வடக்கில் ஆதிக்கப் போட்டி

‘சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை’ இந்தியாவின் பாதுகாப்புக்கான எந்த அச்சுறுத்தலும், இலங்கைக்கும் அச்சுறுத்தலே என்று புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த வாரம் ரைம்ஸ் ஒவ் இந்தியாவுக்கு வழங்கிய செவ்வியில் கூறியிருக்கிறார்.

அவரது அந்தக் கருத்து வெளியாகிய அதே நாள், இந்தியாவின் மற்றொரு நாளிதழான தி ஹிந்துவில், இலங்கையில் சீன இராணுவத்தின் பிரசன்னம் குறித்து கவலை கொள்வதாக, மாநில புலனாய்வுத் துறையின் அறிக்கையை அடிப்படையாக வைத்து ஒரு ஆய்வுச் செய்தி வெளியாகியிருந்தது. இலங்கையின் துறைமுகங்களை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதற்கு வேறெந்த நாடும் பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்று, மிலிந்த மொரகொட கூறியிருந்தாலும் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மண்ணைப் பயன்படுத்துவதற்கு எந்த நாட்டையும் அனுமதிக்கப் போவதில்லை என்று கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும், ஆட்சியில் இருந்த போது பலமுறை உத்தரவாதம் அளித்திருந்தாலும், இலங்கையில் அதிகரித்து வரும் சீனப் பிரசன்னம், இந்தியாவுக்கு கவலையளிப்பதாகவே உள்ளது.

இந்தியாவைக் கண்காணிப்பதற்கு இலங்கையை சீனா ஒரு தளமாகப் பயன்படுத்த தொடங்கியிருப்பது, புதுடில்லிக்கு முக்கியமானதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. இந்த விவகாரத்தை இந்தியா அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ளவில்லை. அப்படி எடுத்துக் கொள்ளவும் முடியாது. ஏனென்றால், சீனா இப்போது இந்தியாவை தன் நேரடி மற்றும் மறைமுக பலத்தைப் பயன்படுத்தி சுற்றி வளைக்கத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் ‘யுவான் வாங் -5’ என்ற செய்மதி, மற்றும் ஏவுகணை வழித்தடக் கண்காணிப்புக் கப்பல், அம்பாந்தோட்டை துறைமுகத்தில் தரித்துச் சென்ற பின்னர், இந்தியாவின் பாதுகாப்புக் கரிசனை இன்னும் அதிகரித்திருக்கிறது.வழக்கமாக, இந்தியாவின் மத்திய புலனாய்வு அமைப்புகள் தான், சீனாவின் பிரசன்னம் குறித்த கரிசனைகளை- எச்சரிக்கைகளை விடுப்பது வழக்கம். அதற்கு மாறாக, இப்போது இலங்கையில் குறிப்பாக வடக்கில் சீன இராணுவத்தின் பிரசன்னம் அதிகரித்திருப்பது குறித்து, எச்சரிக்கை விடுத்திருக்கிறது மாநில அரசின் புலனாய்வு அமைப்பு.

மாநில அரசின் புலனாய்வு அமைப்பு, மாவட்டங்களின் முக்கிய நகரங்கள் மற்றும் அளவிலான பொலிஸ் தலைமையகங்களுக்கு, விடுத்துள்ள எச்சரிக்கையில், சீன புலனாய்வாளர்களின் ஊடுருவல்கள் நிகழலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இலங்கையின் அரசியல் கட்சி ஒன்றின் துணையுடன், சீன இராணுவப் புலனாய்வாளர்கள், தமிழகத்துக்குள் ஊடுருவியது பற்றிய செய்தியும், வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில், அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் பிரிவு, விமான நிலையங்கள், துறைமுகங்கள், என ஏராளமான கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இருக்கின்றன. இந்த கேந்திரங்கள் இராணுவ ரீதியாகவோ, மூலோபாய ரீதியாகவோ, பாதுகாப்பு ரீதியாகவோ முக்கியத்துவமானவை.

இவ்வாறான இடங்களில் பாதுகாப்பில் மத்திய அரசும் அதன் புலனாய்வு நிறுவனங்களும் கவனமாக இருக்கின்ற போதும், மாநில புலனாய்வுப் பிரிவு விடுத்திருக்கின்ற எச்சரிக்கை, இந்திய அரசாங்கத்துக்கு சிக்கலை தோற்றுவித்திருக்கிறது. காரணம், சீனாவின் பிரசன்னம் குறித்து இந்தியா விழிப்பு நிலையில் இருந்தாலும், சீனாவுடன் நெருங்கிய உறவாடும் இலங்கையுடன், அது முரண்பட விரும்பவில்லை. அவ்வாறு முரண்படுவது இலங்கை அரசாங்கத்தை சீனாவை நோக்கி இன்னும் நெருங்கிச் செல்லும் நிலையை ஏற்படுத்தி விடும் என்ற அச்சம், அதற்கு உள்ளது. இவ்வாறான நிலையில் தான் மாநில புலனாய்வு அமைப்பின் எச்சரிக்கை வெளியாகியிருக்கிறது. இதற்குப் பின்னரும், புது டில்லி இந்த விவகாரத்தில் தற்காப்பு நிலையில் – மதி ல்மேல் பூனையாக இருக்க முடியாது.

அதேவேளை, வடக்கில் சீன இராணுவப் பிரசன்னம் குறித்த தமிழக புலனாய்வு அறிக்கை எந்தளவுக்கு உண்மையானது என்ற கேள்விகள் உள்ளன. ஏனென்றால் வெளிப்படையாக சீன இராணுவம் வடக்கில் இயங்கவில்லை. அதற்கான ஆதாரங்களும் வெளியாகவில்லை. ஆனால், இராணுவ பாணி சீருடையணிந்த சீனர்கள் பலர், வடக்கில் புதிதாக முளைத்த கடல் அட்டைப் பண்ணைகளில் காணப்படும் படங்கள் வெளியாகியிருந்தன. அவை சீனப் பணியாளர்கள் என்று கூறப்பட்டாலும், சீன மக்கள் விடுதலை இராணுவம் அல்லது சீன புலனாய்வு அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் இருந்து, அவர்களை வேறுபடுத்தி அறிவதற்கான எந்த வழிகளும் இல்லை.

தமிழக அரசின் புலனாய்வுப் பிரிவு, கடலட்டைப் பண்ணைகளில் சீன புலனாய்வுப் பிரிவினர் அதிநவீன கண்காணிப்புக் கருவிகளைப் பொருத்துவதாகவும், கடலட்டை பிடிப்பதை அவதானிப்பது என்ற பெயரில் சீன தூதுவரும் அதிகாரிகளும் அடிக்கடி இந்திய கடல் எல்லை வரை வந்து கண்காணித்துச் செல்வதாகவும் எச்சரித்திருக்கிறது. வடக்கில், சீனா இராணுவ ரீதியாக கால் வைக்க முடியாதென்பது சீனாவுக்கு தெரியும். ஏனென்றால் இந்தியா அதனை தீவிரமாக எதிர்க்கும். ஏற்கனவே, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் இருந்த போது, திருகோணமலை சீனக்குடாவில், விமானங்களைப் பழுதுபார்க்கும் மையத்தை அமைக்க சீனா முற்பட்டது. அதற்கு அரசாங்கமும் அனுமதி அளித்த பின்னர் புதுடில்லி தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியது. எனவே, பொருளாதார அல்லது முதலீட்டுத் திட்டங்களின் மூலமாகத் தான் வடக்கில் கால் வைக்கலாம் என்பதை சீனா உணர்ந்திருக்கிறது.

அவ்வாறாகத் தான், நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகிய இடங்களில், கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முற்பட்டது. அதனையும் இந்தியா தடுத்து நிறுத்தி விட்டது. இப்போது கடலட்டைப் பண்ணைகளின் ஊடாக சீனா வடக்கில் தீவிரமாக கால் வைக்கத் தொடங்கியிருக்கிறது. வடக்கில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்படுவதால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாக முறையிட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமலேயே, புதிய கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் முயற்சிகள் தொடர்கின்றன. கடலட்டைப் பண்ணைகளில் இந்திய நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் கொண்டுள்ளதாகவும் அவற்றுடன் பேச்சு நடத்தியதாகவும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியிருந்தார். இது, சீனாவுக்கு எதிரான உணர்வுகளை தணிக்கும் கருத்தாக இருக்கலாம். அதாவது சமநிலையை பேணுகின்ற முயற்சி.

அதேவேளை, இந்தியாவில் கடலட்டை பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு சட்டவிரோதமாகப் பிடிக்கப்படும் கடலட்டைகள் கடல் வழியாக கடத்தப்பட்டு, இலங்கையின் ஊடாகவே சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் கடலட்டை பிடிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள நிறுவனங்கள், இலங்கையில் கடலட்டை பண்ணைகளில் முதலீடு செய்ய முன்வருமா- அதற்கு சட்ட அங்கீகாரம் உள்ளதா என்பன கேள்விக்குரிய விடயங்கள். எவ்வாறாயினும், சீன கடலட்டைப் பண்ணைகளை இந்தியாவின் பாதுகாப்புடன் தொடர்புபடுத்தும், முயற்சிகளை மத்திய அரசு எவ்வாறு எடுத்துக்கொள்ளப் போகிறது என்பது கவனத்துக்குரிய விடயமாக உள்ளது.

ஏனென்றால், இலங்கைக்கு இனி கடன்களை வழங்குவதில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுத்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடு எட்டப்பட்டதும், முதலீடுகளின் மூலம் இலங்கைக்கு உதவவுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. அத்தகைய முதலீடுகள் கடலட்டைப் பண்ணை வடிவில் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஏனென்றால், மூன்று தீவுகளில் கலப்பு மின் திட்டங்களை அமைக்க சீனா முன்வந்த போது இந்தியா அதனை தட்டிப் பறித்தது.

அதுபோல, சீனாவுடன் போட்டி போட்டு, கடலட்டைப் பண்ணைகளில் இந்தியாவும் முதலிடக் கூடும். சீனப் பிரசன்னத்தை குறைப்பதை நோக்கமாக கொண்டு அவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளை நிராகரிக்க முடியாது. அவ்வாறான நிலைப்பாட்டை இந்தியா எடுக்குமானால், அது, வடக்கிலுள்ள மீனவர்களுக்குத் தான் மேலும் பேரிடியாக அமையும். ஏற்கனவே இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்த நிலைக்குத் தான் கொண்டு செல்லும்.

 

– ஹரிகரன்

Posted in Uncategorized | Tagged

இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவைப் பாதிக்கும் – மேஜர் மதன் குமார்

இலங்கையில் சீனாவின் நடவடிக்கைகள் இந்திய தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்துள்ள தமிழக மாநில புலனாய்வு பிரிவு கரையோர பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று இந்திய பத்திரிகையான இந்து ஆங்கில பதிப்பு செய்தி வெளியிட்டிருந்தது. இச் செய்தி பல விவாதங்களை தோற்றுவித்துள்ள நிலையில், இந்தியாவின் முன்னாள் புலனாய்வுத் துறை அதிகாரி மேஜர் மதன் குமார் வழங்கிய சிறப்பு செவ்வி

 

கேள்வி :-

இலங்கையின் கடல் பகுதியூடாக சீன நாட்டவர்கள் தமிழகத்திற்குள் ஊடுருவுவதாக இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்துள்ள கருத்தின் பின்னனி என்ன?

இந்திய புலனாய்வுத்துறை என்பதை விட, இவ்வாறான ஒரு தகவலை இந்திய நாளேடான ஹிந்து வெளியிட்டிருக்கின்றது. அதன் பிறகு இந்த தகவல் குறித்து சில ஊடகங்களில் விவாதம் நடந்தது. அடிப்படை என்னவென்றால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்கள் வாழக்கூடிய வடக்கு பகுதியிலிருந்து இந்தியா மிக மிக அருகாமையில் இருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு குறிப்பிட்ட ஒரு வார காலம் முன்பு இலங்கையிலிருந்து இந்தியாவரை, அதாவது தமிழகம் வரை நீந்தியே ஒரு சிறுவன் வந்து சேர முடிந்தது. அப்படிப்பட்ட மிகவும் அருகில் இருக்கக்கூடிய இடத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று சீனாவின் ஆதிக்கம் முன்பு இருந்ததைவிட கொஞ்சம் அதிகமாக இருப்பது என்பது கவலைக்குரிய விடயம் இந்தியாவிற்கு.

கடல் பாசி வளர்ப்பு அதற்கு உண்டான வர்த்தகம் என்ற போர்வையில் அவர்கள் இருந்தாலும் அங்கு இருக்கக்கூடிய தமிழர்களும் அதை இரசிக்கவில்லை. அதற்குண்டான வரவேற்பையும் கொடுக்கவில்லை. ஏனென்றால் சீனாவின் வெளிவுறவுக்கொள்கை குறிப்பாக கடல் வளத்தை அவர்களுடைய அண்டைய நாடுகளான பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் எந்தளவிற்கு சீனா சூறையாடிருக்கிது என்பதை இலங்கையில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் இந்தியாவில் இருக்கக்கூடிய மீனவ சமூகத்திற்கும் நன்றாகவே தெரியும்.

அப்பொழுது அங்கு இருக்கும் பூர்வ குடி மக்களான இலங்கையின் ஈழத்தமிழர்கள் 2009 ற்கு பிறகு அங்கு நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கை, இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வந்த பல இடங்களில் இருந்து சுதந்திரமாக தகவல்கள் இன்னும் வெளியுலகிற்கு தெரிவதற்கு வாய்ப்புக்கள் 2009 லிருந்து இன்றுவரை மிகவும் குறைவாக இருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அது ஒரு இராணுவ பகுதியாக இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் போது பத்திரிகை சுதந்திரமோ ஒரு ஜனநாயக நாட்டில் இருக்க வேண்டிய அடிப்படை சுதந்திரம் ஓரளவிற்கு மட்டுப்படுத்தப்படும் என்பது நிதர்சனமான உண்மை. இப்பொழுது சீனர்கள் அங்கு இருப்பது, சீனர்களை சீனாவிலிருந்து வேலைக்கு வருபவராக இருந்தாலும் சரி வர்த்தகம் செய்பவராக இருந்தாலும் சரி சீனாவின் அடிப்படை கோட்பாட்டை புரிந்து கொள்ள வேண்டும் .

சீனாவின் கம்னியூசியம் சித்தாந்தம் என்ன சொல்கிறதென்றால் அவர்களுடைய மக்கள் அங்கு இருக்கக்கூடிய நிறுவனங்கள் அனைத்துமே கம்னியூசிய சித்தாந்தத்திற்கும் கம்னியூசிய அரசாங்கத்திற்கும் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் முழு அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும் என்பது அவர்களுடைய ஒரு அடிப்படை சட்டம்.

இதை யாரும் மீற முடியாது. அதன் பொருள் என்னவென்றால் சீன நிறுவனங்கள், அங்கிருக்கக்கூடிய மக்கள்,சீன குடியுரிமை பெற்றவர்கள் உலகத்தில் எங்கு சென்று வேலை செய்தாலும் ஒரு நிறுவனத்தை நடத்தினாலும் சீன அரசிற்கு அதாவது சீன அரசு என்பதை விட சீன கம்னிஸ் பாட்டியிற்கு (“லோயல்“ என்று சொல்லப்படுகின்ற அவர்களுக்கு) ஒரு அடிப்படை கட்டுப்பாடு இருக்கிறது. அந்த கட்டுப்பாடு என்னவென்றால், அவர்கள் சீன நிறுவனங்களை வேறெங்கும் நடத்தும் பொழுது சீன கம்னியூசிய அரசாங்கத்திற்கு தேவையான சில காரியங்களை அவர்கள் மறுக்க இயலாது. அந்த காரியங்கள் என்னவென்றால் உளவு பார்ப்பது, கம்னியூசிய சித்தாந்தத்தைக் கொண்டு போய் சேர்ப்பது, கம்னியூசியத்தை வளர்ப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். எப்படி ஒரு உத்தரவு வந்தாலும் அந்த நிறுவனத்தை இயக்க கூடியவர்கள், வெளிநாட்டில் இருக்கக்கூடியவர்கள் அதை மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் சீன இராணுவம் உள்ளே வரவில்லை. சீருடை அணிந்த சீன இராணுவம் உள்ளே வரவில்லை. இவர்கள் வெறும் வர்த்தகர்கள், நிறுவனங்கள் நடத்த வந்தவர்கள் என்று பொருள் கொள்ள முடியாது . அது தவறாக சென்று முடிந்துவிடும் . இந்தியாவின் கவலை அதுதான்.

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள என்னுடைய நண்பர்கள் சிலரிடம் பேசினேன் அவர்கள் சொன்னார்கள், இல்லை சீன இராணுவ உடையில் நாங்கள் யாரையும் பார்க்கவில்லை என்று. அங்கு இருக்கக்கூடிய சீனாவின் பிரஜைகள், சீனாவின் குடியுரிமை பெற்றவர்கள். அவர்கள் இராணுவத்திற்கு ஆதரவாகவும் அவர்களுடைய உளவுத்துறைக்கு ஆதரவாகவும் செயல்பட வேண்டிய நிலை கட்டாயம் இருக்கின்றது.

அவர்களுக்கு விருப்பம், விருப்பமில்லை என்பதை கூற முடியாது. அது இந்தியாவிற்கு நேரடியாக ஒரு பாதுகாப்பற்ற அச்சுறுத்தலை கொடுப்பது என்பது தான் இந்த ஒரு குறிப்பிட்ட செய்தியில் உள்ள சாராம்சம்.

கேள்வி:-

இந்த செய்தி உண்மையெனில் இலங்கை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நாடா?

இந்தியாவின் பாதுகாப்பிற்கு இலங்கை பூகோள ரீதியில், நான் முன்னரே கூறியது போல், இந்தியாவிலிருந்து இருக்கக்கூடிய மொத்தம் 4000km தூரம் உள்ள நீளமுள்ள கடல் பகுதியில் மிகவும் அருகில் இருக்கக்கூடிய நாடுகள் இலங்கை இரண்டாவது மாலைத்தீவு. அப்பொழுது இலங்கையில் எந்தவொரு நகர்வு நடந்தாலும் அதன் விளைவு இந்தியாவிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு இலங்கை கஞ்சா உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவது என்ற நடவடிக்கையை நோக்கி செல்கின்றது.

அப்பொழுது இந்தியாவிற்கு மிக அருகில் இருக்கக்கூடிய இலங்கையில் இப்படி ஒரு நிகழ்வு நடந்தால் அங்கிருந்து கள்ளக்கடத்தல் மூலமாக கஞ்சா இந்தியாவிற்கு வரும் என்று நிச்சயமாக அறுதியிட்டு சொல்ல முடியும். அப்பொழுது இந்தியா தன் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது. இலங்கையில் எந்தவொரு நிகழ்வு நடந்தாலும் அது நிச்சயமாக இந்தியாவின் பாதுகாப்பிற்கு நேரடியாக ஒரு பாதிப்பை நல்லதாகவோ கெட்டதாகவோ எவ்வாறிருந்தாலும் ஏற்படுத்தும் என்பது நிதர்சனமான உண்மை.

கேள்வி :-

இந்த நிலையில் இந்தியா எவ்வாறு தனது பாதுகாப்பை உறுதிப்படுத் முடியும்?

இந்தியா இலங்கை இரு நாடுகளுக்கு இடையிலான நேரடி ஒப்பந்தங்கள் சில உள்ளது. அதாவது கடல் பாதுகாப்பில் போதைப்பொருள், ஆள்கடத்தல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகள்,இரு நாடுகளும் ஒருத்தருக்கு ஒருத்தர் இருக்கக்கூடிய தீவிரவாத தாக்குதல்கள் அது தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பது ஒரு நியதி. அதற்குண்டான ஒப்பந்தம் இருக்கின்றது . இரண்டாவது முக்கியமான விடயம் என்னவென்றால் BIMSTEC என்ற அமைப்பின் கூற்றின் படி இந்தியா ஒரு பெரிய நாடாக இருக்கக்கூடிய காரணத்தினால் இந்தியா தனது அண்டை நாடுகளான இலங்கை , நேபால் , பூட்டான் , பங்களாதேஷ், பாகிஸ்தானை தவிர்த்து மாலைத்தீவு வரைக்கும் அதன் பிறகு இந்தியாவிலிருந்து சற்று தொலைவில் இருக்கக்கூடிய தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு இந்தியா தன்னுடைய கடல் மார்க்கத்தில் இருக்கக்கூடிய வலிமை அதாவது கப்பல் படையினுடைய வலிமை, அவர்களுடைய தடுப்பு நடவடிக்கைகள் உளவமைப்பு, உளவு சாதனங்கள் இதை வந்து BIMSTEC அமைப்பில் இருக்கக்கூடிய உறுப்பு நாடுகளுக்கும் இந்தியா தகவல்களை பரிமாறும். அந்த நாட்டையும் சேர்த்து பாதுகாக்கும் என்ற ஒரு கருத்தும், இரண்டாவதாக அந்த நாடுகளும் மிக முக்கியமாக இலங்கை அவர்களிடம் இருக்கக்கூடிய தகவல்களை பரிமாற வேண்டும் என்பது நியதி.

இந்த இரண்டு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நாடுகள் BIMSTEC கூட்டமைப்பு என்பது ஆண்டுக்கு ஒருமுறை கூடும். இந்த வருடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களின் தலைமையில் நடந்தது . இரண்டாவது இரண்டு நாடுகளு‌க்கும் பரஸ்பர தூதரகங்கள் உள்ளன. இந்த இரண்டு நாடுகளும் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. அந்த பேச்சுவார்த்தையில் இந்த விடயங்கள் குறிப்பாக பேசி இருப்பார்கள்.

ஈழத்தமிழர்கள் வாழ்வாதார பிரச்சினை , இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இந்திய மீனவர்கள் இலங்கை மீனவர்களுக்கிடையிலான சச்சரவு மூன்றுமே ஒரு மிக மிக முக்கயமாக தூதரக அதிகாரிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கிடையே நடக்கக்கூடிய பேச்சுவார்த்தைகள் மிக முக்கிய அம்சமாக நிச்சயமாக வைக்கப்பட்டிருக்கும் .

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு சீனாவின் மௌனத்தால் தாமதம்?

இலங்கை அரசாங்கத்தின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக ஒட்டுமொத்த நாடும் மீட்டெழமுடியாத வகையில் பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கின்றது.

குறிப்பாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு வெறுமையாகிவிட்ட நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதமாகின்றபோது 70.2 சதவீதத்தினைத் தொட்டு விட்டது.

இதனால் உள்நாட்டில், அத்தியாவசியப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துவகைப் பொருட்களின் விலைகளும் உச்சத்தினைத் தொட்டுள்ளன. இதனால் நாட்டில் 70 சதவீதமானவர்கள் உணவு நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அதிகமானவர்கள் இருவேளை உணவையே உட்கொள்வதாகவும், கர்ப்பிணித்தாய்மார்கள், பெண்கள், சிறுவர்கள் போசாக்கின்மையால் பாதிக்கப்படுவதற்கான ஆபத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையின் பாரிய நெருக்கடிகளை தவிர்க்கும் முகமாகவும், பொதுமக்களின் பட்டினி வாழ்க்கையை தடுக்கும் முகமாகவம் இந்தியா உடனடியாக அத்தியாவசிய உதவிகளை வழங்கியதோடு 4 பில்லியன் டொலர்கள் கடன்களை எந்த நிபந்தனைகளும் இன்றி வழங்கியுள்ளது.

இதனால், இலங்கை ஓரளவுக்கு நிம்மதிப்பெருமூச்சுவிடக்கூடியதாக இருக்கின்றது. அதுமட்டுமன்றி இந்தியா, சர்வதேச நாணயநிதியத்துடனான இலங்கையின் பேச்சவார்த்தைகளின்போது பிரசன்னமாகி இலங்கைக்கான சாட்சியாளராகவும் செயற்பட்டு வருகின்றது.

இதேவேளை, இம்முறை நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் இலங்கையின் பொருளாதார பிரச்சினை தொடர்பில் இம்முறை கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொருளாதாரக் குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டதோடு அதற்கான நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா.உயர்ஸ்தானிகர் பரிந்துரைகளை வழங்கியுள்ளார்.

இதன்மூலம் இலங்கை கடன் பொறிக்குள் சிக்குண்ட நாடாகவும், கடனிலிருந்து வெளிவர முடியாத நாடாகவும், சர்வதேச ஆதரவு தேவை என்ற விடயமும் வெளிப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில், இலங்கைக்கு கடன் கொடுத்த நாடுகளில் பிரதான நாடாக சீனா விளங்குகின்றது. இலங்கைக்கு வழங்கப்பட்ட கடன்களை மறுசீரமைக்கும் கோரிக்கைக்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

குறிப்பாக, அமெரிக்கா, உள்ளிட்ட மேற்குலக நாடுகளும், இந்தியாவும், ஜப்பானும் திறந்த மனதுடன் கடன்மறுசீரமைப்புச் செயற்பாட்டிற்கு உதவுவதற்கு தயாராக உள்ளதாக பகிரங்கமாகவே அறிவித்துள்ளன.

ஆனால் சீனா தனது பகிரங்க அறிவிப்பைச் செய்தவற்கு தயாராக இல்லை. இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதாக இருந்தால் முதலில் கடன் மறுசீரமைப்பைச் செய்ய வேண்டியுள்ளது.

ஏனென்றால், ஏற்கனவே இலங்கை கடன்களை மீளச்செலுத்தமுடியாது என்று அறிவித்துவிட்டது. இதனால் சர்வதேச நாடுகள் தொடர்ந்தும் கடன்களையோ உதவிகளையோ செய்வதற்கு தயாராக இல்லை.

ஆகவே, இலங்கை கடன் மறுசீரமைப்பைச் செய்வது மிகவும் அத்தியாவசியமானதொரு செயற்பாடாக அமைகின்றது. கடன் மறுசீரமைப்பு என்பது கடன் கொடுக்கப்பட வேண்டிய காலம், அதற்கான வட்டி, திருப்பி செலுத்த வேண்டிய தொகைகள் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்பதாகும்.

இதுவொரு சாத்தியமான செயற்பாடாகும். இந்த சாத்தியமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பச்சைக்கொடியை காண்பித்துள்ளதோடு ஆரம்பகட்டப் பேச்சுக்களையும் மேற்கொண்டுள்ளன.

ஆனால், சீனாவைப் பொறுத்தவரையில் இந்த விடயத்தில் வெளிப்படைத் தன்மையை பின்பற்றுவதற்கு தயாரில்லாத நிலையில் தான் உள்ளது. ஏனென்றால், சீனா இலங்கையை நெருக்கடியான நிலைமைகளை உணர்ந்து அதனைப்பயன்படுத்தி தனது ‘கடன்பொறி’ இராஜதந்திரத்தினை நடைமுறைப்படுத்தவே முயல்கின்றது.

இலங்கையின் நெருங்கிய நண்பன் என்று கூறிக்கொள்ளும் சீனா, தான் வழங்கிய கடன்களை எவ்வாறு மீளப்பெறலாம் என்பது பற்றியே அதிகளவில் கரிசனை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்தக் கடன்களை மீளப்பெறுவதற்காக புதிய வட்டி வீதத்தில் மேலதிகமாக புதிய கடன்களை வழங்குவதற்கும் திட்டமிட்டுள்ளது.

இதனால் தான் இலங்கை பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நிறைவுக்கு வந்துவிட்ட நிலையில் இன்னமும் சீனா எந்தவிதமான நிதி நன்கொடைகளை வழங்காது அமைதியாக இருந்து வருகின்றது.

மாறாக, சீனாவின் உரத்தினை நிராகரித்தமைக்கான சீனா இலங்கையின் நெருக்கடிகளையும் நன்கு அறிந்திருந்தும் 6.9 மில்லியன்களை இழப்பீடாக பெற்றுக் கொண்டிருக்கின்றது. இது எரிகிற வீட்டில் பிடுகியது இலாபம் என்ற மனோநிலையாகும்.

இவ்வாறான நிலையில் தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவின் முடிவினையே சர்வதேச தரப்புக்கள் எதிர்பார்த்துள்ளன.

குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, யப்பான் உள்ளிட்ட நாடுகளும், உலகவங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச நாணயநிதியம், பாரீஸ்கிளப் உள்ளிட்டவையும் சீனாவின் அறிவிப்பையே எதிர்பார்த்துள்ளன.

ஏனென்றால், இந்தத் தரப்புக்கள் தாம் இலங்கையின் நெருக்கடிக்காக வழங்கும் உதவி நிதியை சீனா தனது கடன்களுக்காக பெற்றுக்கொண்டுவிடும் என்ற அச்சத்தினைக் கொண்டிருக்கின்றன. இதுவொரு இயல்பான அச்சம் தான்.

சீனா, தான் இலங்கைக்கு வழங்கிய கடன்கள் தொடர்பில் மௌனமாக இருக்கும் வரையில் சர்வதேச நாடுகளும், நிதி நிறுவனங்களும் இவ்விதமான அச்சத்தினை கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது.

இவ்வாறான நிலையில்தான் தற்போது கடன்மறுசீரமைப்பு தொடர்பிலான பேச்சக்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சர் என்ற வகையிலும், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேரசிங்கவும் முன்னெடுத்த வண்ணமுள்ளனர்.

இருப்பினும், இலங்கையின் கடன்மறுசீரமைப்புச் செயற்பாடும், பொருளாதார நெருக்கடிகளிலிருந்து மீளுவதாற்கான சந்தர்ப்பங்களும் சீனாவின் கைகளுக்குள் சென்றுவிட்டது.

சீனா இதனைப்பயன்படுத்தி இலங்கையை தனது நலன்களுக்காக கையாளப்பார்க்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர்.

சீனாவின் தீர்க்கமான முடிவு அறிவிக்கப்படாமையால் தான் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்த உச்சிமாநாட்டிற்கு இணைத்தலைமை வகிப்பது குறித்து இலங்கையுடன் எந்த இணக்கப்பாட்டையும் எட்டாத நிலையில் ஜப்பான் உள்ளது.

இலங்கையின் கடன்மறுசீரமைப்பு விவகாரங்களில் நேரடி தொடர்பை கொண்டுள்ள ஜப்பான் அதிகாரியொருவர் இதனை ரொய்ட்டர் செய்தி சேவைக்கு அண்மையில் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized | Tagged

கொழும்பு பொலிஸ் பதிவு தொடர்பில் பொலிஸ் மாஅதிபருக்கு பணிப்புரை

கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் உரையாடினோம். இப்போது சமாதான காலம் நிலவுவதால், வீடு வீடாக சென்று பொலிஸ் பதிவு பத்திரங்களை விநியோகம் செய்து, விபரங்களை திரட்ட வேண்டிய அவசியம் என்ன என நான் கேட்டேன். மேலும் இப்படி திரட்டப்படும் விபரங்கள் தவறான நபர்கள் கைகளுக்கு போவதை தடுக்க முடியாது எனவும் கூறினேன். தற்போது யுத்தம் இல்லை என்பதால் இதற்கென்ன அவசியம் என்று அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்து கூறினார். பொலிஸ் பதிவு பற்றி ஐஜிக்கு பணிப்புரை விடுப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

அமெரிக்காவின் மற்றுமொரு உயர் அதிகாரி இலங்கை விஜயம்

அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத் ( Robert Kaproth ) இன்று இலங்கை வந்தடைந்தார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி சாங், தனது டுவிட்டர் செய்தியில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான வரவிருக்கும் வேலைத்திட்டம் குறித்து கலந்துரையாடுவதே அவரது விஜயத்தின் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

 

இந்த விஜயத்தின் போது அரொபர்ட் கப்ரோத், இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா வழங்கியுள்ள உறுதி

இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் DefExpo2022 உலக பாதுகாப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தலைமையிலான இராணுவம் மற்றும் கடற்படை அதிகாரிகளை உள்ளடக்கிய மூன்று பேர் கொண்ட உத்தியோகபூர்வ தூதுக்குழுவினரே இவ்வாறு சென்றுள்ளனர்.

குஜராத் மாநிலம் காந்திநகரில், அக்டோபர் 19ஆம் திகதியன்று பிரதமர் நரேந்திரமோடி, இதனை ஆரம்பித்து வைத்துள்ளார்.

பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்ட நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் பங்கேற்பது இது இரண்டாவது தடவையாகும்.

கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபரில் குஷிநகர் விமான நிலையத்திற்குச் சென்ற சர்வதேச விமானத்தில் இலங்கையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஒரு பகுதியாக இருந்தனர் என்று இந்திய உயர்ஸ்தானிகரம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பங்காளித்துவத்தைப் பாராட்டியுள்ளார்.

பாதுகாப்பு கொள்கையை அதிகரிப்பதில் தற்காப்பு தொழில்துறை அடித்தளத்தின் முக்கியத்துவத்தை அவர் எடுத்துரைத்துள்ளார்.

மேலும் ஐந்து பரிமாணங்களில் நவீன போரில் ஏற்படும் மாற்றத்தின் தன்மையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு இந்த கண்காட்சி சிறந்த வழியை வழங்கியதாகவும், இந்த கண்காட்சியில் இந்தியாவின் பாதுகாப்பு துறையின் வளர்ந்துவரும் திறன் காட்டப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த பயணத்தின்போது இலங்கையின் அமைச்சர், இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா இராஜாங்க அமைச்சர் ஸ்ரீ அஜய் பட்டை அக்டோபர் 17 ஆம் திகதியன்று சந்தித்துள்ளார்.

இச்சந்திப்பின் போது, பாதுகாப்பு துறையில் இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்த விஜயத்தின் போது இலங்கை பிரதிநிதிகள் பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்பு படைகளின் பிரதானி மற்றும் இந்தியாவின் மூன்று சேவைத் தலைவர்களுடனும் சுமுகமான உரையாடல்களை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கை ஆயுதப் படைகளின் பயிற்சிகளுக்காக வருடாந்தம், இந்தியாவில் 1500-1700 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்றும் இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

பொங்கலுக்கு மேலும் சில தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை ; ஜனாதிபதி உறுதி

“தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக என்னிடம் நேரில் தெரிவித்தார் ஐனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.”

இவ்வாறு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,
“ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற தீபாவளி நிகழ்வில் நானும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிப்பு பற்றியும், கொழும்பில் பொலிஸ் பதிவு பற்றியும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் உரையாடினோம்.
பொலிஸ் பதிவு பற்றி மீண்டும் ஒருமுறை ஐ.ஜிக்குப் பணிப்பதாக ஜனாதிபதி சொன்னார்.

தீபாவளியில் விடுவிக்கப்பட்டதைப் போல், தைப்பொங்கலுக்கு இன்னொரு தொகுதி தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதாக ஐனாதிபதி மேலும் சொன்னார்.

அருகிலிருந்த பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகல, யோகராஜன் ஆகியோரும் சாதகமாகக் கருத்து பகிர்ந்தனர்.
மலையக மக்கள் மத்தியிலான பெருந்தோட்டப் பிரிவினர் பற்றி நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார்.

பெருந்தோட்டப் பகுதிகளிலேயே 51 வீத உணவின்மை பிரச்சினை காணப்படுகின்றது என்று கூறினேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராய, செயலணி ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் கோரினேன். ஜனாதிபதி கொள்கை ரீதியாக உடன்பட்டார்”

– என்றார்.இதேவேளை, அரசமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 8 தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு, தீபாவளித் தினமான நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

உள்ளுராட்சித் தேர்தலுக்காகக் கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும் – ஜனா

வடகிழக்கில் தமிழர்களின் நிலங்களைக் குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள், மகாவலி அபிவிருத்தி போன்ற துறைகள் செயற்படுகின்றன. மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமையால் ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வேளையிலே உள்ளுராட்சித் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பிலும் வலியுறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. 1978ம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களால் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு 44 வருடங்களில் 22வது தடவையாக திருத்தமாக பாராளுமன்றத்திலே நிறைவேறியிருக்கின்றது.

அதனை விட தற்போது எதிர்க்கட்சிகளிடையே முக்கிய பேசுபொருளாக இருப்பது எதிர்வரும் 2023ம் ஆண்டு பெப்ரவரி இறுதியுடன் கலையவிருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்களின் தேர்தல்களை அரசு பிற்போடக் கூடாது. அவ்வாறு பிற்போடும் சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சிகள் இணைந்து நீதியை நாட வேண்டி ஏற்படும் என கடந்த பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி உடன்பாடு எட்டப்பட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

என்னைப் பொருத்தமட்டில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எக்கரணம் கொண்டும் பிற்போடப்படக் கூடாது. இருந்தாலும் அதற்கு மேலாக மாகாணசபைத் தேர்தல் என்பது நீணடகாலமாக நடைபெறாமல் இருக்கின்றது. கிழக்கு மாகாணம் கலைக்கப்பட்டு ஐந்து வருடங்களும் வடக்கு மாகாணம் கலைக்கப்பட்டு நான்கு வருடங்களும் நிறைவடைந்துள்ளன.

1987ம் ஆண்டு இலங்கை இந்திய ஒப்பந்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தினூடாக உருவாகிய இந்த மாகாணசபைகள் குறிப்பாக வடக்கு கிழக்கு இனப்பிரச்சனையையொட்டி, இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக இதனைத் தமிழ் தரப்புகள் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்டவைகளே மாகாணசபைகள்.

மாகாணசபைகள் இருந்த காலத்திலே நாங்கள் எங்களது பிரதேசங்களை ஓரளவிற்குக் காப்பாற்றி வைத்திருந்தோம். இந்த மாகாணசபைகள் கலைக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் நடைபெறாமல் ஆளுநரின் ஆட்சியின் கீழ் இந்த மாகாணசபைகள் இருப்பதனால் மத்திய அரசு, ஜனாதிபதி நினைப்பதை ஆளுநர்கள் நிறைவேற்றுவதும், ஆளுநர்கள் தங்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ற விதத்தில் தங்களின் இஸ்டத்திற்கு இந்த மாகாணசபைகளின் நிருவாகத்தை நடத்துவதுமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவின் வியத்மக அமைப்பிலே முக்கிய உறுப்பினராக இருப்பவர். இவர் கிழக்கு மாகாணத்தின் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாணத்திற்கென்று உருவாக்கப்பட்ட விசேட தொல்பொருள் செயலணி ஊடாக எமது புராதனச் சின்னங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் போன்றவற்றைக் கூட கையகப்படுத்தும் கைங்கரியங்களைச் செய்து கொண்டிருக்கின்றார். அதற்கேற்ற விதத்தில் அந்த தொல்பொருள் செயலணியும் செயற்படுகின்றது.

வடக்கு கிழக்கில் தமிழர்களின் நிலங்களை குறிவைத்து வனவளம், வனஇலாக, தொல்பொருள் திணைக்களம், மகாவலி அபிவிருத்தி போன்ற நான்கு துறைகளும் செயற்படுகின்றன. இவை தமிழ் மக்களிடம் இருந்து அவர்களின் நிலவளத்தைப் பறிப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டுமாக இருந்தால் மாகாணசபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.

கடந்த சுதந்திரக் கட்சி ஆட்சியிலே அமைச்சராக இருந்த ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா கூட தற்போது மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய முக்கியத்துவத்தைக் கூறியிருக்கின்றார். அத்துடன் கடந்த ஐநா மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடரில் கூட இந்தியா ஒரு உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருந்தது. இலங்கைக்கு எதிராகப் பிரித்தானியாவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை மீதான விவாதத்திலே இலங்கையில் மாகாணசபைத் தேர்தல்கள் மிக விரைவாக நடைபெற வேண்டும். மாகாணசபைகளுக்கான முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டு வடக்கு கிழக்கலே தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

இந்த வேளையிலே உள்ளுராட்சி மன்றத் தேர்தலைப் பிற்போடக் கூடாது என்று கூக்குரலிடும் எதிர்க்கட்சிகள் உண்மையான இன ஐக்கியம், அனைத்து மக்களும் சமமாக வாழ வேண்டும் என்று உண்மையாக நினைத்தால் மாகாணசபைத் தேர்தல்கள் உடன் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கை முதன்மைப்படுத்தியே மாகாணசபைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும் வடகிழக்கு மாகாணசபைகள் அனுசபவித்த பிரதிபலன்களை விட கூடுதலான பிரதிபலன்களை ஏனைய மாகாணசபைகள் அனுபவித்திருக்கின்றார்கள் என்பதனைக் கருத்திற்கொண்டு ஒட்டுமொத்தமாக ஒன்பது மாகாணசபைகளுக்குமாக மாகாணசபைத் தேர்தலை உடனடியாக நடத்தப்;பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவு

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் தெரிவாகியுள்ளார். லிஸ் ட்ரஸ்ஸிடம் தோற்று ஏழு வாரங்களுக்குப் பிறகு, ரிஷி சுனக் இதில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் இங்கிலாந்தின் முதல் பிரிட்டிஷ் ஆசியப் பிரதமராகப் பதவியேற்க உள்ளார்.மேலும் இங்கிலாந்து மிகப்பெரிய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதால் பதவியேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிரித்தானியாவின் புதிய பிரதமருக்கான போட்டியில் ரிஷி சுனக்கிற்கு 166 டோரி எம்.பிகளும், பென்னி மோர்டான்ட்-க்கு 25 டோரி எம்.பிகளும் ஆதரவாக இருந்தனர்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்.பி.களின் அதிக ஆதரவைப் பெற்று இந்திய வம்சாவளி ரிஷி சுனக் பிரிட்டனின் பிரதமராகப் போட்டி இன்றி தேர்வாகியுள்ளார். பிரிட்டனின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் என்ற பெருமையை ரிஷி சுனக் பெற்றுள்ளார்.

புதிய பிரதமருக்கான வேட்புமனு தாக்கல் இன்று மதியம் 2 மணியுடன் முடிவடைய உள்ளதால் ரிஷி சுனக் பிரதமராக அறிவிக்கப்படலாம் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வேட்புமனுத் தாக்கல் முடிவதற்குள் இறுதி நிமிடங்களில் டோரி தலைமைப் போட்டியில் இருந்து பென்னி மோர்டான்ட் வெளியேறிய பிறகு ரிஷி சுனக் இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள பணக்கார அரசியல்வாதிகளில் ஒருவராக அறியப்படும் சூனக், 44 நாட்கள் மட்டுமே பிரதமர் பணியில் இருந்து விட்டு வெளிச்செல்லும் லிஸ் ட்ரஸ்ஸுக்குப் பதிலாக, கிங் சார்ல்ஸால் அரசாங்கத்தை அமைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுவார்.

 

எட்டு தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல தடவைகள் நடத்திய கலந்துரையாடல்களின் பலனாக இந்த கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு முன்னதாக ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய பாதுகாப்பு அமைச்சின் தலையீட்டின் பேரில் கைதிகள் தொடர்பான தகவல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.கைதிகள் விடுதலை தொடர்பான ஒப்புதல் அறிக்கை குறித்து நீதி அமைச்சர் மற்றும் அவர் மூலமாக சட்டமா அதிபர் ஆகியோரின் கருத்து பெறப்பட்டதன் பின்னரே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தமிழ் கைதிகளில் மூவர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்தை வினவியுள்ளதோடு அவரின் இணக்கப்பாட்டுடன், இவர்களின் விடுதலைக்கு தேவையான ஆரம்ப கட்ட முன்னெடுப்புகள் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய 04 கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு இவர்கள் எதிர்காலத்தில் அனுபவிக்க வேண்டியுள்ள தண்டனை காலத்தைக் குறைத்து இவ்வாறு விடுதலை செய்யப்பட உள்ளனர்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புபட்டிருந்த மற்றுமிரு தமிழ் கைதிகள் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த வழக்குகள் வாபஸ் பெறப்பட்டதன் பின்னர் விடுதலை செய்யப்படவுள்ளதுடன் மேலும் இரு கைதிகள் ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் எதிர்வரும் காலங்களில் விடுவிக்கப்படவுள்ளனர்.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 22 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த மூன்று கைதிகள், 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தற்போது 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒருவர், 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 14 ஆண்டுகள் தண்டனை அனுபவித்து ஒருவர். 05 வருட சிறைத்தண்டனைக்காக 14 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கும் இருவர் மற்றும் 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு 11 வருடங்களாக தண்டனை அனுபவித்து வரும் ஒருவர் இதில் அடங்குகின்றனர்.