”யாழில் மலையகத்தை உணர்வோம்” ஆவணக் கண்காட்சி ஆரம்பம்

யாழ்ப்பாணம் சிவில் சமூகமாக அமைப்புக்கள், கண்டி சமூகமாக அபிவிருத்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் 1823 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 வரையான காலப்பகுதி வரை மலையகத்தின் 200 ஆண்டுகளை முன்னிட்டு யாழில் மலையகத்தை உணர்வோம், மலையகம் 200 என்னும் கருப்பொருளில், மலையகமக்களின் வாழ்வியலை ஆவணமாக்கும் கண்காட்சிகள் இன்று யாழ். தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது.

இதில் இந்திய வாம்சாவளியில் இருந்து இலங்கையின் மலையகத்தில் மீள்குடியேறிய தமது ஜீபனோயத்திற்காக உழைக்கும் மலையக மக்களின் வாழ்வியல் தொடர்பான கண்காட்சிகள் காட்டூன் சித்திரங்களாவும், புள்ளிவிபரத் தரவுகளாகவும், விளக்க புகைப்படச் சித்திரங்களாவும், ஆரம்ப கால முத்திரை வெளியீடுகளாகவும், ஆரம்ப கால தொட்டு இன்று வரையான காலத்தில் அரசியல்வாதிகளின் புகைப்படங்களும், ஒடுக்குமுறையை மக்களின் இயல்புகள் பற்றி இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

யாழில் மலையகத்தை உணர்வோம் மலையகம் 200 என்னும் கருப்பொருளிலான மலையக மக்கள் வாழ்வியலில் ஆவணமாக்கப்படும் கண்காட்சிகள் திறந்துவைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண கல்விப்பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கலந்து கொண்டார்.

கிராமிய வீதிகளை புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பம்- பந்துல குணவர்தன

நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்கும் பணிகள் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி சுமார் 20 பில்லியன் ரூபா கடனுதவி வழங்க இணங்கியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், உரிய கடன் தொகை கிடைத்த பின்னர் வீதிப் புனரமைப்புப் பணிகளை ஆரம்பிக்க முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன,

“இந்நாட்டின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் செயற்பட சர்வதேச நிபுணத்துவத்துவமுடைய பிரான்ஸ் நாட்டு லாசார்ட் நிறுவனமும், சர்வதேச கடன்களை செலுத்தாததால் ஏற்பட்டுள்ள சட்ட விடயங்களுக்கு கிளிபர்ட் ஹான்ஸ் நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. கடன் வழங்குனர்களுடன் அவர்கள் விரிவாக கலந்துரையாடினர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயங்களின் போது ஜப்பான், இந்தியா மற்றும் சீனாவின் ஆதரவைக் கோரினார்.

தற்போது இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டை மேற்கொள்ள சர்வதேச சமூகம் உத்தியோகபூர்வமாக இணங்கியுள்ளது. அது ஒரு நாடாக நாம் பெற்ற வெற்றியாகும். நாடு மீண்டும் சுவாசிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் நாடளாவிய ரீதியில் நிறுத்தப்பட்டிருந்த திட்டங்களை மீள ஆரம்பிக்க முடியும். ஒரு சில வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளன. மேம்பாலங்கள் அமைக்கும் பணி இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றே நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. எனவே, இவ்வாறு நிறுத்தப்பட்ட அனைத்துத் திட்டங்களும் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்பட உள்ளன.

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் சுமார் 20 பில்லியன் ரூபா கடன் உடன்படிக்கை மேற்கொண்டிருக்கிறோம். இந்தக் கடன் தொகை மூலம் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள சேதமடைந்த மற்றும் பயணிக்க முடியாத வீதிகளை புனரமைப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளது. அந்த வீதிகள் குறித்து ஆராயுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளேன். அதன்படி, அடுத்த வாரத்திற்குள் வீதிப் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும்.

புகையிரதப் பாதைகள், அதிவேகப் பாதைகள் குறித்து பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செயற்திறன்மிக்க புகையிரதப் பாதைகளாக மாற்ற, புகையிரத தண்டவாளங்களை நவீனமயப்படுத்த வேண்டும். நான் இந்த அமைச்சுப் பொறுப்பை ஏற்கும் போது இந்திய கடன் திட்டத்தின் கீழ் 160 புகையிரதப் பெட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டிருந்தன. இந்த புகையிரதப் பெட்டிகளுக்கான துறைமுக அபராதத் தொகையை செலுத்திய பின்னர், 123 புகையிரதப் பெட்டிகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களின் அடிப்படையில்தான் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கும் அளவுக்கு நமது நாட்டில் பொருளாதாரப் பலம் இல்லை. துறைமுகங்கள், விமான நிலையங்கள், வருமான வரித்திணைக்களம் உள்ளிட்ட அரச வருமானம் ஈட்டும் நிறுவனங்கள் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்க வேண்டும். தற்போதுள்ள காலாவதியான செயற்பாட்டுப் பொறிமுறையுடன் தொடர்ந்து செல்ல முடியாது.

அமெரிக்கா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்று இலங்கையை மாற்றுவதற்கு அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குவது அவசியமாகும். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொழில்நுட்ப மாற்றத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட பட்ஜெட் ஆகும். ” என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார்

பரீட்சைக்குத் தோற்றும் இளைஞர் உட்பட 7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள், ஜெனரேட்டர் மற்றும் ஸ்பீக்கர்களை வாடகைக்கு எடுத்ததற்காக சிலர் கைது செய்யப்பட்டனர்,

மற்றவர்கள் நவம்பர் 27 அன்று சிவப்பு மற்றும் மஞ்சள் கொடிகள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொண்டு சென்றதற்காக கைது செய்யப்பட்டனர்.

இதில் பலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கூறியுள்ளார்.

பயங்கரவாத தடை சட்டத்தில் பயங்கரவாதம் என வரையறுக்கப்படாத வாகனங்களை வாடகைக்கு எடுப்பது கூட பயங்கரவாதமாக கூறப்பட்டுள்ளதாக என்றும் அம்பிகா சற்குணநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் நினைவு கூறுபவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைப்பது, அரசாங்கத்தின் மீதான தமிழர்களின் அவநம்பிக்கையை மேலும் அதிகரிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதலின் உண்மைகள் கண்டறிப்படும் வரையில் ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்தும் போராடும் – சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பரிசுத்த பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார்.

அந்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியும் தொடர்ந்தும் இருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (30) விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த சபையில் பல தடவைகள் விவாதங்களை நடத்தி இருக்கிறோம். ஆனால் அதற்கு பின்னர் எதுவும் இடம்பெறவில்லை.

தாக்குதல் தொடர்பில் ஆராய குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என சபாநாயகரான நீங்கள் தெரிவித்தீர்கள்.

அமெரிக்க பென்டகன் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட விசாரணைக்குழுக்கு ஒத்ததாக எதிர்க்கட்சியின் தலைமையில் விசாரணை குழு அமைப்பதே யோக்கியம் என நாங்கள் தெரிவித்திருந்தோம்.

அதேபோன்று கோத்தாபய ராஜபக்ஷ் அதிகாத்துக்கு வரும்போது இதன் சூத்திரதாரிகளை தேடுவதாகவே தெரிவித்தார்.

அதேபோன்று ஸ்கொட்யாடை பயன்படுத்திக்கொண்டு விசாரணை ஒன்றை மேற்கொள்வதாக தற்போதைய ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அதேபோன்று இதுதொடர்பாக நிச்சயமாக விசாரணை மேற்கொள்வதாக ஜேர்மன் ஊடகமொன்றுக்கும் அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. மாறாக மறைக்கும் நடவடிக்கையே இடம்பெற்று வருகிறது.

இந்த தாக்குதல் தொடர்பில் பேராயர் கர்தினால், கத்தோலிக்க சபை சத்தியத்தை தேடிக்கொண்டிருக்கின்றனர்.

எனவே உயிர்த்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட எவருக்கும் மன்னிப்பு கிடையாது. அவ்வாறானவர்களுக்கு எதிராக எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்.

அதேபோன்று பயங்கரவாத தாக்குதலுக்கு நேரடிரடியாகவோ மறைமுகமாகவோ ஒத்துழைப்பு வழங்கிய எவருக்கும் மன்னிப்பு இல்லை.

அதேபோன்று இந்த தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமல் தங்களின் கடமை பொறுப்பை புறக்கணித்த எவருக்கும் பாதுகாப்பும் இல்லை சந்தர்ப்பமும் வழங்கப்படாது.

ஏனெனில் இந்த தாக்குதல் காரணமாக பேராயர் கர்தினால் உட்பட கத்தோலிக்க மக்கள் பாரிய வேதனைக்கு ஆளாகியுள்ளனர். பயங்கரவாத தாக்குதல் ஊடாகவே எனக்கும் தந்தை இல்லாமல் போனது.

அதனால் இந்த பயங்கரவாதத்துக்கு எமது நாட்டில் இடமில்லை. பயங்கரவாதத்தை நாட்டில் இருந்து முற்றாக இல்லாதொழிக்க வேண்டும்.

பயங்கரவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு கடமை ரீதியாக தங்களின் பொறுப்பை புறக்கணித்து செயற்பட்ட எவருக்கும் நாங்கள் மனிப்பு வழங்குவதில்லை.

அவர்களையும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்குவோம். இந்த தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ள யாரையும் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் காட்டிக்கொடுக்கப்போவதில்லை. அவர்களுக்கு துராேகம் இழைக்கப்போவதும் இல்லை.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை தேடிக்கொள்ளும் வரை, சத்தியத்தை தேடும் போராட்டத்தை மேற்கொள்ளுமாறு பாப்பரசர் அறிவிப்பு செய்துள்ளார். அந்த போராட்டத்தில் நாங்களும் இருக்கிறோம் என்ற விடயத்தை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

11 இளைஞர்கள் கடத்தல் : வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு!

கொட்டாஞ்சேனை மற்றும் கொழும்பு புறநகர் பகுதிகளில் கப்பம் பெறும் நோக்கத்தில் 11 இளைஞர்களைக் கடத்தி காணாமல் ஆக்கியமை  தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட மற்றும் 14 கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கை அடுத்த வருடம் மார்ச் மாதம் 28ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இன்று (30) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் பிரதிவாதியான முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரணாகொட, தன்னை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும் வரை விசாரணையை ஒத்திவைக்குமாறு அவர் முன்வைத்த கோரிக்கையையும்  மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு ஏற்றுக்கொண்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜா (தலைவர்) நவரத்ன மாரசிங்க மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் : வெரிட்டே ரிசர்ச் ஆய்வில் தகவல்

பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 40% பேர் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளனர் அல்லது தங்களுக்கு இதுதொடர்பில் எந்தவித கருத்தும் இல்லை என்று கூறுகிறார்கள்.
அக்டோபர் மாதம் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பினால் (Syndicated Surveys) நடத்திய கணக்கெடுப்பின் படி, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னணியில் உள்ளூர் அரசியல் சக்திகள் ஈடுபட்டுள்ளதாக இலங்கை சனத் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் – அதாவது 53% – நம்புகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது குறித்து நாட்டில் நிலவும் பின்வரும் மூன்று கருத்துக்கள் கணக்கெடுப்பில் பங்குபற்றியவர்கள் இடையே கேட்கப்பட்டன, தங்களால் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்தை தேர்ந்தெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

⦁ ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

⦁ இது உள்ளூர் அரசியல் சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது.

⦁ உள்ளூர் அரசியல் சக்திகள் மற்றும் ஆபத்தான வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டு வந்த இலங்கை தீவிரவாதிகளால் இது மேற்கொள்ளப்பட்டது.

53% உள்ளூர் அரசியல் சக்திகள் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்புகின்றனர் – 30% இரண்டாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர், 23% மக்கள் மூன்றாவது பதிலைத் தேர்ந்தெடுத்தனர். உள்ளூர் அரசியல் சக்திகளின் தலையீடு இல்லாமல் இது மேற்கொள்ளப்பட்டதாக 8% பேர் மட்டுமே நம்புகின்றனர் (முதல் பதில்). 39% சதவீதம் பேர் தங்களுக்கு இது தொடர்பாக எந்தவித கருத்தும் இல்லை என்றும் அல்லது கருத்து தெரிவிக்க விருப்பமில்லை என்றும் கூறியுள்ளனர்.

2019 ஏப்ரல் 21, (உயிர்த்த ஞாயிறு) அன்று மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று ஆடம்பர ஹோட்டல்களை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் தற்கொலை குண்டுவெடிப்புகளில் மொத்தமாக 269 நபர்கள் கொல்லப்பட்டனர்.

கருத்துக்கணிப்பை நடைமுறைப்படுத்தல்

நாடளாவிய ரீதியில் தேசியளவில் வயது வந்த இலங்கையர்கள் 1,029 பேர் கொண்ட பதில் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு 2023 அக்டோபரில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. 95% நம்பக இடைவெளி மற்றும் ± 3% வழு எல்லையை உறுதிசெய்யும் வகையில் இதன் மாதிரி மற்றும் வழிமுறைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

வெரிட்டே ரிசர்ச் உருவாக்கிய சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு (Syndicated Surveys) கருவியின் ஒரு அங்கமாக இக்கருத்துக்கணிப்பு வாக்களிப்பு பங்காளியான வன்கார்ட் சர்வே (பிரைவேட்) லிமிடட்டினால் நடத்தப்பட்டது. சிண்டிகேட்டட் கணக்கெடுப்பு கருவியானது இலங்கை மக்களின் உணர்வுகளை அளவிடுவதற்கான வாய்ப்பை மற்ற நிறுவனங்களுக்கும் வழங்குகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நினைவு கூர்பவர்களை கைது செய்ய பயன்படுத்தும் இலங்கை அரசாங்கம் – பேர்ள் அமைப்பு

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைகூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவது குறித்து இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான மக்கள் அமைப்பு பேர்ள் கரிசனை வெளியிட்டுள்ளது.

தமிழர்களிற்கு எதிரான பாதுகாப்புபடையினரின் நடவடிக்கைகள் முன்னைய அரசாங்கங்கள் போல தற்போதைய அரசாங்கமும் சிங்கள பௌத்த பேரினவாத கொள்கைகளை பேணுவது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளதை புலப்படுத்தியுள்ளன எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கம் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவதையும் இலங்கையில் தமிழர்களின் குரல்களை ஒடுக்க முயல்வதையும் கண்டிக்கவேண்டும்,குறிப்பாக அவர்கள் இந்த கடினமான தருணங்களில் தங்களின் நேசத்திற்குரியவர்களை நினைகூரும் இந்த தருணத்தில் என பேர்ள் அமைப்பு தெரிவித்துள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தைப் பார்வையிட்டார் இந்திய தூதுவர்

யாழ்ப்பாணம் வருகை தந்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பால்கே இன்று புதன் கிழமை காங்கேசன்துறைமுகப் பகுதிகளை பார்வையிட்டார்.

காங்கேசன் துறை நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அதன் கட்டுமானங்கள் மற்றும் தேவைகள் குறித்து இதன் போது யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் தூதுவருக்கு விளக்கமளித்தனர்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு சிவில் புலம்பெயர் தரப்பினர் டில்லியில் கூட்டாக வலியுறுத்தல்

வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கான அதிகாரங்களும் நிர்வாக கட்டமைப்பும் இல்லாத நிலையில் இந்திய இலங்கை ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா அதியுச்சமான தலையீட்டைச் செய்ய வேண்டுமென வடக்கு கிழக்கு அரசியல் சிவில் புலம்பெயர் தரப்பினர் கூட்டாக இந்தியத் தலைநகர் புதுடில்லியில் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தமிழர்களுக்கான அர்த்தமுள்ள நிரந்தர தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பைச் செய்யவதற்கு இந்தியா வகிபாகமளிக்க வேண்டும் என்றும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாதுள்ளமையால் தற்காலிக ஏற்பாடாக இடைக்கால நிர்வாக சபையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.

இந்திய தலைநகர் புதுடில்லியில் உள்ள ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் தலைவர் கிருஸ்ணபிள்ளை இளங்கோ அமெரிக்க தமிழர் ஐக்கிய அரசியல் செயல்குழுவின் செயலாளர் கலாநிதி. தமோதரம்பிள்ளை சிவராஜ் ஐக்கிய அமெரிக்காவின் தமிழ் செயற்குழுவின் செயலாளர் சுந்தர் குப்புசுவாமி, உலக சமூக சேவை மையத்தின் அறங்காவலர் ஆர்.சி.கதிரவன் தழிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து சிறிநேசன் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளான துரைசாமி தவசிலிங்கம் வேலன் சுவமிகள் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

குறித்த குழுவினர் சார்பில் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குகருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்

நாங்கள் இங்கு மூன்று விடயங்களை பிரதானமாக கூறுவதற்கு கடமைப்பட்டுள்ளோம். முதலாவதாக பூகோள ரீதியாக தாக்கம் செலுத்துகின்ற விடயமாகும்.

இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் சீனா சார்பு நிலையில் செயற்பட்டு வருகின்றார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கு மாகாணங்கள் இந்தியாவின் தென் பகுதிக்கு அருகாமையில் உள்ளன. அத்தோடு கலாசார சமய மொழி உள்ளிட்ட பல்வேறு விடயங்களிலும் இந்தியாவுடன் மிக நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

அந்தவகையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள பெரும்பான்மையானவர்கள் எங்களது கடவுள் இந்தியா எம்மை ஆதரவாக பார்த்துக்கொள்ளும் என்ற நிலைப்பாட்டில் நம்பிக்கையுடன் இருக்கின்றார்.

அதுமட்டுமன்றி இந்த நம்பிக்கையானது எமது பாதுகாப்பையும் இந்தியாவின் தென்பிராந்திய தேசிய பாதுகாப்பையும் உறுதி செய்வதாக உள்ளது. அதனடிப்படையில் இந்த விடயம் பூகோள ரீதியாக முக்கியமானதாகும்.

இரண்டாவதாக சிங்கள பௌத்த திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களுக்கு நாம் நேரடியான சாட்சியாளர்களாக இருக்கின்றோம். பிரித்தானிய காலனித்தத்துவம் முடிவுக்கு வந்தது. அதன்பின்னர் இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவில் சிறுபான்மை மக்கள் பாகுபாட்டுக்கு உட்படுத்தப்படக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அவ்வாறு இருக்கதக்கதாக முதலில் இந்திய தமிழர்களின் பிரஜாவுரையை பறித்து அவர்களை நாடு கடத்தினார்கள். அதன் பின்னர் சிங்களம் மட்டும் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கு அடுத்தபடியாக இனக்கலவரங்கள் அரங்கேற்றப்பட்டு தமிழ் மக்கள் நாட்டிலிருந்து வெளியேறும் நிலைக்கு வலிந்து தள்ளப்பட்டார்கள். இதனால் தற்போது மில்லியன் கணக்கான தமிழ் மக்கள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நிலைமைகள் உருவாகியுள்ளன.

தொடர்ந்து எமது இளைஞர்கள் யுவதிகள் பல்கலைக்கழகங்களில் உள்நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் தரப்படுத்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. அத்தோடு இலங்கை அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான செயற்பாடுகள் தொடர்ந்ததன் காரணமாக இளைஞர்கள் ஆயுதங்களை கையிலெடுத்தார்கள். விடுதலை இயக்கங்கள் தோற்றம் பெற்றன. இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட ஆயுத ரீதியான போராட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாக நடைபெற்றிருந்தது.

ஆயுதப்போராட்டம் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுதல் பௌத்த மதம் சார்ந்த நிர்மாணங்களை மேற்கொள்ளுதல் என்று திட்டமிட்ட ஆக்கிரமிப்புக்களை முன்னெடுத்து அரசாங்கம் கொள்கை ரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

அரசாங்கம் தொடர்ச்சியாக தமிழர்களை ஓரங்கட்டும் செயற்பாட்டை பல்வேறு வழிகளில் முன்னெடுத்து வருகின்றது. உதாரணமாக கூறுவதாக இருந்தால் போர் நிறைவுக்கு வந்ததன் பின்னரும் இராணுவத்துக்கான ஆட்சேர்ப்புக்கள் நடைபெறுகின்றன. பாரியளவான நிதி ஒதுக்கீடுகள் வரவு செலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்படுவதோடு தொடர்ச்சியாக அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்படுகின்றது.

இவ்வாறான நிலைமைகளால் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள படைகள் தமிழர்களின் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்கின்ற செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. புலனாய்வாளர்களின் பிரசன்னங்கள் பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ளிட்டவையும் நீடிக்கின்ன.

அதேபோன்று வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்கள் பிற பகுதிகளில் இருந்து படைகளின் உதவிகளுடன் இதேபோன்று பௌத்த தேரர்கள் தமது விரிவாக்கங்களைச் செய்து வருகின்றார்கள். ஆயிரக்கணக்கான இந்துக் கோவில்கள் அழிக்கப்பட்டுள்ளன.

இந்துக்களின் தொல்பொருள் பகுதிகள் சிங்கள பௌத்தர்களுக்குச் சொந்தமானவையாக அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்பாடுகளை பௌத்த தேரர்கள் முன்னெடுக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக காணப்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்தவதற்கு யாருக்கும் அதிகரங்கள் காணப்படவில்லை. அதேபோன்று ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளில் ரூடவ்டுபடுகின்ற தரப்புக்கள் இதுவரையில் தண்டனைக்கு உட்படுத்தப்படாத நிலைமைகளும் நீடிக்கின்றன.

மூன்றாவதான விடயம் தமிழர்களுக்கச் சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பதும் அபகரிப்பதாகும். 1978ஆம் ஆண்டு இலங்கையின் மிகப்பெரும் நதியான மகாவலி நீர் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு கொண்டுவரப்பட்டு நீர்ப்பாசன நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு வாய்ப்பளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலும் மகாவலி அதிகாரசபை ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டாலும் தற்போது வரையில் ஒருதுளி நீர் கூட வடக்கு மாகாணத்துக்க கொண்டுவரவில்லை. அவ்வாறு கொண்டுவருவதற்கு சாதமான நிலைமைகள் இல்லை என்று எமது பொறியியலாளர்கள் உறுதிப்படுத்தியும் உள்ளனர்.

இவ்வாறான நிலையில் மகாவலி திட்டத்தின் பெயரால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தென்னிலங்கையில் இருந்து சிங்கள மக்கள் வரவழைக்கப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றார்கள். இந்த நிலைமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அத்துடன் அரச திணைக்களங்களும் ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கும் ஆபகரிப்புச் நடவடிக்கைகளுக்கும் துணையாக உள்ளன.

இவ்விதமான பிரச்சினைகள் சமகாலத்தில் தீவிரமடைவதால் நாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருகின்றோம். ஆகவே இந்த விடயங்கள் உடனடியாக நிறுத்தப்பட்டு தமிழ் மக்களின் பூர்வீகமான பகுதிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதோடு அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டியதும் அவசியமாகின்றது.

தமிழர்கள் தமது பூர்வீக நிலங்களில் பாதுகாக்கப்படுவதும் அவர்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதும் உறுதி செய்யப்பட வேண்டுமாக இருந்தால் அதற்கான வகிபாகத்தை இந்தியாவாலேயே மேற்கொள்ள முடியும். இவ்விதமான நிலைமைகள் மூன்று தசாப்தத்துக்கு முன்னதாகவே காணப்பட்டமையை உணர்ந்த காரணத்தினால் தான் இந்தியா இலங்கையுடன் ஒப்பந்தத்தினை மேற்கொண்டது.

அந்த ஒப்பந்தம் தற்போது வரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. வடக்கு கிழக்கு தமிழர்கள் தற்போது பாதுகாப்பற்ற நிலைமையை உணர்ந்துள்ளார்கள். அவர்களின் விடயங்களில் கரிசனைகளைக் கொள்வதற்கு சரியானதொரு நிறுவனக் கட்டமைப்பு காணப்படவில்லை. ஆகவே இந்திய இலங்கை ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

அதேநேரம் 13ஆவது திருத்தச்சட்டம் வடக்கு கிழக்கு தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வாக அமையாது விட்டாலும் தமிழர்களின் கையில் சிறுஅதிகாரத்தை அளிக்கும் வகையிலான மாகாண சபைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படவில்லை. அதனடிப்படையில் இந்தியா தமிழர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளும் சிக்கலான சூழல்களும் நன்றாகவே அறிந்துள்ளது. ஆகவே அதற்கான அர்த்தபூர்வமான தீர்வினை வழங்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதில் இந்தியாவின் வகிபாகம் மிகவும் முக்கியமானது.

மேலும் தொடர்ச்சியாக மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையில் தமிழர்களுக்கான நிர்வாகக் கட்டமைப்பொன்று காணப்படாதுள்ள நிலையில் தற்காலிக ஏற்பாடாக இடைகால நிர்வாக சபையொன்றை ஸ்தாபிப்தற்கும் இந்தியாவின் வகிபாகம் முக்கியமானதாகின்றது.

அதுமட்டுமன்றி இந்தியா இலங்கையுடன் 1987ஆம் ஆண்டு மேற்கொண்ட ஒப்பந்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவன் ஊடாக இந்தியா தனது தென்பிராந்தியத்தின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு வடக்கு கிழக்கு தமிழர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்திக்கொடுக்க முடியும் என்றார்.

பதில் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் கடும் விசனம்

பதில் பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளமையை கடுமையாக எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ள பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை அவமதிக்கும் செயலாளர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தேசபந்து தென்னகோன் மீது காணப்படும் குற்றச்சாட்டுக்கள் எவற்றையும் கருத்திற் கொள்ளாது அவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் மூலம், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பதும் தெளிவாகிறது என்றும் பேராயர் விசனம் வெளியிட்டுள்ளார்.

கத்தோலிக்க ஆயர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமையை பேராயர் மெல்கம் கர்தினார் ரஞ்சித் ஆண்டகை நிராகரிப்பதோடு, அதனை முற்றாக எதிர்க்கின்றார். இந்த நியமனமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும்.

273 அப்பாவி மக்களை கொலை செய்த, மேலும் 500 பேரை படுகாயமடயச் செய்து அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை தடுப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்ட போதிலும், அதனை உதாசீனப்படுத்தியமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் குற்றஞ்சாட்டப்பட்டு அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இதுவரையிலும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேசபந்து தென்னகோன் போன்றோர் தமது கடமைகளை முறையாக நிறைவேற்றியிருந்தால் 273 அப்பாவி மக்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள். அவர்கள் தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் உதாசீனப்படுத்தியதனாலேயே அவர்கள் கொல்லப்பட்டனர். அவ்வாறிருக்கையில் தேசபந்து தென்னகோன் போன்றோர் நாட்டின் பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை மிலேச்சத்தனமான செயற்பாடாகும்.

2022 மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற அமைதியான போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்துகல்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட 17 கோடியே 85 இலட்சத்தை வழக்கிற்காக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காமல், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வழங்குமாறு கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களும் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நபரொருவரை பதில் பொலிஸ் மா அதிபராக நியமித்துள்ளதன் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்களின் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அக்கறையும் இல்லை என்பது புலப்படுகிறது.

பொலிஸ் மா அதிபர் நியமனத்துக்கு தேசபந்து தென்னகோனுடைய பெயரை பரிந்துரைக்க வேண்டாம் என்று பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை கடிதம் மூலம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். சட்டத்தரணிகள் உட்பட சமூகத்தில் பொது மக்கள் மத்தியிலும் இந்த நியமனம் தொடர்பில் கடும் எதிர்ப்பு காணப்படுகிறது. இவை எவற்றையுமே கவனத்தில் கொள்ளாது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பொலிஸ் அமைச்சர் உட்பட ஜனாதிபதியை சூழவுள்ள சுயநலவாதிகள் சிலரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நியமனம் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. இந்த நியமனமானது நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை பொலிசுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அவமதிப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.