பிரதமரின் இல்லத்திற்கு தீ வைப்பு!

கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் இல்லத்திற்கு முன்னால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, அங்கே தீ வைத்துள்ளது.

இதனால் வீட்டுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், பிரதமரின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in Uncategorized

பதில் ஜனாதிபதி யார்?: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என அனைத்து கட்சித் தலைவர்களும் தீர்மானித்துள்ளனர்.

இன்று (09) மாலை சபாநாயகர் இல்லத்தில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு, பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் ஷூம் தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்து கொண்டனர்.

இக்கலந்துரையாடலில் அரசியலமைப்புக்கு அமைவாக இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக தற்போதைய சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன பதவியேற்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவல்களை பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தனது டுவிட்டர் தளத்தில் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பல்கலைக்கழக மாணவர்களின் பேரணி மீது பொலிஸார் தாக்குதல்!

கொழும்பில் பேரணி நடத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மாணவர்கள் கோட்டையில் ஜனாதிபதி மாளிகை பகுதிக்கு செல்ல முயற்சித்த போது உலக வர்த்தக மையத்திற்கு அருகில் அவர்கள் மீது கண்ணீர் புகை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் அங்கு அமைதியின்மை நிலவி வருகின்றது.

Posted in Uncategorized

மேல் மாகாணத்தில் பல பகுதிகளிலும் ஊரடங்கு அமுல்!

ஜனாதிபதிக்கு எதிராக நாளை போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், மேல் மாகாணத்தில் பொலிஸ் பிரிவுகள் பலவற்றில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கொழும்பு மத்தி ஆகிய பிரதேசங்களிலும் மற்றும் நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு அமுலாகிறது.

மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் அனைவரும் வீடுகளில் இருக்க வேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.

”நெருக்கடிகள் சில தினங்களில் தீரும்”: ஜனாதிபதி அறிக்கை!

எதிர்வரும் தினங்களில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தீரும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி எரிபொருள், எரிவாயு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாடு எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து, ஏற்றுமதி மற்றும் விவசாயப் பொருளாதாரத்திற்கு முன்னுரிமை அளித்து புதிய முதலீடுகளுடன் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கின்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முழு உலகமும் எதிர்கொள்ளும் கொரோனா வைரஸ் பரவல் நிலைமை அனைத்து நாடுகளையும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இட்டுச் சென்றுள்ளதாகவும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளைத் தேடுவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக அரச தலைவர்களுடன் தொலைபேசி மூலமாகவும், பல நாடுகளின் தூதுவர்களுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிக்குப் பிறகு, நாடு இப்போது அதன் முடிவுகளைப் பெற்றுள்ளது.

அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு ஏற்கனவே பெறப்பட்டுள்ளது.

இந்திய கடன் வசதிகளின் கீழ் 65,000 மெற்றிக் தொன் உரம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 44,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிச் செல்லும் முதலாவது கப்பல் நாளை (09) நாட்டை வந்தடைய உள்ளது.

ஜூலை 12 முதல் எரிபொருள், எரிவாயு மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து பெறப்படும், மேலும் பல்வேறு விவசாய திட்டங்களின் கீழ் நாட்டில் உணவு பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

வெற்றிகரமான தீர்வுகள் கிடைத்துள்ள இவ்வேளையில் எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் மக்களை தவறாக வழிநடத்துவது மிகவும் வருத்தமளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இது நாட்டை மீண்டும் பின்னோக்கி செல்ல வைக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் ஊடாக நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு நல்லதொரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக இருப்பது மக்களின் பொறுப்பும் கடமையும் ஆகும், தற்போதைய நிலைமையை சரியாக புரிந்து கொண்டு அமைதியாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்படுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”எரிபொருள் விலைகளை 200 ரூபா குறைவாக விற்க முடியும்”: கோப் குழுவில் வெளியான தகவல்!

தரவுகளை ஆராயும்போது பெற்றோல் மற்றும் டீசலை ஏறத்தாழ 250 ரூபா விலைக்கு இலங்கைக்குள் விற்பனை செய்ய முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக தெரிவித்தார்.

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 2018, 2019 வருடங்களக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய செயலாற்றுகை குறித்து ஆராயும் நோக்கில் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு அதன் தலைவர் பேராசிரியர் கௌரவ சரித ஹேரத் தலைமையில் கூடியபோதே அவர் தனது தனிப்பட்ட கருத்தை முன்வைத்தார்.

எரிபொருள் கொள்வனவின் போது அவற்றின் இறக்குமதிக்கான செலவு மற்றும் அரசாங்கம் அறவிடும் வரித் தொகை தொடர்பான புள்ளிவிபரங்களை சரியான முறையில் ஆராயும்போது இது தொடர்பான விபரங்கள் தெரியவருவதாக ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். இதற்கமைய பெற்றோல் மற்றும் டீசல் ஆகியவற்றை தற்போதைய விலையைவிட 200 ரூபா குறைவாக விற்பனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார். எனவே, ஏறத்தாழ 250 ரூபாவிற்கு பெற்றோல் மற்றும் டீசலை இந்நாட்டுக்குள் விற்பனை செய்ய முடியும் எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த ஜூலை முதலாம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட டீசலில் ஒரு லீட்டருக்கு 280 ரூபாவை அரசாங்கம் வரியாக அறவிட்டிருப்பதாகவும் கூறினார்.

இது தனது தனிப்பட்ட கருத்து என்றும், தரவுகள் மற்றும் புள்ளிவிபரங்களை ஆராய்ந்த பின்னர் தான் இந்தக் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அறிந்துள்ளனரா என கோப் குழுவின் உறுப்பினர்கள் கேள்வியெழுப்பினர். எனினும், தாம் இது பற்றி அறிந்திருக்கவில்லையென பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் பதிலளித்தனர். அதேநேரம், நிதி அமைச்சுக்கும் இதுபற்றி உரிய முறையில் தெரிவிக்கப்படவில்லையென்றும் இங்கு தெரியவந்தது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்படுவதற்கு அவருக்குக் காணப்படும் தகுதிகள் குறித்தும் கோப் குழுவின் உறுப்பினர்கள் ரத்னாயக்கவிடம் கேள்வியெழுப்பியிருந்தனர். கல்வித் தகைமையாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் அரசாங்க நிர்வாகம் குறித்த விசேட பட்டமும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் காணப்படுவதாக அவர் பதிலளித்தார். மேலும் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தான் கற்றிருப்பதாகவும் கூறினார். அதேநேரம், தனது அரசியல் தகுதியாக 2005ஆம் ஆண்டு முதல் அரசாங்கங்கள் அமைப்பதற்கு ராஜபக்ஷக்களுக்கு விசேடமாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் ரத்னாயக்க தனது பதிலில் குறிப்பிட்டார்.

எரிபொருள் கொள்வனவு தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் கூறிய இந்தக் கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை என்றும், இது நாட்டின் கவனத்தை ஈர்த்திருப்பதாகவும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  எனவே, இது தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்திவலு அமைச்சின் அதிகாரிகள் மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஆகியோரை அழைத்து எதிர்காலத்தில் விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக கோப் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

அதேநேரம், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் 2021 டிசம்பர் 07ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்துக்கு எவ்வித ஒப்பந்தங்களும் செய்து கொள்ளாமல் 2005ஆம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட பென்ஸ் ரக வாகனத்தை ஜெனரல் பிஸ்னஸ் (தனியார்) நிறுவனம் என்ற நிறுவனத்திடமிருந்து எரிபொருள் அல்லது சாரதி இன்றி மாதாந்த வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய இந்த வாகனத்துக்காக வருடாந்த வாடகையாக 4,500,000 ரூபாவாக அமைந்திருப்பதுடன், 2022 மே 31ஆம் திகதி குறித்த நிறுவனத்துக்கு 2,187,500 ரூபா செலுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும் இந்த வாகனத்தைப் பெற்றுக்கொள்வது தொடர்பான ஆவணங்கள் கணக்காய்வுக்காக வழங்கப்படாமை, 15 வருடங்கள் பழமையான வாகனத்தைப் பெற்றுக் கொள்வதற்கு பணிப்புரை வழங்கப்பட்டமை, இதனைப் பெறுவதற்கான விலைமனுக் கோரலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை, இந்த வாகனத்துக்கான வாடகைப் பணம் செலுத்தும்போதான வெளிப்படைத்தன்மை போன்ற விடயங்கள் குறித்தும் கோப் குழுவில் வினவப்பட்டன.

குறிப்பாக, இந்த நிறுவனத்திற்குப் பணம் வழங்குவதற்கான ஒப்புதலில் கையெழுத்திடும் அதிகாரி பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் கோப் குழு அறிவுறுத்தியது.

இது தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை குழுவிடம் சமர்ப்பிக்குமாறு கோப் குழுவின் தலைவர் கணக்காய்வாளர் திணைக்களத்தின் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

மேலும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன அமைப்பு மற்றும் சம்பளக் கட்டமைப்பு என்பன தேசிய சம்பளம் மற்றும் பணியாளர்கள் ஆணைக்குழுவின் பரிந்துரை, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், நிதி அமைச்சின் ஊடாக அமைச்சரவைக்குத் திருத்தங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை அனுமதிக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தபோதும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அனுமதி பெறப்படாது சில செயற்பாடுகளுக்கு செலவு செய்யப்பட்டமை குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

விசேடமாக,  நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 11 வகைான கொடுப்பனவுகளின் கீழ் 45,873,483 ரூபா வழங்கப்பட்டிருப்பதுடன், மக்களை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சிகளுக்காக முழுமையான நடவடிக்கைக்கான தொகையான 86,808,538 ரூபாவில் அதாவது, மொத்தத் தொகையில் 49 வீதம் செலவு செய்யப்பட்டுள்ளமை குறித்தும் கோப் குழு கவனம் செலுத்தியது.

Posted in Uncategorized

கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்திற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று மதியம் 12.30 மணியளவில் நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் கொரடா புத்திக பத்திரன ஆகியோரும் கூட்டமைப்பின் தரப்பில் தமிழ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் மற்றும் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் நடைபெற்ற சந்திப்பில் நாட்டில் எழுந்திருக்கும் தற்போதைய கடுமையான பொருளாதார சிக்கல், அரசியல் சூழ்நிலை, அரசியல் மாற்றத்திற்கான முயற்சிகள், தமிழ்மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள், அரசியல் யாப்பு விடயங்கள், நாட்டின் நிரந்தர மீட்சிக்கு அரசியல் தீர்வின் முக்கியத்துவம், தொல்லியல் நடவடிக்கைகளினால் ஏற்படும் இன முரண்பாடு என முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

ஜனாதிபதி ஒரு முக்கிய முடிவை எடுக்க வேண்டும் – ஜனா

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும் என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போதைய நாட்டின் சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணையில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,

தற்போது நாடு உள்ள சூழ்நிலை எல்லோருக்கும் தெரியும். இலங்கை என்பதற்குப் பதிலாக எதுவுமே இல்லாத இல்லங்கை என்று பெயர் சூட்டக்கூடிய நிலையில் நாடு இருக்கிறது. பெற்றோல் இல்லை. டீசல் இல்லை. எரிவாயு இல்லை. மின்சாரம் இல்லை. அத்தியாவசியப் பொருட்கள் எதுவுமே இல்லை. எரிபொருள் இல்லாத நிலையில் இந்த நாட்டில் எந்த வித பிரச்சினையும் இல்லாத போதும் ஊரடங்குச் சட்டம் போன்று வீதிகள் எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது. அதே போல் 40 வருடங்களுக்கு முன்பு பைசிக்கிளைக் கண்டவர்கள் பழைய பைசிக்கின்களைத் திருத்தி வீதிகளில் செல்கின்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதே வேளை எமது மாவட்டம் பற்றிச் சில விடயங்களைக் கூறலாம் என்று நினைக்கிறேன். உண்மையில் இலங்கையின் அரசி உற்பத்தியில் முக்கியமாக வலுச்சேர்க்கும் மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இருக்கின்றது. பிரதான தொழிலாக விவசாயமும் மீன்பிடியும் இருக்கிறது. எரிபொருள் இல்லாத காரணத்தினால் மீன்பிடியும் இல்லாமல் இருக்கின்றது. அத்துடன் மீன்பிடிக்குச் செல்பவர்கள் நாளாந்த வாழ்க்கையைக் கூடக் கொண்டு செல்ல முடியாமலிருக்கின்றது.

இலங்கையின் அரிசி உற்பத்திக்கு வலுச்சேர்க்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு லட்சம் ஏக்கரில் விவசாய செய்கின்றார்கள். வருடத்துக்கு அதில் 80 ஆயிரம் ஏக்கரில் இரு போக வேளாண்மை செய்கின்றார்கள். இப்போது சிறுபோக அறுவடை 80 ஆயிரம் ஏக்கரில் நடந்து கொண்டிருக்கிறது. வேளாண்மை வெட்டும் இயந்திரத்துக்காக ஒரு ஏக்கர் அறுவடைக்காக 15 லீற்றர் டீசல் தேவைப்படுகிறது. அந்த வேளையில் சில ஐ.ஓ.சி. எரிபொருள் நிலையங்கள் ஊடாக டீசல் கொடுக்கப்பட்டாலும், அந்த ஐ.ஓ.சி எரிபொருள் நிலைய முதலாளிமார் விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதனால் நான் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

இந்தப் போகத்தில் 40ஆயிரத்துக்கும் அதிக பணம் கொடுத்து யூரியா பெற்றிருக்கிறார்கள். 20ஆயிரத்துக்கு மேல் கொடுத்து களைநாசினிகளைப் பெற்றிருக்கிறார்கள். ஒரு ஏக்கருக் அவர்களுக்குரிய செலவுதானம் இரண்டு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. இந்த நிலையில் நெல்லின் விலையை அரசாங்கம் நிர்ணயிக்கவேண்டும். நெல் சந்தைப்படுத்தும் சபை ஊடாக ஒரு மூடை நெல்லின் விலையை 10ஆயிரத்துக்கு மேல் நிர்ணயித்தால் தான் விவசாயிகள் நட்டத்திலிருந்து மீண்டுகொள்வார்கள். விவசாயிகளிடமிருந்து நெல்லை 10ஆயிரம் ரூபாவுக்கு மேல் பெற்று அரிசை மானியமாகக் கொடுக்கலாம்.

தற்போது பொலநறுவை, அனுராதபுர மாவட்டங்களில் விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கியிருக்கிறார்கள். தற்போது விவசாய அமைச்சர் அவர்கள் 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா கொடுக்கவிருப்பதாகக் கூறியிருக்கிறார். 10ஆயிரம் ரூபாவுக்கு யூரியா பெறுபவர்கள் அதிகமான லாபத்தைப் பெறுவார்கள். அனுராதபுரம் பொலநறுவை மாவட்டங்களின் அறுவடை காலத்தை வைத்தே நீங்கள் நெல்லின் விலையைத் தீர்மானிக்கின்றனர். அவ்வாறில்லாமல் தற்போதைய அறுவடைக்காலத்தில் நெல்லின் விலையைத் தீர்மானித்தால் எங்களது விவசாயிகள் பலனடைவார்கள்.

நாட்டின் இந்த நிலைமையைக் கொண்டுவந்தவர் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஜனாதிபதியாக வந்த காலத்தில் எடுத்த மடத்தனமான முடிவுகளினால் நாடு இந்த நிலைக்கு சென்றிருக்கிறது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களைப் பலியெடுத்தவர் இன்று நாட்டின் 22 மில்லியன் மக்களையும் ஒரே சவக்குளிக்குள் கொன்று குவிக்கும் ஒரு நிலைக்குக் கொண்டுவந்திக்கின்றார். அந்த நிலைமையில் அவரை ஒரு லட்சத்து 40ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆவிகள் துரத்துகின்றன. நேற்று இந்தப் பாராளுமன்றத்துக்கு வந்திருந்தார். இந்தப் பாராளுமன்றத்தில் துரத்தப்பட்டிருக்கிறார். அவருக்கு வாக்களித்த இந்த நாட்டின் 69 லட்சம் மக்களுமே அவரைத்துரத்துகிறார்கள். இந்த நாட்டின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவேண்டும்.

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும்-அருட்தந்தை மா.சத்திவேல்

தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (05) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

குருநாகல் ஐஓசி பெட்றோல் நிலையத்தில் இராணுவ அதிகாரி பொதுமகன் மீது நடத்திய மிலேச்சதனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று மட்டுமல்ல நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படவும் வேண்டும். இராணுவ அதிகாரியின் செயற்பாட்டை அமைதியுடன் அனுமதித்து நின்ற ஏனைய இராணுவத்தினரும் காவல்துறையினரும் தண்டனைக்குரியவர்களே. இதே இராணுவம் வடக்கு கிழக்கில் நிகழ்த்திய கொடுமைகளுக்கு நீதி கேட்கும் குரலும் தெற்கின் சமூகத்தின் காதுகளுக்கும் எட்டவேண்டும். உணர வேண்டும். அது இதுவரை உணரப்படவில்லை.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் குடும்பமாக வீதிக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். அரசு நாட்டின் வளங்களையும், பொருளாதாரத்தையும் சரியான வழியில் முகாமைத்துவம் செய்யாமையே இதற்கு காரணம். தன்னுடைய பிழைகளை திருத்திக் கொள்வதற்கு பதிலாக இராணுவத்தை வீதியில் இறக்கியிருப்பதும் அவர்கள் தமது படைபலத்தை பொதுமக்கள் மீது காட்டுவதும் அதிகரித்துள்ளன. இது இன்னும் ஒரு இரத்தம் சிந்துதலுக்கு வழி வகுத்து விடுமோ எனும் பயம் மக்கள் மத்தியிலே எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறை சம்பவங்களே 30 வருட யுத்தத்திற்கு காரணம். அது மட்டுமல்ல அதே இராணுவம் யுத்த குற்றங்களையும் இழைத்துள்ளது. இன அழிப்பையும் அரச ஆதரவோடு நிகழ்த்தியுள்ளது. இதுவே தமிழர்களின் குற்றச் சாட்டு.

வடக்கு கிழக்கு எங்கும் பலவந்த கைதுகளும், காணாமல் ஆக்குதலும் மட்டுமல்ல சமூக கொலைகளும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இராணுவத்தினர் அதனை நிகழ்த்தியுள்ளனர் என்பது நிரூபிக்கப்பட்டும் உள்ளது உதாரணமாக செம்மணி, மிருசுவல் படுகொலைகளை நாம் குறிப்பிடலாம். இக்குறைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவும் இல்லை நீதிமன்றம் மரண தண்டனை கொடுத்த போது கூட அந்த மரணதண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றார் அத்தோடு குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் பதவி உயர்வு கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கும் இதையெல்லாம் தெற்கின் சமூகம் பார்த்து மகிழ்ந்தது. வீரப்படையினர் என கொண்டாடினர்.

இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்திடம் தனது உறவுகளை கையளித்த அன்னையர் கடந்த 13 வருட காலமாக எங்கள் பிள்ளைகளுக்கு, எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என கேட்கின்றனர். அது தெற்கு சமூகத்தின் காதுகளுக்கு எட்டவில்லை. நீதி கேட்போர் தேசத் துரோகிகளாகவும் பயங்கர வாதிகளாகவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

அது மட்டுமல்ல 1971, 1988/89 காலப்பகுதியில் இராணுவத்தின் முகம் என்னவென்று தெற்கின் சமூகத்திற்கு தெரிந்தும் இராணுவம் வடக்கில் நடத்திய வன் கொடுமைகளை அனுமதித்த பௌத்தப்பிக்குகள் ஆசீர்வதித்தனர். வடக்கு கிழக்கில் நடந்த உண்மையின் நேரடி சாட்சிகள் முன்வைக்கப்பட்ட போதும் அவற்றை ஏற்றுக் கொள்வதற்கு தெற்கின் சமூகம் ஆயத்தமாக இருக்கவில்லை.

இப்போது அதே இராணுவம் தெற்கில் ஆயுதங்களை தூக்கி நிற்கின்ற போது, நெஞ்சில் உதைக்கும் போது வலிக்கிறது. இதனைத் தான் அரசியல் கைதியான குட்டிமணி 1982ல் வெளிப்படையாக அறிவித்தார். வடக்கிலே இராணுவம் எதனை செய்கின்றதோ அது தெற்கிலும் நடக்கும் எனும் பொருள்பட கருத்துரைத்தார். அது நிதர்சனமாக நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த 74 ஆண்டுகளாக இந்நாட்டை ஆட்சி புரிபவர்கள் மக்களுக்கு எதிரானவர்கள் என்பதை தமிழர்கள் பல தசாப்தங்களாக கூறி வந்தார்கள்.பேரினவாத போதை ஊட்டப்பட்டதால் தெற்கு அதனை ஏற்கவில்லை. இப்போது அதை அரசு பசியையும், பட்டினியையும் நாட்டுக்கு தந்துள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் பதவிகளில் மட்டும் நோக்காக கொண்டு செயல்படுகின்றார்.

தமிழர்களுக்கு எதிராக இராணுவம் புரிந்த பாரிய யுத்த குற்றங்களுக்கான நீதி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும். அரசியல் நீதியும் தமிழ் மக்களுக்கு உரியது. இதனையும் தெற்கின் சமூகம் உணர்ந்தால் மட்டுமே வடக்கின் சமூகத்தோடு கைகோர்க்க முடியும். புதிய அரசியல் கலாச்சாரத்தை கட்டி எழுப்ப முடியும். எதிர்காலம் எதிர் கால சந்ததியினர் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

நாடு முழுவதும் தற்போது மக்கள் முகம் கொடுக்கின்ற பொருளாதார நெருக்கடிக்கு, நாட்டில் நீண்ட காலம் நிலவிய யுத்தமும் அதற்காக பல்வேறு நாடுகளால் கொடுக்கப்பட்ட அல்லது வாங்கி குவிக்கப்பட்ட இராணுவ தளபாடங்களும் அவற்றின் பராமரிப்பும் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வகையிலும் தொடர்பற்ற இராணுவத்தை கொண்டிருகின்றமையுமே அடிப்படை காரணம். இதனை தெற்கு உணர வேண்டும்.உலகின் அதி கூடிய இராணுவத்தை கொண்டிருக்கின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை 14 ம் இடத்தை தமதாக்கியுள்ளது. இந்த சுமையே மக்களை வீதிக்கு தள்ளியுள்ளது. அதற்கு சொந்தக்காரர்களே இன்று வரை நாட்டை ஆள்கின்றனர். முற்படையினர் சர்வாதிகாரத்தினதும் முதலாளித்துவத்தினதும் காவலர்களே என்பதை தெற்கு உணர்கின்ற காலமிது” என்றுள்ளது.

Posted in Uncategorized

”ஒன்றிணைந்து நாட்டை மீட்போம்”: சஜித் அரசியல் கட்சிகளுடன் சந்திப்பு!

நாடு தற்போது பெரும் பாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் இதிலிருந்து மீள்வதற்கு அனைவரும் ஒன்றிணைந்து சமூக,பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்குச் செல்ல வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வாதிகாரம் இன்றி அனைவரது கருத்துக்களுக்கும் செவிசாய்க்கும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும், அதற்காக முற்போக்குக் கட்சிகளின் முன்மொழிவுகளையும் யோசனைகளையும் செவிமடுப்பதாகக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பன்முகப்படுத்தப்பட்ட யோசனைகளை ஒன்றிணைக்கக்கூடிய பொதுவான தேசிய நிகழ்ச்சி நிரலின் மூலம் இறுதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதே எதிர்க்கட்சியின் நோக்கமாகும் எனவும் அந்த நிகழ்ச்சி நிரலின் ஊடாக நாட்டு மக்கள் இழந்த மூச்சை மீண்டும் வழங்க முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாரிய வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான “தேசிய மறுசீரமைப்பு மற்றும் அடுத்தக்கட்ட பயணம்” என்ற வேலைத்திட்டத்தின் தீர்மானமிக்க கூட்டம் நேற்று (04) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தவிசாளர் சரத் பொன்சேகா, வைத்தியர் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், சி.வி.விக்னேஸ்வரன், பி.திகாம்பரம் உட்பட அரசியல் தலைவர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன், ஜனரஞ்சன, காமினி வியங்கொட, ரொஹான் சமரஜீவ உட்பட சிவில் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.