நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் கோரிக்கை

கொரோனா பரவலை கட்டுப்பாடுத்துவதற்காக ஒருவார காலம் நாட்டை முடக்குமாறு அஸ்கிரி – மல்வத்து தேரர்கள் ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

தடுப்பூசி வழங்குவதன் மூலம் மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிக்காக ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் அவர்கள் பாராட்டியுள்ளனர்.

இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், ஒட்டுமொத்த மக்களும் இன்று பேரழிவை எதிர்கொள்வதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த நேரத்தில் மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காக, சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் குறைந்தது ஒரு வார காலம் நாட்டை மூடி நோய் பரவுவதைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Posted in Uncategorized

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 2,720 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 372,079 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 318,714 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6,604 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு சீனா கொடுத்த பல்லாயிரம் கோடி கடன் உதவியா? ஆதிக்கமா?

சீனாவிடமிருந்து இலங்கை கடந்த 17ஆம் தேதியன்று 61.5 பில்லியன் இலங்கை ரூபாய் (6150 கோடி இலங்கை ரூபாய்) மதிப்பிலான கடனுதவியை உடன்படிக்கையொன்றின் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளது.

இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில், பதிவொன்றின் ஊடாக இந்த தகவலை வெளியிட்டிருந்தது. இலங்கையின் கோரிக்கைக்கு அமையவே இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடனால் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிக்கும் என்ற விமர்சனம் எழுந்துள்ள அதே வேளையில், வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தவே கடன் வாங்கப்பட்டுள்ளது என்று இலங்கை அரசு தெரிவிக்கிறது.

கோவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த கடன் வழங்கப்பட்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்று பரவ ஆரம்பித்த காலம் முதல், நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக ஆளும் தரப்பு அனைத்து சந்தர்ப்பங்களிலும் தெரிவித்து வருகின்றது.

இலங்கையின் பிரதான வருமான வழியான சுற்றுலாத்துறை, 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் முழுமையாகவே பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய வருமான வழிகளும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்நிய செலாவணி வருமானங்களும் குறைவடைந்துள்ளன.

இதனால், இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார வீழ்ச்சிகளை சந்தித்து வருவதாக அரசாங்கம் தெரிவித்து வருகின்ற நிலையிலேயே, இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

சீனாவிடமிருந்து அரசாங்கம் அவசரமாக இந்த கடனை பெற்றுக்கொண்டமை குறித்து, பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீட பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரனிடம் பிபிசி தமிழ் வினவியது.

நாடொன்றிற்கு குறைந்தது மூன்று மாத காலத்திற்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு இருக்க வேண்டும் எனவும், ஆனால் இலங்கை வசம் தற்போது அந்நிய செலாவணி இருப்பு கிடையாது. இதனால், கடனொன்றை பெற்றுக்கொள்ளும் போது, அந்நிய செலாவணி இருப்பு அதிகரிக்கும் என கூறிய அவர், அதனூடாக ரூபாயின்பெறுமதி வீழ்ச்சியை கட்டுப்படுத்திக் கொள்ள முடியும் எனத் தெரிவித்தார்.

தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு வரி வருமானங்கள் குறைவடைந்து, ஏற்றுமதி குறைவடைந்து, சம்பளத்தை கூட வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதேவேளை, அரசாங்கத்தினால் செலுத்த வேண்டிய வெளிநாட்டு கடன்களின் அளவு அதிகரித்துள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர், பெருமளவிலான கடன் தொகையை செலுத்த வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதற்கு தயாராகி வருகின்றமையினால், கீழ் மட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் தெரிவிக்கின்றார்.

இலங்கையில் கோவிட் பரவல் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எந்தவொரு தரப்பும் உதவிகளை செய்ய முன்வராத காரணத்தினால், இவ்வாறான கடன்களின் ஊடாக பங்களிப்புக்களை செய்ய முடியும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார உதவி மற்றும் கடனுக்காக இலங்கை பல வகைகளில் சீனாவைச் சார்ந்துள்ளது.

‘குறைந்த காலம்; அதிக வட்டி’

சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் கடன் தொகைக்கு வட்டி வீதம் அதிகம் எனவும், குறுகிய காலத்தில் இந்த கடனை செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார்.

அவ்வாறு குறுகிய காலத்தில் கடன் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், நாட்டிலுள்ள சொத்துகளை சீனாவிற்கு எழுதி கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

அவ்வாறு இல்லையென்றால், பல்வேறு தேவையற்ற ஒப்பந்தங்களுக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் தெரிவிக்கின்றார்.

சர்வதேச செலாவணி நிதியம் அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களிடமிருந்து கடனை பெற்றுக்கொள்ளும் போது பிரச்னைகள் இருக்காது என கூறிய அவர், நாடொன்றிடமிருந்து கடன் வாங்கும் போது பிரச்னை காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சீனா, மானியங்களை வழங்காது. கடன்களையே வழங்கும்; சீனா, தமது வர்த்தக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே, இவ்வாறான கடன்களை வழங்குவதாகவும் பேராசிரியர் தெரிவிக்கின்றார்.

அதனால், சீனாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் கடன் தொகையானது, இலங்கையை சீனாவின் ஆளுகைக்குள் வைக்கும் நிலைமையை ஏற்படுத்தும் என பேராசிரியர் சங்கரன் விஜயச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே இந்த கடன் தொகை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சீனா

இலங்கை சீன அரசாங்கத்திடமிருந்து பல்வேறு கடன்கள், அபிவிருத்தி திட்டங்களுக்கான முதலீடுகள் என பெருந்தொகையான பணத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

அரசு என்ன கூறுகிறது?குறிப்பாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் தேதி 500 மில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தமொன்றில் இலங்கை அரசாங்கமும், சீன அபிவிருத்தி வங்கியும் கைச்சாத்திட்டிருந்தன.இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டை விமான நிலையம், தெற்கு அதிவேக வீதி, கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகர் உள்ளிட்ட மேலும் பல திட்டங்களை சீன அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இவ்வாறான நிலையில், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாகவே சீனாவிடமிருந்து கடன்களை பெற்று வருகின்றது.

குறிப்பாக சீனாவிடமிருந்து 10 பில்லியன் யுவானை (சுமார் 1.5 பில்லியன் டொலருக்கு நிகரான சீன பணம்) பெற்றுக்கொண்டுள்ளதாக மே மாத இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியில் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளும் வகையிலேயே தாம் வெளிநாடுகளிடமிருந்து கடன்களை பெற்றுக்கொள்வதாக அமைச்சரவை இணைப் பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

குறிப்பாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு இடையில் வருடாந்தம் சுமார் 8 பில்லியன் ரூபா வரை இடைவெளியொன்று காணப்படுகின்றமையினால், இந்த காலப் பகுதியில் அதனை ஈடு செய்துக்கொள்வதற்காக இறக்குமதி இயலுமான வரை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்;.சுற்றுலா துறை, வெளிநாடு பணியாளர்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளிலேயே அதனை இதுவரை காலமும் ஈடு செய்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.இந்த மூன்று விதமான வருமானங்களும், கொவிட் நிலைமைக்கு மத்தியில் இன்று பூஜ்ஜியமாகியுள்ளதெனவும் அவர் தெரிவிக்கின்றார்.இந்த இடைவெளியை நிரப்புவதற்காக இயலுமான வரை இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ள போதிலும், அதனையும் ஈடு செய்துக்கொள்ள முடியாதமையினாலேயே கடன் பெற வேண்டிய நிலைக்கு தாம் தள்ளப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

Posted in Uncategorized

மட்டக்களப்பில் நாளை முதல் வர்த்தக நிலையங்களை மூடத் தீர்மானம்

மட்டக்களப்பில் நாளை முதல் (20) எதிர் வரும் 30ஆம் திகதிவரை பலசரக்குக் கடைகள், மருந்தகங்கள், பேக்கரி, சாப்பாட்டு கடை தவிர்ந்த ஏனைய அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் எம்.செல்வராசா தெரிவித்துள்ளார்.

நேற்று (18) நடைபெற்ற வர்த்தக சங்கக் கூட்டத்தின் போதே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தீவிரமடைந்து வரும் கொரோனாத் தொற்றுப் பரவலைக் கட்டுப் படுத்தும் முகமாகவும், இம் மாவட்டத்தின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டும் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அனைத்து வர்த்தகர்களும் பூரண ஒத்துழைப்பைத் தருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இக் கூட்டத்தில் வர்த்தக சங்கத்தின் செயலாளர் தியாகராசா உட்பட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

கிளிநொச்சியில் மிக இரகசியமாக காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் திறப்பு

குறித்த அலுவலகம் கடந்த 12.08.2021 அன்று காலை அலுவலக அதிகாரிகளின் பங்குபற்றலுடன் மிகவும் இரகசியமாக திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிப்புறத்தில் எவ்வித பெயர் பலகையும் பொருத்தாது அலுவலகத்தின் உள்ளே காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் என கடதாசியில் பிரதி எடுக்கப்பட்டு ஒட்டப்பட்டு அலுவலக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருக்கில் மாவட்டச் செயலக பயிற்சி நிலையம் அமைந்துள்ள காணியில் உள்ள பெண் தலைமைதாங்கும், மற்றும் கணவனை இழந்த பெண்களை மேம்படுத்துவதற்கான தேசிய நிலைய அலுவலகத்தின் ஒரு பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான குறித்த (OMP) அலுவலகம் இயங்கி வருகிறது.

இவ்வலுவலகத்தில் சுமார் நான்கு உத்தியோகத்தர்கள் பணியாற்றுவதாகவும், கடமைகளுக்காக இருவர் சுழற்சி முறையில் வந்து செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வலுவலகம் திறந்தவிடயம் தொடர்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் அமைப்பின் செயலாளர் ஆ. லீலாதேவியுடன் தொடர்பு கொண்டு வினவிய போது இது பற்றிய எவ்வித தகவல்களுக்கும் தமக்கு தெரியாது என்றும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கே தெரியாது என்ன நோக்கத்திற்காக கிளிநொச்சியில் OMP அலுவலகம் திறக்கபட்டது என தமக்குத் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரனிடம் வினவிய போது, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தலைமை காரியாலயம் மாவட்டச் செயலகத்திடம் தங்களுடைய அலுவலகத்தின் செயற்பாடுகளை கிளிநொச்சி ஆரம்பிப்பதற்கு இடம் ஒன்றை கோரியிருந்தார்கள் அதற்கமைவாக மேற்படி இடத்தை நாம் வழங்கினோம். அங்கு அவர்கள் தங்களுடைய செயற்பாடுகளை ஆரம்பித்திருகின்றார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

மங்கள இறந்துவிட்டார் என்ற செய்தியில் எதுவித உண்மையும் இல்லை!

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி உண்மையில்லை என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மங்கள சமரவீர தற்போது கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நாட்டை முழுமையாக முடக்காது பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜனாதிபதி தீர்மானம்

நாட்டை முழுமையாக முடக்காது, பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அவர் இவ்வாறு தெரிவித்ததாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முடக்கப்பட்டால், பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது என்றும், அன்றாடம் வாழ்க்கை நடத்துபவர்கள் கடுமையான நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று நோயைக் கட்டுப்படுத்த உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் என்றும் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முதல் இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரையிலான ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஊரடங்கு உத்தரவை, வார இறுதி நாட்களில் முழுமையாக அமுல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் நாடு முடக்கப்படுமென்றும் நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

நல்லூர் தொகுதிப் பொதுமக்களிடம் பிரதேச சபை உறுப்பினர் ரெலோ மதுசுதன் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்!

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கிறது. குறிப்பாக கோண்டாவில், திருநெல்வேலி, பாற்பண்ணை, கொக்குவில் போன்ற பகுதிகளில் அதிகளவில் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் நல்லூர் பிரதேச சபையின் உறுப்பினருமான கு.மதுசுதன் அரசு பொறுப்பற்ற வகையில் நாட்டை முடக்காமலிருந்தாலும் நீங்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக உங்களினதும், உங்கள் அன்புக்குரியவர்களினதும் பெறுமதியான உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவசியமான விடயங்களுக்கு மாத்திரம் வீடுகளுக்கு வெளியே செல்லுங்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். எத்தனையோ பேர் கொரோனாத் தொற்றால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் குடும்பங்களைப் பிரிந்திருக்கின்றார்கள்.

கொரோனாவால் குடும்பங்களைப் பிரிந்திருந்து இறந்தவர்களுக்கு கிரியைகள் செய்ய முடியாத நிலையில் பலரும் மனரீதியாகப் பாதிக்கப்படுவதுடன் ஒன்றும் செய்ய முடியாத கையறு நிலையில் பலரும் தவித்து வருகின்றார்கள்.

யுத்தக் காலப் பகுதியை விடக் கொடிய சூழலில் வாழுகின்ற உணர்வை கொரோனாப் பெருந் தொற்று தற்போது ஏற்படுத்தியுள்ளது. இந்த இடரை நாங்கள் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு, முறியடிப்பதற்கு நாங்கள் அனைவரும் பொறுப்புள்ளவர்களாகச் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார்.

மேலும் 170 கொரோனா மரணங்கள் உறுதி

170 கொரோனா மரணங்கள் நேற்று (17) உறுதி செய்யப்பட்டுள்ளன.

அதன்பிரகாரம், நாட்டில் இதுவரை 6,604 கொரோனா மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 316,528 ஆக அதிகரித்துள்ளது.

புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியீடு – இன்று முதல் மூடப்படும் இடங்கள்!

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வௌியிடப்பட்டுள்ளன.

இது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 வரை அமலில் இருக்கும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி,

* ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேற முடியும். ஆனால் வேலைக்காக அல்லது சுகாதார வசதியை பெற்றுக் கொள்வதற்காக வெளியே செல்லும் போது இது பொருந்தாது.

* இன்று (18) முதல் வணிக வளாகங்கள் முழுமையாக மூடப்படும்.

* பல்பொருள் அங்காடியினுள் ஒரே நேரத்தில் அதன் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

* பகல்நேர பராமரிப்பு மையங்கள் இரண்டு வாரங்களுக்கு மூடப்படும்.

* உடல் கட்டமைப்பு மையங்கள் மற்றும் உட்புற விளையாட்டரங்குகள் இன்று முதல் மூடப்படும்.

* சிறுவர் பூங்காக்கள், திருவிழாக்கள், இசை நிகழ்ச்சிகள், விருந்துகள் மற்றும் கடற்கரைகளில் ஒன்று கூடுதல் இன்றிலிருந்து தடைசெய்யப்படும்.

* நீச்சல் குளங்கள் மற்றும் ஸ்பாக்கள் இன்று முதல் மூடப்படுகின்றன.

* ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை விடுதிகள் அவற்றின் மொத்த திறனில் 25 சதவீதமானவர்களுக்கு மட்டுமே திறந்திருக்க முடியும்.