யாழ். கொடிகாமம் மரக்கறி சந்தைக்கு பூட்டு

யாழ்ப்பாணம் – கொடிகாமம் மரக்கறி சந்தை மற்றும் அதனை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் நடத்தப்பட்ட எழுந்தமானமான பீ.சி.ஆர் பரிசோதனையில் 4 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் சந்தை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சுகாதார பிரிவினரால் சந்தை முடக்கப்பட்டிருப்பதுடன், தொற்று நீக்கம் செய்யப்பட்டு சந்தையில் உள்ள ஏனைய வர்த்தகர்களுக்கும் பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு இனிவரும் பீ.சி.ஆர் முடிவுகளின் அடிப்படையில் சந்தையை மீளவும் திறப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என சுகாதார பிரிவனர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு இலங்கை ஒத்துழைக்கும்: ஜனாதிபதி தெரிவித்ததாக தகவல்

இலங்கை சீனாவுடன் இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவதற்கு முன்னுரிமையளித்துள்ளதாகவும் சீனாவின் அடிப்படை அபிலாஷைகளுக்கு உயர் மட்டத்தில் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக Xinhua News Agency இன்று தகவல் வௌியிட்டுள்ளது.

சீன பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe உடன் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி இதனைக் கூறியதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சுயாதீன வௌிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிப்பதாகவும் வலயத்திற்கு வௌியில் உள்ள உலகின் அதிகாரமிக்கவர்களின் அதிகாரத்திற்கு அடிபணியப் போவதில்லையெனவும் எந்தவொரு நாட்டுடனும் கூட்டிணைவதில்லையெனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டதாக Xinhua செய்தி வௌியிட்டுள்ளது.

Posted in Uncategorized

கொரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற அமர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டன

நாடாளுமன்ற அமர்வுகளை எதிர்வரும் மே 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் மாத்திரம் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொவிட்-19 சவாலை எதிர்கொண்டு, நாட்டின் தற்போதைய நிலைமை குறித்த ஒத்திவைப்பு விவாதம் மே 4 ம் திகதி மதியம் 1 மணிக்கு நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையகத்தின் சட்டமூலம், இந்த மாதம் 5 ஆம் திகதி தாக்கல் செய்யப்படும். காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை முழு நாளிலும் விவாதத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த இரு நாட்களிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாய்வழி கேள்விகளுக்கும், நிலையான ஆணை 27 (2) இன் கீழ் உள்ள கேள்விகளுக்கும் நேரமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்-ரெலோ இளைஞர் அணித் தலைவர் சபா குகதாஸ்

ஏப்ரல் 21 போன்று மே 18 சுதந்திரமாக அனுஸ்டிக்க விட வேண்டும்
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினரும் ரெலோ இளைஞர் அணித் தலைவருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“கடந்த ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொதுமக்களை நினைவு கூறுவதற்கு பூரண சுதந்திரத்தை வழங்கியதை போன்று 2009 மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தில் பாதிக்கப்பட்ட உறவுகள் தம் இறந்த உறவுகளை நினைவு கூற இடையூறுகள் புரியாது அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது பூரண அனுமதியை வழங்க வேண்டும்.

இந்த நாட்டில் பாதிக்கப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் மனித நேய அடிப்படையில் அவர்களது அடிப்படை உரிமைகளை மதிக்க வேண்டும் அதுவே உண்மையான ஐனநாயகப் பண்பு அந்த வகையில் தெற்கில் யுத்த வெற்றியை கொண்டாடும் போது வடக்கு கிழக்கில் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தடுத்தல் நீதி அல்ல.

பாதிக்கப்பட்ட மக்களின் மன ஆறுதலுக்கும் அவர்களுக்கான நீதி கிடைப்பதற்கும் மீண்டும் இவ்வாறான அவலம் ஏற்படாதிருப்பதற்கும் ஐனநாயக விரோத தடைகளை நிறுத்தி நினைவு கூறலை மேற்கொள்ள அனுமதிப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதே உண்மையாக இந்த நாட்டின் அமைதிக்கும் அபிவிருத்திக்கும் புதிய வழியை உருவாக்கும் இதனை பிற்போக்கான அடிப்படைவாத கோட்பாட்டில் மூழ்கிப் போய்யுள்ள பெருந் தேசியவாதிகள் புரிந்து கொள்ள வேண்டு்ம்.

சகோதர இனமான தமிழர்களை புறம் தள்ளி அவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்காது காலத்தை கடத்தி விடலாம் என தொடர்ந்து சிங்கள ஆட்சியாளர் நினைத்தால் சில ஆண்டுகளில் மீண்டும் அந்நிய சக்திகளின் முழுமையான காலணித்துவத்தில் நாடு சிக்கி சீரழியும் நிலை உருவாகும்” என்றார்.

P2P வழக்கை இடைநிறுத்துமாறு நீதவான் உத்தரவு

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு நீதிமன்ற தடை உத்தரவினை மீறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 7 பேருக்கு எதிரான வழக்கினை முற்றாக இடை நிறுத்துமாறு இன்று (30) கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.என் றிஸ்லான் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி கல்முனை பொலிஸ் நிலையத்தினால் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 29 பேருக்கு கல்முனை நீதிமன்ற உத்தரவின் பேரில் தடைஉத்தரவு பெறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கே.கருணாகரன், த.கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், சீ.யோகேஸ்வரன், மாணவர் மீட்பு பேரவை தலைவர் செ.கணேஷ் ஆனந்தம், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி துணைச் செயலாளர் அ.நிதான்சன் ஆகியோரை இன்று 30 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு கல்முனை நீதவான் அழைப்பாணை பிறப்பித்திருந்தனர்.

கல்முனை நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மற்றும் சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆகியோர் நீதிமன்றில் ஆஜராகி நேற்றைய தினம் குறித்த வழக்கிற்கு எதிராக கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த ஆட்சேபனை மனுவினை சமர்ப்பித்தனர்.

இந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சுமத்திரன், சட்டத்தரணி நிரான் அங்கிற்றல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். இதனையடுத்து மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான அர்ஜுன ஒபேசேகர மற்றும் மாயதுன்ன கொரயாவினால் தொடரப்பட்ட வழக்கினை கல்முனை நீதவான் நீதிமன்றம் தொடர்ந்து நடாத்தவும் அதன் மீது கட்டளை பிறப்பிக்கவும் மே 18 ம் திகதி வரை இடைக்கால தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளது.

பிரதிவாதிகள் தரப்பினர் வழக்கை மீளப் பெறுமாறு சமர்ப்பணம் விடுத்ததையடுத்து, நீதவான் பொலிஸாரிடம் வழக்கை மீளப்பெறுவீர்களா என கேட்ட போது மேலிடத்து உத்தரவு, மேலிடத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என பொலிசார் தெரிவித்தனர் .

நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றிற்கு கிடையாது. ஆகவே கல்முனை நீதவான் நீதிமன்றில் இன்று இடம்பெற்ற வழக்கினை தடை செய்யக்கோரி முன் வைக்கப்பட்ட சமர்ப்பணத்தை ஏற்ற நீதிமன்றம் எதிர் வரும் 18ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்ததோடு எதிராளிகளுக்கான அறிவித்தலை வழங்குமாறும், மேன் முறையீட்டு நீதிமன்ற பதிவாளர் கல்முனை நீதவான் நீநிமன்றின் பதிவாளருக்கு இந்த கட்டளையை தொலை நகல் மூலமும் அனுப்பி வைக்குமாறும், கட்டளையிட்டதோடு இந்த வழக்கு தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றம் இதற்கு மேல் எந்த உத்தரவும் வழங்க கூடாது எனவும் கட்டளையிட்டது.

Posted in Uncategorized

புலிகளின் நினைவுச் சின்னங்களை அனுமதிக்க முடியாது!

வடக்கு, கிழக்கில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரும் வகையில் நினைவுத் தூபிகளை அமைக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

”யாழ். மாநகர சபை மேயர் மணிவண்ணன் மூலமாக இளைஞர்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆடை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆடை தான். இந்தச் சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேயர் என்ற காரணத்துக்காகவோ அல்லது வேறு அதிகாரியாக இருக்கின்ற காரணத்தினாலேயோ இளைஞர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வேறு ஆடைகளை அணிவித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் செயற்பாடுகளை முன்னெடுப்பது சட்டவிரோதமானது.

குறித்த இளைஞர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆடையே அணிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே யாழ். மேயரை உடனடியாகக் கைது செய்து சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுத்தோம். அதேபோல, எதிர்காலத்திலும் எவரேனும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்னிற்க மாட்டோம்.

இந்த நாட்டில் வடக்கிலோ அல்லது தெற்கிலோ இளைஞர்கள் மீண்டும் ஒரு கஷ்ட நிலைமையைச் சந்திக்கும் சூழல் உருவாக நாம் இடமளிக்கமாட்டோம். யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட நினைவுத்தூபி போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் தூபியே தவிர, தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவு கூரும் தூபி அல்ல. வடக்கிலோ, கிழக்கிலோ பயங்கரவாத அமைப்பை நினைவுகூரும் நினைவுத்தூபிகளை உருவாக்க நாம் இடமளிக்கமாட்டோம்” என்றார்.

Posted in Uncategorized

திருமணம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் இரு வாரங்களுக்குத் தடை -இராணுவத் தளபதி

திருமண வைபவம் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளையும் நடத்த அடுத்த இரு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் 3ஆம் திகதி முதல் மேற்படி தடையானது அமுல்படுத்தப்படுவதுடன் எதிர்வரும் இரு வாரங்களுக்கு இது நடைமுறையில் இருக்கும்.

நாட்டில் தற்போது கொரோனா தொற்றுப் பரவலானது அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்படி தீர்மானமானது எடுக்கப் பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான ரயில் சேவைகள் இரத்து

COVID-19 வைரஸ் தொற்று காரணமாக நகரங்களுக்கு இடையிலான மற்றும் தூர பிரதேசங்களுக்கான சில ரயில் சேவைகள் எதிர்வரும் முதலாம் திகதி முதல் இரத்து செய்யப்படுமென ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் 3 ஆம் திகதி வரை மூன்று கட்டங்களாக ரயில் சேவைகள் இரத்து செய்யப்படுமென திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை, கண்டி, காங்கேசன்துறை, பொலன்னறுவை, பெலிஅத்த ஆகிய பகுதிகளுக்கு முன்னெடுக்கப்படும் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவுள்ளன.

தூர பிரதேச ரயில் சேவைக்கான ஆசன ஒதுக்கீட்டு முன்பதிவு மிகவும் குறைந்த அளவில் இடம்பெறுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

கரைதுறைப்பற்று ரெலோ தவிசாளரின் அதிரடி நடவடிக்கை மக்களுக்கான அறிவிப்பு!

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட துப்பரவு செய்யாத மக்களின் வெறுங்காணிகளை உடனடியாக துப்பரவு செய்யவேண்டும் என ரெலோ இளைஞர் அணியின் உறுப்பினரும் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் க.விஜிந்தன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட மக்கள் நடமாடுகின்ற அல்லது மக்கள் குடியிருப்பு பகுதிகளில் பற்றைக்காடுகளாகவுள்ள தனியார் மற்றும் பொதுக்காணிகள் உடனடியாக துப்பரவு செய்வதுடன் தொடர்ந்தும் பராமரிக்கப்படல் வேண்டும் பிரதேச சபையினால் வழங்கடுகின்ற கால எல்லையினுள் துப்பரவு செய்யாப்படின் பிரதேச சபையின் ஏற்பாட்டில் துப்பரவு செய்யப்பட்டு கூலியுடன் தண்டப்பணமும் அறவிடப்படும்.

இவ்வாறன பற்றைக்காடுகளை துப்பரவு செய்வதினால் பல்வேறுபட்ட பிரச்சினைகளை தவிர்ப்பதுடன் சூழலையும் அழகாக வைத்திருக்கமுடியும் அதுமட்டுமல்லாது பயிர்ச்செய்கைக்கும் ஊக்கமளிக்கும். நாம் வாழும் சூழலை சுத்தமாக வைத்திருப்பதும் அழகுபடுத்துவதும் எமது கடமை.

அதுமட்டுமல்லாது வீதிகளில் தண்ணீர்பாயும் வடிகால்களில் குப்பைகள் கழிவுகள் போடுவோர் மீது தண்டபணம் அறவிடப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.

பிரதமரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று (29.04.2021) முற்பகல் அலரி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சீன பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயத்தை நிறைவு செய்த பின்னர் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவசரமாக சந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.