”இந்தியாவுக்கு இலங்கை நம்பிக்கை துரோகமிழைத்துள்ளது”: ராமதாஸ் குற்றச்சாட்டு!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்து இலங்கை இந்தியாவுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளது என்று  பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு, இப்போது அதன் நிலையை மாற்றிக் கொண்டு நாளை மறுநாள் சீன கப்பல் அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதித்திருக்கிறது. இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கைத் துரோகம்.

சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும். இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரித்தப் பிறகும் சீனக் கப்பலுக்கு இலங்கை அனுமதி அளித்துள்ளது. இலங்கையின் சீன பாசத்திற்கு இது தான் எடுத்துக்காட்டு.

இலங்கையின் வேண்டுகோளை ஏற்று அந்நாட்டிற்கு டோர்னியர் 228 வகை போர் விமானத்தை இந்தியா நாளை இலவசமாக வழங்குகிறது. இப்படியாக ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டு தான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம்.

இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும். இந்தியாவின் பாதுகாப்பு கருதி, இலங்கைக்கு இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.´´ என்று தெரிவித்துள்ளார்.

”ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை வெளிக்கொண்டு வாருங்கள்”: ஜனாதிபதியிடம் பேராயர் வேண்டுகோள்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர முயற்சித்தால் மட்டுமே தற்போதைய ஜனாதிபதியை ஏற்றுக்கொள்ள முடியும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

கொச்சிக்கடை புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது, ​​ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கிய நிதி கையளிக்கப்பட்டது .

இதன்போது உரையாற்றிய அவர், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உண்மையை வெளிக்கொணரும் நோக்கில் தற்போதைய ஜனாதிபதி செயற்பட்டால் மட்டுமே அவரை ஏற்றுக்கொள்வோம். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் சதி இருக்கலாம் என அறியப்படுகிறது. கூறியுள்ளது. இது குறித்த உண்மையை வெளிக்கொணர தற்போதைய ஜனாதிபதி உழைக்க வேண்டும்.

மேலும் 2019 ஏப்ரல் 21க்கு முன்னர் தாக்குதலுக்கு தலைமை தாங்கிய சஹ்ரானைக் கைது செய்யவிருந்த பொலிஸ் அதிகாரியைத் தடுத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது அவசியமாகும். சஹ்ரானை கைது செய்ய விடாமல் தடுத்த அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும், ஏனெனில் அவரும் சஹரானைப் போன்ற குற்றத்தை செய்துள்ளார். நாங்கள் யாரையும் பழிவாங்க முயற்சிக்கவில்லை, ஆனால் உண்மையை மட்டுமே அறிய விரும்புகிறோம்” என்று அவர் மேலும் கூறினார்

Posted in Uncategorized

2500 பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய வங்கி யோசனை!

இலங்கையில் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதனால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.

நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. எனவே, இந்த இறக்குமதிக் கட்டுப்பாடுகளை உடனடியாகச் செய்ய வேண்டும் என்று மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது.

எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதால், அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களின் இறக்குமதியும் கண்டிப்பாக கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, அத்தியாவசியமற்ற பொருட்களின் மூன்று பட்டியல்களை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பட்டியலில் 2500க்கும் மேற்பட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Posted in Uncategorized

”பலம் வாய்ந்த நாடுகளின் வேட்டைக் களமாக இலங்கை மாறிவிட்டது”

பலம் வாய்ந்த நாடுகளுக்கு வேட்டைக்களமாக இலங்கை மாறிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இதன் மூலம் தேசிய பாதுகாப்பு கூட நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ராஜபக்சர்களால் இந்நாட்டின் முதுகெழும்பு உடைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் “ஐக்கிய பாதை”க்கு பதிலாக “தவறான பாதையை” தெரிவு செய்ததன் அவலத்தை இன்று நாடு எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இந்நாட்டை கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்திக்கே உண்டு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று (13) ஹோமாகம தேர்தல் தொகுதியில் நடைபெற்ற கட்சி ஆதரவாளர்களுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஹோமாகம தேர்தல் தொகுதியின் ஐக்கிய மக்கள் சக்தி பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி எரந்த வெலியங்க இதனை ஏற்பாடு செய்திருந்தார்.

தற்போதைய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டமை அரசியலமைப்பு ரீதியாக சரியானது என்றாலும், அங்கீகாரம் மற்றும் மக்கள் அபிப்பிராயம் என்ற அடிப்படையில் இது முற்றிலும் மாறுபட்ட நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தை விட நிகழ்காலம் முற்றிலும் மாறுபட்டது என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அந்நாட்களில், பெரும்பாலும் அரசியல் முடிவுகளை எடுப்பதில் முன்னுரிமை பெற்றது பெரியவர்களே என்றாலும், இன்று இளம் தலைமுறையினர் அதை வீட்டில் கூட பெற்றுள்ளனர் எனவும் தெரிவித்தார். தேர்தலில் முடிவெடுப்பது குறித்து வீட்டில் செல்வாக்கு செலுத்துவது இளைஞர் சமுதாயத்தினரின் எண்ணங்கள் மற்றும் விருப்பங்களின் பிரகாரமே என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அவர்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் புரிந்து கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் பொறுப்பு எனவும் அவர் தெரிவித்தார்.

தம்மிடம் இரத்தம் சிந்திய வரலாறு இல்லை எனவும்,தமது வங்கி கணக்குகளில் போதைப்பொருட்கள் விற்ற பணம் இல்லை எனவும்,தம்மிடம் எந்த வித கபடத்தனமும் இல்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், ஓர் அணியாக இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் சவாலை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

Posted in Uncategorized

ஏனைய புலம்பெயர் அமைப்புக்கள், தனிநபர் தடைகளையும் நீக்குக ரெலோ கோரிக்கை

எமது தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் அண்மையில் சில புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கி உள்ளதை வரவேற்கிறோம். அதே நேரம் இன்னும் பல அமைப்புகளும் தனி நபர்கள் உடைய பெயர்களும் தடைசெய்யப்பட்ட பட்டியலிலேயே காணப்படுகிறது. அவர்கள் மீது உள்ள தடையை நீக்குமாறு நாம் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் கோருகிறோம்.

நமது கோரிக்கையின் பிரதான காரணம் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்கு முதலீடு மிக அவசியமாகிறது. புலம்பெயர் உறவுகள் பலர் இங்கு முதலீடு செய்வதில் இருக்கக்கூடிய பிரதான சிக்கல் பாதுகாப்பின்மை ஆகும். தாங்கள் பாரிய முதலீடுகளை இங்கு ஏற்படுத்திய பின்னர் தடைசெய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக காரணம் காட்டி தங்கள் முதலீடுகளை முடக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யவும் முடியும் என்று அச்சம் கொள்கிறார்கள். முகநூல் இணைப்புக்களை காரணம் காட்டியே பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
எனவே முதலீடு செய்யத் தயாராக இருக்கும் புலம்பெயர் உறவுகள் அச்சமின்றி தங்கள் முதலீடுகளை செய்வதற்கு இந்த தடைகளை நீக்குவது அவசியம் என்று உங்களிடம் சுட்டிக் காட்டியுள்ளோம். ஆகவே இதைக் கருத்தில் கொண்டு ஏனைய புலம்பெயர் அமைப்புகளையும் தனிநபர்களின் பெயர்களையும் நீக்குமாறு கோருகிறோம்.

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர் -ரெலோ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் சிலவற்றின் மீதான தடைகள் நீக்கம்

இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது.
உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை (BTF), கனடியத் தமிழர் பேரவை (CTC), அவுஸ்ரேலியத் தமிழர் பேரவை (ATC), தமிழீழ மக்கள் பேரவை (TEPA) மற்றும் உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (WTCC)ஆகியவற்றின் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிவித்துள்ளது.

இதேவேளை பிரித்தானியாவை தலமாக கொண்டு இயங்கும் உலக தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரனும் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அத்துடன் 316 நபர்கள் மீதான தடையையும் நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா)

அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும் என்று குறிப்பிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை வைபவரீதியாக ஜனாதிபதி ஆரம்பித்து வைத்து ஆற்றிய உரைமீதான ஒத்திவைப்புவேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் (ஜனா) இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா),

ஜனாதிபதியினுடைய கொள்கைப் பிரகடன உரையில், வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்குவேன் என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக் கொண்டது போன்றே தோன்றுகிறது. நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாவதற்கு முக்கிய காரணமாக இருக்கின்ற இலங்கையின் புரையோடிப்போன வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை சிங்களத் தலைவர்கள் பார்க்கின்ற பார்வை விநோதமானதே.

இப்போது சர்வ கட்சி அரசாங்கத்திடம் தமிழர்களின் கோரிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது நில அதிகரிப்பை நிறுத்த வேண்டும், அபகரித்த நிலத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும். வடக்கு கிழக்கில் பௌத்த விகாரைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும். தமிழரின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான வடக்கு கிழக்கில் உள்ள இராணுவம் குறைக்கப்பட வேண்டும் என்பவைகளாகவே இருக்கின்றன. அவற்றினை விடவும் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் சரியான விசாரணை நடத்தப்பட்டு உண்மை கண்டறியப்படுதல் வேண்டும் போன்றவைகளே.

இந்த நாட்டுக்கு சர்வகட்சி ஆட்சியே தேவை. இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே நடந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்துக்கு இதுவரை தீர்வில்லை. கடந்த கால வரலாறுகளை நாங்கள் திரும்பிப்பார்ப்போமானால், இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே தமிழ் மக்கள் இரணடாம் தரப் பிரஜைகளாக பார்க்கப்பட்டார்கள். அவர்களுக்கான அநீதியும் நடைபெற்றுக் கொண்டு வந்தது. சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே 49இல் டி.எஸ்.சேனாநாயக்கா அவர்கள் கிழக்கு மாகாணத்தில் குடியேற்றத்தை கல்லோயாத் திட்டத்தின் ஊடாக முயற்சித்திருந்தார். நடைமுறைப்படுத்தினார். 1921ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் இருந்த சிங்கள மக்களின் சனத்தொகை 0.5வீதம் ஆனால் இன்று 24 வீதமாக உயர்ந்ததற்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் காரணமாக இருந்தது மட்டுமல்ல 1956ஆம் ஆண்டு சிங்களம் மட்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அன்றிலிருந்து அகிம்சை ரீதியாகவும், ஆயத ரீதியாகவும் போராடி இன்று ஒரு ஜனநாயகப் போராட்டத்தில் இருக்கின்றார்கள். ஆனால், பண்டா- செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது ஜே.ஆர். ஜெயவர்த்தனா கண்டி யாத்திரை புத்த பிக்குகளுடன் சென்றிருந்தார். , டட்லி – செல்வா ஒப்பந்தம் நடைபெறும் போது சிறிமாவோ பண்டாரநாயக்கா எதிர்த்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளில் சந்திரிகா அம்மையாரின் ஆட்சியில் நீலன் திருச்செல்வம், ஜீ.எல். பீரிஸ் போன்றவர்களின் முயற்சியில் ஒரு தீர்வுப் பொதி உருவாக்கப்பட்டது. அந்தத் தீர்வுப் பொதி இன்றுவரை நல்ல தீர்வுத்திட்டமாகப் இருந்தது என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அன்றைய அந்தத் தீர்வுப் பொதியை இன்றைய ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் எரித்திரிருந்தார். நாங்கள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தினைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் நடத்திய தமிழ் போராட்ட இயக்கங்களில் கூடுதலானவை அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டோம் 89இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றியிருந்தோம். அன்றைய காலத்தில் எம்.ஈ.பி. யை பிரதிநிதித்துவப்படுத்தி கௌரவ பிரதமர் அவர்கள் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கு வைத்திருந்தார்.

நாங்கள் தமிழ் ஈழ விடுதலை இயக்கமாக அவருடைய வீட்டுக்குச் சென்று அரசியல் தீர்வுத் திட்டம் சம்பந்தமாக நீண்ட பேச்சுக்களை நடத்தியிருந்தோம்.

நல்லாட்சி அரசாங்க காலத்தில் நீங்கள் பிரதமராக இருந்து தொடங்கிவைத்த முயற்சி பயனற்றுப் போனது. உங்களுடைய ஜனாதிபதி பதவிக்காலத்தில் இப்போது நீங்கள் கூறியிருக்கின்ற புதிய அரசியலமைப்பு மாற்றம், தமிழர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்ததல்ல என்பதனைப் புரிந்து கொள்ளவேண்டும். புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதென்பது தமிழர்களின் பிரச்சினைக்குரிய நியாயமான தீர்வு முன்வைக்கப்பட்டபின்னரே சாத்தியமாகும் என்பது சிங்களத் தலைவர்கள் அனைவருக்கும் புரியவேண்டும். இல்லாது போனால் உங்களுடைய புலம்பெயர் தமிழர்களை உதவிக்களைக்கும் முயற்சி பயனற்றதாகவே ஆகும்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியைச் சீர்செய்வதற்கான பல்வேறு வழிகளை ஜனாதிபதியவர்கள் அவருடைய உரையில் முன்வைத்திருக்கிறார். அவை அனைத்துமே நடைமுறைக்கு வருமானால் பாராட்டப்படத்தக்கதாக இருக்கும். திட்டங்கள் அனைத்து நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் நிம்மதியடையவேண்டும். மக்களுடைய அடிப்படைப் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவேண்டும் என்பதே எம்முடைய எதிர்பார்ப்பாகும். போராட்டக்காரர்களால் உருவாகியிருக்கின்ற இந்த மாற்றத்தை பாராட்டாமலிருக்க முடியவில்லை. ஆனால் போராட்டக்காரர்களைக் கைது செய்வதும் தடுத்து வைப்பதும், கடத்துவதும் கண்டனத்துக்குரியதாகும். இந்தக் கைதுகள் நெருக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும். போராட்டங்கள் நடத்துவது ஜனநாயக உரிமை எனக் கூறிக்கொண்டு அடக்குமுறையை மேற்கொள்வது கண்டனத்துக்குரியதாகும்.

வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி, கால்நடைவளர்ப்பு என உற்பத்தித் துறைகள் காணப்படுகின்றன. வடக்கைப் பொறுத்தவரையில் கிழங்கு உற்பத்தி, வெங்காய உற்பத்தி சிறப்பாக நடைபெறுகிறது. அங்கு அறுவடை நடைபெறுகின்றவேளை வெளிநாடுகளிலிருந்து அதே உற்பத்திகளை இறக்குமதி செய்வதும், எமது விவசாயிகளுக்கான உரம் வழங்கல் பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களின் நேர அட்டவணைக்கு ஏற்ப நடைபெறுவதும், அவர்களுடைய அறுவடைக் காலத்துக்கு ஏற்ப நெல் சந்தைப்படுத்தல் சபை நெல்லைக் கொள்வனவு செய்தலும் விலை நிர்ணயம் நடைபெறுவதும் பாரபட்சமான விடயமாகும். இதில் மாற்றம் செய்யப்பட்டாகவேண்டும்.

இன்று யூரியா பசளை 65ஆயிரம் மெற்றிக்தொன் வர இருந்தும் 40ஆயிரம் மெற்றிக்தொன் இலங்கைக்கு வந்திருக்கின்றது. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 216 மெற்றிக் தொன் மாத்திரNமு கொடுக்கப்பட்டிருக்கின்றது. அதற்கான காரணம் கூறப்படுவது, மட்டக்களப்பு அம்பாரையில் அறுவடை முடிந்துவிட்டமு. அனுராதபுரம், பொலநறுவையில் விதைப்பு நடைபெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த 25 மெற்றிக்தொன் வரும் போதும் மட்டக்களப்பில் பெரும்போக விவசாயம் தொடங்கப்பட்டுவிடும். பெரும்போக விவசாயம் செய்வதற்காவது யூரியாவைக் கொடுக்கவேண்டும்.

நீங்கள் குறிப்பிடுகின்ற அரசியல் மறுசீரமைப்பானது முழுமையாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்டிருக்கவேண்டும். ஜனாதிபதி ஆட்சிமுறை மாற்றம், பாராளுமன்ற ஆட்சிமுறை குறித்ததாக இருந்தாலும் தமிழர்களுடைய பிரச்சினைக்கான தீர்வை நோக்கியதாக அரசியல் மறுசீரமைப்பானது அமையவேண்டும். மாறாக பெரும்பான்மை சமூகத்தையும், பௌத்த தேசியவாதத்தையும், மேலாண்மையையும் இலக்காகக் கொண்டதாக இருக்குமானால் நீங்கள் எதிர்பார்க்கின்ற தேசிய இணக்கப்பாடு சாத்தியமற்றதாகவே இருக்கும்.

இன்று இலங்கையின் நிலையை நாங்கள் கருத்தில் கொள்ளவேண்டும். பெற்றோலுக்கு எரிவாயுவுக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள் ஆனால் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புக் கொடுக்கும் நோக்கில் தமிழ் மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையும் நடக்கின்றது. கடந்த 03.08.2022 இரவு 8.40 மணியளவில் கைதடி பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் முன்னாள் சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் தனபாலசிங்கம் சுதர்சனது கழுத்தில் கைத்துப்பாக்கியை வைத்து மிரட்டியிருக்கின்றார். இந்த நிலைமை மாறவேண்டும்.

இதற்கும் மேலாக, பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்றிருந்தது. முன்னைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களது மடத்தனமான, மூடத்தனமான நடவடிக்கையின் காரணமாக பொருளாதாரம் அதலபாதாளத்துக்குள் சென்றிருந்தாலும், அவர் நாட்டைவிட்டு சென்றிருந்தாலும் இருப்பதற்கு ஒரு நாடு இல்லாமல் இருக்கின்றார். அந்த வேளையில் இந்தியா தான் பொருளாதார உதவியை வழங்கியிருந்தது. ஏற்கனவே கடன் வசதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போது கிரடிற் லைன் மூலமாக கிட்டத்தட்ட நான்கு மில்லியயனுக்கும் அதிகமான உதவிகளைச் செய்திருந்தார்கள். எரிபொருள் உதவி, உதவி மருந்துப் பொருள்களை வழங்கியிருந்தார்கள். ஆனால் இன்று என்ன நடக்கின்றது. பூகோள அரசியலில் இலங்கைளை பகடைக்காயாக சீனா பயன்படுத்துகின்றது. வர இருக்கும் கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று இந்தியா கூறியிருக்கின்றது. அயல் நாடான இந்தியா அனைத்து நேரங்களிலும் எமக்கு ஆதரவாக இருக்கின்ற போது நாங்கள் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, இந்தியாவை எவ்வேளைகளிலும் பகைத்துக் கொள்ளக்கூடாது.

Posted in Uncategorized

சீனக் கப்பலுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி!

சர்ச்சைக்குரிய சீன ஆய்வுக் கப்பலை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்க துறைமுக மாஸ்டருக்கு வெளிவிவகார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

யுவான் வாங்-5, சீன விண்வெளி, ஏவுகணைகள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் துணைபுரியும் உயர்தர ஆன்டெனாக்கள் மற்றும் மின்னணு உபகரணங்களுடன் கூடிய அதிநவீன கப்பலானது, சமீபத்திய நாட்களில் தீவிர இராஜதந்திரப் பேச்சுக்கு உட்பட்டது.

இந்த கப்பலின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் குறித்தக் கப்பல் தற்போது இலங்கை கடலுக்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி அந்தக் கப்பல் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரையில் அந்த துறைமுகத்தில் நங்கூரமிடவுள்ளது.

தாய்லாந்தில் கோட்டாபயவுக்கு பாதுகாப்பு தரப்பினர் விடுத்துள்ள அறிவித்தல்!

தாய்லாந்தில் தங்கியுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு தான் தங்கியுள்ள ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வர வேண்டாம் என்று பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

தற்போதுள்ள பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ தங்கியிருக்கும் ஹோட்டலின் பெயர் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை எனவும், அவரது பாதுகாப்பிற்காக சிவில் உடையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஹோட்டலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள் – தவராசா கலையரசன்

அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள்.நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.குறிப்பாக அம்பாறை என்ற நகரமும் கூட எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இன்று அங்கு தமிழர்களின் எந்தவொரு குடியுருப்பும்  இருந்த  எந்தவொரு அடையாளமோ இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன் அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின்   பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டம் வீரமுனையில் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி  இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை(12) மாலை அகம் மனிதபிமான வள நிலையம்(AHRC) சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (PCCJ) அமைப்பின் ஏற்பாட்டில்   வீரமுனை பகுதியில் அனுஷ்டிக்கப்பட்ட வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தமிழர்களின் இன ஒழிப்பின் அங்கமாக இந்த வீரமுனை படுகொலை நடந்தேறி இருக்கின்றது.கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்னர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் எல்லைக்கிராமங்களில் வாழ்ந்த தமிழ் மக்கள் விரட்டி விரட்டி வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இத்தினத்தை அனுஸ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றோம்.உண்மையில் இலங்கை நாட்டில் தமிழரான பிறந்த எங்களுக்கு இது தான் நிலைமை என்ற செய்தியை உலகத்திற்கு சொல்கின்ற வகையில் இந்த நாட்டை ஆண்ட தலைவர்கள் தொடர்ச்சியாக அழித்து வந்திருக்கின்றார்கள் என்பது உதாரணமாகும்.
1990 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் எந்தவிதமாக கேள்வி கணக்குமின்றி கொடூரமான முறையில் சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகள் இந்த நாட்டில் ஒரு இனத்தை அழிக்கின்ற ஒரு படையாகவே இருந்திருக்கின்றார்கள். சமாதானம் நீதியை நிலைநாட்டுகின்ற அரச படைகளாக அவர்கள் இந்த நாட்டில் இருக்கவில்லை.அது மாத்திரமன்றி அம்பாறை மாவட்டத்தின் எல்லையில் நாங்கள் பிறந்து வளர்ந்தவர்கள்.நேரடியாக எம்மவர்கள் கொலை செய்யப்பட்டதனை அவதானித்தவன் என்ற வகையில் எல்லைக் கிராமங்கள் திட்டமிட்டு அழிக்கப்பட்டன.
குறிப்பாக அம்பாறை என்ற நகரமும் கூட எங்களுடைய தமிழ் மக்கள் வாழ்ந்திருக்கின்றார்கள்.இன்று அங்கு தமிழர்களின் எந்தவொரு குடியுருப்பும்  இருந்த  எந்தவொரு அடையாளமோ இல்லை என்ற செய்தியை சொல்ல விரும்புகின்றேன்.இந்த கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்.இங்கு வாழந்த தமிழர்களை தேடி தேடி அழித்தார்கள்.கல்விமான்களாக இருந்தவர்கள் சமூகத்தில் பற்றுறுதி கொண்டவர்கள்.சகூகத்தை வழிநடத்த கூடியவர்களாக இருந்தவர்கள் உள்ளிட்டோரை அரச படையினர் திட்டமிட்டு அழித்திருந்தார்கள்.
ஆகவே நாங்கள் இவ்வாறான நினைவுகளை ஏன் நினைவு கூர்கின்றோம் எனில் எதிர்காலத்தில் இந்த நாட்டில் தமிழர்கள் வாழ்வதற்குரிய அனைத்து உரிமையும் கிடைக்கப்பெற வேண்டும்.தொடர்ச்சியாக இந்நாட்டில் தமிழர்கள் அடிமைத்தனத்துடன் தங்களது வாழ்வுரிமையை மறுக்கின்ற சூழலில் வாழ முடியாது என்ற அடிப்படையில் தான் நாங்கள் இந்த நினைவு கூறல்களை நினைவு கூர்ந்து வருகின்றோம்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் யுவதிகள் கொலை செய்யப்பட்ட வரலாறுகளை மறந்து விட முடியாது.
அதன் அடிப்படையில் வீரமுனை மாத்திரமல்லாது   சொறிக்கல்முனை ,பெரியநீலாவணை, சவளக்கடை, திராய்க்கேணி, காரைதீவு ,அக்கரைப்பற்று, உடும்பன்குளம், பொத்துவில், வளத்தாப்பிட்டி, மல்வத்தை ,போன்ற பிரதேசத்தில் திட்டமிட்டு எங்களது மக்கள் அழிக்கப்பட்ட வரலாறுகளை நீங்கள் நினைவு கூற வேண்டும்.எனவே எங்கள் மக்கள் நிலையான சமாதானத்தை வேண்டியவர்களாக இந்த மண்ணிலே நிலையாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்களாகிய நாங்கள் எமது மக்கள் மீது அக்கறையுடன்    தொடர்ச்சியாக எமது மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டு இணைந்து பயணிப்போம்   என கூறினார்.
இந்த நினைவேந்தல் நிகழ்வில்  தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ,காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்,  உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்,  பொதுமக்கள்  உயிரிழந்தவர்களின் உறவினர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி அம்பாறை மாவட்டம் வீரமுனையில் இடம்பெற்ற படுகொலை தினத்தின் 32 ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு   வீரமுனையில் அனுஷ்டிக்கப்பட்டதுடன் வீரமுனையில் ஆலயத்திற்குள் புகுந்து இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் 55 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில்  அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக 32 ஆவது வருடம் தொடர்ச்சியாக நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சதிகாரர்களை நாங்கள் மறக்கவும் மாட்டோம். மன்னிக்கவும் மாட்டோம்.எதிர்கால சந்ததிக்கு இதனை எடுத்தியம்பும் பிரகாரத்தில் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காகவும் நினைவேந்தலை நடத்தி வருகின்றோம் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.