தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் தளர்வு – புதிய அறிவிப்பு வெளியானது

தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை இன்று (சனிக்கிழமை) முதல் மேலும் தளர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் 14 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது மற்றும் அனுமதிக்கப்பட்ட பொது நடவடிக்கைகள் குறித்த புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியாகியுள்ளது.

அதிகபட்சம் 150 பேருடன் திருமண நிகழ்வை நடத்தவும் 50 பேருடன் 24 மணித்தியாலங்களுக்குள் இறுதி கிரியைகளை நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வழிபட்டு தலங்களை திறப்பதற்கும் மாநாடுகள் / கருத்தரங்குகள் என்பனவற்றை 50 இருக்கைகளுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ

ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார்.

நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கட்சியை மனதில் வைத்தே நாட்டு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடனான அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் தெரிவு செய்துள்ளார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே அர்த்தமற்ற இந்த ஆர்ப்பாட்டங்கள் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பசில் ராஜபக்ஷ எதிரணியிடம் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்- சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்

இலங்கையில் அமைதியாக முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தும் சட்டம் பிரயோகிக்கப் பட்டிருப்பதானது, கருத்து சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன் படுத்துவதை வெளிப்படுத்தி இருக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

பொது மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் போராட்டங்கள், பொதுக் கூட்டங்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாட்டில் பல இடங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு போராட்டங்களை நடத்துபவர்களை கைது செய்யும் காவல் துறையினர், நீதி மன்றம் அவர்களை பிணையில் செல்ல அனுமதித்தாலும், அந்த உத்தரவை மீறி தனிமைப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப் படுவது இலங்கை அரசாங்கம் கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துவதற்கு இந்த கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை ஓர் கருவியாகப் பயன்படுத்தப் படுவதை வெளிப்படுத்தி இருக்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபை சாடியுள்ளது.

COVID செலவுகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் கடன்

ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்படும் COVID தடுப்பூசி ஏற்றும் திட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய செலவுகளுக்காக இந்த கடன் பெறப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.

இதனடிப்படையில், ஆசிய அபிவிருத்தி வங்கியும் (ADB) நிதி அமைச்சும் கடன் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் நேற்று கைச்சாத்திட்டுள்ளன.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சி மொட்டை கைவிடுகிறது

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பிரதான பங்காளிகளின் ஒன்றான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது தொடர்பில் கலந்தாலோசித்து வருகிறதென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய பங்காளிகளில், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோருக்கும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில், அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை ஓரங்கட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக, சுதந்திரக் கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனிடையே, இளம் உறுப்பினர்களுக்கு இடமளிக்கும் வகையில், முழுமையான அமைச்சரவை மாற்றமொன்றை விரைவில் மேற்கொள்வதற்கு அரசாங்கம் கலந்தாலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த மாற்றத்தின் போது, தாமரை மொட்டுவைச் சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கத்தை அமைச்சரவைக்குள் அதிகரித்துக் கொள்ளும் வகையிலேயே மாற்றங்கள் செய்யப்படும் எனவும், கையை சின்னமாகக் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் ஓரங்கட்டப்படக் கூடுமெனவும் உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், அவ்வாறு ஓரம் கட்டப்படுவதற்கு முன்னர், தாங்களாகவே அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வதே உசித்தமானதாக இருக்குமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் கதைகள் அடிபடுகின்றனவென அறியமுடிகின்றது.

அதனோர் அங்கமாகவே, கட்சியின் தலைமை தன்னை விலகுமாறு கேட்டால், கட்சியின் மத்தியக்குழு விலகவேண்டுமென தீர்மானித்தால், தன்னுடைய பதவியை எந்நேரத்தில் துறப்பதற்குத் தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவையும் ஆட்சியதிகாரத்துக்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியே பெரும்பாடுபட்டது என்பதை நினைவுப்படுத்திய தயாசிறி ஜயசேகர, பழையவற்றை மறந்துவிடக்கூடாது என்றார்.

இதனடிடையே, கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில், சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக்கூட்டம் நேற்று முன்தினம் (08) கட்சியின் தலைமையகத்தில் கூடியது.

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நிலைமைகளின் அடிப்படையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இருக்கவேண்டுமா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலக வேண்டுமென மத்தியக் குழு உறுப்பினர்கள் பலரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், நெருக்கடியான நிலைமையில், தேர்தலொன்று இல்லாத சூழ்நிலையில், அரசாங்கத்திலிருந்து விலகவும் உசிதமானதல்ல என மற்றுமொரு பிரிவினர் எடுத்துரைத்துள்ளனர்.

எவ்வாறான நிலைமைகள் ஏற்படினும், கட்சியைப் பலப்படுத்தி, மக்களிடத்தில் செல்லவேண்டுமென சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதற்கிடையே, கடமைகளையும் பொறுப்புகளையும் முறையாக முன்னெடுக்காத அமைச்சர்களை, அவ்வமைச்சிலிருந்து நீக்கிவிட்டு புதிய முகங்களுக்கு அதுவும் இளம் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.

குறுகிய காலப்பகுதியில் திறமைகளை வெளிப்படுத்திய, முன்னேற்றத்தை காண்பித்த இராஜாங்க அல்லது பிரதியமைச்சர்களுக்கு இதன்போது முன்னுரிமை கொடுப்பது தொடர்பிலும் அரசாங்கம் ஆலோசித்துள்ளதாக அறியமுடிகின்றது.

அவ்வாறாதொரு நிலைமை ஏற்படுமாயின் அரசாங்கத்துடன் முட்டிமோடிதிக் கொண்டிருக்கும் பங்காளிகள், ஓரங்கட்டப்படக்கூடும் அல்லது பெயரளவில் ஏதாவது பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிதியமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னர், தன்னுடைய அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட பெசில் ராஜபக்‌ஷ, “கசப்பான தீர்மானங்களை எடுப்பேன்” என பகிரங்கமாக அறிவித்துள்ளார். ஆகையால், அரசாங்கத்துக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகளை களையும் வகையிலும் தீர்மானங்கள் எதிர்காலத்தில் எடுக்கப்படலாமென அறியமுடிகின்றது.

Posted in Uncategorized

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நிதி அமைச்சர் பதவியிலிருந்து மகிந்த விலக இணங்கினார்

அடுத்த சில வாரங்களில் அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச கவனம் செலுத்தி வருகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாடு முழுவதுமாக திறக்கப்படும்போது துரித அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் திறமை வாய்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்க வேண்டும் என ஜனாதிபதி விரும்புகின்றார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கான ஆதரவு குறைவடைந்துள்ளதையும் சில அமைச்சுகளின் செயற்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதையும் ஜனாதிபதி கருத்தில் எடுத்துள்ளார் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிறப்பாக செயற்படாத சிரேஸ்ட அமைச்சர்களின் பதவிகள் பறிபோகலாம் அல்லது முக்கியத்துவமற்ற பதவிகள் வழங்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நாமல்ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையே அமைச்சரவை மாற்றம் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் எதிர்பார்த்ததை விட குறுகிய காலத்தில் இது இடம்பெறும் என தெரிவித்துள்ளன.

நாமல் ராஜபக்சவை பிரதமராக நியமிக்கவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே பிரதமர் நிதிஅமைச்சர் பதவியிலிருந்து விலக இணங்கினார் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறி ரெலோ வலி கிழக்கு தவிசாளருக்கு அச்சுறுத்தல்

யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.20 மணிக்கு தவிசாளர் உத்தியோகபூர்வ வாகனத்தில் யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியின் பழைய தபால் கந்தோர் ஒழுங்கை ஊடாக பயணித்த போது, மத்திய மாகாண இலக்கத்தகடு கொண்ட செய்யப்பட்டுள்ள செகுசு பிக்கப் (CP PP – 0595) வாகனத்தில் ஒரு குழுவினர் எச்சரித்தவாறு தவிசாளரின் வாகனத்தை முந்திச் சென்றுள்ளனர்.

முந்திச் சென்றவர்கள் முன்னர் தனியார் நெடுந்தூர பேருந்து தரிப்பிடமாக பாவிக்கப்பட்ட வளாகத்திற்குள் தவிசாளரின் வாகனம் நிறுத்தப்பட்டதுடன் அவ் வளாகத்திற்குள் நுழைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தவிசாளார் என்ன பிரச்சினை எனக்கேட்டபோது, அவர்கள் தூஷன வார்த்தைகளை உபயோகித்தவாறு தவிசாளரை நோக்கி வந்தனர்.

தவிசாளார் தொலைபேசியில் அவசர பொலிஸ் (119) இலக்கத்திற்கு முயற்சித்தபோது, தாம் அரசாங்கத்தின் ஆட்கள் எனக் கூறியவாறு தவிசாளரைத் தாக்குவதற்கு கட்டிட உடைவு கல் ஒன்றினை அக் குழுவில் வந்திருந்த ஒருவர் தூக்கி வீச எத்தனித்த போது அவ்விடத்தில் ஒருவரால் தடுக்கப்பட்டுள்ளார். மக்கள் ஒன்றுகூடியவுடன் தவிசாளார் அச்சுறுத்தியவர்களை படம் பிடித்தபோது தாழும் படம் பிடித்தவாறு விலகிச்சென்றனர்.

இந்நிலையில் இவ்விடத்தில் இருந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையம் சென்ற வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளார் தியாகராஜா நிரோஷ் அச்சுறுத்தியவர்களுக்கு எதிராக பொலிஸ் முறைப்பாட்டினைப் பதிவுசெய்துளளார். முறைப்பாட்டில் (CP PP – 0595) இலக்க வாகனத்தில் வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சுற்றிவர சி.சி.டிவி கமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடமென்றில் இவ் அச்சுறுத்தல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசுக்குள் பிளவு? – அளும் கட்சியிலிருந்து விலக தயாராகும் எம்.பி

அரசாங்க கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அடுத்த சில வாரங்களில் ஒரு சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராக எதிர்க்கட்சியில் அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான வாய்ப்பு உள்ளதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் விரிசல் தொடர்ந்து விரிவடைந்து வருவதை அடுத்து இந்த தகவல் வெளியாகியுள்ளது.

பசில் ராஜபக்r நாடாளுமன்றத்தில் பிரவேசித்தமைக்கும் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்கும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

அத்துடன் எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய விடயங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பிளவு ஏற்படுவதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொழும்பின் ஊடகம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு மீண்டும் எச்சரிக்கை விடுக்கும் பிரிட்டன்

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் தயாராக இருப்பதாகவும் பிரிட்டன் உறுதியளித்துள்ளது.

பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தினால் உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தின் நிலைவரம் தொடர்பில் வருடாந்தம் அறிக்கை வெளியிடப்படும். அந்தவகையில் குறித்த அலுவலகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட 2020 ஆம் ஆண்டிற்கான அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

இலங்கையின் மனித உரிமை நிலைவரங்களைப் பொறுத்தவரையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அது ஒட்டுமொத்தமாக மிகவும் மோசமடைந்திருந்தது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் இலங்கை அரசாங்கம் சுதந்திரமானதும் அமைதியானதுமான முறையில் பாராளுமன்றத்தேர்தலை நடத்தியதுடன், சர்வதேச நாடுகளில் பதிவான கொவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவானதாகவே காணப்பட்டது.

எதுஎவ்வாறெனினும் சிவில் சமூக அமைப்புக்களின் மீதான தொடர்ச்சியான கண்காணிப்பும் அடக்குமுறையும் காணப்பட்டது.

அதுமாத்திரமன்றி சில சமூகத்தினர் அவர்களது மதநம்பிக்கையின்படி உயிரிழந்த சடலங்களை அடக்கம் செய்வதற்கான உரிமைக்குத் தடைவிதிக்கப்பட்டதுடன் குற்றச்சாட்டுக்களின்றி நீண்டகாலம் தடுத்துவைக்கப்படும் சம்பவங்களும் அதிகரித்தன.

மேலும் போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்ததாக கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரின்போது போரின் பின்னரான நிலைமாறுகால நீதிப்பொறிமுறை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகிவற்றை உறுதிசெய்வது தொடர்பில் ஏற்கனவே இலங்கையினால் இணையனுசரனை வழங்கப்பட்டிருந்த 30/1, 34/1 மற்றும் 40/1 ஆகிய தீர்மானங்களிலிருந்து இலங்கை அரசாங்கம் விலகிக்கொண்டது. அதுமாத்திரமன்றி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்கு உள்ளகப்பொறிமுறையைக் கையாள்வதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த போதிலும், தற்போதுவரை அதில் எவ்வித முன்னேற்றங்களும் இல்லை.

எனினும் 2020 பெப்ரவரி, ஜுன் மற்றும் செப்டெம்பரில் ஆகிய மாதங்களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த நாடுகளின் சார்பில் பிரிட்டனால் (எம்மால்) வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான எமது நிலைப்பாட்டைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும் கடந்த 2000 ஆம் ஆண்டில் மிருசுவில் என்ற இடத்தில் ஒரு சிறுவர் உள்ளடங்கலாக 8 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2015 ஆம் ஆண்டில் மரணதண்டனை வழங்கப்பட்ட முன்னாள் இராணுவ உறுப்பினர் சுனில் ரத்நாயக்க கடந்த 2020 மார்ச் மாதம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்பட்டமையானது, இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறை மேலும் கேள்விக்கு உட்படுத்தியது. அ

துமாத்திரமன்றி போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியிருந்த சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரிகள் அரசநிர்வாகக் கட்டமைப்பின் முக்கிய பதவிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டதுடன் சிவில் நடவடிக்கைளை முன்னெடுக்கும் அரச சார்பற்ற கட்டமைப்புக்களின் செயலகங்கள் பலவும் பாதுகாப்பு அமைச்சின்கீழ்க் கொண்டுவரப்பட்டன.

அத்தோடு நீதிமன்றம் உள்ளிட்ட சுயாதீனக்கட்டமைப்புக்கள் பலவற்றுக்குமான உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின்கீழக் கொண்டுவரும் வகையிலான திருத்தங்களுடன் அரசாங்கத்தினால் கடந்த அக்டோபர் மாதத்தில் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. இது சில முக்கிய கட்டமைப்புக்களின் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதாக அமைந்தது.

பொதுத்தேர்தலை நடத்துவதற்காகக் ஜனாதிபதியினால் கடந்த மார்ச் மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட போதிலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகத் தேர்தல்கள் இருமுறை பிற்போடப்பட்டன. அமைதியான முறையிலும் ஜனநாயகத்தன்மையுடனும் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பொதுத்தேர்தல்கள் நடத்தப்பட்டாலும், பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்களும் பிற்போடப்பட்ட மார்ச் தொடக்கம் ஆகஸ்ட் வரையான காலப்பகுதியில் பாராளுமன்றத்தின் மேற்பார்வைக்குட்பட வேண்டிய பல விடயங்கள் தவறவிடப்பட்டன.

குறிப்பாக அக்காலப்பகுதியில் கொவிட் – 19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பாராளுமன்றத்தில் ஆராயப்படாமல் அரசாங்கத்தினால் சில விசேட ஜனாதிபதி செயலணிகள் அமைக்கப்பட்டன.

அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டல்களின்படி கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், தொற்றினால் உயிரிழக்கும் சடலங்கள் அனைத்தையும் கட்டாயமாகத் தகனம் செய்வது தொடர்பான தீர்மானத்தை 2020 மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்டது. இந்தப் பக்கச்சார்பான நடவடிக்கையானது முஸ்லிம் சமூகத்தையும் கத்தோலிக்க சமூகத்தைச் சேர்ந்த சிலரையும் வெகுவாகப் பாதிப்பது.

அரசாங்கத்தின் இத்தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கல் அனைத்தும் 2020 டிசம்பர் மாதத்தில் உயர்நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டது. மேலும் முஸ்லிம்கள் கொவிட் – 19 பரவல் தடுப்பு வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றுவதில்லை என்றும் அவர்களே வைரஸ் காவிகளாகத் தொழிற்பட்டு அதனைப் பரவச்செய்கின்றார்கள் என்றும் வெளியான பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க பேச்சுக்கள் மூலம் இக்காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு வெகுவாக அதிகரித்தது.

அத்தோடு அரசாங்கத்தின் கொவிட் – 19 வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் கருத்துவெளியிடுபவர்களைக் கைதுசெய்வது தொடர்பில் ஏப்ரல் மாதத்தில் பொலிஸாரால் விடுக்கப்பட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, இலங்கையில் கருத்துச்சுதந்திரத்தின் மீது அழுத்தம் பிரயோகிக்கப்படுவதாக ஜுன் மாதமளவில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் விசனம் வெளியிட்டார். நாடு முடக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் பாலியல் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு உதவுவதற்கு பிரிட்டன் (நாம்) முன்வந்திருந்ததுடன் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் எதிர்கொண்டிருக்கும் சவால்களை வெளிப்படுத்துவதற்கு ஏற்றவகையில் ஊடகங்களின் இயலுமையை விரிவுபடுத்துவதற்கும் உதவினோம்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் மீளாய்வு செய்யப்படும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத்தொடரின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் தொடர்ச்சியாகப் பயங்கரவாதத்தடைச்சட்டத்தைப் பயன்படுத்திவந்தது. மனித உரிமைகள் சட்டத்தரணியான ஹிஜாஸ் ஹிஸ்புல்லா 2020 ஏப்ரல் மாதம் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் இலங்கையின் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் எவ்வித குற்றச்சாட்டுக்களும் பதிவுசெய்யப்படாமல், நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.

மனிதஉரிமைகள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் இயங்கும் செயற்பாட்டாளர்கள், சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள், காணாமல்போனோரின் குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் மீதான கண்காணிப்பு, அடக்குமுறைகள் மற்றும் இணையவழித் தாக்குதல்கள் என்பன இக்காலப்பகுதியில் அதிகரித்தமையினை சர்வதேச மனித உரிமைக் குழுக்கள் அவதானித்துள்ளன.

கொவிட் – 19 வைரஸ் பரவலை மையப்படுத்தி கடந்த 2020 நவம்பர் மாதத்தில் மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் 11 கைதிகள் உயிரிழந்ததுடன் 150 இற்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதுகுறித்து விசாரணை செய்வதற்கென நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது, துப்பாக்கிச்சூட்டின் காரணமாகவே குறித்த கைதிகள் உயிரிழந்ததாகப் பதிவுசெய்தது. மேலும் அதிகரித்துவரும் பொலிஸ் காவலின் கீழான மரணங்கள் தொடர்பில் நவம்பர் மாதத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது பொலிஸ்மா அதிபருக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தது.

மேலும் 2021 ஆம் ஆண்டில் இலங்கையில் மனித உரிமைகள், பாலின சமத்துவம் மற்றும் சிறுபான்மையினத்தவரின் சுதந்திரம் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான அழுத்தங்களை பிரிட்டன் தொடர்ந்தும் வழங்கிவந்தது.

இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் சமூகக்குழுக்களின் வகிபாகங்களை வலுப்படுத்துவதற்கும் போரின் பின்னரான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்துவதற்கும் பிரிட்டன் தயாரக இருக்கின்றது என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கதிர்காமம் ஆடிவேல் திருவிழா ஆரம்பம்

வரலாற்று பிரசித்திபெற்ற கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா நாளை(சனிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.

நாளைய தினம் முதலாவது பெரஹர மூலம் வீதி உலா நடைபெறும் என கதிர்காம கோயிலின் பஸ்நாயக்க நிலமே டிஷன் குணசேகர தெரிவித்துள்ளார்.

இறுதி நாள் பெரஹர 23ஆம் திகதி இரவு வீதி உலா வரவுள்ளதாகவும் பெரஹராவின் சம்பிரதாய சடங்குகள் அனைத்தும் முறையாக நடைபெறும் எனக் கூறிய அவர் இம்முறை உற்சவம் மக்கள் பங்களிப்பின்றி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பெரஹராவில் யானைகள், நாட்டியங்கள் உள்ளிட்ட கலாசார அம்சங்கள் அனைத்தும் இடம்பெறும் எனவும் அவை சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 24 ஆம் திகதி நீர் வெட்டுடன் உற்சவம் பூர்த்தி அடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized