முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடருமானால், நிச்சயமாக எமது மீனவர்கள் அனைவரும் திரண்டு, இந்திய மீனவர்கள் மீது மிகவிரைவில் தாக்குதல் நடத்துவோம் என, முல்லைத்தீவு மீனவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்கள், ஒக்டோபர் 10ஆம் திகதியன்று, ஏறக்குறைய 30 இந்தியன் இழுவைப்படகுகள் வருகைதந்து, அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த முல்லைத்தீவு மீனவர்களின் 15க்கும் மேற்பட்ட படகுகளின் வலைகள் சேதமாக்கியதாகவும் தெரிவித்தனர்.

‘கடந்த வருடம் இந்தியன் இழுவைப் படகுகளின் அத்துமீறல் செயற்பாடுகளைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர் ஆறு மாத காலமளவில் முல்லைத்தீவு கடற்பரப்பிற்கு இந்தியன் இழுவைப்படகுகளின் வருகை இல்லாமல் இருந்தது. ஆனால், தற்போது முல்லைத்தீவு கடற்கரையிலிருந்து இரண்டு கடல்மைல் தூரமளவில், இந்திய இழுவைப் படகுகள் வருகை தருவதுடன், எமது மீனவர்களின் வலைகளும் இந்தியன் இழுவைப் படகுகளால் சேதமாக்கப்படுகின்றன’ எனவும், அவர்கள் சாடினர்.

‘கடந்த காலங்களில் கடற்றொழில் அமைச்சர்களாக இருந்த பெரும்பான்மை இனத்தவர்கள், மீனவர்களின் பிரச்சினைகள் சிலவற்றுக்கு தீர்வுகளை பெற்றுத்தந்திருக்கின்றனர். தற்போது கடற்றொழில் அமைச்சராக இருக்கும் டக்ளஸ் தேவானந்தா, தற்போது இடம்பெறுகின்ற இந்த இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் குறித்து தம்மோடு கலந்துரையாடுவதுமில்லை, இங்கு வருவதுமில்லை’ எனவும், மீனவர்கள் குற்றஞ்சாட்டினர்.

டக்ளஸ் தேவாநந்தா கடற்றொழில் அமைச்சு பொறுப்பை ஏற்ற பின்னரே, இந்திய மீனவர்களின் வருகை  அதிகரித்துள்ளதுடன், கடற்படையினரும் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதில்லை’ எனவும், மீனவர்கள் சாடினர்.