பொத்துவில் பொலிகண்டி பேரணியில் கலந்து கொண்டமைக்காக வினோ நோகராதலிங்கத்திடம் பொலிஸார் வாக்கு மூலம் பதிவு

நீதிமன்ற கட்டளையை மீறி பொத்துவில் பொலிகண்டி பேரணியில் மாங்குளத்தில் கலந்து கொண்டமைக்காக மாங்குளம் பொலிசாரால் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் .

நேரமின்மையென பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களால் கூறப்பட்டதற்கிணங்க வவுனியா ரெலோ மாவட்ட கட்சி அலுவலககத்துக்கு வந்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

இதன்போது தமிழ் மக்களின் உரிமை கோரிய நியாயமான ஜனநநாயக போராட்டத்தில் மக்களோடு இணைந்து கலந்து கொண்டதாக தமது உணர்வுடன் கூடிய விளக்கத்தை பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேர் கடத்தல் : வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவத்தில், பிரதிவாதிகளான முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படையினருக்கு எதிரான வழக்கை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இன்று தீர்மானித்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கல் குறித்த வழக்கு விசாரணைகள் பிரதம நீதியரசரால் நியமிக்கப்ப்ட்ட மேல் நீதிமன்ற நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்னத்தின் தலைமையின் கீழ் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ராஜகருணா, நவரத்ன மாரசிங்க ஆகியோர் உள்ளடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்த கடத்தல், காணாமல் ஆக்கிய விவகாரத்தில், கடற்படை சிறப்பு புலனாய்வு பிரிவின் பொறுப்பாளராக கடமையாற்றியிருந்த லெப்டினன் கொமான்டர் சம்பத் முனசிங்க, கன்சைட் நிலத்தடி இரகசிய வதை முகாமின் பொறுப்பாளராக அப்போது இருந்த லெப்டினன் கொமாண்டர் தரத்தினை உடைய தற்போது கொமான்டராக பதவி உயர்த்தப்பட்டுள்ள சுமித் ரணசிங்க, கடற்படை புலனாய்வுப் பிரிவின் நலின் பிரசன்ன விக்ரமசூரிய,கித்சிரி மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவின் பணிப்பாளராகவும் கடற்படை ஊடகப் பேச்சாளராகவும் அப்போது பதவி வகித்த கொமாண்டர் டி.கே.பி. தஸநாயக்க, கடற்படை வீரர்களான கஸ்தூரிகே காமினி, அருணதுஷார மெண்டிஸ் மற்றும் நேவி சம்பத் எனும் லெப்.கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி,சஞ்ஜீவ பிரசாத் திலங்க சேனராத்ன, அண்னச்சி எனப்படும் உபுல் சமிந்த, ஹெட்டி ஹெந்தி, என்டன் பெர்ணான்டோ, சம்பத் ஜனக குமார, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரல் ஒப் தெ ப்ளீட் வசந்த கரன்னாகொட ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டு, அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்று இந்த வழக்கு சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ரில் விசாரணைக்கு வந்த போது, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மேன் முறையீட்டு நீதிமன்ரில் தாக்கல் செய்துள்ள ரிட் மனு தொடர்பில் விடயங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் வசந்த கருணாகொட பிரதிவாதியாக பெயரிடப்பட்டமைக்கு எதிராக அவர் தாக்கல் செய்துள்ள ரிட் மனு மேன் முறையீட்டு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. .

அம்மனு எதிர்வரும் 4 ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளது. அந்த ரிட் மனுவின் தீர்ப்பு வரும் வரை, இந்த விவகாரத்தில் கரன்னாகொடவுக்கு எதிரான விசாரணைகளை முன்னெடுப்பது சாத்தியமற்றது என்பதால் வழக்கானது ஜூலை 2 ஆம் திகதிவரை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டது.

கொழும்பு, கொட்­டாஞ்­சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக தெஹி­வ­ளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வர் என்­ப­வ­ரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாண­வர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இத­னை­விட கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், அரிப்பு பிர­தே­சத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆராச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த தியாக­ராஜா ஜெகன் உள்­ளிட்­டோரும் கடத்­தப்­பட்­டி­ருந்­தனர்.

இவ்வாறு கடத்தப்பட்ட அனைவரும் திருகோணமலை கடற்படை தளத்தில் உள்ள இரகசிய வதை முகாமான கன்சைட் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமையை குற்றப் புலனயவாளர்கள் கண்டுபிடித்தனர்.

இந்த விடயம் சர்வதேச அளவில் அவதானிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில், முன்னாள் கடற்­படை தள­பதி வசந்த கரு­ணா­கொட உள்ளிட்ட 17 பேர் இந்த விவகாரத்தில் சந்தேக நபர்களாக சி.ஐ.டி. மன்றுக்கு அறிவித்துள்ளது.

அதில் முன்னாள் கடர்படை தளபதி வசந்த கருணாகொட உள்ளிட்ட 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் 667 குற்றச் சாட்டுக்களின் கீழ் மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

அந்த குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே மூவர் கொன்ட ட்ரயல் அட் பார் சிறப்பு நீதிமன்றம் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் ஏற்கனவே 17 ஆவது சந்தேக நபரான உபுல் மூன்றாவது சந்தேக நபர் லக்ஷ்மன் உதயகுமார, 5 ஆவது சந்தேக நபர் தம்மிக தர்மதாஸ ஆகியோருக்கு நிபந்தனை மன்னிப்பளிக்க சட்ட மா அதிபர் தீர்மானித்து அவர்கள் மூவரும் அரச சாட்சியாக பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

என் தந்தையைக் கொன்றவர்களை மன்னித்து விட்டேன்: ராகுல் காந்தி தெரிவிப்பு

தனது தந்தையான முன்னாள் இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடையவர்களை மன்னித்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுவையில் கல்லூரி மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, தனது தந்தையை இழந்தமை வலியைத் தந்ததாகவும் அதற்காக தாம் கோபப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கொலைக்கு பொறுப்பானவர்கள் மீது வெறுப்போ கோபமோ ஏற்படவில்லை என கூறிய ராகுல் காந்தி, அவர்களை மன்னித்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை

இலங்கையில் கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் அடக்குமுறைப் போக்கைக் கடுமையாக விமர்சித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை “மீண்டும் அச்சத்திற்குள் இலங்கை: புதிய ஆடையில் பழைய பேய்கள்’ (Old ghosts in new garb: Sri Lanka return to fear) என அந்த ஆட்சியை குறிப்பிட்டுள்ளது.

ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட் டத்தொடரில் இலங்கை விவகாரம் எடுக்கப்படுவதை ஒட்டி இந்த அறிக்கையை மன்னிப்புச் சபையின் கொழும்பில் உள்ள தென்னாசிய அலுவலகம் வெளியிட்டுள்ளது.

புதிய ஆடையில் உள்ள பழைய பிசாசு: அச்சத்திற்கு மீண்டும் திரும்பிய இலங்கை’ என்ற தலைப்பில் இலங்கை தொடர்பாக பிந்திய அறிக்கை ஒன்றை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் வரலாற்று ரீதியான குற்றங்களுக்கான நீதியை பெறுவதற்கான முயற்சிகளை நெரித்துத் தடுக்கும் அரசாங்கத்தின் போக்கை வன்மையாக எதிர்ப்பதோடு, அரசின் அப்போக்கு நீதி பெறுதலையும் தடைசெய்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

மறுப்புரைகள் (மாறுபாடான கருத்து நிலைப்பாடு) மீது இலங்கை அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதுபிக்கப்பட்ட கடும் நடவடிக்கையானது சிவில் சமூக சுதந்திரத்தை வன்மையாக கட்டுப்படுத்துகின்றது.

அத்தோடு, சர்வதேச சட்டத்தின் கீழ், முரண்பாடு காலக்கட்டத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கான நீதியை பெறும் முயற்சிகளையும் தடைசெய்கின்றது என சர்வதேச மன்னிப்புச் சபையால் இன்று வெளியிடப்பட்ட பிந்திய அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

30 வருட ஆயுதப் போராட்டத்தில் நாட்டில் நடைபெற்ற குற்றங்களுக்கு எதிராக இடைக்கால நீதி செயல்முறைகளைத் தடைசெய்யவும் அக் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்போரை அடக்குவதற்கும் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த முயற்சிகளில் மனித உரிமை அமைப்புகள், ஊடகங்கள், சட்டத்தரணிகள், அரசியல் எதிர்ப்பாளர்கள் மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அலுவலர்களை இலங்கை அரசாங்கம் எவ்வாறு இலக்கு வைத்தது என்பதை அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

“கடந்த வருடகாலத்தில், இலங்கை அரசாங்கம் நாட்டின் சிவில் பரப்பை தீவிரமாக மாற்றியமைத்துள்ளது.இது தற்போது, கருத்து வேறுபாடு/ மறுப்புரை தெரிவிக்கும் குரல்கள் நோக்கி அதிகரித்து வரும் விரோதம் மற்றும் சகிப்பற்ற தன்மையால் வரையறுக்கப்படுகின்றது,’ என சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்தின் பணிப்பாளர் டேவிட் க்ரிஃபித் கூறினார்.

“வெறுமனே, அதிகாரிகளை அதிருப்திபடுத்தும் செயல்களில் ஈடுபடுதல் அல்லது கருத்துக்களை தெரிவித்தல் போன்ற காரணங்களால், எல்லா மட்டங்களிலும் உள்ள மக்கள் அச்சுறுத்தப்பட்டு, மிரட்டல்களுக்கு உள்ளாக்கப்பட்டு, துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மற்றும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள். மறுப்புரைக்கு எதிரான பிரச்சாரத்தை இலங்கை அரசாங்கம் துண்டிக்க வேண்டும். அத்துடன், கருத்து

தெரிவிக்கும் சுதந்திரம், அமைதியான முறையில் ஒன்றுகூடுதல் மற்றும் ஒருங்கு சேர்வதற்கான சுதந்திரம், தனிப்பட்ட பாதுகாப்பிற்கான உரிமை மற்றும் ஆதாரமின்றி தன்னிச்சை தடுப்புக்காவலில் வைப்பதிலிருந்து சுதந்திரம் ஆகிய சர்வதேச சட்டத்தின் கீழுள்ள கடமைகளை மதிக்க வேண்டும்.

‘மாசி மாதம் 2020 இல் ஐ.நா. மனித உரிமை சபையிலிருந்து அணுகப்பட்ட முரண்பாட்டுக்கால குற்றங்களுக்கான நீதி மற்றும் நல்லிணக்க செயல்முறைகளில் விலகியதிலிருந்து, நீதியை அணுகுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக்கூறும் தன்மையை உறுதிப்படுத்தும் முயற்சிகளைத் தடைசெய்யும் நோக்கத்துடன் அதிகாரிகள் செயல்படுகின்றார்கள்.

22 மாசி மாதம் வரை 23 பங்குனி மாதம் கூடும்போது, கடந்த மாதம் மனித உரிமைகளுக்காக ஐ.நா. உயர் ஆணையாளரால் வெளியிடப்பட்ட, இலங்கை மீதான பாதகமான அறிக்கையில் உள்ள பரிந்துரைப்புகளை அமுல்ப்படுத்துமாறு சர்வதேச மன்னிப்புச் சபை ஐ.நா. மனித உரிமை சபைக்கு தெரிவிக்கின்றது.

“நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு எதிராக அரசாங்கம் எடுக்கும் தீவிரமான நடவடிக்கைகளால் இலங்கையில் நலிந்து வரும் மனித உரிமைகளை சர்வதேச சமூகம் புறக்கணிக்கக் கூடாது. தண்டனையிலிருந்து விலக்களிக்கும் சுழற்சித் தொடரை முடிவிற்குக் கொண்டு வந்து, இலங்கை அரசாங்கத்தை முழுமையாக பொறுப்புக்கூற வைத்திருப்பதற்கு மனித உரிமை சபை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

அத்துடன், சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் புதிய நீதி முறைகளும் ஆரம்பிக்கப்பட வேண்டும்.’ என டேவிட் க்ரிஃபித் கூறினார்.

நீதி மற்றும் பொறுப்புக்கூறல்

மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சார்பாக பரிந்துரைப்பு செய்வதில் விசாரணையை மேற்கொள்ளுதல், ஆவணப்படுத்தல், வழக்குத்தொடுத்தல் அல்லது அறிக்கையிடுதல் போன்றவற்றில் பங்கு வகித்தோரை இலக்கு வைக்கும் செயல்வடிவத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இதில், குறைந்தபட்சம் 6 தடவைகள் வழக்கறிஞர்களை இலக்குவைத்த சம்பவங்கள் அடங்கும்.

யஹஜாஸ் ஹிஸ்புல்லா, சிறுபான்மையின உரிமைகளுக்கான பரிந்துரையாளர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த சட்டத்தரணிக்கு எதிராக இலங்கையின் கடுமையான தீவிரவாதத்தை தடுக்கும் சட்டம் உட்பட ஏனைய சட்டங்கள் பயன்படுத்தப்பட்டன. ஒருவித

குற்றமிழைத்ததற்கான ஆதாரமும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படாமல் இவர் 10 மாத காலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் சார்பாக அமுலாகிய சட்டத்தரணி அசலா செனவிரத்ன, சமூக ஊடகம் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளால், வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துஷ்பிரயோகம் போன்றவற்றால் அச்சுறுத்தப்பட்டார்.

சர்வதேச சட்டத்திற்கு எதிராக புரிந்த குற்றங்களுக்கான நீதியை நாடும் குற்ற விசாரணையாளர்களும் கண்காணிப்பிற்கு உள்ளாகின்றார்கள். குற்ற விசாரணையின் முன் பணியாளர் பதவியிறக்கம் செய்யப்பட்டு பின்பு ஆதாரங்களை உருவாக்கிய வழக்கின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். தற்போதும் அவர் சிறைக்காவலில் உள்ளதோடு, ஆயுதப்படையினர்களால் இழைக்கப்பட்ட துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விசாரணைகளை முன்னெடுத்ததன் காரணமாக எதிரீட்டு நடவடிக்கையாகப் பழிவாங்கப்படுகின்றார் என்று நம்புகின்றார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய குற்றச் சாட்டுகள் பரவி வரும் நிலையில், யுத்தத்தின் இறுதி கட்டத்தில் தலைமையில் இருந்த இராணுவ தலைமை உறுப்பினர்களுக்கு புதிய நிர்வாகத்தின் கீழ் பதவி உயர்வு மற்றும் சிவில் வகிநிலைகள் உட்பட அதிகார வகிநிலைகள் வழங்கப்படுகின்றன. நியாயத்தை கோரும் பாதிக்கப்பட்ட மக்கள் மீது இது பயங்கரமான விளைவை கொண்டிருந்தது.

அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட சட்டப்பூர்வமான திருத்தங்கள் ஆகியன, நீதியை பெறக்கூடிய நம்பகத்தன்மை உள்ள உள்ளூர் வழிமுறைகளை எவ்வாறு வலு குறைவடையச் செய்தது என்பதை இவ்அறிக்கை குறிப்பிடுகின்றது.

மேலும், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுக்கள், எவ்வாறு மனித உரிமை மீறல் குற்றவாளிகளுக்கான பொறுப்புக்கூறலை மாற்றியமைக்க முயற்சிக்கின்றது என்பதையும் இவ் அறிக்கை குறிப்பிடுகின்றது.

குடியுரிமை இடம் மீதான தாக்குதல்

மறுப்புக்கூறலை தடுப்பதற்கு புதிய கருவிகளையும் செயல்முறைகளையும் அறிமுகப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் நேரத்தை வீணடிக்கவில்லை.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராகக் கரி பூசும் பிரச்சாரத்தை அரசு நபர்கள் முன்னெடுத்த அதேவேளையில் மனித உரிமை மீறல்களை வெளிப்படுத்திய பின் ஊடகவியலாளர்கள் மரண அச்சுறுத்தல்கள் பெற்றதோடு புலனாய்வு மற்றும் விசாரணைக்களுக்கு அழைக்கப்பட்டனர்.

மனித உரிமை அரச சார்பற்ற அமைப்புகளின் அலுவலகங்களுக்கு அரசு பாதுகாப்பு அதிகாரிகளின் வருகை கடந்த பதினான்கு மாத காலமாக அதிகரித்து வருகின்றது. அக் காலக் கட்டத்தில் அத்தகைய 18 வருகைகளை சர்வதேச மன்னிப்புச் சபை பதிவு செய்துள்ளது. வருகையின் போது, அதிகரிகள் பதிவு விவரங்கள், ஊழியர்கள் மற்றும் நன்கொடையாளரின் வங்கி விவரங்கள் பற்றி விசாரித்தனர். சில ஊழியர்களின் தனிப்பட்ட வகிவிடத்திலும் அவ் அதிகாரிகள் வருகை தந்திருந்தனர்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்பாட்டொழுங்கு (கு.அ.உ.ச.உ) சட்டம் உட்பட, பேச்சு சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கு சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றது. முன்குறிப்பிடப்பட்ட சட்டமானது ரம்ஸி ரஸீக் அவர்களை கைதுசெய்து குற்றஞ்சாட்டப்படாத நிலையிலும் வழக்கறிஞ்சரை முறையே அணுகவிடாத நிலையிலும் ஐந்து மாத காலத்திற்கும் மேலாக தடுப்பில் வைத்திருக்க பயன்படுத்தப்பட்டது.

இவர் முகப்புத்தகத்தில் கொவிட் 19 ஆல் இவர்களின் கட்டாயத் தகனத்திற்கு எதிராக கண்டனம் தெரிவித்தமைக்காக, பேனா மற்றும் விசைப் பலைகையை ஆயுதமாக பயன்படுத்தி கருத்தியல் போரட்டத்திற்கு அழைப்புவிட்டார் என்ற ரீதியில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் உள்ளார்.

பின்னணி

22 ஆம் திகதி மாசி மாதம் தொடக்கம் 23 ஆம் திகதி பங்குனி மாதம் வரை மனித உரிமை சபை தனது 46ஆவது அமர்வில் கூடும். இதன் போது,

கனடா, ஜேர்மனி, மொன்டநீக்ரொ, வடக்கு மசதோனியா மற்றும் ஐக்கிய இரச்சியம் இலங்கை மீது தலைமைதாங்கும் தற்போதைய முதன்மை குழுவில் அடங்கும் நாடுகள் மனித உரிமைக்கான உயர் ஆணையாளர் அலுவலக அறிக்கையைத் பின்தொடரும் பிரகடனத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

தை மாதம் 2021 ஆம் ஆண்டு சர்வதேச மன்னிப்புச் சபை தான் வெளியிட்ட இலங்கையில் உள்ள நிலைப்பாட்டின் மதிப்பீடு அறிக்கையில், மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்புகளை தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

Posted in Uncategorized

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழாவை பிற்போடுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் ஆறு அமர்வுகளாக நடைபெறவுள்ளது. அதில் 2ஆயிரத்து 608 மாணவர்கள் பட்டங்களை பெறவுள்ளனர்.

இந்நிலையில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டால் யாழில் புதிய கொரோனா கொத்தணி ஏற்படும் அபாயம் உள்ளதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

நாட்டில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் பாடசாலை நிகழ்வுகள் உட்பட விழாக்கள் நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாட்டை முடக்குமாறு கூட கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறான நிலையில் யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் 2ஆயிரத்து 608 மாணவர்களுக்கு பட்டம் வழங்கும் நிகழ்வில் அவர்களை ஓர் இடத்தில் கூட்டுவது மிகவும் ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

இந்நிகழ்வில் மாணவர்கள் மட்டுமின்றி மாணவர்களின் பெற்றோர் உறவினர்கள் என பலரும் அன்றைய தினங்களில் வருகை தருவார்கள்.

நாட்டின் பல பாகங்களிலும் இருந்தும் பட்டமளிப்பு விழாவிற்கு பலர் வருகை தந்து ஓர் இடத்தில் கூடுவது மாத்திரமின்றி அவர்கள் யாழில் பல இடங்களிலும் தங்கி செல்வார்கள்.

அதனால் யாழ்.மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி உருவாகும் அபாயம் உண்டு இதேவேளை யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளுக்காக திரும்பிய வேளை அவர்களை தனிமைப்படுத்தி மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் போது மாணவர்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்த சந்தர்ப்பங்களும் உண்டு.

இவ்வாறான நிலையில் பட்டமளிப்பு விழாவை பல்கலைக்கழக நிர்வாகம் பிற்போட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவிக்கையில் , இது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் , அது தொடர்பில் விரைவில் சுகாதார அமைச்சு தனது நிலைப்பாட்டை தெரியப்படுத்தும் என தெரிவித்தார்.

அதேவேளை இது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவிக்கையில் , கொரோனா அச்சறுத்தல் காரணமாக விழாக்களுக்கு 150 பேருக்கே அனுமதி வழங்கியுள்ளோம். அதற்கு மேல் கூடுவது பிழையானது.

கொரோனா தடுப்பு சுகாதார முறைப்படியே எந்த நிகழ்வையும் நடாத்த முடியும். பட்டமளிப்பு விழா தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமும் குழு ஒன்றை அமைத்து இது தொடர்பில் ஆராய்கின்றனர் என அறிகிறேன். அடுத்துவரும் நாட்களில் உரிய தரப்பினர்களுடன் கலந்துரையாடி பட்டமளிப்பு விழா தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதேவேளை நாம் சுகாதார நடைமுறைகளை பின் பற்றி , திட்டமிட்டவாறு பட்டமளிப்பு விழாவை நடத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சிறிசற்குணராஜா கூறியுள்ளார்.

Posted in Uncategorized

வங்கிக் கணக்கு மூலம் 1 டிரில்லியன் ரூபாவை பரிமாற்ற இடம்பெற்ற முயற்சி முறியடிப்பு: 6 பேர் விளக்கமறியலில்

இளைஞர் ஒருவரின் வங்கிக் கணக்கு மூலம் பாரிய அளவு நிதி பரிமாற்றம் செய்ய முயன்ற சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு ஒன்றில் இருந்து சுமார் 1 டிரில்லியன் ரூபாவை பரிமாற்றம் செய்ய இடம்பெற்ற முயற்சி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பண பரிமாற்ற விவகாரம் தொடர்பில் வவுனியாவில் இளைஞர் ஒருவரை கடத்த முயன்ற 6 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இளைஞரை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் மாலை குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு, அவிசாவளை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 6 பேரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்களின் சொகுசு கார்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25 வயதான இளைஞர் தற்போது வவுனியாவில் வசித்து வரும் நிலையில், அவருடன் நெருங்கிப் பழகியவர்களே அவரைக் கடத்த முயன்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒன்றாக தொழில் புரிந்துள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Posted in Uncategorized

இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது – அமெரிக்கா

கொவிட்-19 பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கும் வாக்குறுதியிலிருந்து இலங்கை பின்வாங்குவது குறித்து அமெரிக்க அரசாங்கம் இன்று ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ்,

பாரபட்சமான தகனக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதில் இருந்து அரசாங்கமும் பிரதமரும் பின்வாங்குவதைக் காணும்போது ஏமாற்றமடைகிறது என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கப்படும் என பாராளுமன்றத்தில் முன்னர் அளித்த வாக்குறுதியை அலெய்னா டெப்லிட்ஸ் வரவேற்றதுடன், சர்வதேச பொது சுகாதார விதிமுறைகளுக்கு ஏற்பவும், மத சடங்குகளுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவது ஒரு சாதகமான நடவடிக்கையாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

அடக்கம் தொடர்பான விவகாரத்தில் அமைச்சின் நிபுணர் குழு முடிவு செய்யும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே பாராளுமன்றத்திற்கு தெரிவித்த பின்னர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் தற்போதைய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்ய இலங்கையில் அனுமதிக்கப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் அறிவித்த ஒரு நாள் கழித்து இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுல்ளே இந்த அறிவிப்பினை வெளியிட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பொத்துவில்- பொலிகண்டி: பருத்தித்துறை பொலிசாரால் கைதான இளைஞன் வாக்குமூலம் பதியப்பட்ட பின் விடுதலை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரணியில் கலந்து கொண்டார் என பருத்தித்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் வாக்குமூலத்தை பதிவு செய்த பின்னர், விடுவிக்கப்பட்டார்.

பேரணியில் கலந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் இன்ற பகல் இளைஞர் ஒருவரை பருத்தித்துறை பொலிசார் கைது செய்தனர். பேரணியில் பதிவு செய்யப்பட்ட காணொலியின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள் இலக்கத்தின் மூலம் உரிமையாளர் அடையாளம் காணப்பட்டு, இளைஞன் கைதானதாக பருத்தித்துறை பொலிசார் தெரிவித்தனர்.

பல மணித்தியாலங்களாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இளைஞன் தடுத்து வைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

பின்னர், தாயாரிடம் இளைஞன் ஒப்படைக்கப்பட்டார்.

Posted in Uncategorized

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும்: இந்து மதத் தலைவர்கள்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதில் சர்வதேசம் அதிக கவனம் செலுத்தவேண்டும் எனவும் அதில் சுவிஸ்சர்லாந்துக்கும் பொறுப்பு உண்டு எனவும் சுவிஸ்சர்லாந்து தூதுவரிடம் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபேர்கலர், நல்லை ஆதினத்துக்கு நேற்று மாலை சென்றிருந்தார்.

நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இந்துக் குருமார் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்ம ஸ்ரீ கு.ஜெகதீஸ்வரக் குருக்கள், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர், கலாநிதி ஆறு.திருமுருகன் மற்றும் சிவதொண்டன் சுவாமிகள் ஆகியோர் சுவிஸ்சர்லாந்து தூதுவரைச் சந்தித்தனர்.

வடக்கு – கிழக்கு தமிழ் மக்களின் தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து தூதுவர் இந்து மதத் தலைவர்களைக் கேட்டறிந்தார். 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் உறவுகளுக்கு அடைக்கலம் கொடுத்து உரிமைகளை வழங்கியுள்ள சுவிஸ்சர்லாந்துக்கு நன்றிகள் தெரிவிப்பதாகவும், அவர்கள் தமது மத வழிபாடுகளுக்கு ஆலயங்களை அமைக்க அனுமதித்துள்ளமையும் பாராட்டுக்குரியது என இந்து மதத் தலைவர்கள் தூதுவரிடம் தெரிவித்துள்ளனர்.

அதேபோன்று இந்த நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும் சகல உரிமைகளையும் கிடைக்க சுவிஸ்சர்லாந்து ஒத்துழைக்கவேண்டும் என்றும் இந்து மதத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்மை குறிப்பிடத்தக்கது.

Share

சீனாவின் மின் உற்பத்தி திட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது: நயினாதீவு மக்கள்

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் சீனாவின் தனியார் நிறுவனத்துடன் இணைந்து மீள் புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் தமது தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமைச்சரவை இணை பேச்சாளர் நேற்று (16) கூறியிருந்தார்.

இந்தியாவை அண்மித்து அமைந்துள்ள, மக்கள் செறிந்து வாழ்கின்ற நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளே இந்த திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்காக நெடுந்தீவில் ஒதுக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட் குழாம் நேற்று அங்கு சென்றிருந்த நிலையில், மற்றுமொரு தீவான நயினாதீவிற்கு நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் இன்று சென்றிருந்தனர்.

வரலாற்று சிறப்பு மிக்க நயினா தீவு நாகபூஷணி அம்மன் ஆலயம் மற்றும் நாகதீப விகாரை என்பன இந்த தீவில் அமைந்துள்ளதால் இந்த தீவு கலாசார ரீதியிலும் முக்கியத்துவம் பெற்றது.

4.68 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த தீவில் 2650 பேர் வசித்து வருகின்றனர்.

தீவின் தென் பகுதியில் ஐயனார் கோவில் அருகில் வௌ்ளை மணல் கரையோரத்திலேயே மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டத்திற்கான மூன்று ஏக்கர் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர்ப் பிரச்சினையால் அவதியுறும் தீவு மக்கள் பயன்படுத்தும் பொதுக்கிணறு, கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை மற்றும் தென்னந்தோப்புகள் அமைந்துள்ள இந்தப் பகுதிக்கு காற்றாலை சூரிய சக்தி கலப்பு மின் உற்பத்தி திட்டம் எந்த வகையிலும் பொருத்தமற்றது என மக்கள் தெரிவித்தனர்.

அரசியல் நோக்கங்களுக்காக வௌிநாட்டு நிறுவனங்களுக்கு காணிகளை வழங்குவதன் மூலம் ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள சமூகம் என்ற வகையில், மீண்டும் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடலாம் என மக்கள் கவலை வௌியிட்டனர்.

இந்திய அரசாங்கத்தின் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் இலங்கையின் அமைச்சரவைக் குழு சீனா தனியார் நிறுவனத்திற்கு இந்த மூன்று தீவுகளிலும் காணி வழங்கியதன் காரணமாக சர்வதேச ரீதியில் இந்த செயற்றிட்டம் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது.