இந்த ஆட்சியை முஸ்லிம்கள் முழுமையாக வெறுத்துள்ளனர் – ரவூப் ஹக்கீம் காட்டம்

கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அரசாங்கத்திற்கு தாரைவார்ப்பதற்கு விரும்பவில்லை என்றும் அந்த நான்கு உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு ‘கூஜா’ தூக்கும் செயற்பாடுகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தமிழ் ஊடகமொன்றில் மெய்நிகர் ஊடாக வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

அரசா்கத்தின் 20ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன் பின்னர் அது தொடர்பில் பல்வேறு பேச்சுக்களை கட்சிக்குள் நடத்தியிருந்தோம்.

கட்சியின் தலைமையினதும், உயர்பீடத்தினதும் மற்றும் போராளிகளினதும் தீர்மானத்திற்கு மாறாக செயற்படக் கூடாது என்பதை வலியுறுத்திக் கூறியிருந்தோம். அதற்கு அந்த உறுப்பினர்களும் இணக்கம் தெரிவித்திருநதனர்.

நாடாளுமன்றக் குழுக் கூட்டங்களின் போது கட்சிக்குள் பிளவுகள் என்ற அபிப்பிராயம் ஆதரவாளர்களுக்கும், மக்களுக்கும் சென்று குழம்பங்களை ஏற்படுத்தக் கூடாது.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் வாக்கெடுப்புக்களின் போது வாக்களிப்பதற்கு இணக்கமில்லாது விட்டால் ஆகக்குறைந்தது அதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாரே அவர்களை வலியுறுத்தியிருநதோம். அதற்கும் சம்மதம் வெளியிட்டனர்.

ஆனாலும் புதிய நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின்  நிதிச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்ட போது அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்.

இது தொடர்பில் அவர்கள் பதிலளிக்கையில், நிதி அமைச்சரினால் ஒதுக்கீடு செய்யப்படும் அபிவிருத்தி நிதிகள் தமக்கு கிடைக்காது போய்விடும் என்ற அச்சத்தில்தான் ஆதரவாக வாகடகளிததோம் என தெரிவிக்கின்றனர்.

இந்த உறுப்பினர்கள் முதலில் அபிவிருத்தி என்ற மாயையில் இருந்து வெளிவர வேண்டும். கிழக்கு மாகாணம் உள்ளிட்ட அனைத்து முஸ்லிம்களும் இந்த ஆட்சியாளர்கள் மீது மிகுந்த வெறுப்படைந்துள்ளார்கள்.

அவ்விதமாக இருக்கையில் ஆட்சியாளர்களுக்கு ‘கூஜா’ தூக்குவதை எம்மவர்கள் முதலில் நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லாது விட்டால் அவர்கள் அதற்குரிய விலையை நிச்சயம் கொடுக்க வேண்டி வரும்.

இந்த உறுப்பிர்களை அரசாங்கத்திற்கு தாரை வார்த்துவிடக்கூடாது என்பதற்காக நான் ஒழுக்காற்று நடவடிக்கை அல்லது கட்சியிலிருந்து அகற்றுதல் போன்ற கடுமையான தீர்மானங்களை இதுவரையில் எடுக்காது இருக்கின்றேன்.

ஆகவே இவர்கள் தற்போதுள்ள யதார்த்தத்தினை புரிந்து கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான உரிமைகளை வென்றெடுப்பதற்கான கட்சி என்பதை உணர்ந்து கொண்டு, அமைச்சுப் பதவிகளுக்கு சோரம் போகாது தற்போதுள்ள இரண்டும் கட்டநிலையை கைவிட்டு முடிவொன்றை அவர்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

யாழ். சென்றார் இந்திய வெளியுறவு செயலாளர்

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு சென்றடைந்தார்.
இவர் நேற்று இலங்கைக்கு வருகை தந்த நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார்.

இதன்போது யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை சுற்றி பார்வையிட்ட நிலைியல், அவருடன் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனும் உடனிருந்தனர்.

அவரது பயணத்தை முன்னிட்டு யாழ்ப்பாண கலாசார மத்திய நிலைய வளாகத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்ட இலங்கை எதிர்பார்த்துள்ளது, – அமைச்சர் ரமேஸ் பத்திரண

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளதாக இணை அமைச்சரவைப் பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான வைத்திய கலாநிதி ரமேஸ் பத்திரண தெரிவித்தார்.

ஐ.நா செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி நடத்திய சந்திப்பில் உள்ளகப் பொறிமுறையின் ஊடாக இலங்கையின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான கலந்துரையாடல்களுக்கு வருமாறு புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தமை தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டிருந்தார்.

இதில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“அரசியல் கட்சி மற்றும் அரசாங்கம் என்ற ரீதியில் எந்த இனத்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும் அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இது தொடர்பில் நாம் திறந்த மனதுடன் இருக்கின்றோம்.

2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக நாம் சிங்கள மக்களின் உரிமைகளை மாத்திரமன்றி தமிழ் மக்களின் உரிமைகளையும் பாதுகாத்திருந்தோம்.

பாதுகாப்புப் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக் கொண்டிருந்த போது சிங்கள மக்களை விட தமிழ் மக்களே அதிகமான கஸ்டங்களுக்கு உள்ளாகினர்.

எமது பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டை பயங்கரவாதத்தின் பிடியிலிருந்து விடுவித்தது மாத்திரமன்றி, தமிழ் மக்களும் இந்நாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்தனர்.

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் ஊடாக வடபகுதியில் உள்ள மக்களின் உயிர்களை மாத்திரம் காப்பாற்றவில்லை.

அப்போதைய காலக்கட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் தலைமைத்துவத்தின் கீழ் வடக்கு, கிழக்கில் நாம் அபிவிருத்திகளை மேற்கொண்டோம்.

வடமாகாணத்தில் எந்தவித பாரபட்சமும் இன்றி அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இருக்கின்றார்.

இலங்கையில் காணப்படும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நேசக்கரம் நீட்டுவதற்கு இலங்கை எதிர்பார்த்துள்ளது.

நாம் எந்தப் பாகுபாடும் பார்ப்பதில்லை. அரசாங்கம் தொடர்பில் தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தால் பேச்சுவார்த்தை மேசையில் கலந்துரையாடி வேறுபாடுகளைக் களைந்து கொள்ளலாம்.” என்று குறிப்பிட்டார்.

Posted in Uncategorized

எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்க்க ஓமானிடம் உதவிகோரும் இலங்கை அரசாங்கம்

இலங்கையின் எரிபொருள் விநியோக பிரச்சினையை தீர்ப்பதற்காக 3.6 பில்லியன் டொலர் நிதியுதவியைப் பெற இலங்கை அரசாங்கம் ஓமான் அரசாங்கத்துடன் ஒரு உடன்பாட்டை எட்டவுள்ளது.

குறித்த நிதியுதவிக்கு ஓமான் அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இரு நாடுகளும் இந்த திட்டத்தை தொடர கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டதாகவும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவலை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது வரைபில் உள்ள இந்த ஒப்பந்தம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து வருட சலுகை மற்றும் 20 வருடங்களில் குறித்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையிலும் நிபந்தனைகளை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

12 மாத காலத்திற்கு எரிபொருளை வாங்கும் வகையில் 3.6 பில்லியன் டொலர் நிதி உதவி இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கும் என அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இலங்கைக்கும் ஓமானுக்கும் இடையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவுடன் எரிபொருள் கொள்வனவிற்காக நிதியுதவியை வழங்குவது குறித்து பேச்சுவார்த்தையில் அரசாங்கம் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்கின்றது ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு

இலங்கை வந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழு உள்நாட்டு போரின் போது காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் நாட்களில் இந்த சந்திப்பு இடம்பெறும் என கொழும்பில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் அலுவலகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது, காணாமல் போனவர்களைக் கண்டறிய அரசாங்கம் மேற்கொண்ட மந்தமான முயற்சிகள் குறித்து கவலை வெளியிடப்பட்டது.

மேலும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணையில் அரசாங்கம் வெளிப்படையாக இழுத்தடிப்பை செய்கின்றது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விஜயம் ஒக்டோபர் 5 ஆம் திகதி நிறைவுபெறுவதற்கு முன்னர், காணாமல் போன அல்லது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வந்துள்ள குறித்த தூதுக்குழு, கடந்தவாரம் சிவில் சமூக குழுக்கள், எதிர்க்கட்சிகள், சிறுபான்மை சமூக பிரதிநிதிகள் மற்றும் வெளிவிவகார, தொழிலாளர் மற்றும் நீதி அமைச்சர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

இந்திய வெளிவிவகார செயலாளரின் இலங்கை விஜயத்தின் நோக்கம் என்ன ?

இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டை வந்தடைந்துள்ளார்.
நேற்று சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்த அவரை வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே நேரில் சென்று வரவேற்றிருந்தார்.
இதன்போது இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் வெளிவிவகர அமைச்சின் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருக்கவுள்ள அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டிக்குச் செல்லவுள்ளார்.
இதன்போது தலதாமளிகையில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளதோடு சமயத் தலைவர்களையும் சந்திப்பார்.
அதனைத்தொடர்ந்து நுவரெலியா சீத்தா எலியவுக்குச் செல்வதோடு, இந்திய வீடமைப்பு திட்டத்தினை கையளிக்கும் நிகழ்வில் பங்கெடுப்பார் என்று திட்டமிடப்பட்டிருந்தபோதும் காலநிலை காரணமாக அந்த விடயம் நிகழ்ச்சி நிரலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டியைத் தொடர்ந்து திருகோணமலைக்குச் செல்லவுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அங்கு இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களைப் பார்வையிடவுள்ளார்.
பின்னர், அங்கிருந்து பிற்பகலளவில் யாழ்ப்பாணம் செல்லவுள்ள அவர், செட்டிக்குளத்தில் இந்திய வீட்டுத்திட்டத்தினை அங்குராப்பணம் செய்யவுள்ளதோடு, பருத்துறையில் ஏற்பாடாகியுள்ள பாடசாலை நிகழ்வொன்றிலும் பங்கேற்கவுள்ளதோடு, அதனையடுத்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸைச் சந்தித்துக் பேச்சுக்களை நடத்தவுள்ளவர் மாலை ஆறரை மணியளவில் யாழில் உள்ள விடுதியொன்றில் இராப்போசன விருந்துடன் முக்கிய பிரதிநிதிகளையும் சந்திக்கின்றார்.
இந்தச் சந்திப்பில், வடமாகாண சபையின் தவிசாளர் சீ.வீ.கே.சிவஞானம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் எம்.பி., ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், யாழ்.மேயர் மணிவண்ணன் உள்ளிட்ட பல அரசியல் முக்கியஸ்தர்கள், சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள், சமயத்தலைவர்கள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நாளை திங்கட்கிழமை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
அத்துடன், ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சர்கள், மற்றும் பிரதிநிதிகளுடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ள அவர், நாளை திங்கட்கிழமை பிற்பகலளவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், செயலாளர் ஜயநாத் கொலம்பகே உள்ளிட்டவர்களை சந்திக்கவுள்ளார்.
மேலும் குறித்த தினத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அத்துடன், துறைசார் நிபுணர்கள், வர்த்தகத்துறையினர் உள்ளிட்டவர்களிடத்திலும் பேச்சுக்களை அவர் மேற்கொள்ளவுள்ளார். திங்கட்கிழமை அன்று நெருக்கடியான நிகழ்ச்சி நிரல் காணப்படும் பட்சத்தில் மறுதினமான செவ்வாய்க்கிழமை சந்திப்புக்களை தொடரவுள்ளார்.
மேலும், ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இந்திய வெளிவிவகார செயலாளராக பதவி ஏற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் இதுவாகும். இதன்போது இருநாடுகளுக்கு இடையில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தல், இந்திய நிதி உதவியில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களை விரைவு படுத்தல், எதிர்காலச் செயற்றிட்டங்கள், முதலீடுகள் தொடர்பில் அவர் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேயின் அழைப்பிலேயே இந்த உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

அமெரிக்காவால் அரசாங்கத்துக்குள் வெடித்துள்ள அதிர்வு – பங்காளி கட்சிகள் எடுத்துள்ள முடிவு

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிறுவனத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது குறித்து அரசாங்கத்திற்குள் பூதாகரமாக வெடித்திருக்கும் பிரச்சனையை அடுத்து அரசாங்கத்திலுள்ள பங்காளிக் கட்சிகளின் 10 தலைவர்கள் 05ஆம் திகதி மீண்டும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

கொழும்பில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

இதன்படி ஜனநாயக இடதுசாரி முன்னணி தலைவர் வாசுதேவ நாணயக்கார , தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச, தூய ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில , ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜெயசேகர , லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி அசங்க நவரத்ன, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க மற்றும் அத்துரலியே ரத்ன தேரர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த குழு அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை  சந்தித்து யுகதனவி மின் நிலைய பிரச்சனை பற்றி கலந்துரையாடியபோதிலும் சாதகமான உடன்பாட்டை எட்ட முடியவில்லை.

இதனையடுத்து இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இது குறித்து கலந்துரையாட முடிவு செய்தனர், ஆனால் கடந்த வார இறுதி வரை அமெரிக்கா சென்ற ஜனாதிபதி நாட்டுக்கு திரும்பாததால், அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலைக் கோருவதற்காக தயாரிக்கப்பட்ட கடிதம் இன்னும் அனுப்பப்படவில்லை, முன்னதாக தயாரிக்கப்பட்ட கடிதம் திருத்தப்பட்டு நாளை மறுநாள் ஜனாதிபதிக்கு அனுப்பப்படும் என்று ஒரு பங்காளிக் கட்சியின் தலைவர் தெரிவித்தார்.

கோட்டாபயவின் அறிவிப்பு வேடிக்கையானது – கலாநிதி தயான் ஜயதிலக

தமிழ் மக்களின் பிரதிநிதிகளை புறக்கணித்துவிட்டு புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு விடுப்பது வேடிக்கையானது என இலங்கைக்கான ரஷ்ய கூட்டமைப்பின் முன்னாள் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக  தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய குழுவினரின் செயற்பாடுகள், மற்றும் அதனுடன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய, அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ ஒன்றுக்கு ஒன்று முரணான கருத்துக்களையே முன்வைத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ் அமைப்புகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் எனக் கூறினார், ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் தலைமைகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாத ஒருவர், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு அழைப்பு விடுப்பது என்பது கேள்விக்கு உட்படுத்தும் கருத்துக்களாகும்.

தேசிய ரீதியில் அனைத்தையும் கையாள்வதாக கூறிக்கொண்டு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்காது யார்? எவர்? என்று தெரியாத புலம்பெயர் அமைப்புகளுடன் பேசுவேன் எனக் கூறுவது யதார்த்தத்திற்கு அப்பால் பட்ட காரணியாகும்” என அவர் கூறியுள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் யாழ் விஜயம்

இலங்கைக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா யாழ். மாவட்டத்திற்கு இன்று (03) விஜயம் செய்ய உள்ளார்.

இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வருகை தந்துள்ளார்.

​​இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

அதேபோல் இலங்கையின் வெளியுறவு செயலாளருடன் அவர் இருதரப்பு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

சிங்களவர்களாக மாற்றப்பட்ட தமிழர்கள் – பகிரங்கமாக வெளிவந்த பின்னணி

முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக்கின் கூற்றுப்படி, துணை இராணுவக் குழு, காணாமலாக்கப்பட்ட இளம் சிறுவர் சிறுமிகளை மலேசியா, மாலைத்தீவு மற்றும் இந்தியாவுக்கு அடிமை வேலை மற்றும் பாலியல் அடிமைகளாக அனுப்பியது.

ஆனால், காணாமல் ஆக்கப்பட்ட தாய்மார்களின் போராட்டங்களைக் கட்டுப்படுத்த இறப்பு சான்றிதழை தனது முதல் மருந்தாக கொடுக்க விரும்புவதாக அங்கஜன் கூறுகிறார். இதை நிரூபிக்க விரும்பினால், அவர் காணாமல் ஆக்கப்பட்ட ஒருவர் உயிருடன் இருக்கும் போது எடுத்த படத்தையும், இறக்கும் போது எடுத்த படத்தையும், இறந்த பின் எடுத்த படத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் 1688 ஆவது நாளாக உறவுகளைத் தேடும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களில் பெரும்பாலானோர் உயிருடன் இருப்பதாக நாங்கள் அறிகிறோம், அவர்களில் சிலர் கடத்தப்பட்டு, பல நாடுகளுக்கு அனுப்பப்பட்டதாகவும் சிலர் இராணுவ முகாம்களில் பணியாற்றுவதாகவும், மேலும் சிலர் பிக்குகளாகவும், சிங்களவர்களாகவும் மாற்றப்பட்டுள்ளதாகவும் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க செயலாளர் கோ.ராஜ்குமார்  தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

மேலும் ஒற்றுமை என்பது வெறும் பேச்சு மட்டுமல்ல. ஒருங்கிணைந்த கொள்கையுடன் இணைவது தான் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்கஜனின் முதல் மருந்தை நாம் எதிர்க்கிறோம். இன்று 1688ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கான எமது போராட்டம் தொடர்கிறது.

இரண்டு முக்கியமான செய்திகளை நாம் தமிழர்களுக்கு எடுத்து இயம்ப விரும்புகிறோம். காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளின் தாய்மார்களான நாங்கள் தமிழர்களிடமிருந்து, குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து ஒரு ஒருங்கிணைந்த தீர்மானத்தை விரும்புகிறோம். யூதர்கள் பெரும்பாலானோர் தம்மிடையே பல வேறுபாடுகள் இருந்தாலும் கூட, தம் குறிக்கோளில் ஒன்றிணைந்தனர். இதன் விளைவாக தான் இன்று இஸ்ரேல் என்று ஒரு நாடு உள்ளது.

அதேபோல் பின்வரும் தீர்மானத்துடன் நாம் இலக்கை அடைய வேண்டும்.

தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுப்பு, பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை, தமிழருக்கான அரசியல் தீர்வு – ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட – மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாகக் கொண்டது. காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல்.

அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும். ஏனென்றால் நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும் மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

போரில் பாதிக்கப்பட்ட நாங்கள் இத் தீர்மானத்தை தயாரிக்க விரும்புகிறோம். இதில் தமிழ் அரசியல்வாதி மற்றும் சிவில் குடிமக்கள், குழுக்களிடமிருந்து கையொப்பங்களை சேகரிக்க விரும்புகிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.