இலங்கையின் நிலைமை தொடர்பில் இங்கிலாந்து நாடாளுமன்றில் விவாதம்

இலங்கையின் நிலைமை குறித்து அடுத்த வாரம் இங்கிலாந்து நாடாளுமன்றம் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொருளாதார நிலைமைக்கான பிரித்தானியாவின் பதில் குறித்த பின்வரிசை வணிகக் குழுவின் விவாதம் எதிர்வரும் 9ஆம் திகதி பொதுச்சபையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை உறுப்பினர்களுக்கு அவர்கள் விருப்பமான விவாதங்களை முன்வைக்க, பின்வரிசை வணிகக்குழு வாய்ப்புகளை வழங்குகிறது.

முன்னதாக கடந்த ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வின் போது பிரித்தானியா தலைமையிலான இலங்கை தொடர்பான முக்கிய குழுவே, இலங்கைக்கு எதிரான யோசனையை முன்னகர்த்தி அதனை நிறைவேற்றியது. இதன்படி இலங்கையின் போர் குற்றம் தொடர்பான பொறுப்புக்கூறல் உள்நாட்டில் இருந்து சர்வதேசத்தின் கைகளுக்கு செல்கிறது. எனினும் இதனை இலங்கை கடுமையாக ஆட்சேபித்து வருகிறது.

சமஷ்டித் தீர்வே என்பதில் தமிழ்த் தலைமைகள் அனைவரும் ஒற்றுமை

வடக்கு, கிழக்குத் தமிழர்களின் தலைவர்கள் தங்களுக்குள் கட்சிகள், அணிகளாகப் பிரிந்து நின்றாலும், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வே ஒரே வழி என்பதில் மிக உறுதியாகவும், ஒருமித்த நிலைப்பாட்டிலும் உள்ளனர் எனும் அரசின் மூத்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் பதிலளித்துள்ளார் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்த் தலைவர்கள் பிளவுபட்டிருக்கின்றார்கள் என்று சாக்குப் போக்குக் கூறி, சமாளிப்பதை விடுத்து, சமஷ்டித் தீர்வுக்கு வழி பாருங்கள்.

தமிழ்த் தலைமைகள் வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறாகப் பிரிந்து நிற்கலாம். அவர்களின் அணுகுமுறைகள், போக்குகள் வேறுபடலாம். ஆனால், தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலேயே தீர்வு என்பதில் அவர்கள் அனைவரும் ஒருமித்த நிலைப்பாட்டிலேயே உறுதியாகவும் தெளிவாகவும் உள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ் தலைமைகளிடையே பிளவு, வேறுபாடு, கருத்து முரண்பாடு, குத்துவெட்டு என்று சாக்குப் போக்குச் சொல்லி விடயத்தைச் சமாளிப்பதை விடுத்து, தமிழ் தலைமைகளின் இந்த ஒன்றுபட்ட நிலைப்பாட்டை கவனத்தில் எடுத்து, அதில் பொதிந்துள்ள நீதி, நியாயத்தைப் புரிந்து கொண்டு, விரைந்த தீர்வுக்கு முன்வாருங்கள்.

மேலும், காலத்தை இழுத்தடித்துச் சாக்குப் போக்குக் கூறிச் சமாளிப்பதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கில் வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்தவர்களுக்கு எதிராக வனவளத்திணைக்களம் முறைப்பாடு : இருவர் கைது

வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடும்ப வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்த குடும்பஸ்தர்களுக்கு எதிராக வனவளத் திணைக்களத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யுத்தம் காரணமாக தென்னிலங்கையில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை 1977 – 1980 வரையான காலப்பகுதியில் வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியில் குடியேற்றம் செய்யப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்கான விவசாய காணிகளும் வழங்கப்பட்டன.

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்து சென்று யுத்தம் முடிவடைந்த பின் 84 வரையிலான குடும்பங்கள் அப் பகுதியில் மீள்குடியேறினர்.

அம் மக்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமையால் மீளவும் பல குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறிய நிலையில் 15 குடும்பங்கள் வரையில் தற்போது அங்கு வசித்து வருகின்றனர். அம் மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக தமது வீடுகளுடன் இணைந்த காணித் துண்டங்களில் தோட்ட செய்கை மற்றும் நெற் செய்கை என்பவற்றை மேற்கொள்வதற்காக காணிகளை உழுது பயிரிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அங்கு சென்ற வனவளத் திணைக்களத்தினர் அது வனவளத்திணைக்களத்திற்குரிய காணி எனத் தெரிவித்து அவர்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கையில் ஈடுபட தடை விதித்துள்ளதுடன், உழுது பயிற்செய்கையில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டையடுத்து வவுனியா வடக்கு, காஞ்சிரமோட்டைப் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று (04) பிணையில் விடுவிடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது குடியிருப்பு காணிகளில் ஒரு வயிற்றுக் கஞ்சிக்கு கூட பயிர் செய்ய வனவளத் திணைக்களம் அனுமதிக்கவில்லை எனவும் இது குறித்து அரச அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் மௌனம் காத்து வருவதாகவும் மீள்குடியேறிய மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்

 

மூன்று மாத கை குழந்தை உட்பட 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து மூன்று மாத கைக்குழந்தையுடன் மூன்று குடும்பத்தை சேர்ந்த  மேலும் 10 பேர் அகதிகள் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜஸ்டின் அவரது மனைவி அவுஸ்யா அவரது மூன்று மாத குழந்தை, மன்னார்  மாவட்டத்தை சேர்ந்த  ஜெயக்குமார், அவரது மனைவி யோகேஸ்வரி அவரது இரு மகள்கள் மற்றும்  முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த புஷ்பம் மற்றும் அவரது மகன் பிரபாகரன் மற்றும் உட்பட  மூன்று குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் நேற்று இரவு மன்னாரில் இருந்து  ஒரு படகில் புறப்பட்டு இன்று (05) அதிகாலை 1 மணியளவில்  அடுத்த நடுதிட்டு பகுதியில்  சென்று இறங்கியுள்ளனர்.

பின்னர் தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் 10 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க படுவார்கள் என மரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 198 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in Uncategorized

தேசிய எல்லை நிர்ணய குழு நியமனம் : வர்த்தமானி வெளியீடு

உள்ளூராட்சி மன்றங்களுக்கான வட்டார எல்லை நிர்ணயத்திற்காக தேசிய எல்லை நிர்ணய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான குழு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தலைமையிலான குறித்த குழுவிற்கு நான்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் ஏனைய உறுப்பினர்களாக ஜயலத் திஸாநாயக்க, டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, கே. தவலிங்கம் மற்றும் ஐ.ஏ.ஹமீட் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோப், கோபா குழுக்கள் அடுத்தவாரம் கூடும்

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) உள்ளிட்ட பாராளுமன்றக் குழுக்கள் பல,  அடுத்தவாரம் கூடவுள்ளன.

அதற்கமைய, வரையறுக்கப்பட்ட நிலக்கரி தனியார் நிறுவனம் எதிர்வரும் 09 ஆம் திகதி அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 08 ஆம் திகதி அரசங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) கூடவுள்ளதுடன் இதில் மரக்கறி விதைகளை உள்நாட்டில் உற்பத்தி செய்வது தொடர்பான முன்னேற்றம் குறித்த விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பில் விசாரணை செய்யப்படவுள்ளது. மேலும், மருத்துவக் கழிவுகளை அகற்றுவதை முகாமைத்துவம் செய்வது தொடர்பான விசாரணைகளுக்கு எதிர்வரும் 11 ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் குழு முன்னிலையில் சம்பந்தப்பட்ட தரப்பினர் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சில அடுத்தவராம் கூடவுள்ளன. அதற்கமைய எதிர்வரும் 08 ஆம் திகதி நீதி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு, கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழு என்பன கூடவுள்ளன.

மேலும், எதிர்வரும் 10 ஆம் திகதி மகளிர், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும், வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக்குழுவும் கூடவுள்ளன. இதேவேளை, சிறுவர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் மற்றும் ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு என்பனவும் எதிர்வரும் 08 ஆம் திகதி கூடவுள்ளன.

இலங்கையில் முதலீடுகள் : பிரதமர் கோரிக்கை

பிரேரிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்களை உடனடியாக அங்கீகரிப்பதற்குத் தேவையான புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். கனேடியப் பாராளுமன்ற உறுப்பினர் ரேச்சல் தோமஸ் அவர்களது தலைமையிலான முன்னணி தொழிலதிபர்கள் குழுவொன்று, நேற்று (3) பிரதமர் அலுவலகத்தில் அவரைச் சந்தித்தபோதே பிரதமர் இது தொடர்பில் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடுகளுக்காக சமர்ப்பிக்கப்படுகின்ற பிரேரணைகளை துரிதமாக அங்கீகரிப்பதற்குத் தேவையான திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கு, அரசு ஏலவே திட்டங்களை வடிவமைத்துள்ளதென பிரதமர் தினேஷ் குணவர்தன, இதன்போது கனேடிய தொழிலதிபர்களுக்கு எடுத்துக் கூறினார். பொருளாதாரத்தை நிலைநாட்டுவதற்கு இதுவரை அரசு எடுத்துள்ள படிமுறைகள் தொடர்பில் அவர்களுக்கு தெளிவுபடுத்திய பிரதமர், இலங்கையில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு தொழிலதிபர்களிடம் கேட்டுக்கொண்டார். பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும்பொருட்டு கனடாவின் முன்னணி தொழிலதிபர்களின் ஒத்துழைப்புக்கள் அவசியமென்றும் தகவல் தொழிநுட்பம், விவசாயம், மீன்பிடிக் கைத்தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற துறைகளில் முதலீடு செய்வதற்கு அதிக கேள்விகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

தற்போதைய நெருக்கடிகளை வெற்றிகொண்டு பொருளாதார அபிவிருத்திக்காக இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு தமது ஒத்துழைப்புக்களை வழங்குவதாக அப்பிரதிநிதிகள் குழுவிலிருந்த சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்கள், பிரதமரிடம் உறுதியளித்தனர். இலங்கையுடன் காணப்படும் உறவுகளை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த கனேடிய தொழிலதிபர்கள் சமூகம், இலங்கையில் இளைய தொழில் முயற்சியாளர்களுக்கு அவர்களது வர்த்தகங்களை கட்டியெழுப்புவதற்கு தாம் உதவுவதாகவும் விருப்பம் தெரிவித்தனர். வெளிநாட்டு முதலீட்டு திட்டங்களை அங்கீகரிப்பதில் ஏற்படும் அநாவசியமான தாமதங்களை அகற்றுமாறும் அவர்கள் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டதுடன், பல ஆசிய நாடுகள், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கும் விதத்தில் தமது வெளிநாட்டு முதலீட்டு நடைமுறைகளை துரிதப்படுத்தியுள்ளதாகவும் எடுத்துக் காட்டினர்.

இக்குழுவில், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹென் டொங், ரேச்சல் தோமஸ், கணேசன் சுகுமார், ஆதர் கிறவுஸ், குலா செல்லதுரை, மொஹான் பெரேரா, ஜுட் பிரான்சிஸ், சிவா சிவநாதன், இளங்கோ ரத்னசபாபதி, பிரேம் யசமனய், ரியாஸ் ரவூப், மகேஷ் அபேவர்தன, டேவிட் ஸ்டாஓ, சுதர்ஷன் ஸ்ரீயோகநாதன் மற்றும் அருண் கிருபா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

வெளிநாட்டவருடான திருமண பதிவு கட்டுபாடுகளை நீக்க நடவடிக்கை

வெளிநாட்டவர்களுக்கும் இலங்கையர்களுக்கும் இடையிலான திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள தடைகளை நீக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன பதிவாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதுபோன்ற தடைகளுக்கு வழிவகுத்த சுற்றறிக்கையை உடனடியாக இரத்து செய்யவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்திலேயே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்த ரஷ்ய போர்க் கப்பல்கள்

இரண்டு ரஷ்ய போர்க்கப்பல்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய ‘வர்யாக்’ ஏவுகணை கப்பல், அட்மிரல் டிரிபுட்ஸ் நீர்மூழ்கி எதிர்ப்பு கப்பல் மற்றும் ‘போரிஸ் புடோமா’ டேங்கர் தலைமையிலான பசிபிக் கடற்படையின் ஒரு பிரிவு பசிபிக் கடற்படையின் தெற்கே இலங்கைக்கான பொறுப்பு வலயத்திற்குள் நுழைந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இந்த பிரிவினர் மத்தியதரைக் கடலில் இருந்து விளாடிவோஸ்டோக்கில் அமைந்துள்ள தங்கள் தளத்திற்கு கடலுக்கு அப்பாற்பட்ட கடல் வலயத்தில் செயற்பட்ட பின்னர் மீண்டும் நிலைநிறுத்தப்படுவதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தக் கப்பல்கள் தற்போது இந்தியப் பெருங்கடலைக் கடந்து கிழக்கு ரஷ்யாவை நோக்கிச் செல்கின்றன. டிசம்பரில் 2021 இல் இந்த பிரிவு அதன் தளத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

இலங்கையின் திரவ கையிருப்பு வீழ்ச்சியில் : மத்திய வங்கி அறிவிப்பு

22 செப்டெம்பர் மாத இறுதியில் இலங்கையின் திரவ கையிருப்பு தொடர்ந்து கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி இன்று தெரிவித்துள்ளது.

வங்கித் துறையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு மற்றும் மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் அடங்கிய மொத்த வெளிநாட்டு சொத்துக்கள் செப்டம்பர் 2022 இன் இறுதியில் 6.0 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தன.

2022 செப்டெம்பர் இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதில் சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான இடமாற்று வசதியும் அடங்கும், அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக மத்திய வங்கி அந்நிய செலாவணியை தொடர்ந்தும் வழங்கி வந்தது.

இதன் விளைவாக, திரவ இருப்பு அளவு செப்டம்பர் 2022 இறுதிக்குள் குறிப்பிடத்தக்க குறைந்த மட்டத்தில் இருந்ததாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 04 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 44.9 வீத வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது.

இதற்கிடையில், 2022 நவம்பர் 04 வரையிலான காலப்பகுதியில் யூரோ, பவுண்ட் ஸ்டெர்லிங், ஜப்பானிய யென், அவுஸ்திரேலிய டொலர் மற்றும் இந்திய ரூபா ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது.