யாழ். காங்கேசன்துறை குமார கோவில் பிள்ளையார் சிலை மாயம்

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை குமார கோவிலில் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆலய வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை குமார கோவில் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த காலப்பகுதியில் கோயில் வளாகத்தினுள் விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அப்பகுதி மக்களிடம் கையளிக்கப்பட்டதை அடுத்து , குமார கோவில் புனரமைக்கப்பட்டு , ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 09ஆம் திகதி இரவு ஆலயத்தில் இருந்த விநாயகர் சிலை இருப்பிடத்தில் இருந்து பெயர்த்து எடுக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க நகர்வுகளில் இலங்கையின் முயற்சிகள் குறித்து அமெரிக்கா கேள்வி

இலங்கையில் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை இலக்காக கொண்டு இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள் மற்றும் முன்னகர்வுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் இரு தரப்பு நட்புறவு வேலைத்திட்டங்கள் குறித்தும் அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க தெளிவுபடுத்தியுள்ளர்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்கவிற்கும் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த வியாழக்கிழமை, இணையவழி கலந்துரையாடலாக இந்த உரையாடல் இடம்பெற்றிருந்த நிலையில், இலங்கையின் நல்லிணக்க பொறிமுறை, மற்றும் மனித உரிமைகள் தொடர்பிலான முன்னகர்வுகள் குறித்து இலங்கையிடம் கேட்டறியப்பட்டுள்ளது.

யுத்தத்திற்கு பின்னரான இலங்கையின் தேசிய நல்லிணக்க வேலைத்திட்டங்கள், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் பொறிமுறையின் முன்னகர்வுகள் குறித்தும், நல்லிணக்கத்தை இலக்காக கொண்ட இலங்கையின் தற்போதைய நகர்வுகளின் முன்னேற்றம் மற்றும் அதற்கான முயற்சிகள் குறித்து உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக் கேட்டறிந்துகொண்டுள்ளார்.

அதேபோல் நாட்டின் மனித உரிமைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் இதன்போது உலகளாவிய குற்றவியல் நீதி அலுவலக சிரேஷ்ட உறுப்பினர் தூதுவர் மிட்செல் ஜி கொஷக்கும் அவரது குழுவினரும் கவனம் செலுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் புதிய வேலைத்திட்டங்கள், தற்போதுள்ள கொவிட் நெருக்கடி நிலைமைகளில் அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் நிதி நெருக்கடி நிலைமைகள் குறித்து இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ள அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவர் மஹிந்த சமரசிங்க, நல்லிணக்கத்தையும் மனித உரிமைகளை பலப்படுத்தும் இலங்கையின் தற்போதைய முயற்சிகளின் முன்னேற்றகரமான சில வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகவும், புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள், பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் குறித்தும் தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன் எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கமான நட்புறவை முன்னெடுத்து செல்வது குறித்தும் அவர் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறு கிராமத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு பின்னர் சட்டவிரோத கருக்கலைப்புக்கு முயற்சித்தபோது கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூங்கிலாறு கிராம மக்களால் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மூங்கிலாறு கிராமத்தில் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி குறித்த சிறுமி காணாமல்போனதாக புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயாரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இதற்கு அமைவாக நான்கு நாட்கள் முன்னெடுக்கப்பட்ட தேடுதலின் பின்னர், கைவிடப்பட்ட வளவு ஒன்றில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

குறித்த சடலத்திற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் அறிக்கை நேற்றையதினம் வெளியாகியிருந்தது. பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக இறப்பு சம்பவித்துள்ளதோடு, இரண்டுமாதம் சிறுமி கருவுற்றும் இருந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி கருத்தரித்த பின்னர் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்புக்கு முயற்சித்து அதிக இரத்த போக்கு ஏற்பட்டு சிறுமி உயிரிழந்திருக்கலாம் என்ற கோணத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கோரியும் சிறுவர் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த கோரியும் உயிரிழந்த சிறுமியின் கிராமமான மூங்கிலாறு கிராமத்தின் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் அரசியல் செயற்பாட்டாளர்கள் என பலரும் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

மூங்கிலாறு சந்தியிலிருந்து உடையார்கட்டு மகா வித்தியாலயம் வரை பேரணியாக சென்று கறுப்பு கொடிகள் மற்றும் கறுப்பு பட்டிகளை அணிந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

வடக்கு மற்றும் கிழக்கில் சீனாவின் ஆதிக்கத்தை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் – இரா.துரைரெட்ணம்

வடக்கு மற்றும் கிழக்கில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட சீனா முன்னெடுக்கும் செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என பாத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை குழப்புவதற்காகவே சீனாவின் இந்த செயற்பாடு அமைவதாகவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “குறிப்பிட்ட காலமாக யாழ். குடா நாட்டிலும் வடகிழக்கிலும் முன்னெடுக்கப்படும் இராஜதந்திர செயற்பாடுகளின் அடிப்படையில் வடக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துவிட்டது போன்று உள்ளது. வடக்கில் சீனாவின் மேலாதிக்கம் தொடர்ந்து வருகின்றது.

இலங்கை அரசாங்கம் பொருளாதார ரீதியாக வலுவடைவதற்காக யாழ். குடாவில் இந்தியாவுக்கு ஆபத்தாக வரக்கூடிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றதா என்கின்ற சந்தேகம் ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளன.

கடந்தவாரம்கூட சீனாவின் தூதுவர்கள் யாழ். குடாவில் இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கக்கூடிய கேந்திர நிலையத்திற்கு சென்ற விடயம் என்பது இலங்கை ஊடாக இந்தியாவுக்கு செய்தி ஏதும் வழங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இலங்கை அரசாங்கம் அயல்நாடுகளுக்கு அச்சுறுத்தலையும் பாதுகாப்பு நெருக்கடியையும் ஏற்படுத்தக்கூடிய இராஜதந்திர செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வரலாற்று ரீதியாக வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களுக்கு ஒரு இறையான்மையுள்ளது. வடகிழக்கு பூர்வீகமாக தமிழர்கள் வாழும் பிரதேசம். தனியான கலைகலாசார விழுமியங்களை கொண்ட பகுதி. இந்த கலை கலாசார விழுமியங்களுடன் இந்தியா அங்குள்ள தமிழ் நாட்டுடன் உள்ள உறவு, தமிழர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தக்கூடிய செயற்பாடுகள் என பல விடயங்களில் வடகிழக்கு தமிழர்கள் இந்தியா மீது கடந்த காலத்தில் கரிசனை காட்டியுள்ளார்கள், எதிர்காலத்தில் காட்டுவார்கள், காட்டக்கூடிய சூழ்நிலையுள்ளது.

இந்த சூழ்நிலையினை குழப்புவதற்காக சீனாவின் ஆதிக்கத்தை கொண்டுவருவதை இலங்கை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும். அதுவே ஆரோக்கியமான செயற்பாடு.

இலங்கை அரசாங்கம் தனது பொருளாதார நலனுக்காக வடகிழக்கினை சீனாவுக்கு தாரைவார்த்துக்கொடுப்பது என்பதும் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் அயல்நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடியவாறும் இலங்கை அரசாங்கம் செயற்படுவதை வன்மையாக கண்டிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

அடுத்த ஆண்டுகளில் பாரிய கடன் நெருக்கடியைச் சந்திக்கப்போகும் இலங்கை!

புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ளவுள்ளதாகவும், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் என சர்வதேச தர மதிப்பீட்டு நிறுவனமான ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ (Fitch Ratings) நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்தோடு இலங்கையை தமது தரவரிசையிலிருந்து ஒரு படி குறைத்துள்ளதாகவும், அதற்கமைய ‘சி.சி.சி’ தரப்படுத்தலில் இருந்து ‘சி.சி’ தரப்படுத்தலுக்கு இலங்கை பின்தள்ளப்படுவதாகவும் அறிவித்துள்ளது. கொவிட் -19 வைரஸ் பரவல் மூலமாக தாக்கங்களின் பின்னர் இலங்கையின் அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் இலங்கை இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் 1.5 வீத வீழ்ச்சியை அறிவித்துள்ள நிலையில், தற்போது குறித்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையை தரவரிசையில் பின்தள்ள அவர்கள் கூறியுள்ள காரணமானது, அந்நிய செலாவணியில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, உணவு, எரிபொருள் மற்றும் மருந்து ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு காணப்படுவதாகவும், அதேபோல் இலங்கையின் அன்னிய செலாவணி கையிருப்பானது, இலங்கை மத்திய வங்கியின் அதிக இறக்குமதி கட்டணம் மற்றும் வெளிநாட்டு நாணய தலையீடு ஆகியவற்றின் காரணமாக தமது இறுதி மதிப்பீட்டிற்கு அமைய எதிர்பார்த்ததை விடவும் மிக மோசமாக குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், அந்நியச் செலாவணி கையிருப்பு ஆகஸ்ட் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் குறைவடைந்துள்ளதுடன், நவம்பர் மாதத்தின் இறுதியில் இது 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைவடைந்துள்ளது.

ஒரு மாதத்திற்கும் குறைவான தற்போதைய வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கு (CXP) சமமானதாக காணப்படுகின்றது எனவும், ஒப்பீட்டளவில் இது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களினால் அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சியைக் வெளிப்படுத்தியுள்ளது என்பதையும் ‘ஃப்ட்ச் ரேட்டிங்’ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், புதிய வெளிநாட்டு உதவிகள் மற்றும் கடன்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையில் இலங்கை உள்ள காரணத்தினால், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் இலங்கை அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதில் பாரிய நெருக்கடி நிலைமை இருக்கும் என்பதையும் தாம் அவதானித்துள்ளதாக குறித்த நிறுவனம் கூறியுள்ளதுடன், தற்போதுள்ள நிலைமையில் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு கடந்த நவம்பர் மாத இறுதியில் 1.58 பில்லியன் டொலர் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் 500 மில்லியன் டொலரையும், 2022ம் ஆண்டு ஜுலை மாதம் 1.0 பில்லியன் டொலரையும் மீள செலுத்த வேண்டியுள்ள காரணத்தினால் இலங்கைக்கு இது பாரிய சவாலை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், 2022ம் ஆண்டு முதல் 2026ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் கடன்கள் மற்றும் கடனுக்கான வட்டியென வெளிநாட்டு மொத்த நாணயக்கடனாக 26 பில்லியன் டொலர்களை இலங்கை அரசாங்கம் செலுத்த வேண்டி வரும் எனவும் அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்திய நிவாரணப்பொதி, கட்டார் மத்திய வங்கியுடனான பரஸ்பர பரிமாற்றல் வசதி அடிப்படையிலான கடன், பிராந்திய ஒத்துழைப்புகள் மூலமாக நாணய பரிமாற்றல், சீன வங்கியின் கடன் வசதிகளை பெற்றுக்கொண்டாலும் கூட 2022 ஆம் ஆண்டில் முழுமையான கடன்களை அடைக்க போதுமான வேலைத்திட்டம் இல்லாதமை அரசாங்கத்திற்கு சவாலாக இருக்கும் என தாம் கருதுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல் இலங்கை தனது தேசிய வருவாயை கூட்டிக்கொள்ளும் துறைகளிலும் பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்துள்ளத்து. குறிப்பாக கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு பின்னர் இலங்கையின் பிரதான வருவாய் துறையான சுற்றுலாத்துறை போன்றன வீழ்ச்சி கண்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் பற்றாக்குறை 5.7 வீதமாக காணப்பட்ட நிலையில், 2022 ஆம் ஆண்டில் இது 2.1 வீதத்தால் மேலும் குறைவடைவதுடன், 2022 ஆம் ஆண்டில் 4 வீதமாக பற்றாக்குறை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளது.

Posted in Uncategorized

அரசாங்கம் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் – சிவாஜிலிங்கம் வலியுறுத்து

போர் முடிந்து 13ஆவது ஆண்டில் காலடி வைக்கும்போதாவது அரசு இந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பது தான் நாங்கள் ஆட்சியாளர்களுக்கு சொல்லக்கூடிய ஒன்று என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

கீரிமலையில் இன்று காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

நில அளவைத் திணைக்களம் கீரிமலையில், ஜனாதிபதி மாளிகை உள்ளடங்கிய 34 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு பொது மக்களுக்கு அறிவித்து தற்போது அதனை அளப்பதற்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் மக்களும் மக்கள் பிரதிநிதிகளான நாங்களும், கட்சிகளின் தலைவர்களும் மற்றும் கட்சிகளின் தொண்டர்களும் இணைந்து அதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளோம்.

அரசாங்கம் தொடர்ந்தும் இவ்வாறு செயற்பட்டு வருகின்றது. இப்போது சட்டத்தின் புதிய பிரிவுகளை பாவித்து காணிகளை சுவீகரிப்பு செய்வதற்கு முயல்கின்றது.

சீனாவின் வருகை போன்றவற்றிலே இங்கு பல காணிகள் 600 ஏக்கர்களாக பிரித்து சீனாவின் கடற்படைகளுக்கு கொடுக்க போகின்றீர்களா? என இன்று நேற்று அல்ல நான்கு ஆண்டுகளாக நாங்கள் கேட்கின்றோம்.

வட்டுவாகலில் கடற்படை முகாம் அமைந்துள்ள 616 ஏக்கர் காணிகளை அளக்க முடிவு எடுத்தபோது நாங்கள் அதற்கு தடையாக இருந்ததால் எங்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நில அளவைத் திணைக்களத்தின் வாகனத்தை சேதப்படுத்தினோம் என்றும், தடுத்து நிறுத்தினோம் என்றும், சட்டவிரோதமாக கூடினோம் என்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே தொடர்ந்து நாங்கள் இதனை தடுத்து கொண்டிருக்க முடியாது. அரசாங்கம் இதற்கு சரியானதொரு முடிவை எடுக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தனது காணியை விற்பதற்கு இங்கு வந்து போனதாக தெரியவருகின்றது.

இதன் அடிப்படையில் பார்க்கும்போது நீங்கள் உங்களது சொந்த காணிகளை பற்றியோ மக்களது பிரச்சினைகளை பற்றியோ கருத்தில் எடுக்கவில்லை எனத்தான் தோன்றுகிறது.

ஆகவே அரசு இந்தக் காணிகளை விடுவித்து மக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே நாட்டுக்கு எதிர்காலம் உண்டு!

“தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு கண்டால் மட்டுமே இந்நாட்டுக்கு எதிர்காலம் உண்டு. இன ஐக்கியம் இல்லாவிட்டால் ஒருபோதும் நாட்டை அபிவிருத்தி நோக்கி அழைத்துச்செல்ல முடியாது.”

– இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்திக்கொள்வதற்கு தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழ், முஸ்லிம் மக்களுடன் நாம் எவ்வளவு சகோதரத்துவத்துடன் வாழ்கின்றோம் என்பதில்தான் இந்த நாட்டின் வளர்ச்சி தங்கியுள்ளது. இன ஐக்கியம் இல்லாவிட்டால் எந்தவொரு நாட்டையும் கட்டியெழுப்ப முடியாது. 1956 இல் தனிச்சிங்கள மொழி சட்டம் கொண்டுவரப்பட்டு எமது நாட்டில் அழிவுக்கான பாதை ஆரம்பித்துவைக்கப்பட்டது. ஒரு மொழியென்றால் இரு நாடுகள், இரு மொழிகளென்றால் ஒரு நாடு என அன்றே கொல்வின் ஆர்.டி.சில்வா எடுத்துரைத்தார். அவர் கூறியது போன்று இங்கு நடந்தது.

சிங்கப்பூரின் தந்தையென போற்றப்படும் லீகுவான், முதலில் இன ஐக்கியத்தையே கட்டியெழுப்பினார். சிங்கப்பூரில் 75 வீதம் சீனர்கள் வாழ்ந்தாலும் மலேசிய மொழியில் தேசிய கீதம் எழுதப்பட்டது. இந்தியருக்கு வெளிவிவகார அமைச்சு பதவி வழங்கப்பட்டது. இப்படிதான் இனங்களுக்கிடையில் நம்பிக்கையை ஏற்படுத்தி, இன ஐக்கியம் மூலம் சிங்கப்பூரை லீ குவான் கட்டியெழுப்பினார்.

ஆனால், எமது நாட்டில் இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தினர். அதனால்தான் நாடு முன்னேறவில்லை. எனவே, இனியாவது பொது இணக்கப்பாட்டுக்குவந்து பேச்சு நடத்தி, பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்த நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. இதனை நான் 70 முதல் வலியுறுத்தி வருகின்றேன். அதற்காகக் குண்டுத் தாக்குதலும் நடத்தினர். இன்றும் அதையே சொல்கின்றேன்” – என்றார்.

Posted in Uncategorized

அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வைத்தியர்கள் தீர்மானம்!

24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளைய தினம்(திங்கட்கிழமை) மன்னார், திருகோணமலை, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டாலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளின் நடவடிக்கைகள் முன்னெடுக்கடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

43 பேரின் விடுதலையை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 43 பேரை விடுதலை செய்ய கோரி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் அதிகமான விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்ற மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள்  சென்றனர்.

மீனவர்கள்  நேற்று சுமார் 9 மணியளவில் நெடுந்தீவுக்கு தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து பணியியல் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர்  மீன்பிடிக்க சென்ற சக்தி, பிரபு, காளிமுத்து, குமார் உள்ளிட்ட 43 மீனவர்களை படகுடன்  கைது செய்து யாழ்ப்பாண மாவட்ட மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் மீனவர்களுக்கு பரிசோதனை செய்து யாழ்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்படவுள்ளனர்.

இதனை கண்டித்து இன்று ராமேஸ்வரம் விசை படகு மீனவர்கள் மீன் பிடி துறைமுகத்தில் உள்ள  மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கும் அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்தில் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள  43 ராமேஸ்வரம் மீனவர்களையும் படகுடன் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் செய்ய முடிவு செய்தனர்.

மேலும் ராமேஸ்வரம் மத்திய பேருந்து நிலையம் எதிரே சிறைபிடித்து செல்லப்பட்ட மீனவ குடும்பத்தினருடன்  ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

மீனவர்களின் இந்த திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தால் சுமார் 800க்கும் மேற்பட்ட மீன் பிடி விசைப்படகுக் கடற்கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் 50 ஆயிரம் மீனவர்களும் ஒரு இலட்சம் மீன் பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்படாது என்கிறது அரசாங்கம்!

மாகாண சபை தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கெலிஓயா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.