திருக்கோணேஸ்வரத்துக்கு ஆபத்து? Elanadu Editorial

தட்சண கைலாசம் என்று அழைக்கப்படும் இந்துக்களின் வரலாற்றுத் தொன்மைமிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேஸ்வரம் உல்லாசத் துறை அபிவிருத்தி என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப்படும் ஆபத்தை எதிர்கொண்டிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் பல இடங்களிலும் தங்களின் ஆக்கிரமிப்பு வேலைத் திட்டங்களை கச்சிதமாக முன்னெடுத்துவரும் தொல்பொருள் திணைக்களமானது தற்போது திருக்கோணேஸ்வரத்தின்மீதும் கண்வைத்துவிட்டது.

இது தொடர்பில் ஆலய பரிபாலன சபையோடு தொடர்புகொண்டு ‘ஈழநாடு’ விடயங்களை ஆராய்ந்தது. அதன் அடிப்படையிலேயே இந்த விடயத்தை தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவருகின்றது.

இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போது, ‘மொட்டு’ அணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான அட்மிரல் சரத்வீரசேகரவின் ஆவேச உரை தொடர்பான செய்தியொன்று கண்ணில்பட்டது.

அதாவது, இது சிங்கள- பௌத்த நாடு.

இங்கு தூபிகளை பராமரிக்க எவருடைய அனுமதியையும் பெறவேண்டியதில்லை.
அது தொல்பொருள் திணைக்களத்தின் பணியாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறானதோர் அச்சுறுத்தும் தொனியில்தான் திருகோணமலை மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரியும் திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையிடம் தெரிவித்திருக்கின்றார்.

எங்களுடைய திட்டங்களை அமுல்படுத்த உங்களின் அனுமதி எங்களுக்கு தேவையில்லை.
ஒரு தகவலுக்காவே இதனை உங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம்.

ஒரு காலத்தில் தமிழர் தாயகத்தின் தலைநகரமென்று அழைக்கப்பட்ட திருகோணமலையோ இன்று நிர்க்கதி நிலைக்கு உள்ளாகியிருக்கின்றது.

திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினரான இரா. சம்பந்தன், கடந்த இரண்டு வருடங்களாகத் திருகோணமலைக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் தட்டிக் கேட்க ஆளில்லாத நிலையில் சிங்கள தரப்புக்கள் தங்களுக்கு தேவையான அனைத்து முடிவுகளையும் எவ்வித தடையுமின்றி எடுக்கக் கூடிய நிலையிலிருக்கின்றனர்.

இதற்கப்பால், ஆளுநரின் ஆதரவும் அவர்களுக்கு இருப்பதாகத் தெரிகின்றது.
ஆலய பரிபாலன சபை மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, திருகோணமலை அழகான நகரம்.

ஆனால் இன்றோ, இலங்கையிலேயே மிகவும் மோசமான அழகற்ற இடமாக திருகோணமலையே காணப்படுகின்றது என்றவாறு ஆளுநர் தெரிவித்திருக்கின்றார்.
இதன் மூலம் தொல்பொருள் திணைக்களத்தின் திட்டத்தை ஆளுநர் ஆசீர்வதிக்கின்றார் என்பது தெளிவு.
கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை மிகவும் உறுதியாக இந்த விடயத்தை எதிர்க்கின்றது.
அதாவது, அபிவிருத்தியை நாங்கள் எதிர்க்கவில்லை.

ஆனால் ஆலயத்துக்கு சொந்தமான 18 ஏக்கர் காணிக்குள் எவ்வித திட்டங்களையும் அனுமதிக்க முடியாது. இது ஒரு புனித இந்து ஆலயம்.

உல்லாசப்பயணம் என்னும் பெயரில் இதன் புனித தன்மையை சீரழிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாதென்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் அரசியல் பலமில்லாத நிலையில், ஆலய பரிபாலன சபை அச்சமடைந்திருக்கின்றது.
இது வெறுமனே திருகோணமலை இந்து மக்களின் பிரச்னை மட்டுமல்ல.

உலகம் தழுவிவாழும் அனைத்து இந்து மக்களின் பிரச்னையாகும்.

எனவே, இந்த விடயத்தில் அனைவரும் உடனடி கவனத்தை செலுத்து வேண்டும்.
இல்லாவிட்டால் ஒரு வரலாற்று இந்து ஆலயம் திட்டமிட்டு சிதைக்கப்படுவதற்கு நாம் அனைவருமே உடந்தையாக இருக்கின்றோம் என்னும் வரலாற்று பழியே மிஞ்சும்.

வழமையாக தொல்பொருள் இடங்களை பாதுகாத்தல் என்னும் அடிப்படையில் தலையீடுகளை மேற்கொண்டுவந்தவர்கள், இப்போது, நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியிருக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு, உல்லாசத்துறை அபிவிருத்தி என்னும் பெயரில் திருக்கோணேஸ்வர ஆலய எல்லைக்குள் நுழைய முயற்சிக்கின்றனர்.

Posted in Uncategorized

தேர்தலை ஒத்திவைக்க தயாராகிறது அரசாங்கம்

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது.

தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தலை ஒத்திவைப்பதற்கு தாம் ஆதரவாக இல்லை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் இறைமைக்கு பாரிய சேதம் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் 20ஆம் திகதிக்குப் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐ.நா பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை

இலங்கை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பில் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை வலுப்படுத்துமாறும் மனித உரிமைகள் தொடர்பான கண்காணிப்பு, அறிக்கையிடுதல் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்கான நிபுணர் பொறிமுறையை தயாரிக்குமாறும் சர்வதேச மன்னிப்புச் சபையினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் குறித்து ஜனாதிபதி கருத்து!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முழுமையான ஆதரவை வழங்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்துள்ளார்.

இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை வந்துள்ள சமந்தா பவர், இன்று (11) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அவசரநிலையால் இலங்கை மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்தும் இந்த நிலையில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா எவ்வாறு ஒத்துழைப்பு வழங்க முடியும் என்பது குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

அத்துடன், இலங்கையின், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு அமெரிக்கா வழங்கும் நீடித்த ஆதரவு குறித்தும் சமந்தா பவர் இதன்போது கலந்துரையாடினார்.

ஜனநாயகத்தை பலப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து பவருக்கு விளக்கமளித்த ஜனாதிபதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெறுவது தொடர்பிலும் எடுத்துரைத்தார்.

அத்துடன் தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் தேவைப்படின் சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவும் தான் தயங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“விவசாயிகளுக்காக 40 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதற்கு அமெரிக்க அரசாங்கத்திற்கு முதலில் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். நாட்டில் உள்ள 14,000 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இதன் நன்மை சென்றடையும்““ என்று குறிப்பிட்டார்.

22ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பாராளுமன்றம் நிறைவேற்றும் வரை காத்திருக்கிறோம். நிர்வாகத்திற்காக முதலாவது அமைச்சரவைக் கையேடு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கமைவாக அமைச்சரவையின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலான நடைமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் கண்காணிப்புக் குழுக்கள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்நோக்குகிறோம். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தவிர, ஐந்து இளைஞர் பிரதிநிதிகள் இவற்றுக்கு நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு தலைவர் மூலம் கேள்விகளைக் கேட்க உரிமை உண்டு. உலகில் முதன் முறையாக இவ்வாறானதொரு நடைமுறை முன்னெடுக்கப்பட இருக்கிறது. இளைஞர் பாராளுமன்றத்தை சட்டபூர்வமாக்க இருக்கிறோம். பொருளாதாரக் குழுக்களை அதிகரிக்க இருக்கிறோம்.

அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் தொடர்பான குழு, வங்கி மற்றும் நிதி பற்றிய குழு என பல குழுக்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஊழலுக்கு எதிரான சட்டங்களுக்கு, நாங்கள் அங்கீகாரம் அளித்துள்ளோம், மேலும் பெண்கள் சமத்துவம் தொடர்பான சட்மூலமொன்றை தயாரிக்குமாறு பெண்கள் அமைப்புகளிடம் கேட்டுள்ளேன். ஓரினச்சேர்க்கையை குற்றமற்றதாக்கும் வகையில் தனிநபர் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை எதிர்க்காது. இதற்கு தனிப்பட்ட உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். விவாகரத்து சட்டங்களை இலகுபடுத்தி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்ய வாய்ப்பளிக்கப்படும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்படுவோர் தொடர்பில் தமிழ் தரப்புடன் பேசினோம். தடுப்புக் காவலில் இருந்த காலம், அவர்கள் அனைவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருப்பது என்பவற்றை கருத்திற்கு கொண்டு, அவர்களை விடுவிக்க முடியுமா என்பதை அறிய பொறிமுறையொன்றைத் தயாரிக்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தலதா மாளிகை மீதான குண்டுத்தாக்குதல் மற்றும் சில எம்.பிகளின் கொலைகள் என்பவற்றுடன் தொடர்புபட்டவர்கள் தவிர ஏனையவர்கள் தொடர்பில் இதன் கீழ் கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் தடுப்புக்காவலில் உள்ள முஸ்லிம்களில் விடுதலை செய்யக் கூடியவர்களை அடையாளம் காணுமாறு புலனாய்வு பிரிவுகளுக்கு அறிவித்துள்ளேன். குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை மதிப்பாய்வு செய்து, இந்த முழு விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்கு இங்கு வருமாறு ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்தின் பின்னால் மறைகரம் இருந்ததா? அப்படியானால், அந்த மறை கரம் யாருடையது? சிலர் அமெரிக்கா என்கிறார்கள். சிலர் இந்தியா என்கிறார்கள். இன்னும் சிலர் சீனா என்கிறார்கள். மற்றவர்கள் பாகிஸ்தான் என்கிறார்கள். அதனால் மறைகரம் எதுவென்று யாருக்கும் தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு மேலும் விடுவிக்கக் கூடிய காணிகள் குறித்து ஆராயப்படுகிறது. காணாமல் போனோர் விவகாரம் குறித்து தீர்வு காண துரிதப்படுத்தப்படும். புனரமைப்புத் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட்டு துரிதப்படுத்தப்படும். அத்தோடு வடக்கு அபிவிருத்தித் திட்டத்தை முன்னெடுக்க இருக்கிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம், வடக்கு பாரிய பொருளாதார மையமாக மாற்றப்படும். அபிவிருத்திகள் ஊடாக உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை விட எமக்கு அப்பகுதிகளில் அதிகம் பங்காற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தையும் கொண்டு வர இருக்கிறோம். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உடன்பாடு எட்டப்பட வேண்டும். இது தொடர்பில் கட்சிகள் ஆராய்ந்து வருகின்றன. அவர்களுக்கு ஆறு மாதங்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாவிட்டால் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி, உகந்த தேர்தல் முறை தொடர்பாக மக்களிடம் விருப்பத்தை கோருவேன். அரசியல் கட்சிகளால் இந்தப் பிரச்சினைகளை என்றைக்கும் தள்ளிப் போட முடியாது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

கிராம மட்டத்தில் மக்கள் சபை அமைப்பது தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்திலும் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 14 ஆயிரம் கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மக்கள் சபைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் எதிர்பார்க்கிறோம் 2048 நமது சுதந்திரத்தின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதனையொட்டி 2023இல் இருந்து 25 வருட வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். அதற்கு அமெரிக்காவின் உதவி அவசியாமானது என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கை தொடர்பில் ஜனாதிபதி பைடன் செலுத்து வரும் அக்கறைக்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். எமது அழைப்பை ஏற்று வருகை தந்தததற்கு சமந்தாவுக்கும் நன்றிதெரிவித்த ஜனாதிபதி அடுத்த வருடமும் இலங்கை வருமாறு அழைப்பை விடுத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிலையத்தின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவியாக வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

ஆனால், தற்போது இலங்கை எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியில் இது மிக மிக சிறிய மற்றும் சாதாரண உதவியாகும் என்று சமபந்தா பவர் மேலும் சுட்டிக்காட்டினார். எனினும், இந்த உதவிகள் சர்வதேச நிதி நிறுவனங்களின் தனியார் துறைக்கும், இலங்கையில் புதிதாக முதலீடுகளை செய்ய எதிர்பார்த்துள்ள முதலீட்டாளர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும், புதிய அணுகுமுறைக்குத் தேவையான ஒரு உத்வேகமாக அமெரிக்கா இதன்மூலம் செயற்படும் என்றும் அவர் உறுதியளித்தார். எமது கூட்டிணைக்கும் சக்தியை இதன்மூலம் திறமாக பயன்படுத்த முடியும் என்றும் சமந்தா பவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர, இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், இலங்கை ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சுதந்திர மற்றும் திறந்த இந்து- பசிபிக் பிராந்தியத்திற்கான இணைந்த, வளமான, நெகிழ்ச்சியான, பாதுகாப்பான உறுதியான ஆதவை அமெரிக்கா வழங்கும் என்றும் பவர் இதன்போது வலியுத்தினார்.

ஜனாதிபதி – சமந்தா பவர் இடையே சந்திப்பு

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின்(USAID) நிர்வாகி சமந்தா பவர் இன்று(11) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(11) காலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சமந்தா பவர் இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு நேற்று(10) முற்பகல் நாட்டிற்கு வருகைதந்துள்ளார்.

Posted in Uncategorized

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது

கொழும்பிலுள்ள நோர்வே தூதரகத்தை 2023 ஜூலை இறுதிக்குள் மூட நோர்வே அரசு முடிவு செய்துள்ளது.

வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்வதற்கான நோர்வேயின் தீர்மானத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஸ்லோவாக்கியா, கொசோவோவில் உள்ள நோர்வே தூதரகங்கள் மற்றும் ஹூஸ்டன் அமெரிக்காவிலுள்ள துணைத் தூதரகங்களும் 2023 இல் நோர்வே வெளியுறவு சேவையின் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

உத்தியோகபூர்வமாக இரண்டு நாள் விஜயமாக சமந்தா பவர் இலங்கை வருகை

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க உதவித்திட்டத்தின் நிர்வாகி சமந்தா பவர், இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.இதேவேளை ஒன்றிணைந்ததும், சுபீட்சமானதும், பாதுகாப்பானதுமான சுதந்திர இந்திய – பசுபிக் பிராந்தியத்தைக் கட்டியெழுப்புவதற்கான அமெரிக்காவின் பூரண ஆதரவையும் அவர் இதன்போது உறுதிப்படுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், தனியார்துறைசார் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தற்போதைய நெருக்கடியின் விளைவாகப் பாதிக்கப்பட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்புவதற்கும் அமெரிக்கா எவ்வாறு உதவமுடியும் என்பது குறித்தும் சமந்தா பவர், கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமைந்துள்ளது.

Posted in Uncategorized

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் – நாமல் ராஜபக்ஷ

மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கி, எதிர்காலத்தில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவோம் என்றும் இலங்கையை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தேவையான தலைமைத்துவத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வழங்கும் என்றும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டுபவர்களுக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஷ சட்டத்தை அமுல்படுத்தினால் இன்றைய நிலை வேறுவிதமாக இருந்திருக்கும் என்றும் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த சவாலான காலகட்டத்தில் அவ்வாறானவர்களுக்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெதிகமவில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

காலிமுகத்திடல் போராட்டக்குழு செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர கைது!

காலிமுகத்திடல் போராட்டக்குழு செயற்பாட்டாளரும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் செயற்பாட்டாளருமான லகிரு வீரசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி முகத்திடலில் நேற்று (09) பிற்பகல் ஒன்று திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், உயிரிழந்தவர்கள் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டவர்களை நினைவுகூர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினார்கள்.

இதனை அடுத்து காலி முகத்திடல் போராட்டத்தின் பின் வீடு திரும்பும் வழியில் லஹிரு வீரசேகர கொள்ளுப்பிட்டியில் வைத்து மருதானை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் லஹிரு வீரசேகர கைது செய்யப்பட்டார்.

மருதானை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ´வெனசகட தாருண்ய´ அமைப்பின் தேசிய அமைப்பாளர் லஹிரு வீரசேகரவ இன்று (10) காலை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Posted in Uncategorized

பிரிட்டன் மன்னராக சார்லஸ் பதவி ஏற்றார்

இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்நாட்டு அரசராக சார்லஸ் அறிவிக்கபட்டார். 73 வயதான சார்லஸ் மறைந்த ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். புதிய அரசரான சார்லஸ் நேற்று தனது மனைவி கமீலாவுடன் தனி விமானத்தில் லண்டன் வந்தார். பின்னர் அவர் காரில் பக்கிம்காம் அரண்மனை சென்றார். ராணி எலிசபெத் தங்கி இருந்த ஸ்காட்லாந்து அரண்மனைக்கு இளவரசராக சென்ற சார்லஸ் தனது தாயார் ராணி மறைவுக்கு பிறகு அரசராக பக்கிம்காம் அரண்மனைக்கு திரும்பி உள்ளார்.

புதிய மன்னரை பார்த்ததும் அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் வரவேற்று வாழ்த்து கோஷங்கள் எழுப்பினார்கள். இங்கிலாந்து தேசிய கீதம் பாடி அவருக்கு வரவேற்பு கொடுத்து ராணியின் மறைவுக்கு ஆறுதலும் கூறினார்கள். சார்லசுக்கு சிலர் கைகளில் முத்தம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். பொதுமக்களின் அன்பை கண்டு சார்லஸ் நெகிழ்ந்து போனார். இங்கிலாந்து புதிய அரசராக இன்று சார்லஸ் முறைப்படி பதவி ஏற்றார். இதற்கான நிகழ்ச்சி லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் அவரது மனைவி கமீலா மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சார்லஸ் தனது முதல் உரையை நிகழ்த்தினார். அப்போது ராணி எலிசபெத் மறைவு குறித்து அறிவித்ததுடன், தான் அரச பாரம்பரியத்தை காப்பாற்றுவதாக உறுதி அளித்தார். மறைந்த ராணி எலிசபெத் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டிற்கும் செல்லக்கூடிய அதிகாரம் பெற்று இருந்தார். அதே போல் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்ட கூடிய அதிகாரமும் அவருக்கு உண்டு.

இந்த அதிகாரங்கள் எல்லாம் தற்போது புதிய அரசர் சார்லசுக்கு கிடைக்கும். இனி சார்லஸ் பாஸ்போர்ட் இல்லாமல் எந்த நாட்டுக்கும் பயணிக்கலாம். இங்கிலாந்து கரன்சியில் ராணி எலிசபெத் புகைப்படம் இடம் பெற்று இருக்கும். இனி அரசர் 3-ம் சார்லஸ் புகைப்படம் அச்சிடப்பட்டு புதிய கரன்சி வெளியிடப்படும். அதே சமயம் பழைய கரன்சியும் புழக்கத்தில் இருக்கும். இங்கிலாந்து தேசிய கீதத்தில் ராணியை குறிக்கும் வகையில் அவள் என்ற வார்த்தை நீக்கப்பட்டு சார்லசை குறிக்கும் வகையில் அவர் என மாற்றம் செய்யப்படும்.