இலங்கை பாதுகாப்பானது அல்ல – பிரித்தானிய நீதி மன்றம்

இலங்கையில் கைது செய்யப்படுவது மற்றும் துன்புறுத்தப்படுவது தொடர்வதாகவும், அது பாதுகாப்பானது அல்ல எனவும் பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் புகலிடத் தஞ்சம் கோரிய இரு தமிழ் மக்களை இலங்கைக்கு மீண்டும் அனுப்பினால் அவர்கள் கைது செய்யப்பட மாட்டார்கள் என பிரித்தானியாவின் உள்த்துறை அமைச்சு தெரிவித்த கருத்துக்கு எதிராக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

இலங்கையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலும் 178 பேர் இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டதாக உண்மைக்கும், நீதிக்குமான அனைத்துலக செயல் திட்ட அமைப்பு ஆவணங்களை பதிவு செய்துள்ளது. இது தவிர 22 பேர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு விசாரணைப் பிரிவில் தாம் துன்புறுத்தப்பட்டதான முறைப்பாடுகளை டேற்கொண்டுள்ளனர்.

கோத்தபாயா ராஜபக்ச அரச தலைவராக பதவியேற்ற பின்னர் 5 வழங்குகள் பதவாகியுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

யாழில் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் இன்றுமுதல் ஆரம்பம்

யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்றைய தினம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியது.

காலை 8 மணிக்கு தொடக்கம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 12 இடங்களில் குறித்த தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 61 கிராம சேவகர் பிரிவுகளில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது முதற்கட்டமாக முன்னெடுக்கப்படுகிறது.

அதாவது, யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பகுதியில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் குறித்த தடுப்பூசி வழங்குவதற்கு வடக்கு மாகாண சுகாதார திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இன்று காலையில் இருந்து அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் முன்வந்து தமக்குரிய தடுப்பூசியினை பெற்றுக் கொள்கின்றார்கள்.

கொவிட் – 19 தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக 50 ஆயிரம் சீனத் தயாரிப்பான சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கொவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 61 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

தெரிவு செய்யப்பட்ட மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்று காலை முதல் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.

மேற்படி கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார் தவிர்ந்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Posted in Uncategorized

யாழில் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை அதிகரியுங்கள் – நாமல் ராஜபக்ச

யாழ் மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச பொதுமக்களுக்கான COVID -19 தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்களுக்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.

அந்த வகையில் யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கோவிட் -19 தடுப்பூசி செலுத்தும் நிலையமான அரியாலை பிரப்பன்குளம் மகாமாரியம்மன் திருமண மண்டபத்திற்கும், கைதடி ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தில் தடுப்பூசி வழங்கும் நிலையத்திற்கும் கோப்பாய் ஆதார வைத்தியசாலை தடுப்பூசி வழங்கும் நிலையம், பருத்தித்துறை கரவெட்டி பகுதிகளில் தடுப்பூசி நிலையங்களுக்கும் விஜயத்தினை மேற்கொண்டு தடுப்பூசி வழங்கல் தொடர்பில் சுகாதார பிரிவினருடன் கலந்துரையாடினார்.

தடுப்பூசி நிலையங்களை பார்வையிட்ட பின் சுகாதார அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது யாழ்ப்பாணம் மட்டுமல்ல கிளிநொச்சி வவுனியா முல்லைத்தீவு ஆகிய இடங்களிலும் மேற்படி தடுப்பூசி அடுத்த கட்டம் வழங்கப்படவுள்ள தன் காரணமாக முதல் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட இந்தத் தடுப்பூசிகளைப் விரைவாக மக்களுக்கு விநியோகிக்கும் செயற்பாட்டினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்

அத்தோடு இந்த முதல்கட்ட தடுப்பூசியினை விரைவாக வழங்காத விடத்து அடுத்த இரண்டாம் கட்ட தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதில் சிரமம் ஏற்படும் எனவே உடனடியாக தடுப்பூசி வழங்கும் நிலையங்களினை அதிகரித்து மிகக் குறைந்த நாட்களில் இந்த 50,000 தடுப்பூசியினை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்

பொலீஸ் ராணுவத்தினரின் உதவியுடன் மேலும் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்களை விஸ்தரித்து விரைவில் அரசினால் வழங்கப்பட்டுள்ள முதல்கட்ட 50,000 தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்க மாறு சுகாதார பிரிவினருக்கு அறிவுறுத்தினார்

அமைச்சரின் விஜயத்தின் போது வடமாகாண ஆளுநர் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மற்றும் சுகாதார உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும்- ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன்

கோவிட்டால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்குப் புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் எனத் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இன்மையால் நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. வடக்கு – கிழக்கு பகுதியில் எமது மக்களுக்குத் தடுப்பு மருந்து என்பது இன்னும் ஏற்றப்படவில்லை. கோவிட் தொற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால் மக்களை நடமாடாமல் செய்வது மட்டுமல்ல.

கோவிட்டை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்தைச் செலுத்தி உலக நாடுகள் வெற்றி கண்டுள்ளது.ஆனால் இலங்கையில் சரியாகத் திட்டமிடப்படவில்லை. யாராவது இலவசமாகத் தடுப்பு மருந்தைக் கொடுத்தால் அரசாங்கம் வாங்குகிறது. இந்தியா, சீனா, ரஸ்யா கொடுத்தால் வாங்குகிறார்கள்.

இலங்கை அரசாங்கம் கோவிட் தடுப்பு மருந்தை வாங்கப் போவதாகச் சொல்கிறது. ஆனால் வாங்குவதற்கான திட்டத்தை, நிதி ஒதுக்கீட்டை இதுவரை செய்யவில்லை. அரசாங்கம் மிகவும் கவலையீனமாக இருப்பதைக் காண முடிகிறது. சும்மா கொடுத்தால் வாங்குகின்ற நிலைமையில் இருக்கிறது.

இது இந்த நாட்டு மக்களைக் காக்கும் திட்டமா என்பது எனது கேள்வி? சீனா கொடுத்த தடுப்பு மருந்தைத் தென்பகுதியில் வழங்குகிறார்கள். வடக்கில் வழங்கவில்லை. வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்பவற்றிலும் தொற்றுக்கள் அதிகரித்துள்ளது. ஏன் தமிழ் பகுதிகளில் இதனை வழங்கவில்லை.

இதை நான் அரசியலாக்க விரும்பவில்லை. ஆனால் தமிழ், சிங்களம் என்பதை விடுத்து ஒட்டுமொத்த மக்கள் மீதும் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை. தற்போது 50 ஆயிரம் தடுப்பூசிகள் யாழ்ப்பாணம் வருவதாகக் கூறுகிறார்கள். அது போதுமா என்பது தான் எனது கேள்வி? இந்தியா 6 இலட்சம் தடுப்பூசிகளை வழங்கினார்கள்.

அது திட்டமிடப்படாத வகையில் 6 இலட்சம் ஊசிகளையும் போட்டு முடித்து விட்டார்கள். முதல் எந்த ஊசியைப் போடுகிறார்களோ இரண்டாவதும் அதையே போட வேண்டும். இரண்டாவது ஊசி இந்தியா கொடுக்கும் மட்டும் 6 இலட்சம் ஊசி போட்டவர்கள் பார்த்துக் கொண்டு இருப்பதா? ஆகவே இந்த நாட்டு மக்களின் இறப்பைக் குறைக்க வேண்டும் என இந்த அரசாங்கம் நினைக்கவில்லையா?

கோவிட்டை கட்டுப்படுத்த பயணத்தடையை போடுகின்ற அரசு, பாடசாலைகளை மூடுகின்ற அரசு, வர்த்தக நிலையங்களை மூடுகின்ற அரசு, வீடுகளுக்குள்ளேயே இருங்கள் என்று கூறுகின்ற அரசு உலக நாடுகள் வெற்றி கண்ட தடுப்பு மருந்தைப் போட ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இலவசமாகக் கொடுக்கும் போது வாங்கும் மெத்தனப் போக்கைக் கடைப்பிடிக்கிறது.

இது எமது மக்களின் உயிர்கள் மேல் பந்தயம் வைக்கும் செயற்பாடாகவே தெரிகிறது. இது கண்டிக்கப்பட வேண்டியது. ஆடைத் தொழிற்சாலைகள் தொடர்பாகப் பல பிரச்சனைகள் எழுந்துள்ளன. பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. கூட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

ஆடைத் தொழிற்சாலையில் வேலையை நிறுத்தினால் அந்த குடும்பங்கள் கஸ்ரப்படும் என்பது உண்மை. இருந்தாலும் ஆடைத் தொழிற்சாலையில் ஏற்படும் பரவல் அந்த குடும்பங்களையும் பதிக்கிறது. எனவே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஆடைத் தொழிற்சாலைகள் நடுவண் அரசின் கீழ் உள்ளது. இந்த விடயத்தில் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும்.

கொழும்பில் வாசுதேவ நாணயக்கார அவர்கள் செய்தியாளர் மாநாட்டில் சிங்களம், ஆங்கிலம், சைனிஸ் மொழி இருப்பதாகவும், சைனிஸ் மொழியை எல்லோரும் கற்க வேண்டும் என்னும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாகப் பேசுகிறார். அவர் தமிழ் மொழியைப் பற்றிக் கதைக்கவில்லை. அது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும்.

இலங்கையில் தமிழ் மொழி ஒழிக்கப்படுகின்ற திட்டம் நடைபெறுகிறது. தமிழ் மக்களின் ஒட்டுமொத்த வாழ்வுரிமையையும் சிதைக்கும் நிகழ்வை அரசாங்கம் உருவாக்கி வருகிறது. நில அபகரிப்பு, மகாவலி எல் வலயம், பறவைகள் சரணாலயம் எனத் தமிழர்களின் வரலாற்றையும் பூர்வீகத்தையும் சிதைக்கும் செயற்பாட்டை இந்த நிலையிலும் செய்வது கண்டனத்திற்குரியது.

சீனாவிற்குக் கொடுக்கும் கௌரவம் தமிழ் இனம், மலைக மக்கள், முஸ்லிம் மக்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அவர்களது அடையாளத்தை அழிக்கும் மோசமான செயற்பாட்டைச் செய்கிறது. சிங்கள மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக மீள் உருவாக்கம் என்னும் பெயரில் பத்திரிகையாளர் உட்படப் பலரைப் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திட்டமிட்டு கைது செய்து வருகின்றார்கள்.

வடக்கு – கிழக்கில் மூன்று தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்குவது அரசின் திட்டமாக உள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் சரி சமனாக நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

புலம்பெயர் தேசங்களில் வாழும் எமக்கு ஒத்தாசை வழங்குகின்ற உறவுகள் வடக்கு – கிழக்கு மக்கள் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில், அவர்கள் வடக்கு – கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனங்களை விடுத்து பி.சி.ஆர் உபகரணங்களை கொள்வனவு செய்யுங்கள் – ரெலோ செயலாளர் நாயகம்கோவிந்தன் கருணாகரம்

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்த கோவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன கொள்வனவு சம்மந்தமாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் இன்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்சொன்னவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மிகவும் கவலைக்கிடமானதும், துரதிஸ்டவசமானதுமான நிலையில் இலங்கை மாறிக் கொண்டு வருகின்றது. கோவிட்டின் வேகம் நகர்ப்புறங்களிலிருந்து கிராமங்கள் வரை இன்று பரவியிருக்கின்றது. இந்த நிலையில் கோவிட்டை தடுப்பதற்காகவும், நிறுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மக்களுக்கோ, மக்கள் பிரதிநிதிகளுக்கோ விரும்பத்தக்கதோ அல்லது ஒரு தீர்வை கொடுக்கக் கூடியதாகவோ இல்லை என்றே கூறவேண்டும்.

ஆரம்பத்திலிருந்தே இந்தக் கோவிட்டிற்கான தடுப்பூசிகள் உலகம் முழுவதும் பாவிக்கப்பட்டிருக்கும் போது இலங்கையில் கடந்த ஜனவரி 09ம் திகதிதான் முதலாவது தடுப்பூசியைக் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அப்போதுகூட இந்திய அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக ஆறு இலட்சம் மக்களுக்குக் கொடுக்கக்கூடிய கோவிட் சீல்ட் மருந்துவகைகள் பன்னிரண்டு இலட்சத்தினை வழங்கியிருந்தார்கள்.

ஆனால் இந்த அரசு முன்னெச்சரிக்கை இல்லாமல் முதலாவது தடுப்பூசியை ஒன்பது இலட்சம் பேருக்குக் கொடுத்ததன் காரணமாக இரண்டாவது தடுப்பூசி கொடுப்பதற்கு அரசாங்கம் திண்டாடியதையே பார்க்கக்கூடியதாக இருந்தது. அதனைத் தொடர்ந்து திண்டாட்டத்தினைச் சமாளிப்பதற்காகத் தடுப்பூசி பாவிக்கப்படாத நாடுகளிலிருந்து தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவதாக உரிய அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றார்கள்.

அதற்கும் அப்பால் வேறு வகை தடுப்பூசிகளை வழங்கலாம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றார்கள். ஆனால் சில மருத்துவ அதிகாரிகள் வெவ்வேறு வகையான தடுப்பூசிகளை வழங்க முடியாது என்று தெரிவிக்கின்றார்கள். இந்த அடிப்படையில் முதலாவது தடுப்பூசி பெற்றவர்கள் நிர்க்கதியான நிலையில் இருப்பதனைக் காணமுடிகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் இந்த அரசாங்கத்தின் முன்னெச்சரிக்கை இல்லாத தான்தோன்றித்தனமான நடவடிக்கையாகவே இருக்கின்றது. அதற்கு மேலாக தற்போது நாட்டில் பல மாவட்டங்களைப் பொருத்தமட்டில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொருத்தமட்டில் கோவிட் தொற்று என்பது கிராமங்கள் வரை சென்றிருக்கின்றது.

இதற்கு முக்கிய காரணம் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் தொற்ற இனங்காணப்பட்டால் அந்தப் பிரதேசத்தின் அனைத்து மக்களையும் பரிசோதிக்கக் கூடிய வசதிகள் இங்கு குறைவாக இருக்கின்றது. பி.சி.ஆர் இயந்திரம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மாத்திரமே இருக்கின்றது. அதுவும் போதாமல் இருக்கிறது.

ஆனாலும் மாவட்டத்திலுள்ள தனவந்தர்களும், வர்த்தகர்களும் முன்வந்து இதற்கான உதவிகளைச் செய்து வருவதற்கு மிகவும் பாராட்டத்தக்க விடயம். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நானும் மக்கள் சார்பில் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இருப்பினும் அரசும் இந்த விடயங்களில் கூடிய அக்கறை செலுத்த வேண்டும். ஆனால் அரசாங்கமானது தற்போதைய சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் இறக்குமதி செய்வது சம்மந்தமாகவும் மேலும் பல வாகனங்களை வேறு தேவைகளுக்காக இறக்குமதி செய்வது தொடர்பிலும் அமைச்சரவையூடாக முடிவெடுத்திருப்பதாகவும், அதன் பின் முடிவு வாபஸ் பெற்றிருப்பதாகவும் தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தற்போதைய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனம் என்பது முக்கிய தேவையானது அல்ல. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வசதிகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக அதற்குச் செலவு செய்யும் பணத்தினை இந்தக் கோவிட் தொற்றை இல்லாமல் ஒழிப்பதற்கான உபகரணங்களைக் கொள்வனவு செய்து அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகித்து அந்தந்த மாவட்ட மக்கள் பயன்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

எமது மட்டக்களப்பு மாவட்டத்திலே தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. பொலிஸார் மற்றும் பொதுமக்கள் என ஒரு நாளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருகின்றார்கள்.

அதேபோன்று கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் இயங்கி வரும் ஆடைத் தொழிற்சாலைகளிலும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ஆடைத்தொழிற்சாலை என்பது எமது பிரதேசங்களுக்கு மிகத் தேவையானவை. அந்த அந்த மாவட்டங்களிலே வாழும் பல ஏழைக் குடும்பங்கள் அந்த ஆடைத் தொழிற்சாலைகளை நம்பித்தான் வாழுகின்றார்கள்.

இருப்பினும் தொற்றாளர்கள் அதனூடாக வரும் போது மேலும் பல கிராமங்கள் தொற்றுள்ள கிராமங்களாக மாறக் கூடிய சூழல் நிலவுகின்றது. இது தொடர்பில் மிகவும் அவதானத்துடன் ஆடைத்தொழிற்சாலை நிருவாகமும், அரசாங்கமும், சுகாதாரப் பிரிவினரும் இணைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனா மீதான தடையும் கொழும்பு போட்சிற்றிச் சட்டமும்

2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்தான் நாட்டை கூட்டாளி நாடென காங்கிரஸில் அறிவித்த அமெரிக்கா, இன்று பாக்கிஸ்தான் நாட்டோடு இருந்த அந்தக் கூட்டாணி உறவை முறித்துக் கொண்டது. இதுவரை அமெரிக்கக் காங்கிரஸில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதற்கும் காரணம் உண்டு. இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரம் மற்றும் பொருளாதாச் செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்களில் இந்தியாவோடு மேலும் சில இணக்கப்பாடுகளை ஏற்படுத்த வேண்டியதொரு தேவையுள்ளது.

பாக்கிஸ்தான் சீனாவோடு அதிகளவில் உறவாடுவதே அந்த நாட்டுடனான கூட்டாளி உறவை முறித்துக்கொள்ள அமெரிக்கா முற்பட்டதெனக் கூறினாலும், இந்தியாவைத் தம்வசப்படுத்தும் நோக்கிலும் அந்தக் கூட்டாளி உறவை முறித்துக்கொண்டதெனலாம்.

ஆனாலும் பாக்கிஸ்தான் அமெரிக்காவோடு கூட்டாளி உறவை வைத்திருந்த நாட்களைவிடவும் சீனாவுடன் உறவை மேற்படுத்தியதால் உள்நாட்டு அபிவிருத்தி மற்றும் பொருளாதார நலன்களில் அதிகளவு நன்மை பெற்றதாகவே பாக்கிஸ்தான் உணருகின்றது. ஆனால் இந்திய ஊடகங்கள் பாக்கிஸ்தான் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகக் கிண்டலாகக் கூறுகின்றன.

பங்களாதேஸ், மாலைதீவு போன்ற அயல் நாடுகளும் சீனா வழங்கிய கடனில் மூழ்கியுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் விமர்சிக்கின்றன. ஆனால் மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகீம் இந்திய அரடன் கூடுதல் உறவைப் பேணி வருகின்றார் என்பது வேறு கதை.

இவ்வாறனதொரு நிலையிலேதான் தைவான் நாட்டைச் சீன இராணுவம் ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் சீனாவின் பிரதான துறைமுகங்களான டியான்ஜின், சென்ஜென், லியாயுன்காங், ஜியான்ஜாங் ஆகிய நான்கு துறைமுகங்களை, நேபாளம் அரசின் பாவனைக்குச் சீன அரசு கடந்த மாதம் முதல் அதிகாரபூர்வமதாகத் திறந்துவிட்டுள்ளது.

சர்வதேச வர்த்தகத்துக்கு, இந்தியாவின் துறைமுகங்களையே நேபாள அரசு தங்கியிருந்தவொரு நிலையிலேதான், கடந்த ஆண்டு தனது துறைமுகங்களைச் சீனா வழங்கத் தீர்மானித்துக் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. அதுமாத்திரமல்ல, நேபாள உயர் கல்லூரிகளில் சீன மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்குவதாகவும், சீனா அறிவித்துள்ளது.

ஆகவே அயல்நாடுகளின் பிடியில் இருந்து இந்தியாவை ஒதுக்குவதற்கே சீனா இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது என்று கூறலாம். 2009 ஆம் ஆண்டு மே மாதம் ஈழப்போர் இல்லாதொழிக்கப்பட்ட நிலையில், இலங்கையை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த சீனா, தற்போது இந்தியாவின் அயல்நாடுகளான பாக்கிஸ்தான், நேபாளம், பங்களாதேஸ் ஆகிய நாடுகளிலும் பொருளாதார அபிவித்தி மற்றும் கடன் உதவிகளை வழங்கி இலங்கைக்குச் சமாந்தரமான ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருகின்றது.

இதன் மூலம் இந்துமா சமூத்திரத்தில் தன்னையும் ஒரு உறுப்பு நாடாகச் செயற்கையாக வடிவமைத்துள்ள சீனா, ஈழப்போரின் பின்னரானதொரு சூழலிலேயே இலங்கையைத் தளமாகக் கொண்டு இந்த அணுகுமுறையை இலகுவாகக் கையாளுகின்றது.

இலங்கைக்கு அடுத்தபடியாக நேபாள அரசைச் சீனா தனக்குரிய தளமாக மாற்றி வருகின்றதெனலாம். குறிப்பாக இந்த நிதியாண்டுக்கான முதல் காலாண்டில், நேபாளத்துக்கு வந்த நேரடி அன்னிய முதலீட்டில், 90 சதவீதம் சீனாவுடையது. திபெத் எல்லைப்பகுதியான கீரங்கிலிருந்து, நேபாள தலைநகர் காத்மாண்டுக்கு ரயில் பாலம் அமைக்கும் திட்டம் உட்பட பல திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. உள்கட்டமைப்பு பணிகளை நிறைவேற்ற, நேபாளத்துக்கு சீனா, தேவையானளவு கடன் வழங்கியுள்ளது.

இதனால் இந்தியாவின் பிடியில் இருந்தும் நேபாளம் மெல்ல மெல்ல விலகும் ஆபத்துள்ளது. இலங்கையில் கொழும்பு போட் சிற்றி எனப்படும் கொழும்பு சர்வதேச வர்த்தக நிதி நகரத்தின் நிர்ணமானப் பணிகள் 55 சதவீதம் பூர்த்தியடைந்த நிலையில், இந்தியாவின் பிடியில் இருந்த நேபாளத்தில் தனது வர்த்தகச் செயற்பாடுகளை சீனா ஆரம்பித்துள்ளதெனலாம்.

சீனாவின் இந்த நகர்வுகளோடு கொழும்பு போட் சிற்றித் திட்டமும் நிறைவேறி வரும் நிலையில், கடந்த மாதம் ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் கனடா, பிரித்தானிய ஆகிய நாடுககள் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்துள்ளன. சுமார் 25.9 மில்லியன் மக்கள் வாழும் சீனாவின் சிகின்ஜான்ங் (Xinjiang) மாநிலத்தில் முஸ்லிம்கள் மற்றும் பிற மதத்தவர்களுக்கு எதிராக சீனா மேற்கொள்ளும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்தே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது.

சிகின்ஜான்ங் மாநிலத்தின் தலைநகரான யுனெகவுர் (Uyghur) பிரதேசத்தில் மாத்திரம் முஸ்லிம்கள் உள்ளிட்ட 3.5 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். அங்குதான் சீனாவின் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன. இதனைக் காரணம் காண்பித்துத் தடை விதிக்கப்பட்டாலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளைக் கடந்து சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக சீன அரசு பதலடியாக அறிவித்துள்ளது.

சீனாவுடன் ஐரோப்பாவுக்கு வலுவான நிலையான தொடர்பு தேவை என்று ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் மாஸ் உள்ளிட்ட சில இராஜதந்திரிகளும் வலியுறுத்தியுள்ளனர். சீனா, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டாளர், போட்டியாளர் மற்றும் அமைப்பு ரீதியான போட்டியாளரும்கூட என அமைச்சர் மாஸ் விவரித்துள்ளார்.

ஆகவே இது சீனாவுக்கு ஆதரவைக் கொடுத்திருக்கிறது. பிரித்தானியா அமெரிக்pகாவுடன் சேர்ந்து தடையை விதித்திருந்தாலும்கூட, இந்த நிதியாண்டில் பிரித்தானியாவின் மிகப் பெரிய இறக்குமதியாளராக சீனா மாறியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் இருந்து இந்த ஆண்டின்; முதல் காலாண்டு வரை சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி 66 வீதத்தால் உயர்வடைந்து 16. 9 பில்லியன் பவுண்ஸ்சாகப் பதிவாகியுள்ளதாகப் பிரித்தானிய முதலீட்டுச் சபை கூறுகின்றது.

இந்தவொரு நிலையில் அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமையினால் பிரித்தானிய மேலும் சிக்கல்களையே எதிர்நோக்கும் நிலை உருவாகலாம். கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகச் சீனாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்காதா அமெரிக்கா. பிரித்தானியா கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம். சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் மனித உரிமை மீறல்களைக் காரணம்கூறி ஏன் தடை விதித்தது என்ற கேள்விகள் இந்த இடத்தில் எழாமலில்லை.

சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership- RCEP) கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கைச்சாத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தம் அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட 15 நாடுகளும் சேர்ந்து இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் சர்வதேச வர்த்தகச் செயற்பாடுகளில் ஈடுபட்டால், உலகப் பொருளாதார வருமானத்தில் மூன்றில் இரண்டு பங்கு வருமானத்தை இந்த நாடுகள் பெறும் நன்மை உருவாகும்.

இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட அமெரிக்க நட்பு நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய ஏற்பாடுகளும் உண்டு. குறிப்பாக இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக அமெரிக்காவினால் இந்தியாவைத் தலைமையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “குவாட்“ அமைப்பில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கொழும்பு போட் சிற்றியில் முதலீடுகளைச் செய்யக்கூடிய வாய்ப்புகளும் இந்த நாடுகளோடு பிரித்தானியாவும் இணையக்கூடிய சந்தர்ப்பங்களும் இருக்கலாம்.

2012 ஆம் ஆண்டு ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership-TPP) கைச்சாத்திடப்பட்டு 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற சந்தேகங்களும் உண்டு.

இதேபோன்று சீனாவிடம் இருந்து அதிகளவு பொருட்களைக் கொள்வனவு செய்யும் பிரித்தானிய, அமெரிக்காவுடன் சேர்ந்து சீனாவுக்குத் தடை வித்திருந்தாலும், சீனாவோடு மீண்டும் கூட்டுச் சேரும் நிலையும் வரலாம். ஏனெனில் அந்தளவுக்கு சர்வதேசச் சந்தைகளில் சீன அதிகக்கம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையும் மற்றும் நேபாளம் உள்ளிட்ட இந்தியாவின் அயல் நாடுகளும் தற்போது சீனாவின் நேரடிக்கட்டுப்பாட்டில் வர ஆரம்பித்துள்ளமையும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளின் பொருளாதாரத் தடைகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள் இல்லையெனலாம்.

கொழும்பு போட் சிற்றிக்கான தனி ஆதி்க்கத்துக்கான பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேறுவது உறுதி என்பதை அறிந்தே இந்தத் தடை விதிக்கப்பட்டது என்ற முடிவுக்கும் வரலாம்.

ஏனெனில் சீனாவில் முஸ்லிம்கள் மற்றும் பிற சமயத்தவர்களுக்கு எதிராக நடத்தப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெறுகின்றது. உண்மையில் தடைக்காண காரணம் அதுவாகவே இருந்தால், ஈழத்தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பை ஏற்று அல்லது குறைந்தபட்சம் போர்க்குற்றத்துக்கான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி இந்த நாடுகள் ஏன் இலங்கைக்குத் தடைகள் விதிக்கக்கூடிய எச்சரிக்கை விடுக்வில்லை என்ற கேள்விகளும் எழாமலில்லை.

ஏனெனில் இன்று இலங்கைதான் ஆசியப்பிராந்தியத்தில் சீனாவின் முக்கிய புள்ளியாக மாறிவருகின்றது. ஆகவே சீனாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட இந்தத் தடை என்பது RCEP எனப்படும் ஒப்பந்தத்தை மையமாகக் கொண்டு கொழும்பு போட் சிற்றியில் ஐரோப்பிய நாடுகளையும் கூட்டிணைக்கின்றதொரு பொருளாதார நகர்வுகளைக் குறைந்தபட்சம் தடுக்கும் நோக்கமாகவும் இருக்கலாம். குறித்த சட்டமூலத்தின் பிரகாரம் ஆணைக்குழுவில் அங்கம் வகுக்கவுள்ள எட்டு உறுப்பினர்களும் சீனர்கள்;.

இலங்கையர்கள் எவரும் அதில் உறுப்பினராக இருக்கவும் முடியாது. ஆகவே ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கைக்கு மாறாக இலங்கையின் இறைமை காக்கப்பட வேண்டுமென உரக்கச் சத்தமிட்டுச் சிங்கள ஆட்சியாளர்களை நியாப்படுத்தி வரும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள், இலங்கையின் இறைமை சீனாவிடம் பங்கிடப்படுவதற்குக் காரணமாக இருந்த அந்தச் சட்டமூலம் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வமதாக வாய்திறக்கவேயில்லை.

சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை ஏன் இந்த நாடுகளுக்குத் தெரியாமல் போனது? உண்மைப் பின்னணிதான் என்ன?

அ.நிக்ஸன்-

Posted in Uncategorized

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்தது

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்நிலையில், இன்று (29.05.2020) மேலும் 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,593 உயர்வடைந்துள்ளது.

இந்நிலையில், 30,839 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2,029 பேர் குணமடைந்ததையடுத்து மொத்த எண்ணிக்கை 1,48,391 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,363 ஆக உயர்வடைந்துள்ளது.

Posted in Uncategorized

யாழ். மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தடுப்பூசி ஏற்ற நடவடிக்கை

கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டின் அடுத்த கட்டம் யாழ்ப்பாணம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குருநாகல், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் SINOPHARM தடுப்பூசி ஏற்றும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதனிடையே மேல் மாகாணத்தில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக 05 இலட்சம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளதுடன், ரஷ்யாவின் 50,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளும் கிடைத்துள்ளன.

திருகோணமலையில் கொரோனாவால் மேலும் 5 பேர் உயிரிழப்பு

திருகோணமலையில் கொரோனாவினால் கடந்த 24 மணித்தியாலயத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் தெரிவித்தார்.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும். மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர் உட்பட 5 பேர் கடந்த 24 மணித்தியாலயத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்கள் 76 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகளுனக்கு கீழ் உள்ள பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவுகளான கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 73 தொற்றானர்கள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் இதுவரை 3,270 ஆக அதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் அதேவேளை சுகாதார வழிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றி அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர் செயற்றிட்டம்: இந்தியா அவதானம்

கொழும்புத் துறைமுக நகர் செயற்றிட்டம் மற்றும் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் அவதானத்துடன் செயற்படுவதாக இந்தியா அறிவித்துள்ளது.

புது டெல்லியிலுள்ள அதிகாரிகளை மேற்கோள் காட்டி “தி ஹிந்து” பத்திரிகை மேற்கண்டவாறு செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்புத் துறைமுக நகர் தொடர்பில் சட்ட விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ள அரசாங்கம் இது முழுமையாக இலங்கையினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடு எனவும் அறிவித்துள்ளது.

இதற்கமைய முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு சர்வதேச முதலீட்டாளர்களிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் வர்த்தக செயற்றிட்டமாக மாத்திரம் காணப்பட்டால் அது இலங்கையின் தெரிவு என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கொழும்புத் துறைமுக நகரமானது இலங்கையின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் எனப் பெயர் குறிப்பிட விரும்பாத புதுடெல்லி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized