இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களின் இழுவைமடி தொழிலுக்கு அனுமதி வழங்க முடியாது: அ.அன்னராசா

இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய கடற்தொழிலாளர்களின் இழுவைமடித் தொழிலை ஒரு நிமிடம் கூட அனுமதி வழங்க முடியாதென இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ.அன்னரசா தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய – இலங்கை கடற்தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடலொன்று கடந்த 11ஆம் திகதி கச்சதீவில் நடைபெற்றது.

இதில் நாம் இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக மட்டுமே போராடி வருகின்றோம். ஆனால் அதை, இந்தியத் தொப்புள் கொடி உறவுகளுக்கு எதிரான போராட்டமாகச் சிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் கதைத்து வருகின்றனர்.

நாம் அங்கே தெளிவாகக் கூறினோம், 2004ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை வடக்கு மக்களுக்கு, இந்திய உறவுகள் செய்த உதவிகளை நாம் மறக்க மாட்டோம்.

ஆனால் ஒரு நிமிடம் கூட இலங்கை கடல் பரப்புக்குள் இழுவை மடித்தொழிலை செய்ய அனுமதிக்க மாட்டோம். நாட்டுப்படகோ இழுவைமடி படகோ ஏதுவாக இருந்தாலும் எமது நாட்டுக் கடற்பகுதிக்குள் அத்துமீறி வரும் பொழுது சட்டம் தன் கடமையைச் செய்யும்.

இந்திய கடற்தொழிலாளர்கள் இழுவை மடி தொழிலை நிறுத்தினால் உங்கள் தரப்பிலுள்ள நியாயமான கோரிக்கைகளை நாம் வெளியுறவு அமைச்சின் ஊடாக ஆராய்வோம் என கூறியிருந்தோம்.

அதேவேளை இந்திய நாட்டுப் படகு தொழிலாளர்கள், இழுவை மடித் தொழிலால் தாமும் பாதிக்கப்படுவதாக, அதற்கு எதிராகத் தாமும் செயற்படுவோம் என்றும் தமது பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் மட்டம் வரை கொண்டு சென்றும் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும் கூறியிருந்தார்கள்.

அத்துடன் எமது பிரச்சினையை அவர்கள் 90 வீதம் ஏற்றுக்கொண்டார்கள். இலங்கை மற்றும் இந்தியப் பாரம்பரிய கடற்றொழிலாளர்கள் கூட்டாக இணைந்து இலங்கை இந்தியக்கடல் வளத்தைப் பாதுகாக்கவும் தீர்மானித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

வழமையான ஏற்பாடுகளுக்கு முன்னதாகவே சர்வதேச நாணய நிதியத்தினர் கோட்டாபயவை சந்திக்கின்றனர்

சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரிகள் நாளை செவ்வாய்க்கிழமை, இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்திக்கின்றனர்.

இதன்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரத்துக்கான மதிப்பீடுகள் குறித்து அவர்கள் கோட்டாபயவிடம் விளக்கமளிப்பார்கள் என்று சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கையின் தலைமையாளர் மசாக்கிரோ நொசாக்கியை கோடிட்டு, ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் இதுவரை இலங்கைக்கான நிதியுதவிகள் குறித்து இலங்கை அரசாங்கத்திடம் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அது குறித்து கலந்துரையாட தமது அதிகாரிகள் தயாராக இருப்பதாகவும் நொசாக்கி தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்துடன் ஏற்கனவே அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள வழமையான சந்திப்புக்கு புறம்பாகவே இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது, பாரிய பொருளாதார நெருடிக்கடியை எதிர்கொள்கிறது

நாட்டில் வெளிநாட்டு இருப்பு 2.31 பில்லியன் டொலர்களாக இருக்கும் நிலையில், எரிபொருள், உணவு மற்றும் மருந்துகளின் இறக்குமதிகளை மேற்கொள்வதில் பாரிய சிரமம் எதிர்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் வெளியிடப்பட்ட ஒரு காலமுறை மறுஆய்வில், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் “நம்பகமான மற்றும் ஒத்திசைவான” மூலோபாயத்தை செயல்படுத்துமாறு அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

தேசிய அரசாங்கம் பயனற்றது – மஹிந்த அமரவீர

தேசிய அரசாங்கம் பயனற்றது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “தற்போது நாட்டில் டொலர்கள் இல்லை. வெளிநாட்டு கையிருப்பு இல்லை.

நாம் உண்மையில் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம். இப்போது எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் உள்ளனர், இது அதிகரித்து வருகிறது.

இதனை குறைக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நேரத்தில் அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இருப்பவர்களை எப்படி வெளியேற்றுவது, எப்படி பதவிகளை எடுப்பது என்பது முக்கியமல்ல. ஜனாதிபதியை சந்தித்த போது சர்வகட்சி மாநாட்டை முன்மொழிந்தோம். மனிதர்கள் படும் துன்பங்களைப் பற்றி அவரிடம் கூறினோம்.

அண்மைக்காலமாக டீசல் வாங்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர். வரிசையில் போய் இன்னும் விலை உயர்ந்த டீசலை நிரப்பிக்கொண்டு, எரிபொருள் தீரும் வரை எரிவாயு தேடி அலைய வேண்டும்.

இது ஒருவரது தவறு அல்ல, இந்த முழு அரசாங்கத்திலும் ஏதோ தவறு இருக்கிறது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

பிரித்தானியா தமது நாட்டு பிரஜைகளுக்கு எச்சரிக்கை

மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான பற்றாக்குறை காரணமாக பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாகக் கூறி இலங்கைக்கு செல்வதற்கான பயண ஆலோசனையை பிரித்தானியா புதுப்பித்துள்ளது.மருந்துகள், எரிபொருள் மற்றும் உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளின் பற்றாக்குறையுடன் அந்த நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதாக பிரித்தானியா எச்சரித்துள்ளது.

இறக்குமதிக்கு செலுத்துவதற்கு பணம் இல்லாதமை காரணமாக இலங்கை தற்போது அடிப்படைத் தேவைகளில் பற்றாக்குறையை அனுபவித்து வருவதாக பிரித்தானியா தமது குடிமக்களுக்கு தெரிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்றும், நாட்டில் குறுகிய பயணக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் என பிரித்தானிய அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

பலசரக்கு கடைகள், எரிவாயு நிலையங்கள் மற்றும் மருந்தகங்களில் நீண்ட வரிசைகள் இருக்கலாம் எனவும் பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.அத்துடன் மின்சார உற்பத்திக்கான நெருக்கடி காரணமாக சூழற்சி முறையில் அதிகாரிகள் மின்வெட்டை நடைமுறைப்படுத்தலாம் எனவும் பிரித்தானியா, தமது பிரஜைகளுக்கான பயண ஆலோசனையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நிதியமைச்சர் பசிலுக்கு எதிராக நமிக்கையில்லா பிரேரணை!

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி கவனம் செலுத்தியுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு நிதியமைச்சரின் செயற்பாடுகளே காரணம் என்பதால் அவர் மீதான நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Posted in Uncategorized

வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு தயார் – இலங்கைக்கான இந்தியத் தூதுவர்

இந்திய அரசாங்கத்தினால் கட்டி முடிக்கப்பட்டுள்ள கலாச்சார மண்டபம் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது என இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே தெரிவித்தார்.அத்துடன் வடக்கு மாகணத்தில் இந்திய முதலீடுகளை செய்வதற்கு திட்டங்களை வகுத்து வருவதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் மீனவர்களுக்கு உதவிகளை செய்யும் முகமாக இந்திய முதலீடுகளையும் இங்கு கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.இதன் மூலம் மீனவக் குடும்பங்கள் வாழ்வாதாரம் மற்றும் தொழில் வாய்ப்பை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இதற்கு அனைவரது ஒத்துழைப்பு தேவை என வடக்கு மாகாண மீனவர்களிற்கான வாழ்வாதார உதவித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தபின்னர் உரையாற்றும் போதே அவர்மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Posted in Uncategorized

மறைந்த ரெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரருக்கு யாழில் உணர்வுபூர்வ அஞ்சலி

ஈழ விடுதலை போராட்டத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரும், தன் இறுதி மூச்சு வரை உறுதியாக தமிழ் இன விடுதலையை நேசித்தவரும், பலமுறை சிறை சென்று சித்திரவதைகளுக்கு ஆளாகிச் சிறை மீண்டவருமான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினத்தின் மூத்த சகோதரர் டாக்டர்.சுந்தரம்பிள்ளை கந்தசாமி(கந்தா)கடந்த 9 ஆம் திகதி புதன்கிழமை சுகவீனம் காரணமாக இந்தியாவின் சென்னையில் காலமாகியிருந்தார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.3.2022) சென்னையில் நடைபெற்றது.

இந்நிலையில் மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது மூத்த சகோதரரான அமரர் சு.கந்தசாமி (கந்தா) ஆகியோரின் இல்லம் அமைந்துள்ள இடமான யாழ்.கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரி மைதானத்திற்கு அருகில் இன்று முற்பகல்-11 மணிக்கு அஞ்சலி நிகழ்வொன்று வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் மெளன வணக்கம், ஈகைச் சுடரேற்றல், உருவப் படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மலரஞ்சலி,மற்றும் அஞ்சலி உரைகளும் நடைபெற்றன.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சரும், தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசன், பிரபல சட்டத்தரணி ஏ.இராஜரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டு அஞ்சலி உரைகள் நிகழ்த்தினர்.

அஞ்சலி நிகழ்வில் ரெலோவின் மூத்த போராளிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேவேளை, மறைந்த தலைவர் சிறீ சபாரத்தினம் மற்றும் அவரது சகோதரர் அமரர் சு.கந்தசாமி(கந்தா) ஆகியோரின் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள், ஊரவர்களின் வேண்டுகோளின் பேரில் விந்தன் கனகரட்ணம், விஸ்வநாதன் விஸ்வா மற்றும் கஜேந்தினி, காந்தரூபன், இராசதுரை, நடராசா ஆகியோரின் ஒழுங்குபடுத்தலில் குறித்த அஞ்சலி நிகழ்வு ஏற்பாடு செய்து நடாத்தப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

கோட்டாவின் பொறிக்குள் விழுந்துவிட வேண்டாம் ! சம்பந்தனுக்கு கூட்டமைப்பின் பிரித்தானிய கிளையும் கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விடயங்களால் நெருக்கடிகளைச் சந்தித்துள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிலிருந்து மீள்வதற்கான பொறியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திப்பதற்கு அழைத்துள்ளார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரத்தானியக் கிளை சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே இலங்கை ஜனாதிபதி கோட்டாபயவின் பொறிக்குள் விழுந்து விடவேண்டாம் என்றும் அவசரமாக சந்திக்க வேண்டிய தேவையில்லை என்பதால் அழைப்பை மறுபரிசீலனைக்கு உட்படுத்துமாறும் அக்கிளை குறிப்பிட்டு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அக்கடிதத்தில், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பேச்சுவார்த்தைக்கு அவசரமாக அழைத்துள்ளது.

இந்தஅழைப்பு தொடாபில் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தங்களுக்கு அனுப்பிய கடிதத்தினை தயவு செய்து காழ்ப்புணர்ச்சி இல்லாது ஆழமாகப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இந்தியப் பிரதமர் மோடியின் அழைப்புக்கு இழுத்தடிப்புச் செய்துவிட்டு ஜனாதிபதி கோட்டாபயவின் அழைப்புக்கு விழுந்தடித்து ஓடவேண்டுமா? என்று ஒருகணம் சிந்திப்பது நல்லது.

இலங்கை ஜனாதிபதியின் அழைப்பானது, ஐ.நா.வின் சூடடைத் தணிக்கவே என்பது குழந்தைப் பிள்ளைக்கும் தெரிந்த விடயம். ஆகவே ஜனாதிபதியின் பொறிக்குள் தயவு செய்து அகப்பட்டுவிடாதீர்கள் என புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக குறிப்பிடுகின்றோம்.

அத்துடன், கீழ்வரும் விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது,

1.ஜனாதிபதி, முதலில் என்ன விடயங்கள் பற்றி பேச அழைக்கிறார் என்பது தெளிவுபடுத்த வேண்டும்.

2.கடந்த 2 வருடங்களாக இந்தத் தலைவர் எடுத்துவரும் காணி சுவீகரிப்புரூபவ் பௌத்த, சின்னங்கள் வைப்பு யாவும் உடன் நிறுத்தி தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தவேண்டும்.

3.மரண தண்டனைக் குற்றவாளிகளை விடுதலை செய்த மன்னிப்புக்குணம் கொண்ட இந்த மகான் அரசியல் கைதிகள் அத்தனைபேரையும் விடுதலை செய்யவேண்டும்.

4.வலிந்து காணாமல்போனோர் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டும்.

5.பயங்கரவாதச் தடைச்ச சட்டம் உடன் நீக்கப்பட வேண்டும்.

6.இந்தியா எமது தீர்வுக்காகக் கோரிநிற்கும் 13ஆவது திருத்தச் சட்ட முழுமையான அமுலாக்கம், காத்திரமான அதிகாரப்பகிர்வும் பற்றி வெளிப்படையான நிலைப்பாடு அறிவிக்கப்படவேண்டும்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் யாவும் பேச்சுவார்த்தை இல்லாமலேயே செய்யக்கூடியவை.

பேச்சுவார்த்தை என்பது காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடு என்பதை விளக்கத் தேவையில்லை.

இவற்றைச் செய்தால் சிங்கள மக்களுக்கு இரத்தக் கொதிப்பு ஏற்படும் என்ற வாதத்தை இனியும் நாம் ஏற்காத தயாராக இல்லை. தயவு செய்து கூடியவிரைவில் இதுபற்றித் தங்கள் அறிக்கையை எதிர்பார்க்கிறோம். இதுவே ஈழத்தமிழர் பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது என்று அதில் உள்ளது.

Posted in Uncategorized

அதானி குழுமத்தின் வசமாகியது மன்னார் மற்றும் பூநகரி : வெள்ளியன்று கைச்சாத்தானது முக்கிய ஒப்பந்தம்

இரு பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்காக வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியை அரசாங்கம் இந்தியாவின் அதானி குழுமத்திற்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ள குறித்த இரு திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் அரசாங்கம் கடந்த வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டதாக அறிய முடிகின்றது.

இந்தியாவின் தேசிய அனல் மின் கூட்டுத்தாபனத்துடன் திருகோணமலை, சம்பூரில் சூரிய மின்சக்தி பூங்காவை அமைப்பதற்கான புரிந்துரணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இதனை தொடர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை நிதி அமைச்சில் அதானியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

மேலும் 500 மெகாவாட் மொத்த உற்பத்தி திறன் கொண்ட குறித்த இரு திட்டங்களையும் ஓராண்டுக்குள் முடிக்க அதானி குழுமம் அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மூன்று முக்கிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தித் திட்டங்கள் இப்போது இந்திய முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாவுடன் பேசப்போகும் விடயங்கள் என்ன ? செவ்வாய் கூடுகின்றது கூட்டமைப்பு – மாவை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின்போது முன்வைக்கப்போகும் விடயங்கள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று கொழும்பில் கூடி ஆராயவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதின் நல்லெண்ண சமிக்ஞைகளின் பின்னரே சந்திப்பினை மேற்கொள்ள வேண்டும் என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழீழ விடுதலை இயக்கம், கடிதம் மூலம் சம்பந்தனுக்கு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் குறித்து தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர்.

இந்நிலையில் கருத்து வெளியிட்டுள்ள மாவை சோனதிராஜா, ஜனாதிபதி கோட்டாபயவைச் சந்திப்பதற்கு முன்னதாக இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்திக்கவுள்ளதாக கூறினார்.

இனப்பிரச்சினை குறித்து மௌனமாகவும் பயங்கரவாத தடைச் சடத்தை முழுமையாக நீக்கவும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தவும் தயாராக இல்லாத ஜனாதிபதி, என்ன விடயங்கள் தொடர்பாக தம்முடன் பேசப்போகின்றார் என்ற கேள்வியெழுந்துள்ளதாக குறிப்பிட்டார்.

எவ்வாறிருந்தாலும் காணாமலாக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், காணி அபகரிப்புக்கள் குறித்து எடுத்துரைத்து தீர்வுகளை வழங்குமாறு தாம் வலியுறுத்தவுள்ளதாகவும் அதற்கான நிகழ்ச்சி நிரலை குறித்த சந்திப்பின்போது தயாரிப்போம் என்றும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டார்.