வடக்கு கிழக்கில் தொடர் போராட்டம்! ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இளைஞர் அணியும் ஆதரவு

வட கிழக்கு பிரச்சினை தொடர்பான ஆர்ப்பாட்டத்திற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகளால் எதிர்வரும் 3ஆம் திகதி தொடக்கம் 6ஆம் திகதி வரை நடாத்தப்படும் பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அகிம்சை போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பல அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்துள்ளன, அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏறவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் இப் போராட்டத்திற்கு தனது முழுமையான ஆதரவினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

தமிழ் பேசும் மக்களின் தாயகமான வடகிழக்கு பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் நில ஆக்கிரமிப்பு, மனித உரிமை மீறல்கள், பாரம்பரிய இந்து ஆலயங்களை அழிக்கும் செயற்பாடுகள், தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றங்கள், முஸ்லீம் மக்களின் ஜனாசாக்களை எரிப்பது, தமிழ் முஸ்லிம் அப்பாவி இளைஞர்கள் மீது ஏவி விடப்பட்டுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் , சிறைகளில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் என தமிழ் பேசும் மக்களின் தாயகத்தில் திட்டமிட்டு நடாத்தப்படும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக வடகிழக்கு சிவில் சமூக அமைப்புக்களாகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும்.

உரிமைகளை இழந்து நீதி மறுக்கப்பட்ட சமூகமாக வாழும் எனது உயிர் இருக்கும் வரை நான் தொடர்ந்தும் மக்களுடன் பயணம் செய்வேன் என்பதை இந்த போராட்டத்தின் ஊடாக தமிழ் மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துறைமுக தொழிற்சங்கங்கள் – பிரதமர் மஹிந்தவுக்கிடையில் பேச்சுவார்த்தை

கொழும்பு துறைமுக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து முதலாம் திகதி திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தையொன்றை முன்னெடுக்கவுள்ளன.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் கொண்டுவரும் வரை போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் தொழிற்சங்கங்கள் இறுக்கமான தீர்மானத்தில் உள்ளனர்.

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை முழுமையாக கைப்பற்ற போராட்டம் | Virakesari .lk

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதாக குற்றம் சுமத்தி தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளினால் அரசாங்கதிற்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதலாம் திகதி திங்கட்கிழமை துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபடவுள்ளார்.

இலங்கை சுதந்திர சேவையர் சங்கத்தின் தலைவர் சுசந்த, இது குறித்து தெரிவிக்கையில்,

துறைமுக தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக துறைமுக அதிகார சபைக்கும், அரசாங்கத்திற்கும் பாரிய அளவிலான நட்டம் ஏற்படப்போகின்றது.

இதற்கு நாம் பொறுப்பல்ல, அரசாங்கமே இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்கனவே நாடு கடனில் நெருக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டிற்கு மேலும் நட்டத்தை ஏற்படுத்தும் தீர்மானங்களை அரசாங்கம் எடுப்பதன் காரணமாகவே இந்த நிலைமைகள் உருவாகியுள்ளன.

இந்நிலையில் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எம்முடன் கலந்துரையாட இணக்கம் தெரிவித்துள்ளார். அதற்கமைய நாளைய தினம்(இன்று) காலை பத்து மணிக்கு பிரதமரை சந்தித்து நாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம்.

இந்த பேச்சுவார்த்தையில் எமக்கு நல்ல செய்திகள் கிடைக்கும் என நம்புகிறோம், குறிப்பாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் முற்றுமுழுதாக துறைமுக அதிகார சபைக்கே கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது.

ஆனால் அதற்கு இணக்கம் எட்டப்படவில்லை என்றால் நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுக்கவும் நாம் தயாராகவே உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தின் பல்வேறு தரப்பினரும் ஆதரவு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலுக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்திற்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள்,அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலிலேயே இவ்வாறு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டம் இன்று அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது வாகனப்பேரணி முன்னெடுக்கப்படுவதற்கும், அது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள இந்த பேரணிக்கு இனபேதங்களையும், கட்சி அரசியலையும் மறந்து அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 03ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை பொத்துவிலிருந்து மாபெரும் வாகன பேரணி வடக்கின் பொலிகண்டி வரையில் நடைபெறவுள்ளது.

இதனடிப்படையில், தொல்பொருள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக பௌத்தமயமாக்கல் திட்டங்களை அரசாங்கம் முனைப்போடு நடைமுறைப்படுத்தி வருவதாகவும் அவற்றினை நிறுத்தி தமிழர்களின் தாயகத்தினை பாதுகாப்பதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டதை தொடர்ந்து தமிழர் பகுதிகள் சிங்கள மயமாக்கல் என்னும் நிகழ்ச்சி திட்டத்தின் மூலமாக காணிகள் அபகரிக்கும் நிலையுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு வடகிழக்கு எங்கும் உள்ள தமிழ் பேசும் உறவுகளும் ஆதரவினை வழங்கி மிக பிரமாண்டமான பேரணியாக இதனை நடாத்த வேண்டும். இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக ஜனநாயக விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு தயாராகியிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இந்த போராட்டத்தின் இறுதி நிகழ்வு வரையில் எனது பங்களிப்பு இதற்கு இருக்கும்.இந்த போராட்டத்திற்கு எவ்வாறான தடைகள் விதித்தாலும் அனைத்து தடைகளையும் உடைத்து இந்த போராட்டத்தினை வெற்றியடையச்செய்வேன். இன்றைய நிமையினை உணர்ந்து இளைஞர்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

வடக்கு – கிழக்கு தமிழர்களின் தாயகம்,தமிழர்களின் தாயகம்அங்கீகரிக்கப்பட வேண்டுமானால் அரசியல் கட்சி பேதங்களுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஜெனிவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த பேரணியானது தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள்,கட்சிகளின் பிரதிநிதிகள்,சர்வமத அமைப்புகளின் பிரதிநிதிகள், கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள், இளைஞர், மகளிர் அணிகளின் பிரதிநிதிகள் என பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள்,COVID – 19 மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள COVID – 19 மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் பணிபகிஷ்பரிப்புக்கு பொது அழைப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வு உள்ளிட்ட தொழிலாளர்களின் நலன்புரி சார்ந்த விடயங்களுக்கு ஏற்கனவே முதலாளிமார் சம்மேளனத்திடம் முன்வைத்த கோரிக்கைகளை அவர்கள் ஏற்க மறுத்துள்ளனர் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலை சீ.எல்.எப் காரியாலயத்தில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகள் அவர்களின் ஒற்றுமையை வெளிக்கொணரும் வகையில் பேச்சுவார்த்தைக்கு முந்திய தினமான 5ம் திகதி மலையகம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் அடையாள வேலை பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்த தீர்மானித்துள்ள நிலையில் இது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்கள் பொது அமைப்புகள் தொழிலாளர்கள் அணைவருக்கும் பொதுவான அழைப்பு விடுப்பதாக தெரிவித்தார்.

தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 25 ரூபாயால் உயர்த்தி 725 ரூபாயாகவும், மேலும் 50 ரூபாய் கொடுப்பனவுடன் வரவுக்கு ஏற்ற கொடுப்பனவு உள்ளிட்ட உற்பத்தி திறன் அடங்கிய தொகை ஊடாக ஆயிரம் ரூபாவை வழங்க சம்மதித்துள்ளனர்.

அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. அத்துடன் இந்த தொகையினை வழங்குவதற்காக கம்பனி தரப்பில் நிபந்தனைகளும் முன்வைக்கப்பட்டது. அதில் கூட்டு ஒப்பந்தத்தை நான்கு வருடங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும் எனவும், ஒவ்வொரு தோட்டத்திலும் பறிக்கப்படும் கொழுந்தினை இரண்டு கிலோகளாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர்கள் முன்வைத்தனர்.

இதை நாமும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாதிடும் தொழிற்சங்கங்களும் நிராகரித்தோம். இந்த நிலையில் எதிர்வரும் 6ம் திகதி சம்பள நிர்ணய சபையில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெறவுள்ளது.

அதேநேரத்தில் தொழிலாளர்கள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிற்கிடையில் ஒற்றுமை இல்லை என்பது அவர்களின் எண்ணப்பாடாக உள்ளது. ஆகையால் எதிர்வரும் 5ம் திகதி தோட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், தொழிலற்றவர்கள் என அனைத்து தரப்பினருடனும் தொழிற்சங்கங்கள் மற்றும் பொது அமைப்புகள் அனைத்தினதும் ஒத்துழைப்புடனும், ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பு ஒன்றை நடத்தி கம்பனிகளுக்கு ஒற்றுமையை வெளிக்கொணரவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்பு அரசாங்கத்திற்கு எதிரானது அல்ல. மாறாக ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வுக்கு காட்டப்படும் ஒற்றுமைக்காகவே. இவ்வாறான நிலையில் சம்பள விடயம் தொடர்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் அவர்களின் நிலைபாட்டினை தெரிவித்து வரும் அதேவேளை பொது அமைப்புகளும் கருத்துகளையும் முன்வைத்து வருகின்றனர்.

கட்சி என்ற ரீதியில் கொள்கைகள் வேறுபாடாக இருந்தாலும் தொழிலாளர்களின் நியாயமான சம்பளத்தினை பெற்றுக்கொள்ள அவர்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

அந்தவகையில் இந்த பணிபகிஷ்கரிப்புக்கு முழுமையான ஆதரவு கிட்டும் என நாம் பொதுவாக அழைப்பு விடுகின்றோம்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பில் ஜெனிவாவில் எடுக்கும் தனது நிலைப்பாட்டை தெரிவித்தது சீனா..!

சர்வதேச அரங்கில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகள் தலையீடு செய்வதற்கு இடமளிக்க முடியாது என்பதே மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடாகும். இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது தீர்மானமும் செயற்பாடும் இருக்கும் என்று இலங்கைக்கான சீன தூதரகத்தன் அரசியல் பிரிவுத் தலைவரும், ஊடகப்பேச்சாளருமான லு சொங் தெரிவித்தார்.

அந்த வகையில் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள், இனமுரண்பாடுகளுக்கான தீர்வுகள் என்பதுள்ள விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயங்களாகும். இதில் மக்கள் சீனக் குடியரசு ஒருபோதும் தலையீடு செய்யாது. ஏனைய நாடுகள் தலையீடு செய்வதையும் விரும்பாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மனித உரிமைகள் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதடினப்படையில் சில நிகழ்ச்சி நிரல்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மார்ச் மாதக் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட் இலங்கை குறித்த மீளாய்வு அறிக்கையில், இலங்கை அபாயரகமான பாதையில் பயணிப்பதாகவும், அதேநேரம், ஏற்கனவே நடைபெற்ற விடயங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலைச் செய்வதற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதுள்ளிட்ட பல விடயங்களை குறிப்பட்ட காட்டமான உள்ளடக்கங்கள் காணப்படுகின்றன. இதுபற்றிய மக்கள் சீனக் குடியரசின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்றும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் இணை அனுசரணை நாடுகளினால் புதிய பிரேரணை கொண்டுவரப்படவுள்ள நிலையில் அதன் மீதான வாக்கெடுப்பில் மக்கள் சீனக் குடியருசு எவ்விதமான பிரதிபிலிக்கப்போகின்றது என்றும் வினவியபோதே இலங்கைக்கான சீன தூதரகத்தின் அரசியல் பிரிவுத்தலைவர் மற்றும் ஊடகப்பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்துள்ள விடயங்கள் வருமாறு, நீங்கள் எழுப்பிய இரண்டு வினாக்கள் தொடர்பில் எமது நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. முதலாவதாக, மனித உரிமைகள், இன முரண்பாடுகளுக்கான தீர்வுகள் தொடர்பிலான விடயங்கள் இலங்கையின் உள்ளக விடயமாகும். இலங்கை இறைமை உள்ள நாடு என்ற வகையில் இந்த விடயத்தில் பிற தரப்புக்கள் தலையிடுவது பொருத்தமற்றதாகும்.

எம்மைப் பொறுத்தவரையில் மக்கள் சீனக் குடியரசின் உள்ளக விடயங்களில் பிறநாடுகள் தலையீடுகளைச் செய்வதை விரும்புவதில்லை. அதற்கு இடமளிப்பதும் இல்லை. அதுபோன்றே உலகில் உள்ள எந்தவொரு நாட்டினதும் உள்ளக விடயங்களில் பிற நாடுகளோ அல்லது சக்திகளோ தலையீடு செய்வதற்கு இடமளிக்கமுடியாது. இதனை அடியொற்றியதாகவே ஜெனிவாவிலும் எமது நிலைப்பாடு அமையும்.

அடுத்ததாக, மனித உரிமைகள் விடயமானது இறைமையுள்ள ஒவ்வொரு நாடுகளினாலும் பின்பற்றப்படும் விடயமாகும். இந்த விடயம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசியல் மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகள் விடயத்தினை நாடொன்றுக்கு எதிராக ‘ஆயுதமாக’ பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது என்றார்.

இதேவேளை, இலங்கை விவகாரம், ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக்கு அனுப்பட்டு செயலாளர் நாயகத்தின் பரிந்துரையில் ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தி;ற்கு அனுப்புவதற்காக அனுப்படுகின்றபோது, சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்துமா என்று வினா எழுப்பியபோது, “அவ்வாறான நிலைமை ஏற்படுமென்று தெரியவில்லை” இருப்பினும் “நான் மேற்குறிப்பிட்ட நிலைப்பாடே இந்த வினாவுக்கும் பொருந்தும்” என்றும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

துறைமுக சேவை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் – ஜனாதிபதி

இலங்கை துறைமுக அதிகார சபையின் அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரகடனப்படுத்தியுள்ளார்.

அதிவிசேட வர்த்தமானியின் ஊடாக ஜனாதிபதி துறைமுக சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவின் கையெழுத்துடன் இந்த வர்த்தமானி இன்று (30.01.2021) வெளியிடப்பட்டது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் இந்தியாவிற்கு வழங்கப்படுவதனை எதிர்த்து சட்டப்படி வேலை உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகளின் அதிரடி தீர்மானம்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு அல்லது வேறு தரப்பினருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 10 கட்சிகள் தீர்மானித்துள்ளன.

அமைச்சர் வீமல் வீரவன்சவின் கொழும்பில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இன்று இடம்பெற்ற குறித்த கட்சித் தலைவர்கள் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொவிட் தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது -ரெலோ இளைஞர் அணி செயலாளர் சபா குகதாஸ் எச்சரிக்கை

இனப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாத இராணுவ பயிற்சி ஆபத்தானது என்கிறார் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணி செயலாளருமான சபா குகதாஸ்.

இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

இலங்கை அரசாங்கத்தின் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் கூறிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான இராணுவப் பயிற்சி இந்த நாட்டின் தமிழ் சிங்கள மக்களிடையே இன நல்லிணக்கம் ஏற்படாமல் தொடர்ந்தும் சந்தேகங்கள், முரண்பாடுகள், பரஸ்பரம் இனங்களிடையே உரிமைகளை பகிர்ந்து கொள்ளாமை, போர்க்குற்றங்கள் மனிதப் படுகொலைக்கான நீதி நியாயங்கள் கிடைக்கப் பெறாத வரை இராணுவ பயிற்சியை தமிழர் தலைமைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளுதல் இன ரீதியாக பாரிய ஆபத்துக்களை உருவாக்கும். இலங்கை அரசாங்கம் கட்டாயப் படுத்தலில் வடக்கு கிழக்கில் கொடுப்பது வேறு. அதனை தமிழர் தரப்பு தலைமைகளின் ஆதரவுடன் கொடுப்பது இனத்தின் நீதிக்கான பயணத்தில் பின்னடைவை உருவாக்கும்.

இலங்கை இராணுவம் போர் விதி முறைகளை மீறியுள்ளமை தொடர்பாக நீதி கேட்கும் தமிழர் தரப்பு அந்த குற்றங்களை புரிந்த இராணுவ தளபதியே பொறுப்பாக இருக்கும் போது இந்த இராணுவத்தை வழி நடாத்திய ஆட்சியாளர்களே ஆட்சிக் கதிரையில் இருக்கும் போது அவர்களின் பயிற்சியை நாமே ஏற்றுக் கொள்வது குற்றம் இழைத்தவர்களை நாமே பிணை எடுப்பதற்கு நிகரானதாகும் இங்கு தான் தமிழர்களுக்கு ஆபத்து உருவாகிறது.

இராணுவப் பயிற்சி தலைமைத்துவ பண்புகளை நன் நடைத்தைகளை உருவாக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இடம் இல்லை. ஆனால் அப் பயிற்சி கொடுக்கும் தரப்பிடம் அவ்வாறான எண்ணம் உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும் அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் உள்ளாதா? என்றால் தமிழர் தரப்பின் சாதாரண பிரஐை கூட சொல்லுவான் பதில் இல்லை என்று.

இராணுவப் பயிற்சியில் அடிப்படைப் பயிற்சி என்பது பாலர் பாடசாலை போன்றது பாலர் பாடசாலையில் கற்பிக்கப்படும மனப்பதிவை எப்படி ஒரு மாணவன் தன் வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றானோ அதே போன்றது தான் இராணுவப் பள்ளியில் வழங்கப்படும் அடிப்படை பயிற்சியும் அமையும்.

இராணுவ பயிற்சி கல்லூரியில் 16 வயது மாணவனை அனுப்பி பயிற்சி பெற வைத்தால் அங்கு பயிற்றப்படும் கோசம், தேசியம் சார்ந்த விடையங்கள்,தேசியக் கொடியின் மகிமை , நாடு பற்றிய கொள்கைகள் என பல விடையங்கள் பயிற்று விக்கப்படும். தற்போது தமிழர்களின் பூர்விக அடையாளங்களை மாற்றியமைக்கும் இலங்கை அரசு தமிழ்த் தேசியம் தொடர்பாக பயிற்சி கல்லூரியில் மூச்சு விடுமா?

தமிழ்த் தேசியம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுபடும் தமிழர் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் சிலர் இதனை புரிந்து கொள்ள வேண்டும் எழுந்த மானமாக தமிழில் பயிற்சி கொடுக்கலாம் முன்னாள் போராளிகளை பயிற்சி ஆசிரியர்களாக நியமிக்கலாம் எனவும் இல்லாவிட்டால் தென் இந்தியாவில் இருந்து பயிற்று விற்பாளர்களை வரவழைக்கலாம் என கூறுவது மிகவும் பொறுப்பற்ற கருத்துக்கள் மாத்திரமல்ல இனத்தின் விடுதலைக்கான தூர நோக்குப் பார்வை இல்லாததன் வெளிப்பாடாகவே இக் கருத்துக்கள் அமைந்துள்ளன.

முன்னாள் போராளிகளை தொடர்ந்தும் விசாரணையில் சந்தேக கண் கொண்டு புலனாய்வார்களின் கிடுக்குப் பிடியில் வைத்திருக்கும் இராணுவ இயந்திரத்திடம் , தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கையை ஒரு நிகழ்ச்சி நிரலாக செய்யும் அரசாங்கத்திடம், தென்னிந்திய தமிழர்களின் ஆதரவு ஈழத் தமிழர்கள் பக்கம் இருப்பதை பொறுத்துக் கொள்ளாமல் தமிழக மீனவர்களை ஈவிரக்கம் அற்ற வகையில் கொன்றேழித்த இலங்கை அரசாங்கத்திடம் நல்லெண்ண வெளிப்பாடுகளை எதிர்பார்க்க முடியுமா? தமிழர் தலைவர்கள் நிதானமான முடிவுகளை கருத்துக்களை முன் வைப்பதுடன் தமிழர் தேசம் பலம் இழக்கும் நிலைக்கு பாதை அமைக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

மகாத்மா காந்தியின் 73 ஆவது நினைவு தினம் யாழில் அனுஷ்டிப்பு

மகாத்மா காந்தியின் 73ஆவது நினைவு தினம் யாழ்ப்பாணத்தில் இன்று கடைப்பிடிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக உள்ள அவரது உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் இந்தியத் துணைதூதரகத்தின் ஏற்பாட்டில் இந்த அஞ்சலி நிகழ்வு இன்று முற்பகல் 10 மணிக்கு இடம்பெற்றது.

நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் கே.பாலசந்திரன்இ நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன்இ யாழ்ப்பாணம் மாநகர முதலவர் வி.மணிவண்ணன்,ரெலோ யாழ் மாவட்ட பிரதி தலைவரும், யாழ் மாநகரசபை துணை முதல்வருமான ஈசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

மகாத்மா காந்தி என்று அழைக்கப்படும் மோகன்தாஸ் காந்தி 1869ஆம் ஆண்டு ஒக்டோபர் 2ஆம் திகதி குஜராத் மாநிலம் போர்ப்பந்தரில் கரம்சந்த் காந்தி-புத்லிபாய் தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.

இந்தியாவின் விடுதலைக்காக வித்திட்ட முக்கியத் தலைவர்களின் இவருடைய பெயர்தான் முதன்மையாக உச்சரிக்கப்பட்டது.

இந்திய விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை என அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழிவகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

அகிம்சை முறையில் போராடிய மகாத்மா காந்தி 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் திகதி புதுடில்லி பிர்லா மாளிகை காந்தி சமிதி தோட்டத்தில் நாதுராம் கோட்ஸே ஆல் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

இவரது பிறந்த நாள் இந்தியாவில் காந்தி ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது. இவரது நினைவு நாளை தியாகிகள் தினமாக போற்றுகின்றனர்.