பாரத பிரதமருக்கான ஆவணம் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு பாரத பிரதமரை வலியுறுத்தும் ஆவணம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் கையளிக்கப்படவுள்ளது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு ஆவணத்தில் கையொப்பமிட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்த கடிதத்தை கடந்த வாரம் கையளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் இந்தியா சென்றிருந்தமையால் அது பிற்போடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அவர் நாடு திரும்பியுள்ளமையால் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இந்த ஆவணம் கையளிக்கப்படவுள்ளது.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துதல், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்த ஆவணத்தில் கையொப்பமிடுவது தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இறுதி வரை பேச்சுவார்த்தைகளில் கலந்துகொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன இதில் கையொப்பமிடவில்லை.

எனினும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய ஆவணத்தை அடுத்த கட்டமாக தயாரிக்கவுள்ளதாகவும், அதில் அந்த கட்சிகள் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியூஸ்ஃபெஸ்ட்டுக்கு கூறினார்.

எமது முயற்சியை குழப்பும் வகையில் சுமந்திரன் செயற்படுகிறார்; சுரேஸ் குற்றச்சாட்டு

நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.’

இவ்வாறு கூறியிருக்கிறார் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பின் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி ஆவணம் கொடுப்பது தொடர்பாகக் கடந்த சில மாதங்களாகப் பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள் பேச்சுளை நடத்தி ஆவணத்தைத் தயார்படுத்தி இருக்கின்றார்கள். இந்த ஆவணத்தை மிக அவசரமாக இந்தியாவுக்குத் தூதுவர் சென்றதன் காரணமாகக் கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியத் தூதுவர் வந்தவுடன் அந்த ஆவணம் கொடுக்கப்படும் என்று நாங் கள் எதிர்பார்க்கின்றோம்.

ஆனால், அநாகரிகமானதொரு விடயம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. சுமந்திரன் ஊட கவியலாளர்களைச் சந்திக்கின்றபோது நாங்கள் இந்த ஆவணத்தை முற்று முழு தாக மாற்றிவிட்டோம். இது தமிழரசுக் கட் சியினுடைய ஆவணமாக மாறிவிட்டது என்று ஒரு விடயத்தைத் தொடர்ந்து சொல்லி வருகின்றார்.

உண்மையாகவே சுமந்திரனைப் பொறுத்தவரை இந்த 13ஆவது திருத் தத்தை நடைமுறைப்படுத்தும் ஆவ ணத்தை கொடுப்பதற்கு விரும்பவில்லை என்பது யாழ்ப்பாணத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தெளிவாகக் கூறி இருக்கின் றார். ஆனால், சம்பந்தன் உட்பட ஏனைய கட்சிகள் அனைத்தும் இப்போது 13ஜ நடைமுறைப்படுத்தும்படி கூறும் போது வ டிவே லு பா ணி யி ல் நாங்கள் மாற்றி விட்டோம் என்று சுமந்திரன் கூற ஆரம்பித்திருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

உண்மை என்னவென்றால் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும்படி நாங்கள் கூறிய கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. அந்த ஆவணத்தில் 13ஆவது திருத்த வரலாற்றை சேர்த்திருக்கலாம். அந்த வரலாற்றைச் சேர்த்தால் கூட கோரிக்கை 13ஆவது திருத் தத்தை நடைமுறைப் படுத்துவதுதான்.

ஆகவே, நாங்கள் இந்திய அரசிடம் தமிழ் மக்களின் உரிமைகளை முழுமையாகப் பெற்றுக்கொடுப்பதற்கான வழி முறையைப் பற்றிச் சிந்தித்துச் செயற்ப டும்போது அதனைக் கேள்விக் குள்ளாக்கக்கூடிய வகையில் வடிவேலு பாணியில் சுமந்திரன் தொடர்ந்து செயற்படுவது என்பது நல்ல விடயமல்ல.

தன்னை ஒரு புத்திஜீவியாகவும் அனைத்தும் தெரிந்தவனாகவும் கூறிக் கொண்டு இவ்வாறான கருத்துக்களை கூறுவதை கைவிட்டு செயற்பட வேண்டும்’ என்றார்.

Posted in Uncategorized

தேர்தல் அட்டவணையை சட்டமாக்குங்கள் – பெப்ரல் அமைப்பு

தேர்தல் கால அட்டவணையை நாட்டின் சட்டப்புத்தகத்திற்குள் உள்ளவாங்கப்பட வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கோரிக்கை விடுத்துள்ளார்.

தேர்தல் அட்டவணையை சட்டப்புத்தகத்திற்கு மாற்றுவதன் மூலம் தேர்தல்கள் பிற்போடப்படுவதை தடுக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல்களை உரிய காலத்தில் நடாத்தி முடிப்பது அரசாங்கத்தின் கடப்பாடு எனவும் அந்தக் கடப்பாடு அரசாங்க்திற்கு காணப்படுமாயின் குறிப்பிட்ட தினத்தில் தேர்தலை நடத்தும் படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில்

நாட்டில் நிலவும் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய சுமார் 1,700 கொள்கலன்கள் கொழும்பு துறைமுகத்தில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தேங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியினால், வணிக வங்கிகளுக்கு டொலர்களை விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும், இதுவரையில் உரிய தீர்வு கிடைக்கப்பெறவில்லை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கும் அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க முடியாத காரணத்தினால் நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், எதிர்வரும் 18 ஆம் திகதி வர்த்தக அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுவரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பன இதில் உள்ளடங்குகின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளையும் இது பாதிக்கும் என இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பலசரக்கு கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

Posted in Uncategorized

முன்னாள் ஜனாதிபதி, பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் தமது வாழ்க்கைத் துணையை இழந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து. முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விசாரணைகளை தாமதிக்காமல் முன்னெடுக்குமாறும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரியுள்ளார்.

தாக்குதலை தவிர்ப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீவிரவாதிகளுக்கு எதிராக கனிவான நிலைப்பாட்டை பிரதமர் கொண்டிருந்தார் என அந்த ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் சில பொலிஸ் அதிகாரிகளின் செயற்பாடுகள் தொடர்பிலும் அந்த அறிக்கையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியேற்படுத்த வேண்டும் என நாம் கோருகின்றோம்.

தற்கொலை செய்து கொண்ட நபர், தமக்கு நீதி கிடைக்காததன் காரணமாக கடும் மன அழுத்தத்துக்கு ஆளாகி, தமது பிள்ளைகளையும் தனித்துவிட்டு அவ்வாறானதொரு முடிவை மேற்கொண்டுள்ளதாக பேராயர் மேலும் குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு – விசாரணை இடை நிறுத்தம்

சிங்கள வாக்குமூலத்தில் கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு: விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு தினத்தில் நடத்த முடிவாகியுள்ளது.

“கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் மீது எப்படி ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை முன்னெடுத்தீர்கள்” என்று விசாரிக்கும் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மனோ அழைக்கப்பட்டார். கடந்த வருட இறுதியில், மனோ கணேசனின் வசிப்பிட வலய காவல் நிலையம் மூலமாக அவருக்கு சிங்கள மொழியில் அழைப்பாணை அனுப்பட்ட போது, தமிழில் அனுப்பும்படி அந்த அழைப்பாணையை அவர் திருப்பி அனுப்பி இருந்தார். தற்போது தமிழ் மொழிபெயர்ப்புடன் அழைப்பாணை அனுப்பபட்டபோது, அதை ஏற்றுக்கொண்டு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவுக்கு நேற்று காலை சென்ற போது மீண்டும் ஒரு சட்டசிக்கலை அவர் சுட்டிக்காட்டி கையெழுத்திட மனோ கணேசன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

“நாட்டின் மொழிச்சட்டம், மொழிக்கொள்கை ஆகியவற்றுக்கும் பொறுப்பு கூறும் அமைச்சரவை அமைச்சராக நான் இருந்தேன். என்னிடமே மொழிச்சட்ட மீறலா? விசாரணை இடைநடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவான போது, “நாங்கள் மீண்டும் மிகப்பலமாக வெகு சீக்கிரம் வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்றும் கூறிவிட்டு வந்தேன்.

இலங்கை அரசியலமைப்பில் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவில், ஒவ்வொரு பிரஜைக்கும் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய ஏதாவது ஒரு தேசிய மொழிகளில் தாம் விரும்பியவாறு வாய்மொழி மூலமாகவும், எழுத்து மூலமாகவும் பதில்களை பெற உரிமை இருக்கிறது. நான் இன்று விசாரணைகளுக்கு சென்ற போது, பாராளுமன்ற வாய்மொழி உரை பெயர்ப்பாளரை அங்கே அழைத்து வைத்திருந்தார்கள்.

நான் சிங்கள அழைப்பாணையை திருப்பி அனுப்பி இருந்தமையால் அதை செய்து இருந்தார்கள். அவர் எனக்கும், விசாரணையாளர்களுக்கும் இடையில் உரை பெயர்ப்பு செய்தார். எனது வாக்குமூலம் சிங்கள மொழியில் தட்டச்சு செய்யப்பட்டது.

ஆனால், விசாரணையின் இடையில், “எனது வாக்குமூலத்தில் நான் கையெழுத்திட வேண்டுமா?” எனக்கேட்டேன். “ஆம்” என்றார்கள். “அப்படியானால், தமிழில் ஆவணத்தை தயார் செய்யுங்கள்” என்றேன். அந்த இடத்தில் தமிழில் கணிப்பொறி தட்டச்சு செய்ய அலுவலர் அங்கே இல்லை என்பதால், விசாரணையை இடை நிறுத்துவிட்டு வெளியேறினேன்.

“குற்றவியல் கோவையின் படி, சிங்களத்தில் ஆவணம் தயார் செய்ய முடியும், அதை உரை பெயர்ப்பாளர் எனக்கு எடுத்து சொன்னால் போதும்” என எனக்கு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் வகுப்பு எடுக்க முற்பட்டார். அவரிடம் குற்றவியல் சட்டம் உட்பட எந்தவொரு சட்டமும், நாட்டின் அரசமைப்புக்கு கீழேயே கணிக்கப்பட வேண்டும். உரைபெயர்ப்பு வேறு, மொழிபெயர்ப்பு வேறு. இரண்டையும் எனது தாய்மொழியில் பெற எனக்கு நாட்டின் அரசமைப்பின் 4ம் அத்தியாயம் 22 ம் பிரிவின்படி உரிமை உள்ளது என்றும் நான் கூறியவுடன் விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அமைதியானது.

மேலும் இந்த விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவே, இதை நியமித்தவரை போன்று நகைச்சுவையாக இருக்கிறது. உலகில் எங்கும் ஊழல் திருட்டைதான் விசாரிப்பார்கள். அதில் ஒரு தர்க்க நியாயம் உண்டு. இங்கே “ஊழல் திருட்டை ஏன் எப்படி விசாரித்தீர்கள்” என கேட்டு இவர்கள் விசாரிக்கிறார்கள். இது இந்நாட்டிற்கே சிறுமை.

கடந்த அரசுக்கு முந்தைய அரசின் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டு விசாரணைகளை இந்த நாட்டு பொலிஸ் திணைக்களம்தான் முன்னெடுத்து, வழக்குகளை இந்த நாட்டின் சட்டமாதிபர்தான் தொடர்ந்தது. இன்று இதுபோன்ற இன்னொரு விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை நியமித்து, அவற்றை அரசியல் பழிவாங்கல் என சொல்லி, அதே சட்டமாதிபருக்கு வழக்குகளை வாபஸ் வாங்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு, அதன் வழக்குகள் வாபஸ் வாங்கப்பட்டு, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வெளியே வந்து விட்டார்கள்.

இப்போது, அது போதாது என்று, “உங்கள் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்து எப்படி ஊழல் திருட்டை விசாரித்தீர்கள்” என இவர்கள் என்னை கேட்கிறார்கள். “நாம் சீக்கிரம் மீண்டும் மிகப்பலமாக வரப்போகிறோம். ஆகவே இந்த விசாரணை கோமாளித்தனங்களை எல்லாம் சீக்கிரம் நடத்தி முடியுங்கள்”, என்று இவர்களுக்கு நான் கூறிவிட்டு வந்தேன்” என்றார்

Posted in Uncategorized

சிறிலங்காவின் ஜெனரல்களை பிரித்தானியாவின் உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தின் கீழ் தடைசெய்ய வேண்டிய நேரம்

“ஜொகானஸ்பேர்க்- 2009ம் ஆண்டு நடந்த உள்நாட்டுப்போரின் இறுதிப்பகுதியில் நடந்ததாகச் சொல்லப்படும் போர்க் குற்றங்களுக்குப்  பொறுப்பான கட்டளை வழங்கும் அதிகாரத்திலிருந்த சிறிலங்காவின் ஜெனரல்களை உலகளாவிய மக்னிஸ்கி சட்டத்தைப் பயன்படுத்தி ஜக்கிய இராச்சிய அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என பிரித்தானிய தமிழ் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.” என ITJP தெரிவித்துள்ளது.

ITJP  வெளியிட்டுள்ள அறிக்கையை முழுமையாக காண கீழே உள்ள லிங்கை அழுத்தவும்,

Human-Rights-2018-Tamil

இலங்கைக்கு இந்தியா 900 மில்லியன் டொலர்களை வழங்கியது!

இலங்கைக்கு இந்தியா 900 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பை வலுப்படுத்த இந்தியா 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தது.

அந்த தொகையுடன் மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கு கிழக்கு இணைவதை அனுமதிக்க முடியாது – முஸ்லிம் தரப்பில் இருந்து எதிர்ப்பு

முஸ்லிம்கள் தனியான இனம் என்பதை அடையாளப்படுத்தும் வரை வடக்கு கிழக்கு மாகாணம் இணைவதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மௌலவி. முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் இன்றைய தினம் (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே  அவர் இவ்வாறு கூறியிருந்தார்

“ எமது கட்சியின் நிலைப்பாடானது வடகிழக்கில் வாழ்கின்ற தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ வேண்டும் என்பதாகும். அதே வேளை சிங்கள மக்களையும் நாங்கள் ஓரங்கட்டிவிட முடியாது என தெரிவித்திருந்தார்.

முஸ்லிம் மக்கள் இந்த நாட்டில் வாழும் தமிழ் சிங்கள மக்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றோம். ஆனால் வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் பேசும் கட்சிகள் இனவாத முறையில் செயற்பட்டும், பின்னர் தமிழ் முஸ்லிம் உறவுகளை சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்தி வருகின்றது.

இதற்குத் தான் படிப்பது இராமாயணம் இடிப்பது சிவன்கோவில் என்பதை உதாரணமாகக் கூறுவார்கள். அவர்கள் ஒற்றுமையை இந்தச் சமூகத்தில் வலியுறுத்தி பின்னர் குழப்புவார்கள். இதில் தமிழர் முதலமைச்சரா அல்லது முஸ்லிம் முதலமைச்சரா என தமிழ் பேசும் மக்களிடையே உசுப்பேத்தி அரசியல் செய்வதையே நாம் காண்கின்றோம்.

எனவே இவ்வாறான கட்சிகளை மக்கள் நிராகரித்து உண்மைகளை பேசுகின்ற கட்சிகளை ஆதரிக்க முன்வர வேண்டும்.

கல்முனையில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றாக வாழ முடியாது வேறு வேறு பிரதேச செயலகத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் வடக்கு – கிழக்கை இணையுங்கள் எனக் கூறுவது கீழ்த்தனமான அரசியல் செயற்பாடு ஆகும்

ஆகவே வடக்கு கிழக்கில் உள்ள இவ்விரு இனங்களும் பேச வேண்டும். பிரச்சினைகளை அடையாம் கண்டு அவற்றை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized