இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தொடர்பில் தமது பிரஜைகளுக்கு கனடா எச்சரிக்கை

இலங்கையில் வீழ்ச்சி கண்டுவரும் பொருளாதார நிலைமை தொடர்பில் கனடா அந்நாட்டு பிரஜைகளை எச்சரித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி, அடிப்படை தேவைகளின் பற்றாக்குறையை நோக்கி நகர்வதாக கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மருந்துப்பொருட்கள், எரிபொருள் மற்றும் உணவு என்பன இதில் உள்ளடங்குகின்றன.

பொருளாதார ஸ்திரத்தன்மை, சுகாதாரம் உள்ளிட்ட பொதுச்சேவைகளையும் இது பாதிக்கும் என இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளுக்கு அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது.

எனவே, உணவு, நீர் மற்றும் எரிபொருளை கையிருப்பில் வைத்துக்கொள்ளுமாறு அவர்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன் பலசரக்கு கடைகள், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களிலும் நீண்ட வரிசைகளில் நிற்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை தொடர்பிலான தகவல்களை உள்நாட்டு ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொள்ளுமாறும் இலங்கையிலுள்ள கனேடிய பிரஜைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.