ரவிகரன், சிவாஜிலிங்கம் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்றைய நாளுக்கு (13) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றால் தவணையிடப்பட்டிருந்தது.

இந் நிலையில் கொவிட் -19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் குறித்த வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு குறித்த வழக்கின் விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக இடம்பெற்ற காணி அபகரிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் 28.02.2018 அன்று முல்லைத்தீவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பின்னர் பிணையில் விடுதலையாகியிருந்தார்.

இதேவேளை, வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

அதனைத்தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செழியன், முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகியோரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ்வாறாக நால்வர் மீதும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணைகள் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவருகின்றது.

இந்நிலையில், இன்றைய நாளுக்காக தவணையிடப்பட்டிருந்த குறித்த வழக்கின் விசாரணைகள் தற்போதய கொவிட் -19 அசாதாரண நிலையினைக் கருத்தில் கொண்டு இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதிக்கு இந்த வழக்கின் விசாரணைகள் தவணை இடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கம் FAIL என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர்!

அரசாங்கம் பெயில் (FAIL) என்பதை மக்களும் ஏற்றுக் கொண்டு விட்டனர். எனவே, மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது´ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ´சீனா, இந்தியா மற்றும் அமெரிக்காவின் அழுத்தங்களால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் வரக்கூடும். முறையற்ற அரச முகாமைத்துவம் காரணமாகவே இந்நிலைமை ஏற்படும். நாட்டின் நிர்வாகம் இன்று ஸ்தம்பிதமடைந்துள்ளது. இந்நிலைமையை நான் அன்றே சுட்டிக்காட்டினேன். பிரதேச சபையில்கூட அங்கம் வகிக்காத ஒருவரின் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என வலியுறுத்தியே கட்சியில் இருந்து வெளியேறினேன்.

மாகாண சபைத் தேர்தல் தற்போது அவசியமில்லை. அரசாங்கம் அதனை நடத்தினால் தேர்தலில் போட்டியிடவேண்டிய நிலை எதிர்க்கட்சிகளுக்கு ஏற்படும். அவ்வாறு நடத்தினால் அரசாங்கத்துக்கு வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை தான் ஏற்படும். பொருட்களின் விலை உயர்வு உட்பட எல்லா துறைகளிலும் பிரச்சினை. இந்த அரசாங்கத்தால் முடியாது என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆக அரசாங்கம் ´பெயில்´ என்பது உறுதியாகியுள்ளது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டுக்கு தேவையில்லை´ என்றார்.

Posted in Uncategorized

ஜனாதிபதியை சந்தித்தார் சுப்ரமணியன் சுவாமி

பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட அரசியல்வாதியும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (13) முற்பகல் இடம்பெற்றது.

பல அமைச்சுப் பொறுப்புக்களை வகித்திருக்கும் சுப்ரமணியன் சுவாமி , இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான நட்புறவுக்காக முன்னிலை வகித்திருப்பதோடு, இலங்கையில் நிலவிய பயங்கரவாத நடவடிக்கைகளைத் தோற்கடிப்பதற்கான இந்தியா ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியவராவார்.

பொருளாதார நிபுணரும் புள்ளியியல் வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி , பாதுகாப்புச் செயலாளராக ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில் நடத்தப்பட்ட மாநாடுகளின் போது, விரிவுரையாளராகவும் கலந்துகொண்டிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமி இம்முறை இலங்கை விஜயத்தின் போதும் சந்திக்கக் கிடைத்தமையிட்டு, ஜனாதிபதி மகிழ்ச்சி தெரிவித்தார்.

கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வாபஸ்

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று (13) அறிவித்தார்.

2008ஆம் ஆண்டு தமிழ் இளைஞர்கள் உட்பட 11 பேர் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் பிரதிவாதியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு எதிராக அதிகுற்றச் சாட்டுப் பத்திரம் பகிரப்பட்டது.

கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கு சட்டமா அதிபர் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு கோரி, கரன்னாகொடவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக கணேபொல ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, இந்த வழக்கில் பிரதிவாதியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரான முன்னாள் கடற்படை தளபதிக்கு எதிரான அதி குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் வாபஸ்பெற தீர்மானித்துள்ளதாக. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரச வழக்குரைஞர் அவந்தி பெரேரா மன்றுக்குத் தெரியப்படுத்தினார்.

இது தொடர்பாக மேல் நீதிமன்றத்துக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிரேஷ்ட அரச வழக்குரைஞர், நீதிமன்றத்தில் தெரிவித்தையடுத்து,
இந்த மனு மீதான மேலதிக பரிசீலனைக்கான தினமாக நவம்பர் 03 ஆம் திகதியை மேல்முறையீட்டு நீதிமன்றம் நிர்ணயித்தது.

Posted in Uncategorized

இந்திய இராணுவ தளபதி பிரதமருடன் சந்திப்பு

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நராவனே அவர்கள் இன்று (13) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தார்.

இருநாட்டு இராணுவத்தினருக்கும் இடையே சிறந்த உறவு காணப்படுவதாக சந்திப்பின் ஆரம்பத்திலேயே ஜெனரல் நராவனே பிரதமரிடம் குறிப்பிட்டார்.

நேர்மறையான இந்த தொடர்பானது, இருநாட்டு மக்கள் மற்றும் அனைத்து மட்டத்திலுமான இருதரப்பு உறவை உறுதிபடுத்துவதற்கு உதவியுள்ளதாகவும் தெரிவித்தார்.

உயர் பயிற்சிகளை வழங்கல் உள்ளிட்ட இந்திய இராணுவம் மிக நீண்டகாலமாக இலங்கைக்கு வழங்கிவரும் பரஸ்பர ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராட்டு தெரிவித்தார்.

இவ்விஜயத்தின் போது ஜெனரல் நராவனே அனுராதபுரம் திசாவௌவில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சேவை செயலணி பயிற்சி பாடசாலைக்கு ஓட்டுனர் மற்றும் துப்பாக்கிச் சுடல் பயிற்சிகளுக்காக பயன்படுத்தக்கூடிய மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் கௌரவ பிரதமர் மத்தியில் கருத்து தெரிவித்த ஜெனரல் நராவனே, எதிர்காலத்தில் விசேடமாக பயிற்சி துறையில் தொழில்நுட்பம் என்பது பெரும் பங்குவகிக்கும் என நம்பிக்கை வெளியிட்டார்.

நிலையான இராணுவத்தை பேணுவதற்கான செலவை கருத்திற் கொள்ளும் போது மாதிரி தொழில்நுட்ப பயிற்சி உபகரணத் தொகுதிகளின் மூலம் பயனுள்ள செயற்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள முடியும் என ஜெனரல் நராவனே சுட்டிக்காட்டினார்.

தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் தொடர்பில் பிராந்திய மட்டத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. அத்துடன் நாட்டிற்காக சேவையாற்றிய பின்னர் படைவீரர்களை கண்காணித்து பராமரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

Posted in Uncategorized

முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர்.

‘கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் ஆறு மாத காலமளவில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு இந்தியன் இழுவைப்படகுகளின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரமளவில், இந்திய இழுவைப் படகுகள் வருகை தருவதுடன், எமது மீனவர்களின் வலைகளும் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்படுகின்றன’ எனவும், அவர்கள் சாடினர்.

‘கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர். தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் குறித்து தம்மோடு கலந்துரையாடுவதுமில்லை, இங்கு வருவதுமில்லை’ எனவும், மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

டக்ளஸ் தேவாநந்தா கடற்றொழில் அமைச்சு பொறுப்பை ஏற்ற பின்னரே, இந்திய மீனவர்களின் வருகை  அதிகரித்துள்ளதுடன், கடற்படையினரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை’ எனவும், மீனவர்கள் சாடினர்.

Posted in Uncategorized

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் – ரெலோ வலியுறுத்தல்

13ஆவது திருத்தத்தை முழுதாக நிறைவேற்றியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ( ரெலோ) வலியுறுத்தியுள்ளதுடன், தமிழ் தேசியக் கட்சிகள் ஒருமித்து கோருவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மாகாணசபைத் தேர்தல் எப்பொழுது நடத்தப்படுவதாக இருந்தாலும் அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் முற்றுமுழுதாக நிறைவேற்ற பட வேண்டும். அதன்பின்னரே மாகாண சபை தேர்தல்கள் நடத்துவது அர்த்தமுள்ளதாக அமையும்.

நடப்பிலிருக்கும் 13வது திருத்தச் சட்டம் உலக்கை தேய்ந்து உளிப்பிடி ஆன கதையாக இருக்கிறது. கடந்த காலங்களில் மாகாணசபையின் பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.

13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாணசபை எங்களுடைய அரசியல் தீர்வாக நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் இருக்கக்கூடிய அரசியல் அதிகாரங்களை இழப்பது என்பது சாணக்கியமானதல்ல.

மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் அதிகாரங்கள் பறிக்கப்பட்ட ஒரு மாகாண சபை முறைமையை நாங்கள் ஏற்பதா அல்லது முற்றுமுழுதாக 13ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்ட மாகாணசபையை ஏற்பதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதற்கான சரியான நிலைப்பாட்டினை தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் எட்ட வேண்டியது மாத்திரமல்ல வலியுறுத்த வேண்டியதும் கட்டாயமானதாகும்.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர் தமிழர் அரசியல் தீர்வில் இந்தியாவின் நிலைப்பாடு சம்பந்தமான தீர்மானமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். 13ஆவது திருத்தச்சட்டத்தை முற்றுமுழுதாக நடைமுறைப்படுத்துவது, அதன் அடிப்படையிலான மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவது, அந்தக் கோரிக்கையை தமிழ் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நின்று கோருவது என்பனவே அவை. இதனூடாக இதை தாண்டிய அரசியல் தீர்வை தமிழ் மக்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்தியா தொடர்ந்தும் இதை வலியுறுத்தி வந்தாலும் தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கோரவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை தமிழர் தரப்பு சரியாகப் புரிந்து கொண்டதோ இல்லையோ இலங்கை அரசு தந்திரமாக கையாள முற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 13-வது திருத்தத்தினை நடைமுறைப்படுத்தி மாகாண சபைகளின் சுயாதீனத்தை உறுதிப்படுத்த அரசியல் யாப்பில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் பற்றிய நீதி மன்ற தீர்ப்புகளும் தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளும் உள்ளன.

தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் வியூகங்களை வகுப்பதற்கு முன்னர், தற்போது அரசியல் அமைப்பில் இருக்கும் குறைந்தபட்ச அதிகாரப்பகிர்வை அர்த்தமுள்ளதாக ஆக்குவதற்கு தமிழர் தரப்பு ஒருமித்த கோரிக்கையை சம்பந்தப்பட்ட தரப்புகளான இந்திய அரசிடமும் இலங்கை அரசிடமும் முன்வைக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது.

இதை நாம் தொடர்ந்தும் பல காலமாக வலியுறுத்தி வந்துள்ளோம். இன்று வரலாறு அந்தப் புள்ளியில் தமிழினத்தை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. விமர்சனங்களை கடந்து ஆக்கபூர்வமாக ஒருமித்த நிலைப்பாட்டில் செயலாற்ற தமிழ் தேசிய கட்சிகளை கோருகிறோம்.

Posted in Uncategorized

இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கு அமைச்சரவைஅனுமதி

இலங்கையில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இணையதள பாதுகாப்பு சட்டத்தை வகுப்பதற்கான சட்டமூலமொன்றைத்தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் சமர்ப்பித்த யோசனைக்கு அமைய இரண்டுசட்டமூலங்களைத் தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முப்படையினர், பொலிஸ் மற்றும் ஏனைய பிரதிநிதித்துவ நிறுவனங்கள் தற்போது தத்தமது நிறுவன மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளஇணையதள பாதுகாப்பு அலகின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை மேலும் வினைத்திறனாக மேற்கொள்வதற்கு இயலுமானவகையில் தேவையான ஏற்பாடுகளை உள்வாங்கி, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்துத் துறைகளையும்உள்ளடக்கியதாக புதிய சட்டமொன்று வகுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, தேசிய பாதுகாப்புக்கு ஏற்புடைய விடயங்கள் தவிர்ந்த தேசிய தகவல்கள் மற்றும் இணையத்தள பாதுகாப்பு மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குபடுத்தல் சட்டம்மொன்றை தயாரிக்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலத்திரனியல் தொடர்பாடல்களின் வளர்ச்சியால் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களுக்காக இணையவெளி மற்றும் இலத்திரனியல் தொடர்பாடல்களைப் பயன்படுத்துவதற்கு தூண்டப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மாகாணசபை உருவான போதிருந்த அதிகாரங்களை வழங்கி தேர்தலை நடாத்த வேண்டும் – ரெலோவின் செயலாளர் நாயகம் ஜனா

எந்தெந்த அதிகாரங்கள் 13 வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுத்தியான நிலைப்பாடு. ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோதாக மாகாணசபையை நடத்துவதென்பது அது முடியாத காரியம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்த பிரச்சனைக்குத் தீர்வுகாணும் முகமாக ஞாயிற்றுக்கிழமை(10) மாலை பெரியகல்லாறுக்கு விஜயம் செய்து அங்குள்ள விளையாட்டுக் கழகங்களுடன் கலந்துரையாடி விட்டு ஊடகங்களுக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்….

மாகாணசபைத் தேர்தல் நடைபெறவேண்டும் என்பத்தில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. மாகாணசபை முறைமை வந்ததோ வடக்கு கிழக்கிலே இருந்த இனப்பிரச்சனைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்கு. இந்த மாகாணசபை முறைமை இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலமாக ஏற்படுத்தப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்திற்கு, உடன்பட்டு இந்த மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. அதுவும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருந்த போராட்டத்தை, தமிழ் மக்களுக்கு இருந்த இனப்பிரச்சனைக்கு, ஒரு தீர்வைக் காண்பதற்கதாக இந்திய அரசினால், இலங்கை அரசு அப்போதிருந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்களின், கையை முறுக்கினத்தான் இந்த இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டுத்தப்பட்டது. என்பது பலருக்குத் தெரியுமோ தெரியாது. அந்த நேரத்தில் களத்திலே நின்ற எனக்குத் தெரியும். அந்த வகையில் மாகாணசபை முறைமை உருவாக்கப்பட்டு மாகாண சபைக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தது. 1990 ஆம் ஆண்டு காலங்களிலே, பிரதேச செயலகங்கள்கூட மாகாண சபைக்குட்பட்டிருந்தது. பிரேமதாஸவின் காலத்தில் பிரதேச செயலகங்கள் விடுவிக்கப்பட்டது. தொடற்சியாக அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. காணி அதிகாரங்கள், பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தன, அவை நடைமுறைப் படுத்தப்படவில்லை.

2015 இற்கு முன்பு மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் ஆட்சியில் திவிநெகும எனும் சட்டத்தின்கீழ் உள்ளுர் அதிகாரங்கள் எல்லாம் பறிக்கப்பட்டிருக்கின்றன. மாகாணசபையை நடாத்த வேண்டிய தேவை இந்த அரசிற்கு இருக்கின்றது. அந்த அளவிற்கு குறிப்பாக இந்தியாவின் அழுத்தம் இருக்கின்றது என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் நாங்கள் வேண்டிக் கொள்வது மாகாணசபை உருவாக்கப்பட்டபோது, எந்த எந்த அதிகாரங்கள் 13 வது திருத்தச் சட்டத்தினூடாக மாகாணசபைக்கு வழங்கப்பட்டதோ, அந்த அதிகாரங்கள் அனைத்தும் வழங்கி மாகாணசபைத் தேர்தலை நடாத்த வேண்டும் என்பது எமது உறுத்தியான நிலைப்பாடு. ஏனெனில் அனைத்து அதிகாரங்களையும் பறித்துவிட்டு வெறும் கோது ஆக மாகாணசபையை நடாத்துவதென்பது அது முடியாத காரியம்.

எனவே 2009இலே போராட்டம் முடிவுக்கு வரும்போது, அப்போதைய ஜனாதிபதி இந்தியாவிடமும், சர்வதேசத்திடமும் 13 வது திருத்தச்சட்டம் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதற்குப் போதாது, 13 பிளஸ், பிளஸ் நான் கொடுப்பேன் என கூறியிருந்தார். தற்போது அந்த 13 பிளஸ், பிளஸாக இல்லாமல் 13 மைனஸ் மைனஸ், மைனஸாக இருக்கின்றது. தமிழ் மக்கள்கூட 13 வது திருத்தச் சட்டத்தை ஒரு நிரந்தரத் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தும் இந்த மாகாண சபை முறைமையை இனப்பிரச்சனைக்கு ஒரு ஆரம்ப புள்ளியாக ஏற்றுக் கொள்வோம் என்ற அடிப்படையில் நாங்கள் ஏற்றிருந்தோம்.

அந்த வகையல் மாகாணசபைக்கு அது உருவாகும் போது உள்ளடக்கப்பட்ட அனைத்து அதிகாரங்களும், உள்ளடக்கப்பட்டு மாகாணசபைத் தேர்தல் மிகவிரைவாக நடக்கவேண்டும். இல்லையேல் ஜனாதிபதியின் பிரதிநிதிகளாகவுள்ள ஆளுனர்கள் குட்டி ஜனாதிபதிகளாக மாகாணத்தை ஆண்டு கொண்டிருப்பது மட்டுமல்லமல், மாகாணத்தின் வளங்களை அழிப்பவர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மாகாணத்தையே கூறுபோட்டு விற்று விடுவார்கள்.

கிழக்கு மாகாணத்தைப் பெறுத்தவரையில் இன விகிதாசார அடிப்படையில் தமிழர் மாத்திரமல்ல எந்த ஒரு இனத்தவரும், தனித்து நின்று அந்த இனம் சார்ந்து முதலமைச்சரைப் பெற்றுக்காள்ள முடியாத நிலைதான் இருக்கின்றது. மாகாணசபைத் தேர்தல் வரும்போது, அதற்குரிய வியூகங்களை அமைத்து ஒரு தமிழ் நபர் ஒருவரை முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

2015 ஆம் ஆண்டிலே இந்த நாட்டிலே நல்லாட்சி என்று சொல்லப்பட்டது, ஆனால் அது நல்லாட்சி அல்ல. அவர்களின் ஆட்சிமாற்றத்தினூடாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பெருமனதுடன் கிழக்கில் ஒரு முஸ்லிம் நபரை முதலமைச்சராக்கியது. அந்த வகையில் நாங்;கள் புதிதாக வியூகங்களை அமைத்து, பேசக்கூடியவர்களுடன்பேசி தமிழ் மக்கன் ஒருவரை கிழக்கில் முதலமைச்சராக கொண்டு வரவேண்டும் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு.

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு வெளிப்படையான உண்மை. அது வெளியுலகிற்குத் தெரிந்து கொண்டிருக்கின்றது. அந்த ஒற்றுமையீனம் நீங்க வேண்டும் என்பது தமிழீழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) எண்ணப்பாடு அதன்பிரகாரம். நாங்கள் சில ஒற்றுமை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கள் தற்போது 3 கட்சிகள்தான் இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தமிழ் தேசியக் பரப்பிலே இருக்கின்ற கட்சிகளையும் ஒற்றுமைப்படுத்தி நாங்கள் ஒரு கூட்டாக 2001 ஆண்டு எவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமாக இருந்ததோ, அவ்வாறு பலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இருக்க வேண்டும் என்பது எமது எண்ணம். இந்நிலையில மாகாணசபை தேர்தல் அறிவிக்கப்படாமலேயே இவர்தான், அல்லது அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என கூறுவது, பக்குவமடைந்த அரசியல்வாதிகள் கூறும் கருத்தல்ல. கூட்டமைப்புக்கென்று தர்மம் உள்ளது. அதற்கு ஒரு ஒருங்கிணைப்புக்குழு உள்ளது. அந்த ஒருங்கிணைப்புக்குழு கூடி கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர்யார் என்பதை தெரிவிக்கும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

 

 

Posted in Uncategorized

பாராளுமன்றம் 21, 22 ஆம் திகதிகளில் கூடவுள்ளது

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கடந்த 07 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடவுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றம் இத்தினங்களில் 10 மணிக்குக் கூடவிருப்பதுடன், முற்பகல் 11 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டிருக்கும்.

ஒக்டோபர் 21 ஆம் திகதி முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவையின் கீழ் ஒழுங்குவிதிகள், இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) (திருத்தச்) சட்டமூலம், தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் என்பன விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்படவுள்ளன.

அத்துடன் பிற்பகல் 3 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் பிரேரணைக்கு அமைய உர பயன்பாடு தொடர்பில் தற்போதைய பிரச்சினைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

ஒக்டோபர் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணி முதல் நண்பகல் 12 செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

இதன் பின்னர் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய 2021.03.10 ஆம் திகதி மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறும்.

அத்துடன், நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவினால் நிலையியற் கட்டளை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்கள் அறிந்துகொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் இது பற்றிக் கலந்துரையாடவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக முற்பகல் 11 மணி வரை ஒதுக்குவது மற்றும் 27 (2) நிலையியற் கட்டளைக்கான கேள்விக்காக ஒதுக்கப்படும் காலத்தை மு.ப 11.15 மணியுடன் முடிவுக்குக் கொண்டுவருவதன் அவசியம் குறித்தும் இக்குழுவில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்ற பொதுமக்கள் கலரியைத் திறப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்தும் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டதுடன், தற்பொழுது நிலவும் கொவிட்-19 சூழல் மேலும் குறைவடைந்ததும் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய பொதுமக்கள் கலரியை திறப்பது குறித்து ஆராயமுடியும் என்றும் தீர்மானிக்கப்படது.