இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்- அமெரிக்கா,கனடா கவலை

இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தீர்மானம் குறித்து கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“கடந்த வாரங்களாக, இலங்கை முழுவதும் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில், அமைதியான கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை அனுபவிக்கும் குடிமக்கள் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் இது நாட்டின் ஜனநாயகத்திற்கு கிடைத்த பெருமையாகும். அப்படியானால், அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்துவது ஏன் அவசியம் என்பதைப் புரிந்துகொள்வது கடினமானது” என கனேடிய உயர்ஸ்தானிகர் ட்வீட் செய்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்கள் உடன் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இன்று இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் தனது ட்விட்டர் பக்கத்தில் அமைதியான முறையில் போராடும் மக்களின் கோரிக்கைகள் கேட்கப்பட வேண்டும் என்றும் மீண்டும் இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது கவலை அளிப்பதாகவும் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கக்கூடாது எனக் கருத்து முன்வைப்பு

இலங்கையில் உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை அரசாங்கம் நீட்டித்திருப்பதை இரத்துச் செய்து, உடனடியாக உள்ளுராட்சி சபைகள் அனைத்தையும் கலைக்க வேண்டும் என்றும், இதன் மூலம் பல கோடி ரூபாய் நிதியை மீதப்படுத்த முடியும் எனவும் பரவலாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டில் மொத்தமாக 341 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள் 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள், 276 பிரதேச சபைகள் இருக்கின்றன. இதில் 340 சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த 2018ஆம் ஆண்டிலும், எல்பிட்டி பிரதேச சபைக்கான தேர்தல் 2019ஆம் ஆண்டும் நடைபெற்றன.

இதற்கமைய மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலங்கள், கடந்த பிப்ரவரி மாதம் நிறைவுக்கு வந்தன. இதனையடுத்து 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் இந்த சபைகளின் பதவிக் காலத்தை நீட்டிப்பதாக கடந்த ஜனவரி மாதம் அரசாங்கம் அறிவித்தது.

உள்ளூராட்சி சபைகள் அனைத்திலும் மொத்தமாக 8,690 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 845 பேர் மாநகர சபை உறுப்பினர்கள், 483 பேர் நகர சபை உறுப்பினர்கள், 7,362 பேர் பிரதேச சபை உறுப்பினர்களாவர்.

நாட்டிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் 223 சபைகளின் அதிகாரங்களை மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியிருந்த நிலையில், இந்த சபைகளின் பதவிக் காலங்கள் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி சபைகளின் கூட்டங்கள் சாதாரணமாக ஒவ்வொரு மாதமும் நடைபெறும், தேவையேற்படும்போது விசேட கூட்டங்களும் நடத்தப்படும். மாநகர சபை கூட்டங்களில் கலந்து கொள்ளும் அதன் உறுப்பினர்களுக்கு 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவாக வழக்கப்படுகிறது. மாநகர சபையின் முதல்வருக்கு 30 ஆயிரம் ரூபாவும் பிரதி முதல்வருக்கு 25 ஆயிரம் ரூபாவும் கொடுப்பனவாக வழங்கப்படுகிறது.

இதே வேளை நகர சபை மற்றும் பிரதேச சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு கொடுப்பனவாக 15 ஆயிரம் ரூபா வழங்கப்படுகிறது. மேலும் இவற்றின் தவிசாளர்களுக்கு (தலைவர்கள்) 25 ஆயிரம் ரூபாவும், பிரதித் தவிசாளர்களுக்கு 20 ஆயிரம் ரூபாவும் கிடைக்கின்றது.

எனவே, தற்போது நீடிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலத்தை இரத்துச் செய்து – அவற்றினைக் கலைத்து விட்டால், பதவி நீட்டிக்கப்பட்டுள்ள காலத்துக்காக அந்த சபைகளின் உறுப்பினர்களுக்கு, வழங்கப்படவேண்டிய கொடுப்பனவு கிட்டத்தட்ட 152 கோடி ரூபாயை மிச்சப்படுத்த முடியும்  எனக் கூறப்படுகின்றது.

இதேவேளை, ஒவ்வொரு சபைக் கூட்டங்களையும் நடத்துவதற்கான வேறு செலவுகள் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் உள்ளூராட்சி சபைகளைக் கலைத்தால் 150 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சப்படுத்த முடியும் என்றும் கூறப்படுகின்றது.

நன்றி -பிபிசி தமிழ்

அவசரகாலச் சட்ட பிரகடனம் – காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்

அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமைக்கான காரணங்களை பொதுமக்களுக்கு விளக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அவசரகால நிலையில் கருத்துச் சுதந்திரம் ஒன்று கூடல், கைது உள்ளிட்ட விடயங்களில் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்கள் பாதிக்கப்படாது என நம்புவதாகவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போராட்டங்கள் அமைதியானதாகவும், சாதாரண பொலிஸ் நடவடிக்கைகளின் வரம்பிற்குள்ளும் இருந்ததால் ஏன் அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்றும் கேள்வியெழுப்பிய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நாடுமுழுவதும் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டமை குறித்து கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளது.

அவசரகாலச் சட்டம் அதிரடியாக அமுல்

இன்று நள்ளிரவு முதல் அவசரகாலச் சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது அதற்கான ஆணையை ஜனாதிபதி  பிறப்பித்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவில் வெளியாகும்

Posted in Uncategorized

அடலேறு சிறிசபாரத்தினம் எழுச்சி நிகழ்வு யாழ் மாவட்ட கோண்டாவிலில் நடைப்பெற்றது

இன்று அடலேறு சிறிசபாரத்தினம் படுகொலை செய்யப்பட்ட இடமான கோண்டாவில் அன்னங்கை தோட்டவெளியில் எழுச்சி நிகழ்வு வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளரும் யாழ் மாவட்ட ரெலோ பொறுப்பாளருமான நிரோஜ் தலைமையில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் ரெலோ ஊடக பேச்சாளர் சுரேன், வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் ,வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் பொருளாளருமான விந்தன், யாழ் மாநகர பிரதி முதல்வரும் யாழ் மாவட்ட பிரதி தலைவருமான ஈசன், நல்லார் பிரதி தவிசாளர் ஜெயகரன், நல்லூர் தொகுதி அமைப்பாளர் மதுசூதனன், யாழ் நகர அமைப்பாளர் உதயசிறி,யாழ் மாநகரசபை உறுப்பினர் நளினா பரம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக பிறமாவட்டங்களில் இருந்து முக்கிய தலைவர்கள் வரமுடியாத சூழ்நிலையில் இந்நிகழ்வை வருடாவருடம் நடாத்தி வரும் ரெலோ யாழ் மாவட்ட உறுப்பினர்கள் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்று நினைவுகூர்ந்தனர் .

வடக்கு கிழக்கில் உள்ள ரெலோ காரியாலயங்களிலும், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் மாவட்ட கிளையின் உறுப்பினர்களால் எழுச்சி தினம் நடைபெற்றது.

புலம்பெயர் தேசங்களில் உள்ள ரெலோ பிரித்தானிய, சுவிட்சர்லாந்து,கனடா, பிரான்ஸ் கிளைகளில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை எழுச்சி நிகழ்வு நடைபெற உள்ளது.

” 36ம் ஆண்டு நினைவுகள் ” (சித்திரை 29 – வைகாசி 06)

ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில்
விடுதலை இயக்கங்களின் ஒற்றுமை
குலைந்த,குலைக்கப்பட்ட நாள்!!
ஈழக் கனவு கலைந்த,கலைக்கப்பட்ட நாள்!!!

சுதந்திரத்துக்காக போராட
சுதந்திரம் மறுக்கப்பட்ட நாள்!!!

எம் மீதும் எம் தலை(வன்) மீதும்
துரோகம் சூட்டப்பட்ட நாள்!!!!

“தமிழ் தேசிய வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் தலை சாய்த்து அஞ்சலிக்கின்றோம்!”

பாராளுமன்றம் ஒத்திவைப்பு: ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக மாணவர்கள் கைவிட்டனர்!

பாராளுமன்றம் மே 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பாராளுமன்ற வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

நேற்று முதல் மாணவர்கள் பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நேற்று மாலையும், இன்று பிற்பகலும் மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் சர்ச்சை ஏற்பட்டதுடன், இதனால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரின் அலுவலகத்திற்குள் சென்று அவருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இவ்வேளையில் ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு பாராளுமன்றத்தை 17 ஆம் திகதி வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து தாமும் ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளனர்.

Posted in Uncategorized

இலங்கைக்கு 200,000 யூரோக்களை வழங்கும் ஐரோப்பிய ஒன்றியம்!

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.

இதன்படி 200,000 யூரோக்களை ( 74 மில்லியன் இலங்கை ரூபாய்) இலங்கைக்கு வழங்கவுள்ளது.

இலங்கையின் 25 மாவட்டங்களிலும் உள்ள 80,000 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசிய உதவிகளுக்காக இந்த நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

தமிழர்களின் தீர்வு விடய முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் தான் இந்த நாடு மீட்சி பெறும் – டெலோ பிரதித் தலைவர் பிரசன்னா இந்திரகுமார்

இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும். அவ்வாறான ஒற்றுமை வெறுமனே வாயளவில் இல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்களின் தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகள் சிங்கள இளைஞர்கள் மத்தியிலிருந்தும் உருவெடுத்தால் இந்த நாடு மீட்சி பெறும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதித் தவிசாளரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவருமான பிரசன்னா இந்திரகுமார் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினத்தின் 36வது வீரவணக்க நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று எமது தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரெத்தினம் அவர்களின் 36வது ஆண்டு நினவினை எமது மட்டக்களப்பு காரியாலயத்தில் மேற்கொண்டுள்ளோம். 1986ம் ஆண்டு மே மாதம் 06ம் திகதி யாழ்ப்பாணம் அன்னங்கை என்ற இடத்தில் வைத்து எமது தலைவர் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

நாங்கள் எமது தலைவரின் பாசறையில் வளர்ந்தவர்கள். இன்றும் அவர் கொள்கைகள் மாறாவண்ணம் எமது மக்களுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றைய நாட்டின் சூழ்நிலை காரணமாக இன்று தொழிற்சங்கங்கள் இணைந்து ஹர்த்தாhல் அனுஸ்டிக்கும் தினமாகையால் எமது இந்த நிகழ்வினை குறிப்பிட்ட உறுப்பினர்களின் பங்களிப்புடன் மேற்கொண்டுள்ளோம்.

இந்த நாடு இவ்வளவு மோசமான நிலைக்குச் சென்றதற்கு இந்த நாட்டை மாறி மாறி ஆண்டு வந்த இனவாதத் தலைவர்களே காரணம். தமிழர்களுக்கெதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக போரும் அதன் பின்னரான பொருளாதாரச் சீரழிவுகளும் இடம்பெற்று தற்போது இந்நிலையில் வந்திருக்கின்றது. இன்று இந்த நாடு உலகலாவிய ரீதியில் வறுமைக் கோட்டின் கிழுள்ள நாடுகளின் வரிசையில் முன்னிலையில் இருக்கின்றது.

தமிழர்கள் தங்கள் உரிமைகளை முன்நிறுத்தி தங்கள் போராட்டத்தை எங்கு ஆரம்பித்தார்களோ அதே காலி முகத்திடலிலே இன்று சிங்கள மக்கள் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை முன்நிறுத்திப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று இந்த அரசாங்கத்திற்கு எதிராக பொருளாதாரப் பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டிப் போராடும் சிங்கள மக்கள் தமிழர்களின் உரிமைப் பிரச்சனை தொடர்பிலும் அக்கறை கொள்ள வேண்டும். அதன் வரலாறுகளை அறிந்து ஏற்பட்ட தவறுகளைத் திருத்தவும் முன்வர வேண்டும்.

புழர்ழஅநபுழவவய போராட்டம் நடைபெறுகின்ற பழைய நாடாளுமன்ற கட்டிடம் அதாவது தற்போதைய ஜனாதிபதி செயலகம் முன்பாகவுள்ள காலி முகத்திடலில் தான் தமிழ் மக்களின் உரிமை போராட்டமும் தமிழர்களுக்கு எதிரான வன்முறை வடிவிலான அடக்கு முறையும் அத்திவாரமிடப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின் காலி முகத்திடல் பல போராட்ட வரலாறுகளை கொண்டிருந்தாலும் முதலாவது போராட்டமாக 1956 தமிழர்களின் சத்தியாகிரக போராட்டம் தான் பதிவாகியுள்ளது. அந்த பூமியில் தான் தமிழர்களுக்கு எதிரான அடக்கு முறையிலான வன்முறைகளுக்கும் அடித்தளம் இடப்பட்டது.

தமிழர்களின் உரிமை போராட்டத்தில் முதல் ரத்தம் சிந்திய பூமி காலி முகத்திடல். இலங்கை நாடாளுமன்றத்தில் 1956 யூன் 05 தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ் மொழி தேசிய மொழி அந்தஸ்த்தை இழந்;தது. சிங்கள மொழியில் பணிபுரிய முடியாத தமிழ் அரச ஊழியர்கள் பணி இழக்க நேரிட்டது. இச்சட்டதிற்கு எதிராக தமிழரசுக் கட்சி தலைமையில் தமிழர்கள் சத்தியாகிரகப் போராடத்தை முன்னெடுத்தனர். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்ட 1956 யூன் 05ல் தற்போதைய ஜனாதிபதி செயலகமாக இருக்கின்ற அப்போதைய நாடாளுமன்றுக்கு முன்னாலுள்ள காலி முகத்திடலில் ஆயிரகணக்கில் தமிழர்கள் அணி திரண்டனர்.

தந்தை செல்வாவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மக்களோடு மக்களாக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயுதம் தங்கிய இராணுவத்தினரும் காவல்துறையினரும் அங்கு காணப்பட்டனர். அன்றைய பிரதமர் பண்டாரநாயக்க உட்பட மற்றைய சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற மேல்மாடியில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்களைப் பார்த்தனர். அமைச்சரான கே.பி.ராஜரத்ன மற்றும் சிங்கள மொழி பாதுகாப்புத் தலைவர் எல்.எச்.மேதானந்த ஆகியோரின் தலைமையிலான குண்டர்களால் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சிலர் குண்டுக் கட்டாக தூக்கப்பட்டு அருகிலுள்ள சகதிக்குள் வீசப்பட்டனர். இராணுவம், காவல்துறை முன்னிலையில் இந்த தாக்குதல்கள் அரங்கேற்றப்பட்டன. காலி முகத்திடல் தமிழர்களின் இரத்தம் சிந்திய பூமியானது.

அமிர்தலிங்கம் இரத்தம் சிந்திய நிலையில் நாடாளுமன்றத்திற்குள் சென்று அடக்கு முறைக்கு எதிராகக் குரல் எழுப்பினார். ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்களைத் தந்தை செல்வா பொறுமை காக்குமாறு கோரினார். அஹிம்சைப் போராடத்தைக் கைவிட வேண்டாம் என்றும் தமிழர்களைக் கேட்டுக்கொண்டார். தமிழர்கள் இரத்தம் சிந்துவதை வேடிக்கை பார்த்த சிங்கள தலைவர்கள் நாடாளுமன்றின் உள்ளே சென்று தனிச் சிங்களச் சட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றினர். இந்த வரலாறு எத்தனை சிங்கள இளைஞர்களுக்குத் தெரியும்.

ஏன், இன்று நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என மக்கள் இரவு பகலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுகின்ற இதே காலி முகத்திடலில் தான் 1978ல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா மக்கள் முன்னிலையில் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகப் பதவி பிரமாணமும் செய்து கொண்டார்.

இவ்வாறான வரலாற்றுச் சிறப்புமிக்க காலி முகத்திடலில் மக்களின் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் மக்களின் இவ்வாறான போராட்டங்களுக்கு செவி சாய்க்கின்றனர், மதிப்பளிக்கின்றனர்.

நேற்றைய தினம் பாராளுமன்றத்திலே பல நாடகதாரர்களின் முகத்திரைகள் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளன. வெறுமனே 65 பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே மக்கள் பக்கம் நிற்பதென்பது மிகவும் வேதனையான விடயம். இதனை சிங்கள மக்கள் தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டின் மூவின மக்களும் ஒற்றுமையாக இருந்தால் தான் இந்த நாடு செழிப்பாகும்.

அவ்வாறான ஒற்றுமை என்பது வெறுமனே வாயளவில் மாத்திரமல்லாமல் செயற்பாட்டில் உருவாக்கப்பட வேண்டும். தமிழர்கள் இத்தனை காலம் மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கான தீர்வு விடயத்தில் சிங்கள இளைஞர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதற்கான முன்னெடுப்புகளை சிங்கள இளைஞர்கள் மத்தியில் இருந்து உருவெடுக்கப்பட்டால் தான் இந்த நாடு மீட்சி பெறும். ஆனால் அதற்கு இந்த இனவாதத் தலைவர்கள் ஒரு போதும் இடமளிக்க மாட்டார்கள்.

எனவே காலி முகத்திடலிலே போராடிக் கொண்டிருப்பவர்களே, அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குபவர்களே கடந்த காலங்களில் தமிழர்களுக்கு ஏற்பட்ட அநீதிகளைத் தடுத்து, தமிழ் மக்களுக்கான விமோசனம் கிடைக்கு வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இன்று காலி முகத்திடலிலே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள், தமிழ் இளைஞர்கள் நிரம்பியிருப்பார்கள்.

இன்று ஏற்பட்டுள்ள பொருளாதாரக் கஷ்டத்தில் இருந்து மக்கள் மீண்டெழுவது மிகவும் கடினம். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் என்பது போல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை தற்போது நாடியிருக்கிறார்கள். அதன் உதவி அந்தளவு விரைவில் கிடைக்கும் என்பதற்குச் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு!

அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் முக்கியத் தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.