சுமந்திரன் எம்பி தனிப்பட்ட ரீதியில் ரணிலின் சர்வதேச நாணய நிதிய கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்தரன் தனிப்பட்ட ரீதியில் சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டத்திற்கு சென்று இருக்கலாம் எனவே அவர் கூட்டத்திற்கு சென்றதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள நா. உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், இந்த நாடு தற்போதும் பொருளாதார ரீதியில் உலகத்தில் இருந்து அந்நியப்பட்டிருக்கின்றது. எனவே இந்த நாட்டு நிலைமையை உணர்ந்து கொள்ளாமல் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்கு முறை தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என அவர் குறிப்பிட்டார்.

சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு ஒரு முக்கியமான தினம் சிவபெருமான் இந்துக்களின் முதல் முதல் கடவுள் இந்த நிலையில் சிவராத்திரிக்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட ஆலைய குரு மற்றும் பக்தர்கள் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தொல்பொருள் திணைக்களம் என்ற ரீதியிலே எங்கள் பிரதேசங்கள் பல கபளீகரம் செய்ப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருணத்தில் வெடுக்குநாறி மலையும் கபளீகரம் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த நேரத்தில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும், வடக்கு கிழக்கில் அமைதியை கொண்டு வரவேண்டும், 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்தவேண்டும், புலம் பெயர் தேசத்தில் இருக்கின்ற தமிழ் தனவந்தவர்கள் இலங்கையில் வந்து முதலிடவேண்டும் என அரசாங்கமும் ஜனாதிபதியும் வாய்கிழிய கூறிக் கொண்டு, மறைமுக நிகழ்ச்சி நிரலில் வடக்கு கிழக்கில் தமிழினத்தின் கலை கலாச்சாரத்தை ஒழிக்கும் ஒரு வேலைத்திட்டமாக இந்த வெடுக்குநாறி சம்பவத்தை பார்ப்பதாகவும் கோவிந்தன் கருணாகரம் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை தூதரகத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ள ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட இலங்கையர்கள்

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முருகன், ரொபா்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோா் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க சென்னையிலுள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு இன்று புதன்கிழமை (13) அழைத்துச் செல்லப்படவுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் நளினி தாக்கல் செய்துள்ள மனுவில், ‘என்னுடைய கணவா் முருகனும் நானும் மகளுடன் சோ்ந்துவாழ விரும்புகிறோம். எனவே, எனது கணவா் முருகன் சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்துக்குச் சென்று நோ்காணலில் கலந்து கொள்வதற்கான அனுமதியை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். அங்கு சென்று வருவதற்கு பாதுகாப்பு தேவைப்படும்பட்சத்தில், உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, முருகன் கடவுச்சீட்டு பெறுவதற்கான நோ்காணலில் பங்கேற்க இலங்கை துணை தூதரகத்திடம் முன் அனுமதி பெற, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், குமரேஷ் பாபு ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்குரைஞா் ஆா்.முனியப்பராஜ், முருகனின் நோ்காணலுக்காக புதன்கிழமை அனுமதி பெறப்பட்டுள்ளது.

முருகனை தவிர முகாமில் இருக்கும் ராபா்ட் பயாஸ் மற்றும் ஜெயக்குமாா் ஆகியோரும் கடவுச்சீட்டு பெறுவதற்காக அழைத்துச் செல்ல கோரிக்கை வைத்தனா். எனவே, புதன்கிழமை அவா்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயாராக உள்ளன. புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு திருச்சி முகாமில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணியளவில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்துக்கு அழைத்து வரப்படவுள்ளனா் என தெரிவித்தாா்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நளினி தொடா்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

நாட்டில் இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் அதிகாரங்கள் பரவலாக்கப்படல் வேண்டும் : கருணாகரம் எம்.பி !

வெளிநாட்டமைச்சர் அலிசப்றி பல நாடுகளுக்குச் சென்று வருகின்றார். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். சமஷ்டி அதிகாரப் பரவலாக்கல் நடைபெற்றால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் வெளிநாட்டமைச்சர் கூறியிருக்கும் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்பதனை உணர்வதுடன் அவரது உதாரணங்களையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் அவரது அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்….

உண்மையிலேயே ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வு இந்த நாட்டிற்குத் தேவையென்றால், இந்த நாடு பொருளாதாரரீதியாக முன்னேற்றமாக நகரவேண்டுமென்றால், சுபீட்சம் நிலவ வேண்டுமென்றால், இன ஐக்கியம் நிலவ வேண்டுமென்றால் பொலிஸ் அதிகாரம் உட்பட அதிகாரங்கள் பரவலாக்கப்படுவதற்கான வழிவகைகள் செய்யப்படல் வேண்டும்.

தற்போதைய வெளிநாட்டமைச்சர் பல நாடுகளுக்குச் சென்று வருகின்றானர். கடந்த பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையை நாங்கள் வரவேற்கின்றோம். அவர் உணர்ந்திருக்கின்றார். அவர் உண்மையிலேயே கோட்டபாயவினால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர். கோட்டபாயவின் தனிப்பட்ட ஆஸ்த்தான சட்டத்தரணியாக இருந்தவர். தற்போது வெளிநாட்டமைச்சராக இருக்கிறார். அவரது கூற்று வரவேற்கத்தக்கது. அதை ஏனைய அரசியல்வாதிகள் உட்பட புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டின் வெளிநாட்டமைச்சர் கூறுகின்றார் தமிழர்கள் சமஷ்டியைக் கோருவதற்கு உரித்துடையவர்கள், தகுதியுடையவர்கள் என்று கூறியிருக்கின்றார். சமஷ்டி அதிகாரப்பரவலாக்கல் இந்த நாட்டில் நடக்குமாக இருந்தால் நாடு பிளவுபடும் என்று கூறுபவர்கள் உணரவேண்டும்.

அதிகாரப்பரவலாக்கல் ஊடாக இந்த நாடு பிளவுபடும் என்பது பொய்யானது அதிகாரங்களைப் பரவலாக்கலாம், அதற்கு அவர் பல உதாரணம் காட்டியிருக்கின்றார். சுவிஸ்லாந்தைக் காட்டியிருக்கின்றார். இலங்கை ஒரு சிறிய நாடு இங்கு அதிகாரங்களைப் பரவலாக்க முடியாது என்பவர்களுக்கும் ஒரு கருத்தைக் கூறியிருக்கின்றார்.

பெல்ஜியம் இலங்கையை விடச் சிறிய நாடு ஆனால் அங்கு அதிகாரங்கள் பகிரப்பட்டு தற்போது பெல்ஜியம் வளர்ச்சியடைந்த நாடாக ஐரோப்பாவில் இருக்கின்றது. எனவே இலங்கையைப் பொறுத்தமட்டில் அதிகாரங்களைப் பரவலாக்கி மாகாணங்களுக்கு பூரணமான அதிகாரங்களைக் கொடுத்தால் இந்த நாடும் புலம்பெயர் தேசத்துத் தமிழ்த் தனவந்தர்கள் முதலீடு செய்வார்கள் என அவர் இதன்போது தெரிவிததுள்ளார்.

Posted in Uncategorized

மனித உரிமைகளை சவாலுக்கு உட்படுத்தும் சட்டமூல உருவாக்கத்தை தொடர்ந்து கண்காணிப்போம் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங்

சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களைத் தாம் தொடர்ந்து கண்காணிப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 55 ஆவது கூட்டத்தொடரில் கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் குறித்து ஆராயப்பட்டது. இதன்போது இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கையைத் தொடர்ந்து பிரிட்டன், கனடா, வடமெசிடோனியா, மாலாவி, மொன்டெனேக்ரோ மற்றும் அமெரிக்கா ஆகிய இணையனுசரணை நாடுகளால் இலங்கை நிலைவரம் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது.

அதில் உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் சட்டத்தை உருவாக்க முன்னர் பாதிக்கப்பட்ட சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவாறான செயன்முறையொன்றைப் பின்பற்றவேண்டியது அவசியமென இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்திய இணையனுசரணை நாடுகள், எதிர்வருங்காலங்களில் ஸ்தாபிக்கப்படக்கூடிய எந்தவொரு ஆணைக்குழுவும் நிலைமாறுகால நீதிப்பொறிமுறையைக் கட்டியெழுப்பும் அதேவேளை, பொறுப்புக்கூறலுக்கான பாதையை வகுத்தளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தன.

இந்நிலையில் இணையனுசரணை நாடுகளின் அறிக்கையை மேற்கோள்காட்டி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங், ‘சிவில் இடைவெளியையும், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்களையும் சவாலுக்கு உட்படுத்தக்கூடியவகையில் இலங்கையில் இடம்பெற்றுவரும் சட்டவியல் உருவாக்கங்களை நாம் தொடர்ந்து கண்காணிப்போம்’ எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இணையனுசரணை நாடுகளாலும், ஏனைய உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புக்களாலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ‘நிகழ்நிலைக்காப்பு சட்டமூலமானது கருத்து வெளிப்படுத்தலைக் குற்றமாக்குவதற்குப் பயன்படுத்தப்படக்கூடும்’ என்ற பொதுவான கரிசனை முன்வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிவில் பாதுகாப்பு, மனித உரிமைகள் தரப்படுத்தலில் இலங்கை தரமிறக்கம்

எமது அமைப்பின் ‘சிவில் இடைவெளி’ தொடர்பான தரப்படுத்தலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையானது ‘ஒடுக்கப்பட்டுள்ளது’ எனும் நிலைக்குத் தரமிறக்கப்பட்டுள்ளது என சிவிகஸ் எனும் சர்வதேச சிவில் சமூக அமைப்பு தெரிவித்துள்ளது.

உலகளாவிய ரீதியில் சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகள் மற்றும் சிவில் சமூக இடைவெளியை வலுப்படுத்துவதை முன்னிறுத்தி தென்னாபிரிக்காவைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூக அமைப்புக்களின் கூட்டிணைவான சிவிகஸ் அமைப்பினால் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

எமது அமைப்பின் ‘சிவில் இடைவெளி’ தொடர்பான தரப்படுத்தலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையானது ‘ஒடுக்கப்பட்டுள்ளது’ எனும் நிலைக்குத் தரமிறக்கப்பட்டது. அதிகாரிகளால் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒடுக்கப்படல், ஊடகவியலாளர்கள் மீதான ஒடுக்குமுறைகள், சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்குவைக்கப்படல் மற்றும் பொறுப்புக்கூறலின்மை என்பன இத்தரமிறக்கலுக்குக் காரணமாக அமைந்தன.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், கடந்தகால மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட தரப்பினர், அம்மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திவரும் அவர்களது குடும்பத்தினர் உள்ளடங்கலாக சிவில் சமூக செயற்பாட்டாளர்களைத் தொடர்ந்து இலக்குவைத்துவருவதாக கடந்த ஜனவரி மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

அதேபோன்று இலங்கை அரசாங்கத்தினால் உயர் பாதுகாப்பு அடிப்படையில் கையாளப்படும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை குறித்து கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக ‘யுக்திய’ எனும் பெயரில் இடம்பெறும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறும், அதனை மீளாய்வுக்கு உட்படுத்துமாறும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தனர்.

அடுத்ததாக நபரொருவரை சித்திரவதைக்கு உட்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் கடந்த பெப்ரவரி மாதம் ஜனாதிபதியினால் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டார்.

இதுஇவ்வாறிருக்க கடந்த 2022 ஆம் ஆண்டு பரந்துபட்ட அளவிலான போராட்டங்களுக்கு வழிகோலிய பொருளாதார நெருக்கடி தற்போதும் தொடர்கின்றது. அதுமாத்திரமன்றி மிகமோசமான கடன்நெருக்கடியின் விளைவாக சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்படும் சர்ச்சைக்குரிய நிபந்தனைகளுக்கு முகங்கொடுத்திருக்கும் 22 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இராணுவக் கட்டமைப்புகளை உருவாக்குவது குறித்து சீனா ஆராய்வு

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ கட்டமைப்புகளை ஏற்படுத்துவது குறித்து சீனா ஆராய்ந்து வருகின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தமது சமீபத்தைய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜிபுட்டியில் உள்ள அதன் இராணுவதளத்தையும் கம்போடியாவில் உள்ள அதன் கடற்படை தளத்தையும் மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சீனா இதற்கு அப்பால் இலங்கை உட்பட பல நாடுகளில் தனது தளங்களை உருவாக்க முயல்கின்றது என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர் என ஐஏன்என்எஸ் தெரிவித்துள்ளது.

சீனா 2035 ஆண்டளவில் முழுமையாக நவீனமயமாக்கப்பட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் இராணுவ படையை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்துகின்றது 2049ம் ஆண்டுக்குள் சீன இராணுவத்தை உலகதரம் வாய்ந்ததாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது என அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன.

இதேகாலப்பகுதியில் சீனாவின் கம்யுனிஸ்ட் கட்சி தனது இறையாண்மை பிரதேசம் என கருதும் பகுதிகளை பாதுகாப்பதற்கு சீன இராணுவத்தை பயன்படுத்தவும் பிராந்திய விவகாரங்களி;ல் தனது முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ள அமெரிக்க இராணுவம் சர்வதேச அளவில் தனது வலிமையை வெளிப்படுத்தவும் நீரிணை மோதலின் போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்கவும் எதிர்க்கவும் தனது இராணுவத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் புறக்கணித்த கூட்டத்தில் ரணிலுடன், சுமந்திரன் மாத்திரம் பங்கேற்பு

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அழைக்கப்பட்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே பங்கேற்றது. அதன் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கலந்துகொண்டார்.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சார்பில் எவரும் பங்கேற்கவில்லை.

சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடலில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை எட்டுவதற்கான அரசின் அர்ப்பணிப்பு இங்கு வலியுறுத்தப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தால் தயாரிக்கப்பட்ட பகுப்பாய்வு தரவுகளுடன் கூடிய அறிக்கைகள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

இந்தச் செயற்பாடுகள் அனைத்தையும் வெளிப்படைத் தன்மையுடன் முன்னெடுப்பதே அரசின் நோக்கமாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அது தொடர்பான தரவு பகுப்பாய்வு அறிக்கைகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் நாடாளுமன்றத்துக்கும் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதே அரசின் விருப்பம் என்று தெரிவித்த ஜனாதிபதி, இந்த முன்மொழிவுகளைச் சர்வதேச நாணய நிதியத்துடன் மேலும் கலந்துரையாடுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உட்பட ஏனைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துரையாடலுக்கு அழைக்கவுள்ளார் என்றும் கூறினார்.

அந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தில் அரசு முன்னெடுக்கும் சாதகமான மற்றும் சரியான வேலைத்திட்டத்துக்குத் தனது ஆதரவை வழங்குவதாகத் தெரிவித்தார்.

இருதரப்பு கடன் வழங்குநர்கள், வர்த்தகக் கடன் வழங்குநர்கள் மற்றும் சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடன் நடைபெற்று வரும் பேச்சுகள் குறித்து திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, விரிவான விளக்கத்தை அளித்ததுடன், இந்தப் பேச்சுச் சுற்றுக்களை இந்த ஆண்டு ஜூன் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுகைத் தீர்ப்பு தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்த அரசு செயற்பட்டு வருகின்றது என்றும், அதற்கான விரிவான கட்டமைப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, நிதி இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

வெடுக்குநாறிமலை பொலிஸாரின் அட்டூழியத்துக்கு எதிராக நல்லூரில் போராட்டம்

வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தை கண்டித்து யாழ்ப்பாணம் நல்லூரில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு .அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடைபெற்றது.

இன்றைய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்த்தன், சி.சிறிதரன், செ.கஜேந்திரகுமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறிகாந்தா, ஈ.சரவணபவன், மதகுருமார், அரவெடுக்குநாறிமலை அட்டூழியத்துக்கு எதிராக நல்லூரில் போராட்டம்சியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

மகா சிவராத்திரி பூசையின் போது வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு வழிபட சென்றவர்கள் மீது பொலிசாரின் அட்டூழியங்களை கண்டித்தும் கைது செய்தோரை உடன் விடுதலை செய்யவும் வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா வெடுக்குநாறி மலை சம்பவத்திற்கு ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி கண்டனம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் நேற்று இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளின் போது பக்தர்களின் சமய வழிபாடுகளுக்கு பொலிசார் இடையூறு விளைவித்ததுடன் அங்கிருந்த சமய செயற்பாட்டாளர்கள் அரசியல் பிரமுகர்கள் மீதும் வன்முறையை மேற்கொண்டுள்ளனர் இந்த சம்பவமானது கண்டனத்திற்குரியது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த கருத்தினை இன்றைய தினம் (9) செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் அலுவலகத்தில் வைத்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது,

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயமானது காலங்காலமான சைவ சமய வழிபாட்டு தளமாக இருந்து வருகிறது இந்த நிலையில் நேற்றைய தினம் (8)சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்த பக்தர்கள் பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் இன மத நல்லினக்கத்திற்கு பாதகமாக அமையும்

எனவே பொலிசார் எதற்nடுத்தாலும் பொது மக்களிடம் அத்துமீறும் செயற்பாட்டை நிறுத்த வேண்டும் தமிழ் மக்கள் அவர்களுக்குச் சொந்தமான பூமியில் அவர்களுடைய பாரம்பரிய சமய கடமைகளை செய்வதற்கு இடையூறு விளைவித்த இந்த செயற்பாட்டை நான் வன்மையான கண்டனத்தை தெரிவிப்பதுடன் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பொலிசார் செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையினையும் விடுக்கிறேன் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் தெரிவித்தார்

ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ள தமிழ் அரசுக் கட்சி – ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவை அழைப்பினை நிராகரித்தன

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க் கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஏற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கம் இடையில் நாளை ஜனாதிபதி அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

குறித்த கலந்தரையாடலுக்காக எதிர்க் கட்சிகளுக்கு உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி உரிய அழைப்பை ஏற்று அக்கட்சியின் பிரதிநிதி ஒருவரை இதில் பங்கேற்க வைக்க தீர்மானித்துள்ளது.

அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் , அவரின் பங்கேற்பு தற்போது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் அவர் அங்கம் வகிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியுடன் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.