இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது – யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுவதாக யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்தார்.

கலாநிதி ஆறு. திருமுருகனால் தொகுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீச்சரம் ஆலய வரலாறு தொடர்பான விடயங்களைத் தொகுத்து வெளியிடப்படும் திருக்கேதீச்சரம் ஆவணப்பெட்டகம் என்னும் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (20) யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்றத்தின் பிராந்திய அலுவலகத்தில் கோப்பாய் சுப்ரமுனிய கோட்டம் முதல்வர் ரிஷி.தொண்டுநாதன் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் வாழ்துரை வழங்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் ,

இலங்கையில் இந்துக்களின் நிலை அபாய நிலையில் காணப்படுகிறது 1953ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டில் இந்துக்கள் 22 வீதமாக காணப்பட்டது தற்போது 11 வீதமாக உள்ளது அடுத்துவரும் குடிசன மதிப்பீட்டில் எத்தனை வீதமாக குறைந்துள்ளதோ தெரியாது.

அண்மையில் திருக்கேதீச்சரம் ஆலயத்திற்கு யாழ்ப்பாணத்தில் கல்வி பழைய மாணவர்கள் சென்று பார்வையிட்டு வந்தபின்னர் எமது ஆலயம் இருந்துபோல் இப்பவும் உள்ளது ஆனால் ஆலய சூழல் பொறுத்தவரை மற்றய ஆலயங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதுவே உண்மையாகவும் உள்ளது இங்கு மட்டுமல்ல ஏனைய இடங்களில் இத்தகைய ஆக்கிரமிப்புக்குள்தான் இந்து ஆலயங்கள் உள்ளன இத்தகைய விடயங்களை நாங்கள் பார்த்துகொண்டிருக்க முடியாது. நாங்கள் விழிப்படைய வேண்டும்.

இன்றைய நூலினை தொகுத்து வழங்பிய கலாநிதி ஆறு திருமுகனின் சேவையைபோல் யாரும் செய்ய முடியாது அவர் சமய பணி சமூக பணி கல்வி பணி என பல பணிகளை செய்து வருகிறார் அவர்பணி தொடரவேண்டும் என்றார்.

இந் நிகழ்வில் நல்லை ஆதின குருமுதல்வர் ஆசி உரை ஆற்றினார் இந் நிகழ்விற்கு பல்கலை கழக முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர்கள் அதிபர் ஆசரியர்கள் கல்வியாளர்கள் என பலர் கலந்து கொண்டார்கள்.

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம்: சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தல்

போராட்டக்காரர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்த வேண்டாம் என Amnesty International எனப்படும் சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கவலை வெளியிட்டுள்ளது.

கடந்த 18 ஆம் திகதி நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வசந்த முதலிகே உள்ளிட்ட 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே, ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க உள்ளிட்ட மூவர், 72 மணித்தியால தடுப்புக் காவல் உத்தரவின் பிரகாரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அவர்களைத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, போராட்டக்காரர்கள் மீது தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் பயங்கரவாத குற்றச்சாட்டுகள் போன்ற நியாயமற்ற கடுமையான குற்றங்களை சுமத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

2023 மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த திட்டம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

அடுத்த மாதம் 20 ஆம் திகதிக்கு பின்னர், தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்படும் என ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க குறிப்பிட்டார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் மேலுமொரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பதவிக்காலமும் எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.

இதனடிப்படையில், தற்போதுள்ள நிதி ஒதுக்கீட்டிற்கு ஏற்ப, தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தி உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டும்.

இந்த தேர்தலினூடாக 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பாராளுமன்றத்தை கலைத்து மக்கள் ஆணைக்கு இடமளிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி தேசிய மக்கள் சக்தி போராட்டம்

பாராளுமன்றத்தைக் கலைத்து, மக்கள் ஆணைக்கு இடம் வழங்குங்கள்’ எனும் தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

மக்கள் ஆணைக்கு இடம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் விஜேராம சந்தியிலிருந்து ஹைலெவல் வீதியூடாக நுகேகொடை வரை பயணித்து, ஆனந்த சமரக்கோன் திறந்த விளையாட்டரங்கில் ஒன்றுகூடினர்.

இதன்போது உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் தலைவர், அனுரகுமார திசாநாயக்க, போராட்டக்காரர்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் அரசாங்கத்திற்கு தனது கண்டனங்களை வௌியிட்டார்.

ஜ.நா பிரதிநிதிகள் யாழ். மேயரை சந்தித்தனர்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் (UNDCO)ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கும் யாழ்ப்பாண மாநகர சபை மேயருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று காலை நடைபெற்றது.

யாழ். மாநகர சபையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கரும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது, யாழ்ப்பாண மாநகர சபை மேயர் விசுவலிங்கம் மணிவண்ணன், ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் David Mclachlan-Karr-க்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினார்.

Posted in Uncategorized

இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகள்

இலங்கையில் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, ஏப்ரல் 2022க்குள், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 4 மாதங்களுக்குள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2022 ஏப்ரல் மாதத்திற்குள் மத்திய அரசாங்கம் செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை 23,310.1 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

12,442.3 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களாகவும் 10.867.8 பில்லியன் ரூபா வெளிநாட்டுக் கடன்களாகவும் இருப்பதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டின் இறுதியில் 17,589.4 பில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்த மத்திய அரசாங்கத்தின் மொத்தக் கடன் 04 மாத காலப்பகுதிக்குள் 5,720.7 பில்லியன் ரூபா அல்லது 32.52% அதிகரித்துள்ளது என்பது விசேட அம்சமாகும்.

அதேவேளை, இலங்கையில் தனிநபர் கடனின் அளவும் விரைவான அதிகரிப்பை சந்தித்துள்ளது.

இந்நாட்டின் சனத்தொகை 22 மில்லியன், அதன்படி இலங்கையின் ஒவ்வொரு குடிமகனும் 10 இலட்சம் ரூபா கடனாளிகளாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் புலம்பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடல்

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தின் போதான வலிகள், தாக்கங்கள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பிரித்தானிய பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக் (Rishi Sunak) கலந்துரையாடல்.

பிரித்தானிய தமிழ் கன்சர்வேட்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சந்திப்பில், அதன் இணைத்தலைவரும் கவுன்சிலருமாகிய ஜெய், செயலாளர் கயன்,அருச்சுனா சிவானந்தன்,ஜனனி ஜெகநாயகம்,ரெலோ பிரித்தானிய கிளையின் அமைப்பாளார் சாம் சம்பந்தன், தென்மராட்சி TDA தலைவர் டாக்டர் புவி ,ரகு தவறாஜ், கவுன்சிலர் பரம் நந்தா, கரன் போல் மற்றும் பல பிரித்தானிய புலம்பெயர் தமிழ் மக்களின் முக்கிய செயல்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திலும் இறுதி யுத்தத்தின் போதும் தமிழர்கள் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கும், அவை குறித்த பொறுப்புக்கூறல் தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு முன்னதாக பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை வேட்பாளர் ரிஷி சுனக், தமிழ் தரப்பினரை சந்தித்துள்ளதுடன், பிரித்தானியாவில் தமிழர்களின் பங்களிப்பிற்காகவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் இருந்து விலகியமை காரணமாக, இலங்கை மீது கடுமையான நிலைப்பாட்டை பிரயோகிப்பதில் சர்வதேச சமூகத்தின் உறுப்பினர்களுக்கு தனது ஆதரவை வழங்குவதாகவும் ரிஷி சுனக் தெரிவித்துள்ளதாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பிலான ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தனது ஆதரவை வழங்கியுள்ள ரிஷி சுனக், எதிர்கால தீர்ப்பாயத்தில் பயன்படுத்தக்கூடிய போர்க்குற்ற சான்றுகளை சேகரிப்பதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்யர்கள் மீது இங்கிலாந்து விதித்துள்ள தடைகளைப் போன்று, இலங்கை அதிகாரிகள் மீது தடை விதிப்பதற்கான சாத்தியம் தொடர்பிலும், பிரித்தானியவாழ் தமிழர் பிரதிநிதிகளுடன் ரிஷி சுனக் கலந்துரையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி, எல்லையில்லா பணவீக்கம் , அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறை தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவுங்கள்! சர்வதேசத்திடம் கர்தினால் கோரிக்கை

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் இலங்கைக்கு உதவிகளை வழங்குமாறு கர்தினால் மல்கம் ரஞ்சித் சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மூன்று காரணிகளால், இலங்கையின் ஜனநாயகம் பாரியளவில் சிதைவடைந்துள்ளதாக மல்கம் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டத்தின் ஆட்சி படிப்படியாக சீர்குலைந்து, நீதித்துறையில் அரசியல் தலைவர்களின் தலையீடானது, நீதியை ஒரு பிரச்சினையாக மாற்றியுள்ளது.

ஊழல்களை மேற்கொண்டு ஒரு சில குடும்பங்கள் மட்டுமே முடிவில்லாமல் சம்பாதித்து வருகின்றன. பல குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அவை அடக்குமுறைக்கு ஆளாகின்றன. எனவே இந்த தவறுகளை சரி செய்யப்படுவதை உறுதிப்படுத்த சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் கர்தினால் கோரியுள்ளார்.

தவறான கொள்கைகளாலும், தவறான பொருளாதார நிர்வாகத்தாலும், நிதி நெருக்கடி, கடுமையாக மாறியுள்ளது. அரசாங்கங்களின் தவறான திட்டங்களால் நாட்டில் பெரும் கடன் பிரச்னை ஏற்பட்டு, அதிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியவில்லை.

அதனால், தேசிய வருமானமும், உற்பத்தித் திறனும் குறைந்துள்ளதால், அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன வலியுறுத்தல்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று பிற்பகல் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்த்து நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பூரண ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு இடம் வழங்கப்பட வேண்டுமெனவும் பசில் ராஜபக்ஷ இந்த கலந்துரையாடலில் தெரிவித்தார்.

இது, ஜனாதிபதி உட்பட அரசாங்கத்திடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கும் மிக முக்கியமான கோரிக்கையாகும் என பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பிரசன்ன ரணதுங்க, சாகர காரியவசம், ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா வன்னியாராச்சி, நாமல் ராஜபக்ஷ மற்றும் சஞ்சீவ எதிரிமான்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

யுவோன் ஜோன்சன் என்ற 19 வயது யுவதியை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை அனுபவித்து வந்த ஜூட் ஷமன் அந்தோனி ஜயமஹா, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்த போது பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.இதன்போது இடம்பெற்றதாக கூறப்படும் இலஞ்சம் ஊழல் தொடர்பான விசாரணையின் ஒரு அம்சமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று வியாழக்கிழமை சுமார் 03 மணிநேரம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அத்துரலியே ரதன தேரர் செய்த இரண்டு முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்தில் வைத்து மைத்திரிபால சிறிசேனவிடம் இது தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.