பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன் – சரத் பொன்சேகா

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன.இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் முயற்சியை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் திட்டவட்டமாக ஏற்கப்போவதில்லையெனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரச தலைவரின் கீழுள்ள அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என அந்த பதிவில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலை படுகொலை வாரம் வடக்கு கிழக்கில் இன்று ஆரம்பமானது.2009ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்த காலத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் நினைவாக மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

“கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலிசுமந்த கதை பகிர்வோம்”,என்னும் தலைப்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இறுதிக் காலப்பகுதியில் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மனித பேரவலத்தையும் கொடுமையினையும் இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் கொண்டு செல்லும் வகையில் இந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு காந்திபூங்கா அருகில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி அருகே கஞ்சிப்பானை வைத்து அமைத்து அவற்றினை மக்களுக்கு வழங்கி முள்ளிவாய்க்கால் துயரினையும் எதிர்கொண்ட அழிவுகளையும் மக்களுக்கு எடுத்துக்கூறப்பட்டது.

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் – நாமல் ராஜபக்ஷ

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.

எனது தந்தை மஹிந்த ராஜபக்ஷலுக்கோ எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை.

அனைத்து பொய் குற்றச்சாட்டுகளையும் நேர்மையாக நாம் சந்திக்க தயார் என என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ருவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியின் விசேட உரை

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும், அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு உறுதியளித்தார்.

நாடு தொடர்ந்து வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்க முடியாது.தேசிய பாதுகாப்பையும்,அரசியல் ஸ்தீரத்தன்மையை பேண்வதற்கும் பல தீர்மானங்களை முன்னெடுத்துள்ளேன்.பொது மக்கள் அமைதியான முறையிலும்,சிறந்த சிந்தனையுடனும் செயற்பட வேண்டும் என்பதை பொறுப்புடன் வலியுறுத்துகிறேன் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வரலாற்று என்றுமில்லாத வகையில் பல சவால்களை எதிர்க்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடியினயால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் மற்றும் பொருளதார ஸ்தீரத்தன்மையற்ற நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளையும் ஒன்றினைத்து இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்குமாறு பல்வேறு தரப்பினர் தொடர்;ந்து வலியுறுத்தினார்கள்.குறித்த யோசனைகளுக்கு அமைய கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு பல தீர்மானங்களை முன்னெடுத்தேன்.

; அதற்கமைய கடந்த மாதம் ராஜபக்ஷர்கள் இல்லாத இளைஞர்களை உள்ளடக்கிய தற்காலிக அமைச்சரவையை ஸ்தாபித்தேன் அத்துடன் பிரதமரை நீக்கி புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தையும் ஸ்தாபிக்க இணக்கம் தெரிவித்தேன்.

இவ்வாறான பின்னணியில் கடந்த திங்கட்கிழமை எதிர்பாராத அசம்பாவிதம் இடம்பெற்றதை தொடர்ந்து நாடுதழுவிய ரீதியின் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றதால் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

குறுகிய நேரத்திற்குள் பலர் உயிரிழக்கும் வகையில் சம்பவங்கள் இடம்பெற்றதுடன், அரசியல்வாதிகளின் வீடுகளும் தீக்கிரையானது.

இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி பேதமற்ற வகையில் கண்டனம் வெளியிட்டு முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தேன்.

இச்சம்பவத்தினை தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் சமூக கட்டமைப்பில் வன்முறை சம்பவங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான சூழ்நிலையில் முப்படைகளின் தளபதிகளின் ஒத்துழைப்புடன் நாட்டின் அமைதியை பேண தீர்மானித்துள்ளேன்.நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் தீர்மானங்களை செயற்படுத்துமாறு முப்படையினருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆகவே பொது மக்கள் வன்முறைகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட கூடாது.

நாட்டு மக்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்,போராட்டங்களை தூண்டிவிடும் தரப்பினருக்கு எதிரான கடுமையான சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.இதுவரையில் பதிவான விளைவுகள் மற்றும் இழப்புக்களை அடிப்படையாகக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன்,அரசியல் ஸ்தீரத்தன்மையினை தொடர்ந்து பேணுவதற்கு சகல கட்சிகளை தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளேன்.

நடைமுறையில் காணப்படும் நிலைமையை கட்டுப்படுத்தவும்,நாடு ஸ்தீரத்தன்மையற்ற நிலைமையில் இருந்து மீள்வதற்கும்,அரச கட்டமைப்பை முன்கொண்டு செல்வதற்கும் புதிய அரசாங்கத்தை ஸ்தாபிக்க தீர்மானித்துள்ளேன்.

பாராளுமன்றில் பெரும்பாலான தரப்பினரது நம்பிக்கையை பெற்றுக்கொள்ளும் அதேபோல் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பிரதமரையும்,அமைச்சரவையினையும் இவ்வாரத்திற்குள் நியமிப்பேன்.

அதேபோல் அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை மீண்டும் செயற்படுத்தும் வகையிலான அரசியலமைப்பினை திருத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய அரசாங்கத்தின் பிரதமருக்கு புதிய செயற்திட்டத்தை வழங்கி நாட்டை முன்கொண்டு செல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன்.

அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யுமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.புதிய அரசாங்கம் ஸ்தாபிக்கப்பட்டு நாடு ஸ்தீரமான நிலைமையினை அடைந்ததை தொடந்து அதற்கும் வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பேன்.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை தொடர்ந்து வீழ்ச்சிக்கு கொண்டு செல்லாமல் நாட்டு மக்களினதும்,அவர்களின் உடமைகளையும் பாதுகாத்து பொதுத்தன்மையுடன் செயற்படுமாறு அரச செயலொழுங்கின் சகல துறையினரிடனும் வலியுறுத்துகிறேன்.அதேபோல் அமைதியானவும்,சிறந்த சிந்தனையுடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் பொறுப்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

பிரதமர் பதவிக்கு மூவரை பரிந்துரைக்க சுயாதீன உறுப்பினர்கள் குழு தீர்மானம்

பிரதமர் பதவிக்காக மூவரின் பெயர்களை ஜனாதிபதியிடம் பரிந்துரை செய்ய அரசாங்கத்திலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழு தீர்மானித்துள்ளது.

11 கட்சிகளின் உறுப்பினர்கள் மற்றும் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்த உறுப்பினர்களுக்கு இடையில் இன்று கொழும்பில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது.

இதற்கமைய, முன்னாள் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, டலஸ் அழகப்பெரும மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஸ ஆகியோரது பெயர்களை பிரதமர் பதவிக்காக முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

ஜனாதிபதி கோட்டாபய – ரணிலுக்கிடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்று வரகதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி இன்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ள நிலையில், தற்போது ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளமையானது அரசியல் வட்டாரங்களில் இந்த சந்திப்பு பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று இரவு 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

1989இல், இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோட்டாபய பதவி வகித்தபோது, 700 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் காணாமலாக்கப்பட்டனர்- ITJP

இலங்கையில் ராஜபக்ச குடும்பம் மீது முன்னொருபோதும் நிகழ்ந்திராத கோபநிலை தற்போது ஏற்பட்டுள்ள நிலையில், 1989 இல் நடந்த பலவந்தமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்கின் மீது அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் வெளிவந்த சந்தேகநபர்களைக் கொண்ட இரகசியப்பட்டியலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பெயரும் இருந்ததாக  ITJP யின்அறிக்கையொன்று தெரிவிக்கின்றது.

1989இல், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள மாத்தளை மாவட்டத்தின் மாவட்ட இராணுவ ஒருங்கிணைப்பாளராக கோட்டாபய ராஜபக்ச பதவி வகித்தபோது, இவரது கட்டளையின் கீழ் செயற்பட்ட பாதுகாப்புப் படையினரால் 700 இற்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டனர் என குற்றம் சாட்டப்பட்டது.

Posted in Uncategorized

”நாட்டை பொறுப்பேற்கத் தயார்”: அனுரகுமார அறிவிப்பு!

நெருக்கடிகளை தீர்த்து நாட்டை பொறுப்பேற்பதற்கு தாம் தயாராகவே இருப்பதாக ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது நெருக்கடிகளை தீர்ப்பதற்காக செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை முன்வைத்தார்.

01. நிகழ்கால ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக தனது பதவியில் இருந்து விலக வேண்டும்.

02. தற்போது பிரதம அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில் சபாநாயகர் தற்காலிக பதில் ஜனாதிபதியாக செயலாற்ற வேண்டும்.

03. நிகழ்கால அரசாங்கமும் நடப்பு பாராளுமன்றத்தின் உள்ளடக்கமும் தொடர்ந்தும் மக்கள் ஆணை கட்டளையை பிரதிநிதித்துவம் செய்யாததால் அரசாங்கம் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளமையாலும் இந்தப் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு மாற்றத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலும் 06 மாதங்களுக்குள் புதிய மக்கள் ஆணை கட்டளையைக் கொண்டதாக அரசாங்கமொன்று ஸ்தாபிக்கப்படல் வேண்டும். அதற்கு இடைப்பட்ட காலப்பகுதிக்கான தற்காலிக ஆட்சி கட்டமைப்பு என்ற வகையில்>

அ) நிகழ்கால அரசியல் நெருக்கடி மற்றும் அராஜக நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டை புதிய வழியில் இட்டுச் செல்வதற்கான பொறுப்பினை ஏற்றுக்கொள்ள தேசிய மக்கள் சக்தி தயாராக இருக்கின்றதென்பதால் தேசிய மக்கள் சக்தி முதன்மை பொறுப்பினை வகித்து பாராளுமன்றத்தினூடாக தற்காலிக இடைக்கால அரசாங்கமொன்றை எந்தவிதமான தடையுமின்றி நியமித்து கொள்வதற்கான வாய்ப்பினை தேசிய மக்கள் சக்திக்கு வழங்குதல்.

ஆ) அவ்வாறு இல்லாவிட்டால் குறுகிய காலப்பகுதிக்காக நிகழ்கால பாராளுமன்றத்தில் இடைக்கால அரசாங்கமொன்றை நிறுவிக்கொள்ளுதல். அதன்போது தேசிய மக்கள் சக்தி அதன் பங்காளியாக அமையாமல் எதிர்கட்சியில் இருந்துக்கொண்டு அதற்கான ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

04. மேற்படி இரண்டு தீர்வுகளில் ஏதேனும் ஒரு வழியில் நியமிக்கப்படுகின்ற தற்காலிகமான இடைக்கால அரசாங்கம் கீழ் காணும் பணிகளை ஈடேற்ற வேண்டும்.

i. ஜனாதிபதியின் தத்துவங்களை மட்டுப்படுத்துகின்ற மற்றும் நிகழ்கால ஜனாதிபதியின் பதவிக்காலத்தை மட்டுப்படுத்துகின்ற அரசியலமைப்புக்கான 21 ஆவது திருத்தத்தை உடனடியாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ள வேண்டும்.

ii. நிகழ்காலத்தில் மக்கள் எதிர்நோக்கியுள்ள கடுமையான பொருளாதார அழுத்தங்களை குறைப்பதற்கான அத்தியாவசிய நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.

iii. நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கான அரசியல் அமைப்பு திருத்தமொன்றை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக்கொள்ளல் வேண்டும்.

iv. தற்காலிக அரசாங்கமொன்று நிறுவப்பட்டு 06 மாதக்காலப்பகுதிக்குள் புதிய ஆட்சியொன்றை நிறுவுவதற்கு ஏதுவாக அதற்கான பொதுத் தேர்தலையும் நிகழ்கால ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தையும் உள்ளடக்கியதாக மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்று நடாத்தப்படல் வேண்டும்.

v. தற்காலிக அரசாங்கத்தின் பணிகள் உடன்பட்ட வகையில் இடம்பெறுகின்றனவா என்பதை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு சபையொன்று நியமிக்கப்படல் வேண்டும். அது நிகழ்கால மக்கள் போராட்டத்துடன் தொடர்புபட்டுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை உள்ளிட்ட போராட்டத்தின் பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், பல்வேறு தொழில்வாண்மை அமைப்புகள் மற்றும் சிவில் அமைப்புகளில் பிரதிநிதிகளை உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும்.

Posted in Uncategorized

இலங்கை தொடர்பான பாப்பரசரின் அறிவித்தல்!

இலங்கையில் நெருக்கடிகளை தீர்த்து அமைதியை ஏற்படுத்த வேண்டும் என்று புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆளும் அரசியல் தலைவர்கள் பொது மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பொதுமக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்த்து, மனித உரிமைகள் மற்றும் குடியியல் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவேண்டும் என்று பொறுப்புகள் உள்ள அனைவரையும் தாம் கேட்டுக்கொள்வதாக பாப்பரசர் கோரியுள்ளார்.

வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த உள்ளிட்டவர்களை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் நிஷாந்த மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கைது செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை பயன்படுத்த தவறிய குற்றவியல் சட்டத்தின் 37 மற்றும் 38 ஆவது பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்றும் சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தை மீறிய அனைத்து சிறைச்சாலை அதிகாரிகளையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சனத் ஆகியோரை குற்றவியல் அச்சுறுத்தல், குண்டர்களுக்கு உதவி செய்தல் மற்றும் குற்றவியல் சட்டத்தின் 486 மற்றும் 102 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யுமாறு கமல் விஜேசிறி, துசித குணசேகர, ராஜித லக்மால் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினால் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.