யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வருக்கு எதிராக உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வர் மணிவண்ணனுக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர்களான ரஜீவ்காந், கிருபாகரன் ஆகிய இருவரும் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

சபையின் உறுப்பினரான ரஜீவ்காந்தின் வட்டார அபிவிருத்தி நிதியை நிறுத்தி வைத்திருக்கும் முதல்வரின் செயற்பாட்டைக் கண்டித்து இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதல்வர், திட்டமிட்ட வகையில் அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் தாம் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட பல தரப்பினரிடமும் முறையிட்டு உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தமக்கான நீதி கிடைக்காவிட்டால் இப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் : நெளபர் மெளலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக வழக்கு

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களின் பிரதான சம்பவங்கள் தொடர்பில் 25 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள இந்த குற்றப் பத்திரிகையில், நெளபர் மெளலவி, சாஜித் மெளலவி, மொஹம்மட் மில்ஹான், சாதிக் அப்துல்லாஹ், கபூர் மாமா எனும் ஆதம் லெப்பை, மொஹம்மட் சம்சுதீன், மொஹம்மட் ரிஸ்வான் உள்ளிட்ட பிரதிவாதிகள் அடங்குவதாக அறிய முடிகின்றது.

23 ஆயிரத்து 270 குற்றச்சாட்டுக்களின் கீழ் பயங்கரவாத தடை சட்டத்தின் விதி விதானங்களின் பிரகாரம் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை விசாரிக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்குமாறு சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம் கோரியுள்ளார்.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி 8 தொடர் குண்­டு­வெ­டிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கின.

கரையோர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­லயம், நீர்­கொ­ழும்பு, கட்­டான பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட கட்­டு­வாப்பிட்டி – புனித செபஸ்­டியன் தேவா­லயம், மட்­டக்­க­ளப்பு புனித சீயோன் தேவா­லயம் ஆகி­ய கிறிஸ்­தவ தேவா­ல­யங்­க­ளும் கொழும்பு காலி முகத்­தி­ட­லுக்கு சமீ­ப­மா­க­வுள்ள ஷங்­கி­ரில்லா, சினமன் கிராண்ட், கிங்ஸ்­பெரி ஆகிய ஐந்து நட்­சத்­திர ஹோட்­டல்­க­ளிலும் குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன.

இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்களால், 30 வெளிநாட்டவர்கள் உட்பட 268 பேர் கொல்லப்பட்டதுடன், 27 வெளிநாட்டவர்கள் உட்பட 594 பேர் காயமடைந்தனர்.

இந் நிலையிலேயே இந்த பிரதான 8 குண்டுவெடிப்புகள் தொடர்பிலும் பிரதிவாதிகள் 25 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் நீடிப்பு

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பிலுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று (10) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

திட்டமிட்டபடி பாடசாலைகளை திறப்பதில் சாத்தியமில்லை – கல்வியமைச்சர்

முன்னர் திட்டமிட்டபடி செப்டம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

இதேவேளை தடுப்பூசி திட்டத்துடன் இணைந்து பாடசாலைகளை மீண்டும் திறக்க அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக ஆகஸ்ட் இறுதிக்குள் பாடசாலைகளில் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு தடுப்பூசியின் இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டு, செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை மீண்டும் திக்க முடியும் என்று கல்வியமைச்சு நம்பிக்கை கொண்டிருந்தது.

எனினும் தற்போது நிலவும் கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக, திட்டமிட்டபடி பாடசாலைகளை மீண்டும் திறக்க முடியாது என்று அமைச்சர் பீரிஸ் கூறினார்.

எனவே மாணவர்கள் பாடத்திட்டத்தை மேற்கொள்ள ஆன்லைன் கல்வி முறையை சார்ந்திருக்க வேண்டும். ஆன்லைன் கல்வி நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகுவது பழிவாங்கும் செயலாக கருதப்பட வேண்டும்.

அரசாங்கமும் நாடும் சுகாதார அவசர நிலையை எதிர்கொள்ளும் நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தினால் அச்சத்தில் வாழும் வவுனியா மக்கள்

வவுனியா- மதவுவைத்தகுளம் பகுதியில் மர்ம மனிதர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த இரண்டு வாரங்களாக அடையாளம் காண முடியாத வகையில், உடம்பு முழுவதுமாக நிறப்பூச்சுக்களை பூசிக்கொண்டு நிர்வாணமாக, பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை இலக்கு வைத்தும், குடும்பத்தலைவர் வீட்டில் இல்லாத நேரங்களில் வீடுகளில் புகுந்தும், வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களிடம் தகாதமுறையில் நடந்துகாெள்ள முற்பட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனால் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக மதவுவைத்தகுளம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக வன்னி பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடந்த வியாழக்கிழமை முறைப்பாடு பதிவு செய்தும், அவர்கள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மர்மமனிதர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் குறித்த பிரதேச மக்கள் நிம்மதியாக இரவு நேரங்களில் இருக்க முடியாது எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

கொரோனா மரணங்கள் குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு

நேற்றைய தினம் (08) நாட்டில் மேலும் 94 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,205 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 331,922 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,518 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

வவுனியா மாவட்ட முன்னாள் அரசியல் பொறுப்பாளர் உதயன்க்கு கண்ணீர் அஞ்சலிகள்

உதயன் முன்னாள் வவுனியா மாவட்ட அரசியல் பொறுப்பாளர் 1988 PLOT இயக்கத்தினால் கொழும்பில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

வவுனியா நொச்சிமோட்டை பிறப்பிடமாகக் கொண்டவர்.

அன்னையின் மடியில்: 1958.11 .19
மரணம். 1988.08.08

ஆரம்ப காலகட்டத்தில் ஈரோஸ் இயக்கம் மூலம் விடுதலைப் போராட்டதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த காலத்தில் அங்கிருந்த ரெலோ தோழர்களுடன் ஏற்பட்ட நட்பு அவரை ரெலோ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொள்ள தூண்டுதலாக அமைந்தது.

பின்னர் ஏற்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்திற்கு பின் அரசியல் கைதிகளின் விடுதலையில் இவரும் ஒருவராக விடுவிக்கப்பட்டு வன்னி மாவட்ட அரசியல் பொறுப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

புளட் இயக்கத்தில் இருந்த சிலருக்கும், ரெலோ இயக்கத்தில் இருந்த
சிலருக்கும் ,சிறையில் இருந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான கருத்து முரண்பாடுகள் !!!!இவர்கள் விடுதலை ஆன பின்பும் வவுனியா மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்றது.

1988 காலப்பகுதிகளில் வவுனியா மாவட்டத்தில் பிளாட் இயக்கத்திற்கும், ரெலோ இயக்கத்திற்கும் இடையில் தவிர்க்க முடியாத சில ஆயுத மோதல்கள் ஏற்பட்டன.

இதில் இரண்டு பகுதிகளும் சிலர் கொல்லப்பட்டார்கள்.

இந்த கசப்பான ”’அனுபவங்கள் எம்மை காயப்படுத்தினாலும் ,”காலத்தின் சூழ்நிலைக்கேற்ப எம்மை மாற்றிக்கொள்ள வேண்டியதேவை.

ஆயுத மோதல்களில் இடுபட்ட முக்கியமானவர்கள் காலப்போக்கில் இரண்டு இயக்கங்களையும் விட்டு வெளியேறிவிட்டார்கள், அதில் ஒரு சிலர் மரணித்தும் விட்டார்கள்.

இன்றைய PLOT அமைப்பின் தலைவர்
தர்மலிங்கம் சித்தார்த்தர். மற்றும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிட்டு மக்களின் விடுதலைக்காக கைகோர்த்து வேலை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

குரோத எண்ணங்கள், பழிவாங்கும் படலங்கள் எம்மக்களின் உரிமைப் போராட்டத்தை சிதைத்துவிடும்.

மரணத்தின் வலி என்பது எப்போதும் மறக்க முடியாத ஒன்றுதான்.

நாம் சிந்தித்து செயலாற்றி இருந்தால் இன்று பல மரணங்களை தவிர்த்து எமது விடுதலையை வென்று இருக்கலாம்.

நன்றி

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் சுவிஸ் கிளை.

Posted in Uncategorized

ஜெனிவா கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே கவனத்தில் கொள்ளப்படவுள்ள இலங்கை விவகாரம்..!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் முதல் நாளில் இலங்கை குறித்து கவனத்தில் கொள்ளப்பட உள்ளது. மேலும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தர சிறப்புரிமைகள் கொண்ட அமைப்புகளுக்கு கருத்து தெரிவிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அதேவேளை, பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 48 வது கூட்டத் தொடர் செப்டெம்பர் 13 திகதி ஆரம்பிக்கப்பட உள்ளது. அன்றைய நிகழ்சி நிரலில் இலங்கை உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட் அமர்வின் போது இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பை முன்வைக்க உள்ளார்.

இலங்கை கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ள மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பச்சலெட், 30/1 தீர்மானத்திலிருந்து விலகியமை உள்ளிட்ட பல நடவடிக்கைகளினால் இலங்கை முழு அளவில் பொறுப்புக்கூறலுக்கான கதவுகளை அடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு சீ.ஐ.டிக்கு மாறுகிறது

மட்டக்களப்பில் பொதுமகன் மீது துப்பாக்கி சூடு நடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய்பாதுகாவலரது வழக்கு விசாரணையை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றுவது தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார், மன்றுக்கு அறிவித்தனர்.

இந்த வழக்கு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இன்று (09) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழக்கை சி.ஜ.டிக்கு மாற்றுவதற்கான அதிகாரம் இல்லாத காரணத்தால் பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்த பொலிஸார், அது தொடர்பான அறிக்கையை மன்றில் சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து குறித்த மெய்பாதுகாவலரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கடந்த அமர்வில் பொலிஸாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான சட்டதரணிகள், நீதின்றில் விண்ணப்பித்திருந்தனர்.

அதனையடுத்து, குறித்த வழக்கினை மீளப்பெற்று வேறு தகுந்த நம்பகரமான விசாரணைப் பிரிவுக்கு வழங்குமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த நிலையிலேயே இன்றைய அமர்வில் மேற்குறித்த விடயம் அறிவிக்கப்பட்டது.

மட்டக்களப்பில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் இல்லத்துக்கு முன்னால் வைத்து அவரது மெய்பாதுகாவலரால் பொதுமகனொருவர் கடந்த ஜன் 21ஆம் திகதி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 4 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட 04 சந்தேகநபர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்து வந்த 16 வயதான சிறுமியின் மரணம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவர்களின் விளக்கமறியல் காலத்தை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரியவந்துள்ளது.