அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், அத்தியாவசியச் சேவைகளைப் பேணுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும் ஒருங்கிணைப்பது அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்  என்று ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில்,

நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை மொத்தமாக பதுக்கி வைத்தல், அதிக விலையைஅறவிடல் மூலம், நுகர்வோருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய சந்தை முறைகேடுகளைத் தடுக்க, பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆவது பிரிவின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், அக்கட்டளைச் சட்டத்தின் iiஆம் பிரிவின் ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, 5ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம்தயாரிக்கப்பட்ட அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் தொடர்புடைய அவசரகாலச் சட்ட விதிமுறைகள், வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த வகையில், பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், அத்தியாவசியச்சேவைகளைப் பேணுவது தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நடைமுறைப்படுத்துவது மற்றும்ஒருங்கிணைப்பது, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் கடமையாகும்.

இந்த உத்தரவின் கீழ், தங்கள் கடமைகளைச் செய்யத் தேவையான பிரதி ஆணையாளர்கள் அல்லது உதவிஆணையாளர்களை, அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளரினால் நியமிக்க முடியும்.

அத்தியாவசியச் சேவைகள் பேணப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரிவு 5இன் உத்தரவின் கீழ் நியமிக்கப்பட்டஎந்தவொரு தகுதிவாய்ந்த அதிகாரிக்கும், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் உத்தரவுபிறப்பிக்கலாம். இவ்வாறு வழங்கப்படும் அனைத்து உத்தரவுகளுக்கும் இணங்கிச் செயற்படுவது, உரிய அதிகாரியின், பதவி வகிப்பவரின் அல்லது ஒருங்கிணைப்பு அதிகாரியின் கடமையாகும்.

அந்த வகையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணும் வகையில், நெல், அரிசி, சீனிஉள்ளிட்ட ஏனைய நுகர்வுப் பொருட்களின் விநியோகத்தை ஒருங்கிணைப்புச் செய்வதற்காக, அத்தியாவசியச்சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு ஜனாதிபதி அதிகாரம் அளித்துள்ளார்.

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் மாவட்டச் செயலாளர்களுக்குப் பணிப்புரை வழங்கமுடியாது என்று கூறி மக்களைப் பிழையாக வழிநடத்தும் வகையில், எதிர்க் கட்சியினரால் நேற்றைய (06) பாராளுமன்ற அமர்வின் போது கருத்து வெளியிட்டமை தவறாகும்.

பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 5ஆவது பிரிவின் பிரகாரம், மாவட்டச் செயலாளர்கள் மற்றும்பிரதேசச் செயலாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கும் முழுமையான அதிகாரம், அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உள்ளதென, ஜனாதிபதியின் செயலாளர்சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in Uncategorized

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீது கல்வீச்சு

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஒன்டாரியோ பிராந்தியத்தில் தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது ஆர்ப்பாட்டக்காரர்களால் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவில் எதிர்வரும் 20ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்காக அவர் தனது பிரசார பஸ்ஸில் திரும்பிக் கொண்டிருந்தபோதே இக் கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இராஜாங்க அமைச்சர் கப்ரால் இராஜினாமா?

நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தன்னுடைய இராஜாங்க அமைச்சுப் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்யவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன் பின்னர், மத்திய வங்கியின் ஆளுநராக அவர், மீண்டும் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகி, பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் யோசித ராஜபக்‌ஷவுக்கு வழங்கப் போகிறீர்களாமே என்கிற எதிர்க்கட்சியின் கேள்விக்கு, நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் பதிலளிக்க மறுத்துள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (07) அமர்வில் கலந்துக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்  சமன் பிரியந்த ஹேரத், “நிதி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து  விலகுவதற்கு நீங்கள் தீர்மானித்துள்ளதாகவும் உங்களுக்கு வேறு ஒரு உயர்  பதவி காத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையா?“ என்றார்.

எனினும், இடையீட்டு கேள்வியானது, தான் பதிலளித்த கேள்வியுடன் தொடர்புப்படாத  கேள்வியாகும் எனக் கூறிய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், இராஜினாமா தொடர்பான கேள்விக்கு  பதிலளிக்க மறுத்துவிட்டார்.

மக்களின் உரிமைகளை அடக்கும் எந்த விடயங்களும்  இல்லை – அலிசப்ரி

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டஅவசரகால சட்டத்தில் எதிர்க்கட்சியினர் தெரிவிப்பதுபோல் மக்களின் அடிப்படை உரிமைகளை அடக்கும் விடயங்கள் எதுவும் இல்லை என நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் அறிவிப்பின் முதலாவது பகுதியில் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தால் அவற்றை கைப்பற்றி நியாயமான விலைக்கு விற்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பாவனையாளர்கள் தான் நன்மை அடைவர். இதனை பயன்படுத்தி எவ்வாறு வேறு நோக்கங்களை நிறைவேற்ற முடியும்.

ஆனால் உத்தரவாத விலையை நிர்ணயித்து அதிக விலைக்கு விற்றால் வழக்கு தொடர மட்டுமே இதனால் முடியும். ஆனால் நடைமுறையில் இருக்கும் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது.

நாட்டின் மொத்த உள்நாட்டு தேவையில் 18 வீதம் தான் இங்கு உற்பத்தியாகிறது. 82 வீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. அதனை வியாபாரிகள் பயன்படுத்தி மக்களை சூறையாடுகின்றனர். இதனை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுத்தார் என்றார்.

அசாத் சாலியை விடுதலை செய்யமாறு நீதிமன்றில் கோரிக்கை

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அல்லது ஐ.சி.சி.பி.ஆர். எனும் சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் எந்த சாட்சியங்களும் இல்லாததால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என நீதிமன்றில் கோரப்பட்டுள்ளது.

அசாத் சலி விவகார வழக்கு விசாரணைகள், இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிவானின் உத்தியோகபூர்வ அறையில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இதன்போது அசாத் சாலி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன சி.ஐ.டி. முன்னெடுத்த விசாரணைகளின் தொகுப்பு மன்றில் முன் வைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் அசாத் சாலிக்கு எதிராக எந்த சான்றுகளும் இல்லை எனவே அசாத் சாலியை விடுவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சி.ஐ.டி. அதிகாரிகள், இந்த விடயம் தொடர்பில் சட்ட மா அதிபரின் நிலைப்பாட்டை அறிந்துகொள்ளவும், அத்திணைக்களத்தின் உதவியை பெறவும் கால அவகசம் வேண்டும் என கோரியுள்ளனர்.

அதன்படி அதற்கான கல அவகாசத்தை அளித்துள்ள நீதிமன்றம் எதிர்வரும் 13 ஆம் திகதி இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்கவுள்ளது.

Posted in Uncategorized

மறவன்புலவு சச்சிதானந்தத்திடம் நினைவுத்தூபி குறித்து விசாரணை

யாழ்ப்பாணம் மறவன்புலவு பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டோர் நினைவாக நினைவுத்தூபி ஒன்று அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அதனை அமைத்த தன்னிடம் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

கல்வெட்டுக்களுடன் நினைவுத் தூபி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு சென்ற பொலிஸார் தன்னை விசாரணைக்கு உட்படுத்தியதாகவும், ஈழம் என்றால்என்ன ? என்று அவர்கள் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நிறைவேறியது அவசரகாலச் சட்டம்

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நிறைவேற்றப்பட்டது.
அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அவசரகால சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை முழுநாள் விவாதமாக முற்பகல் 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்)  தவிசாளார் நிரோஷ்க்கு கொவிட் தொற்று உறுதி

ரெலோ யாழ் மாவட்ட பொறுப்பாளரும் வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இச் சோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் குடும்பத்துடன் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அதிகாரப் பேராசையில் ஜனாதிபதி – ஜே.வி.பி.

நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனைத்துறை சார் அதிகாரத்தை மிகவும் சூட்சமமான முறையில் செயற்படுத்துகிறார் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் , பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டுமாயின் அவர் நுகர்வோர் பாதுகாப்பு உரிமை சட்டத்தையும், பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 17 ஆவது அத்தியாயத்தையும் அமுல்படுத்தியிருக்கலாம்.
ஆனால் அதனை விடுத்து பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 5 ஆம் அத்தியாயத்தை ஜனாதிபதி தெரிவு செய்துள்ளமை அவரது அதிகார பேராசையை வெளிப்படுத்தியுள்ளது.
ஆகவே நாளை பாராளுமன்றில் சமர்பிக்கப்படும் அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களிப்போம். அரசியல்வாதிகள் அரச வரபிரசாதங்களுக்க துணைபோகாமல் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும்

Posted in Uncategorized

கொரோனாவால் மரணிப்பவர்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய மேலும் இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனாவால் மரணிப்பவர்களின் சடலங்கள் ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அங்கு அதற்காக ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பு முடிவடைந்தது.
இந்நிலையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு பொருத்தமான காணிகள் தொடர்பாக சுகாதார அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. இது தொடர்பில் தகவல்களை வழங்குமாறு பிரதேச செயலாளர்கள், சுகாதார அதிகாரிகள் உள்ளிட்டோருக்கும் அமைச்சினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் சடலங்களை அடக்கம் செய்யக்கூடிய காணிகள் தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. எனினும், அந்த காணிகளை பயன்படுத்துவதற்கான இறுதி அனுமதி இதுவரை கிடைக்கவில்லை எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.அத்தோடு, இதுவரை 2,500 க்கும் அதிகமானவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு, ஓட்டமாவடி பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே சடலங்களை அடக்கம் செய்வதற்கு அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பகுதியில் புதிய இடம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி கடந்த மாதம் கூறியிருந்தார்.
குறித்த பகுதியில் 2400 சடலங்களை அடக்கம் செய்ய முடியுமான விதத்தில் 3 ஏக்கர் காணி அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.