ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராகக் களமிறங்கத் தயார் – சம்பிக்க

பரந்துபட்ட அரசியல் கூட்டணியொன்று எதிர்காலத்தில் மலரவுள்ளதாகவும், அதன்மூலம் ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு கோரிக்கை விடுத்தால் அதனை ஏற்பதற்கு நான் தயார்” என்றும், ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“ஜனாதிபதித் தேர்தல்தான் தற்போது நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலை முதலில் நடத்துவதற்கு எவராவது முற்பட்டால் அது வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தால் தாக்கம் செலுத்தும்.

வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பை எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் செய்தாக வேண்டும். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகக் களமிறங்குமாறு எனக்கு இன்னும் கோரிக்கை விடுக்கப்படவில்லை.

எதிர்காலத்தில் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்தக் கூட்டணி கோரிக்கை விடுத்தால் பொதுவேட்பாளராகக் களமிறங்கத் தயார்” என தெரிவித்துள்ளார்.

கச்சதீவு விவகாரம் ஏற்கனவே முடிந்து போன விடயம் – இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

கச்சதீவு சம்பந்தமாக பல்வேறு விதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகின்ற நிலையில், அந்த விவகாரம் இந்தியாவின் உள்ளகப் பிரச்சினையாகும் என்று வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அரை நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே நிறைவடைந்த கச்சதீவு விடயம் சம்பந்தமாக தற்போது எவ்விதமான உரையாடல்களும் இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கைக்குச் சொந்தமாக கச்சதீவு தற்போது கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. இந்த கச்சதீவானது 1974இல் அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தியினால் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகும்.

இந்நிலையில் தற்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி கச்சதீவு மீட்புக் கோசத்தினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளது. அத்துடன், காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான திராவிட முன்னேற்ற கழகமும் தான் கச்சதீவினை இலங்கைக்கு தாரைவார்த்தது என்பதையும் வெளிப்படுத்தி வருகிறது.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிடுகையிலேயே வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்நாட்டில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இத்தகையதொரு சூழல் தான் கச்சதீவு விடயம் இந்திய அரசியல் கட்சிகளால் சீர்தூக்கப்பட்டுள்ளது. ஆகவே எம்மைப் பொறுத்தவரையில் இந்தியா இந்த விடயம் சம்பந்தமாக எம்முடன் உத்தியோகபூர்வமாக இன்னமும் உரையாடவில்லை. எனினும், அயல்நாடு என்ற வகையில் நாம் குறித்த விடயம் சம்பந்தமாக கரிசனைகளைக் கொண்டுள்ளோம்.

உண்மையில் கச்சதீவு 50 ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிலமாகும். ஆகவே, கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்பட்டதாகிவிட்டது. இவ்வாறான நிலையில், தற்போது அதனைப் மீளப்பெறுமாறு வலியுறுத்துவதானது யதார்த்ததுக்கு புறம்பானதாகும். அதுமட்டுமன்றி, தமிழகத்தில் காணப்படுகின்ற உள்ளக அரசியல் நிலைமைகளே இந்த விடயம் சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுவதற்கு காரணமாகின்றது.

எனவே, பிறிதொரு நாட்டின் உள்ளக அரசியல் விடயங்கள் சம்பந்தமாக தலையீடு செய்ய முடியாது. அதுவொரு முடிந்துபோன விடயமாகும் என்றார்.

முதலில் எந்தந் தேர்தல் என ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் – பசில் ராஜபக்ச

எந்த தேர்தலை முதலில் நடத்துவது என்பதை ஜனாதிபதியே தீர்மானிக்கலாம் அதற்கு பொதுஜனபெரமுன இடமளிக்கும் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் அவருக்கு தெளிவுபடுத்தியுள்ளோம் அத்துடன் அது முடிவடைந்துவிட்டது இனி அவரே தீர்மானிக்கலாம் என பசில் ராஜபக்ச சண்டே டைம்ஸிற்கு தெரிவித்துள்ளார்.

எங்கள் கட்சி எந்த வகையிலும் ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்காது என பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை பசில் ராஜபக்ச ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே பசில்ராஜபக்ச இதனை தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்தலை முதலில் நடத்தவேண்டும் என்ற தனது தனிப்பட்ட கோரிக்கைக்கு அப்பால் எந்த தேர்தலை முதலில்நடத்தவேண்டும் என்பது குறித்து வேறு எந்த பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளவில்லை முடிவு என்பது முற்றிலும் ஜனாதிபதியின் கரங்களிலேயே உள்ளது எனவும் முன்னாள் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இரண்டு தேசிய தேர்தல்களையும் எதிர்கொள்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தயாராகிவருகின்றது 9ம் திகதி கட்சியின் மத்திய நிறைவேற்றுகுழுவின் கூட்டம் இடம்பெறவுள்ளது எனினும் இந்த கூட்டத்தில் தேர்தல்கள் குறித்து ஆராயப்படாது எனவும் அவர் தெரிவித்;துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை – ஜனாதிபதி

ஐக்கிய மக்கள் சக்தியில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை எனவும், அதன் பொருளாதாரக் கொள்கையை மொட்டுக் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட குழுவே தற்போது கையாள்வதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உரிமையை பிரகடனப்படுத்தி 2020ஆம் ஆண்டு சிறிகொத்தவைக் கைப்பற்றுவதற்கு தயாரான ஜக்கிய மக்கள் சக்தி, இன்று மொட்டுக் கட்சித் தலைவர் உள்ளிட்டோருக்கு அடிபணிந்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

2022 ஜூலையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன், நாட்டின் கட்சி அமைப்பிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தான் எந்த அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைவரும் நாட்டைப் பற்றி சிந்தித்து அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது:

”பொருளாதார நெருக்கடி காரணமாக ஜூலை 2022 இல் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், நாட்டின் கட்சி முறைமையிலும் மாற்றம் ஏற்பட்டது. இன்று அனைவரினதும் ஒத்துழைப்புடன் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. இந்த நிலையைப் பாதுகாத்து முன்னெடுத்துச் செல்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

கடந்த இரண்டு வருடங்களாக எமது பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டங்களை சிலர் தமது பாராளுமன்ற பதவிக் காலத்தில் மேற்கொள்ளவில்லை. நாட்டில் பொருளாதார சிக்கல்கள் இருந்தபோதிலும், குறைந்த வருமானம் பெறும் மக்களுக்காக அஸ்வெசும திட்டத்தை ஆரம்பித்து, அதுவரை இருந்த கொடுப்பனவை மூன்று மடங்காக உயர்த்த பாடுபட்டோம். மேலும், 20 இலட்சம் பேருக்கு நிரந்தர காணி உறுதிப்பத்திரம் வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இவை நாட்டின் பொருளாதாரம் ஒழுங்காக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்காத வேலைத்திட்டங்கள் என்றே கூற வேண்டும்.

இந்த வேலைத் திட்டங்களை தொடர பாராளுமன்றத்தின் பெரும்பான்மையானவர்கள் எனக்கு ஆதரவளித்துள்ளனர். பொதுஜன பெரமுனவின் ஒரு பகுதி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவை இதில் அடங்கும். ஏனைய கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதில் உள்ளனர். இந்த கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து முன்னேற வேண்டும்.

பொதுஜன பெரமுனவில் இருந்தாலும் சரி, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்தாலும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்தாலும் சரி, வேறு கட்சியாக இருந்தாலும் சரி, அரசாங்கத்தின் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

கடந்த காலத்தில் அரசியல் கட்சிகளில் பிளவுகள் ஏற்பட்டன. மொட்டுக் கட்சியில் இருந்து சிலர் எதிர்க்கட்சிக்கு சென்றனர். இப்போது அந்தக் குழு ஐக்கிய மக்கள் சக்தியை வழிநடத்துகிறது. ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த தாங்கள் சிறிகொத்தாவைக் கைப்பற்ற வேண்டும் என்று 2020 இல் ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்திருந்தது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி என்று அழைக்கப்படும் குழு தற்போது மொட்டுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட குழுவின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் ஐக்கிய தேசியக் கட்சி இல்லை. ஐக்கிய தேசியக் கட்சியை பாதுகாத்தவன் நான். ஜே.ஆர் ஜயவர்தன, ஆர், பிரேமதாச, டி.பி. விஜேதுங்க, இவர்கள் அனைவருடனும் நாங்கள் பணியாற்றினோம்.

இன்று ஐக்கிய தேசியக் கட்சி என்று தங்களை அழைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்திக்கு எந்த உரிமையும் இல்லை. இன்று எமக்கு பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நாட்டு நலனுக்காக நாம் இணைந்து செயற்பட வேண்டும். இன்று அரசியல் போக்கு மாறிவிட்டது.

நீங்கள் அனைவரும் கிராமங்களுக்குச் செல்ல வேண்டும். 20 இலட்சம் நிரந்தர காணி உறுதிப் பத்திரங்களில் 10 இலட்சம் இதுவரை தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் அந்தப் பத்திரங்களை மக்களுக்குப் பகிர்ந்தளிக்க முடியும். எனவே இந்த கண்டி மாவட்டத்தில் உள்ள நீங்கள் அனைவரும் நல்ல ஒருங்கிணைப்புடன் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பீர்கள் என நான் நம்புகிறேன்.” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்றத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (07) கலந்துகொண்டார்.

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்து மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கிராமங்களை ஒன்றிணைத்து முன்னாள் உள்ளுராட்சி மன்ற தலைவர்களின் அங்கத்துவத்துடன் ஆலோசனை அமைப்பு ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு தெரிவித்தார்.

இதன்படி கிராமங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நேரடியாக அறிவிக்கும் பொறிமுறையொன்று நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் “அஸ்வெசும” வேலைத்திட்டம் மற்றும் “உறுமய” காணி உறுதி வேலைத்திட்டத்தில் நேரடியாக பங்குபற்றுமாறு முன்னாள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்த ஜனாதிபதி, தேவையான வசதிகளை செய்து தருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், அரசாங்க வேலைத் திட்டங்களை அமுல்படுத்துவதற்கு முன்னோடிகளாக உள்ளூராட்சி பிரதேசங்களில் உள்ள இளைஞர்களை முன்னோக்கி கொண்டு வர வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அமைச்சர் மனுஷ நாணயக்கார, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஶ்ரீங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சதி செய்வதாக மைத்திரிபால குற்றச்சாட்டு

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சதி செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்.

சுதந்திரக் கட்சியை அரசாங்கத்துடன் இணையச் செய்யும் நோக்கில் தாம் தலைமைப் பதவியில் நீடிப்பதனை தடுக்க நீதிமன்றின் உதவி நாடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த சதி திட்டத்தின் பின்னணியில் சந்திரிக்கா செயற்பட்டு வருவதாக மைத்திரி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மீண்டும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்து உண்மை நிலைமையை நீதிமன்றில் எடுத்துரைக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்த உள்ளதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள், மாணவர்களை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரித்தமை தொடர்பில் பொலிஸாருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை

யாழ் தெல்லிப்பழை பாடசாலையொன்றில் அண்மையில் இடம்பெற்ற இல்ல மெய்வன்மை போட்டியின் இல்ல அலங்காரங்கள் தொடர்பில் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பழை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாளைய தினம்(05) பிற்பகல் 2.30 மணிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனலைதீவில் சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு

யாழ்.அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம்(04) இடம்பெற்றது.

இலங்கை இந்திய அரசுகள் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்திய தனியார் நிறுவனத்தின் நிதி உதவியுடன் அனலைதீவில் அமைக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான காற்றாலை அமையவுள்ள அனலைதீவு தெற்கு பகுதியில் இந்திய நிறுவன மின் பொறியியலாளர் தினேஷ் பாண்டியன் முன்னிலையில் “பூமி பூஜை” ஆரம்ப நிகழ்வு இன்று காலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

சாணக்கியமற்ற ஈழத் தமிழர் அரசியல் – யதீந்திரா

சில தினங்களுக்கு முன்னர் ரெலோவின் 11வது தேசிய மகாநாடு இடம்பெற்றது. அதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான, செந்தில் தொண்டமானும் விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். இந்த நிகழ்வில் பேசிய தொண்டமான் குறிப்பிட்ட விடயமொன்று என்னை கவர்ந்தது. அதாவது, போராட்டங்கள் உச்சத்தில் இருக்கின்ற போது நாங்கள் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தொண்டர்கள் கேட்பார்கள். அதற்கு எங்களின் ஜயா சௌமியமூர்த்தி தொண்டமான் கூறுவார் – நாங்கள் தோசை சுடுகின்றோம். தோசைக்கல் எங்களுடையதுதான் – அடுப்பும் எங்களுடையதுதான், அடுப்பை எரிக்க பயன்படும் நெருப்பும் எங்களுடையதுதான் (எரிவாயு) வீடும் எங்களுடையதுதான். அதற்காக எங்களுடைய வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு, ஆறுதலாக வந்து தோசையை பார்த்தால் தோசை இருக்குமா?
அப்படித்தான் போராட்டங்களும், போராட்டத்தில் உச்சத்தில் இருக்கின்ற போதே, சிலதை விட்டுக்கொடுத்து எடுக்கக் கூடியவற்றை, எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறில்லாதுவிட்டால் நாம் விடயங்களை சாதிக்க முடியாமல் போகும். ஏனெனில் போராட்டத்தின் வேகம் எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது. தங்கள் ஜயா தங்களுக்கு கற்றுத்தந்த சாணக்கியத்தினால்தான், நாங்கள் இன்று இந்த நிலையில் இருக்கின்றோம் என்று தொண்டமான் கூறுகின்ற போது, எங்களுடைய மூத்த தலைவர்கள் என்போர் எங்களுக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத் தந்திருக்கின்றனர் என்னும் கேள்வியே என்னுக்குள் எழுந்தது.

எங்கள் ஜயாக்களும், எங்கள் அண்ணன்களும் தங்களின் அடுத்த தலைமுறைக்கு எவ்வாறான சாணக்கியத்தை கற்றுத்தந்துவிட்டுச் சென்றிருக்கின்றனர்? வரலாறு முழுவதும் முன்னோடிகள் விட்டுச் செல்கின்ற வழித்தடங்களிலிருந்துதான், அடுத்த தலைமுறை தனக்கான எதிர்காலத்தை ஆக்கிக்கொள்கின்றது. ஆனால் தமிழ் மக்களின் நிலையோ சாண் ஏற முழம் சறுக்கும் கதையாகவே தொடர்கின்றது. இதற்கு என்ன காரணம்? ஒரு வலுவான அரசியல் அடித்தளத்தை தமிழர்களின் மூத்த தலைமுறை விட்டுச் செல்லவில்லை.

இன்று தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ, பிச்சை வேண்டாம் ஜயா – நாயை பிடியுங்கள் என்னும் நிலைமையை வந்தடைந்திருக்கின்றது. இதற்காக, நாம் எவரையாவது, குற்றம்சாட்ட வேண்டும் என்றால், நமது மூத்த தலைமுறை முழுவதையும் குற்றவாளிக் கூண்டில், நிறுத்துவதை தவிர வேறுவழியிருக்காது. ராஜதந்திரம் பற்றி அன்ரன் பாலசிங்கத்தின் ஒரு கூற்றை கவிஞர் புதுவை இரத்தினதுரை கூறியது நினைவுண்டு. அதாவது, ராஜதந்திரம் என்பது தொடங்கிய இடத்திற்கே திரும்பிச் செல்வதல்ல என்பாராம். ஆனால் இன்று தமிழரின் அரசியல் நிலையோ தொடங்கிய இடத்தில் கூட ஆரம்பிக்க முடியாத நிலையில் அல்லவா இருக்கின்றது. இந்தப் பின்புலத்தில் நோக்கினால், ராஜதந்திரத்தின் அரிச்சுவடியைக் கூட தமிழ் அரசியல் சமூகம், அறியவில்லை என்னும் முடிவுக்கல்லவா நாம் வரவேண்டியிருக்கின்றது.

நான் முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்ட விடயத்தை இந்த இடத்தில் நினைவுகொள்வது பொருத்தமென்று எண்ணுகின்றேன். அதாவது, போராட்டங்கள் பிழையில்லை ஆனால் நாங்கள் ஆரம்பிக்கும் போராட்டங்களை எப்போது முடிக்க வேண்டுமென்று எங்களுக்குத் தெரிய வேண்டும் – அவ்வாறில்லாது, நாங்கள் ஆரம்பித்த போரட்டத்தை இன்னொருவர் முடிப்பாரானால், அப்போது எங்களுக்கு சர்வ நாசமே மிஞ்சும். இந்த பின்புலத்தில் நோக்கினால் நமது போராட்டத்தை திருப்பிப்பார்த்தால் நமது கையறு நிலையை இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இவ்வாறான அனுபவங்களுக்கு பின்னர் கூட நாங்கள் அரசியல் யதார்த்தங்களை புரிந்துகொள்ள முடியாதவர்களாக இருப்பதுதான் கவலையானது. நாங்கள் உயர்த்திப் பிடிக்கும் சுலோகங்கள் மூலம் மக்களை எந்தத் திசை நோக்கி கொண்டு செல்ல முயற்சி;க்கின்றோம்? இந்தக் கேள்விக்கான பதில் இல்லாமலேயே, நாம் அரசியலை முன்னெடுத்து வருகின்றோம். கப்பல்கள் வருகின்றன, வெளிநாடு செல்ல விரும்புவோர் அனைவரும் ஏறலாம் என்றால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் எவருமே இருக்க மாட்டார்கள். இதுதான் இன்றைய நிலைமை. மக்களுக்கு நம்பிக்கையை வழங்க முடியாத அரசியல் தலைமைகள், வெறும் சுலோகங்களை உயர்த்துவதில் என்ன பொருளுண்டு?

ஓரு சிறிய இனத்தால் ஆயுத போராட்டத்தில் அதிக காலத்தை செலவிட முடியாதென்று, அன்றைய சூழலிலேயே அரசறியவில் அறிஞர் மு.திருநாவுக்கரசு போன்றவர்கள் கூறியிருக்கின்றனர். எனது தேடலில், உண்மையில் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தோடு ஆயுதப் போராட்டம் முடிவுற்றுவிட்டது. இந்த உண்மையை விளங்கிக் கொள்வதற்காக நாங்கள் கொடுத்த விலையோ கணக்கிலடங்காது. உண்மையில் அன்றே இந்த உண்மையை விளங்கிக் கொண்டிருந்தால், நாங்கள் முள்ளிவாய்க்காலை சந்தித்திருக்க வேண்டி வந்திருக்காது. இது ஒரு வராலாற்றுப் படிப்பினை.
அமெரிக்க தத்துவஞானியான, ஜோர்ஜ் சந்தயாணாவின் கூற்று ஒன்றுண்டு. அதாவது, வரலாற்றின் தவறுகளை மறப்போர் அந்தத் தவறுகளை மீளவும் செய்யச் சபிக்கப்பட்டவர்களாவர். இது க.வே.பாலகுமாரனின் மொழிபெயர்ப்பு. விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தராக அறியப்பட்ட க.வே.பாலகுமாரன் தனது கட்டுரையொன்றில் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் அவர் இந்தக் கூற்றை சிங்களவர்களை நோக்கியே பயன்படுத்தியிருப்பார். சிங்களவர்கள் வரலாற்றிலிருந்து எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்னும் தனது பார்வையை நிறுவுவதற்காகவே, அவர் இந்தக் கூற்றை பயன்படுத்தியிருப்பார். ஆனால் இந்தக் கூற்று இப்போது யாருக்குப் பொருத்தமானது என்பதை வரலாறு நிரூபித்துவிட்டதல்லவா!
இறுதி யுத்தத்தின் போதான நிலைமைகளை பாவத்தின் சம்பளம் என்று பாலகுமாரன் வர்ணித்த கதையுமுண்டு. ஒரு வேளை, அவர் உண்மைகளை உணர முற்பட்டிருக்கலாம். இதே போன்றுதான், அனைத்து விடயங்களையும் நியாயப்படுத்திக் கொண்டிருந்த அன்ரன் பாலசிங்கம், அனைத்தும் கைமீறிப் போய்விட்டது என்பதை உணர்ந்தே, இந்தியாவை நோக்கிச் சென்றார். இந்திய படைகளுடன் விடுதலைப் புலிகள் மோதியமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ராஜீவ்காந்தி படுகொலை ஆகியவற்றுக்காக இந்திய அரசாங்கத்திடமும், இந்திய மக்களிடம் வருத்தம் தெரிவித்ததுடன், கடந்தகாலத்தை பின்னுக்குவைத்து, பெருந்தன்மையுடன் தலையீடு செய்ய வேண்டுமென்றும் கோரிக்கைவிடுத்திருந்தார். ஆனால் இன்றோ இவற்றிலிருந்து எதனையுமே கற்றுக்கொள்ளாத ஒரு குழுவினரோ, தொடர்ந்தும் அரசியல் விடலைகளாகவே தங்களை காண்பித்துக் கொள்கின்றனர்.

ஒரு வேளை அவர்கள் உண்மையிலேயே விடலைகளாகவே இருக்கலாம் . அவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அவர்கள் அறியாமலும் இருக்கலாம் ஆனால் அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பொறுப்பிலிருக்கும், அரசியல் கட்சிகளின் தலைவர்களுமல்லவா, அனைத்துக்கும் பின்னால் இழுபட்டுச் செல்லுபவர்களாக இருக்கின்றனர். அண்மையில் இடம்பெற்ற சாந்தனுக்கான அஞ்சலி நிகழ்வும் அதன் போது வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களும் இதற்கு சிறந்த உதாரணமாகும். நாங்கள் எந்தளவிற்கு வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ள முடியாத இனமாக இருக்கின்றோம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.
கடந்த பதின்நான்கு வருடங்கள் என்னவெல்லாம் பேசப்பட்டது. சற்று அனைத்தையும் திருப்பிப் பாருங்கள். சர்வதேச அழுத்தங்கள் இலங்கையின் குரல்வளையை நெருக்கப் போகின்றது, இனி அவர்கள் தப்ப முடியாது என்றெல்லாம் பேசப்பட்டது. அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு சென்று வந்த பின்னர். அமெரிக்கா விரைவில் கடுமையான நடவடிக்கை ஒன்றை எடுக்கவுள்ளது என்றவாறு கதைகள் புனையப்பட்டன. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச நீதிமன்றம் தொடர்பிலும் ஏராளமாக பேசப்பட்டது. ஜ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாருக்கு கடிதம் எழுதுவது தொடர்பில் சண்டைகள் இடம்பெற்றன. எதனை எவ்வாறு உள்ளடக்குவது என்று தங்களுக்குள் மோதிக் கொண்டன கட்சிகள். மக்களோ, அனைத்தையும் சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தனர். ஆனால் என்ன நடந்தது? சொல்லிக் கொள்ளுமளவிற்கு ஏதாவது நடந்ததா? ஆனால் பதின்நான்கு வருடங்கள் சென்றுவிட்டன.

2012இல் அமெரிக்க அனுசரணையில் இலங்கையின் மீதான பிரேரணை கொண்டுவரைப்பட்டது. இந்தக் காலத்தில் இந்தியா என்றொரு பிராந்திய சக்தி இருப்பதையே சம்பந்தனும் அவரது தலைமையில் இயங்கிய கூட்டமைப்பும் மறந்திருந்தது. ஆனால் ரெலோவின் முயற்சியில் 2022இல், இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமந்திரன் அதற்கு எதிரான கருத்துக்களையே பொது வெளிகளில் முன்வைத்தார். அவருக்கு அந்த முயற்சியில் ஆர்வமில்லை என்றே தெரிந்தது. முயற்சியில் ஆர்வமில்லையா அல்லது இந்தியாவை நோக்கி மீண்டும் செல்வதை அவர் விரும்பவில்லையா? ஒரு வேளை மேற்குலக அழுத்தங்கள் தொடர்பில் அதிகம் பேசியதால், தனது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமலும் இருந்திருக்கலாம். பல்வேறு இழுபறிகளுக்கு பின்னர், ஆறுகட்சிகளின் தலைவர்களது கையெழுத்துடன் அந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. உண்மையில் பத்துவருட கால, மேற்குலகம் நோக்கிய தமிழர் அரசியல் நகர்வுகளின் தோல்விதான், இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்னும் நிலைமையை உருவாக்கியது. 2006இல் பாலசிங்கம் எவ்வாறு வேறு வழிகள் எதுவுமின்றி, இந்தியாவை நோக்கிச் செல்ல வேண்டுமென்று சரியாக சிந்தித்தாரோ, அவ்வாறுதான் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் சிந்தித்தன. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அதற்கு தலைமை தாங்கியிருந்தார்.

இந்தியா இல்லாமல் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு நகர்விலும் இதுவரையில் தமிழர்களால் ஒரு படி கூட முன்னோக்கி நகர முடியவில்லை. இதுதான் நமது இதுவரையான அரசியல் வரலாறு சொல்லும் உண்மை. இந்த உண்மையை புறம்தள்ளிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நாம் பின்நோக்கியே சென்றிருக்கின்றோம். இனியும் இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல் செயற்பட்டால் தொடர்ந்தும் இப்படியே ஆதங்கப்பட்டுக் கொண்டு, அவ்வப்போது, சில எதிர்ப்புக்களை காண்பித்துக் கொண்டு, எங்களின் நாட்களை செலவிட்டுக் கொள்வதாகவே எங்கள் அரசியல் மிஞ்சும். காலப்போக்கில் தமிழ் தேசிய அரசியல் என்பது, வெறுமனே, யாழ் குடாநாட்டு அரசியலாகவே சுருங்கிப் போகும்.

நன்றி – தினக்குரல் கட்டுரை

வங்குரோத்து அடைந்த நாட்டுக்கு வறுமை புதிதல்ல – பந்துல குணவர்தன

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறைப் பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல என்றும், வறிய மக்களின் பாதுகாப்புக்கான நிவாரணமாகவே சமூர்த்தியை போன்ற மூன்று மடங்கு நிவாரணத் தொகையை வழங்கும் அஸ்வெசும வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை செலுத்த வேண்டியிருந்த நிலுவைத் தொகையில் 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடித்திருப்பதாகவும் இருதரப்பு கடன் வழங்குனர்களுடனான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“கடந்த காலத்தில் வீழ்ச்சியடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் சவாலான பணியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதன் பின்னர், சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெறுவதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது. பின்னர் கடன் மறுசீரமைப்பு குறித்தும் ஆராயப்பட்டது. அதனால் தற்போது நாடு சுமூகமான பொருளாதார நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை விருப்பமின்றியேனும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

அந்த நேரத்தில் டொலரின் பெறுமதி 400 ரூபாவிற்கு கிட்டியதாக காணப்பட்டது. ஆனால் இன்றளவில் டொலரின் பெறுமதி 300 ரூபாவை விடவும் குறைந்துள்ளது. அதனால் இறக்குமதிப் பொருட்களுக்கான கொடுப்பனவுகளும் குறைவடைந்திருக்கிறது.

மேலும், பூஜ்ஜியமாகக் குறைந்து போயிருந்த நாட்டின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு இன்று 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. நிலுவைத் தொகையின் நடப்புக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது. அதன்படி, ரூபாயின் பெறுமதி அதிகரித்திருக்கிறது. பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக அரச வரவு செலவுத் திட்டத்தின் முதன்மைக் கணக்கில் உபரி ஏற்பட்டுள்ளது.

மேலும், வட்டி விகிதம் குறைந்துள்ளது. 70% ஆக இருந்த பணவீக்கம் 6% ஆக குறைந்துள்ளது. அதனால் பொருட்களின் விலை உயர்வு விகிதமும் குறைந்துள்ளது. அதனால் நாடு பாதகமான நிலையிலிருந்து மீண்டுள்ளது என்றே கூற வேண்டும்.

தற்போதைய புதிய மத்திய வங்கிச் சட்டத்தின்படி, எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், பணம் அச்சிடுவது தடைசெய்யப்பட்டுள்ளது. இதன் ஊடாக நிதி நிர்வாகத்தில் ஒழுக்கத்தைப் பேண முடிந்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய வேலைத்திட்டத்தில் கடுகளவு மாற்றம் செய்யப்பட்டாலும் நாடு மீண்டும் பாரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அத்தோடு நாட்டின் எதிர்காலமும் கேள்விக்குரியாகிவிடும்.

நாட்டில் வறுமை அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் வெளியாகினாலும், பொருளாதார வளர்ச்சி மறை பெறுமானம் 08 ஆக பதிவாகிய வங்குரோத்து நாட்டில் வறுமை புதிதல்ல, வறுமை நீங்க நாட்டின் வருமானம் அதிகரித்து பொருளாதாரம் வளர்ச்சியடைய வேண்டியது அவசியமாகும். விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகளில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும் போது, தனிநபர் வருமானம் அதிகரித்து வறுமை குன்றும்.

சர்வதேச நாணய நிதியத்தின் தற்போதைய திட்டத்தில், கடந்த கால நெருக்கடியின் போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வறிய மக்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்த வறுமைக்கு ஈடுகொடுக்கும் முகமாகவே, சமூர்த்தி தொகையை விடவும் மூன்று மடங்கு அதிகமான நிவாரணந்தை வழங்கும் அஸ்வெசும சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஒப்பந்ததாரர்களுக்கு செலுத்த வேண்டியிருந்த நிலுவையில் இருந்த 361 பில்லியன் ரூபாவை செலுத்தி முடிக்கப்பட்டுள்ளதோடு, மூன்று மாதங்களுக்குள் புதிய ஒப்பந்தங்களுக்கான கொடுப்பனவுகளும் முழுமையாக வழங்கப்படும்.

இவ்வாறான நிதி ஒழுக்கத்தை பேணுவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஜூன் மாதத்திற்குள், இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான இறுதி ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். அதன் பிறகு, தடைபட்ட அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.” என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்a

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மைத்திரிக்கு முன்னரே தெரியும் – அருட்தந்தை சிறில் காமினி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி என்ன என்பது ஆரம்பத்திலிருந்தே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தெரியும் என கத்தோலிக்க திருச்சபை நம்புவதாக கொழும்பு பேராயர் இல்ல பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கேட்கவில்லை.

அவர்களுக்கு ஒரு பையினை கொடுத்துவிட்டு மெழுகுவர்த்தி கொளுத்துவது அவமானம். மைத்திரிக்கு இதன் பின்னணி தெரியும்.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வு கிடைக்குமா? இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது.

குண்டுவெடிப்பின் பின்னணியில் வேறு சிலரும் இருந்தார்கள் என்பதையே நாங்கள் மிக முக்கியமாக வலியுறுத்துகின்றோம்.

அதாவது இதன் பின்னால் சதி உள்ளதாக முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா கூறிய கதையும் வெளிவரும் என எதிர்பார்க்கின்றோம்

மைத்திரி வழங்கிய அந்த அறிக்கை என்னவென்று யாருக்கும் சரியாகத் தெரியவில்லை.

அவ்வாறு மைத்திரி கூறியதாக இருந்தால் ஏன் கடந்த 5 வருடங்களாக அவர் அதனை வெளிப்படுத்தவில்லை.

அவருக்கு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பே மைத்திரிக்கு இந்த தகவல் கிடைத்திருக்கவேண்டும் என நாம் நம்புகின்றோம்.

இதற்கு நீதி கிடைக்கவேண்டும் எனில் சுதந்திரமாக செயற்படக்கூடிய ஒரு விசாரணைக்கு அவசியம் தேவை என்பதே எமது நிலைபாடு” என அருட்தந்தை சிறில் காமினி மேலும் தெரிவித்தார்.