‘பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும். இதற்கு சர்வதேசம் இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என கூட்டாக வலியுறுத்த தமிழ்க் கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமானசெல்லவம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் உள் ஊரில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்த மக்களுடன் இணைந்து போராட்டங்களை முன்னெடுக்கவும் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
ஏற்கனவே தமிழ்க் கட்சிகள் கூட்டிணைந்து 13ஆவது திருத்தத்தை உடன் நடைமுறைப்படுத்தி, சமஷ்டித் தீர்வை நோக்கி நகர இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு இந்தியாவை வலியுறுத்தும் ஆவணத்தை தயாரித்துள்ளனர்.
இந்தியப்பிரதமருக்கு அனுப்பிவைப்பதற்காக இந்த ஆவணம் வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய துாதர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த ஆவணத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும் இலங்கைக்கான இந்திய துாதரர் இந்தியா சென்றிருந்தமையினால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் இலங்கை திரும்பியுள்ளமையினால் இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது எனக் கூறப்படுகின்றது.