தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் தீர்மானம்!

தேசிய பாதுகாப்பு தொடர்பாக சட்ட முறைமையை அறிமுகப்படுத்தத் அரசாங்கம் தீர்மனித்துள்ளது.

பயங்கரவாதம் மற்றும் வன்முறையான தீவிரவாதத்தின் புதிய வடிவங்கள் தொடர்பான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவதற்காக தற்போது காணப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சடடங்களிலுள்ள பலவீனங்களை தவிர்ப்பதற்கும், அவ்வாறான செயற்பாடுகளை எதிர்கொள்வதற்கும், சட்ட வலுவாக்கம் செய்வதற்கும், விசாரணை மற்றும் புலனாய்வு செயற்கருவிகளை மேலும் வலுப்படுத்துவதற்கும் விரிவான தேசிய பாதுகாப்பு சட்ட முறைமையொன்று அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச தரநியமங்கள் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு தொடர்பாக முழுமையான சட்ட முறைமையொன்றுக்கான அடிப்படைச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளரின் தலைமையில் குழுவொன்றை நியமிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதி அவர்கள்: நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியல்மைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்: மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இலங்கையிலிருந்து ஜெனீவாவிற்கு புறப்பட்ட குழு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ள

இந்நிலையில், குறித்த அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் இன்று ஜெனிவாவிற்கு பயணமாகியுள்ளனர்.

அதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதீ அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியா இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் உதவிகளை வழங்கியுள்ளது – ஐநாவில் இந்தியா

மனிதனை மையமாக கொண்ட உலகமயமாக்கலில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பு குறித்து ஐநாவில் கருத்து தெரிவித்துள்ள இந்தியா இலங்கைக்கு உணவு மற்றும் நிதியுதவியாக கிட்டத்தட்ட 4 பில்லியன் டொலர்களை வழங்கியதாக தெரிவித்துள்ளது.

சமாதானத்தை ஏற்படுத்தும் ஆணைக்குழு தொடர்பான ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் வருடாந்த கூட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ருச்சிரகம்போஜ் இதனை தெரிவித்துள்ளார்.

எங்களின் நெருங்கிய அயலில் உணவுப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கடந்த சில மாதங்களாக 4 பில்லியன் டொலர் உணவு மற்றும் நிதியை வழங்குவதன் மூலம் எங்களின் சிறந்த நண்பரும் அயலருவமான இலங்கைக்கு உதவுகின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மோதல் ஆரம்பித்தது முதல் உணவு மற்றும் பொருட்விநியோக சங்கிலி அழிக்கப்பட்டதால் ஏற்பட்ட மோசமான விளைவுகளிற்கு தீர்வை காண்பதற்காக நிதி உதவி தேவைப்படும் நாடுகளிற்கு இந்தியா உதவிகளை வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டதால் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் – அலி சப்ரி

அரசியலமைப்பின் 22வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரங்கள் பகிரப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

கொழும்பில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர்,

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பெரும்பாலான கட்டமைப்புகள் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்படும் போது மீண்டும் திரும்பும் என தெரிவித்தார்.

முன்னர் திட்டமிடப்பட்ட இடைக்கால ஏற்பாட்டை தக்கவைக்க தற்போதைய ஜனாதிபதி விரும்பவில்லை என்றும் 19ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவே அவர் விரும்புவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் பிராந்திய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த நடைமுறைகளுக்கு அமைவாக தேசிய பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் மனித சுதந்திரத்தை சமநிலைப்படுத்துவதற்கும், சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டத்தை தயாரிப்பதற்கும் இலங்கை தயாராகி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது எந்தக் கொள்கையையும் கொண்டிருக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இல்லை என்றும் கட்சியில் கொள்கைகளோ, ஆட்களோ இல்லை என்றும் பெயர் பலகை மட்டுமே உள்ளது என்றும் தற்போது கட்சியில் வெறிபிடித்தவர்களே உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் பெரிய ஜனநாயகக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருந்ததாகவும், தற்போது அது அழிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு கட்சி முக்கியமல்ல என்றும் கட்சியின் கொள்கைகளும் மக்களும் தான் முக்கியம் என்றும், எனவே மக்களுக்காகவும் கட்சியின் கொள்கைகளுக்காகவும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்

Posted in Uncategorized

இங்கிலாந்து பிரதமராக லிஸ் டிரஸ் தெரிவு!

இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகியதை தொடர்ந்து, புதிய பிரதமராகும் வாய்ப்பை லிஸ் டிரஸ் பெற்றுள்ளார்.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 2 ஆம் திகதி முடிவடைந்தது.

இந்தத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக்குக்கும், தற்போதைய வெளியுறவு மந்திரி லிஸ் டிரஸ்சுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

புதிய தலைவரை தேர்வு செய்ய கன்சர்வேட்டிவ் கட்சியின் உறுப்பினர்கள் சுமார் 1.60 லட்சம் பேர் தபால் மற்றும் ஆன்லைன் மூலமாக வாக்களித்தனர். வாக்குகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஆளும் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றி பெற்றார்.

இதையடுத்து, இங்கிலாந்தின் அரசியலமைப்பு சட்டப்படி ஆளும் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்படும் நபரே நாட்டின் பிரதமராக நியமிக்கப்படுவார். நாளை இங்கிலாந்து ராணியை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் பிரதமராக பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பியழைக்க ஜனாதிபதி நடவடிக்கை

இந்தியாவில் அகதிகளாக உள்ள இலங்கையர்களை, நாட்டுக்கு திருப்பியழைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.இதற்கமைய, புகலிடம்கோரி அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைப்பதற்கான வசதிகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்க நாயக்கவினால் இந்த விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் ஊடகப்பிரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது

Posted in Uncategorized

குமார வெல்கம தலைமையில் புதிய அரசியல் கட்சி

பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தலைமையிலான புதிய லங்கா சுதந்திரக் கட்சியின் கட்சித் தலைமையகம் பத்தரமுல்லையில் இன்று(05) திறந்துவைக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில் இன்றைய நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சந்திம வீரக்கொடி மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை அகதிகள் தொடர்பில் விசேட குழு நியமிப்பு

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் சந்திமா விக்ரமசிங்க தலைமையிலான இக்குழுவில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம், வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நீதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையரை மீண்டும் அழைத்து வர வேண்டும் என “ஈழ அகதிகள் புனர்வாழ்விற்கான அமைப்பு” (OFERR) வேண்டுகோள் முன்வைத்திருந்தது. இதுகுறித்து பேசுவதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க தலைமையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் இதற்கான தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தற்போது சுமார் 58,000 இலங்கையர்கள் அகதிகளாக தங்கியுள்ளதாகவும் அவர்களில் 3,800 பேர் மாத்திரமே இலங்கைக்கு திரும்புவதற்கு தயாராக இருப்பதாகவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதனையடுத்து இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் இலங்கை வருவதை இலகுபடுத்துவதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலுள்ள இலங்கை பிரதி உயர்ஸ்தானிகராலயமும் இச்செயன்முறையை இலகுபடுத்துவதற்கான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, நீதி அமைச்சு மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் ஈழ அகதிகள் புனர்வாழ்வுக்கான அமைப்பின் (OFERR) பிரதம செயற்பாட்டாளர் சி.எஸ்.சந்திரஹாசன், எஸ். சூரியகுமாரி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஐ.நா. சபையில் கூறிய கூற்றை ஜனாதிபதி மறுத்து நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த கூற்றை, இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்திலே ஐநா சபையிடம் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தார். அதிலே ஒன்று பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறியிருந்தார். அதே பிரதமர் இப்போது ஜனாதிபதியாக வந்திருக்கின்ற சூழலிலே அவர் கொடுத்த வாக்குறுதி என்பது மறுக்கப்பட்டிருக்கிறது.

மீண்டும் பயங்கரவாத தடை சட்டத்தை ஜனாதிபதி கையில் எடுத்திருக்கிறார். ஆகவே ஐநாக்கு ஒன்று கூறுவதும், வெளியே ஒன்றை செய்வதுமாக இருக்கின்ற சூழலை நாங்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

தேசிய பாதுகாப்பு சட்டம் என்பதும், பயங்கரவாத தடைச்சட்டமும் ஒன்றாகத்தான் இருக்கும் என்று கூறுவதைவிட மோசமாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆகவே பிரதமராக இருந்து ஜனாதிபதியாக வந்த ரணில் விக்ரமசிங்க ஐநா சபையிலே கூறி வந்த அந்த கூற்றை இப்போது மறுத்து நடக்கின்ற செயற்பாட்டை அவர் செய்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூறிய வார்த்தை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். என்னை பொறுத்தமட்டிலே சட்டங்கள் மாறுகின்றது எல்லாம் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையாகத்தான் வரும் என்பது என்னுடைய கருத்து.

ஆகவே ஜனாதிபதி அவர்கள் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். ஐநாவுக்கு கொடுத்த வாக்குறுதியை, சந்தர்ப்பத்தை ஜனாதிபதி நிறைவேற்றிகொள்ள வேண்டும் என்று அவர்களிடம் கோரிக்கை வைக்கின்றேன்.

அதை விட ஏற்கனவே அவர் மீது குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ் மக்களை, தமிழ் இனத்தை, ஏன் இலங்கை நாட்டையே குட்டிச்சுவராக்கிய மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை அவர் செய்து கொண்டு இருப்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

அந்தவகையிலே இந்த சட்டங்களின் ஊடாக ஜனநாயக நீரோட்டத்திலே இந்த குடும்பத்திற்கு எதிராக போராடியவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணைக்குட்படுத்துவது என்பது உண்மையிலே அந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாடாகத்தான் காணக்கூடியதாக இருக்கும். ஏனென்றால் அந்த மக்கள் இந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள். பல்கலைக்கழக மாணவர்கள் கூட அந்த குடும்பத்துக்கு எதிராகத்தான் போராடினார்கள்.

தற்போது புதிய ஜனாதிபதியாக ஒருவர் வந்திருக்கிறார் என்றால் அந்த போராட்டத்தின் பின்னணிதான். ஆகவே மகிந்த குடும்பத்தை எதிர்க்கின்ற வகையிலேதான் இந்த போராட்டம் இருந்தது. ஆனால் இப்போது இந்த சட்டங்களின் ஊடாக போராடியவர்களை கைது செய்து சிறையிலே அடைப்பது என்பது மகிந்த குடும்பத்தை காப்பாற்றுகின்ற ஒரு செயற்பாட்டை ஜனாதிபதி செய்ய துணிகிறார் என்ற ஒரு சந்தேகம் எங்களுக்கு எழுகிறது.

அந்தவகையிலே இந்த விடயத்திலே மக்களினுடைய ஜனநாயக போராட்டத்தின் ஊடாக தான் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்தார். ஆகவே அந்த விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதனை கூறி கொள்ள விரும்புகிறேன் என்றார்.

Posted in Uncategorized