நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு!

வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் என்பன களவாடப்பட்டுள்ளன.

மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவை பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கட்டிடத்தின் வரலாற்று பின்னணி

மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தபடும் ஒரு கட்டிடமாகும்.

போர்த்துக்கேயரால் யாழ்ப்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள்ள காலப்பகுதி வரை அமைச்சரின் இருப்பிடமாக இருந்துள்ளது.

இது 13 நூற்றாண்டுக்கு முற்பட்டது. இக் கட்டிடம் செங்கட்டி சுண்ணாம்பு சாந்து மரங்கள் ஓடுகள்கொண்டு கட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்தே போட்டியிடும் : ஐயம் கொள்ளத் தேவையில்லை என்கிறார் நிமல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இனிவரும் அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிடும். அதில் எவ்வித ஐயமும் கொள்ளத் தேவையில்லை.

எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்த சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதன் மூலம் அரசாங்கத்தில் சுதந்திர கட்சிக்கு தற்போது எந்தளவிற்கு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி கொழும்பு – விகாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டும் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சி காலத்தில் சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளராக நியமனம் பெறுவது இலகுவானதொரு விடயமல்ல.

எவ்வாறிருப்பினும் கடந்த தேர்தல்களில் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் இடம்பெற்ற தவறால் கொழும்பில் ஒரு ஆசனத்தைக் கூட பெற்றுக் கொள்ள முடியாமல் போனது. அதற்காக கொழும்பு மக்களிடம் நான் மன்னிப்பு கோருகின்றேன்.

இவ்வாறு கட்சியை மறுசீரமைப்பதற்கு எவ்வாறான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் தேர்தல் முடிவுகள் மக்கள் கைகளிலேயே உள்ளது.

அண்மையில் இடம்பெற்ற மத்திய குழு கூட்டத்தில் அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள் , நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்த சர்வகட்சி மாநாட்டினைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அரசாங்கத்தில் தற்போது சுதந்திர கட்சிக்கு எந்தளவு முக்கியத்துவமளிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

எனினும் இதனை எண்ணிக்கொண்டு நாம் ஒருபோதும ஏமாந்து விட மாட்டோம். அடுத்தடுத்த தேர்தல்கள் அனைத்திலும் தனித்தே போட்டியிடுவோம்.

பிரதேசசபை தேர்தலானாலும் , மாகாணசபை தேர்தலானாலும் , பாராளுமன்ற தேர்தலானாலும் சு.க தனித்தே போட்டியிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தேர்தலின் பின்னர் எமது கொள்ளைகளுடன் இணக்கப்பாட்டினை எட்டும் எந்தவொரு தரப்பினருடனும் கூட்டணியமைப்பதற்கு தயாராகவே உள்ளோம்.

அதற்காக புதிய சக்தியுன் சுதந்திர கட்சியை வலுப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பினைக் கோருகின்றோம் என்றார்.

Posted in Uncategorized

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது; சபா குகதாஸ்!

லொஹானின் அமைச்சுப் பதவி ஏற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணித் தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இராஐாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அவர்களுக்கு ஏற்கனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடையதானங்களுக்கு மேலதிகமாக (10/03/2022) களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்தொழில் அபிவிருத்தி இராஐாங்க அமைச்சு ஐனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஐாங்க அமைச்சராக இருந்த போது மது போதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து தனது கைத் துப்பாக்கியை கைதியின் தலையில் வைத்து தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்ததுடன் இழிவான வார்த்தகளால் பேசிய ரத்வத்த தொடர்பான நீதித்துறை விசாரணை நடவடிக்கை முடிவில்லாமல் தொடரும் போது மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றது.

மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் வெளிவிவகார அமைச்சரும் உள்ளக பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாக கூறிய வாக்குறுதி ஏமாற்று என்பதை லொஹானின் பதவி ஏற்பு வெளிப்படுத்தியுள்ளது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு சபை அமர்வுக்கு மாட்டு வண்டியில் சென்ற ரெலோ தவிசாளர் விஜிந்தன்

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்கள் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் இன்று(10) மாட்டு வண்டிலில் பிரதேச சபைக்கு சென்று கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாட்டின் இந்த நிலைமைகளுக்கு அரசு உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் எனக் கோரி கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயத்திலிருந்து மாட்டு வண்டியில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) மத்திய குழு உறுப்பினரும் கரைதுறைபற்று பிரதேசசபை தவிசாளருமான விஜிந்தன், உப தவிசாளர் உறுப்பினர்கள் பிரதேசசபையை நோக்கி இன்று சென்றுள்ளனர்.

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் 46வது சபை அமர்விற்கே இவ்வாறு மாட்டு வண்டியில் உறுப்பினர்கள் வந்து கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதிகார மமதையால் சீரழிந்துள்ளது நாடு – சந்திரிக்கா வெளிப்படை

அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது.நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்ற பின்னர் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி இனி ஒன்றும் செய்ய முடியாது.

இவ்வாறு முன்னாள் அரசதலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையின் தற்போதைய நிலைமை படுமோசமடைந்துள்ளது. இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்பதற்கு அரசிடம் எந்தத் திட்டங்களும் இல்லை. எனவே, அரசு உடன் பதவி விலகுவதே சிறந்தது.”

இந்த அரசு புத்திஜீவிகள் மற்றும் பொருளாதார விற்பன்னர்களின் ஆலோசனைகளைக் கேட்காமல் அதிகார மமதையில் ஆட்சி நடத்தியதால்தான் நாடு இப்படிச் சீரழிந்துள்ளது. இதை அரச தலைவரும் அவர் தலைமையிலான அரச தரப்பினரும் இன்னமும் புரிந்துகொள்ளாமல் செயற்படுகின்றனர்.

இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கிய 69 இலட்சம் பேர் உள்ளிட்ட அனைத்து மக்களும் இன்று வீதிகளில் பொருட்களைக் வாங்க வரிசையாக நிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தாலும் பொருட்களின் பற்றாக்குறையாலும் மக்கள் இன்று திண்டாடுகின்றனர்.

எனவே, பட்டினியால் மக்கள் செத்து மடிவதற்கு முன் இந்த அரசு உடன் பதவி விலக வேண்டும். அப்போதுதான் நாட்டையும் மக்களையும் மீட்டெடுக்கும் வகையில் ஜனநாயக ஆட்சி மலரும்” – என்றார்.

Posted in Uncategorized

பேரழிவில் சிறிலங்கா – மூன்று மாதங்களாக வாயே திறக்காத பசில்

“நாடு பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நாட்டின் நிதி நிலைமை குறித்து நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் மூன்று மாதங்களாகப் பேசவில்லை.

சபாநாயகர் அவர்களே, நாட்டின் நிதிநிலையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க நிதி அமைச்சருக்கு உடனடியாக உத்தரவிடுங்கள்.” என எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

‘மாண்புமிகு சபாநாயகர் அவர்களே, நமது அரசியலமைப்புச் சட்டத்தின் 148வது பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கு பண அதிகாரம் உள்ளது.ஆனால், இந்த நாடாளுமன்றத்தில் நமது நிதி அமைச்சர் கடைசியாக டிசம்பர் 10ஆம் திகதி பேசினார்.இன்று மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. இந்த 3 மாதத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நாட்டின் ஒவ்வொரு துறையிலும் பேரழிவு ஏற்பட்டுள்ளது .ஆனால் அவர் மூன்று மாதங்களாக நாட்டின் நிதி நிலை குறித்து எந்த அறிக்கையும் வெளியிடவில்லை .

இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது . எனவே, உடனடியாக உத்தரவை பிறப்பித்து, நாட்டின் நிதி நிலைமையை நாடாளுமன்றத்திற்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இனியும் காத்திருக்க முடியாது என அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஜனாதிபதிக்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித்தருமாறும் அவர்கள் கோரிக்ககை விடுத்திருந்தனர். எனினும் ஜனாதிபதி அன்றைய தினம் செயலகத்தில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

Posted in Uncategorized

பேரறிவாளன் நிரந்தரமாக விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது- தாயார் அற்புதம்மாள்

பேரறிவாளன் விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று அவரது தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்பட 7 தமிழர்களையும் விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்தின் மீது அவர் இன்னும் முடிவெடுக்கவில்லை.

இந்த நிலையில் பரோலில் வெளியே வந்த பேரறிவாளன் தனக்கு பிணை வழங்க கோரி உச்ச நீதிமற்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

இந்நிலையில், மிக நீண்ட சட்ட போராட்டத்தை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. 32 வருடமாக ஜெயிலில் இருக்கும் அவனது பாதி வாழ்க்கை ஜெயிலி லேயே முடிந்துவிட்டது. ஜெயில் வாசத்திலும் நல்ல ஒழுக்கத்தையும், படிப்பையும் வழங்கி இருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

எனக்கு வாழ்க்கையில் எதுவும் தேவையில்லை. எனது மகன் விடுதலையாக வேண்டும். பேரறிவாளனுக்கு ஏற்கனவே பரோல் வழங்கப்பட்டிருந்தாலும் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. இந்த பிரச்சினையையும் அவனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு ஜாமீன் கிடைத்து இருக்கிறது.

நியாயம் என்றாவது ஜெயித்தே தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. விரைவிலேயே நிரந்தரமாக விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கம் தீர்வினை தராது, சர்வதேசமே தலையிட வேண்டும் -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

அரசாங்கம் தீர்வினை தராது சர்வதேசமே தலையிட வேண்டும் என வவுனியாவில் ஐந்து வருடங்களை கடந்து தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

தமது போராட்டம் குறித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மேலும் தெரிவிக்கும் போது,

“எமக்கு தீர்வு கிடைக்க வேண்டுமாக இருந்தால் வெளிநாடுகளின் தலையீடு அவசியம். அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றிய நாடுகள் நேரடியாக வந்து இப்பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம்.

இன்று எமது போராட்டத்தை வெளிநாடுகள் உன்னிப்பாக அவதானித்து கொண்டு இருக்கின்றனர். நாங்கள் வெளிநாட்டின் தலையீட்டினையே நம்பி இங்கிருந்து போராடி வருகின்றோம்.

வவுனியாவில் கடந்த 1847ஆவது நாட்களாக வீதியிலிருந்து போராடி வருகின்றோம். தற்போது இடம்பெற்றுவரும் ஐநா சபை மாநாட்டில் எங்களுக்கு தீர்வு கிடைக்கும், எங்களுடைய பிள்ளைகளை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்கள் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம். எத்தனை வருடங்கள் கடந்தாலும் தீர்வு கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் மேற்கொள்ளப்படும் போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை எனவும் மாறாக, போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கச் செயலாளர் ரஞ்சனா தெரிவித்துள்ளார்.

மக்கள் அனைவரும் சர்வதேச மகளிர் தினத்தினை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையிலே, நாம் மகளிர் தினத்தினைத் துக்கதினமாக கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறோம்.யுத்தகாலத்திலே உறவுகளைத் தொலைத்துவிட்ட தாய்களாய், சகோதரிகளாய், துணைவிகளாய், ஏனைய உறவுகளாகவும் நாம் தற்போது வீதிவீதியாக கண்ணீரும் கம்பலையுமாக எமது உறவுகளைத் தேடிவருகின்றோம்.

இராணுவத்தினரிடம் கையளித்த உறவுகளையும், வெள்ளைவானில் கடத்தப்பட்ட உறவுகளையும், வீடுவீடாக இராணுவம் கைதுசெய்த உறவுகளையும் நாம் இதுவரை இலங்கை அரசிடம் கேட்டு பயனளிக்காதநிலையில், தற்போது சர்வதேசத்திடம் நீதிகேட்டு போராடிவருகின்றோம்.இந்தப் போராட்டந் தொடங்கி ஐந்துவருடங்கள் பூத்தியாகியுள்ள சூழலில் எங்களுக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை. எனவே நாம் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துச்செல்கின்றோம்.

இவ்வாறு நாம் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்போது, எமது தொடர் போராட்டத்தை வீழ்ச்சியடையச்செய்வதற்கான முயற்சிகளே இங்கு இடம்பெறுகின்றன. எமது போராட்டத்தை வலுப்படுத்துவதற்கு எவரும் முன்வருவதில்லை என்பதுடன், எமது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதி கிடைக்கவேண்டுமென யாரும் எண்ணுவதாகவுமில்லை.

கடந்த 2009ஆம் ஆண்டுபோர் மௌனிக்கப்பட்ட பின்னர் இலங்கை இராணுவத்திடம் கையளித்த உறவுகளைக் கேட்டு ஐந்துவருடங்களாக தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றோம். தற்போது நாம் எமது தொடர்போராட்டத்தின் ஆறாவது வருடத் தொடக்கத்தில் இருக்கின்றோம்.எனினும் இறுதி உயிர் இருக்கும்வரையிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் போராட்டமானது தொடரும் என முல்லைத்தீவு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மேற்கெண்ட போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கதும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.