ஜனாதிபதிக்கு அவசர கடிதம் அனுப்பிய மகாநாயக்க தேரர்கள்!

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மீண்டும் அழைத்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்கும் போது ஜனாதிபதி மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணக்கம் காண வேண்டிய பிரேரணை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அஸ்கிரிய, மல்வத்து, அமரபுர மற்றும் ராமஞ்ஞ மகாநாயக்க தேரர்களினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை மூலம் மக்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் – ஜப்பான்

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை ஜப்பானிடமும் உதவியை கோரியுள்ளது. ஆனால் தற்போதைய சூழலில் உதவ முடியாது என ஜப்பான் அறிவித்துள்ளது.

கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நேற்று சந்தித்தபோது இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நிதியுதவி தவறாக நிர்வகிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எனவே, ஜப்பான் இந்த நேரத்தில் நாட்டுக்கு உதவாது என்றும் அவர் இதன்போது தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், ஜப்பான் அதை பின்னர் பரிசீலிக்கலாம் என்றும் அவர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Posted in Uncategorized

அமைதியான போராட்டங்களை அடக்குவதற்கு காவல்துறை, ஆயுதபடையினரை பயன்படுத்த கூடாது-BASL வலியுறுத்தல்

அமைதியான போராட்டங்கள் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரத்தை ஒடுக்குவதற்கு காவல்துறை மற்றும் ஆயுதப்படைகளை பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை விமர்சிக்கும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை   ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை நேற்று (ஜூன் 29) காலி முகத்திடல் பகுதியில் இருந்து காவற்துறை மற்றும் இராணுவத்தினரால் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை BASL வெளியிடப்பட்டுள்ளது.

அதில் “காலி  முகத்திடல் பொது பகுதி என்பதனால்  அங்கு கூடும்  போராட்டக்காரர்களை கலைக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை. மக்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த அனுமதிப்பதன் முக்கியத்துவத்தை   தொடர்ந்து நினைவூட்டுகிறோம். கருத்து மற்றும் கருத்து வெளிப்பாட்டின் உரிமை உட்பட எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமையை நசுக்குவது நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு தீர்வாகாது, எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் சொல்லொணா இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர் என அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கை-மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு வழங்கியது சீனா

இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்காக 1000 மெட்ரிக் தொன் அரிசியை கல்வி அமைச்சுக்கு சீனா வழங்கியுள்ளது.

7900 பாடசாலைகளின் 11 இலட்சம் மாணவர்களுக்கு 6 மாத காலத்திற்கு உணவு வழங்குவதற்கு சீன அரசு திட்டமிட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான மேலும் இரண்டு தொகுதி அரிசி எதிர்வரும் இரண்டு வாரங்களில் கிடைக்கவுள்ளது.

Posted in Uncategorized

யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை

இந்த அரசாங்கம் எமது பிள்ளைகளை காணாமல் ஆக்கிவிட்டு பொருளாதாரத்தாலும் எம்மை நசுக்குகின்றது. யுத்த காலத்தில் கூட இவ்வாறான பொருளாதார நெருக்கடியை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. ஆனால் இன்று எரிபொருள், பசளை, உணவு உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயூர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் கிளிநொச்சியில் இடம்பெற்ற கவனயூர்ப்பு போராட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

1932 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாதாந்தம் 30ம் திகதி கவனயூர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினமும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இன்றைய போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்களையு்ம, கோரிக்கைகளையும் உள்ளடக்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர்.

இன்று 1932 நாட்களாக தீர்வின்றி போராடி வருகின்றோம். இந்த நிலையில் எமது தாய்மார் அன்றாட உணவு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்து வருகின்றனர். இந்த நிலை தொடராது எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்ற உண்மையை கண்டறிய வேண்டும்.எமது பிள்ளைகளை காணாமல் செய்த கோட்டாவின் அரசு இன்று எமக்கு பொருளாதார ரீதியில் நெருக்கடியை கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் சர்வதேசம் தலையீடு செய்து எம்மையும், எமது பிள்ளைகளையும் மீட்பதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இன்று வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கான சங்க அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் முன்னெடுக்கப்பட்ட போது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

கடும் பொருளாதார நெருக்கடி – வவுனியாவில் இருந்து நான்கு பேர் தனுஷ்கோடியில் தஞ்சம்

பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தனுஷ்கோடி சென்றுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் பொலிஸ் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.(

”பொருளாதார பிரச்சனைகளை தீர்க்க உதவுவோம்”: அமெரிக்க தூதுவர்!

பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சன்ங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார்.
இன்று (30) பிற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில்  ஜூலி சன்ங் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றது.
சர்வதேச நாணய நிதியத்துடனான உறவுகளை வலுப்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிப்பதாக அந்நாட்டில் இருந்து வருகை தந்த உயர்மட்ட இராஜதந்திரக் குழு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனும் பல சந்தர்ப்பங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுக்காகவும் மற்றும் அதன் மனிதாபிமான உதவிகளை வழங்கி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன்  இலங்கைக்கு வழங்கும் ஆதரவிற்காக ஜனாதிபதி அவர்கள் தமது நன்றியைத் தெரிவித்தார்.
இலங்கை எதிர்நோக்கும் தற்போதைய நிலைமையை தாம் அறிந்திருப்பதாகவும், நாடு விரைவில் மீண்டு வருமென நம்புவதாகவும்  ஜூலி சன்ங் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.
Posted in Uncategorized

இலங்கை-தூதரக சேவைகள் மூன்று நாட்களுக்கு மட்டுப் படுத்தப் படுவதாக அறிவிப்பு

தூதரக சேவைகளை வழங்குவது இன்று முதல் ஜூலை 10 வரை மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கையின்படி, தூதரகப் பிரிவு திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாத்திரமே பொதுமக்களுக்குத் திறக்கப்படும்.

இதேவேளை யாழ்ப்பாணம், மாத்தறை, கண்டி, திருகோணமலை மற்றும் குருநாகல் ஆகிய இடங்களிலுள்ள பிராந்திய தூதரக அலுவலகங்களும் இந்த நாட்களில் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யும் IMF பிரதிநிதிகள் குழு

IMF பிரதிநிதிகள் குழு விஜயம் நிறைவு: சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்யவுள்ளது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான பிணை எடுப்புப் பொதி தொடர்பில் அரசாங்கம் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக 10 பேர் கொண்ட IMF குழு கடந்த ஜூன் 20 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் செய்தது.

பிணைமுறிப் பொதிக்கு வழிவகுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பாக IMF பிரதிநிதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பல தரப்புகளுடன் கலந்துரையாடினர்.

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ள இலங்கை உத்தேசித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகக் குடியேறிய 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்

சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்க முயன்ற போது கைது செய்யப்பட்ட 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இவர்கள் சிலாபத்தில் வசிப்பவர்கள் என்பதுடன், ஐந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகளும் குழுவில் உள்ளனர்.

இன்று காலை 8:40 மணிக்கு விமானத்தில் கொக்கோஸ் தீவில் இருந்து இலங்கையர்கள் குழு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.விமானத்தில் 100 அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகளும் இருந்தனர்.

குறித்த நபர்கள் இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளால் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகை தந்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனையடுத்து 46 இலங்கையர்களும் பண்டாராநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

குறித்த நபர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Posted in Uncategorized