புலிகளின் நினைவுச் சின்னங்களை அனுமதிக்க முடியாது!

வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் மூலமாக இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடை தான். இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேயர் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறித்த இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாகக் கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம். அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்னிற்க மாட்டோம்.

இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல. வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

Posted in Uncategorized

திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளையும் நடத்த அடுத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மேற்படி தடையானது அமுல்படுத்தப்படுவதுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானமானது எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலிஅத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கரைதுறைப்பற்று ரெலோ தவிசாளரின் அதிரடி நடவடிக்கை மக்களுக்கான அறிவிப்பு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட துப்பரவு செய்யாத மக்களின் வெறுங்காணிகளை உடனடியாக துப்பரவு செய்யவேண்டும் என ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக்காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகள் உடனடியாக துப்பரவு செய்வதுடன் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டும் பிரதேச சபையினால் வழங்கடுகின்ற கால எல்லையினுள் துப்பரவு செய்யாப்படின் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு கூலியுடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

இவ்வாறன பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் சூழலையும் அழகாக வைத்திருக்கமுடியும் அதுமட்டுமல்லாது பயிர்ச்செய்கைக்கும் ஊக்கமளிக்கும். நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் அழகுபடுத்துவதும் எமது கடமை.

அதுமட்டுமல்லாது வீதிகளில் தண்ணீர்பாயும் வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் போடுவோர் மீது தண்டபணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29.04.2021) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என ரவூப் ஹக்கீம் கூறியிருந்தார்- ரெலோ உப தலைவர் ஹென்றி மகேந்திரன்

கல்முனை உப பிரதேச செயலகமாக தரம் குறைப்பதற்கு காரணமாக உலமா கட்சியின் செயற்பாடு பின்னணியில் உள்ளதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் உப தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபையின் 37ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று (புதன்கிழமை) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “கடந்த ஜனாதிபதி தேர்தலில் உலமா கட்சி தலைவர் பஸில் ராஜபக்சவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ஒன்றின் அடிப்படையில் கல்முனை உப பிரதேச செயலமாக தரம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிய கிடைத்திருக்கின்றது.

றிசாட் பதியுதீன் மற்றும் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அல்லாத ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் உலமா கட்சி தலைவரும் இணைந்து செயற்பட்டதாக ஒரு வதந்தி பரவி கொண்டு இருக்கின்றது.இவ்விடயம் தொடர்பாக கடந்த 35 வருடங்களாக குழப்பட்டு வருகின்றோம்.

தமிழ் முஸ்லீம் மக்களை குழப்புகின்ற சக்தி ஒன்று இதன் பின்னணியில் இருந்து செயற்படுகின்றதா? என்ற சந்தேகமும் நிலவுகின்றது.தற்போது முஸ்லீம் தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை கீற்று ஏதோ ஒரு வழியில் வெளிப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்சவினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்பிக்களான கோவிந்தன் கருணாகரம் செல்வம் அடைக்கலநாதன் சிவஞானம் சிறிதரன் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் முறையிட்டு இருந்தார்கள்.

இதன் போது இராஜாங்க அமைச்சர் பிரதேச செயலகம் குறித்த வெளிவந்த கடிதத்தின் அமுலாக்கத்தினை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தார்.

இது தவிர நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார பொன்னம்பலம் நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் பேசியிருந்தார்.முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடி ஆட்சேபனையினையை முன்வைத்திருந்தார்.

கடந்த கல்முனை மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தின் போது நாங்கள் ஆதரவினை வழங்கியபோது ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் எனவும் இது நியாயமான தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் அவர்களுக்குரிய உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதையும் அதை மனப்பூர்வமாக ஆதரிப்பதாகவும் பதிவு செய்திருந்தார்.

இந்த பிரதேச செயலக தரமுயர்த்தும் போதும் பிரிக்கப்படும் போதும் முஸ்லீம் மக்களுக்கு பாதகமாக ஒன்றும் இடம்பெற கூடாது என்றும் செல்லியிருந்தார் என கூறினார்.

இந்த அடிப்படையில் நாங்கள் நிதானமாக இருந்து தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய பிரதேச செயலகத்தினை வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.இது சம்பந்தமாக பிற்காலத்தில் நாங்கள் ஒற்றுமையுடன் செயற்படுவோம்” என தெரிவித்தார்

Posted in Uncategorized

நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இல்லை – இராணுவத் தளபதி

நாட்டை முடக்குவதற்கான (Lockdown) எவ்வித தீர்மானமும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், அந்தந்த பகுதிகள் மாத்திரம் முன்னறிவிப்பின்றி தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போதை விட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று (28) இரவு ரிவி தெரணவில் ஔிபரப்பான அளுத் பார்ளிமென்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் இன்று ஒரு முக்கியமான சூழ்நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பலமுறை அறிவுறுத்திய போதும், சரியான சுகாதார ஆலோசனையைப் பின்பற்றாததால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணிசமான அளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுவதை அடுத்து பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார பிரிவினர் அறிவித்த உடன் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை முன்னறிவித்தல் வழங்கி பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏதாவது ஒரு பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய நிலமை ஏற்படின் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயின் முழு நாட்டையும் முடக்குவதற்காக தயார் இல்லை எனவும் கொவிட் நிலமை அதிகரித்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னறிவித்தல் இன்றி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் சிவராம் நினைவுதினம் யாழில் அனுஸ்டிப்பு

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களான தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவு தினம் இன்றைய தினம் யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

யாழ் ஊடக அமையத்தில் இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் மாலை அணிவித்து , மலர் தூபி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளர்களில் ஒருவரான தராகி
என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் படுகொலை செய்யப்பட்டு இன்றோடு 16 ஆண்டுகள்
கடந்துவிட்டன.

ஊடகவியலாளர் சிவராம் கடந்த 2 ஆயிரத்து 5 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வைத்து இனம் தெரியாதவர்களால் கடத்தப்பட்ட பின்னர் நாடாளுமன்றத்துக்கு அருகில் படுகொலையான நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இளம் ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் உதயன் பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2 ஆயிரத்து 7ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 29ஆம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கையில் நிலவும் ஊடக – கருத்துச் சுதந்திர மறுப்பு சூழலைக் காட்டும் சிவராம் மற்றும் ரஜீவர்மன் உள்ளிட்டவர்களின் படுகொலை நடந்து பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊடகவியலாளர்களின் கொலைகளுக்குப் பொறுப்பான குற்றவாளிகள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.

பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பம் – திகதி அறிவிப்பு !

எதிர்வரும் 10 திகதி முதல் இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் கல்வி நடவடிகைகளும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களும் மீண்டும் திறக்கப்படுவது இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஏப்ரல் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்க தீர்மானிக்கப்பட்ட போதும் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை காரணமாக அந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம் – பிரதமர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனவரல் வெய் ஃபெங் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பானது இன்று மாலை அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின்போது, தொற்று நோய்க்கு மத்தியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டமைக்காக சீன பாதுகாப்பு அமைச்சருக்கு பாராட்டுக்களை தெரிவித்த பிரதமர் மேலும் கூறுகையில்,

தொற்றுநோய் நிலைமை இருந்தபோதிலும், உயர் மட்ட சீன தூதர்கள் பல சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு விஜயம் செய்தனர். எங்கள் வலுவான மற்றும் நட்பு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்கள் வருகை மற்றும் சந்திப்பை எதிர்பார்க்கிறேன்.

இந்த ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு விழாவிற்கும் அதன் அனைத்து சாதனைகளுக்கும் எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். அது உண்மையில் மிக முக்கியமான மைல்கல் ஆகும்.

வறுமையை ஒழிப்பதில் சீனா செய்த சாதனைகளுக்கம் பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். சீன அரசாங்கம் கிட்டத்தட்ட 100 மில்லியன் கிராமப்புற மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது. மறுபுறம், வறுமையை ஒழிப்பதற்காக 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் உலகளாவிய நிலையான அபிவிருத்தி இலக்குகளை சீனா சந்திக்க முடிந்தது. இது ஒரு பெரிய சாதனை.

இந்த தொற்றுநோயைத் தடுப்பதற்கான ஒரே வழி தடுப்பூசி மட்டுமே என்பது இப்போது உலகம் முழுவதும் தெளிவாகியுள்ளது. கொவிட் தொற்றுநோய் வெடித்ததிலிருந்து, அனைத்து இலங்கையர்களுக்கும் சீனா தாராளமாக 600,000 சினோஃபார்ம் தடுப்பூசிகள் மற்றும் சுகாதார உபகரணங்கள் நன்கொடை அளித்தமைக்கு நன்றி.

எனினும் இந்த தொற்றுநோயைக் கையாள்வதில் சீன அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை நாம் எதிர்பார்க்கிறோம்.

கடந்த சில வாரங்களில் கொவிட்- 19 நோயாளர்களது எண்ணிக்கை நாட்டில் அதிகரித்த போதிலும், அதன் பொருளாதார மற்றும் சமூக தாக்கத்தால் முழு நாட்டையும் முடக்க வேண்டாம் என்று ஒரு அரசாங்கமாக நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

தொற்றுநோய்க்கு பிந்தைய நிலைமையை நிவர்த்தி செய்ய இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும்.

தற்போது, உலகெங்கிலும் இருந்து இலங்கைக்கு முதலீட்டை ஈர்ப்பதே எங்கள் முன்னுரிமை. இலங்கையில் இதுபோன்ற முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதில் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

தற்போதுள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோயால் ஏற்படும் சவால்களை சமாளிக்க உங்களுடன் மற்றும் உங்கள் அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கும் எதிர்நோக்குகிறேன் என்றும் பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்பில் சீன தூதுக் குழுவினரும், அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், தினேஷ் குணவர்தன, பஷில் ராஜபக்ஷ மற்றும் சரத் வீரசேகர உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.