நல்லூரில் அரசடிப் பகுதி முடக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் நல்லூரில் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் அரசடிப் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 22 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், அந்தப் பகுதி மக்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

நல்லூர் ஜே/103 கிராம அலுவலகர் பிரிவில் உள்ள ஒரு பகுதியான குறித்த அரசடியைத் தனிமைப்படுத்துவதற்கு, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கொவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் இந்தக் கோரிக்கை இன்று காலை முன்வைக்கப்பட்டது.

இதன்படி, குறித்த பகுதியை மாலை ஆறு மணி முதல் தனிமைப்படுத்துவதற்கு சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 608 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

இதற்கமைய இன்று இதுவரையில் 2,845 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரை 177,712 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,363 ஆக அதிகரித்துள்ளது.

Posted in Uncategorized

Port City சீனாவிற்க்கு முட்டை இடும் தங்க வாத்து

இலங்கை முகாமிற்குள் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் மூலம் தலையை நுழைத்த சீன ஒட்டகம் இப்போது துறைமுக நகரத்தில் நிரந்தரப் படுக்கை அமைத்துவிட்டது. ராஜபக்சக்களுக்கும், சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் வாழ்த்துக்கள். இதை இவ்வளவு இலகுவில் சாத்தியமாக்கிய 69,000 சிங்கள மக்கள், சிங்கள, தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள், மதத் தலைவர்கள், முப்படைகள், இந்தியா, மேற்கு நாடுகள் அத்தனை பேருக்கும் அனுதாபம்.

இந்நாளுக்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னரே, இலங்கைக்கு வெளியே தீட்டப்பட்டது என்பதில் சந்தேகப்பட இடமில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பின் பின்னால், ராஜபக்சக்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என நம்பத் தேவையில்லை. நன்றாகத் திட்டமிட்டு, செவ்வனே முடிக்கப்பட்ட இத் திட்டத்திற்கான ஒட்டுமொத்தமான ‘ஸ்கிறிப்டும்’ இலங்கையில் எழுதப்படவில்லை. இதை நடைமுறைச் சாத்தியமாக்கியது மட்டுமே இலங்கை.

ராஜபக்சக்களின் மீளமர்த்தலுக்கு அப்பால் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வு, 20 வது திருத்தம். இப்படியொரு அரசியலமைப்பு திருத்தத்தை, அதுவும் சில நாட்களுக்குள் உருவாக்க, தற்போதுள்ள ராஜபக்ச முகாமில் எவருமில்லை. அது யாரால் உருவாக்கப்பட்டது என்பதை நீதியமைச்சர் அலி சப்றி பாராளுமன்றத்தில் கூற மறுத்துவிட்டிருந்தார். தற்போது வரையப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள துறைமுகநகரச் சட்ட வரைவு வெளிநாட்டு நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது என்கிறார்கள். இச் சட்டமூலத்தில் சுமார் இருபத்தைந்து அரசியலமைப்பு முரண்பாடுகள் இருக்கிறது என்பதைக்கூட, உலகப் புகழ் பெற்ற சட்டப் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ் கூட பார்க்கவில்லை என்றால் – do as you are told- கட்டளை அவ்வளவு பலமாக இருந்திருக்க வேண்டும் அல்லது முதுகெலும்புகள் அதி பலவீனமாக இருந்திருக்க வேண்டும்.

நிறைவேறி விட்டது. சீனாவில் பட்டாசுகள் வெடித்துக்கொண்டிருக்கும். விரைவில் துறைமுக நகரத்தில் சீனக் கொடி பட்டொளி வீசிப் பறக்கப் போகிறது. சீனம், சிங்களம், ஆங்கில மொழிகளில் வீதிப் பதாகைகள் பிரமாண்டமாக எழுப்பப்படப் போகின்றன. மதத் தலைவர்களைச் சமாதானமாக்க துறைமுகத்திலேயே அதி உயரமான புத்த விகாரையும், ஆயிரம் கால் புத்த கலாச்சார மண்டபமும் கண் விழித்து மூடுவதற்குள் நிர்மாணிக்கப்பட்டுவிடும்.

துறைமுக நகரத்தால் தமிழருக்கு நேரடியாக எந்தவித இலாப நட்டமுமில்லை. சிங்களவர்களைப் போலவே அவர்களும் அங்கு வெளிநாட்டுக்காரர் தான். 99 வருடங்களுக்குள் சீனர் இலங்கையின் இரண்டாவது பெரும்பான்மை இனமாக வந்துவிடுவர். அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சொர்க்கம் அவர்களுக்கு தங்கத் தட்டில் வைத்துப் பரிசளிக்கப்பட்டிருக்கிறது. அதன் பிரதியுபககாரமாக ராஜபக்ச பரம்பரையினருக்கு துறைமுக நகரத்தில் மாட மாளிகைகள் பரிசாகக் கிடைக்கலாம். ஒரு காலத்தில் (உயிரோடு இருந்தால்) ராஜபக்சக்கள் மக்களின் கல்லெறிகளிலிருந்து தப்பி வாழ அது அடைக்கலத்தையும் வழங்கலாம். ராஜபக்சக்களின் எடுபிடிகளுக்கு ஓரமாக நின்று தெரு வியாபாரம் செய்ய சீனா இடமொதுக்கிக் கொடுக்கலாம். அங்கு முக்கிய தெருவியாபாரிகள் சீனராகவே இருப்பர்.

கடந்த சில மாதங்களாக, குறிப்பாக 20 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி தனது சர்வ வல்லமையை மீளப்பெற்ற பின்னர், இராணுவத் தளபதிகளின் அமைதி ஒரு விடயத்தைச் சொல்கிறது. சிங்கள கடுந்தேசியவாதிகளின் இரைச்சல் பெரும்பாலும் இல்லையென்றாகிவிட்டது. மதத் தலைவர்கள் தாங்கள் விட்ட மகா தவறை நினைத்து மண்டையில் குத்திக்கொள்கிறார்கள்.

சிங்கராஜா வன அழிப்பை நேரில் சென்று பார்த்த பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்தின சொன்ன விடயம் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. அரசாங்கத்தின் சூழல் கட்டுப்பாடுகளையும் மீறி வன அழிப்பை ஏவி விடுவது அரசியல்வாதிகள் தான், என அவர் தனது இயலாமையை வெளிக்காட்டியிருந்தார். அதன் பிறகு அவரது வழமையான ‘தேசிய பாதுகாப்பு’ கர்ச்சிப்புகள் குறைந்துவிட்டன. காரணம் அக் குறிப்பிட்ட வன அழிப்பு, அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சீன தொழிற்பேட்டைக்கு நீர், மின் வழங்கலுக்காக இரண்டு பாரிய நீர்த் தேக்கங்களை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது. அவர் சிங்களத் தேசியவாதி, சீனத் தேசியவாதி அல்ல.

இதர விடயங்களில் போல, சீனா எவ்விடயத்தையும் கால தாமதப்படுத்துவதில்லை. அவர்களது தேவைகளை ராஜப்கசக்கள் துரிதமாகச் செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். துறைமுக நகரத்தில் இராணுவத்துக்கு எந்தவித அக்கறையுமில்லை; அதனால் இலாபமுமில்லை. மியன்மாரில் போல அதிகாரத்தைக் கைப்பற்றும் முனைப்புகள் அவர்களிடமில்லை. துறைமுக நகரம், அம்பாந்தோட்டை என சீன இராணுவம் குடிவந்த பின்னர் தான் அவர்கள் விழித்துக்கொள்வார்கள்.

துறைமுக நகரத்தை ஒரு துபாய், சிங்கப்பூர் எனப் படம் காட்டி ராஜபக்ச தரப்பு விற்றிருக்கிறது. இதில் கொள்ளை கொள்ளையாகப் பணம் சம்பாதிக்கப் போகிறவர்கள் ராஜபக்ச குடும்பத்தினர். அவர்கள் தமது இலக்கிலிருந்து மாறவில்லை. சேசெல்ஸ் போன்ற நாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளின் பணத்தையும், நாட்டை விற்றதற்காக சீனா கொடுத்த ‘கமிசன்’ பணத்தையும் பக்கத்தில் கொண்டுவந்து வைத்திர்ப்பதே அவர்களது திட்டம். அதில் அவர்கள் குடும்பமாக, சகோதரர்களாக வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

துறைமுக நகரம், மகாபாரதத்தில் வரும் ஒரு அரக்கு மாளிகை மட்டும்தான். அது தனவந்தரின் விளையாட்டுத் தளமாகவே இருக்கும். அது சகல தரப்பினரும் வந்து குடித்து, கூத்தியாடி, சூதாடிச் செல்ல களமமைத்துக் கொடுக்கும் சொர்க்கம். லொஸ் ஏஞ்சலிஸ் எப்படி அமைதியாக அரேபிய முடிக்குரியவர்களை அழைத்து அவர்களின் பணத்தைப் பிடுங்குகிறதோ அப்படியான ஒன்றாகவே இதுவும் இருக்குமென நம்பலாம். அங்குள்ள கண்ணாடி மாளிகைகளின் குடியிர்ப்பாளர்களில் பலர் கவர்ச்சியான சீன, கொரிய பெண்களாக இருக்கலாம். இங்கு கிடைக்கும் இலாபம் ராஜபக்சக்கள் சொல்வதைப் போலவோ அல்லது கூசா தூக்கும் கப்ரால், பீரிஸ் போன்றோர் சொல்வதைப் போலவோ இலங்கையின் பொருளாதாரத்துக்கு அள்ளிக் கொட்டும் என எதிர்பார்க்கத் தேவையில்லை.

துறைமுக நகரத்தின் நாணயம் சீனாவின் யுவானாக இருக்குமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. பின்னர் அது ‘டொலராக’ மாற்றப்பட்டது என்கிறார்கள். திருவாளர் ‘ஹிட்லர்’ அமுனுகம கூறியதைப் போல பசில் ராஜபக்ச ‘நாட்டின் நன்மைக்காகவே திடீரென அமெரிக்கா செல்ல வேண்டி வந்தது’ என்பது துறைமுக நகரத்தால் ‘பயப்பட எதுவுமில்லை’ என அமெரிக்காவைத் தாஜா பண்ணுவதற்காகவாக இருக்கலாம். எனவே அமெரிக்காவைக் குஷிப் படுத்த ஏதாவது விட்டுக்கொடுப்புகளுடன் அவர் நாடு திரும்பலாம்.

துறைமுக நகரத்தை ஒரு front ஆக மட்டுமே சீனா பாவிக்கும். அதன் நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும் அங்கு முதலீட்டாளர்களைக் கொண்டு வருவதற்கு அதை ஒரு ‘சிங்கப்பூராகக்’ காட்டியே ஆக வேண்டும். ஹொங்க் கொங் போல இறுக்கமாக அங்கு இருக்க முடியாது. கொழும்பு துறைமுக நகரம் சீனாவின் பொன் முட்டை தரும் வாத்து. அதை எப்படி வளர்த்துப் பெருக்குவதென்று சீனாவுக்குத் தெரியும். இவ் விடயத்தில் இந்தியாவின் வழமையான நெளிவுகளை (சுளிவுகள் அல்ல!!) அது தனக்குச் சாதகமாகப் பாவிக்கும். அதே வேளை சீனாவின் military-industrial complex அம்பாந்தோட்டை தான். அங்கு நீண்டகாலக் குடியிருப்பிற்கு சீனா தயாராகிவிட்டது. அதுதான் சீனாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த கோட்டை. அவுஸ்திரேலியாவில் இருக்கும் அமெரிக்காவின் இரகசிய பிரதேசமான அலிஸ் ஸ்பிறிங்ஸ் போலவே சீனாவுக்கு அம்பாந்தோட்டை என்பது மட்டும் இப்போதைக்குப் போதுமானது.

இந்தியா பல தடவைகளில் பல அணில்களை ஏறவிட்டுப் அண்ணாந்து பார்த்து வீணி வடித்திருக்கிறது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும்படி இலங்கை முதலில் இந்தியாவிடம் தான் கேட்டிருந்தது. இந்தியா அதற்கு இணக்கம் தெரிவிக்காமல், கிழக்கு கொள்கலன் முனையத்தில் மட்டும் தன் கண்களை வைத்திருந்து இறுதியில் அந்த அணிலும் ஏமாற்றிவிட்டது. இப்போது துறைமுக நகரத்தில் இவ்வளவும் நடக்கிறது ஆனால் அது கும்பமேளாவில் cowமியக் கோஷ்டிகளுக்குக் களமமைத்துக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. வாரணாசி உறுப்பினராகிவிட்ட மோடி வெண்தாடியுடன் தன்னை ஒரு சிவனாகவே நினைத்துப் பரவச நிலைக்குச் சென்றுவிட்டார். இலங்கை நிரந்தரமாகவே இந்தியாவின் கைகளிலிருந்து விடுபட்டுப் போய்க்கொண்டிருக்கிறது.

மேற்கு நாடுகளைப் பொறுத்த வரையில், பைடன் நிர்வாகம் பலத்த ஏமாற்றத்தைத் தருகிறது. உலகத்தில் அமெரிக்கா என்றொரு நாட்டை இறைவன் படைத்தது இஸ்ரேலைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே என அவர் தீர்க்கமாக நம்புகிறார். பாலஸ்தீனத்தில் எண்ணற்ற குழந்தைகள் கொல்லப்பட்ட்போது இரங்கமுடியாத இப் பிறவிக்கு விமோசனமில்லை. கைவிட்ட கேஸ். ஒபாமா காலத்தில் கோதாபயவுடன் ‘டீல்’ போட்டு தமிழர்களைக் கொன்றொழித்ததில் அவர் கைகளிலும் இரத்தக் கறையுண்டு. எனவே துறைமுக நகரத்தில் வானத்தைத் தொடும் ஒரு அழகான கண்ணாடி மாளிகையில் அமெரிக்காவின் கொடியொன்றையும் சீனா பறக்க விடும். அதோடு அவர் மனக்குளிர்ந்து விடுவார்.

இவையெல்லாவற்றுக்கும் மாறாக, எனக்கும் கனவு காண உரிமையுண்டு என்ற வகையில் – இந்தியாவிலும், அமெரிக்காவிலும் கொஞ்சம் முதுகெலும்புள்ள தலைமைகள் வந்தால், அவர்கள் துறைமுக நகரத்தின்மீது பொருளாதாரத் தடை விதித்தால் (economic sanctions) – அங்கு வணிகம் செய்பவர்களும், முதலீடு செய்பவர்களும் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடிவிடுவார்கள். இதனால் அங்கு சீனாவும், சீனாவின் நண்பர்களும் மட்டுமே வியாபாரம் செய்யலாம். சீனா உலகின் தொழிற்சாலையாக மட்டுமே இருக்க முடியுமே தவிர நுகர்வோராகவும் இருக்க முடியாது. உலக வர்த்தகம் இன்றி அதனால் சீவிக்க முடியாது. எனவே துறைமுக நகரம் அதன் சுடுகாடாக அமைய வாய்ப்புண்டு.

போர்களை விட உலகில் அதிக அழிவுகளைக் கொண்டுவருவது பொருளாதாரத்தடை. ஈரான், ஈராக், வெனிசுவேலா என்று எண்ணற்ற நாடுகள் சமகாலத்தில் மண்டியிட்டமைக்கு வானத்திலிருந்து பொழிந்த குண்டுகள் காரணமல்ல, வயிறுகள் வெந்தமையே காரணம். மக்கள்தான் இத் துன்பங்களை அனுபவிக்கப் போகிறவர்கள். துறைமுக நகரத்தின் மக்கள் சாதாரண மக்களல்ல என்ற வகையில் – who cares?.

எனவே எனது எதிர்ப்பார்ப்பு? ஜே.வி.பி. தலைமையிலான மூன்றாவது புரட்சி – அரிவாளையும் சுத்தியலையும் எறிந்துவிட்டு, யதார்த்தமான உண்மையான, கற்பனைகளுடன் கூடாத அணுகுமுறைகளுடன் கூடிய மூன்றாவது எழுச்சி, மக்கள் சக்தியாக உருவெடுக்கும். இலங்கையில் ஜனநாயகம் தப்பிப் பிழைக்குமானால், புத்த மகாசங்கங்களின் அனுசரணையுடன், ஆச்சரியப்படத்தக்க வகையில் இராணுவத்தின் அனுசரணையுடன், மக்கள் சக்தி ஆட்சியமைக்கும். புலிகளை வென்ற கதையும், தமிழர்களை வென்ற கதையும் இன்னும் சில தசாப்தங்களுக்கு எடுபடவும் முடியாது; எடுக்கப்படவும் கூடாது.

தமிழர்களைப் பொறுத்தவரையிலும், தீவிர தமிழ்த் தேசியம் தற்காலிகமாகவேனும் கிடப்பில் போடப்பட்டு உள்ளூர் உற்பத்தியான ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றுக்குத் தயாராக இருக்க வேண்டும். அனுரகுமார திசநாயக்கா அமரவன்ச அல்ல. அவரது தலைமையில் ஜே.வி.பி. பல நிதர்சனங்களை உணர்ந்திருக்கிறது. அவரோடு கற்றவர்களும், பண்புள்ளவர்களும் நிற்கிறார்கள். சஜித் பிரேமதாசவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் வாக்களித்த தமிழ் மக்கள் ஒரு முறை அநுரகுமாரவிலும் காசைக் கட்டிப் பார்க்கலாம். குதிரை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வெளிநாடுகள் மூலம் தமிழருக்குத் தீர்வு? பைடனோடு அந்த நம்பிக்கை அறவே இல்லாமற் போய்விட்டது. ஐ.நா. நல்லதொரு தடிதான் ஆனால் அதை யார் வைத்திருப்பது என்பதைப் பொறுத்தே பலன் அமையும். நமக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை.

தலைப்பு ‘தி ஐலண்ட்’ பத்திரிகையில் லூசியன் ராஜகருணாநாயக்கவின் கட்டுரையிலிருந்து : Courtesy: The Island / Lucien Rajakarunanaya

அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் இலங்கை; எங்களிடம் நாட்டைத் தந்தால் முன்னேற்றிக் காட்டுவோம்! – மனோ

இலங்கையில் சிங்கள – பெளத்தர் அல்லாத எமக்கு ஜனாதிபதி, பிரதமர், முன்னரங்க அமைச்சர் ஆக முடியாது. இது உங்கள் எழுதப்படாத சட்டம். இன, மத, மொழி, சிறுபான்மை பேதங்களை, பத்து வருடங்களுக்கு இடைநிறுத்தி, நாட்டை எம்மிடம் கொடுத்துப் பாருங்கள். பதினொன்றாம் வருடம் தென்னாசியாவின் முன்னணி நாடாகத் திருப்பித் தருகின்றோம்.”

என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகளை விளித்து கூறியுள்ளார்.

தனது ருவிட்டர் தளத்தில் மூன்று மொழிகளிலும் கருத்து வெளியிட்டுள்ள மனோ இது பற்றி மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“உங்கள் நண்பர் லக்ஸ்மன் கதிர்காமருக்குக் கூட நீங்கள் பிரதமர் பதவியைத் தர மறுத்தீர்கள். ஜே.வி.பி. மட்டுமே அவருக்குப் பிரதமர் பதவி தர வேண்டுமென்று சொன்னது.

இலங்கை, இயற்கை வளமில்லாத வள – ஏழை நாடு அல்ல. இங்கே என்ன இல்லை? இந்த நாட்டை ஆளுவோரிடம் நேர்மை, தூரப்பார்வை, அர்ப்பணிப்பு, அரசியல் திடம், துணிச்சல் ஆகியவை இல்லை. குறிப்பாக, தாம் மட்டுமே இந்த நாட்டின் ஏக உரிமையாளர் என எண்ணும் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் தலைமைத்துவப் பண்புகள் இல்லை. இதுதான் கசப்பான ‘இல்லை‘களின் உண்மை.

கடந்த காலங்களில் தமிழ், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எமது நாட்டின் சுதந்திரம் முதல் வளர்ச்சி வரை பெரும் பங்களிப்புகளை வழங்கினார்கள். அது ஒரு பொற்காலம்.

இப்போது இந்த நாடு – இலங்கைத் தீவு, உங்களுக்கு மட்டுமே ஏகபோக சொந்தமானது எனத் தவறாக, இனவாத கண்ணோட்டத்தில் நீங்கள் நினைகின்றீர்கள். இந்த எண்ணம் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிலும் உள்ளது. எல்லா பெரும்பான்மை கட்சிகளிலும் உள்ளது. இதை நான் அனுபவப்பூர்வமாக கண்டு அனுபவித்துள்ளேன்.

இன்று இந்த நாடு ஒரு தோல்வியடைந்து வரும் நாடு. இதன் காரணம் என்ன என்பதை யோசியுங்கள். சுதந்திரம் பெற்ற 1950களில், இந்த நாட்டின் வெளிநாட்டுச் செலவாணி கையிருப்பு, ஜப்பானுக்கு அடுத்து அதிகம் இருந்தது. கடன் கொடுக்கக் கூடிய நாடாக நாம் இருந்தோம். இன்று நாம் எங்கே இருக்கின்றோம்? இவை எல்லாவற்றுக்கும் காரணம், அறிவுகெட்ட இனவாத முட்டாள்களின் கையில் நாடு இருக்கின்றமைதான்.

தெற்காசியாவை விடுங்கள். முன்னேறிய தென்கிழக்கு ஆசியாவை எடுங்கள். சிசு மரணம், கல்வி வளர்ச்சி, ஆயுள், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றில் நாம் கூடக்குறைய சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, கொரியா, வியட்நாம் ஆகிய நாடுகளை விட முன்னேறி இருந்தோம்.

நான் மதிக்கும் சிங்கப்பூரின் ஸ்தாபகர் லீ குவான் யூவும், மலேசிய ஸ்தாபகர் மஹதிர் முகமதும், தமது நாடு இலங்கையை எட்டிப் பிடிக்க வேண்டும் என்பதே தமது இலக்கு என அன்று பகிரங்கமாகக் கூறினார்கள். இன்று அவர்கள் எங்கே? நாங்கள் எங்கே?

இப்போது தென்னாசியாவைப் பாருங்கள். இந்தியா பெரிய நாடு. அதனுடன் எம்மை ஒப்பிட முடியாது. ஆனால், 1972இல் பிறந்த பங்களாதேஷ்கூட, இன்று மதசார்பற்ற நாடாக எங்களை முந்திப் போகின்றது. இது உங்களுக்குத் தெரியுமா?

இன முரண்பாடுகள், போர், அரச மற்றும் அரசு அற்ற பயங்கரவாதங்கள், பொருளாதார வீழ்ச்சி, வெளிநாட்டுச் செலவாணிப் பிரச்சினை, அகோர தேசிய கடன் தொகை, கடன் தருகின்றேன் என்று சொல்லி உலக சக்திகள் உள்நாட்டுக்குள் வருகை, ஆகியவற்றின் பின்னுள்ள பிரதான காரணம், பெளத்தம் முதன்மை (புத்திசம் பர்ஸ்ட்), சிங்களம் மட்டும் (சின்ஹல ஒன்லி) என்ற முகத்துடன் வந்த உங்களது போலித் தேசியவாதம்தான் என்பதை உணருங்கள். முட்டாள்களுக்கு இதுவும் புரியாவிட்டால் இந்த நாட்டை இனி கடவுளாலும் காப்பாற்ற முடியாது” – என்றுள்ளது.

Posted in Uncategorized

ஜூன் 7 வரை நீடிக்கப்பட்டது பயணக்கட்டுப்பாடு – உத்தியோகப்பூர்வ அறிவித்தல் வெளியானது!

நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜூன் 7 ஆம் திகதிவரை தொடர்ந்தும் நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு தேசிய செயலணி தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும், கொரோனா தடுப்பு தேசிய செயலணி உறுப்பினர்களும் இடையில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே 31 மற்றும் ஜூன் 4 ஆம்திகதிகளில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாமல், தொடர்ந்தும் ஜூன் 7 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கப்பலில் தீ பரவிய பகுதியில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தம்

MV X-Press Pearl கப்பலில் தீ பரவிய கடற்பிராந்தியத்தில் கடற்றொழில் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்படும் கொழும்பு, கம்பஹா மாவட்ட மீனவர்களுக்கு நிவாரணத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டார்.

கடந்த இரு தினங்களாக கொள்வனவு செய்யப்பட்ட மீன்கள் தொடர்பில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என அவர் கூறினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கப்பல் நங்கூரமிடப்பட்டுள்ள கடற்பிராந்தியத்திற்குள் மீனவர்கள் அனுமதிக்கப்படவில்லை என காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

குறித்த கடற்பிராந்தியத்தில் ஆய்வுகள் நிறைவு பெறும் வரை மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized

தீ விபத்துக்குள்ளான கப்பலால் மீன்வளத்துக்கு பாதிப்பு- பேராசிரியர் நவரத்னராஜா

கொழும்பு துறைமுகத்திற்கு வட மேற்று பகுதியில் 9.5 கடல் மைல் தொலைவில் நங்கூரமிட்ட எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலில் ஏற்பட்டுள்ள தீ பரவல் காரணமாக மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கு அதிக சாத்தியம் காணப்படுகின்றது.

கப்பலிலிருந்து கடலுக்குள் கலக்கப்பட்டுள்ள பொருட்களினால் ஏற்படும் பாதிப்புக்களை குறுகிய காலத்திற்குள் மதிப்பீடு செய்ய முடியாது. ஆகவே கடலில் மிதந்து வரும் பொருட்களை தொடுவதை பொது மக்கள் முழுமையாக தவிர்த்துக் கொள்ள வேண்டும் என தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் நவரத்னராஜா குறிப்பிட்டுள்ளார்.

தீவிபத்திற்குள்ளாகியுள்ள குறித்த கப்பல் வெடித்து சிதறும் அபாயத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சரக்கு கப்பலினால் கடல்வாழ் உயிரினங்களுக்கும், மீன்வளத்துறைக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து வினவிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் வட மேல் திசையில் 9.5 கடற்பரப்பில் தீப்பற்றி எரியும் கப்பலின் கழிவுகள் மற்றும் வெடித்து சிதறிய கொள்கலகள் நீர்க் கொழும்பு கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளன.

கப்பலில் இருந்து வெளியேறிய எரிபொருட்கள் கடலில் கலந்துள்ளமையினால் ஏற்படக்கூடிய அபாயம் மற்றும் கடலுணவுகளை உட்கொள்வதினால் ஏற்படும் பாதிப்பு குறித்து தற்போது வரை கிடைக்கப் பெற்றள்ள சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு பரிசோதனைகளை முன்னெடுத்துள்ளோம்.

கப்பலில் இருந்து வெளியாகியுள்ள பிளாஷ்டிக் உற்பத்தி மூலம் பொருட்கள் பெருமளவில் நீர்கொழும்பு பிரதேசத்தின் கடற்பரப்பில் கரையொதிங்கியுள்ளன. இம் மூலப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு அய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த பிளாஸ்டிக் மூலம் பொருட்களை மீன்கள் உண்பதால் அவை இறக்க நேரிடும். இக் கடற்பரப்பில் மீன்கள் இறந்து மிதக்கின்றனவா என்பது குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆகவே தற்போதைய நிலைமைக்கு அமைய சமுத்திரத்திற்கும், கடற் வாழ் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முடியாது. இருப்பினும் மீன்வளத்துறைக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது.

நன்றி -வீரகேசரி

Posted in Uncategorized

சில துறைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனம்: அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

எவ்வித இடையூறுகளுமின்றி மக்களின் நாளாந்த வாழ்க்கையை முன்னெடுக்கும் நோக்கில் சில துறைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய,

துறைமுக அபிவிருத்தி அதிகார சபை
பெட்ரோலிய உற்பத்தி உள்ளிட்ட அனைத்து விதமான எரிபொருள் விநியோகம் மற்றும் பகிர்ந்தளித்தல்
துறைமுகங்கள் மற்றும் கடற்றொழில் சேவை
ரயில்வே
இலங்கை போக்குவரத்து சபை

ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய ஆராய்ச்சி உதவியாளர் சேவை உள்ளடங்கலாக பிரதேச மட்டத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச ஊழியர்களினது சேவைகளும் குறித்த வர்த்தமானியினூடாக அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உள்ளிட்ட அனைத்து அரச வங்கிகள், காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களின் கழிவு முகாமைத்துவ சேவை ஆகியனவும் ஜனாதிபதியினால் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் 24 மணித்தியாலங்களில் 128 பேருக்கு கொரோனா தொற்று

மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 128 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவே இதுவரை மட்டக்களப்பில் அடையாளம் காணப்பட்ட COVID-19 தொற்றாளர்களில் அதிகமான எண்ணிக்கையாகும்.

நேற்று (26) காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் 32 பொலிஸ் உத்தியோகத்தர்கள் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (26) வவுணதீவில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனைகளில் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் உத்தியோகத்தர்களாவர்.

இவ்விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நா.மயூரன் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்றாளர்களை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சைகள் வழங்கப்படுவதாகவும் அங்கு கட்டில்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வௌி மாவட்டங்களுக்கு தொற்றாளர்களை அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொரோனா மரணங்கள் 1,300 ஐ கடந்தது

இலங்கையில் மேலும் 27 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,325 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் 2,572 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized