“சீன தடுப்பூசியை போட்டுக்கொண்டு எமது நாட்டுக்கு வர வேண்டாம்” – கட்டார் மற்றும் சவூதி அரேபியா அறிவிப்பு

மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தொழில் நிமித்தம் செல்வதற்கு பைசர் தடுப்பூசி பெற்றுக்கொள்வது அத்தியாவசியம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், சீனாவின் சினோபாம் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக்கொண்ட இலங்கை பணியாளர்களுக்கு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

எனினும் இவர்கள் தமது நாட்டுக்கு வரவேண்டுமாயின் பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டு வருமாறு கட்டார் மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்கு செல்வதற்காக சுமார் 20,000 பேர் வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளனர்.

இவர்களில் முதல் கட்டமாக சுமார் 8,000 பேருக்கே பைசர் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.

ஏனையோருக்கும் வழங்குவதற்காக பைசர் தடுப்பூசியை பெற்றுத்தருமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக வேலைவாய்ப்பு பணியகத்தின் பொதுமுகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.

தமிழ் இனப்படுகொலையை பிரித்தானியா ஒருபோதும் மறக்காது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்!

தமிழ் இனப்படுகொலையை பிரித்தானியா ஒருபோதும் மறக்காது என்று, தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரும் கார்ஷல்டன் மற்றும் வெலிங்டனுக்கான உறுப்பினருமான எலியட் (Elliot Colburn, Chair of All-Party Parliamentary Group for Tamils and MP for Carshalton and Wallington) தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் நடத்திய கருத்தரங்கில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் நடத்திய கருத்தரங்கில் கலந்துகொண்ட பிரித்தானிய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரித்தானியா வாழ் தமிழர்கள் பிரித்தானிய நாட்டுக்கு ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவித்ததுடன், ஸ்ரீலங்காவில் உண்மை, நீதி மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றிற்கான தங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார்கள்.

பிரித்தானிய தமிழர் கன்சர்வேடிவ் தொடர்ந்து 8 வருடங்களாக இந்த மாநாட்டை நடத்ததிவருகின்றது.

அந்த மாநாட்டில் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற உறுப்பினர், கார்ஷல்டன், ஸ்ரீலங்காவின் பொறுப்புக்கூறல் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைகளை விதிப்பதற்கான தனது ஆதரவையும் அவர் உறுதிப்படுத்தினார்.

சர்வதேச மன்றங்களில் ஸ்ரீலங்காவிற்கு எதிராக அழுத்தம் கொடுப்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது என மாநாட்டில் உரையாற்றிய வட்போர்டின் நாடாளுமன்ற உறுப்பினர் டீன் ரஸ்ஸல் (Dean Russell, MP for Watford) தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, ஹர்லோ நாடாளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் ஹல்போன் (Robert Halfon, MP for Harlow) கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு சுயாட்சி காணப்படாத நிலையில் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளதாகவும், அந்த மக்கள் நீதி மற்றும் சுயநிர்ணயத்திற்கு தகுதியானவர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஷவேந்திர சில்வா போன்ற போர்க்குற்றவாளிகளுக்கு தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும், இனப்படுகொலையை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

ராஜபக்ச ஆட்சியின் கீழ் மனித உரிமைகள் விரைவாக தடுக்கப்படுவதையும், இராணுவமயமாக்கல் மற்றும் பொறுப்புக்கூறலை மாற்றியமைப்படுகின்றமை குறித்து, சிப்பிங் பார்னெட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரசா வில்லியர்ஸ் (Theresa Villiers, MP for Chipping Barnet) எச்சரித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் ஸ்ரீலங்காவின் சீர்திருத்த மறுப்பு தெளிவாவதாக வில்லியர்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Posted in Uncategorized

டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் கோட்டபாய வரை நாடு தொடர்பாக ஒரு முகம், ஒரு கொள்கை இல்லை – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வரை இவர்கள் எவருக்கும் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை. ஒரு கொள்கை இல்லை, நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பெற்றோலிய வளங்கள் சம்மந்தமான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

மன்னாரிலே எரிபொருள், எரிவாயு எடுக்கலாம் என்ற பேச்சுக்கள் வதந்திகள் இருக்கும் இந்த நேரத்தில் இலங்கையில் ஐ.ஓ.சி நிறுவனம் சம்மந்தமாகவும், திருகோணமலையில் இருக்கும் எண்ணெய்த் தாங்கிகள் சம்மந்தமாகவும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் நான் சார்ந்த பிரதேசம் மற்றும் என் இனம் சம்மந்தமாகவும் சில கருத்துக்களைக் கூற நினைக்கின்றேன்.

அதற்கும் மேலாக இன்று ஆசிரியர் தினம். ஏணிப்படிகளாக இருந்து மாணவர்களை உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்து அவர்களை நற்பிரஜைகளாக ஆக்கும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு என் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு, இன்று அவர்கள் வீதியிலே இறங்கிப் போராடும் ஒரு நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளிவிட்டிருக்கின்றது. அவர்களது அபிலாசைகள் தீர்த்துவைக்கப்படாத காரணத்தினால் அவர்கள் இன்று போராடும் நிலைக்கு வந்திருக்கின்றார்கள். அதனால் எதிர்காலத்தில் மாணவர்களின் கல்விநிலை எவ்விதத்திலும் பாதிக்காத வண்ணம் ஆசிரியர்களது கோரிக்கைகளை அரசு செவிமடுத்து உடனடியாகத் தீர்த்து வைக்க வேண்டும்.

அத்துடன் இந்த நாடடின் உணவு உற்பத்தியில் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் இன்று மிகவும் வேதனையுடன் அவர்களது விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. இன்று சேதனைப் பசளை, நஞ்சற்ற உணவு தயாரிப்பு என்றெல்லாம் கூறி அவர்கள் வயிற்றில் அடிக்கும் செயற்பாடுகள் தான் நடைபெறுகின்றன. சேதனைப் பசளையின் முழுமையான உற்பத்தி இங்கு கிடையாது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்கின்றீர்கள் அதிலும் கிருமிகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சீனாவில் இருந்து வந்த சேதனப் பசளைகளில் தொற்றுக் கிருமிகள் இருப்பதாக நிராகரித்தமைக்காக விவாசய அமைச்சருக்கும், அவருடன் சம்மந்தப்பட்ட பகுப்பாய்வாளர்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இன்று அதனை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு யோசிக்கின்றீர்கள். சேதனப் பசளையில் நைதரசன் எத்தனை வீதம் இருக்கின்து. யூரியாவில் எத்தனை வீதம் இருக்கிறது. தற்போதும் யூரியா சந்தையில் கிடைக்கின்றது. ஆனால் அதன் விலை மூன்று மடங்கிற்கு அதிகமாக இருக்கின்றது. இப்படி இருக்க விவசாயிகள் எவ்வாறு தங்கள் விசாயத்தைச் செய்வார்கள்.

ஒரு ஏக்கர் வேளாண்மைக்கு நாற்பது ஐம்பது மூடைகள் விளைவித்தவர்கள் இன்று இருபது மூடைகள் விளைவிப்பதற்கும் முடியாமல் இருக்கின்றார்கள். இவ்வறான நிலைமை ஏற்பட்டால் தொடர்ச்சியாக அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையே ஏற்படும். அவ்வாறு இருக்கும் போது இந்த நாடு எவ்வாறு தன்நிறைவை அடையும்.

சேதனைப் பசளை மூலமாக தேயிலைப் பயிர்செய்கை கூட இன்று பாதிப்படைவதாக முன்னாள் பெருந்தோட்ட அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்கள் கூறியிருக்கின்றார். இந்த நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பு தேயிலை ஏற்றுமதி. அதுகூட பாதிப்படையும் நிலையில் இருக்கின்றது.

இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், அரசாங்கத்திற்கு ஒரு கொள்கை இருக்க வேண்டும். நான் சார்ந்த கட்சியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு கொள்கை, ஒரு இலக்கு இருக்கின்றது. எமக்கு ஒரு முகம் மாத்திரமே இருக்கின்றது. பாராளுமன்றத்தில், பிரதேசத்தில், எமது மக்களிடத்தில், உள்நாட்டில் அல்லது சர்வதேசத்தில் எங்கு எப்போது எவ்விடம் சென்றாலும் நாம் ஒரு முகத்தையே காட்டி வருகின்றோம். ஆனால் எமது ஜனாதிபதி, பிரதமர் ஆட்சியாளர்கள் என இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல டி.எஸ்.சேனநாயக்கா, எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, ஜே.ஆர்.ஜெயவர்த்தன, ஆர்.பிறேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன ஏன் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வரை இவர்கள் எவருக்கும் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை. ஒரு கொள்கை இல்லை. நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை.

அத்தகைய எமது நாட்டின் ஜனாதிபதி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து எமது புலம்பெயர் அமைப்புகளுக்கு கலந்துரையாட அழைப்பு விடுத்தார். புலம்பெயர் அமைப்புகளையும், நபர்களையும் தடைசெய்து விட்டு அவர்களைப் பேச்சுக்கு அழைப்பது நகைப்புக்கிடமானது. உள்நாட்டுப் பொறிமுறைக்குள் தீர்வு காண்பேன் என்று அவர் சொல்லி மூச்சு விடுவதற்குள் அநுராதபுரம் சிறைச்சாலைக்குள் இராஜாங்க அமைச்சர் அங்குள்ள தமிழ் அரசியற் கைதிகளின் மனித உரிமையையும், மாண்பையும் சிறப்பாகக் கவனித்தார். இதுதான் உள்ளகப் பொறிமுறை என்னும் ஒரு சோற்று உதாரணம்.

இதனை விட இன்றைய பிரதமரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச ஐக்கிய நாடுகள் சபையிடமும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடமும் பதின்மூன்று போதாது பதின்மூன்று பிளஸிற்ச் செல்வேன் என்றார். இவை, எதை எப்படிப் பேச வேண்டுமோ அதை அப்படிப் பேசி உள்நாட்டையும், சர்வதேசத்தையும் தம்வசப்படுத்தி தனது இலக்கை அடையும் பக்குவம் பெற்றவர்கள் எமது ஆட்சியாளர்கள் என்பதையே காட்டுகின்றது.

அதன் தொடர்கதைதான் தற்போதைய ஜனாதிபதியின் ஐ.நா. உரையும், புலம்பெயர் அமைப்புகளைக் கலந்துரையாடலுக்கான அழைப்பும். உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட அமைப்புகளை அழைப்பதென்பது அவசரத்தில் புத்தி மழுங்கிய செயற்பாடாகவே பார்க்கப்படுகின்றது. கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி எமக்கு வைகுண்டம் காட்டும் உரையே அவரது உரை.

எம் தமிழ் மக்கள் தொடர்பாக, எமது வடக்கு கிழக்கு நிலம் தொடர்பாக, எமது தமிழ் மொழியின் பாவனை தொடர்பாக, எமது ஆறு தசாப்த அகிம்சை, ஆயுத வழிப் போராட்டம் தொடர்பாக எவ்வித புரிதலும் தெளிவும் பெறும் எண்ணம் இன்னும் ஆட்சியாளர்களிடம் இல்லை.

ஜனாதிபதி ஒரு கருத்து, பிரதமர் ஒரு கருத்து, ஜனாதிபதி சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து, பிரதமர் சார்பான அமைச்சர்கள் ஒரு கருத்து, தமிழர்களுக்கு என்ன பிரச்சனை உள்ளது என்போர் ஒருபறம் என இவர்களா எமது பிரச்சனைகளுக்குத் தீர்வு தருவார்கள்.

இன்று பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் பற்றிப் பேசப்படுகின்றது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் எப்படி எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி அறிந்து கொள்ள வேண்டும். புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சனைக்கு இரு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் உருவாகியது. மாகாணசபை முறைமை உருவாகியது. மாகாணசபைத் தேர்தலும் நடந்தது. இன்று மூன்று நான்கு வருடங்களுக்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் இல்லாமல் குட்டி ஜனாதிபதியான ஆளுநர்களின் கைகளிலேயே மாகாணங்கள் இருக்கிறது. மிக விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடாத்தி மாகாணசபைகளுக்குரிய பூரண அதிகாரத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

நாடாளுமன்றில் ரணிலுடன் மோதிய தினேஸ்

பிரதமரிடம் கேள்வி கேட்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சபை முதல்வரும் கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தனவுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் சபையில் தர்க்கம் ஏற்பட்டது.

நாடாளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகளைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண ஒழுங்கு பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில், நாடாளுமன்றத்தில் பிரதமரிடம் உறுப்பினர்கள் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் கடந்த ஒருமாத காலமாக நடைபெறவில்லை. ஏன் இந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டிருகின்றது.

இது நாடாளுமன்ற சம்பிரதாயத்துக்கு முரணாகுமென்றார். இதற்கு சபைமுதல்வர் தினேஷ் குணவர்தன பதிலளிக்கையில்,

பிரதமரிடம் கேள்வி கேட்கும் சம்ரதாய நிகழ்வை நாங்கள் நிறுத்தவில்லை. கொவிட்-19 காரணமாக நாடாளுமன்ற அமர்வு நடைபெறாததால் அதற்கான சந்தர்ப்பம் இல்லாமல் போயிருக்கின்றது.

அதேபோன்று பிரதமர் வெளிநாட்டுக்கு சென்றிருந்ததால் அது ஒத்திவைக்கப்பட்டது என்றார்.

அதனைதொடர்ந்து எழுந்த ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் நாடாளுமன்றம் வரமுடியாத நிலை ஏற்பட்டால் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பிரதமருக்கு பதிலாக சபை முதல்வருக்கு பதிலளிக்கலாம்.

அத்துடன் அரசாங்கத்தில் திறமையான புதிய உறுப்பினர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்கினால், அது அவர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்.

அதனால் அரசாங்கம் தங்களுக்குள் இருப்பவர்களுக்கு பதவிகளை பகிந்தளித்து செயற்பட்டால் புதிய உறுப்பினர்களுக்கு பயிற்சியாகவும் இருக்கும் என்பதுடன் கேள்வி கேட்பதை ஒத்திவைக்கவேண்டிய தேவையும் இருக்காதென்றார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தன, முன்னாள் பிரதமர் அனுபவத்துடன் தெரிவித்த கருத்தை மதிக்கின்றேன். ஆனால் அவர் அன்று இவ்வாறு செயற்பட்டிருந்தால் வீட்டுக்கு சென்றிருக்க மாட்டார். என்றாலும் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் உறுப்பினர்களுக்கு அதிகாரங்களை பிரித்து, அதிகமானவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி இருக்கின்றனரென்றார்.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க எம்பி தெரிவிக்கையில், நான் வீட்டுக்கு சென்றமை தொடர்பில் கவலையடையவில்லை. என்றாலும் தற்போது இருப்பவர்கள் செய்யும் நடவடிக்கைகள் தொடர்பில்தான் கவலையாக இருக்கின்றது என்றார்.

சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையை வழங்கத் தயாராகும் ஐரோப்பிய ஒன்றிய குழு

சிறிலங்காவிற்கு கிடைக்கும் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை தக்கவைத்துக்கொள்வதற்காக நடைமுறைப்படுத்த வேண்டிய 27 சர்வதேச கடைப்பிடிப்புகள் தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐரோப்பிய ஒன்றிய சிரேஷ்ட அதிகாரிகள் குழு தனது விஜயத்தை நிறைவு செய்துள்ளது.

ஐந்து பேர் கொண்ட குறித்த குழு 2021 செப்டெம்பர் 27ஆம் திகதி சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கியிருந்த இந்தக்குழு, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச, வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ், நீதி அமைச்சர் அலி சப்ரி மற்றும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச போன்ற அரசாங்க பிரதிநிதிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது.

எதிர்கக்ட்சி, சிவில் சமூக அமைப்புக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வழங்குநர்களுடனும் இந்த அதிகாரிகள் சந்திப்புக்களை முன்னெத்தனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடுகளின் தூதுவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் முகவர் அமைப்புக்களின் பிரதான அதிகாரிகளுடனும் இந்தக் குழு சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தது.

மனித உரிமைகள் மற்றும் சட்டவிதிமுறை, பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் மற்றும் தொழிலாளர் உறவுகள் போன்றவற்றில் தாக்கம் செலுத்தியிருந்த விடயங்கள் தொடர்பில் கண்காணிப்பு குழு கவனம் செலுத்தியிருந்தது.

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பிலும் அதிகாரிகள் கலந்துரையாடியிருந்ததுடன், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தில் சிறிலங்காவை மீள உள்வாங்கிய போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது என்பது பிரதான உறுதியளிப்பாக அமைந்திருந்தது.

தற்போது பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பிலும் ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழு கேட்டறிந்ததுடன், அடிப்படை சுதந்திரங்களை அனுபவிப்பதற்கு காணப்படும் கட்டுப்பாடுகள் மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுக்கு புதிய சட்டவரைபு தயாராகின்றமை தொடர்பிலும் கவனம் செலுத்தியிருந்தது.

நாட்டில் உள்ள சகல சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிப்பது மற்றும் பாகுபாடின்றிய செயற்பாடுகள் தொடர்பிலும், இந்த விடயம் தொடர்பில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலும் அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

போதைப்பொருள் கொள்கை, சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பிலும் இந்த சந்திப்புக்களின் போது மீளாய்வு செய்யப்பட்டிருந்ததுடன், ஊழல் மோசடிபற்றியும் ஆரயப்பட்டிருந்ததாக ஐரோப்பிய ஒன்றிய சிறிலங்கா அலுவலகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இறுதிக்கட்டப் போரை வழிநடத்திய தளபதியின் மகளா ஜொகானி? வெளிவந்த பின்னணி

இறுதிக்கட்டப் போரில் மனித உரிமைகளை மீறிய கேர்ணல் பிரசன்ன டி சில்வாவின்  மகளே சிறிலங்காவின் பிரபல பாடகி ஜொகானி என்பது முன்னாள் இராணுவத் தளபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின்  அறிவிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.

சிறிலங்காவின் பிரபல பாடகிக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரத்திற்கு (“மனிகே மகே கித்தே” எனும் பாடல் மூலம் சர்வதேச இசை அரங்கில் தனது பெயரைப் பொறித்துள்ள நிலையில்) வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அவரது தந்தையாருடன் தான் பணியாற்றிய தருணங்கள், போர்க்கள அனுபவங்களை தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.

இது குறித்த அவரது பதிவில், “சிறப்புப் படைகளின் தளபதியாக, 2006 இல் உங்கள் தந்தை கேர்ணல் பிரசன்ன டி சில்வா மாவிலாறை விடுவிக்க என்னை வவுனியாவிலிருந்து கல்லாறுக்கு வரவழைத்தார்.

அங்கு சென்ற நான், 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் திகதி அன்று, ஒரு வாரத்திற்குள், காலாட்படை, பீரங்கி, கொமாண்டோ படைப்பிரிவு மற்றும் விமானப்படை உதவியுடன், மாவிலாற்றை கைப்பற்றுமாறு சிறப்புப் படைகளுக்கு (1SF / 2SF / 3SF) உத்தரவிட்டேன். இந்த சிறப்பு தாக்குதலில் விடுதலைப் புலிகள் பயன்படுத்திய மாவிலாற்றின் முக்கிய மதகுகளை இராணுவம் மீட்டது.

இதனால், “மனிதாபிமான காரணிகளை” போரின் கருவிகளாக பயன்படுத்தக்கூடாது என்று விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கற்பிக்கப்பட்டது.

மாவிலாக்குப் பின், கேர்ணல் பிரசன்ன டி சில்வா, சம்பூர், வாகரை, கதிரவெளி மற்றும் வெருகல் உட்பட கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரையிலான அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்புப் படைகளின் நடவடிக்கைகளுக்கு கட்டளையிட என்னை அழைத்தார்.

அவர் இறுதிப் போரில் 55 ஆவது மற்றும் 59 ஆவது பிரிவுகளின் தளபதியாக இருந்ததுடன், போர்க்களத்தில் சாதுர்யமாக இருந்தார். உங்கள் தந்தையின் திறமையான மற்றும் கூட்டு அபிலாஷைகளின் மூலமும், வீரம் மற்றும் தலைமைத்துவத்தின் மூலமும் கடந்த காலத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றிகள் போல, இன்று சர்வதேச அரங்கில் நீங்கள் எங்கள் தாய்நாட்டிற்கு பெரும் புகழை தேடி தந்துள்ளீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இறுதிப் போரில் – போர்க்களத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்களில் கேர்ணல் பிரசன்ன டி சில்வாவிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டென்பதை சரத் பொன்சேகாவின் இந்தப் பதிவு வெளிக்காட்டியுள்ளது.

Posted in Uncategorized

அவசர அமைச்சரவைக் கூட்டம் – அழைப்பு ஜனாதிபதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று  வியாழக்கிழமை மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பண்டோரா பேப்பர்ஸ் விவகாரம் – சுயாதீன விசாரணை கோரி ஜனாதிபதிக்கு நடேசன் கடிதம்!

பண்டோரா பேப்பர்ஸில் தனக்கும் தனது மனைவிக்கும் எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக சுயாதீன விசாரணையொன்றை மேற்கொள்ளுமாறு திருக்குமார் நடேசன் ஜனாதிபதியிடம் கோரியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக உலகின் பெரும்புள்ளிகள் பலரின் மறைமுக சொத்துக்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இலங்கையின் பிரபல தொழிலதிபரான திருக்குமார் நடேசன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

தனக்கும் தனது மனைவியான முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷவுக்கும் சொந்தமான மறைமுக வங்கிக் கணக்குகள் மற்றும் சொத்துக்கள் வெளிநாடுகளில் உள்ளதாகக் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அந்தக் கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறே, குறித்த ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் குற்றவாளிகள் என்ற பொதுவான கருத்து தற்போது சமூகத்தின் மத்தியில் வியாபித்துள்ளது என்றும் குறித்த ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பெரும்பாலானோர் உத்தரவிட்டுள்ளனர் என்றம் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் தாம் எந்தவொரு குற்றச் செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் திருக்குமார் நடேசன் தனது கடிதத்தினூடாக ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதியொருவரின் தலைமையிலான விசாரணைக் குழாமொன்றினூடாக இது தொடர்பாக உடனடியாக விசாரணைகளை மேற்கொண்டு தனது மனைவியின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள கலங்கத்தை துடைப்பதற்கான பின்னணியை உருவாக்கித் தருமாறு அவர் மேலும் கோரியுள்ளார்.

Posted in Uncategorized

மாகாண பயணத் தடை – தனியார் பஸ்கள் சுற்றிவளைப்பு

பயணத் தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பஸ் வண்டிகள் 2 இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, கல்முனை ஊடாக கொழும்பு நோக்கி சட்டவிரோதமாக இரு பஸ்கள் சென்று கொண்டிருப்பதாக இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பெரியநீலாவணை இராணுவ காவலரனில் வைத்து புதன்கிழமை (6) இரவு 10 மணி அளவில் தடுத்து நிறுத்தப்பட்டது.

இதன்போது குறித்த இரு வேறு பஸ் வண்டிகளிலும் சுமார் 100 க்கும் அதிகமான பயணிகள் இருந்ததுடன் அவ்விடத்திற்கு வருகை தந்த கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் சாந்த விஜயகோன் சுகாதார தரப்பு அதிகாரிகளினால் பயணிகள் அனைவரும் அறிவுறுத்தபட்டு மீண்டும் குறித்த பஸ்களில் அழைத்து செல்லப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் சிறுது நேரம் தடுத்து வைக்கப்பட்டு எச்சரிக்கப்பட்ட பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த பஸ் வண்டிகளின் சாரதி நடத்துனர்களிடம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தவிர அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மாகாணங்களுக்கு இடையிலான பயணங்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் மாகாணத்தில் உள்வரும், வெளியேறும் பல நுழை வாயில்களில் கடும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தை தொடர அனுமதிக்கப்படுவதாகவும் அவ்வாறு கட்டுப் பாடுகளை மீறி பயணம் செய்பவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பட்டு வருவதாகவும் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன் மாகாணங்களுக்கு இடையில் பயணத்தடை தொடர்ந்தும் அமுலில் உள்ள நிலையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடையை மீறி அம்பாறை மாவட்டத்தில் இருந்து இரவு வேளைகளில் குளிருட்டப்பட்ட பல தனியார் பஸ்கள் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றதை அவதானிக்க முடிகின்றது.

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு – இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்கும் விடயத்தில் அரச சேவையின் ஏனைய துறைகளுக்கு அநீதி ஏற்படாத வகையில் தீர்மானம் மேற்கொள்ள வேண்டியது அனைத்து அரசாங்கங்களுக்கும் உரிய பொறுப்பாகும் என கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன நேற்று (06) பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் இந்த பிரச்சினைக்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பல கட்டங்களில் தீர்வை பெற்றுக்கொடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பது நிதி சம்பந்தப்பட்ட பிரச்சினை மற்றும் அல்ல. 1994 ஆம் ஆண்டில் ஆசிரியர் சேவை யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டு சம்பளம் அதிகரிக்கப்பட்டது அதன் பின்னர் இடம்பெற்ற அரச சேவை சம்பள முரண்பாட்டை நீக்குவதற்காக பெரேரா சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

அதன் பின்னர் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவையின் சம்பளம் தொடர்பான சிக்கலை புறந்தள்ளி அரச சேவையின் முரண்பாட்டை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் போது ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சேவைக்கும் ஏனைய அரச சேவைகளுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள முரண்பாடு தொடர்ந்து 24 வருடங்களாக நிலவியதாக ராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.