இலங்கையில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 20 ஆம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் இதற்கு முன்னர் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கொவிட் தடுப்புச் செயலணிக் கூட்டத்தில், தற்போதைய கொவிட் தொற்று நிலைமையை கருத்திற்கொண்டு ஊரடங்கை மேலும் ஒருவார காலத்திற்கு நீடிக்க தீர்மானிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6ம் திகதி தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும், வைத்தியர்களின் பரிந்துரைகளுக்கு அமைய, அதனை நீடிக்க தீர்மானித்ததாக கொவிட்-19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேலும் ஒரு வார காலத்திற்கு பயணத் தடை விதிக்கப்பட வேண்டும் என வைத்தியர்கள், கொவிட் – 19 தடுப்புக்கான கூட்டத்தில் இன்றைய தினம்(03) தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.