தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; ​​பொலிஸாருக்கு எச்சரிக்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை உள்ளிட்டத் தகவல்களை இம்மாதம் 28ஆம் திகதிக்கு முன்னர் பொலிஸார் வழங்க வேண்டுமென தகவலறியும் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவல்களை உரிய காலத்துக்குள் ​பொலிஸார் வழங்கவில்லை என்றால், இலங்கை பொலிஸ் திணைக்களம், அத்திணைக்களத்தின் தகவல் அதிகாரிக்கு எதிராக வழக்கு தொடரப்படும் எனவும் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

தகவலறியும் ஆணைக்குழுவுக்கு சட்டத்தரணி சுரேன் டி பெரேரா செய்திருந்த மேன்முறையீட்டை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டபோதே ஆணைக்குழு மேற்கண்டவாறு ​உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

2019 – 2021ஆம் ஆண்டுவரையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து  வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை, அவர்களின் வயது, பால்நிலை உள்ளிட்ட தகவல்களை வழங்க வேண்டும் என சட்டத்தரணி சுரேன் டி பெரேரா பொலிஸ் திணைக்களத்திடம் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.

எனினும், சுரேன் டி பெரேரா கோரும் தகவல்களால் தேசியப் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறி  பொலிஸ்மா அதிபர் அத்தகவல்களை வழங்க மறுத்துவிட்டார். ​அது தொடர்பில் தகவலறியும் ஆணைக்குழுவுக்கு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

சுரேன் டி பெரேரா ​கோரியுள்ள தகவல்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானதில்லை என தெரிவித்துள்ள ஆணைக்குழு, 28ஆம் திகதிக்கு முன்னர் கோரிய தகவல்களை வழங்க வேண்டும். இல்லை என்றால் வழக்கு தொடர்வோம் எனவும் பொலிஸ் திணைக்களத்துக்கு எச்சரித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஐநாவின் தீர்மானம்: ஒரு பழைய துணியில் புதிய ஒட்டு-பேராசிரியர் குழந்தைசாமி

6.10. 2022 வியாழன் அன்று செனீவாவில் உள்ள ஐநாவில் நடைபெற்ற 51 வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதற்கு 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும்(சீனா, பாகிஸ்தான் உள்பட வாக்களித்தனர்.

20 நாடுகள் (இந்தியா, யப்பான், நேபாளம், கத்தார் உள்பட) வாக்களிக்கவில்லை. இந்த தீர்மானத்தில் எண் 05, 06, 14, 15 போன்ற சில தீர்மானங்கள் மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் இடம்பெற்றுள்ள தீர்மானங்கள் பொதுவாக எல்லாமே மனித உரிமை மீறல்களைப்பற்றி பேசுகின்றன. இதில் உள்ள பிழைகளை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பொதுவாக்குதல் (Generalization)

தீர்மானங்கள் பொதுவாக்கப்பட்டு வெளிவந்துள்ளன. இந்திய தூதர் திருமிகு இந்திரா மணி பாண்டே அவர்கள் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காக போராடுவதும் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு போராடுவது ஒரு நாணயத்தின் இரு பக்கங்களாகும் என்று கூறுகிறார். இப்படி பொதுவாக்குதல் ஒரு மனிதனின் பெருந்தன்மையைக் காட்டுகிறதென நாம் கருதலாம்.

அவ்வாறு செய்வது சில இடங்களில் சரியானதாகும். ஆனால் எல்லா இடங்களில் பெரிய ஆபத்தாகும். இதைத்தான் திருதந்தை பிரான்சிசு தனது சுற்றுமடலில் “Fratelli Tutti” நயனற்ற பொதுவாக்குதல் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய கொடூரத்தை விளைவிக்கிறது என்று விளக்குகிறார். நயனுள்ள பொதவாக்குதல் நன்மை பயக்கும். நயனற்ற பொதுவாக்குதல் மிகப்பெரிய துரோகமாகும். பொதுவாக்கும் தன்மை மேட்டுக்குடி மக்களின், அதிகாரத்தில் உள்ளவர்களின் பண்பாட்டு அரசியல் செயல்பாடாகும். இது தமிழர்களுக்கு பெரிய கொடூரத்தை செய்துள்ளது.

மூடிமறைத்தல்

இந்தப் பொதுவாக்குதல் தங்களது தவறுகளை மூடிமறைப்பதற்காக பயன்படுகிறது. சிங்கள பௌத்த பேரினவாத அரசு செய்த இனப்படுகொலையை மூடிமறைக்க இந்தப் பொதுவாக்குதல் பயன்படுகிறது. இந்த தீர்மான அறிக்கையில் தமிழர்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது என்று ஒரு இடத்தில் கூட சொல்லவில்லை. யாருக்கு, யார் என்ன செய்தார்? என்று விளக்காமல் தீர்மானம் எடுப்பது மூடிமறைப்பதற்கு பயன்படுகிறது.

தமிழ் மக்களுக்கு நடந்த இனப்படுகொலையை மூடிமறைக்கும் தீர்மானமாக உள்ளது. உக்ரேன், மியான்மர் போன்ற நாடுகளில் நடந்த போரை ஓர் இனவழிப்பு போர் என்று கருதுகிற ஐநா தமிழர்களுக்கு நடந்த இனவழிப்பை மூடிமறைக்க முயற்சிப்பது அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. இவ்வாறு மூடிமறைக்கும் செயல் வரலாற்று அரசியல் குற்றமாகும்.

இனப்படுகொலை செய்த இனவாத அரசைக் காப்பாற்ற இந்த மூடிமறைத்தல் உதவுகிறது. நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்தவன் தமிழ் மக்களையும் சீரழித்தவனாக இருக்கிறான் என்பதை மூடிமறைப்பதால் அமைதியை உருவாக்க முடியாது. மூடிமறைத்தல் ஆதாயம் தேடும் கூட்டத்தின் யுத்தியாக பயன்படுகிறது. இதனால் குற்றங்கள் அதிகரிக்கும் குறைவதற்கு வாய்ப்பே இல்லை. மூடிமறைத்தல் குற்றவாளியின் மூர்க்கத்தனமான செயலாகும்.

திசை திருப்புதல்

இந்திய தூதர் பாண்டே ’13 வது திருத்தச்சட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துகிறார். அதற்கான செயல்கள் முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை’ என்று சொல்வது பிரச்சினையை திசை திருப்புவதாகும். 13வது திருத்தச் சட்டம் நயன்மையைப் பெற்றுத்தரும் சட்டமல்ல. நடந்த இனப்படுகொலைக்கு நயன்மை வேண்டும். அதிலிருந்து திசைமாற்றுவது இன்னொரு இனப்படுகொலையாகும். இலங்கையில் நடந்த பொருளாதார சிக்கலை அதிகம் பேசுவது திசைதிருப்பும் செயலாகும்.

தமிழ் அரசியல்வாதிகள் அமைதிகாப்பது, சிங்கள அரசுக்கு கைக்கூலிகளாக பணிசெய்வது பிரச்சினையை திசைதிருப்ப வழிவகுக்கும். நடந்ததை மறந்துவிட்டு நடக்கிறது, நடக்கபோகிறது பற்றி சிந்திப்போம் என்று சில படித்த முட்டாள்கள் பேசுவது அவர்களது திசை திருப்பும் செயலாகும். மனித உரிமை மீறல்களை மட்டும் பேசுவது நன்மை பாதையிலிருந்து விலகிசெல்வதற்கு உதவுகிறது.

சுருக்குதல்

எல்லா நாடுகளில் நடப்பதுபோல இலங்கையிலும் மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன என்று கூறுவது தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை சுருக்கிவிடுவதாகும். பிரச்சினையை சுருக்குவது நயனற்ற செயலாகும். இதனால் பிரச்சினையின் வீரியத்தையும் கடினத்தன்மையையும் அழிப்பதாகும். இந்த தீர்மானம் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை ஒரு சாதாரண நிகழ்வாக கருதுவதற்கு வழிவகுக்கிறது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், 1. 46. 000 மக்களை கொலைசெய்தது போன்ற பேரினவாத செயல்களை சுருக்கி விளக்குவது ஓர் இனப்படுகொலைக்கு சமமாகும். இனப்படுகொலைக்கு வேண்டிய ஆதாரங்களும், தரவுகளும் காரணங்களும் இருந்தும் இனப்படுகொலை என ஏற்றுக்கொள்ள இந்த தீர்மானம் மறுக்கிறது. தனிப்பட்ட ஆதாயம் தேடும் உலக நாடுகள் இந்த சுருக்கலுக்கு அடிப்படை காரணமாக உள்ளதை நாம் மறந்துவிடக் கூடாது.

பிளவுபடுத்துதல்

இந்த தீர்மானத்தில் இந்திய ஒன்றிய அரசின் தமிழ்நாட்டு அரசின் ஒற்றுமையின்மை, ஈழத்தில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமையின்மை, திருமிகு கசேந்திர பொன்னம்மபலம், திருமிகு சிறீதரன் சிவஞானம் போன்ற தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தவிர தவறான வழியில் செல்லுதல், உலக தமிழர் அமைப்பு, பாதிக்கப்பட்ட சில நபர்கள் தவிர பிற அமைப்புகளின் ஈடுபாடு ஐநாவில் மிகக்குறைவு ஆகியவை வெளிப்படுகின்றன. தீர்மானங்கள் காலம் கடத்துவதால் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துகின்றன. ஒற்றுமை நயன்மையை நிலைநாட்டும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

இறுதியாக, நாம் கையறு நிலையில் இருந்தாலும் இந்த தீர்மானத்தை வைத்து தமிழர்களுக்கு நடந்த கொடூரத்தை உலகிற்கு எடுத்துச்சொல்லி நயன்மையை நிலைநாட்ட சிந்திக்கவேண்டும். செயல்பட வெண்டும். ஒன்றுமே இல்லை என்று நாம் விரக்தியாகாமல் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி செய்யவேண்டிய பணிகளை திட்டமிட்டு எதிர்நோக்குடன் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.

இருட்டிலும் கண்டுபிடிக்கலாம் என்ற நம்பிக்iயில் தேடுவோம் கண்டடைவோம். இந்த தீர்மானத்தில் இருக்கும் வழிகளை(எண் 05, 06, 14, 15) பயன்படுத்தி கரம்கோர்த்து பணிசெய்ய முன்வருவோம். பாடம் கற்றுக்கொள்வோம். செயல்படுவோம் நன்மையை தமிழர்களுக்கு உறுதியாக கிடைக்கும் வரையில்.

இலங்கை இராணுவ அதிகாரிகளிற்கு கனடா தடைவிதிக்கலாம் என தகவல்

கனடா இலங்கையை சேர்ந்த மூன்று இராணுவ அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் இலங்கை இராணுவ அதிகாரிகள் உடனடியாக இந்த தடைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

கனடாவே இது தொடர்பான முதல்நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளது,கனடா மூன்று இராணுவஅதிகாரிகளிற்கு எதிராக தடைவிதிக்கலாம் இதன் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட பல நாடுகள் தடை நடவடிக்கைளை முன்னெடுக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்

இலங்கையில் சுமார் 6.2 மில்லியனுக்கும் அதிகமானோர் மிதமான உணவுப்பாதுகாப்பின்மைக்கு முகங்கொடுத்திருப்பதுடன் 66,000 பேர் தீவிர உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத்திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில், உலகளாவிய ரீதியில் ‘பட்டினி வலயங்கள்’ என உலக உணவுத்திட்டத்தினால் பெயரிடப்பட்டுள்ள 48 நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கியிருக்கின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையொன்றின் ஊடாக இவ்விடயம் வெளிப்படுத்தப்பட்டிருப்பதுடன் கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து உலகளாவிய ரீதியில் உணவுப்பாதுகாப்பின்மை நிலை உயர்வடைந்துவருவதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு முன்னதாகவே தொடர்ச்சியான காலநிலை மாற்றம் மற்றும் அனர்த்தங்கள், பிராந்திய ரீதியான முரண்பாடுகள், கொரோனா வைரஸ் பரவல் என்பன உணவு உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் தாக்கங்களைத் தோற்றுவித்துதுடன் உணவுப்பொருட்களின் விலையேற்றத்திற்கும் காரணமாக அமைந்தன.

இந்நிலைவரம் உக்ரைன் – ரஷ்ய போரை அடுத்து மேலும் தீவிரமடைந்தது. இது குறிப்பாக உணவு மற்றும் உரம் ஆகியவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரிப்பதற்கு வழிவகுத்ததுடன் இறக்குமதிகளில் தங்கியிருக்கும் நாடுகள்மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்விளைவாகத் தோற்றம்பெற்ற உணவுப்பாதுகாப்பின்மையினால் உலகளாவிய ரீதியில் சுமார் 345 மில்லியன் மக்கள் மிகுந்த அச்சுறுத்தல் நிலைக்கு முகங்கொடுத்திருப்பதாகவும், தினமும் சுமார் 828 மில்லியன் மக்கள் பசியுடன் உறங்கச்செல்வதாகவும் உலக உணவுத்திட்டம் கவலை வெளியிட்டுள்ளது.

உணவுப்பாதுகாப்பின்மை என்பது உலகளாவிய ரீதியில் ஓர் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ள நிலையில், அதன்விளைவாக 48 நாடுகள் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

Posted in Uncategorized

இந்திய காவல்துறையினரின் மனித உரிமை மீறல் – மன்னிப்புச்சபை கண்டனம்

முஸ்லீம் மக்களுக்கு எதிராக இந்திய காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் மேற்கொண்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து அனைத்துலக மன்னிப்புச்சபை தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தில் கோவில் திருவிழா மீது கல்லெறிந்தனர் என காரணம் கூறி முஸ்லீம் இளைஞர்களை பொதுமக்களின் உடையில் வந்த இந்திய காவல்துறையினர் மரத்தில் கட்டிவைத்து தடிகளால் தாக்கியுள்ளனர்.

அதனை பெருமளவான மக்கள் பார்வையிட்டதுடன், தமது மகிழ்ச்சியை அவர்கள் தெரிவித்ததும் மிகவும் வருந்ததக்க விடயம் என மன்னிப்புச்சபை தொவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான காணொகளிகள் சமூகவலையத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் குஜராத் மாநிலமே வன்முறை மிக்க மாநிலமாகும்.

2002 ஆம் ஆண்டு அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறையில் 2000 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருந்தனர். குஜராத்தில் கடந்த 25 வருடங்களாக பாரதிய ஜனதா கட்சியே ஆட்சியில் உள்ளது. இந்த கட்சி அங்குள்ள மக்களிடம் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை வளர்த்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த வன்முறையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும் என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

”ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவு தொடரும்”: மகிந்த

நாட்டை முன்கொண்டு செல்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவு தொடர்ந்தும் இருக்கும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப்போம்” எனும் தொனிப்பொருளில் களுத்துறையில் நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது எனவும் இதன்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவினால் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு  செய்யப்பட்டிருந்தது.

போராட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இந்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மக்கள் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

கொழும்பில் காவல்துறை பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் – மனோ கணேசன்

வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட காவல் நிலையங்களினால், வீடு வீடாக வழங்கப்படுவதாக கூறப்படும் காவல்துறைப் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,“காவல்துறை பதிவு பற்றி சட்ட ஒழுங்கு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மாஅதிபர் விக்கிரமரத்ன ஆகியோருக்கு அறிவித்துள்ளேன். அவர்களும் இதை ஏற்றுக்கொண்டு வடிவங்கள் வழங்குவதை உடன் நிறுத்துவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர். ஜனாதிபதியின் பிரதம செயலாளர் சமன் ஏகநாயக இதுபற்றி பொறுப்பில் உள்ள சகலருக்கும் அறிவிப்பதாக எனக்கு உறுதி அளித்துள்ளார்.

“காவல்துறையினருக்கு அல்ல, எந்த ஒரு அரசு நிறுவனத்துக்கும், தனிப்பட்ட வீட்டு தகவல்களை கொடுக்க நாம் விரும்ப மாட்டோம். கொடுத்தால் அது எங்கெங்கு போகும் என எனக்கு தெரியும். மேலும் இது ஒரு காவல்துறை ராஜ்யம் அல்ல. காவல்துறை சட்டத்தில் பதிவு செய்ய இடம் இருக்கிறது. அது எனக்கு தெரியும். ஆனால், அதை விசேட அவசர காலங்களிலேயே பயன்படுத்த வேண்டும். எங்காவது சட்டத்தை மீறுபவர்கள் இருப்பார்கள் எனில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யுங்கள். விசாரியுங்கள். அதில் எனக்கு மாறுபட்ட கருத்தது இல்லை. ஆனால், பொதுவாக வீடு வீடாக போக வேண்டாம். இன்று போர் நடைபெறுகின்ற, சட்ட விரோத ஆயுத அமைப்புகள் செயற்படுகின்ற அவசர காலங்கள் அல்ல ” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

”தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000 ரூபா சம்பளம் வேண்டும்”

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாள் சம்பளமாக 2,000 ரூபாய் வழங்கப்பட வேண்டுமென்ற யோசனையை தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் கூட்டணி முன்வைத்துள்ளது.

மலையக சிவில் மற்றும் தொழிற்சங்க, வெகுசன அமைப்புகள் இணைந்து ஹட்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

அத்துடன், மலையக மக்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கையும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதில் மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.டி.கணேசலிங்கம், சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பின் செயற்பாட்டாளர் இராஜேந்திரன், தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் அமைப்பாளர் டீ.மாக்ஸ் பிரபாகரர், ப்ரொடெக்ட் சங்கத்தின் உப தலைவி கருப்பையா மைதிலி, தோட்ட தொழிலாளர் மத்திய நிலையத்தின் செயலாளர் வசந்தகுமார அபேகோன் ஆகிய பிரதிநிதிகள் கலந்துகொண்டு, கருத்துகளை முன்வைத்தனர்.

திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, சில கட்சிகளது விருப்பங்களுக்காகவே அன்றி மக்களுக்காகக் கொண்டு வரப்படுவதில்லை – ஜனா

பாராளுமன்றத்தில் வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக அல்லாமல் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகவே கொண்டு வரப்படுகின்றன. அந்த அடிப்படையிலேயே 22வது திருத்தச் சட்டத்தின் விவாதமுமும் பிற்போடப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஜனாதிபதியின் நேற்றைய உரை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

22வது திருத்தச் சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டிய இந்த நேரத்திலே ஜனாதிபதி அவர்களின் உரை சம்மந்தமான ஒத்திவைப்புப் பிரேரணையிலே பேசுகின்றோம். 22வது திருத்தச் சட்டம் ஒரு சிலரின் விருப்பதைப் பூர்த்தி செய்யாதமையினாலே அது இன்று சபைக்குக் கொண்டுவரப்படவில்லை எனக் கருதுகின்றேன்.

இதேபோல் தான் மாறி மாறி இந்த நாட்டை ஆண்ட அரசாங்கங்கள் தங்களது தேவைக்காக அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருகின்றார்கள். இந்த அரசியலமைப்பில் 44 வருட காலத்திலே 2வது திருத்தச் சட்டம் முன்னாள் மட்டக்களபப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராஜதுரை அவர்களை அரச தரப்பிற்கு எடுப்பதற்காக அவரது உறுப்புரிமையைப் பறிப்பதைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருக்கின்றது. 3வது திருத்தம் ஒரு ஜனாதிபதி ஆறு வருடங்கள் ஆட்சியில் இருக்கலாம் என்பதை மாற்றி அவரது ஆட்சிக் காலத்திலே நான்கு வருடத்தினுள் தேர்தலை நடத்தலாம் என்று கொண்டு வரப்பட்டது. 6வது திருத்தச் சட்டம் அப்போதைய தமிழர் விடுதலைக கூட்ணியின் பாராளுமன்ற உறுப்;பினர்களாக வந்தவர்களை இந்தச் சபையில் இருந்து துரத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 13வது திருத்தச் சட்டம் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகப் பிறப்பிக்கப்பட்ட குழந்தை, 18வது திருத்தச் சட்டம் மஹிந்த ராஜபக்ச அவர்களின் அதிகாரத்தைப் பலப்படுத்தக் கொண்டு வரப்பட்டது. 19வது திருத்தச் சட்டம் ராஜபக்ச குடும்பத்தை மையப்படுத்தி அவர்களை அரசியலில் இருந்து ஒதுக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்ட மீண்டும் கோட்;டபாய ராஜபக்சவின் அதிகார வெறிக்கு உரமூட்டிய சட்டம்.

ஆக மொதத்தில் இங்கு வருகின்ற திருத்தச் சட்டங்களெல்லாம் ஒரு சிலரது, ஒரு சில கட்சிகளது விரும்பங்களை நிறைவேற்றுவதற்காகத் தான் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் தான் 22வது திருத்தச் சட்டமும் இந்தச் சபையிலே விவாதிக்கப்பட வேண்டிய நிலையிலே ஒரு சிலருக்காக இந்தச் சட்டம் இங்கே கொண்டு வரப்படாமல் இருக்கின்றது.

இந்தத் திருத்தச் சட்டங்களிலே பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் ஒன்றுதான் இலங்கையில் மக்களின் பிரச்சனைகளை ஓரளவேனும் தீர்ப்பததற்காகக் கொண்டு வரப்பட்ட சட்டமாகும். நாங்கள் அதை முற்றுமுழுதாக ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், அவ்வாறு இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆரம்பப் புள்ளியாகக் கொண்டுவரப்பட்ட சட்டத்தைக் கூட இந்த நாட்டின் அரசுகள் அரசிலமைப்பினை மீறி கையாளுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்கள் கூட இன்றுவரை முழுமையாக வழங்கப்படாமல் மாறி மாறி ஆண்டுகொண்டிருக்கும் ஆட்சியாளர்;களால் அரசியலமைப்பு இன்றுவரை மீறப்படுகின்றது.

ஜனாதிபதி அவர்களின் நேற்றைய உரை நாட்டின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. இன மத மொழி பேதமின்றி கட்சி அரசியல் பேதமின்றி நாடாக ஒன்;றிணைய வேண்டும் என்ற தொனி அவரது உரையில் தெரிந்தது. அதனை முழுமையாக நாங்கள் ஏற்கின்றோம். ஆனால் எமது ஒத்துழைப்பு உங்கள் காரியங்களை நிறைவேற்றுவதற்காக மாத்திரமா? என்கின்ற ஐயத்துடனான கேள்வி எங்களுக்குள் எழுகின்றது. நாட்டின் தலைமை வகித்தவர்களில் நல்லவராகக் காட்டக் கூடியவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதில் எனக்கு ஐயமில்லை. அவர் ஜனாதிபதியாக வந்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அவர் ஜனாதிபதியாக வந்தது அரசியலமைப்பின் அடிப்படையிலேயே என்பதில் எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த காலத் தேர்தல் வரலாற்றை உணர வேண்டும். கடந்த நல்லாட்சி என்ற அரசின் காலத்தில் நடந்த அரசியல் கோமாளித் தனத்தை உணர வேண்டும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் உங்கள் பக்கமே எம் தமிழர்கள் இருந்தார்கள். 2010, 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலங்களில் தற்போதைய ஜனாதிபதி இருந்த பக்கமே எமது தமிழ் மக்கள் இருந்தார்கள். அது நாட்டைப் பிளவுபடுத்த அல்ல சுபீட்சப்படுத்தவே.

நல்லாட்சிக் காலத்தில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்த செயலுக்காக அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் ஒத்துழைத்து உங்களை மீண்டும் பதவியில் அமர்த்தியதில் கூடுதல் பங்காற்றியது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இந்த வரலாற்றை நீங்கள் என்றும் மறக்கக் கூடாது. உங்களது கடந்த கால வரலாற்றின் துயரங்கள் இனிமேலும் தொடரக் கூடாது. இந்த நாட்டில் புதிய அத்தியாயத்தைப் படைக்கக் கூடிய சுபீட்சத்தை ஏற்படுத்தக் கூடிய ஏன் உங்களது நீண்ட கனவு கூட இன்று நிறைவேறியுள்ளது. எனவே நிதானமாகச் செயற்படுங்கள்.

எமது நாட்டின் வரலாற்றில் போற்றப்பட வேண்டியவராக இருக்க வேண்டுமென்றால் இந்த நாட்டின் பொருளாதாரப் பிரச்சனைக்கு முக்கியமான காரணமாகவுள்ள புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு தீர்வைத் தாருங்கள்.

இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகாhர அமைச்சர் அலிசப்றி அவர்கள் வீPரவசனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றார். இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட பிரேரணையில் இலங்கைக்கு ஆதரவாக ஏழு நாடகளே ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அவை எந்த நாடுகள் சீனா, பாக்கிஸ்தான் போன்றவை. இந்த நாடுகளில் ஜனநாயகம் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். இலங்கைக்கு எதிராகவுள்ள நாடுகளைப் பாருங்கள் அமெரிக்கா பிரித்தானியா போன்ற ஜனநாயகம் நிரம்பிய நாடுகள். அந்த நாடுகளிலே பல்மொழி பேசுகின்ற பல இன மக்கள் வாழுகின்றார்கள். அந்த மக்களுக்கான அதிகாhரங்கள் பரவலாக்கபட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த நாடுகள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முன்னேறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதேபோன்று இந்த நாடும் முன்னேற வேண்டுமானால் உங்களிடையே நல்லெண்ணம் உருவாக வேண்டும். பிரேரணைக்கு நடுநிலை வகித்த இந்தியாவைப் பின்பற்றிய நாடுகள் என்ன சொல்லுகின்றன. 13வது திருத்தச் சட்டத்தை முழு அதிகாரத்துடன் நிறைவேற்றுங்கள், மாகாணசபைத் தேர்தலை நடாத்துங்கள் என்றே கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் மக்கள் சபையொன்று இல்லாமல் இருக்கின்றது. மாகாண ரீதியில் இருக்கின்ற தொல்பொருள் திணைக்கம் மதவாதம், இனவாதம் கொண்டதாகவே இருக்கின்றது. கடந்த கோட்டபாய ஆட்சியிலே கிழக்கு மாகாணத்திலே உருவாக்கப்பட்ட தொல்பொருள் செயலணி என்ன செய்து கொண்டிருக்கின்றது. இந்தத் தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக எமது இந்து மதப் பாரம்பரிய புராதனச் சின்னங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், இங்கே முன்னாள் அமைச்சர்கள் நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.

தமிழர்களுக்கு இரத்தம் கொடுத்ததாக முன்னாள் அமைச்சர் கடந்த பாராளுமன்றத்திலே பேசியிருந்தார். ஆனால், அவர் எத்தனை தமிழர்களின் இரத்தங்களை வெளியில் எடுத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். தொல்பொருளுக்குப் பொறுப்பான அமைச்சர் கூறுகின்றார் எதுவும் நடக்காது என்று. ஆனால், தொல்பொருள் திணைக்களத்திற்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயவினால் உருவாக்கப்பட்ட வியத்மக அமைப்பிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. இந்த சரத் வீரசேகர போன்றவர்கள் வியத்மக அமைப்பில் இருந்து கொண்டு சம்மந்தப்படட அமைச்சருக்கே தெரியாமல் தொல்பொருள் திணைக்களத்துடன் தொடர்புகளை வைத்தக் கொண்டு இவ்வாறான வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த காலங்களிலே எமது உயிர்நீத்த உறவுகளை நாங்கள் நினைவு கூருகின்ற போது போராட்ட வரலாற்றிலே இருந்த விமல் வீரவன்ச அவர்கள் புலிப்பயங்கரவாதிகளை நினைவு கூருகின்றார்கள். அவர்களைக் கைது செய்யச் சொல்லுகின்றார். ஆனால், அவரது தலைவர் ரோகண விஜயவீர உட்பட அவர்களது தோழர்கள் இறந்தமையை அவர்கள் இன்றும் நிpனைவுகூர்ந்து வருகின்றார்கள். ஆனால், எமது விடுதலைக்காகப் போராடியவர்களை நினைவு கூருபவர்களை கைது செய்யச் சொல்லுகின்றார்கள்.

இன்று பாhளுமன்றத்திலே கேள்வி பதில் விடயத்திலே ரோகண விஜயவீர அவர்கள் கடந்த 1989.12.12ம் திகதி பிடிபட்டதாகவும், 13ம் திகதி கொல்லப்பட்டதாகவும் அதற்கு யாரும் விவாசரணை கேட்கவில்லை என்று தோழர் விமல் விரவன்ச தெரிவித்தார். அவரிடம் நான் கேட்கின்றேன் அப்போது ரோகண வியஜயவீரவுடன் இருந்த நீங்கள் தான் அதற்கு நீதி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

முல்லைத்தீவு சம்பவத்திற்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம்!

வீதியில் இறங்கி போராடிய முல்லைத்தீவு மீனவர்கள் தாக்கப்பட்டமைக்கு, வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் கண்டனம் வெளியிட்டுள்ளது.

வடமராட்சியில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை இந்த கண்டனத்தை பதிவு செய்தார்.

எதிர்வரும் 9ஆம் திகதி இந்த தாக்குதலுக்கு நல்ல பதில் தருவதாக அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்தவர்கள் உறுதியளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படாத நிலையில், வடக்கு மாகாணம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படுமென எச்சரித்தார்.

இதேவேளை மண்ணெண்ணெய் விநியோகம் வாரத்திற்கு ஒரு தடவை மாத்திரம் 29 லிட்டர் வழங்கப்படுவதாகவும் அது ஒரு நாளுக்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

Posted in Uncategorized