தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்ய தேர்தலை நடத்த வேண்டும்! வடக்கின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை

தமிழ் மக்களின் இருப்பை உறுதி செய்யும் மாகாணசபை முறைமையை விரைவாக நடைமுறைப்படுத்தும் வகையில் தேர்தலை நடத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்தியா மத்தியில் மக்களின் அரசியல் உரிமை மற்றும் மாகாண முறைமையை எவராலும் இல்லாது செய்ய முடியாது என்றும் வலியுறுத்தினர்.

‘வன் டெக்ஸ்ட்’ நிறுவனத்தின் அனுசரணையில், மாகாண சபையின் கடந்த கால அனுபவம் மற்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பிலான கருத்தரங்கு இன்று யாழ். ரில்கோ விடுதியில் நடைபெற்றது.

இதன்பின் வடக்கு மாகாண சபையின் மூன்னாள் உறுப்பினர்களான ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பில் சர்வேஸ்வரன், தமிழரசுக் கட்சி சார்பில் ஆர்னோல்ட், ஈ.டி.பி சார்பில் தவனாதன், பிளொட் சார்பில் கஜதீபன், ரெலோ சார்பில் குகதாசன் ஆகியோர் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது முக்கிய விடையமாக தேர்தல் பின்நோக்கிச் செல்வதற்கான ஏதுநிலைகளை குறித்து அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த நிலையில் இருந்து ஆராயப்பட்டது.

இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –

குறிப்பாக அனைத்து கட்சிகளுக்கும் சம உரிமை வழங்கி அதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால் இன்றைய அரசு மாகாண சபை முறைமையை விரும்பாத ஒன்றாகவே இருக்கின்றது.

கடந்த காலங்களில் இந்த அரசின் நிலைப்பாடு மாகாணசபை முறைமைக்கு எதிரானதாகவே இருந்தது.

குறிப்பாக தேர்தலை பழைய முறையிலா புதிய முறையிலா நடத்துவது என்ற விவாதத்தை கையிலெடுத்து அரசுகள் காலத்தை தாழ்த்தி வருகின்றது.

புதிய முறைமை என்றால் எல்லை நிர்ணய முறைமையில் ஏற்பட்ட குறைபாடு நீக்கப்பட்டால் அல்லது சீர் செய்யப்பட்டால் தான் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

ஆனால் பழைய முற்றையில் நடத்துவதாயின் அது இலகுவானது. நாடளுமன்றில் அதற்கான அனுமதியை பெரும்பான்மையுடன் இந்த அரசு சுலபமாக பெறமுடியும்.

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வின் முழுமையான தீர்வாக மாகாணசபை முறைமை இல்லாதுவிடினும் அதுவே தீர்வின் ஆரம்பமாக இருக்கின்றது.

அதனால் தான் அரசுகள் தேர்தலை நடத்த அக்கறை காட்டுவதில்லை. அதையே இந்த அரசும் செய்கின்றது.

இதே நேரம் தமிழ் மக்களுக்கு இது அவர்களது இருப்புடன் தொடர்புடைய ஒன்று. ஆனால் ஏனைய மாகாணங்களுக்கு அது அவசியமற்றதாக இருக்கலாம்

தேர்தலை நடத்த அரசு விரும்மாவிட்டால் குறைந்த பட்சம் இதை வடக்கு கிழக்கிலாவது நடத்த வேண்டும். இதை அனைத்து கட்சிகளும் ஒருமித்த குரலில் வலியுறுத்துகின்றது

சர்வதேச சமூகம் என்று எமது அரசியல் உரிமை குறித்து பேசுகின்றது. இந்திய அரசும் ஐ.நாவில் வலியுறுத்துகின்றது.

குறிப்பாக ஐ.நாவின் தற்காலிக வரைபில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அதிகாரங்கள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலுயுறுத்துகின்றது.

இதனால் இவ்விடையம் தற்போது இது சர்வதேச குரலாக இருக்கின்றது.

அதனால் மகாணசபை முறைமை நீக்கப்படாது. நீக்கப்பட்டால் இந்தியாவுடன் இலங்கை நேரடியாக மோதும் ஒரு சம்பவமாக உருவாகிவிடும்.

அதனால் மாகணசபை முறைமையை நீக்க அரசு முயலாது.

அதே நேரம் புதிய அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தீர்வு முழுமையாக கிடைக்குமாக இருந்தால் மட்டுமே மாகாணசபை முறைமையை இல்லாது செய்யும் சாத்தியம் ஏற்படும் என்றும் தெரிவித்திருந்த்மை குறிப்பிடத்தக்கது

தொல்லியல் திணைக்கள விவகாரத்தில் வலி கிழக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – தவிசாளரிடையே தர்க்கம்

தொல்லியல் திணைக்கள விவகாரத்தில் வலி கிழக்கு பிரதேச
ஒருங்கிணைப்புக் குழு தலைவர் – தவிசாளரிடையே தர்க்கம்

– நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் விலக வேண்டும் எனவும் தீர்மானம்.

நிலாவரையில் தொல்லியல் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பில் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸிற்கும் பிருதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினருமான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்திக்கும் இடையில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தொல்லியல் திணைக்களம் தொடர்பில் காரசாரமான விவாதம் இடம்பெற்றது. இவ் விவாதத்தினைத் தொடர்ந்து நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களம் விலகி பிரதேச சபையிடம் அதனை கையளிக்க வேண்டும் எனவும் பிரதேச அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும், வலிகாமம் கிழக்கு பிரதேச அபிவிருத்திக்குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் நிலாவரை பகுதி சுற்றுலா வலயமாகவுள்ளமையினால் அதனை மேம்படுத்துவது பற்றிய ஆராயப்பட்டது. இதன்போது இப் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகளால் அதனை முன்னேற்ற முடியாதுள்ளது என தவிசாளரினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதன்போது பதிலளித்த அபிவிருத்திக்குழுவின் தலைவர் ரஜீவன் பாராளுமன்ற உறுப்பினர், தொல்லியல் திணைக்களத்தினால் இப்போது பிரச்சினை கிடையாது. கடந்த கால அரசாங்கத்தில் இடம்பெற்றது போல தமிழ் மக்களுக்கு பிரச்சினைகள் இல்லை. நீங்கள் அரசியல் ரீதியில் குழப்பங்களை விளைவிக்க வேண்டாம். என தொடர்ந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தம் வகையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

அபிவிருத்திக்குழு தலைவரின் கருத்துக்களை எதிர்த்த தவிசாளர், தொல்லியல் திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்கள் பௌத்த பேரினவாத அடிப்படையில் கொண்டுள்ள கட்டமைப்பிலோ அல்லது அத் திணைக்களங்களுக்குக் குவிக்கப்பட்டுள்ள சட்ட அதிகாரங்களிலோ அரசாங்கம் மாற்றங்களை ஏற்படுத்தாது சம காலத்தில் அத் திணைக்களங்களால் எமது மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று கூறக்கூடாது. எமது மக்கள் சம கால சமாளிப்புக்களை எதிர்பார்க்கவில்லை. மாறாக நிரந்தரத் தீர்வினை எதிர்பார்க்கின்றனர்.

தங்களுடைய கட்சி பாராளுமன்றில் அறுதிப் பெறும்பான்மையுடன் உள்ளது. இந்த நிலையில் சரியா சட்ட மாற்றங்களை இலகுவாகக் கொண்டுவந்து எமது மக்களுக்கு சரியான தீர்வுகளை முன்வைக்க முடியும். இப்போது பிரச்சினையில்லை என்பது பதில் அல்ல. சரியான தீர்வுகளே முக்கியம் என தவிசாளரினால் வாதிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கூட்டத்தினை நிறுத்த வேண்டிவரும் என அபிவிருத்திக் குழுத்தலைவர் தவிசாளரை நோக்கி எச்சரித்தார். எனினும் தொடர்ச்சியாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதனைத் தொடர்ந்து அபிவிருத்திக் குழுத்தலைவர் நிலாவரையில் இருந்து தொல்லியல் திணைக்களத்தினை விலக்கி பிரதேச சபையின் கீழ் கொண்டு வருவதற்கான முடிவை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய உயர்ஸ்தானிகருடன் ரெலோ சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகருடன்
ரெலோ சந்திப்பு

நேற்று 11-9-2025 வியாழக்கிழமை, கொழும்பில் உள்ள இந்திய உயர்
ஸ்தானிகராலயத்தில் மதியம் 2.00 மணிக்கு இச்சந்திப்பு நடைபெற்றது.

வன்னியர் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலொவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும், அக்கட்சியின் நிதிச் செயலாளரும் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரனும் கலந்து கொண்டனர்.

அதன்போது செப்டம்பர் 8ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐநா மனித உரிமை 60 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தமிழர்களின் அபிலாசைகளான அர்த்தமுள்ள அதிகார பகிர்வு, நீதி, கௌரவம் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை தாம் வரவேற்பதாக ரெலோ தலைவர் தெரிவித்தார்.

அரசியல் யாப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தும் வகையிலே விரைந்து மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியமை நீண்ட காலமாக இழுத்தடிக்கப்படும் மாகாண சபை தேர்தலை நடாத்த வழிவகுக்கும் எனவும் உயர்ஸ்தானிகரிடம் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் மன்னார் வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு 600 மில்லியன் ரூபாய்களளை வழங்கி அப்பிரதேச மக்களின் நீண்ட கால சுகாதாரத் தேவையை நிறைவு செய்ய இந்தியா முன்வந்தமைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி, பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு மற்றும் தலைமன்னார் ராமேஸ்வரம் கப்பல் போக்குவரத்து என்பவற்றில் இந்தியா தொடர்ந்தும் அக்கறையுடன் இருப்பதாகவும் விரைந்து அதை நிறைவேறுவதற்கான தொடர் முயற்சிகள் எடுக்கப்படுதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுப்பதும் சமாந்தரமாக செயல்படுத்தப்படுவது அவசியம் எனவும் அதில் இந்தியா அக்கறையோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி என்பவற்றில் இந்தியா இதய சுத்தியோடும் உறுதியோடும் பயணிப்பதற்கு தமிழ் மக்கள் சார்பில் தாம் நன்றி கூறுவதாக ரெலோ தரப்பில்
தெரிவிக்கப்பட்டது.

மிகவும் ஆக்கபூர்வமான இச்சந்திப்பு கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடைபெற்றது.

கு. சுரேந்திரன்
பேச்சாளர்- ரெலோ

நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் வலியுறுத்தல்

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி காலை 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.

அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்துவருவதாகவும், செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிடச்சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்துவரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச்சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப்படையினர் மற்றும் ஆயுதக்குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக்காப்புச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச்சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப்பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்படவேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக்கொண்டுவரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ்மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப்புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

Posted in Uncategorized

நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் மாகாணசபைத்தேர்தல்களை உடன் நடத்துமாறு பேரவையில் இந்தியா இலங்கையிடம் வலியுறுத்தல்

நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துதல், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துதல் மற்றும் அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளல் என்பவற்றுக்கு நடவடிக்கை எடுக்குமாறு பேரவையில் இலங்கையை வலியுறுத்திய இந்தியா, சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதத்தில் கருத்துரைத்த இந்தியப் பிரதிநிதி, 2009 ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டைக் மீளக்கட்டியெழுப்புவதற்கும், மக்களை மீள்குடியமர்த்துவதற்கும் இந்தியா தொடர்ந்து ஆதரவு வழங்கிவந்ததாக சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று 2022 ஆம் ஆண்டு இலங்கை மிகத்தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருந்த வேளையில் இந்தியாவினால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் நினைவுகூர்ந்த அவர், 2024 இல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டமையும், 2025 ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமையும் இருநாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு நல்லுறவைக் காண்பிப்பதாகக் குறிப்பிட்டார்.

அதேவேளை இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையுடன் தமிழ்மக்களின் அபிலாஷைகளான சமத்துவம், நீதி மற்றும் கௌரவத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்திவருவதாகத் தெரிவித்த அவர், நாட்டின் அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும், மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்துமாறும், அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்துவதாகக் கூறினார்.

அத்தோடு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் நியாயமான நல்லிணக்க செயன்முறை என்பன நிலையான அமைதிக்கு வழிகோலும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

மீட்கப்படும் எழும்புக்கூடுகள் மீதான உள்நாட்டு விசாரணைகள் அரசைக் காப்பாற்றும் உத்திகள் – கிரிசாந்தி நினைவேந்தலில் தவிசாளர் நிரோஷ்

தமிழ் மக்கள் மீதான அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையும் இலங்கையில் அரச கொள்கையாகவே முன்னெடுக்கப்பட்டது. அவ்விடயத்தில் உள்நாட்டு விசாரணைகளே அல்லது பொறிமுறைகளோ தீர்வைத்தராது. எமக்கு சர்வதேசத்தின் நீதியே தேவை என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

செம்மணியில் கிரிசாந்தி குமாரசுவாமி படுகொலையின் 29 ஆவது நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது. இந் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,எமது மண்ணில் சிறுவர்கள் பொண்கள் பெரியவர்கள் என்ற வகை தொகையின்றி இலட்சக்கணக்கானவர்கள் அரச படைகளால் கொன்றழிக்கப்பட்டுள்ளனர். அவை சிவிலியன்கள் மீது போரினவாத அரச கொள்கைகளின் வாயிலாக முன்னெடுக்கப்பட்ட அரச பயங்கரவாதமும் இனப்படுகொலையுமாகும். அவ்வகையில் கிரிசாந்தி குமாரசுவாமி உள்ளிட்ட நுற்றுக்கணக்கானவர்கள் முழுமையான அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் தினம் தினமாக கொன்றழிக்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறாக புதைக்கப்பட்டவர்களின் ஆன்மாக்கள் நீதிகோரி மீண்டெழுந்து நிற்கின்றன.

இப்போது கூட நூற்றுக்கணக்கான எழும்புக்கூடுகள் மீட்கப்படுகின்றன. இலங்கை அரசோ அல்லது அரசாங்கமோ மேற்கொள்ளும் எந்த விசாரணையும் சர்வதேசத்தினை ஏமாற்றுவதையும் நீதி விசாரணைகளை காலதாமதத்திற்கு உட்படுத்தி சாட்சியங்களை வலுவற்றதாக்கும் உத்திகளுமாகும். தற்போதும் ஜெனிவாவில் அதற்கான நகர்வு ஒன்றையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.

நாங்கள் எமது இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி ஒன்றே தீர்வு என்பதில் உறுதியாகச் செயற்பட வேண்டிய பொறுப்புடையவர்கள். எமது தேசத்தில் எங்களது பெண் பிள்ளை ஒன்று பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு புதைக்கப்பட்டிருக்கின்றாள். இது போன்று இராணுவ வளங்கள் உள்ளிட்ட அரச வளங்களைப் பயன்படுத்தி நாங்கள் கொன்றழிக்கப்பட்ட மிகக் கொடுரமான மனித உரிமைகள் மீறல்களுக்கு இன்றும் தீர்வுகள் வழங்கப்படவில்லை.

மாறாக ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கம் சிற்சில ஜனநாயக இடைவெளிகளை ஏற்படுத்திவிட்டு அவற்றினை தமிழ் மக்களுக்கான அசியல் தீர்வுகள் போல காட்டிக்கொள்ள எத்தனிக்கின்றது. இந்த இடத்தில் நாம் இனமாகத் திரட்சி பெற வேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம்.!

எமது இனத்தை அழித்தவர்கள், உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரணையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

செம்மணி உள்ளடங்களாக இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகளுக்கும், நடைபெற்ற இனப் படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம் தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை(29-8-25) காலை மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.

இதன் போது தலைமை தாங்கி உரை நிகழ்த்துகையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐ.நா சபையினுடைய கதவை தட்டியது மக்களினதும், போராளிகளினதும் தியாகம் என்பதை நாம் ஒருபோதும் மறந்து விட முடியாது. இன்று வடக்கு கிழக்கில் எங்கு தோண்டினாலும் தமிழர்களுடைய மனித எலும்புக்கூடுகள் வெளிவருகிறது. வடக்கு கிழக்கில் பல்வேறு இடங்களில் மனிதப் புதைகுழிகள் காணப்படுகின்றது.

முதல் முறையாக மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டது மன்னாரிலே. அதனை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டது. தற்போது யாழ்ப்பாணத்தில் கூடுதலான மனித எலும்புக்கூடுகள் உள்ள மனிதப் புதைகுழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தாயை தனது பிள்ளை கட்டிப்பிடித்துக் கொண்டு காணப்படுகின்ற எலும்புக்கூட்டு தொகுதியும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவ் மனித எலும்புக்கூடுகளை பார்க்கின்ற போது வேதனையை ஏற்படுத்துகிறது.

மனித உரிமை மீறல் சம்மந்தமாக செயற்பட்டவர்கள் தண்டிக்கும் வகையில் சர்வதேச நீதிமன்றத்தில் அவர்களுக்கு தண்டனை வழங்குகின்ற நிலைப்பாட்டை கொண்டு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் குறித்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

மன்னார் மறைமாவட்டத்தின் முன்னைநாள் ஆயர் அமரர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஏற்கனவே கூறியது இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களின் உண்மை தொகையை ஐ.நா.சபை வரை சென்றுள்ளது.

இன்று வரை அவரது எண்ணிக்கையே அங்கும் உள்ளது. அவ்வாறான ஒரு சூழலில் ஆயர் அவர்கள் கூறிய வார்த்தை கள்ளர்கள் கள்ளர்களை விசாரணை செய்ய முடியாது என்றது போல எங்களுடைய இனத்தை அழித்தவர்கள், எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர்கள், இனத்தை இல்லாது செய்கின்ற சிந்தனையுடன் உள்ளவர்கள் அதற்கு எதிரான விசாரனையை முன்னெடுக்க அருகதையற்றவர்கள் என்பதை நாங்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறோம்.

இந்த கையெழுத்து வேட்டை ஐ.நா.வரைக்கும் சென்று எமக்கு நீதியாக மாற வேண்டும். எம் உறவுகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம். வடக்கில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (29) குறித்த கையெழுத்து வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் பிறிதொரு தினத்தில் இடம்பெறும் பல ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களை பெற்றுக் கொள்வதன் மூலம் எமது இலக்கை அடைய முடியும். இதனூடாகவே எமது கோரிக்கையை சர்வதேசத்திற்கு தெரிவிக்க முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கையெழுத்து போராட்டத்தில் அருட் தந்தையர்கள், உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள், பொது மக்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டு கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழ் மக்களுக்கான சர்வதேச நீதி: அடுத்தடுத்து அநுரவிற்கு கிளம்பும் எதிர்ப்பு

அநுர அரசாங்கம் கடந்தகால அரசுகளைப் போல பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வதேச நீதிப் பொறிமுறையை நிராகரிக்கிறது என்றால் அது பச்சை இனவாதம் என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரியவருகையில், இனவாதம் அற்ற நாட்டை உருவாக்கிறோம் என மேடைப் பேச்சுப் பேசும் அநுர அரசாங்கம் சக பாதிக்கப்பட்ட இனத்திற்கான உள்நாட்டு நீதி 16 ஆண்டுகளாக ஏன் கானல் நீராகியது என்ற உண்மையை அறிந்தும் கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று நாம் இராணுவத்தை காட்டிக் கொடுக்கமாட்டோம் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு உள் நாட்டில் நீதி வழங்குவோம் என்பது ஏமாற்று நாடகம்.

மனிதப் புதைகுழிகள் வலிந்து காணாமல் ஆக்கப்டோருக்கான மிகப் பெரும் ஆதாரமும் சாட்சியமும் இதற்கு உள் நாட்டில் நீதி என்பது அநுர அரசின் பித்தலாட்டம்.

பொருளாதார நெருக்கடி

1996 ஆம் ஆண்டு வடக்கில் 90 வீதம் மின்சாரம் இல்லை யுத்தம் நடந்து கொண்டு இருக்கின்றது.

பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் இராணுவ மற்றும் விமானப்படைகளின் கண்மூடித்தனமான தாக்குதல்கள் இதற்குள் கிரிக்கட் பார்த்தனர் என புதிய உருட்டு.

அடிப்படை உரிமை

பாண் கேட்டவனுக்கு கேக் சாப்பிடு என்பது போல சொந்த நிலத்திற்கு குடியேற முடியாது இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்களை விடுவிக்குமாறு போராடிய மக்களை விரட்டிவிட்டு அடிப்படை உரிமையை கோரி போராடும் மக்களுக்கு தீர்வு வழங்காது விளையாட்டு மைதானத்திற்கு அடிக்கல்லு நாட்டுவது அவசியமா ?

அடிப்படைப் பிரச்சினைகளுக்கும் தேசிய இனப்பிரச்சினைக்கும் தீர்வு காண அநுர அரசாங்கம் தயார் இல்லை என்றால் கடந்த கால ஆட்சியாளர்களின் இனவாத ஆட்சியாக தோல்வியில் தான் முடிவடையும் வாக்களித்த மக்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் காத்திருக்கத்தான் செய்யும்” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியினால் திறந்துவைக்கும் திறப்புவிழா கற்களில் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மை இல்லை – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான திறப்புவிழா கற்களில் நல்லாட்சிக்கு அவசியமான வெளிப்படைத்தன்மையும் தகவல் அறிவதற்கான சுதந்திரமும் மீறப்பட்டுள்ளது. ஆகவே அக் கற்கலில் காணப்படும் தவறுகள் உரியவாறு மறுசீரமைக்கப்படுவது மக்களின் தகவல் அறிந்து கொள்வதற்கான உரிமையினை உறுதிப்படுத்தும் என்பதுடன் அரச நிதி செலவிடப்படுவதன் வெளிப்படைத் தன்மையினையும் அதிகாரிக்கும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

1ஆம் திகதி திங்கட்கிழமை யாழிக்கு விஜயம் செய்த ஜனாதிபதி கடவுச்சீட்டு அலுவலகம் மற்றும் விளையாட்டுத்திடல்இ துறைமுகம் என்பவற்றின் ஆரம்பப் பணிகளை மேற்கொண்டார். அவரினால் கடந்த ஆட்சியாளர்களைப் போல் ஆரம்ப நிகழ்வுகளுக்கு பெரும் பணம் செலவிடப்படாமைஇ எளிமையான முறையில் மேற்படி நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டமையை நாம் வரவேற்கின்றோம். எனினும் நல்லாட்சித்தத்துவம் மீறப்பட்டுள்ளது.

இவ்விடத்தில் திறப்பு விழாக் கற்களில் மக்களின் பணம் என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச நிதி என்பது மக்களின் பணம் ஆகும். அதனை தொகைகளைக் குறிப்பிடாது குறிப்பிட்டதனை நாம் அறிவார்ந்த பார்வையில் விசேடமான மாற்றம் என்று கூற முடியாது. அரச நிதியில் எவ்வளவு தொகை திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது என்பது கல்வெட்டுக்களில் குறிப்பிடப்படாமல் விடப்பட்டமை அரசின் நிதி தொடர்பான வெளிப்படைத்தன்மையை கேள்விக்குள்ளாக்குகின்றது.

நிதி செலவிடலில் தொகைகள் வெளியிடப்படும் போதே மக்களின் நிதி காத்திரமாகப் பயன்படுத்தப்ப்ட்டதா என பொதுமக்களால் விளங்கிக் கொள்ள முடியும். ஆகவே மக்கள் தகவல்களை பெறுவதற்கான வழிமுறையை இலகுபடுத்தவதில் அரசாங்கம் தோல்விகண்டுள்ளது கவலையளிக்கின்றது. பொது நிதி தொடர்பில் பொறுப்புச் சொல்வதற்கான அரசியல் பொருளாதார ரீதியானதும் நல்லாட்சியின் அளவு கோலுக்கான கல்விசார் அடிப்படையுமாகும்.

இலங்கை போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் திட்டங்களை ஆரம்பிப்பதும் பின்னர் கைவிடுவதும் சகஜமாகும். அவ்வாறான நிலைக்கு போதுமான நிதித்திட்டமிடல் இன்றி அபிவிருத்திகளை அரசியல் ரீதியில் ஆரம்பிப்பதும் ஒருகாரணமாகும். அடுத்து மேலதிக நிதியின்றியும் திட்டங்கள் தடைப்படுகின்றன. சில திட்டங்கள் சரியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமையினால் தோல்வி அடைகின்றன.

அவ்வாறான நிலையில் அப்படியாக தோல்வியடையும் கட்டுமாணங்கள் பற்றி கணக்காய்வு மேற்கொள்ளப்படும் அதேவேளை மக்களின் தீர்ப்பிற்கு அரசியல் தலைவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்பது சனநாயக சம்புரதாயம். ஆகவே ஜனாதிபதின் பெயர் குறிப்பிடப்பிட்டால் திட்டத்தின் வெற்றி தோல்விகள் பற்றி மக்கள் மதிப்பிடுவது இலகுபடுத்தப்படும்.

திட்டங்களின் வெற்றி தொல்விகளின் பொறுப்புக்கூறலை வரலாற்று ரீதியில் தலைவர்கள் பெறுவர்கள் என்ற நியதியை உணர்த்தும். ஆகவே தலைவர்கள் சரியான நிபுணத்துவத்துடன் செயற்படுவதற்கு அது வழிநடத்தும். ஆகவே இவைகள் ஜனாதிபதியினால் யாழில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்ட கற்களில் மீறப்பட்டுள்ளன. எனவே இதுபற்றி அரசாங்கம் கவனத்தில் எடுத்து அவ் திறப்புவிழக்கற்களின் அருகில் நிதி செலவு அல்லது ஒதுக்கம் பற்றி வெளிப்படுத்தி உதவவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

உள்ளூராட்சிக்கான அதிகாரப்பகிர்வு அபிவிருத்திக்குத்தேவை என்பதை உணர்ந்து சபைகளை அரசு வலுப்படுத்தவேண்டும் – உள்ளூராட்சி அமைச்சரிடம் தவிசாளர் நிரோஷ் எடுத்துரைப்பு

கிளின் சிறிலங்கா திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்கள் மீறப்படுகின்றன. அதிகாரப்பகிர்வு மற்றும் மனித உரிமைகள் பேணப்படுவது கூட அபிவிருத்தியின் ஓர் அங்கமாகும். எனவே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் திட்டங்கள் வாயிலாக மீறக்கூடாது. மாறாக அபிவிருத்தியைக் காத்திரமாக்க வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ.எச்.எம்.எச். அபேயரட்ண மற்றும் பிரதி அமைச்சர் பி. ரூவான் செனரத் ஆளுநர் என்.வேதநாயகன் உள்ளிட்டவர்கள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதானிகளை வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையர் அலுவலக கேடபோர் கூடத்தில் இன்று (27.08.2025) புதன்கிழமை மாலை சந்தித்து கலந்துரையாடினர். இச் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

உள்ளூராட்சி மன்றங்களிள் ஆளணி வெற்றிடம் நாட்டின் பிறபாகங்களைக் காட்டிலும் வடக்கு மாகாணத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆளணி வெற்றிடத்தினை நாட்டின் ஏனைய மாகாணங்கள் தேர்தல் காலத்திற்கு முன்னரான விசேட சுற்று நிருபங்களுக்கு அமைய நியமித்துக்கொண்ட போதும் எமது மாகாணத்தில் வெளிவாரிப்பணியாளர்களாக சனசமூக நிலையங்கள் ஊடாக நியமிக்கப்பட்டிருந்தமையினால் துரதிஸ்டவசமாக எம்மால் இந் நியமனங்களுள் பயனடைய முடியவில்லை. தசாப்தக் கனக்கில் பல தொழிலாளிகள் நியமனத்திற்காக ஏங்குகின்றார்கள். இவ்விடயத்தில் அமைச்சர் அவர்கள் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றைத்தாக்கல் செய்து பாதிக்கப்பட்ட தரப்புக்கு நியமனத்தினை விரைவு படுத்தக்கோருகின்றோம். தொழிலாளர்களின் பிரச்சினை என்ற வகையில் இந்த அரசாங்கம் கூடிய கவனம் எடுக்கும் என நம்புகின்றோம்.

மேலும் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளத்தில் எதிர்வரும் ஆண்டில் இருந்து தற்போது உள்ளூராட்சி மன்றங்கள் செலுத்திவரும் இருபது விகித பணத்தினை நாற்பது விகிதமாக அதிகரிக்க வேண்டிய அறிவுறுத்தல் உள்ளது. இதனை எமது சபைகள் தாங்கிக்கொள்வதில் பாரிய பிரச்சினை உள்ளது. எனவே அரசின் இக் கொள்கையில் மாற்றத்தினைக் கோருகின்றோம். அதேவேளை சபைகளின் வருமானம் பற்றிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகையில் சபையின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்ட அளவீட்டு முறைமை ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. காரணம் சபைகளின் நிலப்பரப்பு மற்றும் சனத்தொகை என்பன வேறுபட்டுள்ளன. ஆகவே சபைகளின் வருமானம் கணக்கிடப்படும் போது நிலப்பரப்பு மற்றும் சனத்தொகைக்குமான சூத்திரம் பின்பற்றப்படவேண்டும். அதுவே சரியான புள்ளிவிபரத்தரவுகளை வழங்கும். அபிவிருத்திக்கு அது அவசியமாகும்.

மேலும் உள்ளூராட்சி சேவை மூடப்பட்ட சேவையாக அமைகளில் உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்களால் மக்களுக்கு ஆற்றப்படும் அரச சேவையினை வினைத்திறனாக்க முடியும். உள்ளூராட்சி மன்ற தாய்ச் சட்டங்கள், நியமத்துணைவிதிகள், துணைவிதிகளை கற்றுள்ள மற்றும் அனுபவப்பட்ட உத்தியோகத்தர் குழாம் மீளவும் உள்ளூராட்சி சேவைக்குள் ஈடுபடுத்தப்படுவது சிறந்தது. அவர்களை எழுந்தமானமாக மத்திய அரசாங்கத்தின் திணைக்களங்களுக்கு இடமாற்றக் கொள்கைகளுக்குள்ளாக இடம்hற்றுவதைத் தடைசெய்யும் தேசிய கொள்கை நாட்டில் ஏற்படுத்தப்படவேண்டும். புதிது புதிதாக உத்தியோகத்தர்கள் திணைக்களங்களில் இருந்து இடமாற்றலாகி வருவது மத்திய அரசாங்கத்தின் ஓர் திணைக்களம் போலவே உள்ளூராட்சி மன்றங்களை உருவாக்குகின்றது.

அத்துடன் இப்போது மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. இவ் வரவு செலவுத்திட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் சேவைப்பரப்பில் வருகின்ற விடயங்களுக்கான செயற்பாடுகளுக்கு ஏனைய அமைச்சுக்களுக்கு நிதியை ஒதுக்கி அதன் வாயிலாக மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அலுவலகமான பிரதேச செயலக வாயிலாக நிதிகள் ஒதுக்கப்பட்டு திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை நாம் எதிர்க்கின்றோம்.

உள்ளுராட்சி மன்றங்களின் பகிரப்பட்ட அதிகாரங்களை மீறப்படாது மாகாண சபை முறைமை ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக நிதியை ஒதுக்க வேண்டும். கிள்னி சிறிலங்கா திட்டத்தின் வாயிலாக உள்ளூராட்சி மன்றங்கள் முகாமை செய்யும் பஸ்தரிப்பிடங்களின் முடிவுகளைக் கூட மத்திய அரசாங்கத்தின் நிர்வாகத்தினர் முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized