எந்த வொரு அரசியல்வாதிகளும் எமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் – பருத்தித்துறை கடற்தொழிலாளர்கள் அறிவிப்பு!

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள்  அறிவித்துள்ளனர்.

முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.

அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்  என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு – யாழ். விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கொரோனா தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணத்துக்கு இடையிலான உள்நாட்டு விமான சேவை, நவம்பர் மாதம் நடுப்பகுதியில் இருந்து மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விமான நிலைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களைக் கருத்தில் கொண்டு, இதுபோன்ற உள்நாட்டு விமான சேவைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம், நாடு மூடப்படுவதற்கு முன்பு, இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்துக்கு வாரத்துக்கு இரண்டு முறை விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

புலம்பெயர் தமிழர் சீனாவை நாடுவதாக இந்தியா கவலை

இலங்கையிலுள்ள தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற இந்தியா தவறியதையடுத்து  புலம்பெயர் தமிழர்கள்  சிலர் சீனாவின் உதவியைப்பெற முயற்சிப்பதை அறிந்து இந்திய புலனாய்வுத்துறையினர் தமது கவலையை வெளியிட்டுள்ளதாக ஹிந்து செய்திப்பத்திரிகை செய்தி ​வெளியிட்டுள்ளது.

இலண்டனில் அண்மையில் நடைபெற்ற மாநாடொன்றில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் இந்தியா தீவிர முயற்சிகள் எதையும் எடுக்கவில்லையென்று புலம்பெயர் தமிழர்கள் கூறியதாக இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்தன.

வட இலங்கையில் சீனர்கள் தம் பிரசன்னத்தை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி ஆபத்தாக இருக்கும் என்பதையே மாநாட்டின் மூலம் அறிய முடிந்தது.

இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையே சீனா இலங்கையில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தது.  இலங்கைத் தமிழர்களுக்கான அரசியல் மற்றும் பொருளாதார தளத்தை உருவாக்குவதற்கு சீன அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவதற்கு மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதென்று இந்திய புலனாய்வு நிறுவனங்கள் தெரிவித்ததாக ஹிந்து பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

வட இலங்கையில் சீனர்கள் எவ்வித தொந்தரவும் இன்றி இருப்பதற்கு அவர்கள் இத்தகைய முயற்சிகளை   வரவேற்பார்கள் என்று புலம்பெயர் தமிழர்கள் கருதுகின்றனர். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர்களுக்கு உதவுவதைத்தவிர வேறு வழியில்லை.

சீன அறிவுஜீவிகளை தமது கருத்துக்களுக்கு சாதகமாக கவர்ந்திழுக்கும் வகையில் இலங்கை புலம்பெயர் தமிழர்கள் உலகலாவிய தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதாகவும்  நம்பப்படுகிறது.

Posted in Uncategorized

தமிழ் அரசியல் கைதி ஒருவர் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 12 வருடங்களாக விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் இன்றைய தினம் மொனராகலை நீதவான் நீதிமன்றால் நிரபராதி என தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குரலற்றவர்களின் குரல் அமைப்பு அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பில், அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று, சின்னப்பனங்காட்டை சேர்ந்த 29 வயதுடைய கதிரவேலு கபிலன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு-புதிய மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் பீ.சி.ஆர் பரிசோதனைகளை அடுத்து இன்று (10.10.21)மதியம் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டு உறவுகளுடன் இணைந்துள்ளதாக, குடும்பத்தினர் குரலற்றவர்களின் குரல் அமைப்பிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இவர் கடந்த 20.05.2009 யுத்த நிறைவுக்குப் பின் விடுதலைப் புலிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

சுமார் ஒன்றரை வருட காலம் பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்கப்பட்டதன் பின்னர் கடந்த 15.02.2011 அன்று மொனராகலை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடந்த 12 ஆண்டுகளாக அவருக்கெதிராக குற்றச்சாட்டுப் பத்திரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

இந்நிலையில், சிரேஸ்ட சட்டத்தரணி பஞ்சாட்சரம் நீதிமன்றில் தர்க்க நியாயங்களை சுட்டிக்காட்டி கபிலனின் விடுதலையை உறுதி செய்யுமாறு மன்றில் முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், குறித்த தமிழ் அரசியல் கைதிக்கெதிராக குற்றத்தை ஒப்புவிக்க போதிய சாட்சியாதாரங்கள் காணப்படாத காரணத்தைக்கூறி அவரை நிரபராதி என விடுதலை செய்துள்ளது. என அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதன்கிழமை பொறுப்பேற்பார்!

வடக்கு மாகாண ஆளுநர் கடமைகளை ஜீவன் தியாகராஜா வரும் புதன்கிழமை பொறுப்பேற்பார் என அறிவுக்கப்பட்டுள்ளது. இதற்கேதுவாக ஜீவன் தியாகராஜா தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை துறந்துள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.எஸ். சார்ள்ஸ் அந்தப் பதவியிருந்து நீக்கப்பட்டு மற்றொரு பதவி வழங்க்கப்படவுள்ளது.

இந்த நிலையில் மனிதாபிமான அமைப்புகளின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினருமான ஜீவன் தியாகராஜா, புதன்கிழமை முதல் வடமாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைகுமாறு இலங்கைக்கு பிரிட்டன் வலியுறுத்தல்

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் துறைகளில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன், இலங்கையை வலியுறுத்தியுள்ளார்.
இதன்படி பயங்கரவாத தடை சட்டத்தில் திருத்தங்களை முன்னெடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுடனான சந்திப்பில் கூறியுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர், கொழும்பில் அமைச்சர் சரத் வீரசேகரவை சந்தித்துள்ளார்.
இதன்போது, நீண்டகால ஒத்துழைப்பு செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ரீதியிலான ஒத்துழைப்பு செயற்பாடுகள் குறித்தும், சட்ட ஒழுங்கை முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்கள் குறித்தும் மற்றும் சிறுபான்மை மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களில் கூடிய கவனம் செலுத்துவது குறித்தும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஷாரா ஹல்டன் சில காரணிகளை முன்வைத்துள்ளார்.
மேலும் நாட்டின் அபிவிருத்தி விடயங்களில் பொதுமக்கள் பாதுகாப்பு விடயங்களுடன் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும், அதேபோல் சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையை கட்டியெழுப்பும் நடவடிக்கைளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன் பயங்கரவாத தடை சட்டத்த்தில் திருத்தங்களை முன்னெடுக்கப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக பொலிஸ் சடங்களில் புதிய நடைமுறை சீர்திருத்தங்களை உள்ளடக்க வேண்டும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

முஸ்லிம்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்துள்ள வேண்டுகோள்

நாட்டில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக வெளியாகும் செய்தியைக் கேட்டு பேரதிர்ச்சி அடைகிறோம். இதுதொடர்பில் உண்மை நிலை பற்றி நாம் அறியாத போதும் முஸ்லிம்கள் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்துகொள்ளவேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முஸ்லிம் மக்களை கேட்டுள்ளது.
இதுதொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைகிறது.
அனைத்து விதமான கெடுதிகளிலிருந்தும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றோம். குறித்த செய்தி தொடர்பிலான உண்மை நிலை பற்றி நாம் அறியாத போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளவேண்டும்.
இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை காட்டிக்கொண்டு, மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அமைப்புகளே ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளாகும்.
இவ்வாறான தீவிரவாத அமைப்புகள் விடயத்தில் விழிப்புடன் செயற்படுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
இதன் பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பது ஆராயப்பட வேண்டியதுடன் இவ்வமைப்புகள், இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் என்பதே உலக வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும்.
எனினும், கடந்த 2019.04.21ஆம் திகதி தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
இன்னும் பலர் காயங்களுக்குள்ளாகியதோடு நம் நாட்டின் நிம்மதியும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதை நாம் அனைவரும் நன்கறிவோம்.
அத்துடன் எமது சமூகம் இந்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வந்துள்ளது. நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அளவிலா பங்களிப்பை நம் மூதாதையர்கள் வரலாறு நெடுகிலும் செய்துவந்துள்ளனர்.
அவ்வாறே நம் நாட்டுக்கு பிரயோசனமான வெளிநாட்டு உறவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்பட்டுள்ளனர்.
சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயகக் குடியரசாக நம் தாய்நாடு மாறியதிலிருந்து நம் தலைவர்கள் மதங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவும் காத்திரமான முயற்சிகளை செய்துள்ளனர்.
என்றாலும் முஸ்லிம் பெயர்தாங்கிய சிலரால் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான இத்தாக்குதலை தொடர்ந்து, முஸ்லிம்களுக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சில தீய சக்திகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு, முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பும் சந்தேகமும் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வருவதோடு, எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்குச் செய்த பாரிய பங்களிப்புக்கள் மறக்கடிக்கப்படும் நிலை உருவாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.
சிலர் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தீவிரமாக செயற்படுவது வருந்தத்தக்கதாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம் தூண்டப்படாமல், கட்டுப்பாடுடன் செயற்படுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

Posted in Uncategorized

விலையேற்றத்தை கட்டுப்படுத்த முடியாது : அற்புத விளக்கும் எம்மிடமில்லை என்கிறது அரசாங்கம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை அரசாங்கத்தினால் கட்டுப்படுத்த முடியாது. அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடமில்லை.
நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அரசியல் நோக்கிற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என துறைமுகம் மற்றும் கப்பற்றுறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா மற்றும் சீமெந்து ஆகிய பொருட்கள் இலங்கையில் உற்பத்தி செய்யப்படுவதில்லை.  அலாவுதீனின் அற்புத விளக்கு எம்மிடம் இருந்தால் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைக்க முடியும். அதுவுமில்லை. இரண்டு வருட காலம் கொவிட்-19 வைரஸ் தொற்றினால் அனைத்து செயற்பாடுகளும் முடக்கப்பட்டன. 2022ஆம் ஆண்டு முதல் செயற்பட ஆரம்பிக்க வேண்டும்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தின் ஊடாக ஆசிரியர்-அதிபர் சேவையில் நிலவும் வேதன பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும். அத்துடன் ஏனைய பிரச்சினைகளுக்கும் வரவு-செலவு திட்டத்தின் ஊடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும்.

டொலர் பிரச்சினையினால் துறைமுகத்தில் தேங்கியிருந்த அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்கிய கொள்கலன்களை விடுவிக்க முடியாத நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக கடந்த நாட்களில் பால்மாவிற்கு பெரும் தட்டுப்பாடு காணப்பட்டது. தற்போது அனைத்து கொள்கலன்களும் விடுவிக்கப்பட்டுள்ளன. பால்மாவின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இனி தட்டுப்பாடு ஏற்படாது.

மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் உரிய தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. அதனை மக்கள் புரிந்துக் கொள்வார்கள். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Posted in Uncategorized

நாட்டில் நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

ஒரு நாட்டின் தலைவர் எவ்வளவு தூய்மையானவராக இருந்தாலும், நேர்மையானவராக இருந்தாலும், ஒரு வெற்றிகரமான தலைவராக இருந்தாலும் சரி, முதலில், நாட்டில் நேர்மையான அமைச்சரவை இருக்க வேண்டும் என்று, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க தன்னுடைய ஆட்சி காலத்தில், ஒரு நேர்மையான அமைச்சரவையைக் கொண்டிருந்ததால், தேசிய மற்றும் சர்வதேச அரசியலில் ஓர் உண்மையான ஜனரஞ்சக தலைவராக, அவர் மாற முடிந்தது என்றும், மைத்திரி கூறினார்.

சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மறைந்த பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் 21ஆவது நினைவு தினம், இன்று (10) கட்சி தலைமையகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்

சாக்கு போக்கு சொல்லப்போவதில்லை. ஒரே சட்டம், ஒரே நாட்டுக்குள், மோசடிகள் அற்று சரியான முறையில் முன்னோக்கிச் செல்ல ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று, நாட்டு மக்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுத்தினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள், பொதுமக்களுக்காகப் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

உலகிலுள்ள இராணுவத்தினர் யுத்தத்துக்கு மாத்திரமன்றி, தேசத்தைக் கட்டியெழுப்பவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். எமது நாட்டின் முப்படையினர், தனிமைப்படுத்தல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற சுகாதாரத் தரப்பினரின் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி, கொவிட் ஒழிப்புக்காகச் செயற்பட்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் வழங்கிய அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும், ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியையொட்டி, இன்றைய தினம் (10) அநுராதபுரம் – சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற இடம்பெற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இலங்கை இராணுவமானது, 1949ஆம் ஆண்டு 17ஆம் இலக்க இராணுவச் சட்டத்துக்கிணங்க ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்புக்காகப் பெரும் பங்கு வகித்த இராணுவம், காலாட்படை, ஆதரவு மற்றும் சேவை என, 25 ரெஜிமென்ட்களை உள்ளடக்கியுள்ளது.

சுகாதார வழிகாட்டல்களின் பிரகாரம் ஏற்பாடு செய்யப்பட்ட இராணுவதினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், சாலியபுர கஜபா ரெஜிமென்ட் முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணிவகுப்பு மைதானத்தைத் திறந்து வைத்து, இராணுவத்தினரிடம் கையளித்தார். அதன் பின்னர், அணிவகுப்பு மரியாதையைப் பார்வையிட்டார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, “முப்படையினர் மற்றும் புலனாய்வுப் பிரிவினரின் மன உறுதியை அதிகரிக்கச் செய்து, அவர்களுக்கான உத்தியோகபூர்வ அதிகாரங்களை முறையாக வழங்கி, தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்க, கடந்த இரண்டு வருடக் காலப்பகுதியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீண்டும் நாட்டுக்குள் பயங்கரவாதமோ அல்லது மதத் தீவிரவாதச் செயற்பாடுகளோ ஏற்படாத வகையில் நாட்டைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றனர்” என்று கூறினார்.

மக்களுக்கு உறுதியளித்தவாறு, புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறைமையை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஊழல், மோசடிகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் அதற்காக, அனைத்து அதிகாரிகளும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டுமென்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இராணுவதினக் கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் காணப்படும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்னவின் உருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதோடு, ரெஜிமென்ட் தலைமையகத்தில் கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார்.

கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நிர்வாகக் கட்டிடம் மற்றும் விளையாட்டரங்கு போன்றவற்றைத் திறந்து வைத்தல், அரங்கத்துக்கான அடிக்கல் நாட்டுதல் போன்றனவும், ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்டன. கஜபா ரெஜிமென்ட்டின் பொறியியல் படைப்பிரிவினரால் பழுதுபார்க்கப்பட்ட கனிஷ்ட மற்றும் அங்கிகரிக்கப்பட்ட அதிகாரிகளின் வீடுகள், பயன்பாட்டுக்கு இணைக்கப்பட்ட இராணுவ வாகனங்கள் போன்றவற்றையும், ஜனாதிபதி பார்வையிட்டார்.

கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்துக்கு மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால், ஜனாதிபதிக்கு நினைவுச் சின்னமொன்று பரிசளிக்கப்பட்டது.

விருந்தினர்களுக்கான குறிப்பேட்டில் கையொப்பமிட்ட ஜனாதிபதி அவர்கள், கஜபா ரெஜிமென்ட்டில் மேற்கொண்ட விஜயத்தை நினைவுபடுத்தும் வகையில் செடியொன்றை நாட்டினார்.

பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்புப் படைகளின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் இராணுவத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.