொலைக்கு ஒப்பாகும்.

தியாகி திலீபனின் ஐந்து அம்ச நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாது கொலை செய்தவர்கள், யுத்தம் முடிவுற்றது என்று அவர்களே அறிவித்துவிட்டு படை முகாம்களை அகற்றாது, மகாவலி எல் வலயம் என புதிய குடியேற்றங்களை ஏற்படுத்த முனைவதோடு, தொல்பொருளியல் திணைக்களத்தோடு பேரினவாத பௌத்த துறவிகளை சுதந்திரமாக தமிழ்ப் பிரதேசங்களில் நடமாட இடமளித்து தமிழர்களின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை கையகப்படுத்திக் கொண்டு புலம்பெயர்ந்துள்ள சமூகத்தை பேச்சு வார்த்தைக்கு அழைப்பது சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணை தூவுவதற்காகவே.

இதில் இன்னுமொரு அபாயமும் உள்ளது. புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தில் தனக்கு வேண்டியவர்களை அழைத்து சர்வதேச புவிசார் அரசியலை முன்னெடுக்கவும் பேச்சுவார்த்தை என்ற நாடகத்தை அரங்கேற்ற முனைவதாகவே தோன்றுகின்றது. இதனூடாக தமிழர்களையும் தமிழ் தேசத்தையும் சிதைக்கவும் புதிய உத்தியாகவே இந்த அழைப்பு எனக்கூறலாம். தேசிய மற்றும் சர்வதேச அரசியல் செயற்பாட்டாளர்கள் மிக விழிப்போடு செயல்பட வேண்டிய காலமிது. இல்லையெனில் முள்ளிவாய்க்கால் பேரழிவை விடவும் பயங்கர அழிவை நாம் சந்திக்க வேண்டும்.

அந்த அழிவுக்கு காரணமானவர்கள் என நாம் நம்முடைய சரித்திரத்தில் பயப்படுவோம். இத்தகைய அவல நிலையை நீக்க தாயகம் மீது தணியாத தாகம் கொண்ட அனைத்து சக்திகளும் தமிழ் தேசத்தையும் தேசியத்தையும் பாதுகாக்க ஒன்று சேர வேண்டும் அதுவே காலத்தின் கட்டாயமாகும். பச்சோந்திகளையும் அடையாளம் கண்டு சமூக நீக்கம் செய்வதும் காலக்கடனே” என்றார்.

இராணுவத்தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்ட பல காணிகள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை – நவநீதம்பிள்ளை

இலங்கையில் போரின்போது இராணுவத்தேவைகளுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் படையினரால் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்புத் தேவைக்கென மாற்றியமைக்கப்பட்டன. அவற்றில் சில பகுதிகளில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் உரிய தரப்பினரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் தாயகமான வடக்கு, கிழக்கில் காலங்காலமாக அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்பட்டுவரும் நில அபகரிப்பை ஆதாரபூர்வமாக எடுத்துக்காட்டும் வகையில் சோமீதரனால் இயக்கப்பட்ட ‘தாய்நிலம் : நில அபகரிப்பு இலங்கைவாழ் தமிழ்மக்களின் உண்மையான பெருந்தொற்று’ (Land Grabbing – The Real Pandemic For The Tamils In Sri Lanka) என்ற ஆவணப்படம் கடந்த சனிக்கிழமை இலங்கைநேரப்படி மாலை 5.30 மணிக்கு இணையவழியில் திரையிடப்பட்டது.
தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்பட்ட இந்நிகழ்வில், சுமார் 70 வருடகாலமாகத் தமிழர் தாயகத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பு தொடர்பான அவர்களது உரைகளும் இடம்பெற்றன.
வட்டுவாகலில் இக்கரை என்று சொல்லக்கூடிய பகுதியில் நிலத்திற்கு மேலாக 400 ஏக்கர் காணி இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டிருக்கின்றது. அதேபோன்று வட்டுவாகல் அக்கரை என்று சொல்லக்கூடிய கரையோரப்பகுதியில் 617 ஏக்கர் நிலப்பரப்பில் கோட்டாபய கடற்படைமுகாம் அமைக்கப்பட்டிருப்பதுடன் வனஜீவராசிகள் திணைக்களம் என்றுகூறி நந்திக்கடல் நீரேரியும் அதனை அண்டிய நிலப்பரப்புமாக 10229.92 ஏக்கர் காணியும் அபகரிக்கப்பட்டிருப்பது குறித்து ‘தாய்நிலம்’ ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

‘போரின்போது இராணுவத்தினரின் தேவைக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்கள் கையகப்படுத்தப்பட்டதுடன் அதன்பின்னர் அவை பாதுகாப்பு என்ற தேவைக்குரியவையாக மாற்றப்பட்டன. இருப்பினும் இவை மிகக்குறைந்தளவிலான சுயாதீன கண்காணிப்பு, இழப்பீடு வழங்கல் என்பவற்றுடனோ அல்லது சுயாதீன கண்காணிப்பு மற்றும் இழப்பீடு வழங்கல் என்பன ஏதுமின்றியோ கையகப்படுத்தப்பட்டன.
அவற்றில் சில இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீள வழங்கப்பட்டுள்ள போதிலும், மேலும் பல காணிகள் மீள வழங்கப்படவில்லை’ என்று இந்த ஆவணப்படத்தில் பேசியிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் ஏக்கர் விபரம், மற்றும் தமிழரின் வாழ்விடங்களில் பௌத்த சின்னங்கள் காணப்படுவதாகக்கூறி முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டதன் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவருகின்ற நில அபகரிப்பு தொடர்பிலான கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. அக்கலந்துரையாடலில் இஸ்ரேல் நாட்டைச்சேர்ந்த பிரபல ஆய்வாளரும் நில அபகரிப்பு தொடர்பான பேராசிரியருமான ஓரென் யிஃ;ப்ரசெல் விசேட உரையொன்றினை நிகழ்த்தினார்.
பாலஸ்தீன நிலங்களை அபகரிப்பது குறித்து தனது இஸ்ரேலிய அரசாங்கத்தைத் துணிச்சலுடன் விமர்சித்திருக்கும் அவர், இஸ்ரேலை ஒத்த ‘இனவாத ஆட்சியே’ இலங்கையிலும் காணப்படுகின்றது என்று தெரிவித்திருக்கின்றார். அதுமாத்திரமன்றி இஸ்ரேல் – பாலஸ்தீனம் மற்றும் இலங்கை ஆகிய இருநாடுகளிலும் இடம்பெற்றுவரும் நில அபகரிப்பின் ஒத்த தன்மையை வெளிப்படுத்தும் வகையிலான ஆய்வுகளையும் அவர் இக்கலந்துரையாடலில் பகிர்ந்துகொண்டார்.
அதேவேளை இந்தியாவில் சுமார் 30 வருடங்களுக்கும் அதிகமான காலம் மக்களின் நில உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல்கொடுத்துவரும் செயற்பாட்டாளரான கலாநிதி மேதா பட்கார், இலங்கையில் இடம்பெற்றுவந்த மூன்று தசாப்தகாலப்போர் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரும் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருவதாகவும் ஆரம்பத்தில் இராணுவ முகாம்களை அமைப்பதற்கெனவும் இப்போது சுற்றுலாத்துறை மேம்பாட்டிற்கெனவும் காரணம் கூறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப்போராட்டம் பாராட்டப்படக்கூடியது அல்ல என்றாலும்கூட, அப்போராட்டத்திற்கு வழிவகுத்த அடக்குமுறைகள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு போர் இடம்பெற்ற காலப்பகுதியில் படையினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் பொதுமக்களிடம் மீள ஒப்படைக்கப்படும் என்று ராஜபக்ஷ அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும் இன்னமும் அது நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது குறித்து சுட்டிக்காட்டிய மேதா பட்கார், நில அபகரிப்பு என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்று மற்றும் வாழ்வியல் அடையாளங்களை அழிக்கும் அதேவேளை அவர்களது வாழ்வாதாரத்தையும் முழுமையாகப் பாதிக்கும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஏற்கனவே அபகரிக்கப்பட்ட நிலங்கள் பொதுமக்களிடம் மீளவும் கையளிக்கப்படுவதற்கான அழுத்தங்களை இலங்கைமீது சர்வதேச சமூகம் பிரயோகிக்கப்படவேண்டும் என்றும் அதனை வலியுறுத்தி பெண்களின் தலைமைத்துவத்தின் கீழான அமைதிவழி (சத்தியாக்கிரகப்போராட்டங்கள்) போராட்டங்கள் எழுச்சிபெறவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் அமைந்துள்ள ‘த ஓக்லன்ட் இன்ஸ்டிடியூட்’ என்ற கல்வியகத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான அனுராதா மிட்டாலும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தார். அவர் இலங்கையில் இடம்பெறும் நில அபகரிப்புக்கள் தொடர்பில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வுகளை முன்னெடுத்துவந்திருப்பதுடன் அதன் முடிவுகளை ஏற்கனவே பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்.
2014 ஆம் ஆண்டின் பின்னரைப்பாகத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல் நிலைவரங்கள் மிகத்தீவிரமான கட்டத்தை அடைந்தபோது, இலங்கைக்கு மிகத்துணிகரமான பயணமொன்றை மேற்கொண்ட அனுராதா மிட்டேல் வடக்கு – கிழக்கு மாகாணங்களிலுள்ள பல இடங்களுக்கும் விஜயம்செய்து, பல்வேறு தகவல்களைத் திரட்டியதுடன் அவற்றைத் தொகுத்து 2015 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ‘நீண்டகாலப்போரின் நிழல் : இலங்கையில் போரின் பின்னரான காலப்பகுதியில் நீதியை நிலைநாட்டுவதில் காணப்படும் சவால்கள்’ என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையொன்றை வெளியிட்டார். இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களை சர்வதேச நாடுகள் பலவற்றுக்கும் வெளிப்படுத்திய முக்கிய ஆவணமாக இந்த ஆய்வறிக்கை நோக்கப்படுகின்றது.
அத்தோடு இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்கள்மீது மிகுந்த அக்கறைகொண்டு அவர்களது நிலை தொடர்பில் நீண்டகாலமாக ஆய்வுகளை முன்னெடுத்துவருகின்ற சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராமு மணிவண்ணனும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள். அடைக்கலநாதன் எம். பி. பிரதமருக்கு கடிதம்

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இன்று (28) அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெரும்பாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும்.

இன்றைய காலப்பகுதியில் சிகரெட் பாவனையை குறைப்பதானது கோவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேசத்தின் அடுத்த கிடுகுப்பிடி

கடந்தகாலங்களில் இதே அரசாங்கம் வழங்கிய எந்த உத்தரவாதங்களையும் நிறைவேற்றவில்லை என டெலோவினுடைய உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்தர் தெரிவித்துள்ளார்.

ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களிலும் இதே அரசாங்கம் இதே விடயங்கள் சர்வதேச அரங்கிலே கொண்டுவரப்பட்ட பிரேரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறிக்கொண்டு தங்கள் பல விடயங்களை நிறைவேற்றுவதாக வழங்கிய உத்தரவாதங்கள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை.

இது வழக்கமாக இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழு வர்த்தக பிரதிநிதிகளுடன் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐவரடங்கிய ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு, வர்த்தகத் துறைசார் பிரதிநிதிகளுடன் திங்கட்கிழமை (27) சந்திப்புகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுகீஸ்வர குணரத்ன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் திகதிவரை கொழும்பில் தங்கியிருந்து தமது மதிப்பீட்டுப் பணிகளை முன்னெடுக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவில் வர்த்தகம் மற்றும் நிறைபேறான அபிவிருத்தி தொடர்பான ஆலோசகர் நிக்கோலாவோஸ் ஸைமிஸ், ஐரோப்பிய வெளியக சேவையின் தெற்காசிய பிராந்திய பிரிவின் தலைவர் ஐயொனிஸ் ஜியோக்கரகிஸ் அர்ஜிரோபோலொஸ், ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை தொடர்பான ஒருங்கிணைப்பாளர் கைடோ டொலரா, ஐரோப்பிய ஆணைக்குழுவின் வேலைவாய்ப்பு மற்றும் சமூக விவகாரங்கள் சபையின் தலைவர் லூயிஸ் ப்ரற்ஸ் மற்றும் ஐரோப்பிய வெளியக சேவையின் இலங்கை மற்றும் மாலைதீவிற்கான அலுவலக அதிகாரி மொனிகா பைலெய்ற் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமை உள்ளிட்ட காரணங்களினால் கடந்த 2010 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2015 ஆம் ஆண்டில் ஆட்சிபீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீளப்பெற்றுக் கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டில் விண்ணப்பித்ததுடன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் உள்ளிட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்வதாக வாக்குறுதியளித்து 2017 ஆம் ஆண்டில் வரிச்சலுகையை மீளப் பெற்றுக் கொண்டது.
எனினும் ஏற்கனவே வாக்குறுதியளித்தவாறு பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படாமை மற்றும் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரங்களை சுட்டிக்காட்டி, இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை இடைநிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு வருகை தந்துள்ளது.

Posted in Uncategorized

போர்க்குற்றங்கள் விசாரணைசெய்யப்படவேண்டும்: நோர்வே தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கம்சாயினி 

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக வெளியக விசாரணை நடைபெற வேண்டும். உண்மைகள் கண்டறியப்படுவது அவசியமானது என்று யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கம்சாயினி அழுத்தந் திருத்தமாகத் தெரிவித்தார்.

நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர்  இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு  தெரிவித்தார்.

ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நோர்வே தமிழ் மக்கள் அரசியலில் ஏற்கனவே அறியப்பட்டவரான பாலசிங்கம் யோகராஜா (பாஸ்கரன்) நெறிப்படுத்தினார்.

ஊடகச் சந்திப்பின் ஆரம்பத்தில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தன்னை கம்சாயினி அறிமுகச் செய்திருந்தார். 1991ம் ஆண்டு தனக்கு 3 வயதாக இருந்த போது தனது பெற்றோருடன் நோர்வேயில் ஹமபெஸ்ற் என்ற நகருக்குக் குடிபெயர்ந்தாகவும், பின்னர் தமிழ்மொழியை முறையாகக் கற்கும் நோக்குடன் நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவுக்கு இடம் மாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

தனது குடும்பம் எந்தவிதமான அரசியல் பின்னணியையும் கொண்டிருக்கவில்லை என்றும் ஒஸ்லோவிலுள்ள சமூகங்களுக்கிடையில் தான் சந்தித்த ஏற்றத்தாழ்வுகளும் அரசியலுக்குள் தான் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் தொடர்பாக ஈராக், மொஸாம்பிக், பாலஸ்தீனா, சிறீலங்கா போன்ற பல நாடுகளுக்குச் சென்று அங்கே பெண்கள் வலுவூட்டல் நிகழ்வுகளில் கலந்துகொண்டதாகவும் அவர் மேற்குறிப்பிட்ட சந்திப்பில் குறிப்பிட்டார்.

2011ம் ஆண்டு ஜூலை மாதம் நோர்வேயில் தொழிற்கட்சியின் இளையோர் பங்குபற்றிய ஒரு நிகழ்வில் அண்டேஸ் பிரைவிக்கினால் 69 இளையோர்கள் கொல்லப்பட்டதை நினைவுகூர்ந்த கம்சி அவ்வேளையில் இளையோரின் நிறைவேற்றுக் குழுவில் தான் அங்கம் வகித்ததாகவும் தனது நண்பர்கள் பலரை அந்த நிகழ்வில் இழந்ததாகவும் உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.

இலங்கையுடனான பொருண்மிய உறவை நோர்வே அரசு தொடர்ந்து பேண வேண்டும் என்றும் பொருண்மிய உதவிகளைச் செய்யும் போது அனைத்து மக்களுக்கும் அந்தத் திட்டங்கள் சென்று சேர்வதை உறுதிப்படுத்தும் வாய்ப்பு அப்போது தமக்கும் கிடைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனது முதன்மைப்பணி தன்னை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய நோர்வே மக்களுக்குப் பணிபுரிவது என்பதை வலியுறுத்திய கம்சாயினி, தனது கட்சியான தொழிற்கட்சியுடன் இணைந்து தமிழ் மக்களுக்கான பணிகளை முன்னெடுக்கத் தனக்கு இருக்கும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தத் தவறவில்லை. அவ்விடயத்தில் யாராயிருந்தாலும் அவர்களுடன் பேசுவதற்குத் தான் தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை – ஐக்கிய இராச்சியத்துக்கிடையில் விசேட கலந்துரையாடல்

வர்த்தகம், முதலீடு மற்றும் உள்நாட்டு நல்லிணக்க செயன்முறை குறித்து இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய அமைச்சருக்கிடையில் விசேடகலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் தெற்காசியா, ஐக்கிய நாடுகள், பொதுநலவாய நாடுகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின்இராஜாங்க அமைச்சர் விம்பிள்டனின் பிரபு அஹ்மத் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் இந்த கலந்துரையாடல்இடம்பெற்றுள்ளது.

வர்த்தகம், துறைமுக நகரம் மற்றும் ஏனைய இடங்களில் காணப்படுகின்ற முதலீட்டு வாய்ப்புக்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போதுகலந்துரையாடப்பட்டதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோயால் தடைகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும், உள்நாட்டு நிறுவனங்களால் பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள கணிசமானமுன்னேற்றங்கள் குறித்து அஹ்மத் பிரபுவுக்கு அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விரிவாக விளக்கினார்.

வசதியான காலப்பகுதியில் விரைவில் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு அமைச்சர் பீரிஸ் விடுத்த அழைப்பை அஹ்மத் பிரபு  ஏற்றுக்கொண்டதாகவும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

Share

Posted in Uncategorized

நாட்டின் சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் இந்த அரசாங்கமே வெல்லும் – பா.உ. உதயகுமார்

நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டி வைத்தால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

மலையகத்தின் மாற்றம் என்பது கல்வியில் தங்கியுள்ளது அதனால் எமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி குறித்து நாம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம் குறிப்பாக அவர்களுக்கான ஆரம்பக்கல்வியை முறையானதாக அமைய வேண்டும் அதற்கு தேவையான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பு.

அதனால் நாங்கள் சிரமம் பாராது தனிப்பட்ட முறையில் எனும் முடிந்தளவு எமது மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான உதவிகளை செய்து வருகிறோம். அதில் ஒரு அங்கமாகவே இன்று இந்த அறநெறி பாடசாலை கட்டிடம் திறந்து வைக்கப்படுகிறது இந்த அறநெறி பாடசாலை என் கட்டிடத்தின் ஊடாக மாணவர்கள் முடிந்தளவு நலம்பெற வேண்டும் என்பதோடு இந்த கட்டிடத்தின் உடைய செயற்பாடுகள் சிறந்த முறையில் இடம்பெற வேண்டும் என நான் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கல்வி அபிவிருத்தி எனும் போது ஆசிரியர்கள் அதிபர்கள் தவிர்க்க முடியாதவர்களாக இருக்கின்றனர் மாணவர்களுக்கு நல்ல கல்வியை வழங்குவதற்கு முதலில் அவர்களுக்கு கல்வியைப் புகட்டும் ஆசிரியர்களின் மனங்களை நாங்கள் திருப்திப்படுத்த வேண்டும்.

அதனால் இந்த அரசாங்கம் உடனடியாக ஆசிரியை அதிபர்களின் உடைய சம்பள முரண்பாடு பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். வரவு செலவுத் திட்டத்தில் தீர்வு காண்பதாக அறிவித்துள்ள போதிலும் ஆசிரியர்கள் அதிபர்கள் அதன் மீது நம்பிக்கை கொள்ளவில்லை அதற்கு காரணம் இந்த அரசாங்கம் சொன்ன எதையுமே செய்யவில்லை என்பதாகும் தேர்தல் காலத்தில் கூறியதுபோல அல்ல இந்த அரசாங்கத்தினுடைய செயற்பாடுகள் அனைத்தும் வாக்குறுதிகளுக்கு அப்பாற்பட்டு முற்றுமுழுதாக நாட்டுக்கு எதிரானதாக அமைந்துள்ளது.

நாட்டினுடைய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்று பெறுமதிமிக்க சொத்துக்களை வெளிநாட்டுக்கு விற்பனை செய்யும் திட்டத்தில் இறங்கியுள்ளனர். கொழும்பு துறைமுகத்தில் அதேபோன்று கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தில் கொழும்பு துறைமுகத்தை அண்டியுள்ள முக்கிய இடங்களில் அரசாங்கம் கை வைத்துள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து செய்துள்ள மிகப்பெரிய சாதனை என்னவென்றால் நாட்டினுடைய பெறுமதியான சொத்துக்களை வெளிநாட்டிற்கு விற்பதாகும். சொத்துக்களை விற்பனை செய்யும் போட்டி ஒன்று வைத்தால் இந்த அரசாங்கத்தை யாராலும் நெருங்க முடியாது. அதற்காக வழங்கப்படும் அனைத்து பரிசுகளையும் இந்த அரசாங்கமே தட்டிச் செல்லும் அந்த அளவு சொத்துக்களை விற்பதில் பெயர் போன அரசாங்கமாக இது மாறியுள்ளது.

அதேபோன்று அமைச்சுப்பதவி எடுத்து எவ்வித வேலைகளும் செய்யாமல் வெறும் வாய்ச்சொல்லில் மாத்திரம் அமைச்சு எது என்பதை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கினால் நிச்சயமாக அது மலையகத்திற்கு வந்து சேரும். காரணம் ராஜாங்க அமைச்சு ஒன்றை பெற்றுக் கொண்டு அப்படி ஒரு அமைச்சு இருக்கிறதா இல்லையா என்பது கூட தெரியாத அளவு மலையகத்தில் வேலைத்திட்டங்கள் மந்தகதியில் சென்று கொண்டிருக்கின்றன என பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.

டீசல் கிடைக்காவிடின் முடக்கம் நீடிக்கும் – ரணில் விக்கிரமசிங்க 

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் இலங்கையால் கோரப்பட்ட டீசல் கிடைக்கவில்லை என்றால், ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையால் டீசலுக்கு பணம் கொடுக்க முடியாததால், நாட்டை திறப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அறிந்ததாகக் கூறிய அவர், அரசாங்கம் ஏற்கெனவே டீசலுக்கு பணம் செலுத்திதால் நாட்டிற்கு டீசல் வருவதாகக் கேள்விப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒக்டோபர் 1 க்குள் டீசல் வரவில்லை என்றால், அரசாங்கம் முடக்கத்தை நீட்டிக்க வேண்டியிருக்கும் என்றும் முன்னாள் பிரதமர் குறிப்பிட்டார்

சர்வதேச வர்த்தக சபையுடன் ஒன்லைன் கலந்துரையாடலில் பங்கேற்ற போதே முன்னாள் பிரதமர் இதனை தெரிவித்தார்.

ஊடக அறிக்கையின்படி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரிடம் கடன் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை வழங்குமாறு கோரியுள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் பொதுவாக அவ்வாறு செய்யாவிட்டாலும், இலங்கை வெளியுறவு அமைச்சரின் கோரிக்கை நிறைவேறும் என்று நம்புவதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

குழந்தைகள் பிறந்தவுடனேயே அடையாள அட்டை

இலங்கையில் குழந்தைகள் பிறந்தவுடனேயே அவர்களுக்கான அடையாள அட்டை இலக்கத்தை விநியோகிப்பது அவசியம் என, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சிறுவர் உரிமை மற்றும் சமூக பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்த யோசனையை முன்வைப்பதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசியை வழங்குவது தொடர்பாக சுகாதார சேவை பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தொழிநுட்ப குழு கூட்டத்திலேயே இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயத்தை செயற்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

Posted in Uncategorized