முல்லைத்தீவு விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்ப நிலை – இராணுவம் துப்பாக்கி சூடு !

முல்லைத்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதட்டம்-படையினர் துப்பாக்கி சூடு!
முல்லைத்தீவில் விசுவமடு பலநோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வழங்கும்நடவடிக்கையின் போது அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து அங்கு கூடிய இளைஞர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டுள்ளது.

இந்த சம்பத்தினை தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளநிலையில் அங்கு பதட்டமான ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.இளைஞர்கள் மீது அங்கு கடமையில் நின்ற இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாகவும் இளைஞர்கள் இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார்கள் இரு தரப்பிற்கும் இடையில் கைகலப்பாக மாறியதில் இராணுவத்தினரின் வாகனம் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு சேதமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தாக்குதலில் இராணுவத்தினர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் சம்பவத்தின் போது பொதுமகன்ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் அங்குள்ள இராணுவ காவலரண் மீது கண்ணாடி போத்தில்கள்,கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தினை தொடர்ந்து நிலமையினை கட்டுக்குள் கொண்டுவர இராணுவத்தினர் வானத்தினை நோக்கி துப்பாக்கிசூடு நடத்தி கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

இரவு சம்பவ இடத்திற்கு விரைந்த புதுக்குடியிருப்பு பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சிலமணிநேரங்கள் பரந்தன்- புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு பகுதியில் எவரும் பயணிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும அங்கு அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்த சம்பவம் தொடர்பில் இருவரை பொலீசார் கைதுசெய்துள்ளார்கள்இதேவேளை முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் முரண்பாடான பதட்ட நிலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அங்கு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளார்.

முள்ளியவளையில் அமைந்துள்ள லங்கா ஜ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொது பயன்பாட்டிற்கு எரிபொருள் இல்லை என இன்று எவருக்கும் வழங்கப்படாத நிலையில் மாலை வேளை தனியார் பேருந்து ஒன்றுக்கு எரிபொருள் வழங்கியதால் அங்கு கூடிநின்ற வாகன சாரதிகளுக்கும் எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தினை தொடர்ந்து பொலீசார் அங்கு வரவளைக்கப்பட்டார்கள்.அரசாங்க அதிபரின் அனுமதியுடன் போக்குவரத்து சேவைக்காக வந்த பேருந்துக்கு எரிபொருள் வழங்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் அதற்கான அனுமதி கடிதத்தினை பொலீசாரிடம் காட்டியுள்ளார்கள்.

வீதியில் நின்ற சாரதி ஒருவர் தனது டிப்பரினை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் கொண்டுவந்து தனக்கும் எரிபொருள் வழங்குமாறு கூறியதை தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.வெளியில் நின்ற சாரதிகள் எரிபொருள் நிரப்பிய தனியார் பேருந்தினை எடுக்கவிடாது சூழ்ந்துகொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இராணுவத்தினர் மேலதிகமாக கொண்டுவரப்பட்டு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வீதியில் நின்ற சாரதிகள் தமது வாகனங்களுக்கும் டீசல் வழங்கவேண்டும் என்று கோரி தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரின் பிரசன்னத்தினை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் சென்ற டிப்பர் ஒன்றிற்கு மாத்திரம் எரிபொருள் வழங்க வெளியில் நின்ற ஏனைய சாரதிகளின் கோரிக்கைக்கு அமைய டீசல்வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நின்ற பேருந்தினை வெளியில் எடுத்துள்ளார்கள்.

முரண்பாட்டினை ஏற்படுத்திய சாரதிகளும் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளார்கள் குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு டீசல் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அது அத்தியஅவசிய தேவைக்காகவும் விவசாயிகளுக்கு வழங்குவதற்காகவும் அரச அதிகாரிகளின் அனுமதியுடன் கொண்டுவரப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்கள்.

Posted in Uncategorized

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உணவு நெருக்கடியானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் 4 மில்லியனிலிருந்து 5 மில்லியன் மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய போதிலும் அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.

உணவு நெருக்கடியை வெற்றிகரமாகக் கையாள்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தலைமையில் குழுவொன்றை நியமிக்குமாறும் அதில் அமைச்சர் நிமல் சிறிபால, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் ஜனாதிபதி அலுவலகம், நிதி அமைச்சு, விவசாய அமைச்சு, இராணுவம், தனியார் பிரிவு உள்ளிட்ட குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்குமாறும் பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

இந்தக் குழுவினால் தயாரிக்கப்பட்ட திட்டத்தை இரண்டு வாரங்களுக்குள் தனக்கு பெற்றுத் தருமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

Posted in Uncategorized

இலங்கை வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசை!

வரலாற்றில் மிக நீண்ட எரிபொருள் வரிசையை இலங்கை இன்று (வெள்ளிக்கிழமை) எதிர்கொண்டுள்ளது.

SUTUஇன் ஊடகப் பேச்சாளர் ஆனந்த பாலித, நாட்டில் உள்ள 85 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் தீர்ந்துவிட்டதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

ஜூன் 24 ஆம் திகதி எரிபொருள் விலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் இருப்பதால் லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருளை விநியோகிக்கவில்லை என்று அவர் கூறினார்.

இன்று 50 மெட்ரிக் டன் பெட்ரோல் மட்டுமே வழங்கப்பட்டதென்றும் பாலித கூறினார்.

கோட்டாவுக்கும் ரணிலுக்கும் இடையில் பகைமை அதிகரித்து வருகிறது – மைத்திரி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஒரு போட்டி போன்று பகைமை அதிகரித்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அப்போது ஜனாதிபதியாக இருந்த தமக்கும் பிரதமராக இருந்த ரணிலுக்கும் இடையில் இருந்த போட்டியைப் போன்றே இதுவும் உள்ளதாகஅவர் கூறியுள்ளார்.

கட்சி அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இருவருக்குமிடையில் ஒருங்கிணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு அல்லது ஒற்றுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறதென்றும் அதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ – ரணில் விக்ரமசிங்க ஆட்சி முழுத் தோல்வியடைந்து நாட்டையும் அதன் 22 மில்லியன் மக்களையும் ஆழமற்ற படுகுழிக்குள் இழுத்துச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர்.

அரச அதிகாரிகள், தனியார் துறை மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளை தனித்தனியாக கூட்டி ஆலோசனைகளை வழங்குவதை ஜனாதிபதியும் பிரதமரும் தற்போது வழக்கமாக கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சில சமயங்களில் இருவரும் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் போட்டியில் ஈடுபடுவது போல் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Posted in Uncategorized

யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஆரம்பிக்க நடவடிக்கை!!

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியினை கருத்திற்கொண்டு யாழ்ப்பாணம் கொழும்பு விசேட புகையிரத சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய பிரதம அதிபர் தி.பிரதீபன் தெரிவித்தார்

இன்று யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், நாளை 17ம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து கல்கிசையில் இருந்து காங்கேசன்துறைக்கு இரவு நகர்சேர் கடுகதி புகையிரதமொன்று சேவையில் ஈடுபட உள்ளது .இது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் கல்கிசையில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு அங்கிருந்து வெள்ளவத்தை பம்பலப்பிட்டி ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தப்பட்டு அம்பலங்கோட பொல்காவலை குருநாகல் அனுராதபுரம் வவுனியா கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணத்தை 5.25க்கு வந்தடைந்து அங்கிருந்து 5.30 க்கு புறப்பட்டு காங்கேசந்துறையை சென்றடையும்

ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் காங்கேசன்துறையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு சுன்னாகம் கோண்டாவில் ஊடாக 10.25க்கு யாழ்ப்பாணத்தை வந்தடைந்து 10.30மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கிளிநொச்சி வவுனியா அநுராதபுரம் குருநாகல் கொழும்பு கம்பகா மருதானை சென்றடைந்து அங்கிருந்து பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளையை சென்றடையவுள்ளது.

நகர்சேர் கடுகதிக்குரிய ஒரு வழி கட்டணமாக 2,800 ரூபா அறவிடப்ப்படவுள்ளது. இதற்கான முன்பதிவுகள் யாழ்ப்பாண புகையிரத நிலையத்திலும் ஏனைய முன்பதிவுகளை மேற்கொள்ளக்கூடிய புகையிரத நிலையங்களிலும் மேற்கொள்ளலாம் . இன்றைய காலகட்டத்தில் யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இது அமையும் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

Posted in Uncategorized

தற்போதைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க பாகிஸ்தான் உதவி செய்வதாக தெரிவிப்பு

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண இலங்கைக்கு தமது அரசாங்கமும் பூரண ஆதரவை வழங்கும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) உமர் பாரூக் புர்க்கி (Umar Farooq Burki) தெரிவித்துள்ளார்.

இன்று (17) பிற்பகல் கொழும்பு, கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்த போதே உமர் பாரூக் புர்கி இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் பலதரப்பு உறவுகள், அரசியல், வர்த்தகம், கலாசாரம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

மனிதாபிமான உதவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்துகளை இந்நாட்டுக்கு வழங்குதல், பாகிஸ்தானில் உயர் கல்விக்காக இலங்கை மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கியமை தொடர்பில் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து ஜனாதிபதி அவர்கள் உயர்ஸ்தானிகரிடம் விளக்கினார்.

தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீள பாகிஸ்தான் அரசாங்கம் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் உமர் பாரூக் புர்கி மேலும் தெரிவித்தார்.

Share

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (15) இடம்பெற்ற பாராளுமன்ற விசேட தெரிவுக் குழு கூட்டத்தின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பாரளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் மற்றும் தேர்தல் கட்டமைப்பில் தேவையான சீர்திருத்தங்களை இனங்கண்டு, அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்காக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் இந்த குழு பல மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டது.

இந்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் குழு ஏற்கனவே அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்தும் தகவல்களைப் பெற்றுள்ளது.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

Posted in Uncategorized

பாடசாலைகளைத் தொடர்ந்து இயக்க முடியாது – இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்

தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக உள்ளதென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

இன்றைய மோசமான நிலைமை இலங்கையில் ஒருபோதும் ஏற்பட்டதில்லை. சகல பொருட்களின் விலைகளும் அதிகரித்தே செல்கின்றன. ஆனாலும் அப்பொருட்களைப் பெறமுடியாமல் உள்ளது. அதன் காரணமாக சகல துறைகளுமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலை என்பது மாணவரை மையப்படுத்திய நிறுவனமாகும். மாணவர் துயரப்பட்டு பாடசாலைக்கு வந்து கற்கமுடியாது. அவர்களுக்கு கல்வியூட்டும் கல்வியியலாளர்கள் குடும்பங்களோடு இணைந்தவர்கள். அவர்கள் ஏனைய மக்களைப் போன்று பல்வேறு சிரமங்களையும் சுமந்தவர்களாக உள்ளனர். அவை எவற்றையும் பொருட்படுத்தாமல் பணியை தர்மமாகக் கருதி பணியாற்றும் அவர்கள் கடமைக்கே செல்லமுடியாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து மார்க்கங்கள் எதுவுமே சீராக இல்லை. தாமாகச் செல்வதற்கும் வழியில்லை.

இந்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்து இயக்க முடியாது. என்பதனை அரசாங்கம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. மீண்டும் தோற்றுப்போன இணையவழி முறையை அரசாங்கம் புகுத்தி நாட்டில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இன்னும் சுமையை ஏற்படுத்தப்போகின்றது.

ஆகையால் நாம் முன்வைத்த மாணவர், ஆசிரியர்களுக்கான போக்குவரத்து மார்க்கங்களை இலவசமாக்குவதே பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க ஒரேவழி. இதைவிட தொடர்ச்சியாக வரவழைப்பதைத் தவிர்த்து சுழற்சிமுறையை பயன்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சிடம் தெரிவித்துள்ளோம் என்றுள்ளது.

அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யுமாறு சீனாவிடம் இலங்கை கோரிக்கை

1.5 பில்லியன் அமெரிக்க நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை திருத்துவதற்கு இலங்கை சீனாவுடன் பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“பரிமாற்ற ஏற்பாட்டிற்காக சீனாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி, இலங்கையிடம் மூன்று மாதங்களுக்கு போதுமான வெளிநாட்டு கையிருப்பு இருந்தால் தவிர, அதைப் பயன்படுத்த முடியாது.

இலங்கைக்கு தேவையான அளவு இருப்புக்கள் குறைவாக இருப்பதால் இந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த பரிமாற்ற ஒப்பந்தம் இலங்கைக்கு இறக்குமதிகளை செலுத்துவதற்காக கடனைப் பெற உதவுகிறது.

இந்த நிலையில், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த நாணய வசதியை பயன்படுத்திக்கொள்ள ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட ஷரத்தை திருத்துமாறு இலங்கை அதிகாரிகள் தற்போது சீன தரப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பரிமாற்ற ஒப்பந்தம் கடந்த ஆண்டு கையெழுத்தானது. இந்தச் சரத்தின் திருத்தமானது சீனப் பொருட்களை இறக்குமதி செய்வதற்குப் பயன்படுத்தப்படுவதால் அது சீனாவுக்குப் பயனளிக்கும் என்று இலங்கைத் தரப்பு தெரிவித்ததாக அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மகா பருவத்துக்கான இரசாயன உரத்தை கடனில் கொள்வனவு செய்வதற்கு பல சீன நிறுவனங்களுடன் இலங்கை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.” எனக் கூறப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி தொடர்பில் எம்.பிக்களுடன் பிரதமர் முக்கிய கலந்துரையாடல்!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களை நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விளக்கமளித்தார்.

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் குறுகிய கால மற்றும் நடுத்தர கால இலக்குகள் பற்றிய விளக்கத்தை வழஙகினார்.

விளக்கக்காட்சியைத் தொடர்ந்து, பொருளாதாரப் பேரழிவைத் தணிக்கப் பயன்படுத்தக்கூடிய சாத்தியமான வழிமுறைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் யோசனைகளை முன் முன்வைக்க அனுமதிக்கும் வரைவு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

எதிர்க்கட்சி சார்பில் ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, குமார் வெல்கம, ரவூப் ஹக்கீம் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.