சீனாவின் காலனித்துவ நாடாக இலங்கை மாறிவிட்டது : சந்திரிகா ஆதங்கம்

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

கொரோனா வைரஸ் பரவலில் நாடே சிக்கித் தவிக்கும் வேளையில் நாட்டை முடக்காது தற்போது துறைமுக சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக நாட்டை முடிக்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாட்டின் அவசரகால நிலையில் அரசாங்கம் முன்னெடுக்கும் நகர்வுகள் மோசமானதாகும், குறிப்பாக துறைமுக நகர் சட்டமூலத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதானது மிகவும் மோசமான செயற்பாடாகவே நான் கருதுகிறேன்.

உயர் நீதிமன்றத்தில் தவறெனக் கூறியும், நாட்டு மக்கள் கூப்பாடு போட்டும் அது எதனையும் கருத்தில் கொள்ளாது துறைமுக சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

நாட்டு மக்கள் வெளியில் இறங்க முடியாத நிலையொன்று காணப்படுகின்ற இந்த நேரத்தில், மக்கள் உயிரிழந்து கொண்டுள்ள இந்த நேரத்தில், நாட்டினை முடக்காது வேடிக்கை பார்த்தவர்கள் இப்போது சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாட்டினை முடக்கிவிட்டு, நீதிமன்ற வியாக்கியானத்தையும் கருத்தில் கொள்ளாது சட்டமாக்கிவிட்டனர்.

நீண்டகாலமாக வெள்ளையர்களின் கட்டுபாட்டில் இருந்து போராடி விடுவிக்கப்பட்ட இலங்கை இன்று மீண்டும் சீனாவின் காலனித்துவ நாடாக மாறிவிட்டது.

இவ்வாறான சூழ்நிலையில் பண்டாரநாயக்கவை அதிகமான நினைவுக்கு வருகின்றது, அவர் வழியில் வந்த சுதந்திர கட்சியினர் மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை இன்று செய்துள்ளனர்.

தனித்த பயணமொன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இல்லை, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வாலில் தொங்கிக்கொண்டு அரசியல் செய்யும் நிலைமையே உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

முள்ளிவாய்க்கால் தூபி உடைப்பு ஐநாவிடம் ஆவணப்படுத்த தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கோரிக்கை

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி கடந்த மே 12 விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டது.  இராணுவ மற்றும் பொலிஸ் பாதுகாப்பில் இருந்த தூபி உடைக்கப்பட்டதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கண்டனத்தை வெளியிட்டனர்.

அத்தோடு நிறுத்தி விடாது ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தில் இதை ஆவணப்படுத்த  வேண்டும் என்ற முயற்சியில் கடிதம் தயாரிக்கப் பட்டு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் கையொப்பம் பெறுவதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தலைவரும்,

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினர்களும் கையொப்பமிட்டனர். இக்கடிதம் ஐநாவிற்கான இலங்கை வதிவிடப் பிரதிநிதி ஹாநா சிங்கர் மூலமாக ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஆவணப்படுத்தக் கோரிஅனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் ” 2009 மே 18ல் முடிவடைந்த கொடிய யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூருமுகமாக முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி அண்மையில் அரச படையினரால் உடைத்து சேதமாக்கப் பட்டுள்ளமை, எமது உயிரிழந்த மக்களை நினைவு கூரும் உரிமையை அவமதிப்பதாகவே உள்ளது. இது ஒரு வெட்கக் கேடான மனித குலத்துக்கு எதிரான செயல்பாடு.

உலகில் உள்ள எவ்வகையான வலிமைபொருத்திய இராணுவத்தாலும் சின்னங்களை அழித்தாலும் மக்கள் மனதில் இருக்கும் சம்பவங்களையும் நினைவுகளையும் அழிக்க முடியாது.

இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை ஆத்திரத்துடனும், மனவேதனையுடனும், விரக்தியுடனும் தமிழ் மக்களின் பிரதிநிகளாகிய நாம் பதிவு செய்கிறோம்.

நினைவேந்தல்கள் தொடர்பாக அண்மையில் ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் மனித உரிமைக்கும் எதிரான இந்த விடயத்தை ஆவணப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஒப்பம்

நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன் பா.உ. தலைவர் த.ம.தே. கூ.

மனோ கணேசன் பா.உ. தலைவர், த. மு. கூ

செல்வம் அடைக்கலநாதன் பா. உ . த.தே. கூ

த. சித்தார்த்தன் பா. உ  த.தே. கூ

எம். ஏ. சுமந்திரன் பா. உ. த.தே.கூ

கோ. கருணாகரம் (ஜனா) பா. உ த.தே.கூ

சி. சிறிதரன் பா.உ  த.தே.கூ

ஐ. சாள்ஸ் நிர்மலநாதன் பா.உ  த.தே.கூ

எஸ். வினோ நொகரதலிங்கம் பா.உ த.தே.கூ

சா. இராசமாணிக்கம் பா.உ   த.தே.கூ

த. கலையரசன் பா.உ  த. தே. கூ

வி. இராதாகிருஷ்ணன் பா.உ  த.மு.கூ

எம். வேலு குமார் பா.உ  த.மு.கூ

என குறிப்பிடப்பட்டுள்ளது.

திரு. சம்பந்தன் மற்றும் திரு. திகாம்பரம் ஆகியோர் சுகவீனம் காரணமாக பாராளுமன்றத்துக்கு சமூகமளிக்காமையால் அவர்கள் ஒப்பம் பெறப்படவில்லை. இருப்பினும் அவர்களுக்கும் இதில் உடன்பாடு உண்டு என்ற நிலையில் இக்கடிதம் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிருத்தானியாவில் ரெலோ முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு ரெலொவின் பிருத்தானியாகிளை ஏற்பாட்டில் Harrow பகுதியில் அமைந்துள்ள Harrow West Conservative Association மண்டபத்தில் இன்று (21-05-2021) நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மூத்த உறுப்பினர் பாரி ஈகைச்சுடரேற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்.

அஞ்சலி நிகழ்வு பிரித்தானிய கிளையின் பொறுப்பாளர் சாம் சம்பந்தன் தலைமையில் நடைபெற்றது.

மறைந்த தலைவர் ஸ்ரீசபாரெத்தினம்,மற்றும் அனைத்துப் போராளிகள்,பொதுமக்கள் ஆகியோருக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி இடம்பெற்றதைத் தொடர்ந்து

மலர் அஞ்சலிகள் முன்னாள் ரெலோ முக்கியஸ்தர்கள் அரபாத்,சிவபெருமான்,ரூபன்,பரா,சிங்கன், திரு,மனேஜர்,பீற்றர்,மதன்,நந்தன்,மூர்த்தி,ரஜனி,கொடி, புண்ணியம் ஆகியோரால் நிகழ்த்தபட்டது.

ரெலோ வின் முன்னைநாள் நிதி பொறுப்பாளர் அரபாத்,சிவபெருமான்,பரா தலைவர் ஸ்ரீசபாரெத்தினரத்தினத்துடன் தமது கடந்த கால சம்பவங்களை நினைவுகூர்ந்து சிறப்புரை ஆற்றினார்கள்.

தற்கால சூழ்நிலையில் 30 பேர் கொண்ட ஒன்று கூடலுக்கான அனுமதியை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட உறுப்பினர்களுடன் எமது பிருத்தானியாகிளையின் அஞ்சலி நிகழ்வு இன்று நடைபெற்றது.

துறைமுக நகர் சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளாதது ஏன்: முஸ்லிம் காங்கிரஸ் விளக்கம்

துறைமுக நகர் சட்டமூலத்தில் சாதகமும் பாதகமும் காணப்படுவதால், நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நேற்று நடைபெற்ற கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூல வாக்கெடுப்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களும் கலந்துகொள்ளவில்லை.

பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று அவர்கள் இருந்த போதிலும், வாக்கெடுப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.

எந்த முடிவினை எடுத்தாலும் 5 பாராளுமன்ற உறுப்பினர்களும் தலைமைத்துவத்திற்கு கட்டுப்பட்டு ஒரே முடிவினை எடுக்க வேண்டும் என நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

அதன் பின்னரே பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடி, வாக்கெடுப்பில் கலந்துகொள்வதில்லை என்ற முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

துறைமுக நகர சட்டமூலத்தில் சாதகங்களும் பாதகங்களும் காணப்படுவதனால் நடுநிலை வகிக்க வேண்டும் என கட்சி எடுத்த தீர்மானத்திற்கு ஏற்ப வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லையென ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீட உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான பைஸல் காசிம் தெரிவித்தார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களும் நேற்றைய வாக்கெடுப்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.

கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், முஷாரப் முதுநபீன் ஆகியோர் துறைமுக நகர சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களித்த போதிலும், அந்த அணியை சேர்ந்த அலிஷப்ரி ரஹீம் மற்றும் இஷாக் ரஹ்மான் சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அண்மையில் நடைபெற்ற பிரதமரின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில், நசீர் அஹமட், எச்.எம்.எம்.ஹாரிஸ், அலி ஷப்ரி ரஹீம், எம்.எஸ். தௌபிக், இஷாக் ரஹ்மான், பைஸல் காசிம் ஆகியோர் துறைமுக நகர சட்டமூல வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இவர்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கும் ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆடைத்தொழில்சாலைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி மக்களை பாதுகாக்ககோரிக்கை- ரெலோ விஜிந்தன்!

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான க.விஜிந்தன் ஊடக சந்திப்பு ஒன்றினை 21.05.21 அன்று நடத்தியுள்ளார். இதன்போது அவர் தெரிவிக்கையில்..

முல்லைத்தீவு பகுதி கொரோனா கொத்தணியாக மாறிவருகின்றது முல்லைத்தீவு பகுதி இவ்வாறு மாறியதற்கு முழுபொறுப்பும் புதுக்குடியிருப்பில் இயங்கிவருகின்ற ஆடைத்தொழில்சாலைதான் பொறுப்பு சொல்லவேண்டிய கடைப்பாடு இருக்கின்றது.

கடந்த காலங்களில் ஆடைத்தொழில்சாலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட போது அதனை மூடுவதற்கு அதன் நிர்வாகம் சரியான முடிவினை எடுக்கவில்லை அரசாங்கமும் அதற்கான சரியான அழுத்தத்தினை கொடுக்கவில்லை

கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை தடுக்கின்ற நோக்கோடு கொரோனா தொற்றுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்று பல்வேறு காரணங்களை அடிப்படையாக கொண்டு நீதிமன்றம் வரை சென்று தடைசெய்த அரசாங்கம் ஆடைத்தொழில்சாலைகளின் இவ்வாறான செயற்பாட்டினை இடைநிறுத்துவதற்கான முயற்சி குறைவாக காணப்படுகின்றது.

உயர் அரச அதிகாரிகளின் அசமந்த போக்கும் காரணம்.கிளிநொச்சி,வவுனியா ஆடைத்தொழில்சாலைகள் இன்றும் இயங்கிவருகின்றது பல நூற்றுக்கணக்கான பெண்கள் அங்கு வேலை செய்கின்றார்கள் ஆடைத்தொழில்சாலைகளை மூடி மக்களை பாதுகாக்கின்ற முயற்சி போதாதாக காணப்படுகின்றது.

இவ்வாறு செல்லுமாக இருந்தால் இந்த பகுதி பல இலட்சக்கணக்கான கொரோனா தொற்றாளர்களை சுமக்கவேண்டிய நிலையும்,பல ஆயிரக்கணக்கானவர்களை இழக்கவேண்டிய நிலையும் உருவாகும்.அரசாங்கத்திடமும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடமும் நாம் கேட்டுக்கொள்வது இந்த ஆடைத்தொழில்சாலை தற்காலிகமாக இடைநிறுத்தி பெறுமதி மிக்க உயிர்களை காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இதேவளையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட பகுதியில் கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளது,கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது மக்களின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது எனவே தனிமைப்படுத்தப்படுகின்ற முடக்கப்படுகின்றகாலங்களில் அரசாங்கம் உடனடியாக அவர்களுக்கு வறுமையினை குறைக்கின்ற வகையில் உணவு பொதிகளை வழங்குகின்ற சரியான பொறிமுறையினை அரசாங்கம் கடைப்பிடிக்கவேண்டும்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தலோ அல்லது முடக்கமோ ஏற்படுகின்றபோது மக்களுக்கான குடிதண்ணிர் போன்ற சேவைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றால் கிராமசேவகரிடம் அல்லது வட்டார மக்கள் பிரதிநிதி உப அலுவலக பொறுப்பதிகாரிகளுக்கு தெரிவிக்கும் பட்சத்தில் பிரதே சபையினால் மேற்கொள்ளக்கூடிய சகல வசதிகளையும் இலவசமாக மேற்கொள்ளவேண்டும் என அனைத்து பொறுப்பதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இராணுவத் தளபதிக்கு தடை விதிக்கக்கோரி பிரித்தானிய பாராளுமன்றில் பிரேரணை : பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும் வலியுறுத்து

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவுக்கு தடைவிதிக்கக் கோரியும், இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் பிரித்தானியா தனது உறுதிப்பாட்டை முன்னிறுத்துமாறும் வலியுறுத்தி பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆனின் (McLaughlin Anne) முன்மொழிவில் கொண்டுவரப்பட்ட இந்த முன்பிரேரணையில் அனைத்துக்கட்சிகளைச் சேர்ந்த 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

அப்பிரேரணையில், தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் குறித்து இன்னும் விசாரணைசெய்யப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களில் கண்மூடித்தனமான குண்டுவீச்சு, சரணடைந்தவர்கள் கொலை செய்யப்பட்டமை, சித்திரவதை, பாலியல் வன்கொடுமை மற்றும் ஆட்கடத்தல் ஆகியனவும் அடங்கும்.

இந்நிலையில், யுத்தக் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய பல்வேறு சர்வதேச தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டதுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டது.

அதில் மிகக் குறைந்த விசாரணைகள் மட்டுமே நடைபெற்றது மட்டுமல்லாது, விசாரணைகளை எதிர்கொண்டவர்கள் மற்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் சிலர் இன்றும் இலங்கையில் சக்திவாய்ந்த பதவிகளை வகிக்கிறார்கள்.

அத்துடன் அண்மைக்கால இலங்கை அரசியலமைப்பின் சீர்திருத்தங்களால் நீதித்துறையின் சுதந்திரம் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளதுடன் மேலும் விசாரணைகள் இடம்பெறாது என்ற நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித உரிமை பேரவையில் இலங்கை பற்றிய முக்கிய குழுவின் தலைவராக பங்குவகித்திருக்கும் இங்கிலாந்து இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவிற்கு எதிராக கடுமையான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல் குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர் இராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயமும் ஏனைய ஐரோப்பிய பங்காளிகளும் தமது கரிசனையை வெளிப்படுத்தியதுடன் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் பேரவையிலும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையத்தின் இளையோர் அமைப்பு மேற்படி முன்பிரேரணையை கொண்டுவருவதற்கான வலியுறுத்தல்களை பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

இதேவேளை, கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை இராணுவத்தளபதி சவேந்திரசில்வா தொடர்பிலான 50 பக்க குற்றப்பத்திரிகை ஒன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்ட அமைப்பு பிரித்தானிய அரிசின் வெளிவிவகார அமைச்சிடம் சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

ஆட்சியாளர்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடும் போது கொல்லப்பட்ட மக்களின் நினைவேந்தலிற்கு ஏன் தடை? ஜனநாயக மீறல் என யாழ் மாநகர பிரதி முதல்வர் குற்றச்சாட்டு

யாழ் மாநகர சபையின் மாதாந்தப் பொதுக்கூட்டம் இன்று 20.05.2021 சபையில் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்காலின் கொல்லப்பட்ட எம்மவர்களினை நினைவேந்தல் இடம்பெறுவதற்கு கோரப்பட்டது.

அதன் போது தமிழ் ஈழ விடுலை இயக்கத்தின்(ரெலோ) யாழ் மாவட்ட பிரதி தலைவரும்,  யாழ்ப்பாண மாநகர சபையின் பிரதி மேயருமான து.ஈசன் உரையாற்றும் போது…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் இருக்கின்ற நினைவுத் தூபியானது உடைக்கப்பட்டமையை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

ஏனெனில் நம் மக்களுடைய ஒட்டுமொத்தமான படுகொலையை எல்லோரும் நினைவுகூரும்
முகமாக அமைக்கப்பட்ட அந்த நினைவேந்தல் சின்னம் உடைக்கப்பட்டமை இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட, கொல்லப்பட்ட மக்களுடைய உறவுகள் அவர்களை நினைவு கூருவதற்கும் அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இருக்கின்ற அந்த ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான நினைவுச் சின்னங்கள் உடைத்தழிக்கப் படுகின்றமை மிகவும் ஒரு கோரமான, சர்வாதிகாரத் தன்மையுடைய ஒரு இனத்தை அடக்கி அந்த இனத்தின் அபிலாசைகளை அழிக்கின்ற ஒரு ஆட்சித் தத்துவத்தை வெளிப்படுத்தி இருக்கின்றது.

ஆகவே இந்த ஆட்சியாளர்கள் அவ்வாறான ஒரு கோர முகத்தை வெளிக்காட்டி இருக்கிறார்கள். அரச இயந்திரத்தின் மூலமாகத்தான் அந்த நடுகல் உடைக்கப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரமல்ல அங்கு புதிதாக ஒரு நடுகல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவினால் கொண்டுவரப்பட்டு வைக்கப்பட்டபோது அதுவும் இரவோடு இரவாக தூக்கிச் செல்லப்பட்டுள்ளது.

இது உண்மையில் ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறலாகத்தான் நாங்கள் அதைப் பார்க்கின்றோம். ஏனெனில் உலகில் மனித உரிமைகளைப் பேணுகின்ற அமைப்பாக இன்று இருக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சாசனங்களில் இறந்தோரை நினைவுகூருவதற்கும் போரில் கொல்லப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்தல்

செய்வதற்கும் உலகில் உள்ள மக்கள் அனைவருக்கும் உரிமையுண்டு என்ற தத்துவத்தை இலங்கை அரசாங்கம் மீறியிருக்கின்றது.

அது மாத்திரமில்லை, அந்த மக்களுடைய உறவுகளுடைய மன ஆறுதலை அவர்களுடைய பாதிப்புக்கான ஒரு நீதி கோரலை இந்த ஆட்சியாளர்கள் ஒரு போதும் செவிசாய்க்க மாட்டார்கள்
என்பது இந்த தூபி உடைப்பினூடாகக் கண்கூடாகத் தெரிகின்றது.

இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் யுத்த வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது அதே
யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களுடைய உறவினர்கள் அந்த ஆத்மாக்களை நினைவேந்தல் செய்வதற்குத் தடை செய்தல் உண்மையிலேயே ஒரு அப்பட்டமான ஜனநாயக மீறல்.

இந்த நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இனம் தமிழினம். அந்த தமிழினத்தினுடைய தொன்மைகள் வரலாறுகள் சுயநிர்ணய உரிமை. மரபுவழி தாயகம் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட இனம்.

அப்படிப்பட்ட ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாபெரும் இனப்படுகொலை நடந்த மாதம் என்று சொன்னால் அது 2009.05.18 மே மாதம் தான். 12 ஆண்டுகளாகியும் இன்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, நீதி கிடைக்காத போதும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் இறந்த உறவுகளை வேண்டி நினைவேந்தல் செய்வதற்குக் கூட தற்போது இருக்கும் ஆட்சியாளர்கள் அதைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார்கள்.

உண்மையில் அவர்கள் யுத்த வெற்றியைத் தென்னிலங்கையில் அதுவும் மிகவும் ஆபத்தான கொவிட் – 19 தொற்று சூழ்நிலை இருக்கின்ற போதும் மிகவும் பெருந்தொகையானோருடன் சேர்ந்து கொண்டாடும் போது இங்கு பாதிக்கப்பட்ட மக்களின் உறவுகள் அந்த
இடத்தில் ஒன்றுகூடி தங்களுடைய மன ஆறுதலுக்கு அந்த நினைவேந்தலைச் செய்வதற்கு அவர்கள் இராணுவரத்தினரையும், பொலிஸாரையும் நிறுத்தி தடுத்திருக்கின்றார்கள்.

உண்மையில் இது ஒரு அப்பட்டமான ஒரு ஜனநாயக மீறல். இந்த ஆட்சியாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கொடுப்பார்களா என்பது இவ்வாறான இந்த நினைவேந்தல் அடக்கு முறைகளில் இருந்தே தெரிகின்றது. ஒரு பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தற்போதைய இலங்கை ஆட்சியாளர்கள் மூலம் தீர்வு கிடைப்பதற்கு, நியாயம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.

ஆகவே இவ்வாறான சூழ்நிலையில் தொடர்ந்தும் நாங்கள் இந்த உள்நாட்டுக்குள் நீதி, நியாயம் கிடைக்கும் என்று இனியும் நம்பத் தயாராக இல்லை. அந்த வiயில் தமிழர் பிரதேசங்களில் இருக்கின்ற அனைத்த சக்திகளும் வட, கிழக்கு தமிழர் காயகத்தில் இருக்கின்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி
கிடைப்பதற்கு எல்லோரும் இணைந்து சர்வதேச நீதி பொறிமுறை ஊடாக எமது இனத்திற்கு ஏற்படுத்தப்பட்ட இந்த இனப்படுகொலைக்கான நீதியை வேண்டுவதற்கு அனைவரும் ஓரணியில் திரளவேண்டுமென்று நான் கோரிக்கை விடுகின்றேன்.

இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி வரை பயணக் கட்டுப்பாடு

நாடளாவிய ரீதியில் இன்று (21) இரவு 11 மணி முதல் 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது.

25 ஆம் திகதி அதிகாலை 04 மணிக்கு தளர்த்தப்படும் பயணக்கட்டுப்பாடு அன்றைய தினம் இரவு 11 மணி முதல் 28 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.

நாட்டில் தற்போது COVID நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருதியே பயணக்கட்டுப்பாடு விதிக்கப்படுவதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படும் காலப்பகுதியில் முப்படையினரை கடமைகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லுமாறு இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தினார்.

உடல்நிலை மிகவும் மோசமடைந்த பின்னரே அவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும்
இதனால் அவர்களின் உயிரை பாதுகாப்பதில் சிக்கலை எதிர்கொள்வதாகவும் வைத்தியர்கள் தெரிவித்ததாக அவர் கூறினார்.

இந்நிலையில், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மருந்தகங்கள் திறந்திருக்கும் எனவும் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் இடம்பெறுமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் சுற்றுலாக்கள், யாத்திரைகள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்திற்கமைவாக நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

அனைத்து விமான சேவைகளும் இரத்து; நாட்டிலிருந்து பயணிப்போருக்கு தடை இல்லை

இன்று (21) நள்ளிரவு முதல் 31 ஆம் திகதி நள்ளிரவு வரை அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், நாட்டில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு எவ்வித தடையுமில்லை.

மேலும் சரக்கு விமானங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

துறைமுக நகர் ஆணைக்குழுவிற்கு 13 ஆவது திருத்தத்தில் செக்! துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் – ரணில் விக்கிரமசிங்க

உயர் நீதிமன்ற தீர்ப்பால் துறைமுக நகர் நிர்வாக ஆணைக்குமு அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு கட்டுப்படவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாகாண சபையின் அனுமதியின்றி துறைமுக நகரின் எந்தவொரு நிலப்பரப்பையும் சீனா மற்றும் எந்தவொரு நாட்டிற்கும் விற்க முடியாது போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் சுமைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடியிருக்க வேண்டும். துடுப்பை இழந்த படகுப்போல அரசாங்கம் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து நேற்று கலந்துரையாடி அவர். எதிர்கால திட்டங்கள் மற்றும் சமகால விடயங்கள் குறித்து பரந்தளவில் உரையாடினார்.

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கு 200 மில்லியன் டொலர்களே இலங்கைக்கு தேவைப்படுகின்றது. இந்த தொகையை செலவிட்டு நாம் வலியுறுத்திய காலப்பகுதியில் தடுப்பூசிகளை கொள்வனவு செய்திருந்தால் பொருளாதாரம் இந்தளவு பாதித்து இருக்காது.

வர்த்தக நிலையங்களை மூடவேண்டிய நிலைமையும் ஏற்பட்டிருக்காது. ஆனால் அரசாங்கம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முயற்சிக்க வில்லை. மறுப்புறம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகிய தரப்புகளுடன் கலந்துரையாடியிருந்தால் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கலாம்.

சர்வதேச கடன்களை செலுத்த முடியாத நாடுகளின் மாநாடு எதிர்வரும் ஜூன் மாதம் இறுதியில் பரிஸ் நகரில் இடம்பெறவுள்ளது. இதனை பரிஸ் கழகம் (Paris Club) என அழைப்பார்கள். இலங்கை போன்ற நாடுகளுக்கு இந்த மாநாட்டின் ஊடாக கடன்நிவாரணங்களை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த அமைப்பில் சீனா இல்லை. ஜீ-7 மாநாட்டில் சீனா உறுப்புரிமையை கொண்டுள்ளது. இங்கு கடன்கள் குறித்து பேசமுடியும். ஆனால் இலங்கையின் துரதிஷ்டம் யாதெனில் அந்த அமைப்பிலும் இலங்கை இல்லை.

இவ்வாறானதொரு நிலைமையில் எவ்விதமான தூரநோக்கு சிந்தனையும் இல்லாது துறைமுக நகர் விடயத்தில் அரசாங்கம் செயற்படுகிறது. அதனால் தான் உயர் நீதிமன்றம் கடுமையான தீர்ப்பை வழங்கியது. இது அரசாங்கத்தின் தோல்களின் முக்கியமானதொன்றாகும். ஏனெனில் தன்னிச்சையாக செயற்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றம் தனது கடமையை செய்யும் என்பதை உணர்த்தியுள்ளது.

அதே போன்று துறைமுக நகர் ஆணைக்குழு நிர்வாக கட்டமைப்பு இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திற்கு உட்பட்டுள்ளதால் சீனாவிற்கு தேவையான வகையில் நிலப்பரப்பை விற்க முடியாது. அனைத்திற்கும் மாகாண சபைகளின் அனுமதி அவசியமாகின்றது.

எனவே ஆரம்பத்தில் சமர்பித்தது போன்று துறைமுக நகர் ஆணைக்குழு சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்தியாவின் முதலீடுகள் இங்கு வந்திருக்காது என தெரிவிக்கப்பட்டது.