ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது-உலக வங்கி அதிகாரி

இலங்கையின் நிதி நெருக்கடி நம்பகதன்மை மிக்க நிதிதிட்டத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பை இலங்கைக்கு வழங்கியுள்ளது என உலக வங்கியின் இலங்கைக்கான இயக்குநர் பாரிஸ் ஹடாட் ஜெர்வோஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு நெருக்கடியின் போதும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதனை வீணடிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்பெருந்தொற்று நிலைமை உருவாகும் வரை இலங்கை மோசமான வறுமையை இல்லாதொழிக்கும் நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி நாட்டை பெரும் குழப்பத்தில் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது உறுதியான மற்றும் நம்பகத்தன்மை மிக்க நிதி கட்டமைப்பு சீர்திருத்த வேலை திட்டத்தை உறுதி செய்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நிலையான வளர்ச்சிப்பாதையில் திரும்புவதற்குமான ஒரு வாய்ப்பு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006 முதல் 2016 முதல் மிகமோசமான வறுமையை ஒழிப்பதை நோக்கி இலங்கை சென்றுகொண்டிருந்தது 11 வீதத்திலிருந்து 1.3 வீதமாக குறைந்து காணப்பட்டது 2 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்துமீட்கப்பட்டனர் எனவும் உலக வங்கியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் இன்று இலங்கை முழுவதும் விவசாயிகள் முச்சக்கர வண்டி சாரதிகள் வீதியோர வியாபாரிகள் அரசஊழியர்கள் தனியார் உரிமையாளர்கள் என அனைவரும் வாழ்க்கையை கொண்டு செல்வதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்,இந்த பொருளாதார நெருக்கடி பல வருட முன்னேற்றத்தை பாதித்துள்ளது,நாடு 2009 இன் பின்னர் அதிகளவான வறுமையை எதிர்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

நல்லிணக்கம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழு!

இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக  ஜனாதிபதி  தலைமையில் அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
 நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பிரதமர் தினேஷ் குணவர்த்தன,  டக்ளஸ் தேவானந்தா, விஜயதாச ராஜபக்ஷ, அலி சப்ரி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Posted in Uncategorized

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் வடமாகாண ஆளுநரை சந்தித்தனர்

நீண்ட காலமாக சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்கள் தொடர்பில் குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன் வடமாகாண ஆளுநருக்கு விளக்கமளித்தார்.தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேருக்கு வழக்கு நடைபெறுகின்ற நிலையில் 24 பேர் தண்டனை வழங்கப்பட்டவர்களும் மற்றும் மேல்முறையீடு செய்தவர்களும் உள்ளனர்.

இதில் தீர்ப்புகளுக்காக தவணை இடப்பட்டவர்களும் உள்ள நிலையில் தீர்ப்பு வழங்காது வழக்கை ஒத்தி வைக்கும் செயற்பாடுகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.பெரும்பாலான வழக்குகள் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்சம் அவர்களை புனர் வாழ்வு ஊடாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அத்துடன் கோமகன் மேலும் விளக்கமளிக்கையில், 10 தொடக்கம் 26 ஆண்டுகள் சிறைச்சாலைகளில் 46 தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர்.அவர்களை விரைவாக விடுவிப்பதற்கு ஆவணை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை குறித்த சந்திப்பில் மெய்நிகர் வழியாக இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி விக்னேஸ்வரன் வட மாகாண ஆளுநர் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு பக்கபலமாக செயல்படத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நாங்கள் எடுக்கும் நடவடிக்கைக்கு மேலாக ஆளுநர் நடவடிக்கை எடுக்கும் போது அது சிறப்பாக இருக்கும்.

அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு அவர்களின் வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு குழு ஒன்றை அமைக்க ஜனாதிபதியை கோருமாறு ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.அத்துடன் , அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், பிரேரிக்கப்பட்டதான அசோகா டீசில்வா ஆணைகுழு அறிக்கையை பார்த்தேன் குறித்த அறிக்கை தமிழ் அரசியல் கைதிகளின் முற்று முழுதாக விடுவிக்கப்பட வேண்டும் என கூறப்படவில்லை.ஜனாதிபதிக்கு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளேன் என தெரிவித்தார்.

இதன் போது, கருத்து தெரிவித்த குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் கோமகன் ஏற்கனவே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் திருப்திகரமான நடவடிக்கைகள் ஏதும் இடம் பெறவில்லை.கடந்த மாதம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், ஆளுநர் செயலகம் முன்பு போராட்டம் நடத்திய போது அவர்களை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார்.

அதன் பிரகாரம் சிறைகளில் உண்ணாவிரதம் இருந்தவர்களையும் நேரில் சென்று உண்ணாவிரதத்தை கைவிடுமாறு நம்பிக்கை அளித்துச் சென்றார்.அதன்பின் குறுகிய காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் நான்குக்கும் மேற்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஆகவே வடமாகாண ஆளுநர் அரசியல் கைதிகளின் விடயத்தில் கரிசனை கொண்டு செயல்படுகின்ற நிலையில் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உதவ வேண்டும் என மேலும் தெரிவித்தார்.இதற்கு பதில் அளித்த ஆளுநர் குறித்த விடயம் தொடர்பில் விரைவாக ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக கடிதத்தை அனுப்புவதாகவும் அதன் பிரதியை அனுப்புவதாகவும் தெரிவித்தார்.

இந்த வார அமைச்சரவைத் தீர்மானங்கள்

2022.10.17 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்
2022 ஆம் ஆண்டு நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் செய்வதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட உரையில் பொருளாதாரத்தை திடமாகக் கட்டியெழுப்புதல், அரச சேவையை வினைத்திறனாக விருத்தி செய்தல் மற்றும் அரச வளங்களை பயனுள்ள வகையில் முகாமைத்துவம் செய்யும் நோக்கத்துடன் புதிய சட்டங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தல் மற்றும் தற்போது காணப்படுகின்ற ஒருசில சட்டங்களின் ஏற்பாடுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, திறைசேரியின் கீழ் காணப்படும் கட்டுப்பாட்டாளர் தலைமையதிபதி அலுவலகத்தின் பணிகளை விரிவாக்கம் செய்து அதற்குரிய சட்ட அங்கீகாரம் வழங்குவதற்கும், தேசிய சொத்துக்கள் ஆவணத்தைத் தயாரிப்பதற்கும் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பாக மையப்படுத்திய தரவுத்தொகுதியை அறிமுகப்படுத்துவதற்கும் இயலுமாகும் வகையில் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி அரச சொத்துக்கள் முகாமைத்துவத்திற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்காக சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
02. ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்தல்
1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டம் இதற்கு முன்னர் ஒருசில சந்தர்ப்பங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதுடன், நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு இயலுமாகும் வகையிலும் மற்றும் சமகாலத் தேவைகளுக்குப் பொருத்தமான வகையிலும் குறித்த சட்டத்தை மேலும் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, சுதேச மருத்துவத் துறையின் மேம்பாட்டுக்காக ஆயுள்வேத திணைக்களத்தின் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக மற்றும் ஆராய்ச்சி மூலிகைப் பூங்காக்களை உருவாக்கல் போன்ற பணிகளுக்குப் பொருத்தமான ஏற்பாடுகளை உள்வாங்கி ஆயுள்வேத சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
03. குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் 
குத்தகை அடிப்படையில் வழங்கப்படும் வளாகங்களின் உடமையை மீளப் பெற்றுக்கொள்ளும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை விதிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிப்பதற்காக 2021 செப்ரெம்பர் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்;டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
04. பங்கேற்பு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காக ‘ஜன சபை முறைமையை’ நிறுவுவதற்காக ‘தேசிய ஜன சபை தேசிய செயலகத்தை’ தாபித்தல்
இலங்கையில் இதுவரை நடைமுறையிலுள்ள பிரதிநிதித்துவ ஜனநாயகக் கட்டமைப்பின் மூலம் மக்களின் உண்மையான பிரச்சினைகள் போதியளவு விழித்துக் கூறப்படாமையால், இம்முறைமையில் ஆட்சி மையம் மற்றும் மக்களுக்கும் இடையில் காணப்படுகின்ற தொடர்புகள் விலகிச் சென்று கொண்டிருப்பதால், கொள்கைத் தீர்மானங்களை எடுக்கின்ற செயன்முறையில் பொதுமக்களின் கருத்துக்களுக்கு போதுமானளவு செவிமடுக்காமையாலும், அது தொடர்பாக சமூகத்தில் விமர்சனங்களும் உருவாகி வருகின்றமையாலும், குறித்த விமர்சனங்களின் அடிப்படையில் சமூகத்தில் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்கு எதிரான கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புக்கள் உருவாகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலைமையில் கிராமிய மட்டத்தில் பங்கேற்பு ஜனநாயகப் பண்புகளுடன் இயங்குகின்ற நிறுவனக் கட்டமைப்பொன்றில், அரச அலுவலர்களும் மற்றும் பொது மக்களும் இணைந்து கிராமத்திலுள்ள பிரச்சினைகளைக் கலந்துரையாடக் கூடிய, அபிவிருத்தி முன்னுரிமைகளைத் தீர்மானிக்கக் கூடிய மற்றும் கிராமிய மக்களுக்கு தீர்மானமெடுக்கின்ற செயன்முறையில் பங்கேற்கக் கூடிய பலம்வாய்ந்த பொறிமுறையொன்று தேவையாகும்.
அரச கொள்கை வகுப்புக்காக மக்களுக்கு தமது கருத்துக்களை முனைப்பாக வழங்கக் கூடியதாக இருக்கின்ற மற்றும் சமூகப் பங்கேற்புடன் குறித்த கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகள் அடங்கிய பொறிமுறையின் மூலம் அதிகாரிகள்வாதம் மற்றும் தன்னிச்சையான அரசியல்மயப்படுத்தல் மூலம் நிகழக்கூடிய பொதுமக்கள் அழுத்தங்களை பயனுள்ள வகையிலும் வினைத்திறனாகவும் தடுப்பதற்கு இயலுமாகும். அதற்கமைய, அரச கொள்கை வகுப்பு மற்றும் குறித்த கொள்கையை வெற்றிகரமாக அமுலாக்குவதற்காக பொதுமக்களின் பங்கேற்புடன் பெற்றுக்கொள்ளக் கூடிய சுயாதீன நிறுவனக் கட்டமைப்புடன் கூடிய நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைமையில் ‘ஜன சபை முறைமை’ தொடர்பான கொள்கைப் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து கிராம அலுவலர் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ‘கிராமிய ஜன சபை’ நிறுவுவதற்கும், தேசிய மட்டத்தில் ‘தேசிய ஜன சபை’ நிறுவுவதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது. குறித்த கொள்கைப்பத்திரத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ள ‘ஜன சபை முறைமை’ அரசானது அடிப்படை கொள்கையாக ஏற்றுக்கொள்வதற்கும், ‘ஜன சபை முறைமை’ நிறுவுவதற்காக தேசிய மட்டத்தில் சுயாதீன கேந்திர நிறுவனமாக ‘தேசிய ஜன சபை செயலகம்’ தாபிப்பதற்கும் கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
05. நல்லிணக்கம் தொடர்பாக அமைச்சரவை உபகுழுவொன்று நியமித்தல்
இலங்கையில் வாழும் பல்லின மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக மற்றும் வடக்குக் கிழக்கு மோதல்களின் பின்னர் மீள்குடியமர்த்தல், காணி மற்றும் காணாமல் போன ஆட்கள் பற்றி மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்களின் தலைமையில் மற்றும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அங்கத்தவர்களுடன் கூடியதாக நல்லிணக்கம் தொடர்பான அமைச்சரவை உபகுழுவை நியமிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
• கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்கள் – பிரதமர்
• கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் – கடற்றொழில் அமைச்சர்
• கௌரவ (கலாநிதி) விஜயதாச ராஜபக்ஷ அவர்கள்
நீதி, சிறைச்சாலைகள் விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்
• கௌரவ அலி சப்ரி அவர்கள் – வெளிவிவகார அமைச்சர்
Posted in Uncategorized

இழப்பீடு வேண்டாம் சர்வதேச விசாரணையே வேண்டும் – கொழும்பில் உறவுகள் போராட்டம்

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக வழங்கப்படும் இழப்பீடு தமக்கு வேண்டாம் என்றும் சர்வதேச விசாரணையே தேவை என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு மேலதிகமாக ஒரு இலட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்குவதாக கடந்த வாரம் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் -சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எச்சரிக்கை

அரசாங்கத்தின் புனர்வாழ்வு சட்டமூலம் மனித உரிமை மீறல்களை அதிகரிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் புனர்வாழ்வு முகாம்களில் பொதுமக்களை தடுத்துவைப்பதற்கான பரந்துபட்ட அதிகாரத்தை வழங்கும் நகல்சட்டமூலத்தை இலங்கை அரசாங்கம் விலக்கிக்கொள்ளவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது

இலங்கை பாராளுமன்றத்திற்கு செப்டம்பர் 23 ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட புனர்வாழ்வு பணியக சட்டமூலம் போதைப்பொருள் பாவனையாளர்கள் முன்னாள் போராளிகள் வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்கள் ஏனைய குழுக்களை சேர்ந்தவர்களை கட்டாயமாக புனர்வாழ்வு முகாம்களில் தடுத்துவைப்பதற்கு அனுமதிக்கும்.

பாதுகாப்பு அமைச்சினால் கட்டு;ப்படுத்தப்படும் பாதுகாப்பு தரப்பினர் பணிபுரியும் புனர்வாழ்வு பணியகங்களிற்கான புதிய நிர்வாக கட்டமைப்பை புனர்வாழ்வு பணியக சட்டமூலம் உருவாக்கும்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சவால்விடுத்துள்ள உத்தேச சட்டம் புனர்வாழ்விற்கு அனுப்புவதற்கான அடிப்படையை விபரிக்கவில்லை எனினும் ஏனைய அரசாங்க கொள்கைகள் எந்தவொரு குற்றத்திற்காகவும் தண்டணை வழங்கப்படாத மக்களை வலுக்கட்டாயமாக புனர்வாழ்வு செய்வதற்கான தெளிவற்ற மற்றும் தன்னிச்சையான அதிகாரங்களை கொண்டுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் முன்மொழியப்பட்ட புனர்வாழ்வு முயற்சிகள் குற்றம்சாட்டப்படாமல் தடுப்புக்காவலில் வைப்பதற்கான துஸ்பிரயோக நடவடிக்கையாக தோன்றுகின்றதே தவிர வேறொன்றுமில்லை என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்க முயற்சி

யாழ்.குடாநாட்டில் 1,614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு வலயத்துக்காக சுவீகரிக்கும் பணியை அரசாங்கம் தொடங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் சில இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம் செய்து கடந்த மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இம்மாதம் ஜனாதிபதி ரணில் இரத்து செய்திருந்தார்.

இந்நிலையில் யாழில் உயர் பாதுகாப்பு வலயத்துக்காக மக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சு வெளியிட்ட அறிவித்தலை சுட்டிக்காட்டி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் விசனம் வெளியிட்டுள்ளார்.

1990 ஆம் ஆண்டு முதல் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் குறுக்கே எல்லைகளை இட்டு, அதன் ஊடாக இராணுவத்தினர் வீதிகளை அமைத்துள்ளனர்.

மேலும் வளமான செம்மண் நிலங்களை தங்களுக்குச் சொந்தமானதாகக் கருதி விவசாயம் செய்து வருகின்றனர் என புகைப்படத்தை வெளியிட்டு சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் நாளை சமர்ப்பிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் முதல் வாசிப்பு நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை வாய்வழி விடைக்கான வினாக்களுக்கு காலை 9:30 முதல் 10:30 மணி வரை ஒதுக்கப்பட்டுள்ளது.

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை நாளை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து, அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட ஒத்திவைப்பு நேரத்தில் பிரேரணைக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

புதன்கிழமை காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை நீதி அமைச்சு முன்வைத்த 6 சட்டமூலங்கள் மீது விவாதம் நடத்தவும் குழு தீர்மானித்துள்ளது.

ஒத்திவைப்பு நேரத்தில் கேள்விகளுக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் நடைபெறும்.

அதன் பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த ஒத்திவைப்பு நேரத்தில் பிரேரணைக்கு மாலை 5 மணி முதல் 5.30 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி மாலை 5.30 மணிவரை நடைபெறவுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா

–சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்–

-அ.நிக்ஸன்-

ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட்டுடன் இணைக்கத் தீர்மானித்திருந்தது. இதன் பின்னரான சூழலிலேயே இந்தியாவுக்குப் பெரும் சோதனை ஏற்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் உக்ரெய்ன் விவகாரம் தொடர்பாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கையை இந்தியா நிராகரித்தது. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ரசியா – உக்ரெய்ன் மோதலில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியிட மறுத்துவிட்டார்.

ஆனாலும் போர் என்ற கருத்தை இந்தியா ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும் ஜெய்சங்கர் வியாக்கியானம் செய்திருந்தார்.

இந்த நிலையில் உக்ரெய்னில் நான்கு பிராந்தியங்களை ரசியா இணைத்ததைக் கண்டிக்கும் வரைவுத் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ரசியாவின் கோரிக்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது.

சென்ற திங்கட்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உக்ரைய்னில் உள்ள டொனெட்ஸ்க், கெர்சன், லுஹான்ஸ்க் மற்றும் ஜபோரிஜியா ஆகிய பகுதிகளை சட்டவிரோதமாக இணைத்ததாகக் குற்றம் சுமத்தி ரசியாவைக் கண்டிக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா திட்டமிட்டிருந்தது.

ஐ.நா பொதுச் சபையில் ரசியா ரகசிய வாக்கெடுப்பை கோரியதற்கு இந்தியா உட்பட நூற்று ஏழு உறுப்பு நாடுகள் ஒப்புக்கொள்ளவில்லை. ரசியாவின் கோரிக்கைக்கு ஆதரவாக பதின்மூன்று நாடுகள் மட்டுமே வாக்களித்தன, மீதமுள்ள முப்பத்து ஒன்பது நாடுகள் வாக்களிக்கவில்லை. ரசியாவும் சீனாவும் வாக்களிக்காத நாடுகள்.

ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட பின்னர் இந்த முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ரசியா கோரியது. ஆனால், ரசியாவின் இந்த கோரிக்கை மீள்பரிசீலனை செய்யப்படவில்லை. இந்தியா உட்பட நூறு நாடுகள் மீள்பரிசீலனைக்கு எதிராக வாக்களித்தன. பதினாறு நாடுகள் ஆதரவாக வாக்களித்தன, முப்பத்து நான்கு நாடுகள் வாக்களிக்கவில்லை.

இங்கு இந்தியா பகிரங்க வாக்களிப்பையே கோரியிருந்தது. இதன் காரணமாக நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில், ஆதரவாக நூற்று நாற்பத்து மூன்று வாக்குகளும் எதிராக ஐந்து வாக்குகளும் பெறப்பட்டன. முப்பத்து ஐந்து நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகிக் கொண்டன. சீனா, இந்தியா, பாகிஸ்தான். இலங்கை போன்ற நாடுகளே வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டன.

அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆகவே ரசியாவின் ரகசிய வாக்கெடுப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியா, உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்கள் ரசியாவுடன் இணைக்கப்பட்டமை தவறானது என்ற தீர்மானத்துக்கு ஆதரவாகவோ எதிராகவோ வாக்களிக்காமல் விலகியது.

ஆனால் எதிரும் புதிருமான நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் வாக்கெடுப்பில் இருந்து விலகியமைக்கான காரணங்கள் ஒரேமாதிரியானவை அல்ல.

சர்வதேச அங்கீகாரத்துடன் இணைக்கப்பட்டிருந்த இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம், 2019 ஆண்டு ஓகஸ்ட் மாதம் இந்திய மத்திய அரசினால் இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது, அதற்கு எதிராக பொதுச் சபையில் ஐ.நா. ஏன் வாக்கெடுப்பு நடத்தவில்லை என்ற கேள்வியையே பாக்கிஸ்தான் முன்வைத்தது.

இதன் காரணமாகவே உக்ரெய்னின் நான்கு பிராந்தியங்களை ரசியா தனது நாட்டுடன் இணைத்தமைக்கு எதிராக ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்ற காரணங்களையும் பாக்கிஸ்தான் முன்வைத்தது.

 

ஆனால் சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை விவகாரத்திலும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டையே இந்தியா கடைப்பிடித்தும் வருகின்றது.

அயல் நாடுகளான இந்தியா, பாக்கிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் ரசியச் சார்பு நிலையில் இருந்தாலும், உக்ரெய்ன் விவகாரத்தில் ரசியாவுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இரண்டு நாடுகளும் சேர்ந்து இயங்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஏனெனில் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்தமைக்குப் பாக்கிஸ்தான் சொல்லும் காரணம் இந்தியாவுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை.

சீனா ரசியாவின் நட்பு நாடாக இருந்தாலும், மற்றொரு நாட்டின் இறைமை மீறப்படுகின்றது என்ற பொதுவான சர்வதேசக் குற்றச்சாட்டுக்களை வெளியில் இருந்து நியாயப்படுத்துவது போன்ற ஒரு தோற்றப்பாட்டைக் காண்பிக்க முற்படுகின்றது.

இலங்கையைப் பொறுத்தவரை, சீன – இந்திய அரசுகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு வாக்கெடுப்பில் இருந்து விலகியது என்பது வெளிப்படை.

இந்த நிலையில் பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டதால், ஐ.நா.பொதுச் சபையில் உறுப்பு நாடுகள் தங்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளிப்படுத்தும் உரிமை மறுக்கப்பட்டுள்ளதாக ஐ.நாவுக்கான ரசியத் தூதுவர் வாசிலி நெபென்சியா குற்றம் சுமத்தியிருக்கிறார்.

இப் பின்னணியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரசியா தொடர்பான அவுஸ்திரேலியச் செய்தியாளர்களின் கேள்விக்கு, இந்தியத் தேசிய நலன்கள் என்ற தொனியில் பதில் வழங்கியிருக்கிறார்.

அதாவது உக்ரைய்னில் என்ன நடக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு இந்தியா ரசியாவுடனான உறவை மறுபரிசீலனை செய்கிறதா மற்றும் ரசிய ஆயுத அமைப்புகளை இந்தியா நம்புவதை குறைக்க வேண்டுமென நினைக்கிறீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ரசியாவுடனான உறவு இந்தியத் தேசிய நலன்கள் சார்ந்தது என்று விளக்கமளித்திருக்கிறார் ஜெய்சங்கர்.

அத்துடன் பல தசாப்தங்களாக, மேற்கத்திய நாடுகள் இந்தியாவிற்கு ஆயுதங்களை வழங்கவில்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சர்வதேச சமூகத்தில் அதன் சொந்த நலன்களை அடிப்படையாகக் கொண்டது எனவும் கூறியிருக்கிறார்.

ரசியாவுடன் ஒத்துழைப்பைப் பேணும்போது, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளோடு நெருக்கமாக இருப்பதுடன், பரந்த சர்வதேச சூழலில் இந்தியா அதிகபட்ச நலன்களை நாடுவதாகவும் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஆனால் இந்தியாவுக்கு உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பட்டம் உள்ளிட்ட பல பயன்பாடுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் வழங்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியாவிற்கு பாதுகாப்பு உதவியாக பல பில்லியன் டொலர்களை வழங்கியுமுள்ளது.

இந்தியாவுடன் இராணுவத் தகவல், தளபாடப் பரிமாற்றம், இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நான்கு பாதுகாப்பு ஒப்பந்தங்களில் அமெரிக்கா கையெழுத்திட்டுமுள்ளது.

இந்தியாவுடன் முக்கியமான செயற்கைக்கோள் உளவுத்துறையை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்திலும் அமெரிக்கா கையெழுத்திட்டுள்ளது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தை மையப்படுத்திய குவாட் இராணுவ அமைப்பிலும் இந்தியாவுக்குத் தலைமைப் பொறுப்பை அமெரிக்கா வழங்கியுமுள்ளது. ஆகவே இப் பின்னணியில் உக்ரெய்னில் ரசியா மேற்கொள்ளும் நகர்வுகளுக்கு எதிரான அமெரிக்க வியூகத்திற்கு மாறாக இந்தியா செயற்படுகின்றது.

குறிப்பாக ரசியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை இந்தியா கனகச்திதமாகப் பேணி வருகின்றது.

ஆகவே இந்தியாவின் இந்த இரட்டைத் தன்மை (Duality) பற்றி மேற்கு மற்றும் ஐரோப்பிய நாடுகள் எவ்வாறு புரிந்துகொள்கின்றன என்பதிலும் கேள்விகள் இல்லாமலில்லை. ரசியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடை விவகாரத்தில் கூட இந்தியா மாத்திரமல்ல பிரிக்ஸ் நாடுகளும் ஒத்துழைக்க மறுத்திருக்கின்றன.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பில் பிரதமர் நரேந்திர மோடி 2022 ஜூன் 23-24 அன்று காணொலி மூலமாக நடைபெற்ற பதின் நான்காவது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அதாவது ரசியாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகள் தீர்மானித்திருந்த நிலையில் இந்த மாநாட்டில் நரேந்திரமோடி பங்குபற்றியிருந்தார்.

சீனாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் பிரிக்ஸ் மாநாட்டில் இணக்கமும் ஏற்பட்டிருந்தது.

ஆகவே இதன் பின்னணியில் உக்ரெய்ன விவகாரத்தில் ரசியா கோரிய ரகசிய வாக்கெடுப்புக்கு மாத்திரம் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டுப் பின்னர் பகிரங்கமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் தவிர்த்ததன் மூலம் இந்தியாவின் சர்வதேச இரட்டை அணுகுமுறை பட்டவர்த்தனமாகிறது.

இதேபோன்று ஈழத்தமிழர் விவகாரத்திலும் இந்தியாவின் இரட்டைத் தன்மை அணுகுமுறை குழப்பங்களையே உருவாக்கி வருகின்றன.

ரசிய – உக்ரெயன் விவகாரம் பேரரசுகளுடன் சம்மந்தப்பட்டதுதான். ஆகவே புவிசார் அரசியல் – பொருளாதார பின்புலங்களை மையப்படுத்தியதாக இந்தியாவின் இரட்டைத் தன்மை அணுகுமுறை அமைந்தது என்று புதுடில்லி அதற்குக் காரணம் கற்பிக்கக்கூடும்.

ஆனால் ஈழத்தமிழர் என்பது சிறிய தேசிய இனமாக இருந்தாலும், அந்த இனத்தின் அரசியல் விடுதலை விவகாரத்தைக் கையாளும் முறையும், அந்த இனத்தை ஒடுக்குகின்ற சிங்கள ஆட்சியாளர்களுடனான உறவும் முன்னுக்கும் பின் முரணானது.

தனது அயல்நாடான மிகச் சிறிய இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இந்தியா இரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்.

தமிழர்கள் கோருகின்ற இன அழிப்பு விசாரணை அல்லது மிகக் குறைந்த பட்சமாகச் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் இலங்கையைப் பாரப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்கு, விரும்பியோ விரும்பாமலோ அமெரிக்க உள்ளிட்ட மேற்குலகமும் ஐரேப்பிய நாடுகளும் ஒப்புக்கொண்டாலும், நிரந்தர அரசியல் தீர்வு என்று வரும்போது இந்தியாவிடம் கேட்க வேண்டும் என்ற தொனியையே இந்த நாடுகள் வெளிப்படுகின்றன.

ஆனால் இந்தியா ஒருபோதும் குறைந்த பட்சத் தகுதியுடைய சர்வதேச விசாரணைக்குக் கூட உடன்படாது என்பதை ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டில் இருந்து காண முடிகின்றது. அரசியல் தீர்வு என்றாலும் 13 ஆவது திருத்தச் சட்டத்தையே இந்தியா வலியுறுத்தியும் வருகின்றது.

இம்முறை 13 ஆவது திருத்தச் சட்டத்தைக்கூட மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் ஜெனீவா தீர்மானத்தின் பூச்சிய வரைபில் முன்வைக்கவில்லை. ஏனெனில் இந்தியாவுடன் ஏற்பட்ட சில இடைவெளிகளே அதற்குக் காரணம் என்பதும் கண்கூடு.

1987 இல் கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இணைப்பட்ட வடக்குக் கிழக்கு மாகாணத்தை, இலங்கை அரசாங்கம் 2006 இல் தன்னிச்சையாக உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் இரண்டாகப் பிரித்தது.

இதனால் சர்வதேச ஒப்பந்தம் ஒன்றை ஒரு நாடு எவ்வாறு தன்னிச்சையாக மீற முடியும் என்ற கேள்விகள் எழு(ந்தன. ஆனால் இதுவரையும் அது பற்றி இந்தியா எந்தவொரு விளக்கத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கவேயில்லை.

மாறாக அந்த ஒப்பந்த்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்த வேண்டுமென இலங்கை அரசாங்கத்திடமும் தமிழ்த் தரப்பிடமும் தொடர்ச்சியாக இந்தியா கோரி வருகின்றது.

ஆகவே அமைச்சர் ஜெய்சங்கர் அவுஸ்திரேலியாவில் கூறியது போன்று இந்தியத் தேச நலன் என்பதை மையமாகக் கொண்ட சர்வதேச வெளியுறவுக் கொள்கையில் உள்ள இரட்டைத் தன்மை, ரசிய – உக்ரெய்ன் போர் விவகாரத்திலும் குறிப்பாக ரசியா குறித்த அணுகுமுறையிலும், ஈழத்தமிழர் மற்றும் இலங்கை விவகாரத்திலும் எவ்வளவு தூரம் சாதகமான விளைவைக் கொடுத்திருக்கின்றது என்பதைப் புதுடில்லி பகிரங்கப்படுத்துமா?

இலங்கை விவகாரத்தில் அதுவும் ஈழத்தமிழர்களின் நிரந்தர அரசியல் தீர்வு விடயத்தில் இந்திய நலன்சார்ந்து செயற்படும் அமெரிக்கா, எதிர்காலத்தில் ரசிய விவகாரத்தில் இரட்டைத் தன்மையுடைய இந்திய வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ளுமா என்பதும் இங்கு கேள்வியே.

2009 இற்குப் பின்னரான இலங்கை விவகாரம் மற்றும் பிரிக்ஸ் நாடுகள் குறித்த அமெரிக்க அணுகுமுறைகளின் தவறுகளும் இந்தியாவின் இரட்டைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளன என்ற குற்றச்சாட்டுக்களை யாரும் முன்வைத்தால் அதனை மறுக்க முடியாது.

சீனாவும் இந்தியாவுடன் மேற்கொண்டு வரும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகச் செயற்பாடுகளும் இந்திய இரட்டைத் தன்மைக்குச் சாதகமாகவேயுள்ளன.

இந்த இடத்திலேதான் எழுபது வருடங்கள் அரசியல் போராட்டம் நடத்திய தமிழ்த் தரப்பு இந்தியாவை மாத்திரமே நம்பிக் கொண்டிருக்கின்றது. கொழும்பில் உள்ள சீனத் தூதுவரைச் சந்திப்பதற்குக்கூட தமிழ்த்தேசியக் கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் தயங்குகின்றன.

ஒன்றுக்கொன்று நலன் என்ற அடிப்படையில் எவ்வாறு அமெரிக்க – இந்திய அரசுகள் மற்றும் சீன – இந்திய அரசுகள் இயங்குகின்றதோ, அதேபோன்ற ஒரு அணுகுமுறையைப் பாதிக்கப்பட்ட தமிழ்த்தரப்பு பின்னபற்ற வேண்டும்.

கோரிக்கையை விட்டுக்கொடுக்காமலும், நியாயப்படுத்தியும் அழுத்தம் திருத்தமாக ஒருமித்த குரலில் உரத்துச் சொல்லும்போது, புவிசார் அரசியல் – பொருளாதாரப் பின்னணி கொண்ட வல்லரசுகள் நிச்சயமாகச் செவிசாய்க்க வேண்டிய கடப்பாடு தோற்றுவிக்கப்படும்.

இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 6 இலங்கை தமிழர்கள் இன்று திங்கட்கிழமை (17) காலை தனுஷ்கோடி அடுத்த ஒன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர்.

இலங்கை தமிழர்களை மணல் திட்டில் இருந்து பத்திரமாக மீட்ட இந்திய கடலோர காவல்படையினர் ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள மக்கள் உணவு பொருட்கள், அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து இலங்கையில் இருந்து இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலையை சேர்ந்த அந்தோணி மரிய கொரட்டி, புலக்ஷன், கணுவியா, சசிக்குமார், சனுஜன், அந்தோணி பெர்ணான்டோ உள்ளிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து படகில் புறப்பட்டு இன்று (17) காலை தனுஷ்கோடி அருகே உள்ள முதல் மணல் திட்டில் வந்திறங்கினர்.

தகவலறிந்து மண்டபம் கடலோர காவல் படையினர் முதல் மணல் தீடை இலிருந்து இலங்கைத் தமிழர்களை ஹோவர் கிராஃப்ட் படகு மூலம் மீட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்து ராமேஸ்வரம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணைக்கு பிறகு 6 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

இதனால் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது.

Posted in Uncategorized